wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 6

அக்டோபர் புரட்சிக்கு முந்தையபொழுதில்; - அதன் பின்னர்

Use this version to print | Send feedback

ஓர் அவரசரகால பேராயம் (Congress) தேவை இல்லாது போயிற்று. லெனின் கொடுத்த அழுத்தம் மத்திய குழுவிற்குள்ளும் பாராளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பிற்குள்ளேயும் தேவையான சக்திகளை இடதுபக்கம் நகர்வதை உத்திரவாதப்படுத்தியது. அக்டோபர் 10 அன்று போல்ஷிவிக்குகள் அதில் இருந்து விலகிக் கொண்டனர். பெட்ரோகிராடில் இருந்த போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவு காட்டும் காவற்படையினரை முன்னணிக்கு மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு தொடர்பாக அரசாங்கத்துடன் சோவியத் மோதிக்கொண்டது. அக்டோபர் 16ம் தேதி எழுச்சிக்கான சோவியத்தின் சட்டபூர்வமான அமைப்பாக புரட்சிகர இராணுவக் குழு தோற்றுவிக்கப்பட்டது. கட்சியின் வலதுசாரி பிரிவினர் இத்தகைய நிகழ்வுப்போக்குகளின் வளர்ச்சியை குறைக்க முயன்றனர். கட்சிக்குள் இருந்த போக்குகளின் போராட்டமும் நாட்டில் வர்க்கப் போராட்டமும் அதன் முடிவான கட்டத்தை அடைந்தன.

வலதுசாரிகளின் நிலைப்பாடு, அதன் கொள்கை ரீதியான பண்புக்கூறுகளில், மிகச் சிறந்த மற்றும் முழுமையான முறையில், ஜினோவிவ் மற்றும் காமெனெவால் "தற்போதைய சூழ்நிலை பற்றி" என்ற தலைப்பில் எழுதி கையெழுத்திடப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடிதம் அக்டோபர் 11ம் தேதி எழுதப்பட்டது; அதாவது, இக்கடிதம், எழுச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிகவும் முக்கியமான கட்சி அமைப்புக்களுக்கு அனுப்பப்பட்டது. மத்திய குழுவில் ஏற்கப்பட்டிருந்த ஆயுதமேந்திய எழுச்சிக்கு உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இக்கடிதம் வந்தது. எதிரியை குறைமதிப்பீடு செய்வதற்கு எதிரான எச்சரிக்கையுடன், அதேவேளை யதார்த்தத்தில் புரட்சியின் சக்திகளை பயங்கரமாக குறைமதிப்பீடு செய்தும், பரந்தமக்கள் ஒரு போராட்டத்திற்கு தயாராக உள்ளனர் என்பதைக்கூட மறுத்தும் (அக்டோபர் 25க்கு இரண்டு வாரங்கள் முன்பு!), இக்கடிதம் மேலும் கூறுவதாவது: "இப்பொழுது ஓர் ஆயுதமேந்திய புரட்சிக்கு அழைப்பு விடுதல் என்பது நம்முடைய கட்சியின் விதிக்கு ஆபத்து என்று மட்டும் இல்லாமல் ரஷ்ய மற்றும் சர்வதேச புரட்சியின் விதிக்கும் பெரும் தீமையாகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." எழுச்சியும், அதிகாரத்தை கைப்பற்றுதலும் கைவிடப்பட வேண்டும் என்றால் வேறு என்ன செய்வது? அதற்கும் எளிமையாகவும், தெளிவாகவும் கடிதத்தில் விடை கூறப்பட்டுள்ளது: "இராணுவத்தின் மூலம், தொழிலாளர்கள் மூலம், முதலாளித்துவ வர்க்கத்தின் நெற்றிப்பொட்டில் நாம் துப்பாக்கி முனையை வைத்துள்ளோம்." இந்த துப்பாக்கி இருப்பதால் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் நிர்ணய சபையை கலைத்துவிட முடியாது. "அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் எமது கட்சியின் வாய்ப்புக்கள் மிகச் சிறந்து உள்ளன. ...போல்ஷிவிக்குகளின் செல்வாக்கு பெருகிக் கொண்டிருக்கிறது. ...சரியான உத்தியுடன் நாம் இப்பொழுது மூன்றில் ஒரு பங்கு அல்லது இன்னும் அதிகமான இடங்களைக் கூட அரசியல் நிர்ணய சபையில் பெற்றுவிட முடியும்."

இத்தகைய முறையில் இக்கடிதம் வெளிப்படையாகவே முதலாளித்துவ அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் ஒரு "செல்வாக்குடைய" எதிர்க்கட்சி பங்கை வகிக்கமுடியும் என்ற வழியை காட்ட முற்படுகிறது. இந்த முழுமையான சமூக ஜனநாயக வழிவகையானது, கீழ்க்கண்ட மேலெழுந்தவாரியான கருத்தினால் மூடிமறைக்கப்பட்டுள்ளது: "வாழ்வில் வேரூன்றிவிட்ட சோவியத்துக்கள் அழிக்கப்பட முடியாதவை. அரசியல் நிர்ணய சபை தன்னுடைய புரட்சிகர பணிகளுக்கு ஆதரவை சோவியத்துக்களில் இருந்துதான் பெறமுடியும். அரசியல் நிர்ணய சபையுடன் சோவியத்துக்களும் சேர்ந்து அதாவது அரசு நிறுவனம் இணைந்த வகையினை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்." "இணைந்த" அரசு வடிவங்களின் தத்துவம், அரசியலமைப்பு நிர்ணய சபையை சோவியத்துக்களுடன் உறவுபடுத்துதல் என்ற வலதுகளின் முழு நிலைப்பாட்டையும் பண்பிடுவது சம்பந்தமான அசாதாரணமான அக்கறை, ஜேர்மனியில் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ரூடொல்ப் ஹில்பெர்டிங்கால் வலியுறுத்தப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெற்றிகொள்ளப்படுவதற்கு எதிராகத்தான் அவரும் கூட போராட்டத்தை நடத்தியிருந்தார். இந்த ஆஸ்திரிய-ஜேர்மன் சந்தர்ப்பவாதி, தான் பிறருடைய கருத்தை அப்படியே கூறியதைப்பற்றிக் கூட தெரிந்திருக்கவில்லை.

