World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Washington warns EU over NATO unity

நேட்டோ ஐக்கியம் பற்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாஷிங்டன் எச்சரிக்கை விடுக்கிறது

By Chris Marsden
23 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பாதுகாப்பு கொள்கைத் திட்டங்கள் பற்றி, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவின் பெரிய இராணுவ நாடுகளுக்கும் இடையேயான பூசல்கள், அம்பலமாகிவிட்ட பொதுச்சண்டைகளாக வெடித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு, NATO விற்கு வெளியே, குறைந்த அளவில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாகச்செய்யும் முன்மொழிவுகளுக்கு, அமெரிக்கா அப்பட்டமான முறையில் விரோத உணர்வைக் காட்டிய பின், அக்டோபர் 20 திங்கள் அன்று, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 19உறுப்பினர்களும் அடங்கிய சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பெற்றது. தனித்த முறையில், ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிக்க திட்டமிடுதலையும், கட்டுப்பாட்டு தலைமையகத்தை, டெருவன் (Teruven) என்னும் பிரஸ்ஸல்சின் புறநகரத்தில் அமைப்பதையும், மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் மாதம், பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், லுக்சம்பேர்க் ஆகிய நாடுகள், முதன் முதலில் ஒரு தனி ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் தலைமைக் கட்டுப்பாட்டிற்கு திட்டமிட்டன. அமெரிக்காவின் ஈராக்கியப்போர் திட்டங்களுக்கு அப்பொழுது இந்த நான்கு நாடுகளும், வெளிப்படையாகக் கடுமையான விரோதத்தை காட்டியிருந்தன. இந்த சுதந்திரமான இராணுவக் கட்டுப்பாட்டுத்திறன் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, ஓர் அமெரிக்க அரசுத் துறையின் செய்தித்தொடர்பாளர், ஐரோப்பிய அரசுகளுடன் இணைந்த "சாக்லெட் தயாரிப்பாளர்கள்" என இகழ்வான அடைமொழியை கூறியதன் மூலம், குடியரசுக்கட்சி நிர்வாகம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியது.

Guardian நாளேட்டிற்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி, அமெரிக்காவில் பிரிட்டிஷ் தூதராக உள்ள சேர் டேவிட் மன்னிங், வெளியுறவு அலுவலகத்திற்குத் தெரிவித்த தகவல், இவ்வாறு இருந்தது: "ESDP (EU Security and Defence Policy), ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கை, நேட்டோவிற்கு பொருந்தாத வகையில் திசைதிரும்பக் கூடும் என்று அமெரிக்க நிலை உறுதியாளர்கள் கொண்ட அச்சத்தை, சாக்லெட் உச்சி மாநாடு பிரதிபலிக்கிறது."

ஐரோப்பாவோடு இராணுவப்போட்டி வெளிப்படலாம் என்ற அமெரிக்க அச்சங்கள், அதன், நெருக்கமான, விசுவாசத்திற்குரிய நாடான, பிரிட்டன், தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்ட தோற்றத்தை அளித்த அளவில், கூடுதலாயின. 1998ல், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும், பிரதம மந்திரி டோனி பிளேருக்கும் சென்ட் மாலோ தீவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஐரோப்பிய இராணுவத்திறன் வளர்ச்சியை, 60,000 பேர் உள்ள விரைவுப் பதிலடிப்படை போன்றவற்றை வளர்க்க தொழிற் கட்சி அரசாங்கம் இணக்கம் காட்டுவதாகத் தெளிவாக்கியிருந்தது. ஆனால், பிளேயர் எப்பொழுதும் இப்படை நேட்டோவின் கட்டுப்பாட்டு அமைப்பிற்குள், கட்டாயம் அமெரிக்க கூட்டுடன் இணைந்து தொடர்ந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.

செப்டம்பர் மாதம், பேர்லினில் சிராக்குடனும், ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடருடனும் நடத்திய குட்டி உச்சி மாநாட்டில், பிரெஞ்சு-ஜேர்மனித் திட்டங்களான நேட்டோ அமைப்புக் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஆணையத்திற்கு ஆதரவு தரவுள்ளார் என்ற அறிவிப்புக்களால், புஷ் நிர்வாகம் பீதியடைந்தது.

இத்திட்டங்கள், ஒரு கூட்டு அறிக்கையில் காணப்பட்டு, இவ்வாறாக பிரகடனப்படுத்தப்படுகிறது : "ஐரோப்பிய ஒன்றியம், தன்னுடைய நடவடிக்கைகளை, நேட்டோ தளவாடங்கள், நேட்டோ திறன் இவற்றின் ஆதரவு இல்லாமல், கட்டாயம் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்." அறிக்கை, "எங்களுடைய இலக்கு அத்தகைய திட்டங்களைப் போட்டுச் செயல்படுத்தும் திறன், 25 உறுப்பினர் நாடுகளுடன் இணக்கமான ஆதரவுடனோ அல்லது, அக்கறை கொண்ட கூட்டு நட்பு நாடுகள் வட்டத்தின் மூலமோ அடையப்படவேண்டும் என்பதுதான்" என்று மேலும் கூறுகிறது.

இதையே வேறுவிதமாகச் சொன்னால், ஐரோப்பாவில் அமெரிக்க நட்பு நாடுகள் சிலவற்றால் இது தடுக்கப்பட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட முக்கிய நாடுகள் திட்டமிட்டபடி செயல்களில் ஈடுபடும் என்பதாகும்.

இத்திட்டத்தில், கட்டுப்பாட்டுத் தலைமையகத்திற்கான கருத்தும் அடங்கியிருந்தது. இதற்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் விரைவு எதிர் அதிரடிப்படையின், மாசிடோனியாவிற்கான தொடக்கப்பணி பற்றிய கூட்டம் நேட்டோவின் கட்டுப்பாட்டுச் செயல்கள் தலைமையிடமான மோன்ஸில் நடத்தப்பட்டது.

பின்னர் இயற்றப்பட்ட வரைவு உடன்படிக்கையில், உறுப்பு நாடுகள் ஏதேனும் தாக்குதலுக்கு உட்பட்டால், மற்ற நாடுகள் உதவிக்கு வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தும், ஓர் "ஒற்றுமை விதிமுறையும்" சேர்க்கப்பட்டது. அமெரிக்கா, இவ்விதி, நோட்டோவின் 5ம் விதியின்படி உள்ள சொந்த பரஸ்பர பாதுகாப்பு ஒழுங்கை மீறுவதாக வலியுறுத்திக் கூறுகிறது.

அந்த நேரத்தில், நேடோவிற்கு நீண்டகால அச்சுறுத்தல் என்பதை பிளேயர் மறுத்தார் மற்றும் ஜேர்மனிய அரசாங்கம், பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிய சலுகைகளைக் கொடுத்துள்ளது எனக் கூறுதல், " நாங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளாதவை பற்றி அதிபரிடமிருந்து வரும் மிகையுரை ஆகும். "நாங்கள் அனைவரும் ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையை ஏற்க விரும்புகிறோம், ஆனால் அது நேட்டோவிற்கு இயைந்து இருக்கவேண்டுமெனக் கருதுகிறோம்", என ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தெரிவித்தார். ஆயினும்கூட, பிளேயர் வலியுறுத்திக் கூறினார்: "இப்பொழுது ஐரோப்பியப் பாதுகாப்பு உண்மையில் நடைமுறைக்கு வரவிருக்கையில், உலகின் பலபகுதிகளிலும் தன்செயலில் அது ஈடுபடும் காலம் வந்துவிட்டது எனக்கூற முடியும்."

இத்தகைய சமாதானப்போக்கு உடைய, நேட்டோவிற்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்ற உத்தரவாதங்களால் திருப்தியடையாத வாஷிங்டன், ஐரோப்பிய இராணுவ நடவடிக்கைகள் மீது தன்னுடைய தடுப்பதிகாரத்தைக் கையாள்கிறது. மாற்றாக, பிளேயரின் நிலைப்பாட்டில் இவர்கள் கருதும் தெளிவின்மை எச்சரிக்கை மணி கொடுத்ததால், ஆழ்ந்த அட்லாண்டிக் கடந்த உரையாடல்கள் நடைபெற்றன; பேர்லின் உச்சிமாநாட்டைப்பற்றி "அமெரிக்க அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில்" பிரிட்டன் முயன்றதாக, கார்டியனின் ஆதாரங்கள்படி, தெரியவருகிறது. ஆனால் ஐரோப்பாவுடன் எப்பொழுதும் பூசல்களைக் கிளப்பிவிடும், பென்டகனில் உள்ள பருந்துகள், அவ்வளவு எளிதில் சமாதானம் அடையவில்லை. புஷ் நிர்வாகத்தின் மிக கடும் போக்கினரின் கருத்துக்களை எழுத்துக்களாக்கும் Wall Street Journal, அக்டோபர் 20 பதிப்பில் வர்ணித்தது:

"சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படுவதற்கான திட்டம்.... அட்லாண்டிக் கடந்த உறவுகளை முறிக்கும் நோக்கத்தையுடையது என்பதில் எவருக்கும் சந்தேகங்கள் வரத்தேவையில்லை." பின் அச்சுறுத்தும் வகையில், "தனி இராணுவ முயற்சியில் ஈடுபட விழையும் ஐரோப்பியர்கள், தன்னுடைய நட்பு நாடுகளால் கைவிடப்பட்டு உண்மையில் தனிமையாக்கப்பட்டுவிட்ட அமெரிக்கா உள்ள உலகில், தாங்கள் செயல்பட வேண்டுமா என்பது பற்றி, நீண்டு கடினமாகச் சிந்திக்கவேண்டும்" என்றும் கூறியுள்ளது.

பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி தொடர்புகள் உட்பட, அனைத்து விதங்களிலும், வாஷிங்டன், பிளேயர்மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. பழைய நேட்டோ உயர் அதிகாரியும், டோரி பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளருமான, பிரிகேடியர் ஜெப்ரி வான் ஆர்டன், MEP, செப்டம்பர் மாதம் கூறினார், "ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு, நேட்டோவுடன் இயைந்து இருக்கவேண்டும் என பிளேயர் எப்பொழுதுமே கூறிவந்துள்ளார். நேட்டோவுடைய செயல்திறனை, அவருடைய உடன்படிக்கையின் இதயத்தானமாக அவர் கருதியதால், கடக்கப்படக்கூடாத சிகப்புக்கோடாக அதை அவர் நினைத்தார். இந்தப் பிரச்சினையில் அவர் இப்பொழுது முற்றிலும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்."

மிகச்சமீபத்தில், குடியரசுக் கட்சியின் நிர்வாகத்திற்கு நெருக்கமான நிழல் பாதுகாப்பு மந்திரி பேர்னார்ட் ஜென்கின் கூறினார்: "பிரான்ஸ் வேண்டுமென்றே நேட்டோவை எப்படியும் ஒதுக்கி வைக்க நினைக்கிறது என்ற கருத்து அமெரிக்க நிர்வாகத்தில் சிலரிடையே இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இறுதியாக ஒரு குரல் கொடுக்க அவர்கள் நினைக்கிறார்கள்."

அவ்விறுதி முயற்சியும் அக்டோபர் 15 அன்று நடந்தது; நேட்டோவிற்கு அமெரிக்கத் தூதரான நிக்கலஸ் பேர்ன்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை, "நேட்டோவின் வருங்காலத்திற்கு மிக முக்கியமான அச்சுறுத்தல்" என்று அவர் குறிப்பிட்டார். அத்தோடு 19 நேட்டோ உடன்படிக்கை நாடுகளின், அவசரக் கூட்டம் ஒன்றை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கை நாடுகளின் மாதாந்திரக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாகக் கூட்டினார்.

ஐரோப்பிய அரசியல் அமைப்பு ஒன்றிற்கு, இறுதி வடிவம் கொடுக்கும் திட்டங்களை விவாதிப்பதில் ஏற்கனவே பிரச்சினைகளில் மூழ்கியுள்ள, இருநாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டிற்கு இவருடைய செயல்கள் கூடுதலான அழுத்தத்தைக் கொடுத்தன. பிளேயரை தன் நிலையை உணரவைக்கும் தாக்கமாகவும் அது அமைந்தது; ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் பாலம் போலச் செயல்பட அவர் நினைத்தாலும்கூட, அதற்கும் வாஷிங்டனுடைய அனுமதி தேவை என்பது அவருக்கு உணர்த்தப்பட்டது.

"இரண்டோடுமே வலுவான உறவைப் பேணுவதாக" உறுதி அளிக்கும் அதேவேளை, "ஐரோப்பாவிலிருந்து என்னை வெளியே இழுக்க வேண்டும் என்று சிலரும், அமெரிக்காவிலிருந்து வெளியே இழுக்க வேண்டுமென்று சிலரும் விரும்புகின்றனர்", என்று விளக்குகையில், தன்னுடைய கஷ்டங்களை, வெளிப்படையாகவே பிளேயர், உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ள நேரிட்டது.

அவர் மேலும் வலியுறுத்தினார்: "நேட்டோ உடனான நம்முடைய பாதுகாப்பு உறுதிகளை ஆபத்திற்குட்படுத்தும் எந்த செயலும் கூடாது." அதன் முக்கியத்துவம் வருங்கால ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியமைப்பில் தெளிவுறுத்தப்படவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும், பிளேயர் தெரிவித்தார். "இக்கணத்தில் அது தெளிவற்றதாக இருக்கிறது" என்றார் அவர்.

வெளியுறவு மந்திரி, ஜாக் ஸ்ட்ரோ பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அக்டோபர் 20ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியம் "நிலப்பகுதிப் பாதுகாப்பை"க் கொள்வது என்பது "ஏற்க முடியாதது ஆகும்" என்றார். "அத்தகைய விஷயம் நேட்டோவில்தான் முடிவெடுக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

அக்டோபர் 20ம் தேதி, கீவில் நடைபெற்ற கூட்டத்தில் நேட்டோ பொதுச் செயலர், ஜோர்ஜ் றொபேட்சன் இன்னும் வெளிப்படையாகவே பேசினார். ஐரோப்பிய ஒன்றியம் அட்லாண்டிக் உடன்பாட்டின் இராணுவச் செயலுக்கு நகல் எடுப்பதுபோல் எடுக்கும் முயற்சிகள் "ஆழ்ந்த அதிருப்தி" அளிப்பதாகவும், வீணான பணச்செலவு என்றும் குறிப்பிட்டார். தன்னுடைய பாதுகாப்புத் திறன்களுக்கும் அமெரிக்கத் திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பவேண்டுமானால், "குறைவான காகித அளவிலான படைகளையும் கூடுதலான பயன்படுத்தக்கூடிய இராணுவ வீரர்களும் தேவை" என்றார். NATO-EU விற்கு இடையேயான ஒப்பந்தம் ஏற்பட்டு பிந்தையதற்கு முந்தையதின் வசதிகளை அணுக வாய்ப்பு வேண்டும் என்ற கருத்திற்கு, "சர்வதேச நடவடிக்கைகள் பலவற்றைக் கையாளத்தேவையான பயன்பாட்டு வசதிகளுக்காகவும்.... ஏற்கனவே நேட்டோவில் விலையுயர்ந்த சொத்துக்களையும், தலைமையகத்தையும் கொண்டுள்ளபோது, அதை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக நகல் எடுக்கவும் பெல்ஜியம் போன்ற நாடுகளைச் செலவிடச் சொல்வது, பணத்தை வீண் அடிப்பது ஆகும்" என்றார்.

மற்ற ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க அச்சம் அனாவசியமானது என அவ்வச்சத்தைக் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தப்பூசலை தேநீர்க் கோப்பைக்குள் ஒரு புயல் எனவும் கூறினர். கூட்டத்திற்கு வராத ஷ்ரோடர் சார்பிலும், தன் சார்பிலும் பேசிய சிராக், இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி, பெல்ஜியப் பிரதம மந்திரி கை வெர்ஹோப்ஸ்டத் (Guy Verhofstadt), அனைவருமே தங்கள் உரைகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் நேட்டோ திட்டங்களுடன் முற்றிலும் இயைந்து நிற்கும் எனவும், பிரஸ்ஸல்ஸ் கட்டுப்பாட்டுத் தலைமையக திட்டத்தை கைவிடுவதாகவும் ஒத்துக்கொண்டனர்.

இச்சலுகைகள் வெறும் பேச்சளவிலானதோ அல்லது வனப்புரைத்தன்மைதான் பெற்றவையோ ஆயினும், பிரான்ஸ்-ஜேர்மனி தொடக்க முயற்சிகள் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. ஐரோப்பாவின் அயலுறவுப் பிரதிநிதி ஜேவியர் சொலனா, நேட்டோவிலிருந்து தனியான, ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத்திறன், அமைதிகாக்கும் பணிகள், ஆகியவற்றிற்கான கூடுதல் பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இராணுவத்திறன் தேவை. அதைப்பற்றி ஒருவரும் ஐயப்படத் தேவையில்லை" என்றார். புதிய திட்டத் தலைமையகம் தேவையில்லை என்றும், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அத்தகைய மையங்கள் இருக்கின்றன என்ற உட்குறிப்பையும் தெரிவித்தார். "மேலும், இன்று.... பல நாடுகளிலுள்ள தலைமைச் செயலகங்கள், சர்வதேசக் கட்டுப்பாட்டு தலைமையகமாக மாற்றிக்கொள்ளத்தக்கவை" என்றும் கூறினார்.

பாரிசில் இருந்த பிரெஞ்சுத் தலைமையகம், காங்கோவின் நகரமான புனியாவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அமைதிகாக்கும் பணியின்போது அங்கிருந்துதான் செயல்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்குப்பிறகு, உலகின் மூலோபாய வளங்களை மறு பங்கீடு செய்வதில், பெரும் வல்லரசுகளுக்கிடையே உள்ள உந்துதலில், ஆழமாக வேரூன்றியிருப்பதால், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான நெருக்கடிகள், அவ்வளவு எளிதில் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. தன்னுடைய கொள்ளையிடலின் அவாக்களை, முதலில் ஆப்கானிஸ்தானிலும், பின்னர் ஈராக்கிலும், வாஷிங்டன் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது; தன்னுடைய ஐரோப்பிய போட்டியாளர்களைவிட இப்பொழுதுள்ள மகத்தான இராணுவ ஆற்றலினால், இவ்விரு பகுதிகளிலும் அது கொண்ட ஆதிக்கம் உலகின் இரு முக்கியமான இருப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் வாய்ப்பை அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது. இன்றளவும்கூட, லண்டனில் மட்டுமின்றி, பாரிசிலும், பேர்லினிலும் இதற்கு ஏற்பட்ட விளைவு, அதன் கோரிக்கைகளுக்கு, சமாதானப்படுத்தும் வகையில் இணங்கும் முயற்சிகளில் இவை ஈடுபட்டுள்ளதுதான். உண்மையில், சிராக்கும், ஷ்ரோடரும் கடந்த சிலமாதங்களில் புஷ் நிர்வாகத்தை மிகவும் பணிவுடன், ஈராக்கைப்பற்றிய கருத்து வேறுபாடுகளை மறந்துவிட கெஞ்சிக்கொண்டிருப்பதுதான் நடைபெற்றுவருகிறது. ஆயினும்கூட, விரோதப் போக்குகள் தொடர்ந்து இருப்பது மட்டுமின்றி, மோசமாகவும் ஆகி உள்ளன.

ஐரோப்பா இணக்கம் தெரிவிக்கும் ஒவ்வொரு சலுகைக்கும், அமெரிக்கா கூடுதலான கோரிக்கைகளை முன்வைப்பதுதான் பதிலாக உள்ளது; இப்படிப்பட்ட கோரிக்கைகளும் ஐரோப்பிய கண்டத்தின் வல்லரசுகளுடைய நலன்களுக்கு எதிரானவை ஆகும். ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதோடன்றி, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தை இந்த வெற்றிகொண்டுள்ள நாட்டில் ஒழுங்கு நிலைநிறுத்த தேவைப்படும் பணச்செலவிற்கும், ஆள்செலவிற்கும் பங்கையும் கேட்பது ஓர் உதாரணமாகும். ஐரோப்பிய நாடுகள் டெஹ்ரானுடன் பொருளாதார, அரசியல் தொடர்புகளை வளர்க்கும் முயற்சிகளுக்கு எதிராகத்தான், பென்டகனுடைய அடுத்த இலக்கு ஈரான் என நடந்து கொண்டிருக்கும் அதன் முயற்சிகள் தெரிவிக்கின்றன.

நீண்டகாலப் பார்வையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம், சமாதானமுறையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பலனளிக்காது என்றும், கூடுதலான இராணுவ வலிமை ஒன்றுதான் தேவை என்ற முடிவிற்கு வரவேண்டியதைத் தவிர்க்க முடியாது.. தன்னுடைய அமெரிக்கப் போட்டியாளரிடமிருந்து ஏதேனும் சலுகைகள் பெறவேண்டும் என்றால், குறைந்த அளவு தான் ஏதேனும் ஒன்றை மேசைக்கு கொண்டுவரவேண்டும் என்ற நிலைதான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குறைவான உபாயமாக உள்ளது. இதைத்தவிர, தன்னுடைய காலனிய அவாக்களை ஆபிரிக்காவிலும், மற்ற இடங்களிலும் முன்னேற்றுவிக்க வேண்டுமென்றால், இதற்கும் திறமையான படை தேவைப்படும். எனவே அடிக்குப் பதிலடி என்ற முறையில், இராணுவ வலிமையைப் பெருக்கும் முயற்சிகள் நடத்த அரங்கு ஏற்பட்டுள்ளதால், பாக்தாத்மீது பொழியப்பட்ட குண்டுவீச்சுக்கள் போன்ற காட்டு மிராண்டித்தனம் போல் பலவற்றை உலகமக்கள் எதிர்கொள்ளும் அபாயம் மிகுந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் திட்டங்கள்மீது பர்ன்ஸ் தாக்குதல் நடத்திய அன்றே, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் விரைவு அதிரடிப்படைக்கு மாற்றுப்போல் வேண்டுமென்றே தன்னுடைய பூகோளத் தாக்குதல் படையைத் தொடங்கி வைத்தது. இந்த 9,000 பேர் கொண்ட "எதிர்விளைவுப் படை", ஐந்து நாட்களில் உலகில் எந்தப் பகுதியையும், வான், தரை, கடல் வழித்தாக்குதல்களுக்கு உட்படுத்த இயலும். இறுதியில் அது 20,000 துருப்புக்களைக் கொண்டிருக்கும். பிரிட்டனின் தளபதி சேர் ஜாக் டெவெரெல்லின் நடைமுறைக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இப்படைக்கு, தரைப்படைப் பிரிவின் தளபதியாக ஒரு துருக்கியரும், கடற்படைபிரிவிற்கு, ஒரு ஸ்பெயின் நாட்டவரும் பொறுப்பேற்பார்கள். சுருங்கக்கூறின், ஒவ்வொரு பிரிவின் தலைமை தளபதி பொறுப்பும், அமெரிக்காவிற்கு விசுவாசமுடைய நட்புநாட்டவரால் கொள்ளப்படும்.

Top of page