wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 8

மீண்டும், சோவியத்துக்கள் மற்றும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் கட்சி பற்றி

Use this version to print | Send feedback

எமது நாட்டில் 1905, 1917 இரண்டு ஆண்டுகளிலுமே, தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடைய சோவியத்துக்கள் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இயக்கத்தின் இயல்பான அமைப்பு ரீதியான வடிவமாக வளர்ந்து வந்தன. ஆனால், சோவியத்துக்களை ஏறத்தாழ ஒரு "கோட்பாடு" அல்லது "கொள்கை" என்று ஏற்றுக்கொண்ட இளைய ஐரோப்பிய கட்சிகள் எப்பொழுதுமே சோவியத்துக்களை ஒரு புரட்சியில் ஏதோ சுய-பூர்த்தி காரணியாக, கண்மூடித்தனமாக வழிபடும் அபாயத்தை எப்போதும் செய்கின்றன. ஆயினும்கூட, அதிகாரத்திற்கான போராட்டத்தின் அங்கங்கள் என்ற முறையில் சோவியத்துக்கள் மகத்தான அனுகூலங்களை கொண்டிருந்த போதிலும்கூட, (தொழிற்சாலை குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற) வேறுவகையான அமைப்புக்கள் மற்றும் சோவியத்துக்களின் அடிப்படையில் இருந்தும் எழுச்சி கிளர்ந்தெழக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சோவியத்துக்கள் எழுச்சியின்பொழுது மட்டுமே வேகமாய் இயங்கலாம் அல்லது எழுச்சி வெற்றி அடைந்த பின்னர், அரசாங்கத்தின் அதிகார அங்கங்களாகவும் தோன்றலாம்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து மிகவும் முக்கியமாக அறிவு புகட்டக்கூடியது என்னவெனில், ஜூலை நாட்களுக்கு பின்னர் சோவியத்துக்களின் அமைப்பு வடிவத்தை கண்மூடித்தனமாக வழிபடுவதற்கு எதிராக லெனின் நடத்திய போராட்டமாகும். ஜூலை மாதத்தில் சமூகப்புரட்சியாளர்களினதும் மென்ஷிவிக்குகளினதும் சோவியத்துக்கள் இருந்த அளவை பார்க்கையில், அவ்வமைப்புக்கள் படையினர்களை போல்ஷிவிக்குகளுக்கு எதிராக தாக்குதல், நசுக்குதல் செய்ய வேண்டுமென்று பகிரங்கமாக உந்துதல் கொடுத்தபோது, அந்த அளவிற்கு பாட்டாளி வர்க்க மக்களின் புரட்சிகர இயக்கமும் புதிய பாதைகளையும், வழிவகைகளையும் கண்டறிய வேண்டியதாயிற்று. தொழிற்சாலை கமிட்டிகள் அதிகாரத்திற்கான போராட்டத்தின் அமைப்புக்களாக இருக்க வேண்டும் என்று லெனின் சுட்டிக் காட்டியிருந்தார். (உதாரணத்திற்கு தோழர் ஓர்ட்ஷோடநிகிட்ஜேயின் நினைவுக் குறிப்புக்களை காணவும்) கோர்னிலோவ்களின் எழுச்சி தோன்றியிராவிட்டால், அவ்வழிவகையில் இயக்கம் செலுத்தப்பட்டிருக்க கூடும்; அந்த எழுச்சி சமரசவாத சோவியத்துக்களை, தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயப்படுத்தியது மற்றும் போல்ஷிவிக்குகள் அவற்றிற்கு ஒரு புதிய புரட்சிகர வலிமையை ஊட்ட முடிந்ததுடன் அவை அனைத்தையும் மக்களுடன், இடதுகள் மூலம் அதாவது போல்ஷிவிக் பிரிவு மூலம் நெருக்கமாக பிணைப்பதை சாத்தியமாக்கியது.