"தற்போதைய சூழ்நிலை பற்றி" என்னும் கூடிதம் ரஷ்யாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த பெரும்பான்மை பற்றிய முற்றிலும் பாரளுமன்ற மதிப்பீட்டின் அடிப்படையில், ஏற்கனவே நம்மை ஆதரித்து இருந்தனர் என்ற உறுதிப்பாட்டை நிராகரித்துள்ளது. இக்கடிதம் கூறுகிறது: "ரஷ்யாவில், பெரும்பாலான தொழிலாளர்களும், படைவீரர்களில் கணிசமானவர்களும் நம்முடன்தான் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை பற்றி சந்தேகம்தான். உதாரணமாக, அரசியல் நிர்ணயசபைக்கு தேர்தல்கள் தற்போது நடந்தால், பெரும்பாலான விவசாயிகள் சமூகப் புரட்சியாளர்களுக்குத்தான் வாக்களிப்பர் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது என்ன, ஒரு தற்செயலான நிகழ்வா?" மேற்கூறிய பிரச்சினையை பற்றிய முறைப்படுத்திக்கூறல், விவசாயிகளுக்கு வலுவான புரட்சிகர நாட்டங்கள் இருக்கலாம், அவற்றை அடையவேண்டும் என்ற உந்துதல் இருக்கலாம். ஆனால் சுயாதீனமான அரசியல் நிலைப்பாடு அவர்களிடம் இல்லை என்பதை அறிந்துகொள்ளத் தவறிய நிலையில் இருந்து எழும் முக்கியமான, அடிப்படை தவறைக் கொண்டுள்ளது. அவர்கள் முதலாளித்துவத்தின் முகவாண்மையான சமூகப் புரட்சியாளர்கள் அமைப்பிற்கு வாக்குப் போடுவதின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வாக்களிக்கலாம் அல்லது பாட்டாளி வர்க்கத்துடன் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளலாம். நாம் பின்பற்றக்கூடிய கொள்கையின் அடிப்படையில்தான் அவர்கள் இந்த இரண்டில் எதை பின்பற்றுவர் என்பது துல்லியமாக சார்ந்திருக்கிறது. நாம் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பிற்கு ஒரு செல்வாக்கு உடைய எதிர்க்கட்சியாக சென்றிருந்தால், (அரசியல் நிர்ணய சபையில், "மூன்றில் ஒரு பங்கு அல்லது சற்று கூடுதலான இடங்கள்), அந்நிலையில் கிட்டத்தட்ட விவசாயிகளை அவர்கள் நலன்களை அடைவதற்கு அரசியல் நிர்ணயசபையின் மூலம் பெறவேண்டிய கட்டாயத்திற்குத்தான் இயல்பாகவே நாம் தள்ளிவிட்டிருப்போம்; அதன் விளைவாக, அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்க விருப்பமின்றி பெரும்பான்மையில்தான் இருக்க விரும்பியிருப்பர். மாறாக, பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவது, நிலச்சுவாந்தார்கள், அதிகாரிகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கான ஒரு புரட்சிகர கட்டமைப்பை உடனடியாக தோற்றுவித்தது. இப்பிரச்சினையில் நம்மிடையே புழக்கத்தில் உள்ள வெளிப்பாடுகளை பயன்படுத்த, இக்கடிதம் விவசாயிகளை பற்றி ஒரேநேரத்தில் குறைமதிப்பீடு மற்றும் மிகைமதிப்பீட்டை வெளிப்படுத்துகிறது. (பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ்!) இயங்க கூடிய விவசாயிகளின் புரட்சிகர சாத்தியப்பாட்டை அது குறைத்து மதிப்பிடுகிறது; மேலும் அவர்களுடைய அரசியல் சுயாதீனத்தை மிகைமதிப்பீடுசெய்கிறது. விவசாயிகளை பற்றி குறைமதிப்பீடு செய்தல் மற்றும் அதேவேளை மிகை மதிப்பீடு செய்தல் என்ற இருமடங்கு பிழையானது, அதன் மறு பக்கத்தில், அது எமது சொந்த வர்க்கம் மற்றும் அதன் கட்சி பற்றிய குறைமதிப்பீட்டிலிருந்து அதாவது பாட்டாளி வர்க்கத்தை பற்றிய சமூக ஜனநாயக அணுகுமுறையில் இருந்துதான் வெளிப்படுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இறுதிப்பகுப்பாய்வில், சந்தர்ப்பவாதத்தின் அனைத்துவிதமான சாயல்களும் பாட்டாளி வர்க்கத்தின் உள்ளுறை ஆற்றல் மற்றும் புரட்சிகர சக்திகள் பற்றிய பிழையான (தவறான) மதிப்பீடாக குறைக்கப்படத்தக்கதாகும்.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஆட்சேபிக்கும் இக்கடிதம், ஒரு புரட்சிர போர் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்று கட்சியை பயமுறுத்த முற்படுகிறது. "போர் என்ற முழக்கத்திற்காக பெருந்திரளான வீரர்கள் நமக்கு ஆதரவு தரவில்லை; சமாதானம் என்ற முழக்கத்திற்காகத்தான் அவர்கள் ஆதரவு தருகிறார்கள். ...(முழு உலக நிலைமையை கருத்திற்கொண்டு) நாமே அதிகாரத்தை எடுத்துக் கொண்டால், ஒரு புரட்சிகர போரை ஆரம்பிக்க வேண்டும் என்பது தேவை என்ற முடிவிற்கு நாம் வரவேண்டும்; அந்நிலையில், பெரும்பாலான வீரர்கள் நம்மிடத்தில் இருந்து விரைவில் ஓடிவிடுவார்கள். இராணுவத்தின் சிறந்த பகுதியாகிய இளைஞர்கள் நம்முடன் இருப்பார்கள், ஆனால் பெருந்திரளான வீரர்கள் விலகிச்சென்று விடுவர்." இத்தகைய வாதம் பெரும் போதனைகொண்டதாக இருக்கிறது. தற்போதைய எடுத்துக்காட்டில், பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் (Brest-Litovsk) சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு ஆதரவான அடிப்படை வாதங்கள் இருப்பதை இங்கு காண்கிறோம், ஆயினும் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எதிராக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். "தற்போதைய நிலைமை பற்றி" என்ற கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலைப்பாடு, இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ஆதரவு கொடுத˘தோர் பின்னர் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையை ஏற்பதற்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது என்பது போதுமான அளவில் தெளிவாகிறது. வேறு ஒரு இடத்தில் நாம் கூறியதை, அதாவது, தற்காலிக பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் சரணை, ஒரு தனித்த நிகழ்வாக கருதாமல் இதை அக்டோபருடன் இணைத்து லெனின் அதைக் கருதியதால் அவருடைய அரசியல் மேதைத்தன்மை பண்பிடப்படுகிறது என்பதை இங்கே மீண்டும் கூறவேண்டியிருக்கிறது. இதை எப்பொழுதும் நாம் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்.

எதிரிகளின் புறத்தில்தான் சக்திகளின் விஞ்சிய செல்வாக்கு இருக்கிறது என்ற ஒருபோதும் தவறாத நனவில்தான் தொழிலாள வர்க்கம் போராடுகிறது மற்றும் முதிர்வடைகிறது. இந்த விஞ்சிய செல்வாக்கு அதன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு படியிலும் வெளிப்படுத்திக் கொள்ளுகிறது. எதிரியிடம் செல்வமும், அரச அதிகாரமும், தத்துவார்த்த அழுத்தத்தை கொடுப்பதற்கான எல்லா வழிமுறைகளும் மற்றும் ஒடுக்குமுறை கருவிகள் அனைத்தும் உள்ளன. எதிரியிடத்தில் சக்திகளின் விஞ்சிய செல்வாக்கு நிறைந்திருக்கிறது என்ற எண்ணத்திற்கு நாம் பழகிவிடுகிறோம்; இப்படிப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட எண்ணம் முழு வாழ்க்கையிலும் ஓர் இணைந்த பகுதியாக நுழைந்து தயாரிப்பு சகாப்தத்தில் புரட்சிகர கட்சியின் செயல்பாடாக வந்துவிடுகிறது. இந்த அல்லது அந்த கவனக்குறைவான அல்லது பக்குவமற்ற செயலின் விளைவுகளே ஒவ்வொரு முறையும் எதிரியின் வலிமையைப் பற்றிய மிகவும் குரூரமான நினைவூட்டல்களாக சேவைசெய்கின்றன.

