World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE protests over exclusion from US aid conference

அமெரிக்க உதவி மாநாட்டில் இருந்து விலக்கியதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்

By K. Ratnayake
1 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்பிரல் 14 வாஷிங்டன் உதவி மாநாட்டுக்கு தனது பிரதிநிதிகள் சமூகமளிப்பதை புஷ் நிர்வாகம் தடுத்ததை அடுத்து கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான புதிய சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றாமல் விலகியுள்ளது. விடுதலைப் புலிகள் ஜூன் மாதம் ஜப்பானில் இடம்பெறவுள்ள இன்னுமொரு உதவி மாநாட்டிலும் பங்குபற்றாது என குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கையானது அமெரிக்க நிர்வாகத்தின் கன்னத்தில் அறைந்தாற் போன்ற அடியை அடுத்து முற்றிலும் வலு குன்றிய கண்டனமாக இருந்தது. பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் தாய்லாந்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஏப்பிரல் 21 அன்று "பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதில் இருந்து விலகும்" தீர்மானத்தை அறிவிப்பதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதினார்.

உதவி மாநாட்டில் இருந்து விலகுவதோடு, இடம்பெயர்ந்த தமிழர்களை மீளக் குடியமர்த்த தவறியமை, நகரங்கள் மற்றும் குடியிருப்புக்களில் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் பிரதேசங்களை ஒதுக்குவது உட்பட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தாமையையும் மேற்கோள் காட்டியிருந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் "பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தினதும் நம்பிக்கையை கடுமையாக கீழறுக்கின்றது" என பாலசிங்கம் பிரகடனப்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் கண்டனமானது தனது சொந்த அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலான அக்கறையை தணியச் செய்வதற்காக வரையப்பட்டதாகும். செப்டம்பரில் ஆரம்பமான பேச்சுக்களின் ஆறாவது சுற்றில், தீவின் வடக்கு கிழக்கில் தனியான தமிழீழ அரசுக்கான தமது கோரிக்கையை கைவிடுவது உட்பட பிரதான சலுகைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியது. அது திரும்பப் பெற்றவை மிகவும் சிறியளவிலானதாகும். அதே சமயம், இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க் கட்சியான அவரின் பொதுஜன முன்னணியின் ஆதரவைக் கொண்ட ஆயுதப் படைகளின் வளர்ச்சிகண்டுவரும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு அது முகம் கொடுத்தது.

கடைசியாக இடம்பெற்ற இரண்டு சுற்றுக்களும் தீவிரமான முறுகல்நிலைமையின் கீழ் நடந்தன. ஜனவரியில் உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குவதற்கான முன் நிபந்தனைகளாக விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என இராணுவம் கோரியது. பெப்பிரவரியில் பேச்சுக்களுக்கு சற்று முன்னதாக, கடற்படை விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இடைமறித்து முறுகல் நிலையை உருவாக்கியதோடு, மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களின் துன்பகரமான தற்கொலையுடன் முடிவுக்கு வந்தது. மார்ச் மாத பேச்சுக்களுக்கு முன்னதாக, கடற்படை விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை மூழ்கடித்ததோடு அதில் இருந்த முழு படகோட்டிகளையும் கொன்றது.

வாஷிங்டன் உதவி மாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை விலக்குவதன் மூலம், பேச்சுவார்த்தைகளில் உத்தியோகபூர்வ பங்காளியாகாத அமெரிக்கா, விடுதலைப் புலிகள் நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் இல்லை என்ற தெளிவான நினைவூட்டலை அனுப்பியது. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவக் கைப்பற்றலின் எழுச்சியுடன் வந்ததால், இந்த செய்தி பயமுறுத்தலையும் சேர்த்துக்கொண்டிருந்தது.

அமெரிக்க துணை அரச செயலாளர் ரிச்சட் ஆமிடேஜ் மாநாட்டில் பேசும்போது, அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டுமானால் "விடுதலைப் புலிகள் வார்த்தையிலும் செயலிலும் ஐயத்துக்கிடமின்றி பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்." "அமெரிக்கா, விடுதலைப் புலிகளை சட்டரீதியான அரசியல் அமைப்பாக எதிர்காலத்தில் காணமுடியும், ஆனால் இந்த நிலைமையை விடுதலைப் புலிகளே மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

ஆமிடேஜ் அமெரிக்க புத்திஜீவிகளுக்கு மத்தியில் பெப்பிரவரி நடுப்பகுதியில் பேசும் போது வாஷிங்டனின் கோரிக்கைகளை உச்சரித்தார். பேச்சுவார்த்தைகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் "இலகுவானதாக" இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகள் "ஐக்கிய இலங்கையினுள்ளான ஒரு சமஷ்டி அமைப்புக்குள்" தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, பேச்சுவார்த்தையானது இரு சாராரும் மிகவும் கடினமான விடயங்களை எதிர்கொண்டு உண்மையான அரசியல் உடன்பாடுகளை காணவேண்டிய "ஒரு நெருக்கடியான கட்டத்தை" எட்டியுள்ளது என அவர் பிரகடனப்படுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளுக்கு, நிராயுதபாணிகளாக்குவது உட்பட முழுமையாக நிபந்தனைகளுக்கு கட்டுப்படுத்தல் மற்றும் ஒப்பீட்டளவில் இலங்கைக்குள் சிறிய பாத்திரத்தை மட்டுமே வழங்குகின்றன. "விடுதலைப் புலிகள், தாம் ஒரு அரசியல் தீர்வுக்காக உறுதிபூண்டுள்ளோம் என்பதை மெய்ப்பித்துக்காட்ட பல சிரமமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது" என ஆமிடேஜ் கூறினார். "விடுதலைப் புலிகள் அவர்களின் ஆயுத வழங்கள் மீது யுத்தநிறுத்த உடன்படிக்கை --மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தைகள்-- திணித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும். தர்க்கரீதியில், இந்தப் போக்கானாது தாங்களாகவே நிராயுதபாணியாகும் விடயத்தை உள்ளடக்கிக்கொள்ளப் போகிறது. ஒரே இலங்கை என்ற வரையறைக்குள், உள்நாட்டு சுயநிர்ணயமானது, நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் தனியான இராணுவங்களை மற்றும் கடற்படைகளை கொண்டிருப்பதை ஒத்திருக்கப்போவதில்லை," எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆமிடேஜ், சிறுவர் போராளிகள் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவது மற்றும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடுதலைப் புலிகளின் வலியுறுத்தலை கைவிடுவது உட்பட்ட ஏனைய கோரிக்கைகளையும் பட்டியலிட்ட பின்னர்: "இறுதியாக, விடுதலைப் புலிகள் தங்களை மெய்யான அரசியல் ஸ்தூலமாக காட்டிக்கொள்வதால் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் உற்சாகமடைந்துள்ளது. ஆனால் அது நடக்க வேண்டுமானால் விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவும் ஐயத்துக்கிடமின்றியும் பயங்கரவாதத்தை கைவிடுவதோடு, தனது வன்முறை நாட்கள் கடந்து விட்டதாகவும் ஒப்புவிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்," என முடித்தார்.

விடுதலைப் புலிகள் அமெரிக்க அழுத்தத்துக்கு தலைவணங்குகிறது

விடுதலைப் புலிகள் தாம் தொடர்ச்சியாக கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்கு செல்ல ஆர்வமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அது, நவம்பர் முற்பகுதியில் ஆமிடேஜ் வழங்கிய ஆலோசனைகளுக்கு தெளிவாக பிரதிபலித்துள்ளது. விடுதலைப் புலி பேச்சுவார்த்தையாளர்கள் சுட்டிக்காட்டியது போல, இது பேரத்தில் பொருளை அகற்றுவதை அர்த்தப்படுத்துகிறது.

வாஷிங்டனின் புதிய எதிர்த்தாக்குதலானது விடுதலைப் புலிகளுக்கு சூழ்ச்சிகளுக்கு இடம் கிடையாது என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது --மற்றும் அது விடுதலைப் புலிகள் செய்தியை புரிந்து கொண்டதாக காட்டியது. அமெரிக்காவின் தடையினால் விடுதலைப் புலிகள் ஐயத்துக்கிடமின்றி எரிச்சலடைந்திருந்த அதேவேளை, பாலசிங்கத்தின் கடிதம் புஷ் நிர்வாகம் மீதான எந்தவொரு கடினமான விமர்சனத்தையும் கவனமாக தவிர்த்துக்கொண்டிருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாட்டினுள் நுளைவதைத் தவிர்ப்பதற்கான உரிமை வாஷிங்டனுக்கு உள்ளது என அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டதோடு, அதற்குப் பதிலாக இடத்தைத் தெரிவுசெய்தது தொடர்பாக கொழும்பையும் நோர்வே மத்தியஸ்தர்களையும் குற்றம்சாட்டினார்.

பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறியுள்ள போதிலும், தாம் பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக, விடுதலைப் புலிகள் இந்த விலகலானது "தற்காலிகமானது" என பிரகடனப்படுத்தியது. ஆயினும் ஜனாதிபதி குமாரதுங்க நெருக்கடியான ஒரு காலகட்டத்தை உருவாக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி அராசாங்கத்தின் மீது அரசியல் நெருக்குவாரத்தை உக்கிரப்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை உடனடியாக பற்றிக்கொண்டார். பாலசிங்கம் தனது கடிதத்தை அனுப்பிய அடுத்தநாள், குமாரதுங்க எதிர்த் தாக்குதலுக்காக நாட்டின் ஆயுதப் படையை உசார் நிலையில் நிறுத்தினார். ஐயத்தைப் போக்குவதற்காக, யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது என சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு உடனடியாக தெரிவித்தது.

விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கம், இருசாராருமே உடனடியான அனைத்துலக அழுத்தத்துக்கு உள்ளானார்கள். பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையிட்டு "வருத்தம் தெரிவிக்கும்" உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டன. ஜப்பான் தனது விசேட தூதரான யசூசி அகாஷி இந்த வாரம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திப்பார் என அறிவித்தது. நிதி உதவிகள் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி, ஜூனில் இடம்பெறவுள்ள உதவி மாநாட்டில் "விடுதலைப் புலிகள் பங்குபற்ற வேண்டும்" என பிரகடனப்படுத்தினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அஸ்லி வில்ஸ், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிளவுக்காக விடுதலைப் புலிகளை கண்டனம் செய்ததோடு நிராயுதபாணிகளாக்குவதற்கான ஆமிடேஜின் கோரிக்கையை மீள வலியுறுத்தினார். "விடுதலைப் புலிகளின் ஆயுதங்களும் ஆயுதப் படைகளும் தமிழர்களின் உரிமைகளை காக்கப்போவதில்லை." "அவர்கள் இந்த முரண்பாட்டை நீட்டுவதோடு தமிழர்கள் உண்மையான சமாதான நிலைமைகளில் வாழக் கூடிய நாளை ஒத்திவைக்கின்றனர்," என அவர் ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.

பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளதற்காகவும் உடனடி பொருளாதார நிவாரணங்களை எதிர்பார்ப்பதற்கும் எதிராக விடுதலைப் புலிகளை தாக்கிய வில்ஸ் மொட்டையாக ஒரு இறுதி நிபந்தனையை விதித்தார். "அது (விடுதலைப் புலிகள்) பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறக் கூடாது. மற்றும் அது டோக்கியோவிற்கு செல்லவேண்டும். நிதி உதவியை பங்கிடும் எதிர்வரவுள்ள தீர்மானங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது."

அடுத்த நாள் பாலசிங்கம் தமிழ் நெட்டுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு கெஞ்சும் பிரதிபலிப்பை காட்டினார். தாம் எந்தவொரு "கருத்துவேற்றுமைகளையும்" தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக பிரகடனப்படுத்திய பாலசிங்கம், மாற்றங்களை அமுல்படுத்தும்போது அரசாங்கத்தின் நேரத்தை அனுமதிப்பதில் "நியாயமான கண்டனங்களை விடுக்கும்" விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை விபரித்தார். அவர் விடுதலைப் புலிகளை உடனடியாக நிராயுதபாணிகளாக்க முடியாதது ஏன் என்பதை புரிந்துகொள்ள வாஷிங்டனுக்கு அழைப்புவிடுத்ததோடு அது "திறந்த சந்தைப் பொருளாதாரத்தை விரும்புகிறது" என்பதை மீண்டும் வற்புறுத்திக் கூறினார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்செல்வதை விரும்பும் ஐக்கிய தேசிய முன்னணி அராசங்கமும் விடுதலைப் புலிகளுக்கு முகச் சவரம் செய்யும் இயந்திரத்தை அளிக்க முன்வந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஆலோசகர் பேர்னாட் குணதிலகவை திங்களன்று யாழ்ப்பாண நகரில் இராணுவ கட்டிடம் அமைப்பதை நிறுத்துவதற்கு கட்டளையிடவும் பிரதான பிரச்சனையான உயர் பாதுகாப்பு வலையங்களைப் பற்றி அறிக்கை செய்யவும் வட இலங்கைக்கு அனுப்பிவைத்தார். இந்த இராணுவ விரிவாக்கல் வலையங்கள் பரந்தவை, அத்தோடு யாழ் குடா நாட்டின் மொத்தப் பிரதேசத்தில் 18 வீதத்தை சுற்றிவளைத்துக் கொண்டுள்ளது. அவர்களின் கட்டுமானப் பணி சுமார் 130,000 மக்களின் இடம்பெயர்வுக்கு வழியமைக்கும். இராணுவம் விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படும் வரை பிரதேசத்தில் இருந்து வெளியேற மறுத்து வருகிறது.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தமிழ் அகதிகள் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவார்களேயாயின் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதற்கு ஒரு சிறிய வெற்றியாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிறிய சலுகையையும் வழங்குவதற்கான விக்கிரமசிங்கவின் செயற்திறனும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் எதிர்ப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவரது பொதுஜன முன்னணி, சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) சேர்ந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகியதையிட்டு "ஆழமான கவலையை" வெளிப்படுத்தும் ஒரு கூட்டறிக்கையை விடுத்துள்ளது. அது, உயர் பாதுகாப்பு வலையம் தொடர்பாக எந்தவொரு சமரசத்தையும் எதிர்ப்பதுடன், விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் மற்றும் விடுதலைப் புலிகளின் கடற்படை நடவடிக்கைகளை கண்காணிப்பதில் உதவுவதற்காக இந்தியா அழைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது.

குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான மோதலானது சமாதானப் பேச்சுவார்த்தைகளையிட்டு ஆளும் வட்டாரத்தில் உள்ள தெளிவான பிளவுகளோடு இணைந்துகொண்டுள்ளது. வியாபாரக் கும்பல்களினதும் பெரும் வல்லரசுகளினதும் ஆதரவுடன் மோசமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழியமைக்கவும் அரசாங்கம் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கல்களுக்கான திட்டங்களை திணிக்கின்றது. எவ்வாறெனினும் 20 வருடகால இராணுவ மோதலானது வியாபாரப் பிரிவுகள், அரச அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்துக்கு மத்தியில் சக்திவாய்ந்ததும் உறுதியானதுமான நலன்களை தோற்றுவித்துள்ளது. குமாரதுங்க விடுதலைப் புலிகளுக்கான எந்தவொரு சலுகையையும் கடுமையாக எதிர்க்கும் இவ்வாறான குழுக்களுக்கும் அதே போல் ஜே.வி.பி. போன்ற சிங்களத் தீவிரவாத குழுக்களுக்கே அழைப்புவிடுக்கின்றார்.

குணதிலகவின் விஜயத்தில் அக்கறைகொள்ளாவிட்டாலும் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கான தனது வழியில் பயணித்துக்கொண்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்காலப் பேச்சுவார்த்தைகளிலான அதனது பங்களிப்புக்கான அடிப்படை நிலைமைகள் உயர்ந்த சலுகைகளாக அமையும் என்பதை அது முழுமையாக தெரிந்துகொண்டுள்ளது.

Top of page