World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Unanswered questions regarding Kenya terror attacks

கென்யா பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விடையளிக்கப்படாத கேள்விகள்

By Ann Talbot
5 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

கென்யாவின் மொம்பசா நகரில் இஸ்ரேலியருக்கு சொந்தமான, பாரடைஸ் ஓட்டலில் நவம்பர்-28-ம் திகதி நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலுக்கும், விடுமுறை தினத்தை பொழுதுபோக்காக கழித்துவிட்டு திரும்பும் இஸ்ரேலிய விமான பயணிகள் மீது நடத்த முயன்ற ராக்கெட் தாக்குதலுக்கும் அல் காயிதா அமைப்புதான் காரணம் என அமெரிக்க இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரமான அந்த குண்டு வெடிப்பில் 16-பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இஸ்ரேலியர். கொல்லப்பட்டவர்களில் பத்து பேர் ஹோட்டலின் கென்னியா நாட்டு ஊழியர்கள். புதிய விருந்தினர்களை வரவேற்கும் வகையில் நடன நிகழ்ச்சி நடத்தியவர்களும் கென்னியா நாட்டவர்கள்.

இறந்தவர்களில் மூன்று பேர் தற்கொலை படையினர், அவர்கள் பச்சைநிற ஜீப்பில் வந்து ஹோட்டலில் வெளிக்கதவுகளின் முட்டி ஹோட்டல் லாபிக்குள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்றனர். அங்கு தான் குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பு நடப்பதற்கு 20-நிமிடங்களுக்கு முன்னர், மொம்பசாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புறப்பட்ட அரிக்கா ஏர்லைன்ஸ் போயிங் விமானத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அந்த விமான அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விமானத்திற்கோ பயணிகள் எவருக்குமோ சேதம் ஏற்படவில்லை. அந்த விமானம், புறப்பட்ட ஓடுதள கடைசியில் வெள்ளை நிற நான்கு சக்கர வண்டி ஒன்று நின்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பின்னர் சோதனையிட்ட பொலிசார், பயன்படுத்தப்படாத சாம்-7-ரக ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கென்யாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாலஸ்தீன இராணுவம் என்று அழைத்துக்கொள்ளும் ஓர் அமைப்பு இதுவரை வெளியில் தெரியாத அந்த அமைப்பு குண்டு வெடிப்பிற்கு தானே காரணம் எனக் கூறியிருக்கின்றது. ஆனால், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சோமாலி நாட்டிலிருந்து செய்லபட்டு வரும் அல்-இத்திகாத், அல்-இஸ்லாமியா அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த அமைப்பு அல்காயிதா உடன் தொடர்பு கொண்டது என்று கூறியிருக்கின்றனர்.

இந்தக் கொடூரமான தாக்குதலில் மேலும் பலர் பலியாகி இருக்கக்கூடும், குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட விமானத்தில் 140-பயணிகளும், 10-விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். ஹோட்டல் குண்டு வெடிப்பை பொறுத்தவரை, சற்று முன்கூட்டியே வெடித்திருக்குமானால் ஒரு பஸ்ஸில் புதிதாக வந்து சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் (பஸ் நிறைய) பலியாகி இருப்பர். அவர்களில் பலர் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட்டனர். அல்லது காலை உணவு அருந்தும் இடத்திற்கு சென்றுவிட்டனர். நடன நிகழ்ச்சியை காண்பதற்காக அங்கு வந்த இரண்டு சிறுவர்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் பலர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த கிராமமே அவர்களது வருவாயை நம்பியிருந்தது. இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்வதற்குக்கூட வசதியில்லாமல் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் வசூலித்துக்கொடுத்த பணத்தைக் கொண்டு இறுதிச் சடங்குகளை நடத்தினர்.

கென்யா தலைநகர் நைரோபியில் 1998-ம் ஆண்டு அமெரிக்க தூதரகத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றபோது 250-பேர் பலியானார்கள். மேலும் 1000-பேர் உடல் ஊனமுற்றவர்கள், இவர்களில் பெரும்பாலோர் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட கிரிமினல் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள், தங்களது அன்றாட அலுவல்களை, வர்த்தகத்தை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது விடுமுறை நாட்களை பொழுதுபோக்காக கழிக்க வந்தவர்கள். அமெரிக்கா அரசு அல்லது இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்கள் சமாதானமாக ஆகிவிட முடியாது. இதுபோன்ற செயல்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வரும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவுவது ஆக அமைந்திருக்கவில்லை, மாறாக மொம்பசாவில் நடைபெற்ற தாக்குதல்கள் அமெரிக்கா வழிகாட்டுதலில் நடைபெற்று வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை விரிவுபடுத்த உதவியிருக்கின்றது. சிறப்பாக இஸ்ரேலில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன தற்கொலைப்படை குண்டு வீச்சு தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பரந்த நோக்கங்கள் உடன் தொடர்புபடுத்துவதற்கு இஸ்ரேலிய அரசிற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.

மொம்பசா குண்டு வீச்சு தாக்குதல் நடந்த தினத்திலேயே இஸ்ரேலின் லிக்குட் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. பெய்ட்சியான் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது தேர்தல் நடந்தபோது, இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. அப்போது, ஆறு பேர் கொல்லப்பட்டனர். 43-பேர் காயம் அடைந்தனர். அல் அஸ்க்கா மாவீரர் படை இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்றிருக்கின்றது.

மொம்பசாவில் நடைபெற்ற தாக்குதலை இஸ்ரேலிய அதிகாரிகள் அல்காய்தா அமைப்போடு தொடர்புபடுத்தியதற்குக் காரணம் விமான நிலையத்திலும், ஹோட்டலிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கு சிறப்பான திட்டம் தீட்டப்பட்டிருந்தது மட்டுமல்ல, பாலீயில் நடைபெற்ற குண்டு வீச்சு தாக்குதல் போல் சுற்றிலா பயணிகளே குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். பாலி தாக்குதல்களுக்கும், அல்காய்தா அமைப்புதான் காரணம் என்று, குற்றம் சாட்டப்பட்டது. தற்போது இஸ்ரேலை குறிவைத்து அல்காய்தா அமைப்பு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதால், அமெரிக்காவிற்கு இஸ்ரேல் தனது ஒத்துழைப்பை தரும் என்றும், அல்காய்தா தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் உதவும் என்றும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

பயங்கரவாத செயல்களுக்கு எதிரான, போரில் இதுவரை அமெரிக்கா, பாலஸ்தீன விவகாரத்தை தொடர்புபடுத்தவில்லை. ஏனென்றால், ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளில் இஸ்ரேல் நேரடியாக ஈடுபடுத்தப்படுமானால், அரபு நாட்டு அரசுகள் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவு தருவதற்கு தயங்கும், விரும்பாது என்று, அமெரிக்கா கருதியது. ஆனால், இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் அமெரிக்காவில் உள்ள கண்மூடித்தனமான வலதுசாரி சக்திகளுக்கு அவர்களது ஆதரவை கோரி வருகிறார். அமெரிக்காவின் வலதுசாரி சக்திகள் பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை விரிவாக்க ஆதரவுகாட்டி வருகின்றன.

மொம்பசா தாக்குதல்கள், லிக்குட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் முதலிய செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே கட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ஷரோன், தனது எதிரியான பிம்மியாமின் நெட்டான் யாகுவை, வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்றார். நவம்பர்-28-ந்தேதி வரை ஷரோன் மிகக்குறைந்த வாக்குகளை மட்டுமே பெறுவார் கட்சித் தேர்தலில் அவர் தோல்வி அடைந்துவிடுவார் என கருதப்பட்டது. இஸ்ரேல் பத்திரிகையான ஹரஎட்ஸ் வெளியிட்டிருந்த செய்திப்படி, ஷரோனின் அலுவலகம் பேரழிவிற்கு பின்னர் காணப்படும், மண்டலம் போல் வெறிச்சோடிக்கிடந்தது. பீதி, பீடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் யாரோ ஒருவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து நிருபர்கள் பேட்டிக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென யோசனை கூறினார்.

இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக, நெட்டான்யாகூவும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவருக்கு மொம்பசாவில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பான விபரக்குறிப்பு பாக்ஸ் செய்தியாக தரப்பட்டது.

மொம்பசா தாக்குதல்கள் நடந்த பின்னர் திங்கள் அன்று இஸ்லாமிஸ்ட்டுகள் இன்டர்-நெட் தளத்தில், அல்காய்தா - கொடுத்ததாக கருதப்படும் ஒரு செய்தி வந்தது. தாக்குதல்களுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக - அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் உண்மை தன்மை சந்தேகத்திற்குரியது, ஏனெனில் இதற்கு முன்னர் அல்காய்தா அமைப்பு அத்தகைய செய்தி எதையும், வெளியிட்டதில்லை. இந்த பாக்ஸ் செய்தி ஒப்புதலை இஸ்ரேலிய பந்தோபஸ்த்து படைப்பிரிவினர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். இஸ்ரேலின் தேசிய பந்தோபஸ்த்து அமைப்பின் தலைவர் எப்ராயீம் அலாவி - நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, மொம்பசாவில் நடைபெற்ற தாக்குதல்கள் மிக பெரிய மெகா தாக்குதலாக கருதப்படுமென்றும், இஸ்ரேல் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் எச்சரித்தார்.

மொம்பசா தாக்குதல்கள் ஷரோன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தற்செயலாக வழங்கிவிட்டது. அந்த தாக்குதலை, அல்காய்தா அமைப்போடு அவர் தொடர்புபடுத்தினார். அதன் மூலம் கட்சித் தேர்தலில் அவருக்கு சாதகமான போக்கு உருவாயிற்று. ஆனால், இஸ்ரேலின் இரகசிய சேவையான மொசாத் என்கிற உளவு அமைப்பிற்கு கென்யா தாக்குதலில் சம்மந்தம் இருக்கும் என்ற, சாத்தியக்கூற்றை அவ்வளவு சாதாரணமாக தள்ளிவிட முடியாது.

சாம்-7 ரக ராக்கெட்டுகள் துல்லியமாக, இலக்கை தாக்க முடியாமல் போயிருக்கலாம். அல்லது அவற்றை பயன்படுத்தியவர்கள் போதுமான அனுபவம் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வெப்பத்தை நாடும் இரண்டு ராக்கெட்டுகளும் 500-அடி உயரத்தில் பறந்த விமானத்தை எப்படி குறி வைத்து தாக்க முடியவில்லை என்பது, புரியாத புதிராக உள்ளது. அதுமட்டுமல்ல ராக்கெட் தாக்குதலை முறியடிப்பதற்கு தேவையான அனைத்து சாதனங்களும், இஸ்ரேலின் ஜெட் விமானங்களில் வழக்கத்திற்கு மாறாக பொருத்தப்பட்டுள்ளன.

சாதாரணமாக இராணுவ ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் பீக்காய்பிளேர் என்கிற கருவி இஸ்ரேலிய பயணிகள் ஜெட் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தில் ராக்கெட் தாக்குதலுக்கு எதிரான தொழில் நுட்பத்தை ஒரு வகையில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருப்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுவதாக, ஹிப்ரூ பல்கலைக்கழகத்தில் ஆயுதப் கிளர்ச்சிகள் சம்மந்தமாக விரிவுரையாளராக பணியாற்றி வரும் இசால் இயால் - கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் இதற்கு முன்னர் புலனாய்வு ஏஜென்ட்டாக பணியாற்றியவர். 1970கள் முதல் பயணிகள் விமானத்தை ராக்கெட் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முறைகளை உருவாக்க இஸ்ரேல் முயன்று வருவதாக அவர் விளக்கம் தந்திருக்கிறார்.

தாக்குதல் முயற்சிக்கு இலக்கான விமான பயணிகள் தந்திருக்கும் தகவல்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ராக்கெட் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு கருவிகள் உருவாக்கப்பட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றன. விமானத்தின் ஒரு இறக்கையில் சிறிய குண்டு வெடிப்பு ஒளி காணப்பட்டதாக, நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த வெடிப்பு டி-காய்பிளேர் கருவியிலிருந்து வந்திருக்கலாம். இந்தவகை தொழில் நுட்பம் சாதாரணமாக வர்த்தக விமானங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அத்தகைய கருவிகளை பொருத்துவதற்கு அதிகம் செலவாகும். இஸ்ரேலின் அர்க்கிய விமான நிறுவனம், இரண்டு போயிங் விமானங்களை வைத்திருக்கிறது, அதில் ஒன்றில் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வாஷிங்டனுக்கு பயணம் செய்தார். அதே விமானம் மும்பசா சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருக்குமானால், இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்பது முன் கூட்டியே தெரிந்திருக்கக்கூடும்.

இதுபோன்ற ஆத்திரம் மூட்டும் செயல்களில் மொசாத் என்கிற உளவு அமைப்பு சம்மந்தப்பட்டிருப்பது வெளிப்படையான விடயமாகும். 1986-பேர்லின் டிஸ்கோ குண்டு வீச்சில் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்தான் மொசாதின் ஏஜென்ட்டாக பணியாற்றியதாக குறிப்பிட்டார். பேர்லின் டிஸ்கோ குண்டு வீச்சை சாக்காக கொண்டு அமெரிக்கா, லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தியது.

கிழக்கு ஆபிரிக்காவில் உடனடியாக, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். லண்டனில் இருந்து செயல்பட்டுவரும் இஸ்லாமிய அமைப்பான அல்முஹஜ்ஜிருன் அமைப்பின் தலைவர் ஷேக் உமர் பக்ரி முஹம்மது இந்த எச்சரிக்கை இன்டர்நெட்டில் வந்ததாக தெரிவித்துள்ளார். ``அல்கய்தா அமைப்புக்கு ஆதரவான தீவிரவாதிகள் குழுக்கள் கென்யாவில் தாக்குதல்கள் இடம்பெறப்போவதுடன் இஸ்ரேல் மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு வாரத்திற்கு முன்னரே இன்டர்நெட்டில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது`` என அந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கூறியிருந்தார்.

குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே, கென்யாவில் குறிப்பாக நைரோபி மற்றும் மும்பசாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது. மும்பசாவிற்கு அவசியம் இல்லாமல் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் மும்பசாவில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்றும், ஆஸ்திரேலியா எச்சரிக்கை செய்திருந்தது. சிட்னி மார்னிங் ஹெரால்ட்` என்ற நாளேடு பிரிட்டனின் இராணுவ புலனாய்வு வட்டாரங்களுக்கு கிடைத்த இந்த தகவல் இதர அரசுகளுக்கு (இஸ்ரேல் உட்பட) தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்தி வெளியிட்டது. இந்த எச்சரிக்கை ஜேர்மனிக்கு கிடைத்ததும் அதை கடுமையாக எடுத்துக்கொண்டு, தனது குடிமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்தது.

தொடக்கத்தில் அத்தகைய எச்சரிக்கை வந்ததை இஸ்ரேலிய அரசு பிரதிநிதி மறுத்தார். ஆனால், குண்டு வெடிப்பு நடந்து நான்கு நாட்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஜோசி சூப்பர்வேசர் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அமைப்பிற்கு கென்யாவில் நடைபெறவிருக்கும் தாக்குதல் தொடர்பான மிரட்டல் தெரியும் என ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த தகவலின் சிறப்பை குறைத்து மதிப்பிட விரும்பி அது திட்டவட்டமான தகவல் அல்ல என்பதாக விளக்கினார். மொசாத் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் டானியாட்டோனும், இதே நிலையைத்தான் எடுத்தார். இஸ்ரேலுக்கு பல பயங்கரவாதிகளது எச்சரிக்கைகள் வருகின்றன என்றும், எனவே, அவற்றை கடுமையாக எடுத்துக்கொள்ளவில்லையென்றும் அவர் விளக்கம் தந்தார்.

இஸ்ரேலிய அரசு செயல்படாமல் இருந்ததற்கு எச்சரிக்கைகள் படை எடுப்பால் விளைந்த அலட்சியத்தை காரணமாக, சமாதானமாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எச்சரிக்கை கிடைத்ததும் மற்ற அரசுகள் அதை கடுமையானதாகவும், திட்டவட்டமானதாகவும், அங்கீகரித்து தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை செய்திருந்தும், புலனாய்வு தகவல் கிடைத்த பின்னரும் இஸ்ரேல் தனது மக்களை தீங்குகளில் இருந்து காப்பாற்ற தவறிய குற்றத்தை செய்திருக்கிறது.

அந்த மண்டலத்தில் மேலை நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் பெருமளவில் பெருகி வருகின்ற பின்னணியில் கென்யா தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. தற்போது, அமெரிக்க படைகள் மும்பசாவிற்கு வடக்குப் பகுதியில் கென்யா இராணுவத்துடன் இணைந்து, ``எட்ஜ்ட் மாலேட்`` என்று அழைக்கப்படும், இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்களும் உளவு ஸ்தாபனமும் கென்யாவையும், தான்சான்யாவையும், ஸ்தலமாகக் கொண்டு நீண்ட காலமாக செயல்பட்டு வருவதால், அந்நாடுகளில் கணிசமான அளவிற்கு அமெரிக்காவின் உளவு மற்றும் அதிகாரிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். மும்பசா விமான நிலையத்திலேயே, அமெரிக்க இராணுவ தளம் ஒன்று இயங்கி வருகிறது. கென்யாவின் பந்தோபஸ்த்து படைகளுக்கு ``கேந்திர`` - ஆதரவு தருவதற்காக அமெரிக்க படைத்தளம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஜேர்மன் நாட்டு விமானப்படை மும்பசாவைச் சுற்றி கண்காணிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கென்யா, சோமாலியா, மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வரும் கப்பல் போக்குவரத்து முழுவதையும் ஜேர்மன் நாட்டு விமானப்படை விமானங்கள் கண்காணித்து வருகின்றன. இதற்குமேல் ஆபிரிக்க கொம்பு முனைப் பகுதியிலுள்ள ஜிபவுட்டி என்ற இடத்திலும், கிழக்கு ஆபிரிக்க கடற்கரை பகுதி முழுவதிலும், மேலை நாட்டு இராணுவத்தினரின் விழிப்பான கண்காணிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு விரிவான நேரடி மற்றும் மறைமுக கண்காணிப்புக்களையும், மீறி சோமாலி அல்லது அல்காய்தா பயங்கரவாதிகள் கென்யாவில் நுழைந்து பிறர் கண்டுபிடிக்க முடியாமல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மொம்பசா தாக்குதல்களில் சம்மந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒரே நபர் அப்துல்லா அஹ்மது அப்துல்லா, இவர் ஏமன் நாட்டைச் சார்ந்தவர். 1998-ம் ஆண்டு, தூதரகத்தில் நடைபெற்ற குண்டு வீச்சு தாக்குதலிலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவருக்கும் அல்இத்திகாத், அல்இஸ்லாமியா அமைப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும் என்பது தெளிவாக இல்லை. அவர் கடந்த ஐந்தாண்டுகளாக ஆபிரிக்க நாடுகளில் நடமாடி வருகிறார். அண்மையில் அல்கய்தா அமைப்பிற்காக சியரா-லியோன் நாட்டில் வைர வியாபார பேரம் ஒன்றிற்கு முயன்றார். அண்மையில் நடைபெற்ற தாக்குதல்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவோ அல்லது கென்யாவில் இருந்ததாகவோ சரியான சான்று எதுவும் இல்லை.

1991-ம் ஆண்டு சோமாலியா நாட்டு அரசு கவிழ்ந்த பின்னர் அல்இத்திகாத், அல்-இஸ்லாமிய அமைப்பு உருவானது பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் விளக்கம் தந்தார். அப்போது அமெரிக்காவின் ஆதரவு அரசு சோமாலியாவில் வீழ்ந்தது. சோமாலிய நாட்டில் தங்களுக்குள் போர் புரிந்து கொண்டுள்ள பல்வேறு இனங்களுக்கிடையே, ஒற்றுமையை உருவாக்கி இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு, அல்இத்திகாத், அல்இஸ்லாமிய அமைப்பு உருவானது. ஆனால் இனங்களுக்கிடையிலான போர்கள் நீடித்ததாலும், எத்தியோப்பிய இராணுவ நடவடிக்கையை தாக்குப்பிடிக்க முடியாததாலும், 1996-ம் ஆண்டு அந்த இஸ்லாமிய அமைப்பு மறைந்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா தலையிட்டு மேற்கொண்ட `ஆபரஷேன் ரெஸ்டோர் ஹோம்`` - இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. 1993-அக்டோபரில் நேகடிஸ்யூ என்ற இடத்தில் 18-அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சோமாலியாவில் அமெரிக்க தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தில் அந்த இஸ்லாமிய அமைப்பு எந்த விதமான பங்கும் எடுத்துக்கொள்ளவில்லை.

அல்-இத்திகாத் அமைப்பு மீது குற்றச்சாட்டுக்கள் சென்ற ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தலைகாட்ட ஆரம்பித்தது. அல்காய்தா - அமைப்பின் கூட்டாளியாக அமெரிக்கா, அல்-இத்திகாத் அமைப்பை கருதுவதாக அந்த பத்திரிகை எழுதியது. ஒசாமா பின் லேடன் தனது தளபதிகளில் சிலரை சோமாலியாவிற்கு அனுப்பியதாகவும், அவர்கள் ஒரு இனத்தலைவரான முஹம்மது ஐதீதிற்கு உதவியதாகவும், இதனால் 18-அமெரிக்க இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குற்றம் சாட்டியிருந்தது.

ஆப்கானிஸ்தான் போருக்குப் பின்னர் அல் காய்தா உறுப்பினர்கள் சோமாலியாவிற்கு தப்பி ஓடி வந்து, அல்-இத்திகாத் ஒத்துழைப்போடு சோமாலியாவில் பயிற்சி முகாம்களை அமைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பரில் சோமாலியாவின் நாணய மாற்று நிறுவனமான, அல்பரக்கத், அல்காய்தா அமைப்பிற்கு நிதி உதவி செய்ததற்கு பொறுப்பானது என்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிர்வாகம் கைவிட்டது.

இப்படிப்பட்ட அவமரியாதைக்குள்ளான குற்றச்சாட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அல்பரக்கத் நிறுவனத்தின் தலைவர் 1990களின் துவக்கத்தில் அல்-இத்திகாத் அமைப்பின் முன்னணி உறுப்பினர். பின்லேடன் பெயரில் பஹாமாஸ் பகுதி வங்கி ஒன்றில் துவக்கப்பட்ட கணக்கில் அல்பரக்கத் லாபம் போடப்பட்டது, என்று குற்றம் சாட்டப்பட்டது. இதே அடிப்படையில் ஜோர்ஜ் புஷ் - சீனியர் மீதும் குற்றம் சாட்ட முடியும். அவரது கார்லெயல் குரூப் முதலீட்டு நிறுவனம் பின்லேடனது குடும்பத்தினருடன், நெருக்கமாக பணியாற்றி வந்தது, அந்த அடிப்படையில் பின்லேடனுக்கு நிதி உதவி செய்தவர் என்று ஜார்ஜ் புஷ் சீனியர் மீதும் குற்றம் சாட்ட முடியும்.

ரிச்சார்ட் டெளடன் ஆபிரிக்க விவகாரங்களை ஆராய்வதில் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர், சோமாலியா நாட்டில் இனங்களுக்கிடையே நடந்து வரும் அரசியல் சச்சரவுகளின் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாதுகாப்பாக, செயல்பட முடியாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். ``அந்நியர்கள், குறிப்பாக, பணக்காரர்கள் வருவாய்க்கான ஆதரமாக கருதப்படுகிறார்கள் அப்படிப்பட்ட பணக்காரர்கள் பெரும்பாலும், கடத்தப்படுகிறார்கள். பணம் பெற்றுக்கொண்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஒசாமா பின்லேடன் கிடைத்தால், எளிதாக அவரை கடத்திச் சென்று நிறைய பிணை பணத்தை பெற்றுக்கொள்வார்கள்`` என்று Observer பத்திரிகையில் ரிச்சர்ட் டவுடன் எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நிபுணர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அல்பரக்கத் மூடப்பட்டது, தொடர்பான முடிவு மிகப்பெரிய தவறாகும். ``குப்பை`` - புலனாய்வுத் தகவல் அடிப்படையில் இந்த முடிவை அமெரிக்கா எடுத்திருக்கிறது என்று, அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அமைப்பைச் சார்ந்த `டெட்டாக்னி` - கருத்து தெரிவித்தார். அல்-இத்திகாத், சோமாலியாவில் ஓர் இராணுவ அமைப்பாக செயல்படவில்லை என்று சென்ற ஆண்டு புஷ் நிர்வாகத்திற்கு அமெரிக்க அரசு ஆலோசகர் கென் மின்காஸ் தெரிவித்தார். அவர் ஐ.நா.வில் சோமாலியா தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

விமானங்கள், கப்பல்கள் நடமாட்ட கண்காணிப்பிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும், சோமாலியாவில் அல்காய்தா - அல்லது அல்-இத்திகாத் பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்ற தகவலை ஊர்ஜிதப்படுத்தும் எந்த ஆதாரத்தையும் புஷ் நிர்வாகம் தரவில்லை. உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள நாட்டை தொடர்ந்து அமெரிக்கா மிரட்டிக்கொண்டிருப்பதில், உறுதியுடன் செயல்படுகிறது. அதற்குக் காரணம் அந்த மண்டலத்தில் அமெரிக்காவின் ``கேந்திர நலன்கள்`` தான். சோமாலியா ஆப்ரிக்காவின் கொம்பு முனைப் பகுதியில் அமைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் அனைத்தும் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். ஈராக்கை வீழ்த்திவிட்டு, அதன் எண்ணெய் கிணறுகளை கைப்பற்றி முழுமையான பயன்களை அமெரிக்கா அனுபவிக்க வேண்டுமென்றால், சோமாலியா மண்டலம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அல்-இத்திகாத் மூலம், அமெரிக்காவிற்கு மிரட்டல் வரவில்லை. இன்னொரு வல்லரசு உலக எண்ணெய் வினியோகத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் சோமாலியாவை பிடித்துக்கொள்ளக்கூடும் அதன் மூலம் இந்த உயிர்நாடியான கப்பல் பாதையில் அமெரிக்காவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் உண்மையிலேயே அமெரிக்காவிற்கு எதிரான மிரட்டல் ஆகும்.

சோமாலியாவிற்கு வடக்கில் ஜிபவுட்டி அமைந்திருக்கிறது. இது பழைய பிரான்ஸ் நாட்டு காலனியாகும். இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் அப்பகுதியில் ஜேர்மன் நாட்டுப் படைகள் மிகப்பெரும் அளவிற்கு திரட்டப்பட்டுள்ளன. பெர்பெரா ஆழ துறைமுகத்தை அமெரிக்கா அமைத்திருக்கிறது. இது இந்து மகாசமுத்திரத்திலுள்ள தலைசிறந்த துறைமுகமாகும். பிரிட்டன், மற்றும் இதர ஐரோப்பிய கப்பல் படை கப்பல்கள் இந்தப் பகுதியில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன.

மொம்பசாவில், ராக்கெட் தாக்குதல் மற்றும் குண்டு வீச்சு நடத்தியவர்கள் யாராகயிருந்தாலும் அதன் விளைவு என்னவென்றால் இந்த மண்டலத்தில் மோதலை முற்றச் செய்திருக்கின்றது. ஏற்கனவே வறுமை மற்றும் நோய்களின் பிடியில் சிக்கியுள்ள, இந்தப் பகுதி மக்கள் இராணுவ நடவடிக்கைகள் பெருகுவதன் விளைவுகளையும், சந்தித்தாக வேண்டும்.

Top of page