ஆனால் எதிரியை வலிமை கொண்டவர் என்று வழக்கமாக கருதும் பழக்கம் வெற்றிப்பாதைக்கு ஒரு முக்கியதடை என்ற ஒரு கணம் வருகிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் இன்றைய பலவீனம் அதன் நேற்றைய வலிமையின் நிழலில் மறைக்கப்பட்டுவிடுகிறது. "எதிரியின் வலிமையை நீ குறைத்து மதிப்பிடுகிறாய்!" இப்படிப்பட்ட ஓலம் ஆயுதமேந்திய எழுச்சிக்கு எதிராக உள்ள அனைத்துக் கூறுபாடுகளும் ஒன்று சேருவதற்கு அச்சாக பயன்படுகிறது. நமது சொந்த நாட்டிலேயே எழுச்சிக்கு எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள், எமது வெற்றிக்கு இரு வாரங்களுக்கு முன்னரே எழுதினர்," ஆனால் எழுச்சியைப்பற்றி பேச்சோடு மட்டும் நின்றுவிட விரும்பாத ஒவ்வொருவரும், மிகவும் கவனத்துடன் அதன் வாய்ப்புக்களை ஆராயவேண்டும். இப்பொழுது எமது விரோதிகளின் சக்திகளை குறைமதிப்பீடு செய்தலோ, நமது சக்திகளை மிகைமதிப்பீடு செய்வதோ மிகவும் தீங்கை விளைவிக்கும் என்ற கூறவேண்டியது இங்கு நம்முடைய கடமை என்று நாம் கருதுகிறோம். எதிராளிகளுடைய சக்திகள் தோற்றத்தில் இருப்பதை விட பெரிதானவை ஆகும். பெட்ரோகிராட் தீர்க்கமானது, பெட்ரோகிராடில் பாட்டாளி வர்க்கத்தின் விரோதிகள் கணிசமான படைகளை குவித்து வைத்துள்ளனர்; 5,000 இராணுவப் பயிற்சிபெறும் இளைஞர் படை, மிகச் சிறப்பாக ஆயுதம்தரித்து, ஒழுங்குற அமைக்கப்பட்டு, (தங்களுடைய வர்க்க நிலைப்பாட்டினால்) போரிட ஆர்வம் கொண்டு, போரிட இயலக்கூடிய நிலையில் உள்ளனர், மேலும் பணியாளர்களும், அதிரடித் துருப்புக்கள், கொசாக்குகள், ஒரு கணிசமான பகுதி கோட்டை காவற் படை மற்றும் கணிசமான பீரங்கிகளும் உள்ளன, பெட்ரோகிராடை சுற்றி ஒரு விசிறி போன்ற வடிவில் நிலையை எடுத்துள்ளன. எனவே, எமது விரோதிகள், சோவியத்துக்களின் அனைத்து ரஷ்ய மத்திய செயற்குழுவின் உதவியுடன் முன்னணியில் இருந்து படைகளை கொண்டு வருவதற்கு ஐயத்திற்கு இடமின்றி முயற்சி செய்வர்." ["தற்போதைய சூழ்நிலை பற்றி"].

ஓர் உள்நாட்டுப் போரில், முன்கூட்டியே எத்தனை படைப்பிரிவுகள் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று வெறுமனே கணக்கிடுவது பற்றிய பிரச்சினை அல்ல, மாறாக அவர்களின் நனவின் நிலை பற்றிய சுமாரான கையிருப்பு பற்றி கணக்கிடுவது பற்றிய பிரச்சினை என்ற மட்டத்திற்கு, அத்தகைய மதிப்பீடு முற்றிலும் திருப்திகரமானதாக அல்லது போதுமானதாக ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாது. பெட்ரோகிராடில் வலுவான படைகள் எதிரிக்கு இருந்ததாக லெனின்கூட மதிப்பீடு செய்தார்; எனவே கிட்டத்தட்ட குருதி சிந்தாத முறையில் இருக்கக்கூடும் என்பதால் எழுச்சி மாஸ்கோவில் தொடங்கப்படலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார். மிகச் சாதகமான சூழ்நிலையிலும் கூட இத்தகைய கணிப்புப் பிழைகள் ஓரளவு வரக்கூடும் என்பதும் முற்றிலும் தவிர்க்கப்பட முடியாதவை; குறைந்த சாதகமான சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக திட்டம் தீட்டுதல் எப்பொழுதும் மிகச்சரியானதாகும். இந்த நிலைமையை பொறுத்தவரையில் நமக்கு அக்கறை தருவது என்னவெனில், எதிரியின் படைகளை மோசமான அளவில் மிகைமதிப்பீடு செய்வது மற்றும் உண்மையில் எந்த ஆயுதப்படையையும் எதிரி இழந்துவிட்ட நிலையில் அனைத்து அளவுப் பொருத்தங்களும் முற்றிலும் திரிக்கப்பட்டது என்ற உண்மையாகும். "ஜேர்மனியின் அனுபவம் நிரூபித்துள்ளது போல்" இந்தப் பிரச்சினை உயர்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒரு கிளர்ச்சிக்கான நிலைப்பாட்டை முற்றுமுழுதாக கொண்டிராவிட்டாலும், எழுச்சி என்ற முழக்கம் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களால் அணுகப்பட்டபொழுது, ஒரு கிளர்ச்சித்தன்மையின் நிலைப்பாட்டிலிருந்து, எதிரியை ஒழித்துக்கட்டலில் அவர்கள் ஆயுதப்படையினர் பற்றிய பிரச்சினையை சர்வசாதாரணமாக (Reichswehr, fascist detachments, police போன்றவற்றை) அலட்சியம் செய்தனர். தொடர்ச்சியாக பெருகிக் கொண்டிருக்கும் புரட்சி வெள்ள அலை, இராணுவப் பிரச்சினையை இயல்பாகவே தீர்த்துவிடும் என்று அவர்களுக்கு தோன்றியது. ஆனால் பணி அவர்கள் முகத்தில் திகைப்பை ஏற்படுத்தியபொழுது, எதிரியின் வசம் இருந்த இராணுவப் பிரிவுகளை, அவை இல்லாதது போல் கருத்திற்கொண்ட அதே தோழர்கள், உடனடியாக இன்னொரு கோடிக்குச்சென்றனர். அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆயுத வலிமையின் அனைத்து புள்ளி விவரங்களிலும் முழுமனதாக நம்பிக்கை வைத்தனர், அத்துடன் இராணுவம் மற்றும் போலீஸ் படைகளின் வலிமையையும் அதிக கவனத்துடன் கூட்டிக் கொண்டனர்; பின் இவை அனைத்தையும் ஒரு முழு எண்ணிக்கையாக்கி கொண்டு (அரை மில்லியனும், அதற்கு மேலும் என்று), தங்களின் சொந்த முயற்சிகளை செயலற்றதாக்குவதற்கு முற்றிலும் போதுமான அளவிற்கு தலைமுதல் கால்வரை ஆயுதந்தரிக்கப்பட்ட ஒரு போரிடும் பரந்த படையை இவ்வாறு பெற்றனர்.

ஜேர்மனிய எதிர்ப்புரட்சி படைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தன என்பதில் சந்தேகம் இல்லை; எப்படியும் நம்முடைய கோர்னிலோவைட்டுக்கள், அரை-கோர்னிலோவைட்டுக்களை விட சிறந்தமுறையில் ஒழுங்கமைக்கப்பட்டும் தயாரிக்கப்பட்டும் இருந்தன. ஆனால் ஜேர்மனியின் புரட்சி சக்திகளின் திறனாற்றலும் அவ்வாறுதான் இருந்தன. ஜேர்மனியில் பாட்டாளி வர்க்கம் மக்கட்தொகையில் மிகப் பெரிய பெரும்பான்மையை கொண்டிருந்தது. எமது நாட்டில், இப்பிரச்சனை --மிகக் குறைந்தது ஆரம்ப கட்டத்திலேனும்-- பெட்ரோகிராடினாலும், மாஸ்கோவினாலும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஜேர்மனியில் எழுச்சி உடனடியாக சக்திவாய்ந்த பாட்டாளி வர்க்க மையங்களில் கொழுந்துவிட்டு எரிந்திருக்கும். இந்த துறையில் எதிரியின் ஆயுதப் படைப்பிரிவுகள் முழு எண்களாக வெளிப்படுத்தப்பட்டு, புள்ளி விவர கணக்கீடுகளில் அவர்கள் செய்தவாறு கிட்டத்தட்ட பயங்கரமானதாக பார்க்கப்பட்டிருந்திராது. எப்படிப்பார்த்தாலும், ஜேர்மனியின் அக்டோபர் தோல்விக்குள்ளான பின்னர், அத்தோல்விக்கு வழிவகுத்த கொள்கையை நியாயப்படுத்தும் வகையில், இன்னும் அப்படித்தான் செய்யப்பட்டுவரும் தனிப்பட்ட நோக்கத்தோடு செய்யப்பட்ட கணக்கீடுகளை நாம் கட்டாயம் உறுதியாக நிராகரிக்க வேண்டும். எமது ரஷ்ய முன்னுதாரணம் இது தொடர்பானதில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பெட்ரோகிராடில் குருதி சிந்தாமல் நாம் பெற்ற வெற்றிக்கு இரண்டு வாரங்கள் முன்பு, சொல்லப்போனால் இரண்டு வாரங்களுக்கு முன்பே நாம் அதை பெற்றிருக்கக் கூடும்; நமக்கு எதிராக இராணுவத்தில் இருந்த காடெட்டுக்கள் ஆர்வத்துடனும் போர் செய்யும் ஆற்றல் பெற்றிருந்ததையும், அதிர்ச்சிப் படைகள், கோசாக்குகள், கோட்டைகளின் கணிசமான காவற்படைகள், பீரங்கிப் படை, பரவலான அமைப்பை கொண்ட முன்னணியில் இருந்து படைகள் அணிவகுத்து வருவதை அனுபவமிக்க கட்சியின் அரசியல்வாதிகள் கண்டார்கள். ஆனால் யதார்த்தத்தில் இவை அனைத்தும் இறுதியில் ஒன்றுமில்லாததாக, முழுமையான எண்ணில் பூஜ்யம் ஆக ஆயிற்று. எமது கட்சியில் எழுச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அன்று மத்திய குழுவில் வெற்றி பெற்றிருந்ததாக ஒரு கணம் கற்பனை செய்வோம். உள்நாட்டுப்போரில் தலைமை வகிக்கும் பங்கு மிகத்தெளிவானது: மத்திய குழுவிற்கு எதிராக லெனின் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தால் அன்றி, அத்தகைய நிலையில் புரட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே அழிவிற்குட்பட்டிருக்கும். அதை அவர் செய்யத் தயாராகத்தான் இருந்தார், அதில் அவர் வெற்றியும் பெற்றிருந்திருப்பார். ஆனால் இதேபோன்ற சூழ்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தமது லெனினை கொண்டிருக்கமாட்டா....

மத்திய குழுவினில் யுத்தத்தை விலக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை செயல்படுத்தியிருந்தால், வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்ககூடும் என்ற கற்பனை செய்து பார்ப்பது கடினமான செயல் அல்ல. அக்டோபர் 1917ல் ஓர் எழுச்சியை நடத்தியிருப்பது என்பது சுத்த பைத்தியக்காரத்தனமானதுதான் என்று அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப்பர்; மற்றும் வாசகர்களுக்கு அவர்கள் இராணுவ காடெட்டுக்கள், கோசாக்குகள், அதிர்ச்சிப் படைகள், பீரங்கிப்படை, முன்னணியில் இருந்து வரவிருக்கும் படைப்பிரிவுகள் என்று பிரமிப்பூட்டும் புள்ளிவிவரங்களைக் கொடுத்திருப்பர், எழுச்சி என்ற பெருந்தீயினால் சோதிக்கப்படாத நிலையில், இந்தப் படைகள் நடைமுறையில் இருந்ததைவிட அளவிடமுடியாதளவு பயங்கரமாக இருப்பதாக பார்க்கப்பட்டிருக்கும். இதுதான் ஒவ்வொரு புரட்சியாளருடைய நனவிலும் பதிந்திருக்கவேண்டிய படிப்பினையாகும்!

இத்தகைய முறையில் தொடர்ச்சியாக, அயராமல் செப்டம்பர், அக்டோபர் முழுவதும் மத்திய குழுவில் லெனின் அழுத்தம் கொடுத்தது, இந்த அனுகூலமான தருணத்தை நழுவ விட்டுவிடக்கூடாது என்ற அவருடைய தொடர்ந்த அச்சத்திலிருந்து எழுகிறது. இவை அனைத்துமே பொருளற்றவை என்ற பதிலை வலதுகள் கொடுத்தார்கள்; நம்முடைய செல்வாக்கு வளரும் என்பது அவர்கள் கருத்து. இதில் யாருடைய நிலைப்பாடு சரியானது? அனுகூலமான தருணத்தை நழுவவிடக்கூடாது என்பதற்கு என்ன பொருள்? புரட்சியின் வழிவகையையும் அர்த்தத்தையும் பற்றிய போல்ஷிவிக்குகளின் மதிப்பீடானது சமூக ஜனநாயகவாதிகளினதும், மென்ஷிவிக்குகளினதும் வழிவகையுடன் தீவிரமான, தெளிவான, நேரடியான மோதலுக்கு வருவதில் இப்பிரச்சினை நேரடியாக சம்பந்தப்படுகிறது: முந்தையது துடிதுடிப்பானது, மூலோபாயம் நிறைந்தது, முற்றிலும் நடைமுறைப்படுத்தக்கூடியது. பிந்தையதோ விதிப்பயன்வாதத்தில் தோய்ந்திருந்தது.

அனுகூலமான தருணத்தை நழுவவிடக்கூடாது என்பதற்கு பொருள் என்ன? சக்திகளின் உறவில் நமக்குச் சாதகமாக உள்ளபொழுது, ஐயத்திற்கிடமற்றவகையில் ஒரு எழுச்சிக்கான மிகச் சாதகமான நிலைமைகள் நிலவுகின்றது என்பதாகும். அதாவது நனவின் செயற்களத்தில் உள்ள சக்திகளுக்கு இடையே உள்ள உறவை பற்றித்தான் நாம் குறிப்பிடுகிறோம்; இது அரசியல் மேல்கட்டுமானத்தின் செயற்களத்தில் இருக்குமே ஒழிய, பொருளாதார அடித்தளத்தின் செயற்களத்தில் இருக்காது, முழு புரட்சிகர சகாப்தத்திலும் அது கிட்டத்தட்ட மாறாத தன்மையைக் கொண்டிருந்தது என கருதலாம். ஒரே பொருளாதார அடிப்படையில், ஒரே ஒரு வர்க்க பேதம்தான் சமூகத்தில் இருக்கும்போது, சக்திகளின் உறவானது பாட்டாளி வர்க்க மக்களுடைய மனப்போக்கினை சார்ந்து மாறுகிறது; இது எந்த அளவிற்கு அவர்களுடைய பிரமைகள் சிதறடிக்கப்படுகிறது மற்றும் அவர்களின் அரசியல் அனுபவங்கள் வளர்ந்திருக்கிறது, அரச அதிரகாரத்தில் உள்ள இடைப்பட்ட வர்க்கங்கள் மற்றும் குழுக்கள், இவற்றின் நம்பிக்கை எந்த அளவிற்கு உடைத்தெறியப்படுகிறது என்பதை பொறுத்து உள்ளது மற்றும் இறுதியில் எந்த அளவிற்கு பிந்தையது தன்னிலேயே நம்பிக்கை இழக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. ஒரு புரட்சியின்போது இந்த வழிவகைகள் மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றன. முழு தந்திரோபாய கலையும் கீழ்க்கண்டதில்தான் அடங்கியுள்ளது: கொர்னிலோவ் எழுச்சி முற்றிலுமாக அத்தகைய சேர்க்கையை தயாரித்திருந்தது. முழுநிலைமைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கும் கணத்தை நாம் பற்றிக் கொள்ளுகிறோம். சோவியத் பெரும்பான்மை கட்சிகளிடத்தில் நம்பிக்கையை இழந்த பரந்த மக்கள் தங்களது சொந்தக் கண்களாலேயே எதிர்ப்புரட்சி ஆபத்தைக் காண்கின்றனர். போல்ஷிவிக்குகள்தான் இப்பொழுது இந்த இக்கட்டிலிருந்து வெளியேற வகைசெய்ய முடியும் என்ற முடிவிற்கு அவர்கள் வருகின்றனர். அரச அதிகாரத்தின் அடிப்படை சிதைவோ, போல்ஷிவிக்குகளிடத்தில் பரந்த மக்களின் பொறுமையற்ற அடிப்படை பாய்ச்சல் மற்றும் இம்மியும் பிசகாத நம்பிக்கையோ நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியாது. நெருக்கடி ஏதேனும் ஒருவழியில் தீர்க்கப்பட்டுவிட வேண்டும். அது இப்பொழுதே நடக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒருபொழுதும் நடவாது! அப்படித்தான் பலமுறையும் லெனின் கூறிக்கொண்டிருந்தார்.

இதை மறுக்கும் வகையில் வலதுகள் கூறினர்: "பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகார மாற்றம் பற்றிய பிரச்சினையை இப்பொழுதுதான் இல்லாவிடில் எப்பொழுதுமே இல்லை என்ற அர்த்தத்தில் முறைப்படுத்துவது என்பது தீவிரமான வரலாற்றுப் பிழையாகிவிடும். இல்லை. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி வளரும். அதனுடைய வேலைத்திட்டம் பரந்த, விரிந்த மக்களுக்கு நன்கு தெரியவரும். ...தன்னுடைய வெற்றியை தடை செய்வதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு வழிதான் உள்ளது; அது இந்தச் சூழ்நிலையில் எழுச்சிக்காக தானே முயற்சியை மேற்கொள்ளுவது என்பதுதான். ...இத்தகைய ஆபத்தான கொள்கைக்கு எதிராக நாங்கள் எங்களுடைய குரலை எச்சரிக்கையாக எழுப்புகிறோம்." ["தற்போதைய சூழ்நிலை பற்றி"] இந்த விதிப்பயன்வாத நன்னம்பிக்கைவாதம் மிகக் கவனமான ஆய்விற்குரியது.. இதில் தேசியவகையோ, தனிநபர் வகை என்பதோ சிறிதும் இல்லை. கடந்த ஆண்டுதான் இதே போக்கை ஜேர்மனியில் நாம் கண்டோம். இந்த செயலற்ற தன்மை உடைய விதிப்பயன்வாதம் என்பது உண்மையில் திடசித்தமின்மை, செயல்திறன் அற்ற நிலை இவற்றுக்கான மூடுதிரை மட்டுமே ஆகும்; ஆனால், உங்களுக்கு தெரியுமா, நாம் மேலும் வளர்கிறோம், மேலும் செல்வாக்குப்பெறுகிறோம், நாட்கள் செல்லச் செல்ல எமது சக்திகள் தொடர்ந்து பெருகும் என்று ஆற்றுப்படுத்திக் கொள்ளும் முன்கணித்தலுடன் தன்னையே மறைத்துக்கொள்கிறது. எத்தகைய பெரும் ஏமாற்று! ஒரு புரட்சிக் கட்சியின் வலிமை ஒரு குறிப்பிட்ட கணம் வரையில்தான் பெருகும்; அதற்குப் பின் அது முற்றிலும் எதிர்த்திசையில் திரும்பிவிடும். பரந்த மக்களுடைய நம்பிக்கைகள், கட்சியின் செயலற்ற தன்மையினால் மயக்கம்தெளிதலாக மாறிவிடும்; எதிரி தன்னுடைய பீதியில் இருந்து வெளிவந்து இம் மயக்கம் தெளிதலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுவான். அத்தகையதொரு திட்டவட்டமான திருப்புமுனையைத்தான் அக்டோபர் 1923ல் ஜேர்மனியில் கண்டோம். 1917 இலையுதிர்காலத்தில் ரஷ்யாவிலும் அதுபோன்று நிகழ்வுகள் மாறும் நிலையில் இருந்து தொலைவில் ஒன்றும் நாம் இருந்துவிடவில்லை. அதன் காரணமாக, இன்னும் சில வாரங்கள் தாமதப்படல்கூட ஒருவேளை, அதற்கு போதுமானதாக இருந்திருக்கும். லெனினின் நிலைப்பாடு சரியே. இப்பொழுதுதான், இல்லாவிடின் எப்பொழுதுமே இல்லை!

"ஆனால் தீர்க்கமான பிரச்சினை" --இதில்தான் எழுச்சிக்கு எதிர்ப்பாளர்கள் தங்களுடைய கடைசி, வலுவான வாதங்களை கொண்டுவந்தனர்-- தலைநகரில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் உண்மையில் விடிவு தெருச் சண்டையில்தான் உள்ளது என்று நினைப்பதுடன், தெருக்களுக்கு செல்வதற்கு பொறுமையற்று இருக்கிறார்களா? இல்லை. அத்தகைய உணர்வு ஒன்றும் இல்லை. தலைநகரில் இருக்கும் மகத்தான ஏழைகள் பிரிவிடையே தெருச் சண்டைகளுக்கு போகவேண்டும் என்ற அத்தகைய போர்க்குண உணர்வு இருக்குமேயானால், அது அவர்களால் தொடக்கப்படும் எழுச்சிக்கு மிகப் பெரிய ஆதரவுக் கூட்டத்தை திரட்டியிருக்க கூடிய உத்தரவாதத்தை நம்முடைய செல்வாக்கு வலுவற்றுள்ள பாரிய அமைப்புகளில் (இரயில் தொழிற்சங்கங்கள், தபால், தந்தி தொழிற்சங்கங்கள் முதலியனவற்றில்) இழுத்திருக்கும். ஆனால் அத்தகைய உணர்வு ஆலைகளிலும், பாசறைகளிலும்கூட இல்லாததால், "அதை நம்பி திட்டங்கள் போடுவது சுய "ஏமாற்றாக இருக்கும்" ["தற்போதைய சூழ்நிலை பற்றி"]. ஜேர்மன் கட்சியின் முக்கிய தோழர்கள் கடந்த ஆண்டு ஒரு தாக்குதல்கூட கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கியதற்கு விளக்கம் கொடுத்து விலக முற்பட்டபோது, அதிலும் குறிப்பாக மக்கள் போரிட தயக்கம் காட்டினர் என்பதை வலியுறுத்தி நின்ற நிலையில், அக்டோபர் 11 அன்று எழுதப்பட்ட இந்த வரிகள் அசாதாரணமான முறையிலும், காலத்தால் சிறந்தவகையிலும் முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஆனால் பொதுவாக பேசுகையில், மக்கள் போதிய அனுபவத்தை கொண்டு முழு மூச்சுடன் போராட்டத்தில் ஈடுபடாமல் பொறுத்திருந்து அசையா உறுதியுள்ள மற்றும் திறமையான போரிடும் தலைமைக்காக காத்திருக்கும்போது, வெற்றிகரமான ஓர் எழுச்சி மிகவும் உறுதிப்படுகின்றது என்ற உண்மையில்தான் விஷயத்தின் முடிவுத் தீர்ப்புக்குரிய திருப்பம் இருக்கிறது. அக்டோபர் 1917ல், பரந்த தொழிலாள வர்க்க தட்டு, அல்லது குறைந்த பட்சம் அதன் முன்னேறிய பகுதி, ஏற்கனவே அது ஏப்ரல் ஆர்ப்பாட்டங்களில், ஜூலை நாட்கள் மற்றும் கோர்னிலோவ் நிகழ்வுகளின்போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், தனித்தனியான அடிப˘படை எதிர்ப்புக்களோ அல்லது உளவுபார்க்கும் நடவடிக்கைகளோ இன்றைய நிகழ்ச்சி நிரலில் இல்லை, மாறாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தீர்க்கரமான எழுச்சிதான் உகந்தவகை என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டது. அதற்கேற்றவாறு பரந்த மக்களின் உளப்பாங்கு மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாய், மிகவும் திறனாயும் தன்மையானதாய், மற்றும் மிகவும் ஆழ்ந்த தன்மையானதாய் ஆகியது. பிரமைகொண்ட, மேலெழுந்தவாரியான, அடிப்படைநிலை உளப்பாங்கில் இருந்து மிகவும் திறனாயத்தக்க நனவுடன் கூடிய மனப்பாங்கிற்கு உருமாற்றம் புரட்சிகர தொடர்ச்சியில் ஒரு இடைவேளையை உட்குறிப்பாகக் காட்டுகிறது. மக்களுடைய உளப்பாங்கில் அத்தகைய முன்னேற்றகரமான நெருக்கடி சரியான கட்சிக் கொள்கையின் மூலமாகத்தான் கடக்கப்பட முடியும்; குறிப்பாக சொல்வதாயின், எல்லாவற்றிற்கும் மேலாக, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு தலைமை தாங்குவதற்கான, கட்சியின் திறன் மற்றும் உண்மையான தயார்நிலை இவற்றால்தான் கடக்கப்பட முடியும். மாறாக, நீண்டகால புரட்சிகர கிளர்ச்சியை நடத்துகின்ற ஒரு கட்சி, சமரசவாதிகளின் செல்வாக்கில் இருந்து மக்களை அகற்றி, பின்னர் மக்களுடைய நம்பிக்கையை உச்சநிலைக்கு உயர்த்தி, தயக்கத்தை வெளிப்படுத்தி, செய்வதறியாமல் திகைத்து நின்று, தேக்கத்தில் இருந்து இறுதியில் காலம் தாழ்த்திவிடும்; அத்தகைய கட்சி மக்களுடைய செயற்பாடுகளை முடக்கி, அவர்களிடையே மயக்கத்தையும் சிதைவையும் விதைக்கும் மற்றும் புரட்சிக்கு அழிவை கொண்டுவந்துவிடும். ஆனால் இறுதியில் தனக்கு மட்டும் தயாராக ஒரு காரணத்தை கூறிக்கொள்ளும், "மக்கள் போதுமான செயல்திறனற்று விளங்கினர்". இத்தகைய போக்கைத்தான் "தற்போதைய சூழ்நிலை பற்றி'' என்பதில் நாம் காண்கிறோம். அதிருஷ்டவசமாக எமது கட்சியானது லெனினின் தலைமையின் கீழ் தலைவர்களிடமிருந்த அத்தகைய உளப்பாங்குகளை உறுதியாக நீர்த்துப்போகச்செய்ய முடிந்தது. இதன்காரணமாக மட்டுமே அது ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்த முடிந்தது.

அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புடன் இணைந்திருந்த அரசியல் பிரச்சினைகளின் தன்மையை விளக்கினோம்; மற்றும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தெளிவுபடுத்தும் முயற்சியில் அதனுடைய சுருக்கத்தை கொடுக்க முற்பட்டோம்; இப்பொழுது கடைசி தீர்மானகரமான வாரங்களின்போது உட்கட்சி போராட்டத்தின் மிக முக்கியமான கணங்களை நாம் சுருக்கமாக காணவேண்டி இருக்கிறது. அக்டோபர் 10ம் தேதி மத்திய குழுவால் ஆயுதமேந்திய எழுச்சிக்கான தீர்மானம் ஏற்கப்பட்டது. அக்டோபர் 11ம் தேதி "தற்போதைய சூழ்நிலை பற்றி" என மேலே பகுப்பாய்வு செய்யப்பட்ட கடிதம், கட்சியின் மிக முக்கிய அமைப்புக்களுக்கு அனுப்பப்பட்டது. புரட்சிக்கு ஒரு வாரம் முன்பு, அதாவது அக்டோபர் 18 அன்று, புதிய வாழ்வு [Novaya Zhizzn, New Life] காமெனேவின் கடிதத்தை வெளியிட்டது. "தோழர் ஜினோவியேவ் மற்றும் நான் மட்டுமின்றி, நடைமுறை அறிவுடைய பல தோழர்களும், சக்திகள் பற்றிய தொடர்புபடுத்தலை எடுத்துக்கொள்கையில், சோவியத்துக்களின் மாநாட்டிற்கு, அதில் இருந்து முற்றிலும் சுதந்திரமான வகையில், சில நாட்கள் முன்னதாக தற்போதைய சூழ்நிலையில் ஆயுதமேந்திய எழுச்சிக்கான முயற்சிகள் கொள்ளப்படுவது பாட்டாளி வர்க்கத்திற்கும் புரட்சிக்கும் அழிவு தரும் ஒரு ஏற்கவியலாத நடவடிக்கை என்று கருதுகிறோம்" என்று இக்கடிதத்தில் படிக்கிறோம். [Novaya Zhizn, No.156, October 18, 1917]. அக்டோபர் 25ல் பெட்ரோகிராடில் அதிகாரம் கைப்பற்றப்பட்டு சோவியத் அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நவம்பர் 4ம் தேதி, கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், மக்கள் கமிசார்கள் அவையில் (Council of People’s Commissars) இருந்தும் பொறுப்புடைய பல கட்சி உறுப்பினர்கள் இராஜிநாமா செய்தனர்; மேலும் அவர்கள், அனைத்து சோவியத் கட்சிகளையும் இணைத்த ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஓர் இறுதி எச்சரிக்கையையும் விடுத்தனர். "இல்லாவிடின், அரசியல் பயங்கரத்தின் மூலம் ஒரு முற்றிலும் போல்ஷவிக் அரசாங்கத்தைக் கொள்ளுவதுதான் எஞ்சிய ஒரே வழி" என்றும் அவர்கள் எழுதினர். அதே காலக்கட்டத்தில் வெளியிட்ட இன்னொரு ஆவணம் கூறியதாவது: மத்திய குழுவின் அழிவுதரும் இந்தக் கொள்கைக்கு நாங்கள் எவ்வித பொறுப்பும் ஏற்கத் தயாராக இல்லை; பாட்டாளிகள் மற்றும் படைவீரர்களின் மிகப் பெரும்பான்மையினரது விருப்பத்திற்கு எதிரான முடிவு இது; அவர்கள் மிக விரைவில் ஜனநாயகத்தின் பல பிரிவுகளுக்கும் இடையே குருதி சிந்துதல் நிறுத்தப்பட வேண்டும் என்று விழைகின்றனர். இக்காரணத்தை ஒட்டி, நாங்கள் மத்திய குழுவில் எங்களுடைய பொறுப்புக்களில் இருந்து இராஜிநாமா செய்கிறோம்; எங்களுடைய தெளிவான கருத்துக்களை தொழிலாள மக்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கவும் எங்களுடைய கூக்குரலுக்கு ஆதரவுதருமாறு கூவியழைக்கிறோம்: "அனைத்து சோவியத் கட்சிகளின் அரசாங்கம் வாழ்க! இந்த அடிப்படையில் உடனடியாக இணக்கம் வேண்டும்!" ["The October Revolution," Archives of the Revolution, 1917, pp. 407— 10].

ஆயுதமேந்திய எழுச்சி, மற்றும் அதிகாரத்தை கைப்பற்றுவதானது ஒரு வெறும் தீரச்செயல் போன்றது என இரண்டையும் எதிர்த்தவர்கள், எழுச்சி வெற்றிகரமான முடிவிற்கு வந்தபின்னர், அதிகாரத்தை வெற்றிகொள்ள பாட்டாளி வர்க்கம் யாருக்கு எதிராக போரட வேண்டி இருந்ததோ அந்தக் கட்சிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரினர். எதற்காக வெற்றிபெற்ற போல்ஷிவிக் கட்சி, மென்ஷிவிக்குகளுக்கும் சமூகப் புரட்சியாளர்களுக்கும் அதிகாரத்தை மீட்டு அளிக்க வேண்டும்? (இங்கும் துல்லியமாக அதிகாரத்தை மீட்டுவித்தல் என்பதுதான் சர்ச்சைக்குரியதாக இருந்தது!). இதற்கு எதிர்த்தரப்பு விடையிறுத்தது: "அத்தகைய அரசாங்கத்தை தோற்றுவித்தல் மேலும் குருதிசிந்துதல், வரவிருப்பதாய் அச்சுறுத்தும் பஞ்சம் இவற்றை தடுப்பதற்கும், புரட்சியை காலேடின் (Kaledin) மற்றும் அவருடைய கூட்டாளிகள் நசுக்காமல் தடுப்பதற்கும், அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டப் பெறுவதற்கும், அனைத்து ரஷ்ய தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் சோவியத்துகளது பேராயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமாதான வேலைத்திட்டத்தை உண்மையாய் செயல்படுத்துவதற்காகவும் அவசியமானது என்று நாங்கள் கருதுகிறோம்." [Ibid., pp.407—10]. வேறுவிதமாகக் கூறினால், சோவியத்துக்களின் நுழைவாயில் வழியே முதலாளித்துவ பாராளுமன்ற முறைக்கு வழி அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது பற்றிய பிரச்சினை ஆகும். பாராளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு வழியே கடந்து செல்ல புரட்சி மறுத்துவிட்டது; ஒரு பாதையை தானே அமைத்து அக்டோபருக்கு வந்தது; ஆகையால் எதிர்ப்பாளர்களால் முறைப்படுத்திக்கூறப்பட்டவாறு, பணியானது, புரட்சியை முதலாளித்துவ வர்க்க ஆட்சிப் பாதையில் திருப்பிவிடுவதன் மூலம் அதனை சர்வாதிகாரத்தில் இருந்து மென்ஷிவிக்குகள், சமூகப் புரட்சியாளர்கள் உதவியுடன் காப்பாற்றவேண்டும்; இங்கு பிரச்சனை என்னவெனில் அக்டோபர் புரட்சியை தகர்த்து கரைத்துவிட வேண்டும் -கூடுதலாகவோ, குறைவாகவோ வேறு ஏதும் இல்லை. இயல்பாகவே அத்தகைய சூழ்நிலையில் சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இருக்க முடியாது.

இதற்கு மறுநாள், நவம்பர் 5 அன்று, இன்னும் ஒரு கடிதம் அதே கருத்துக்களை பிரதிபலித்து வெளியிடப்பட்டது. "கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில், அனைத்து சோசலிஸ்ட் கட்சிகளுடனும் சமரசம் இல்லாவிட்டால் பேரழிவுதான் வரும் என்ற அச்சுறுத்தலின் கீழ், பொது அறிவு, பரந்த மக்களுடைய அடிப்படை இயக்கம் ஆகியவையும் வலியுறுத்தும் கருத்துக்களுக்கு எதிராக, மார்க்சிஸ்ட்டுகள் புறச் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல் செயலாற்றுவதை பார்த்துக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் தனிமனித வழிபாட்டுக்கு அடிபணியத் தயாராய் இல்லை; இந்த அல்லது அந்த தனிநபர் அமைச்சரவையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதன் மீதாக எமது அனைத்து அடிப்படை கோரிக்கைகளையும் ஏற்கும் அனைத்து சோசலிஸ்ட் கட்சிகளுடனும் அரசியல் சமரசத்தை பணயம் வைக்கத் தயாராக இல்லை; அக்காரணத்திற்காக குருதி சிந்துதலை ஒரு நிமிடமேனும் நீடிக்க நான் விரும்பவில்லை" [Rabochaya Gazeta (Workers’ Journal), No.204, Nov. 5, 1917]. இக்கடிதத்தை எழுதிய லசோவ்ஸ்கி (லிணீக்ஷ்ஷீஸ்sளீஹ்) "ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி (போல்ஷிவிக்குகள்) ஒரு மார்க்சிச தொழிலாள வர்க்க கட்சியாக இருக்குமா அல்லது புரட்சிகர மார்க்சிசத்துடன் தொடர்பு இல்லாத அமைப்பாக இருக்குமா" என்பதை தீர்மானிப்பதற்கு கட்சியின் அவரசரகால பேராயம் ஒன்று உடனடியாக கூட்டப்பெறவேண்டும் என்றும் அறிவித்து கடிதத்தை முடித்துள்ளார்.[ ibid]

இப்படி நிலைமையானது முற்றிலும் நம்பிக்கையிழந்த தன்மையை கொண்டிருந்தது. முதலாளித்துவ வர்க்கமும் நிலப் பிரபுக்களும் மட்டும் அல்லாமல், பல அமைப்புக்களின் முன்னணி அமைப்புக்களைக் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்ட "புரட்சிகர ஜனநாயகவாதிகள்" என்று அழைக்கப்பட்டவர்கள்கூட (அனைத்து ரஷ்ய இரயில்வே ஊழியர்களின் மத்திய நிர்வாகக் குழு [vikzhel], இராணுவக் குழுக்கள், அரசாங்க ஊழியர்கள், இன்னும் பல அமைப்புக்கள்) என்றில்லாமல், எமது கட்சியின் மிகச்செல்வாக்கு மிக்க உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர்களும், மக்கள் கமிசார் அவை உறுப்பினர்களும் கட்சி தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு முயற்சிப்பதை உரத்த குரலில் பகிரங்கமாக கண்டனம் செய்தனர்.

நாம் திரும்பக் கூறுவோம், இப்படி நிலைமை மோசமாக தோன்றக் கூடும், அதனை ஒருவர் நிகழ்வுகளின் மேற்புறத்தில் பார்க்கும்போது மட்டுமே. அப்படியானால் மிஞ்சியிருப்பது என்ன? எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு வாய்பேசாது உடன்படுவதன் அர்த்தம் அக்டோபரை இல்லாதொழித்துவிட வேண்டும் என்பதாகும். அப்படியென்றால் அதை நாம் முதலில் அடைந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஒரேயொரு வழிதான் பாக்கியிருந்தது: அது பரந்த மக்களுடைய புரட்சிகர உறுதியின் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுவது. நவம்பர் 7ம் தேதி பிராவ்தா, கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு லெனினால் எழுதப்பட்ட, உண்மையான புரட்சிகரப்போக்கு ஊடுருவிய, தெளிவான, எளிமையான, பிழையற்ற, முறைப்படுத்திக்கூறல்களை வெளிப்படுத்தும் எமது கட்சியின் மத்திய குழுவின் தீர்மானகரமான பிரகடனத்தை வெளியிட்டது. இந்தப் பிரகடனமானது, கட்சி மற்றும் அதன் மத்திய குழுவின் வருங்கால கொள்கை பற்றிய எந்த ஐயத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைப்பதாக இருந்தது: "தளர்ந்த இதயம் உடையவர்கள், ஊசலாடுபவர்கள், ஐயப்படுபவர்கள், முதலாளித்துவத்தினால் தங்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டவர்கள், அவர்களுடைய நேரடியான மறைமுக ஆதரவாளர்களுக்கு அடிபணிய கருதியவர்கள் அனைவரும் வெட்கப˘படவேண˘டும˘! பெட்ரோகிராட், மாஸ்கோ மற்றும் ஏனைய இடங்களில் இருக்கும் தொழிலாளர்கள், படைவீரர்கள் பிரிவிடையே எந்தவிதமான தயக்கமும் இல்லை. எமது கட்சி உறுதியாக, ஒருமைப்பாட்டுடன், ஒரு நபர் போல, சோவியத் அதிகாரத்தை காப்பதற்கு, அனைத்து உழைக்கும் மக்களின் நலன்களையும் காப்பதற்கு மற்றும் எல்லாவற்றிற்கும் முக்கியமாக தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கு உறுதியாக உள்ளது. [CW; Vol.26, "From the Central Committee of the R.S.D.L.P. (B.) to All Party Members and to All the Working Classes of Russia" (November 5-6, 1917), pp. 3O5-O6].

மிகத் தீவிரமான கட்சியின் நெருக்கடி கடக்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்சி உட்பூசல் இன்னும் நின்றுவிடவில்லை. போராட்டத்தின் பிரதான திசைவழிகள் அதேபோல்தான் இருந்தன. ஆனால் அதனுடைய அரசியல் முக்கியத்துவம் மங்கத் தொடங்கிவிட்டது. இதற்கான பரபரப்பான சான்றை, அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டுவது பற்றிய விஷயத்தில் நம் கட்சியின் பெட்ரோகிராட் குழு கூட்டத்தில் டிசம்பர் 12 அன்று நடத்திய கூட்டத்தில் உரிட்ஸ்கியால் (Uritsky) வழங்கப்பட்ட அறிக்கையில் காண்கிறோம். "எமது கட்சியில் கருத்துவேறுபாடுகள் என்பது புதிதானதொன்றல்ல. எழுச்சி பற்றிய பிரச்சினை மீது முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அதேபோக்கைத்தான் இப்பொழுதும் காண்கிறோம். சில தோழர்கள் அரசியலமைப்பு நிர்ணய சபை புரட்சிப் பணியின் மகுடம் என்ற கருத்தை இப்பொழுது கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வதிமுறைகள் என்ற கொக்கியின் மீது கொளுவிக்கொண்டுள்ளனர். அதாவது நாம் செயல்நயமற்றவகையில் நடந்துகொண்டுவிடக் கூடாது எனச் சொல்லுகின்றனர். எப்பொழுது அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது என்பதை முடிவெடுக்க, அதிலுள்ள சக்திகளின் உறவு பற்றி முடிவெடுக்க அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்களாக போல்ஷிவிக்குகள் இருப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தல் அரசியல் நிர்ணய சபைக்கு வெளியே இடம்பெறும் நிகழ்வுகளின் எதிரொலிப்பு மட்டுமே என்ற உண்மையை முற்றிலும் எண்ணிப்பார்க்காமல் விட்டு, மற்றும் இந்தக் கருதிப்பார்த்தல்களை மனதிற்கொண்டு அரசியல் நிர்ணயசபை தொடர்பான எமது மனோபாவத்தை நாம் சுருங்கக் கூற முடியும் என்று அவர்கள் ஒரு மேலெழுந்தவாரியான நிலைப்பாட்டில் இருந்து இதைப் பார்க்கின்றனர்... இப்பொழுது நம்முடைய கருத்து என்னவென்றால், நாம் பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்; கையளவே ஆன சில தோழர்களோ நாம் முதலாளித்துவ புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம், அதன் மகுடம் அரசிலமைப்பு நிர்ணய சபை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்."

அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் கலைப்பானது ரஷ்ய வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயத்தை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டதாக கருதப்படலாம்; அது மட்டும் இல்லாமல் எமது கட்சியின் வரலாற்றிலும் சமமான அளவில் ஒரு முக்கியமான அத்தியாயம் முடிவிற்கு வந்தது. இந்த உட்பூசல்களை கடந்த வகையில், பாட்டாளி வர்க்கத்தின் கட்சியானது அதிகாரத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல், அதை பராமரித்துக் கொள்ளவும் முடிந்தது.

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved