World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : மலேசியா

Mahathir's anti-Semitic comments: fallout from Washington's "war on terrorism"

மகாதீரின் யூத எதிர்ப்புவாத கருத்துக்கள்: வாஷிங்டனுடைய "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" விளைவு

By Peter Symonds
31 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

மலேசியப் பிரதம மந்திரி மகம்மது மகாதீர், தான்15 நாட்களில் பதவியிலிருந்து ஓய்வு பெற இருக்கையில், Organisation of Islamic Conference (OIC), இஸ்லாமிய அமைப்பின் மாநாடு என மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கூட்டத்தில், நிகழ்த்திய உரையில் தெரிவித்த யூத எதிர்ப்புவாத கருத்துக்கள் சர்வதேச அளவில், பெருங்கூச்சலை எழுப்பின. இந்த நிகழ்வு, மகாதீரின் இனப்பார்வைக்கு மட்டும் அடையாளமாக இல்லாமல், பொதுவாக, வாஷிங்டன், மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் இரண்டும் நடத்திவரும் கொலைச்செயல்களுக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளில் வளர்ந்துவரும் சீற்றத்தையும் புலப்படுத்தியது.

விருந்தோம்பும் நாட்டின் தலைவர் என்னும் முறையில், அக்டோபர் 16ம் தேதி, நீண்ட ஆரம்ப உரையொன்றை நிகழ்த்தி, அதில் முக்கியமாக ஒற்றுமையில்லாமல் இருப்பதற்காகவும், இஸ்லாமிய அடிப்படையை எதிர்ப்பதற்காகவும், முஸ்லிம்களைச் சாடினார். உணர்வின் அடிப்படையில் விடையிறுக்காமல், "தங்கள் மூளையைப் பயன்படுத்தவேண்டும்" என்ற வாதத்தை, அவர் அறிவித்தார்: "ஐரோப்பியர்கள் 12 மில்லியன் யூதர்களில் 6 மில்லியனைக் கொன்றனர். இப்பொழுதோ, யூதர்கள் உலகை மறைமுகமாக ஆளுகின்றனர். தங்களுக்காக மற்றவர்களைச் சண்டையிடச் செய்து, மடியுமாறும் செய்கின்றனர். "

"யூதர்கள் உலகை ஆள்கிறார்கள்" என்ற அவர் கருத்து, இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களைக் கொடுஞ்சிறை முகாம்களில் அடைத்து, மில்லியன் கணக்கில் படுகொலை செய்த்தை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் வகையில் யூத-எதிர்ப்புச் சதிக் கருத்துக்கள், நாஜிக்களால் கையாளப்பட்டதை, நினைவு படுத்துகிறது. இவருடைய பொங்கியெழுந்த கோபம், முழுமையான இனவெறியைக் கொண்டிருந்தது. எவ்வாறு "யூதர்கள்" அனைவரும் சியோனிசத்திற்கும், இஸ்ரேலிய ஆட்சி, பாலஸ்தீனியரை அடக்குவதற்கும், புஷ் நிர்வாகத்தின் இராணுவவாத செயல்பட்டியலுக்கும் காரணம் இல்லையோ, அதேபோல்"ஐரோப்பியர்கள்" அனைவரும் யூதர்கள்மீது நிகழ்ந்த இன அழித்தொழிப்புக்குக் காரணமாக மாட்டார்கள்.

மகாதீருடைய நாணமற்ற செமிட்டிய-எதிர்ப்பு, வாய்தவறி வந்த சொற்கள் அல்ல. இது புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போர்", இஸ்ரேலிய ஆட்சியால் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அரசியல் படுகொலைகள், பதிலடிகள், பயங்கரங்கள், ஆகிய இவற்றால் உள்ளம் கொதித்திருக்கும் மலேசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு முழு நனவுடன் வேண்டுகோள் விடுப்பதைத் தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. இக்கருத்துக்கள், இன்னும் தீவிரமான இஸ்லாமியரிடமிருந்து வரும் விமர்சனங்களிலிருந்தும், அரசியல் அபாயங்களிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளவும் "முஸ்லீம் பாதுகாவலர்" என்று தன்னுடைய நன்மதிப்பை உயர்த்திக்கொள்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே ஆகும்.

மகாதீர் இக்கருத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல், கடந்த இரண்டு வாரங்களாக இதை வெளிப்படையாக நியாயப்படுத்தியும் பேசியும் வருகின்றார். தாய்லாந்தில் நடைபெற்ற APEC உச்சிமாநாட்டில், அக்டோபர் 21ம் தேதி, Bangkok Post க்கு, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக விளைந்துள்ள எதிர்ப்புக்கள் எவ்வாறு உலகை யூதர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர் எனக் "காண்பிக்கின்றன" என்று கூறினார். மறுநாள் "ஜனநாயகத்தைப் பெரிதும் விளக்கிப்பேசுவோர்" எவ்வாறு "உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றனர்" எனப் பயங்கரமாகச் சாடினார் -- இது இஸ்ரேலுக்கு மட்டுமல்லாமல், தன்னுடைய சட்டவிரோத ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு உள்ள எதிர்ப்புக்களை, அமெரிக்க இராணுவம் அடக்கும் முறையையும் பற்றிய குறிப்பாகும்.

இந்த வார முற்பகுதியில், அமெரிக்க செனெட் மன்றம், மலேசிய நாட்டின் சமய சுதந்திரம் பற்றி, குறிப்பாக யூதர்கள் பற்றிய பார்வையை, அரசுத்துறையின் ஆய்விற்குப் பின்னர், கொடுக்க வேண்டம் என 1.2 மில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை நிறுத்தி வைத்துத் தன் ஒப்புதல் இன்மையைக் காட்டியுள்ளது. இதனால் சிறிதும் பின்வாங்கி விடாமல், ASEAN உச்சி மாநாட்டின்போது, புஷ் தன்னைத் தனியே கடிந்து கொண்டார், எனப்பட்ட வெள்ளைமாளிகை கூற்றை, மகாதீர் மறுத்துப் பேசியதன் மூலம் பிரச்சினையை மேலும் பெரிது படுத்தியுள்ளார்.

ஒரு வகுப்புவாத அரசியல்வாதி

மகாதீரின் உலகப்பார்வை, வகுப்புவாத, இனமுறையில் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மலேசியாவில் முஸ்லீம் மலாய் பெரும்பான்மை மக்களிடையே செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும், தேசியவாத அழைப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டுதான், அவருடைய முழு அரசியல் வாழ்வும் அமைந்துள்ளது. பல்கலைக்கழக நுழைவு, வணிகம், பொதுத்துறை இவற்றில், நாட்டின் கணிசமான சீன, இந்தியச் சிறுபான்மையினரின் இழப்பில், மலாய் முஸ்லீம் சார்பு ஆழ்ந்து அமைக்கப்பட வேண்டும் என்ற அரசியலைக் கடைபிடித்துத்தான், 1981ல் இவர் பிரதம மந்திரி ஆக பதவி ஏற்றார்.

இவருடைய ஜனநாயக உரிமைகள் பற்றிய நடைமுறைகளின் தன்மை, சர்வதேச அளவில் குறைகூறல்களுக்குட்படுதலை அடுத்து, மகாதீர் எப்பொழுதுமே, மேலை நாடுகளின் கறைபடிந்த குற்றங்களையும் பாசாங்குகளையும் வெளிப்படுத்திப் பதிலடி கொடுக்கத் தயங்கியது கிடையாது. எப்பொழுதுமே அதன் பழங்குடிமக்கள் கொள்கைகளுக்காகவும், குடியேற்றக் கொள்கைகளில் இனவெறி இருந்ததற்காகவும், ஆஸ்திரேலியா, இவருடைய தனித் தாக்குதலுக்கும் உட்படுத்தப்படும்.

ஆனால், இவருடைய மேலை-எதிர்ப்புப் பேச்சுவன்மையும், மக்களிடையே புகழ்பெற வேண்டும் என்ற வகை உரைகளும் இருந்தபோதிலும், மகாதீர் ஒரு வலதுசாரி உயர் குடியினராவார். இவருடைய கொள்கைகள் ஒரு குறுகிய, சலுகைகள் நிறைந்த மலாய் மத்தியதர வகுப்பினரின் அடுக்கிற்கு பெரிதும் பயன்பட்டன. ஏழ்மையான, கிராம, நகரப்- புற மலாய்களிடையே தன் கட்சியின் சமுதாயத் தளத்தை உயர்த்திக்கொள்ள, அப்பட்டமான தேசியவாதம் நிறைந்த சொல்லாற்றலைப் பயன்படுத்தி வந்தார்.

இப்போதைய பிரச்சினையை பற்றி, நியூ யோர்க் டைம்ஸில், பொருளாதாரக் கருத்தாய்வாளர் போல் க்ரூக்மன் எழுதுகையில், கடந்த முறை மேலை நாடுகள், மற்றும் யூதர்கள் பற்றி மகாதீர், 1997-98 ஆசியப் பொருளாதார நெருக்கடியின்போது, தாக்கிப் பேசினார் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்கா, IMF இடமிருந்து வந்த மலேசியப் பொருளாதாரத்தைச் சீரமைத்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற அழுத்தத்தை ஒட்டி, பிரதம மந்திரி, மேலை ஊகமிடுபவரைச் (speculators) சாடியதோடு, ஜோர்ஜ் சோரசின் (George Soros) யூதப்பின்னணியையும் குறிப்பிட்டார் மற்றும் நாணயம் மற்றும் மூலதனக் கட்டுப்பாட்டையும் செயல்படுத்தினார்.

"மகாதீரை அப்பொழுது கவனித்தபோது, அவருடைய தேர்ந்த உரையாற்றும் திறன், உண்மையில் உள்நாட்டு அரசியலை நுட்பத்தோடு சமநிலையில் வைக்கப்பயன்படும் நோக்கத்ததைக் கொண்டிருந்ததன் பகுதியாக இருந்தது தெளிவாயிற்று" என குருக்மன் குறிப்பிட்டார். "மலேசியாவில் முஸ்லிம், இன அடிப்படையில் மலாய் பெரும்பான்மை இருந்தபோதிலும், அதன் வணிக உந்துதல் சீன இனச் சிறுபான்மையிலிருந்து முக்கியமாக வருகிறது. பொருளாதாரத்தை நன்கு பேணுவதற்கு சீனச் சிறுபான்மை செழித்திருக்க மகாதீர் அனுமதித்தாக வேண்டும்; அதேநேரத்தில் இன நெருக்கடிகளை ஒதுக்கி வைக்க, மலாய்களுக்கு சொல்லளவிலோ, செயலளவிலோ சலுகைகள் கொடுக்க வேண்டும்." என குருக்மன் கூறுகிறார்.

"அச்சமன்படுத்தும் செயலின் பகுதி, மலாய் தொழிலாளிகளுக்கு நல்ல வேலைகள் கொடுப்பது, மலாய் வணிக முயலுவோருக்குச் சிறப்பு வணிகவாய்ப்புக்கள் கொடுப்பது, ஆகியவற்றையும் அடக்கியுள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளை, மிகப் பிடிவாதமாக மகாதீர் எதிர்த்த காரணம், அவரது அமைப்பை ஒன்றாய்ச் சேர்த்து வைத்திருந்த கவனத்துடன் செயல் படுத்தி வந்த சொற்ஜாலங்கள், அவற்றினால் சீர்குலைந்துவிடும் என அவர் அஞ்சினார். நேரம் கடுமையாக இருக்குமேயாயின், மகாதீர் முஸ்லீம் பெரும்பான்மைக்கும், சிறப்பான, சிவந்த, சொல்வண்ணக் கறியைக் கொடுப்பார்".

கடந்த ஐந்து ஆண்டுகளில், மகாதீரின் சமன்படுத்தும் செயல், இன்னும் அபாயகரமாகப் போய்க்கொண்டுள்ளது. இவருடைய ஐக்கிய மலாய் தேசிய கழகம் (United Malays National Organisation (UMNO)) என்னும் ஆளும் கட்சிக்குள்ளேயே உள்ளவர்கள் உட்பட, இவருடைய ஆட்சியின் நெருங்கிய நட்பு மற்றும் ஊழல், தங்கள் பொருளாதார நலன்களுக்கு தடை எனக்கருதியவர்களிடமிருந்து, எதிர்ப்புக்கள் வளர்ந்துவருகின்றன. 1998ல் இவருடைய உதவியாளர் அன்வர் இப்ராஹிம், நாணயம், மற்றும் மூலதனம் இவற்றின் மீதுகொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்தார் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு ஆதரவு அளித்தார்.

UMNO லிருந்து, அன்வரை, அவருடைய ஆதரவாளர்களோடு, மகாதீர் வெளியேற்றி, அவரை அயல்நாட்டு நலன்களின் இரகசியப் பணியாளர் என கண்டனத்திற்கு உட்படுத்தினார். அன்வர், அரசாங்கத்தை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியவுடன், நாட்டின் மோசமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ், அவர் கைதுசெய்யப்பட்டு, அவருடைய அரசியல் புகழையே அழிக்கும் வகையில், பின்னர் தயாரிக்கப்பட்ட ஊழல் மற்றும் தவறான பாலியல் நடத்தை என்ற பல குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால், அன்வருக்கு எதிராக நடத்திய பிரச்சாரம், மகாதீருக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிட்டு, எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் ஆதாயங்களையே கொடுத்தது. 1999 தேர்தல்களில், இஸ்லாமிய அடிப்படைக் குழுவான Parti Islam se-Malaysia (PAS), UNMO வின், கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களில் இருந்த ஆதரவுத் தளத்தைத் தகர்த்தது. இதற்குப் பதிலிறுக்கும் முகமாக எதிர்க்கட்சியின் செயல்வீரர்கள் மீது, மகாதீர் குறிவைத்து, அவர்களில் பலரையும் ISA யின் கீழ், காலவரையற்ற, விசாரணையற்ற காவலில் தள்ளினார்.

பலவிதங்களில், அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்த, புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்", மகாதீருக்கு அரசியல் அளவில் பெரும் வரமாக அமைந்தது. தன்னுடைய அரசியல் விரோதிகளை. "சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள்" என்ற பெயரில் காவலில் வைத்ததை நியாயப்படுத்தவும், PAS பெயரையும் அவ்வாறே அதை முத்திரையிட்டு இழிவிற்கு உட்படுத்தவும் இது உதவியது. மேலும், மலேசிய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் பற்றிய வாஷிங்டனின் குறைகளும் அப்படியே நிறுத்தப்பட்டன; ஏனெனில், மலேசிய பாதுகாப்புச்சட்டங்கள், புஷ் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளோடு, ஒப்பிட்டுப்பார்க்கப்படுகையில் கடினமற்றதாகப் போய்விட்டன. ஆப்கானிஸ்தானின் மீதும் ஈராக்கின்மீதும் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புகளுக்கு, மகாதீர் உட்குறிப்பாக ஆதரவைத் தந்து, அமெரிக்க உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததினால், வெள்ளை மாளிகையால், உற்ற நண்பர் என்ற பாராட்டையும் பெற்றார்.

அதேநேரத்தில், மகாதீரும் UMNO வும், மத்தியகிழக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும், ஷெரோன் ஆட்சியின் நடவடிக்கைகளுக்கும் தளராது கொடுத்த ஆதரவு, அவர்களுக்கு, மக்கள் விரோதத்தின் எதிர்ப்பு வளர்ச்சியினால், மதிப்புக் குறைவிற்கு உட்படும் ஆபத்ததையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்தது. மேலும், ஆசிய நிதி நெருக்கடியினால், மலேசியாவின் பொருளாதாரம் வலுவுற்றாலும்கூட, பல மலேசியர்கள் பொருளாதாரக் கஷ்டங்களை இன்னும் படுகின்றனர் மற்றும் அப்பகுதி முழுவதும் தடையற்ற சந்தைமுறைக் கொள்கைகளை செயல்படுத்தக் கட்டாயப்படுத்தியதற்கு அமெரிக்காவையும் பன்னாட்டு நாணய நிதியத்தையும் குறை கூறுகின்றனர்.

இப்பொழுது, மகாதீர் குறிப்பிடத்தக்கவகையில் உணர்ச்சிமிகுந்துள்ளார் என்றால், அவர் முறையாக ஆட்சியைத் தன்னுடைய உதவியாளர் அப்துல்லா பதாவியிடம் ஒப்படைக்க உள்ளார். மகாதீருடைய எதேச்சாதிகார விளைவுகளுள் ஒன்று யாதெனில், இவருடைய ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல் அளித்து, தனித்த முறையில் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்களை அதிகாரநிலைகளிலிருந்து அகற்றி விட்டார். அன்வர் பதவிபறிப்பிற்குப் பின்னர், துணையாளாக நியமிக்கப்பட்ட பதாவி, வசீகரமில்லாத "ஆமாம் சாமி" போடும் மனிதர் ஆவார்; UMNO வை ஒன்றாக வைத்து, இப்பொழுது ஆட்சியை நடத்தும் பாரிசன் தேசியக் கூட்டணியையும் ஒன்றாக வைத்திருப்பாரா என்பது முற்றிலும் சோதிக்கப்படவில்லை.

முறையாக ஒய்வுபெற்றாலும், மகாதீரின் கடந்த இருவார இனவெறிச் சொல்லாடல், ஒரு மூத்த அரசியல் பெருமகன் எனும் பங்கைப் பெரிய அளவில், தான் ஆற்றவிருப்பதற்கு, அடையாளமாக உள்ளது. ஆயினும், அது, இன்னும் அடிப்படைரீதியாக, புஷ்ஷின் நிர்வாகம் "பயங்கரவாதம் மீதான போர்" மற்றும் இஸ்ரேலின் கொடுமைகளுக்குக் கொடுக்கும் தடையற்ற ஆதரவு போன்றவை, விசுவாசமுடைய அரசியல் நண்பர்களான மகாதீர் போன்றவர்கள் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குச் சமுதாய சக்திகளை கட்டவிழ்த்துவிட்டதன் அடையாளமாக இருக்கிறது.

Top of page