சமீபத்திய ஜேர்மனிய அனுபவத்தால் காட்டப்பட்டது போல், இந்த வினா மகத்தான சர்வதேச முக்கியத்துவத்தை கொண்டது. ஜேர்மனியில்தான் பலமுறையும் சோவியத்துக்கள், எழுச்சியின் அமைப்புக்களாக எழுச்சியே நடைபெறாத நிலையிலும், எவ்வித அதிகாரமும் இன்றி அரச அதிகாரத்தின் அங்கங்களாக தோற்றுவிக்கப்பட்டிருந்தன. இது பின்வருமாறு இட்டுச்சென்றது: 1923ம் ஆண்டு பரந்த பாட்டாளி¢ மற்றும் அரைப்பாட்டாளி மக்களது¢ இயக்கம் தொழிற்சாலை கமிட்டிகளை சுற்றி படிகமாக இறுகத் தொடங்கியது. இதல் முக்கியமாக நிறைவேற்றப்பட்ட அனைத்து செயற்பாடுகளும், அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு சற்று முந்திய காலகட்டத்தில் நமது சொந்த சோவியத்துக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், 1923 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், சில தோழர்கள் நாம் உடனடியாக ஜேர்மனியில் சோவியத்துக்களை தோற்றுவிக்க வேண்டும் என்ற முன்மொழிவை முன்னெடுத்தனர். ஒரு நீண்ட, காரசாரமான விவாதத்திற்கு பின்னர், இம்முன்மொழிவு சரியான வகையிலேயே நிராகரிக்கப்பட்டது. ஆலைக் குழுக்கள் ஏற்கனவே நடைமுறையில் புரட்சிகர மக்கட்திரள் செயல்படும் மற்றும் அணிதிரளும் மையங்களாக ஆகியிருந்த நிலையில், தயாரிப்பு காலகட்டத்தில், சோவியத்துக்கள், எந்த உண்மையான உள்ளடக்கமும் இல்லாமல், ஒரு சமாந்தரமான அமைப்புக்களாகத்தான் இருந்திருக்கும். இது ஒரு சுயமான அமைப்பு வடிவம் என்பதை மட்டுமே உறுதிப்படுத்துவதன் மூலம், எழுச்சியின் உண்மை இலக்குகளிடமிருந்து (இராணுவம், போலீஸ், ஆயுதப்படைப் பிரிவுகள், இருப்புப் பாதைகள், போன்றவற்றில் இருந்து) கவனத்தை திசை திருப்பியிருக்கும். மேலும், மற்றொருவகையில், எழுச்சிக்கு முன்னாலும், எழுச்சிக்கான உடனடிப் பணிகளிலிருந்தும் விலகி, சோவியத்துக்களை தோற்றுவித்தல் என்பது, "நாங்கள் உங்களை தாக்கப் போகிறோம்!" என்ற வெளிப்படையான பிரகடனத்தை அறிவித்திருக்கும் ஆலைக்குழுக்கள் மாபெரும் மக்கட்திரள் ஒன்றுசேரும் மையங்களாக வந்த நிலையில், அரசாங்கம் அவற்றை "பொறுத்துக் கொள்ளும்" நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். ஆதலால், முதல் சோவியத் தோன்றும்போது அது அதிகாரத்தை கைப்பற்றும் "முயற்சியில்" அதிகாரபூர்வ அங்கம் என நினைத்து அவற்றை தாக்கும். சோவியத்துக்களை முற்றிலும் அமைப்பு ரீதியான இருப்புக்கள் என்று பாதுகாக்கும் நிலைதான் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படும். முடிவான போராட்டம் ஏதாவது சடரீதியான நிலைகளை கைப்பற்றுவதில் அல்லது பாதுகாப்பதில் வெடித்தெழாது, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட கணத்திலும் இராது - வெகுஜன இயக்கத்தின் நிலைமைகளில் இருந்து எழுச்சி பாயும் கணத்தில் இராது, போராட்டமானது சோவியத் "பதாகையின்" கீழ் விரோதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் கணத்தில் நம் மீது சுமத்தப்படும். இதற்கிடையில், எழுச்சிக்கான தயாரிப்பு பணிகள் முழுவதும் தொழிற்சாலை, தொழிற்சங்க குழுக்களின் கீழ் வெற்றிகரமாக முடிந்திருக்கும். அவை ஏற்கனவே மக்கள் இயக்கமாக இருந்திருந்து, எண்ணிக்கையிலும், வலிமையிலும் தொடர்ந்து பெருகியிருக்கும் என்பது மிகவும் தெளிவாகும். இது கட்சியை எழுச்சிக்கான தேதியை நிர்ணயிப்பதில் சுதந்திரமாக கையாளுவதற்கு கட்சியை அனுமதித்திருக்கும். நிச்சயமாக, சோவியத்துக்கள் ஒரு காலகட்டத்தில் தோன்றத்தான் வேண்டும். ஆனால் மேற்கூறிய நிலைகளின் கீழ் அவை எழுச்சியின் நேரடி அங்கங்களாக, மோதலின் நெருப்பில் உதித்திருக்குமா என்பது ஐயப்பாடுதான். ஏனெனில் மிகவும் முக்கியமான கணத்தில் இரண்டு புரட்சி மையங்களை உருவாக்குதல் என்பது ஆபத்து நிறைந்ததாகும். ஓடையை கடக்கும்போது ஒரு குதிரையில் இருந்து இன்னொரு குதிரைக்கு மாறக்கூடாது என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று கூறுகிறது. வெற்றிக்குப் பின் நாட்டின் முக்கிய இடங்கள் அனைத்திலும் சோவியத்துக்கள் அமைக்கப்படுதல் என்பது சாத்தியமானது. எந்த சந்தர்ப்பத்திலும், ஒரு வெற்றிகரமான எழுச்சி என்பது அரச அதிகார அங்கங்களாக சோவியத்துக்களை உருவாக்குவதை நோக்கி தவிர்க்கவியலாமல் இட்டுச்சென்றிருக்கும்.

