World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Why the US plans to bomb Iraq and not North Korea

வடகொரியாவை விடுத்து ஈராக்கை தகர்க்க அமெரிக்கா திட்டமிடுவது ஏன்?

By Peter Symonds
21 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதத் திட்டத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, கடந்த வாரம் அமெரிக்கா அளித்துள்ள பதிலின் மூலம் புஷ் நிர்வாகம் ஈராக் மீது தொடுக்கவிருக்கும் போர்த்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள முழுக்கபடத்தையும் அம்பலப்படுத்துகின்றது. வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கையை நாணயத்தின் நற்பகுதியாகக் கருதுவோமெனில், பியாங்யாங் (Pyongyang) ஐ "ராஜதந்திர நடவடிக்கை மூலம்" நிராயுதபாணியாக ஆக்கவும், அதேவேளை, அதே காரணத்திற்காக, பாக்தாத் மீது துல்லியமாய் இலக்கு நோக்கி போர் கருவிகளை செலுத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு நம்பத்தகுந்த விளக்கங்கள் இல்லை.

அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உள்பட மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை ஈராக் இரகசியமாக தயாரிக்கின்றது என்ற நிரூபணமற்ற செய்திகளின் அடிப்படையில், சதாம் ஹூசேன் இராணுவ ரீதியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் பல மாதங்களாக விவாதித்து வருகின்றனர். எவ்வித உறுதியான சான்றுகள் இல்லாதபோதும், எதிர்காலத்தில், ஈராக் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு "அழிவுகரமான ஆயுதங்களை" வழங்கக் கூடும் என்ற அடிப்படையில், புஷ் நிர்வாகம் தங்களது போர்த் திட்டத்தை நியாயப்படுத்துகின்றது.

அக்டோபர் 3-5 ம் தேதிகளில் அமெரிக்கா வடகொரியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பியாங்காங் தான் இரகசிய யுரேனிய வள மையம் கட்டுவதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த வாரம் வாஷிங்டன் அறிவித்துள்ளது. இச்செயல்திட்டம், 1994ல் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டை குலைப்பதாக அமைந்துள்ளது. அவ் உடன்பாட்டின்படி வடகொரியா அணு ஆயுத காரியத்திட்டத்தை முடித்துக்கொள்வதாகவும், எரிபொருள் எண்ணெய்க்கு பதிலாக தம்மிடம் உள்ள அணு உலைகளை செயலற்றதாக ஆக்கவும், ஆயுதத் தர பொருட்களை உருவாக்கப் பயன்படாத இரண்டு நவீன மென்ரக நீரணு உலைகளை கட்டுவிப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

``பயங்கரவாதத்திற்கு எதிரான போர்`` என்ற வாஷிங்டனின் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், ஆசியாவின் சதாம் ஹூசேனாக கிம் ஜோங் 11வை பெருப்பித்துக் காட்டலும், இராணுவ செயல்பாடுகளின் மூலம் வடகொரியாவை நிராயுதபாணியாக்குதலும் தான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பதிலாக இருக்கும். இங்கு, மொத்தத்தில், ஈராக் மற்றும் ஈரானுடன் சேர்த்து இந்நாடும் "ஊதாரி நாடுகளின்" ஒரு பகுதியாக முத்திரை குத்தப்பட்டது, பிளக்கும் பொருட்களைத் தயாரிப்பதற்கான செயல் திட்டம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பல சக்திவாய்ந்த பொருட்களும் அதன் வசம் இருப்பதாக அங்கே இருந்த ஒரு அமெரிக்க அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இருந்தும், வாஷிங்டனில் உள்ள பதிலானது குறைந்த தொனியில் முடிவெடுத்திருப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக புஷ் இன்னும் பகிரங்க அறிக்கை கொடுக்க வேண்டி இருக்கிறது. பியாங்யாங்கின் அணு ஆயுத திட்டத்தை கலைத்துவிட அழுத்தம் கொடுக்க இராணுவமல்லாத வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். சமரச பேச்சு வார்த்தையின் மூலம் "அமைதித் தீர்வை நாடவே" புஷ் விரும்புவதாக ஜனாதிபதி சார்பிலான பேச்சாளர் ஸ்கொட் மெக்கெலன் கூறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்காக அமெரிக்காவின் கதவுகள் திறந்திருக்கும் எனவும், இத்துடன் முடிவடைவதில்லை எனவும் அரசுத்துறை பேச்சாளர் ரிச்சார்ட் பெளச்சர் குறிப்பிட்டுள்ளார்." அது "நிறுத்துதற்கான காட்சி" அல்ல என்றார்

அக்டோபர் முதல் வாரத்தில் பியாங்யாங் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிக் குழுவிற்கு தலைமை வகித்த, கிழக்காசிய மற்றும் பசிபிக் விவகார உதவி செயலாளர் ஜேம்ஸ் கெல்லி, வடகொரியா மீது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அமுல்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவு திரட்ட பீக்கிங்கிற்கும் சியோலுக்கும் அனுப்பிவைக்கப்பட்டார். ஏற்கனவே பஞ்சத்தாலும், பொருளாதார சீர்கேடுகளாலும் வடகொரியா பரிதவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1994ஆம் ஆண்டின் உடன்பாட்டின் படி அவர்களுக்கு அளித்து வந்த எண்ணெய் ஏற்றுமதியையும் மற்றும் பல உதவிகளையும் ரத்து செய்யப்போவதாக புஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகொரியாவை தனிமைப்படுத்த ராஜதந்திர நடவடிக்கைகளை அறிவிக்கும் அதேவேளை, ஈராக் மீது போருக்கு தயார் செய்யும் வாஷிங்டனின் கபட நிலைப்பாடு, எந்த நாட்டிற்கு எதிராகவும், எந்த வகையிலும், அமெரிக்க வலுச்சண்டைக்குப் போதலை நியாயப்படுத்தற்கு காரணமில்லை என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது. ஈராக்கை போலவே வடகொரியாவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 20 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடு. தென் கொரியாவின் 37,000 துருப்புக்களையும் கொண்டிருக்கிறது. ஜப்பானில் பெரிய இராணுவத் தளத்தையும், வடகிழக்கு ஆசியாவில் அணு ஆயுத கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை ரோந்து பணியில் நிறுத்தி வைத்தும் இருக்கும் அமெரிக்காவை இராணுவ மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில் வடகொரியா இல்லை.

மாறாக அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டே பியாங்யாங் உள்ளதென்று நம்பும்படியாக அனைத்து செயல்களும் அமைந்துள்ளபடியால், தாக்கப்படும் சாத்தியத்திற்கு எதிராக அது தன்னை காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் நியாயத்தைக் கொண்டிருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் முக்கிய பிரமுகர்களாகிய அரசு துணை செயலாளர் ரிச்சார்ட் அர்மிட்டேஜூம், 1990கள் முழுவதும் அதன்பால் மென்மையான அணுமுறையைக் காட்டிய, முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனும், பியாங்யாங் ஆட்சி தனிமைப்படுத்தப்பட்டு கீழிறக்கப்பட வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர். புஷ், அலுவலக பொறுப்புகளை ஏற்றவுடன், அமெரிக்க கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய கட்டளையிட்டு, வடகொரியா மீதான அழுத்தங்களை அதிகப்படுத்தினார்.

ஈராக் மற்றும் வடகொரியா மீதான அமெரிக்காவின் பகிரங்கமான முரண்பாடுகளால் புஷ் நிர்வாகம் தங்களது மனப்பாங்கை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு அசாதாரனமான திரித்துப் புரட்டல்களை கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ இன் மதிப்பீட்டை ஆதாரமாகக் கொண்டு ``வடகொரியாவிடம் ஒன்று அல்லது இரண்டு அணு ஆயுதங்கள் உள்ளது`` அதேபோல அதனிடம் ஆயுத திட்டங்கள் இருக்கின்றன என நம்புவதாக பாதுகாப்பு செயலாளர் ரொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் கூறியுள்ளார். அதேசமயம் இதுவரை அணு ஆயுத திறன் இருப்பதாக எவ்வகையிலும் நிரூபிக்கப்படாத போதிலும், அமெரிக்காவிற்கு அது மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகத் தொடர்ந்திருப்பதாகக் கூறினார். மேலும் அவர், அதனை வேறுபடுத்தும் விதத்தில் ஈராக்கிடம் சில சிறப்பியல்புகள் உள்ளதாகவும் மற்றும் அது அவர்கள் செய்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலின் காரணமாக.... தன்னை சிறப்புக் கவனம் கொள்ளும்படி ஈர்ப்பதாகவும்" கூறினார். ஆனால் அச்சிறப்பியல்புகள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

நியூ யோர்க் டைம்ஸின் கூற்றுப்படி, மற்ற நிர்வாக அதிகாரிகளின் வாதம் இதற்கு நேர்மாறாக உள்ளது. ஏனெனில் ஈராக் குறைந்த இராணுவ அச்சுறுத்தலை முன்வைப்பதால் அந்நாடு தாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இப்பத்திரிகை அறிவித்தவாறு: ``இப்பிரச்சினைக்கு பதிலை தீர்மானிப்பதில், ஈராக்கிடமிருந்து வடகொரியா எவ்வாறு வேறுபடுகின்றது என்ற யதார்த்தத்தை வெள்ளை மாளிகை உணர்கிறது. அதனிடம் ஏற்கனவே அணு ஆயுதங்கள் இருக்கலாம் மற்றும் தென்கொரியாவிற்கு பேரழிவை உண்டாகும் அளவிற்கு அதனிடம் ஏற்கனவே நவீன ஆயுதங்களும், பெரிய படையும் இருக்கின்றது."

இதை ஒத்த அடிப்படைக் காரணங்கள் அரசு துணை செயலாளர் ரிச்சார்ட் அர்மிட்டேஜால் வழங்கப்பட்டது. "தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் வடகொரியாவில் இருக்கிறது மற்றம் எமது நலன்களை ஆபத்தில் வைத்துள்ளது மற்றும் எங்களது இரு முக்கிய நேச நாடுகளுக்கும் அபாயகரமான நிலையை உருவாகியுள்ளது. அது ஈராக்கில் எங்களது விஷயத்தை மிகவும் உறுதியானதாய் ஆக்கும்." வேறு வார்த்தைகளில் சொன்னால், அர்மிட்டேஜ் கூற்று நம்பப்பட வேண்டுமானால் அமெரிக்காவானது அதன் நலன்களுக்கு உடனடி அச்சுறுத்தல் என கருதுவதை அலட்சியம் செய்யவும் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடிய நாடு என கருதப்படுவதைத் தாக்குவதற்கும் நோக்கம் கொண்டுள்ளது.

வெளிப்படையான வேறுபாடு - எண்ணெய்

தன்னிடம் இரகசிய அணு ஆயுதத்திட்டம் உள்ளதாக பாக்தாத் கூறி இருந்தால் வாஷிங்டனின் பதில் என்னவாக இருக்குமென்பதை ஒருவர் எண்ணிப்பார்த்தால், இந்த அனைத்து வாதங்களின் அபத்தமும் தெளிவாகத் தெரியும். இதற்கான பதில் வெளிப்படையானது. போர் நடவடிக்கைக்காக ஏதாவது ஒரு சாக்குப்போக்கை விரக்தியுடன் தேடிக் கொண்டிருக்கும் புஷ் நிர்வாகம், தனது திட்டங்களை முன்னெடுக்க அதனை அக்கறையாக உடனடியாகப் பற்றிக் கொள்ளும்.

இந்த இரு நாடுகளையும் வேறுபடுத்தக்கூடிய ஒரு தெளிவான அம்சத்தைப் பற்றி புஷ் நிர்வாகத்தாலோ, அமெரிக்க செய்தி நிறுவனத்தாலோ பகிரங்கமாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. வாஷிங்டனின் முதன்மை திட்டமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் சக்தி வளங்களின் மீது அதிகாரம் செலுத்தும் திட்டத்திற்கு, சிறிதளவே மூலோபாய இயற்கை வளங்களைப் பெற்றுள்ள வடகொரியாவைப் போல அல்லாமல், ஈராக்கானது, உலகில் நிரூபிக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய் சேர்ம இருப்புக்களைக் கொண்டுள்ளமை, ஈராக்கை வாஷிங்டனின் முன்னுரிமைக்குரிய முக்கியத்துவமுள்ள அம்சமாக ஆக்கியுள்ளது.

வடகொரியாவின் அணுஆயுத திட்டத்தை பல மாதங்கள் தன்னுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக ஒத்துப்போவதற்காக அடக்கி வைத்திருக்கும் உண்மையானது, புஷ் நிர்வாகத்தின் குற்றம் கண்டுபிடிக்கும் மனோநிலையை மேலும் கோடிட்டுக் காட்டுகிறது. பியாங்யாங்கில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு சில வாரங்களுக்கு முன்பாக, செப்டம்பர் 12ஆம் தேதி, ஈராக்கின் "பேரழிவிற்கான ஆயுதத்தால்" முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அந்நாட்டின் மீது போர் தொடுப்பதை ஆராயாது ஏற்கவேண்டி, புஷ் ஐ.நா பொது சபையில் ஆஜரானார். மேலும் பாக்தாத்திற்கு எதிரான தனது போர்த்திட்டத்தை கீழறுத்துவிடும் என்ற எண்ணத்தில் வடகொரியாவின் ஒப்புதலைப் பற்றி இரு வாரங்கள் ஆகியும் வாஷிங்டன் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லை. குறிப்பாக போருக்கான காங்கிரசின் அனுமதியைப் பெறுவதற்காக ஜனநாயகக் கட்சிக் காரர்களிடம் மறைத்துள்ளது.

அணு ஆயுத திட்டத்தை ஒப்புக்கொள்வதற்கான வடகொரியாவின் முடிவின் மீது மாக்கியவெல்லியன் (Machiavellian) உள்ளெண்ணத்தை காட்டியதற்கு சர்வதேச பத்திரிகைகள் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை ஒதுக்கியுள்ளன. உலக சோசலிச வலைத் தளமானது, சோசலிசத்திற்கு சம்பந்தமில்லாத தேசியவாத வல்லாட்சியைக் கொண்ட, கிம் ஜோங் 11-ன் ஸ்ராலினிச ஒடுக்குமுறை ஆட்சிக்கு எந்த அரசியல் ஆதரவையும் கொடுக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக, அமெரிக்காவையும் மற்ற பல முக்கிய சக்திகளையும் திருப்திப்படுத்துவதற்கு வளைந்து கொடுக்கும் விதத்தில், வடகொரியா தன் நாட்டை மலிவான கூலி உழைப்புக்கு ஒரு மூல வளமாகவும், வாஷிங்டனில் இருந்து வரும் பல கட்டளைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஒத்துக்கொண்டும் வந்துள்ளது. அதே சமயம், அதன் சொந்த ஒப்பந்தங்களை மீறி, ஆயுத தளவாடத்திட்டங்களை மேற்கொண்டிருந்ததாக தற்போது தோன்றுகிறது.

இதனால், வடகொரியாவின் சமீபத்திய பிரகடனத்திற்கான காரணங்களை ஆழ்ந்து அறிவது ஒன்றும் கடினம் அல்ல. சாதாரணமாகக் கூறினால், பியாங்யாங்கை வாஷிங்டன் ஒரு மூலைக்கு தள்ளியுள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை மீறிய யுரேனிய வளத்திட்டங்களை பெற்றிருப்பதாக அமெரிக்கா ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியபோது, வடகொரியாவிடம் சில தேர்வுகள்தான் இருந்தன. அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்கான அதன் முயற்சிகள் பலனற்று போயின. ஈராக்கை போலவே, இன்னும் தீர்வு காணப்பெறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், மேலும் பல புதிய கோரிக்கைகளுக்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் உளவு தகவலுக்கு எதிராக வரும்போது, திட்டத்தை ஒப்புக்கொண்டு, அதை ஏன் பேரம்பேசுதற்கு ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தக்கூடாது?

அமெரிக்க அதிகாரிகளின் விமர்சன அறிக்கையில் கூட வடகொரிய அதிகாரத்துவ ஆட்சியின் எரிச்சல் உண்டாக்கும் போக்கு தெளிவாகத் தெரிகிறது. ஒரு அமெரிக்க தகவலின்படி, பியாங்யாங்கின் தலைமை பேச்சு வார்த்தையாளர் -துணை வெளிநாட்டு அமைச்சர் கேங் சோக் ஜூ- ஒரு சமயம் ``உங்கள் ஜனாதிபதி எங்களை தீய சக்திகளின் ஒரு அங்கத்தினராக குறிப்பிட்டுள்ளார்... உங்கள் படை வடகொரிய தீபகற்பத்தில் நிறுத்தப்பட்டுள்ளது... ஆமாம், எங்களிடம் அணு ஆயுத திட்டம் உள்ளது`` என பிரகடனப்படுத்தினார். அக்கூட்டத்தை தொடர்ந்து, வாஷிங்டனின் மனோ நிலையை, வடகொரியா "பலாத்காரமான முறையில் கட்டாயப்படுத்தி அதன் காலடியில் மண்டியிட வைக்கும் மற்றும் அடக்குமுறை நடைமுறைகளை" நாடும் "குரோதமான கடும் கோட்பாட்டு நிலை" என விவரித்தது.

இறுதி ஆய்வில், குறைந்த பட்சம் ஆரம்பத்திலாவது, பியாங்யாங்கிற்கு இராஜதந்திர அணுகுமுறையை ஏற்கும் வாஷிங்டனின் முடிவு, தந்திரோபாய கருதிப்பார்த்தல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது மற்றும் அது வேகமாக மாறக்கூடியது. வடகொரியாவிடம் எண்ணெயோ, மிகுதியான இயற்கை வளங்களோ இல்லாதபோதிலும், அமெரிக்கா தனது செல்வாக்கை உறுதிப்படுத்த நினைக்கும் வடகிழக்கு ஆசியாவில், முக்கிய மூலோபாய இடத்தில் வடகொரியா அமைந்துள்ளது. ஈராக்கை போலவே பியாங்யாங் தொடர்பான வாஷிங்டனின் முன்னுரிமைகள், அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ மற்றும் பொருளாதார நலன்களை மேலும் முன்னெடுப்பதில் கட்டுண்டிருக்கும்.

அமெரிக்க ஆளும் தட்டின் பகுதிகள், வடகொரியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஏற்கனவே வற்புறுத்தி வருகின்றன. போருக்கு அழைப்பு விடுவதை நிறுத்தும் அதேவேளை, ேவால் ஸ்ட்ரீட் பத்திரிகை யானது, புஷ் நிர்வாகத்திடம், வெளிநாட்டு ஆதரவைத் துண்டிக்கும், அந்நாட்டை தனிமைப்படுத்தும் மற்றும் அதன் வீழ்ச்சிக்கு சதி செய்யும் சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

``முடிவாக, வடகொரியா போன்ற ஆட்சிகள் தொடர்பான அணு ஆயுதத் தடைக் கொள்கையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தை மாற்றுவதுதான் ஒரே உத்திரவாதம். நாங்கள் ஒரு தசாப்தமாக தணிப்பதற்கு முயற்சித்தோம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்தும் சர்வாதிகாரிக்கு அணுகுண்டுகளை செய்ய மேலும் அதிக நேரத்தையே உருவாக்கிக் கொடுத்துள்ளன. "தீவிர ஆலோசனைக்கான தக்க சந்தர்ப்பம் இதுவே" என அப்பத்திரிகை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் பியாங்யாங்கில் ஆட்சிமுறை மாற்றத்தைக் கொண்டு வர பொருளாதார அழுத்தம் தவறுமேயானால் பின்னர், ஈராக்கைப் போலவே, இராணுவ வழிமுறைகள் பயன்படுத்தப்படுவதே ஒரு வெளிப்படையான முடிவாக இருக்கும்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

Top of page