எமது நாட்டில் சோவியத்துக்கள் புரட்சியின் "ஜனநாயக" கட்டத்தில் வளர்ந்திருந்தன என்பதை மறந்துவிடக் கூடாது. அதையொட்டி அக்கட்டத்தில் அவை சட்டபூர்வ தன்மையை பெற்றுவிட்டதால் பின்னால் அது நம்மால் மரபுவழியாயக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது மேலை நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளில் மீண்டும் செய்ய்ப்படமாட்டாது. அங்கு பெரும்பாலும், சோவியத்துக்கள் கம்யூனிஸ்டுகளின் அழைப்புக்களின் பேரில்தான் தோற்றுவிக்கப்படக்கூடும்; எனவே அவை பாட்டாளி வர்க்க எழுச்சியின் நேரடி அங்கங்களாக தோன்றும் விளைவுகள் இருக்கும். நிச்சயமாக, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன் முதலாளித்துவ வர்க்க அரசு சாதனங்களின் சிதைவு ஏற்பட்டுவிடக்கூடும் என்ற நிலையும் தவிர்க்கமுடியாததல்ல. இதையொட்டி எழுச்சிக்கு தயார் செய்வதற்கான வெளிப்படை அங்கங்களாக சோவியத்துக்கள் அமைக்கப்படுவதற்கான நிலைமைகள் தோன்றும். ஆனால், இது ஒரு பொதுவிதியாக ஏற்பட்டுவிடக் கூடும் என்பதற்கில்லை. அநேகமாக கடைசி நாட்களில்தான், கிளர்ந்தெழும் மக்களின் நேரடி அங்கங்களாக சோவியத்துக்களை ஏற்படுத்துதல் நிகழக்கூடும். இறுதியாக, எழுச்சி அதன் மிக நெருக்கடியான கட்டத்தை கடந்த பின்னர், அல்லது புதிய அரச அதிகாரத்தின் அங்கங்களாக அதன் கடைசிக் கட்டங்களில் சோவியத்துக்கள் தோன்றும் அத்தகைய நிலைமைகள் உருவாகும் என்பது மிகவும் நிகழக்கூடியதே. சோவியத்துக்கள் நெகிழ்வுடையதாகவும் போராட்டத்தின் உயிரோட்டமான வடிவமாகவும் இருக்கவேண்டியதிலிருந்து, அதன் இயல்பான அபிவிருத்தியை இடையூறுக்குள்ளாக்கும், வெளியிலிருந்து இயக்கத்தின் மேல் திணிக்கப்படும் ஒரு அமைப்புரீதியான "கோட்பாட்டுக்கு" உருமாறிவிடாதிருக்கும் பொருட்டு, நாம் அமைப்பை வழிபடும்தன்மையில் விழுந்துவிடாது காக்கும்பொருட்டு, இத்தகைய மாறபட்ட தன்மைகள் அனைத்தும் மனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

எமது பத்திரிகையில் சமீப காலமாக இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்க புரட்சி எத்தகைய வகைகள் மூலம் வரக்கூடும் என்பதை கூறக்கூடிய வகையில் நாம் இல்லை என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மூலம் வருமா அல்லது தொழிற்சங்கங்களின் மூலம் அது வருமா? இப்படி வினாவை அமைப்பது கற்பனையான பரந்த வரலாற்று கண்ணோட்டத்தையுடையதாக காட்டுகிறது, அது கடந்த சில ஆண்டுகளின் முக்கிய படிப்பினைகளை நீக்கிவிடுவதன் காரணமாக அது தீவிரமான தவறான, ஆபத்தான தன்மையுடையதாகும். போரின் முடிவில் வெற்றிகரமான புரட்சி வரவில்லை என்று கூறினால், அதற்கு காரணம் கட்சி இல்லாமையாகும். இந்த முடிவு ஐரோப்பா முழுவதற்குமே பொருந்தும். பல நாடுகளிலும் புரட்சிகர இயக்கங்களுக்கு ஏற்பட்ட கதியில், இதுபற்றிய உண்மையை உறுதியாக கண்டுகொள்ளலாம்.

ஜேர்மனியை பொறுத்தவரையில், இப்பிரச்சினை தெளிவாகத்தான் உள்ளது. 1918, 1919 இரண்டு ஆண்டுகளிலுமே ஜேர்மன் புரட்சி, ஒரு பொருத்தமான கட்சித் தலைமை உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தால் வெற்றியை பெற்றிருக்கக்கூடும். இதேபோன்ற நிலைமைதான் பின்லாந்திலும் 1917ல் இருந்ததை காண்கிறோம். அங்கு புரட்சிகர ரஷ்யாவின் சிறகின் கீழும் நேரடி இராணுவ உதவியின் கீழும், மிகச் சிறப்பான சாதக சூழ்நிலையில் புரட்சிகர இயக்கம் வளர்ந்தது. ஆனால் பின்லாந்து கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் சமூக ஜனநாயகவாதிகளாக நிரூபணம் ஆன முறையில், அவர்கள் புரட்சியை சிதைத்துவிட்டனர். இதே படிப்பினைதான் ஹங்கேரிய அனுபவத்தில் இருந்தும் தெளிவாக வருவதை பார்க்கிறோம். அங்கு இடது சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை தாங்கள் வெற்றி கொள்ளாமல், திகிலடைந்த முதலாளித்துவ வர்க்கத்தால் அதிகாரம் கையளிக்கப் பெற்றனர். ஒரு போராட்டமும் வெற்றியும் இல்லாமல், ஹங்கேரிய புரட்சியின் வெற்றிக்கு தொடக்கத்தில் இருந்தே போரிடக்கூடிய தலைமை இல்லாமற் போய்விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து நின்று, அதன் மூலம் தான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்பதை காட்டியது. இதன் விளைவாக ஹங்கேரிய தொழிலாளர்களின் போராட்ட உணர்வு இருந்தபோதிலும், வெகு எளிதாக பெற்ற அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுவதில் அக்கட்சி திராணியற்றது என்பதை நிரூபித்தது.

ஒரு கட்சி இல்லாமல், கட்சிக்கு அப்பாற்பட்ட நிலையில், ஒரு கட்சிக்கு மேலாக, அல்லது கட்சிக்கான ஒரு பதிலீட்டுடன் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியை அடைய முடியாது. அதுதான் கடந்த தசாப்தத்தின் முக்கியமான படிப்பினை ஆகும். பாட்டாளி வர்க்க புரட்சியில் மகத்தான நெம்புகோலாக ஆங்கிலேய தொழிற்சங்கங்கள் வரக்கூடும் என்பது உண்மைதான். உதாரணமாக சில சூழ்நிலைகளில் அவை தொழிலாளர்களின் சோவியத்துக்கள் என்ற இடத்தைக் கூட, ஒரு காலகட்டத்திற்கு பெறக்கூடும். அத்தகைய பங்கை அவை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தனித்த முறையில் மற்றும் கட்சிக்கு எதிராகவும் நிச்சயம் நிறைவு செய்யமுடியாது. தொழிற்சங்கங்களின்பால் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு தீர்க்கமான செல்வாக்குடையதாக ஆகும் நிலையில்தான் அது நடக்கும். இந்த முடிவிற்கு, "அதாவது, பாட்டாளி வர்க்க புரட்சியில் கட்சியின் முக்கியத்துவம், அதன் பங்கு தொடர்பாக" அறிந்துகொள்ளுவதற்கும் "கட்சியை எளிதாக புறக்கணித்ததற்காகவும், அதன் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதற்கும்" மாபெரும் இழப்புக்களை சந்தித்திருக்கிறோம்.

பாட்டாளி வர்க்க புரட்சிகளில் நனவு, முன்கூட்டி ஆராய்தல், திட்டமிடுதல் போன்றவை பெரும் பங்கேற்றிருந்ததை போல், பங்கு வகிக்க திட்டமிட்டிருந்ததைப்போல் இல்லாமல் முதலாளித்துவ புரட்சிகளில் அவை சிறு அளவில்தான் பங்கு பெறுகின்றன. முந்தைய எடுத்துக்காட்டில் புரட்சியின் உந்துசக்தி மக்கட்திரளினால் கொடுக்கப்படுகின்றன. ஆனால் பிந்தையதில் இப்பொழுது இருப்பதை காட்டிலும் மக்கள் குறைந்த அளவில்தான் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள் என்பதோடு, நனவும் சிறிதாகத்தான் இருக்கிறது. தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் பல பிரிவுகளிடம் இருக்கிறது. அதனிடம் செல்வம், கல்வி, நகரங்கள், பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகம் போன்ற அமைப்புரீதியான சாதகமானதன்மைகள் அதனுடன் தொடர்புடையதாக உள்ளது. அதிகாரத்துவ முடியரசு அன்றாடம் தள்ளிக்கொண்டுபோகின்ற நிலையில், இருட்டில் தடுமாறி, பின்னர்தான் ஓரளவு செயல்பட்டு தன்னை காத்துக்கொள்கிறது. முதலாளித்துவம் அடிமட்ட வர்க்கங்களின் இயக்கத்தில் இருந்து ஆதாயம்பெறும்பொழுதான, தன்னுடைய சாதகமான கணத்திற்கு காத்திருந்து, தன்னுடைய முழுச் சமூக எடையையும் பெரிய அளவில் கொண்டு நாட்டின் அதிகாரத்தை பற்றி எடுத்துக் கொள்ளுகிறது. ஆனால் பாட்டாளி வர்க்க புரட்சியானது, பாட்டாளி வர்க்கம் அதன் முன்னணிப்படையில் நின்று முக்கியமான தாக்கும் சக்தியாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல், வழிகாட்டும் சக்தியாகவும் செயல்படுகிறது என்ற உண்மையால் துல்லியமாக தனிச்சிறப்புள்ளதாகிறது. முதலாளித்துவ புரட்சிகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலத்தால், அதன் கல்வியால், உள்ளாட்சி அமைப்புக்களால், பல்கலைக் கழகங்களால் ஆற்றப்படும் பங்கை, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியினால்தான் நிரப்பமுடியும்.

எதிரி இன்னும் கூடுதலான முறையில் நனவு அடைந்துள்ளதால், கட்சியின் பங்கும் கூடுதலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகள் ஆட்சி நடத்திய நிலையில், முதலாளித்துவ வர்க்கம் பழைய அதிகாரத்துவ முடியாட்சியின் நடைமுறையைக் காட்டிலும், மிக உயர்ந்த அரசியல் பயிற்றுவித்தலை முழுமைப்படுத்தியுள்ளது. புரட்சிக்கு பயிற்சிக் கூடமாக நாடாளுமன்றவாதம் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு உதவுகிறது என்றால், முதலாளித்துவத்திற்கு எதிர்ப்புரட்சி மூலோபாயங்களின் பள்ளியாக அது இன்னும் கூடுதலான வகையில் உதவுகிறது. நாடாளுமன்றவாத முறையில் முதலாளித்துவ சமூக ஜனநாயகத்திற்கு முதலாளித்துவ வர்க்கம் பயிற்சி கொடுத்த வகையில், அது இன்று தனியார் சொத்துடைமைக்கு முக்கிய முட்டுக்காலாக இருக்கிறது என்று கூறுதல் பொருத்தமேயாகும். ஐரோப்பாவில் சமூகப் புரட்சி சகாப்தம் தன்னுடைய முதல் கட்டங்களில் காட்டியிருப்பதுபோல், அது ஒரு கடினமான, இரக்கமற்ற போராட்டமாக மட்டுமல்லாமல் திட்டமிட்ட, கணிப்பிடப்பட்ட போராட்ட சகாப்தமாக இருக்கும். நம்மால் 1917ல் திட்டமிடப்பட்டதைவிட மிக அதிகமாக திட்டமிடப்பட்டதாக இருக்கும்.

எனவேதான் இப்பொழுதுள்ள அணுகுமுறைக்கு முற்றிலும் மாறான அணுகுமுறை பொதுவாக உள்நாட்டுப் போர் பிரச்சினை பற்றியதிலும் குறிப்பாக ஆயுதமேந்திய எழுச்சி பற்றியதிலும் நமக்குத் தேவையாகும். லெனினை தொடர்ந்து நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் மார்க்சின் வார்த்தைகளான எழுச்சி ஒரு கலை என்பதை கூறிக்கொண்டே வருகிறோம். மார்க்சின் சூத்திரத்திற்கு சமீப ஆண்டுகளின் ஏராளமான குவிந்திருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் உள்நாட்டு போர்க்கலையின் அடிப்படைக் கூறுகள் பற்றிய ஆய்வு இணைக்கப்படாவிட்டால் இந்தச் சிந்தனை ஒரு வெற்றுச் சொற்றொடராகிவிடும். ஆயுதமேந்திய எழுச்சி பற்றிய பிரச்சினைகளுக்கு மேம்போக்கான அணுகுமுறை இருந்தால் அது இன்னும் சமூக ஜனநாயக மரபின் சக்தி கடக்கப்படவில்லை என்பதற்கான அடையாளம் என்பதை சூதுவாதற்று கூறுவது அவசியமானது. முக்கியமான கணத்தில் அனைத்தும் எப்படியோ தாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், உள்நாட்டுப் போர் பிரச்சினை பற்றி மேலெழுந்தவாரியாக கவனத்தை செலுத்தும் கட்சி, நிச்சயமாய் உடைந்த கப்பல் போல் ஆகிவிடும். ஒரு கூட்டான முறையில் 1917ல் தொடங்கி நாம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களின் அனுபவங்களை கட்டயாம் பகுத்தாய வேண்டும்.

மேலே கோடிட்டு காட்டப்பட்டுள்ள 1917ம் ஆண்டு கட்சி அணிசேர்தலின் வரலாறு, உள்நாட்டு போரை பற்றிய அனுபவத்திலும் உள்ளார்ந்த பகுதியாகும். கம்யூனிச அகிலத்தின் கொள்கைகள் முழுவதிற்கும் அது உடனடியான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்று நாம் நம்புகிறோம். கருத்து வேறுபாடுகள் பற்றிய ஆய்வு, ஒரு தவறான கொள்கைகளை பின்பற்றிய தோழர்கள் மீதான தாக்குதல் என்று கருதப்படமாட்டாது, ஒருபோதும் கருதப்படக்கூடாது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம், அதை மீண்டும் வலியுறுத்துகிறோம். மற்றொரு வகையில், சில கட்சி உறுப்பினர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் இணைந்து நடைபோட தவறினார்கள் என்ற காரணமாக மாத்திரம், நம்முடைய வரலாற்றின் பெரும் அத்தியாயத்தில் நிகழ்ச்சியை, முழுமையாக மறைத்துவிடுதலும், முற்றிலும் அனுமதிக்க முடியாதது ஆகும். கடந்த காலத்தைப்பற்றி கட்சி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், கட்டாயமாக தெரிந்து கொள்ளவேண்டும்; அப்பொழுதுதான் அது ஒவ்வொரு நிகழ்விற்கும் தக்க மதிப்பீடு கொடுத்து, உரிய இடத்தை அளிக்க முடியும். ஒரு புரட்சிகர கட்சியின் மரபு என்பது தட்டிக்கழிப்புகளினால் அல்லாது விமர்சன ரீதியான தெளிவுபடுத்தும் தன்மையினால்தான் கட்டமைக்கப்படும்.

வரலாறு எமது கட்சிக்கு உண்மையில் விலைமதிப்பற்ற புரட்சிகரமான அனுகூலங்களை கொடுத்துள்ளது. ஜாரிச முடியாட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தின் மரபுகள், புரட்சித் தீயில் தன்னை தியாகம் செய்துகொண்டு தலைமறைவு செயலில் பிணைந்து நின்ற பழக்கம், மனிதகுலத்தின் புரட்சி அனுபவங்களை பற்றிய பரந்த தத்துவார்த்த ஆய்வு மற்றும் உள்வாங்கல், மென்ஷிவிசத்திற்கு எதிரான போராட்டம், நரோத்னிக்குகளுக்கும் சமரசவாதிகளுக்கு எதிரான போராட்டம், 1905 புரட்சியில் தலையாய அனுபவம், எதிர்ப்புரட்சி ஆண்டுகளின் பொழுது இந்த அனுபவத்தை தத்துவார்த்த ரீதியாக ஆய்தல் மற்றும் உள்வாங்கல் 1905ம் ஆண்டு புரட்சி அனுபவங்களின் பார்வையில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் பிரச்சினைகளை ஆராய்தல், இவை அனைத்தும் நமது கட்சிக்கு அசாதாரணமான முறையில் புரட்சிகர கோபத்தையும், தலையாய தத்துவார்த்த நுண்ணறிவையும், இணையற்ற புரட்சிகர பெருமித நடையையும் முழுமையாக அளித்தன. ஆயினும்கூட, இக்கட்சிக்குள்ளேயே, அதன் சில தலைவர்களிடையே, முக்கியமான நடவடிக்கை எடுப்பதற்கு சற்று முன்பு, அனுபவமுடைய புரட்சியாளர்கள், பழைய போல்ஷிவிக்குகள் என்று ஒரு குழு அமைத்துக் கொண்டனர். இவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தீவிர எதிர்ப்பு காட்டினர். பெப்ரவரி 1917ல் இருந்து கிட்டத்தட்ட 1918 பெப்ரவரி வரை புரட்சியின் மிக நெருக்கடியான கட்டத்தில் அனைத்து அடிப்படை பிரச்சினைகளிலும், சமூக ஜனநாயக நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அந்த நிலையிலிருந்து அடுத்து வந்த தலையாய குழப்பத்தில் இருந்து கட்சியையும், புரட்சியையும் பாதுகாக்க, அந்த நேரத்திலும் கூட முன்னொருபோதுமில்லாதவாறு, லெனினும், கட்சிக்குள் இருந்த லெனினுடைய தனிச்சிறப்புவாய்ந்த செல்வாக்கும்தான் தேவைப்பட்டது. ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்மிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினால் இது கட்டாயம் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது.

ஆனால் முன்னணித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பிரச்சினை மேற்கு ஐரோப்பிய நாட்டு கட்சிகளுக்கு அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கருச்சிதைக்கப்பட்ட ஜேர்மன் அக்டோபர் புரட்சி அனுபவம் இந்த நிலைக்கு அதிர்ச்சிதரும் நிரூபணம் ஆகும். ஆனால் இத்தேர்வு புரட்சிகர நடவடிக்கையின் வெளிச்சத்தில் நடைபெறவேண்டும். இச்சமீபத்திய ஆண்டுகளில், கட்சியின் தலைமை உறுப்பினர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு ஜேர்மனி ஏராளமான வாய்ப்புக்களை நேரடிப் போராட்ட கணங்களில் கொடுத்துள்ளது. இந்த அளவுகோலில் தோல்வியுற்றுவிட்டால், எஞ்சிய அனைத்தும் பயனற்றவையாகும். இதே ஆண்டுகளில் பிரான்ஸ், புரட்சிகர போராட்டங்களில், ஓரளவு எழுச்சிகளில் கூட இன்னும் மோசமான நிலையில்தான் இருந்தது. ஆனால் பிரான்சின் அரசியல் வாழ்வில்கூட, (1924ம் ஆண்டு ஜனவரி 11 இரத்த வெறிகொண்ட கூட்டம் போன்றவற்றில்) கட்சியின் மத்திய குழுவும் தொழிற்சங்க தலைமையும் ஒத்திவைக்க முடியாத மற்றும் தீவிர பிரச்சினைகளில் விடையிறுக்கும் தன்மையுடன் செயற்படவேண்டியிருந்த பொழுது உள்நாட்டுப்போரின் திடீர் வெளிச்சங்களை நாம் பெற்றிருந்தோம். அத்தகைய தீவிர நிகழ்வுகளை ஆராய்ந்து பயிலுதல், கட்சித் தலைமையை, கட்சியின் பலவித உட்பிரிவுகளின் நடத்தையை, தனிப்பட்ட முன்னணி உறுப்பினர்களை பற்றி மதிப்பிடுவதற்கு, மாற்று இல்லாத ஆவணச் சான்றுகளை கொடுக்கும். இப்படிப்பினைகளை புறக்கணித்தல் என்றால் அவற்றில் இருந்து, தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதலில் இருந்து தேவையான முடிவுகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் பொருள், அது தவிர்க்கமுடியாத தோல்விகளை தருவித்துக் கொள்ளுவதாகும். ஏனென்றால் நுண்ணறிவுவாய்ந்த, உறுதியான, தீரமுடைய கட்சித் தலைமை இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி என்பது சாத்தியமற்றது.

ஒவ்வொரு கட்சியும், மிகுந்த புரட்சிகரமான கட்சியாயினும் கூட, தன்னுடைய சொந்த அமைப்பு ரீதியான பழமைவாதத்தை தவிர்க்கமுடியாமல் கட்டாயம் உருவாக்கும். இல்லையெனில் அது தேவையான உறுதித்தன்மையை பெறாமலிருக்கும். இது முற்றிலும் அளவு பற்றிய பிரச்சினை ஆகும். ஒரு புரட்சிகர கட்சியில் இன்றியமையாததாய் தேவைப்படும் சிட்டிகை அளவு (Dose) பழமைவாதமானது, வழமையான நடைமுறையில் இருந்து முற்றிலும் சுதந்திரத்துடன், நோக்குநிலைப்படுத்துவதில் முன்முயற்சியுடன், செயல்பாட்டில் துணிவுடன் கட்டாயம் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பண்புகள் வரலாற்றுத் திருப்புமுனைகளில் மிகக்கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும். மிகப் புரட்சிகரமான கட்சிகள்கூட நிலைமையில் எதிர்பாரா மாற்றம் நிகழும்பொழுது, அவற்றின் விளைவுகளாக புதிய பணிகள் எழும்பொழுது, அடிக்கடி நேற்றைய அரசியல் நிலைப்பாட்டை பின்பற்றும், அதன்மூலம் புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கில் தடையாய் ஆகும், அல்லது தடையாய் ஆவதாய் அச்சுறுத்தும் என்று லெனின் கூறியதை நாம் ஏற்கனவே மேற்கோளிட்டிருக்கிறோம். பழமைவாதமும், புரட்சிகர முன்னெடுப்பும் அவற்றின் மிகவும் செறிந்த வெளிப்பாட்டை கட்சியின் முன்னணி அங்கங்களில் கண்டுகொள்ளும். இதற்கிடையில், ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய தீவிரமான "திருப்பு முனையை" --அதாவது தயாரிப்பு வேலையில் இருந்து உண்மையில் அதிகாரத்தை கைப்பற்றுதலுக்கு திரும்புவதை-- இனிமேல்தான் எதிர்கொள்ள இருக்கின்றன. இந்த திருப்பம் மிகவும் துல்லியமானது, மிகவும் ஒத்திப்போடமுடியாதது, மிகவும் பொறுப்பானது மற்றும் மிகவும் வல்லமை மிக்கது. திருப்பத்திற்கான கணத்தை தவறவிட்டு விடுதல் என்பது ஒரு கட்சி பாதிப்படையக்கூடிய மிகப் பெரிய தோல்வியை தன்மேல் வருவித்துக் கொள்வதாகும்.

ஐரோப்பிய போராட்டங்களின் அனுபவம், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனிய போராட்டங்களின் அனுபவங்களை நம்முடைய சொந்த அனுபவத்தின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், ஒரு கட்சி வியக்கத்தக்க முன்னேற்றப் பாய்ச்சலை எடுத்தாகவேண்டிய கணத்தில் இருவிதமான தலைவர்கள் கட்சியை பின்னோக்கி இழுத்து நிறுத்திவிடக் கூடியவர்கள் என தெரிவிக்கிறது. ஒரு சிலர் புரட்சி பாதையில் வரக்கூடிய இடர்ப்பாடுகளையும், கஷ்டங்களையும் மட்டுமே முக்கியமாக பார்த்து ஒவ்வொரு நிலையையும் முன்கருத்துக்களின் மதிப்பீட்டில் ஆராய்ந்து, எப்போதும் நனவுடன் இல்லாவிடினும்கூட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தவிர்த்துவிடுகின்றனர். அவர்களுடைய கரங்களில் மார்க்சிசம் என்பது புரட்சிகர நடவடிக்கையின் சாத்தியமின்மையை நிறுவுதலுக்கான வழிமுறையாகத்தான் திரும்புகிறது. இத்தகைய பிரிவினரின் தூய எடுத்துக்காட்டுகளாக ரஷ்ய மென்ஷிவிக்குகளை கூறலாம். ஆனால், இத்தகைய வகையினர் மென்ஷிவிசத்திற்குள் மட்டும் எல்லைக்குட்படுத்தப்படவில்லை. மிக நெருக்கடியான கணத்தில், மிகப் பெரிய புரட்சிகரமான கட்சியின் பொறுப்பான பதவிகளில் இருக்கும் தலைவர்களிடையே கூட இக்கருத்து திடீரென தன்னை புலப்படுத்திக்கொள்ளும்.

இரண்டாம் வகையின் பிரதிநிதிகள் அவர்களுடைய மேம்போக்கான, கிளர்ச்சியூட்டும் வகையிலான அணுகுமுறையின் மூலம் தனித்துக் காட்டப்படுவர். அவர்கள் எந்த தடைகளையும், இடர்ப்பாடுகளையும் அவற்றுடன் மோதும் வரை நினைத்துப் பார்ப்பதில்லை. உண்மையான தடைகளை வெறும் அலங்காரச் சொற்களால் கடந்துசென்றுவிட முடியும். அனைத்து பிரச்சனைகளின் மீதும் வீறார்ந்த நம்பிக்கைவாதத்தை காட்டும் போக்கு ("பெருங்கடலும் முழங்காலளவுதான்") என்பதெல்லாம் தீர்மானகரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய நேரத்தில் முற்றிலும் எதிர்முனைக்கு சென்றுவிடும். முதல்த்தர புரட்சியாளருக்கு, அதாவது மடுவை மலையாக்குபவர்களுக்கு, அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருக்கும் சிக்கல்கள், அவரது வழியில் பார்க்கப்பழகிவிட்ட அனைத்து கஷ்டங்களையும் சொல்லமுடியாத வகையில் பெரிதுபடுத்தி கடக்க நினைப்பதாகும். இரண்டாம் பிரிவான, மேம்போக்கான நம்பிக்கைவாதிக்கு, புரட்சி நடவடிக்கை பற்றிய கஷ்டங்கள் திடுக்கிடும் வகையில் வரும். தயாரிப்புக் காலத்தில் இருவரது நடத்தையும் வேறானவையாகும். முந்தையவர் புரட்சி தன்மையில் ஐயுறவாதம் கொண்டவர், ஒரு புரட்சிகர அர்த்தத்தில், இவரை அதிகமாக நம்ப முடியாது. பிந்தையவர் இதற்கு மாறாகப் பார்த்தால் வெறிபிடித்த புரட்சியாளர் போல் தோன்றுவார். ஆனால் முடிவெடுக்க வேண்டிய கணத்தில், இருவருமே ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துத்தான் செல்வர். இருவருமே எழுச்சியை எதிர்ப்பர். இதற்கிடையில், முழுத் தயாரிப்பு வேலையும், கட்சியும் அதன் முன்னணி அங்கங்களும், ஒரு எழுச்சிக்கான கணத்தை தீர்மானிப்பதற்கும், அதன் தலைமையை ஏற்பதற்கும் திறனுள்ளதாக்கும் மட்டத்திற்கு மட்டுமே மதிப்புமிக்கதாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் பணியை பொறுத்தவரை அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது சமூகத்தை மறுசீரமைப்பதற்காக ஆகும்.

அகிலத்தை "போல்ஷிவிசப்படுத்துதலின்" தேவை பற்றி நிறையவே சமீப காலத்தில் பேசப்பட்டுள்ளது, எழுதப்பட்டுள்ளது. இப்பணி சர்ச்சைக்கு உட்படுத்த முடியாத அல்லது தாமதப்படுத்த முடியாத பணியாகும். ஓராண்டிற்கு முன்னைய ஜேர்மனி மற்றும் பல்கேரியாவின் கொடூரமான படிப்பினைகளுக்கு பின்னர் இப்பணி குறிப்பாக மிகவும் அவசரமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. போல்ஷிவிசம் தத்துவக்கோட்பாடு அல்ல (அதாவது, வெறும் தத்துவக் கோட்பாடில்லை) மாறாக அது பாட்டளி வர்க்க எழுச்சிக்கான புரட்சிகரமான பயிற்று முறை ஆகும். கம்யூனிஸ்ட் கட்சிகளை போல்ஷிவிசமயமாக்குதல் என்றால் என்ன? அக்கட்சிகளுக்கு அத்தகைய பயிற்சி கொடுக்கப்பட்டு, அக்டோபர் தாக்குதல் காலத்தில் நெறிபிறழ்ந்துவிடாமல் அவர்களை தடுக்கும் வண்ணம், முன்னணி தலைமை உறுப்பினர்களை அப்படித் தேர்ந்தெடுப்பதில் செயல்திறமுள்ளதாக்க வேண்டும். "அதுதான் ஹெகலுடைய முழுக் கருத்து; நூல்களில் உள்ள அறிவு, அனைத்து மெய்யிலின் பொருளுரையும் ஆகும்......"

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved