World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the 2004 US elections: the Socialist Equality Party and the struggle for the political independence of the working class

2004 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின்னர் : சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமும்

பகுதி 1 | பகுதி 2

By Barry Grey
14 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் குழு, மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் கடந்த 8-9 ஜனவரி வார இறுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 2004 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின்னரான அரசியல் நிலைமை பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான பாரி கிரே அளித்த அறிக்கையின் முதல் பகுதியைக் கீழே வெளியிடுகிறோம்.

இம்மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் அளித்த ஆரம்ப அறிக்கைகள் மூன்று பகுதிகளாக ஜனவரி 15, 18, 23 ம் தேதிகளில் தமிழில் வெளிவந்தன.

2004 தேர்தல்களில் இருந்து வெளிவந்துள்ள அமெரிக்கா, ஆழ்ந்த நெருக்கடியைக் கொண்டுள்ளதோடு வர்க்க, புவியியல், கருத்தியல் ரீதியில் பெரிதும் பிளவுற்று விளங்கும் சமுதாயமாக உள்ளது. மிகக் குறைந்த வித்தியாசத்தில் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை, ஈராக்கிய போருக்கு மக்களுடைய எதிர்ப்பு குறைவதையோ அல்லது அவருடைய சமூகப் பிற்போக்குக் கொள்கைகளுக்கும், சர்வாதிகார முறைக்கும் எதிர்ப்புக் குறைவதையோ எந்த வகையிலும் குறிக்கவில்லை.

மக்களிடையே இருந்த குழப்பம், நோக்குநிலைதவறல் இவை புஷ்ஷின் ஆதரவாளர்களால் இரண்டாம் பதவிகாலத்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டபோதிலும், பின்னர் இந்த மாதம் அதிகாரபூர்வமாக பதவியில் இருத்தப்படுவதற்கு முன்பே நிர்வாகம் சிதறி நிற்கும் தன்மையையும் குழப்பத்தையும் கொண்டுள்ளது. ஈராக்கில் மோசமடைந்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்கின்றது; டாலர் நெருக்கடி பெருகி வளர்ந்துள்ள தன்மை வரலாற்றளவில் ஒரு பெரும் சர்வதேச நெருக்கடியாக பெருகிவிடுமோ என்ற அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது.

புஷ்ஷின் தேர்தல் வெற்றி அவருடைய கொள்கைகளுக்கு பெரும் ஆதரவு என்று எடுத்துக் கொள்ளப்பட முடியாது. மொத்த மக்கள் வாக்குகளில் 3 சதவீதப் புள்ளிகளில் (பதிவான மொத்த 117,000,000 வாக்குகளில் 3,337,000 அதிகம் என்ற முறையில்) தான் அவர் வெற்றி கண்டார். இது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி மறு தேர்தலில் நிற்கும்போது மிகக் குறுகிய எண்ணிக்கை வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். 1996 தேர்தலில் பில் கிளின்டன்கூட பொப் டோலை, கிட்டத்தட்ட 7 சதவீதப் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2004 தேர்தல் வரைபடம் நாடு புவியியல் மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் அப்பட்டமாக பிரிந்துள்ளது என்பதை நன்கு காட்டுகின்றது. சிகப்பு நிற மாநிலங்கள் நாட்டின் உட்பகுதியில், வட கிழக்கில் நீல மாநிலங்களால் சூழப்பட்டுள்ளன; பெரிய ஏரிகள் பகுதி மற்றும் கடற்கரையோரங்கள் 2000 தேர்தல்கள் போலவே மீண்டும் முடிவுகளை கொடுத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நாட்டு அரசியலில் ஏற்பட்டிருந்த பிளவுகள் தற்செயலோ, மறைந்துவிடக் கூடியவையோ என்றில்லாமல் மிகவும் ஆழமாகப் போய்க்கொண்டிருப்பவை என்பதை இது காட்டுகிறது.

சமூகப் பதட்டங்கள் மிக அதிக சக்திவாய்ந்த வகையில் மத்தில் இருந்து பரவிச்செல்லும் அழுத்தங்களை நாட்டின் மீது செலுத்துகின்றன. 2000ம் ஆண்டு தேர்தலைப்போலவே, மிகவும் நகர்ப்புறமயமாக்கப்பட்ட, தொழில் மயமாக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக மற்றும், கலாச்சாரரீதியாக வளர்ச்சியுற்ற பகுதிகள் ஜனநாயக வேட்பாளருக்கு ஆதரவைக் கொடுத்தன; அதேவேளை குடியரசுக் கட்சி, பொருளாதார, பண்பாட்டு பிற்போக்கு, வறுமை, கிராமப்புற தனிமைப்படல் போன்றவை திண்ணமாக இருக்கும் தெற்கிலும், மத்திய மேற்குப் பகுதி மற்றும் சமதரைப்பகுதிகளிலும் ஆதரவை வென்றுள்ளது.

மொத்தத்தில் அதிகளவு குடிமக்கள் வாக்களிக்க சென்றமை வழமையான அமெரிக்கத் தரத்தை விட மிக அதிகம்தான்; பல நகரங்களிலும் இளம் வயதினர் அதிக அளவில், பலரும் முதல் முறையாக, வாக்குகளை அளித்தமை குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது; இதைத்தவிர சிறுபான்மையினரும், தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு வாக்களித்தனர். ஆனால் கூடுதலான முறையில் வாக்குகள் பதிவானது ஒருவிதத்தில் கூடுதலான குடியரசுக் கட்சிக்கான வாக்குகள் என்று ஆயிற்று. இந்த ஆதாயம் அக்கட்சிக்கு கிராமப் புறத்தில் இருந்தும் நகரத்தில் இருந்தும் தொலைவிலேயே இருக்கும் புறநகர்ப்பகுதிகளில் இருந்தும் கிடைத்தது; இவ்விடங்களில் குடியரசுக் கட்சி மத அடிப்படைவாதத்திற்கும், அதை ஒட்டிய தப்பெண்ணங்களான ஓரினச் சேர்க்கை, வெளிநாட்டினர், கறுப்பர்கள் ஆகியோரை எதிர்த்த உள்ளுணர்வுகளுக்கும் விடுத்த அழைப்பு தன்னுடைய முக்கிய தாக்கத்தை தெளிவாகக் கொண்டிருந்தது.

தேர்தல் வரைபடத்தை மொத்தமாக ஆராய்ந்தால், இரு பெரிய கட்சிகளில் எதையும் உண்மையில் ஒரு தேசியக் கட்சி எனக் கூறமுடியாத தன்மையில் அரசியல்ரீதியாக பிளவுற்றிருக்கும் ஒரு நாட்டை ஒருவர் காணலாம்.

தன்னுடைய வாக்குகள் சேகரிக்கும் முறையில் அச்சத்தை தூண்டுதல், அரசியல் சேற்றினை அடித்தல், குணநலன்களை இழிவுபடுத்துதல், பொய்கள் கூறல் போன்ற வகைகளை செயல்படும் வழிவகையாக புஷ் பிரச்சாரம் பயன்படுத்தியது. அரசியல் கோழைத்தனமும், ஊசலாடும் தன்மையும் பிரச்சார திறமையின்மையையும் மிஞ்சியிருந்த, ஓர் அரசியல் எதிர்ப்பாளரைத்தான் இக்கட்சி எதிர்கொண்டது. ஆயினும்கூட, குடியரசுக் கட்சியின் வலதுசாரித் தன்மை 2000இல் கோருக்கு ஆதரவளித்திருந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மத அடிப்படைவாதத்தை தூண்டும் வகையிலும், பிரிக்கும் பிரச்சினைகள் என்றழைக்கப்படும் கருக் கலைப்பு, ஓரினத் திருமணம், மரபணு ஆராய்ச்சி (Stem Cell), பள்ளிப் பிரார்த்தனைகள், துப்பாக்கி வைத்திருக்க அனுமதி போன்றவற்றில் குடியரசுக் கட்சியினர் எந்த அளவிற்கு தேர்தல் நல்வாய்ப்புக்களை அடைய முடியுமோ அதை முழுமையாகக் கொண்டுவிட்டனர் என்று இது தெரிவிக்கிறது.

முதலாளித்துவ இருகட்சி முறை உறுதிப்பாட்டுக் கண்ணோட்டத்தின்படி, இதையும் விட முக்கியம் வாய்ந்தது என்னவென்றால், புனிதப்போர் கொள்கையின் கிறிஸ்தவ மாதிரி போன்ற நற்செய்தி கூறுதலை ஏற்றுள்ளதின் நீண்டகால உட்குறிப்புக்கள் ஆகும். இந்த துருப்புச்சீட்டை பயன்படுத்துவதால், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு தன்னுடைய முழு அரசியலமைப்பு ஒழுங்கின் மதசார்பற்ற தளங்களை இல்லாதொழித்து வருகின்றது. தன்னுடைய போர் மற்றும், சமூக பிற்போக்குக் கொள்கைக்கும் ஒரு சமுதாய தளம் அமைக்க முற்படுகையில், நாட்டின் அரசியல் தோற்றம் முழுவதிலும் வெடிப்புத் தன்மையுடைய செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கின்றது.

முற்றிலும் உறுதியற்ற, ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இராத, அரசியல் நிலைமையானது, ஒரு வாக்காளர் தொகுப்பு நடுவில் அடிப்படைரீதியாக பிளவுற்றிருப்பினும், அரசின் அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்களும் ஆளும் செல்வந்தத்தட்டின் மிக வலதுசாரிப் பிரிவினரிடம் உள்ளது என்ற உண்மையால் பெருகியுள்ளது. தேர்தலுக்குப் பின் குடியரசுக் கட்சியினர் அதிகாரப் பிரிவை கட்டுப்படுத்துவதோடன்றி, கூடுதலான முறையில் தேசிய சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளிலும் நீதித் துறையிலும் கடுமையான பிடியைக் கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையை ஆராயும்போது, மீண்டும் (நெப்ராஸ்காவின் செனட்டரினுடையது அல்லாது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ஜேர்மன் தத்துவஞானியான) ஹெகலுடைய ஆழ்ந்த கருத்தான பகுத்தறிவுபூர்வமானது அனைத்தும் உண்மை, உண்மையானது அனைத்தும் பகுத்தறிவுக்குகந்தது என்பதை மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒருவர் மன்னிக்கப்படவேண்டும்; இந்தத் தலைசிறந்த கருத்தின் அற்புதமான விரிவான விளக்கம் ஏங்கல்சால் அதன் புரட்சிகர உட்குறிப்புக்களுக்காக விளக்கப்பட்டது. பகுத்தறிவுபூர்வமானது உண்மைதான் என்றால், அது புறநிலைப்போக்கில் பகுத்தறிவுவற்றதாக வரவேண்டும், அதாவது உண்மையற்றதாகவேண்டும். இன்றைய அமெரிக்க அரசியல் முறை முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கிறது என்றால், அது தன் உண்மைநிலையை இழந்திருக்கும்; அதாவது அதைக் கவிழ்ப்பதற்கு காலம் கனிந்து விட்டது என்று பொருளாகும்.

தேர்தலுக்கு பின் நடந்துள்ள நிகழ்வுகள் அமெரிக்க அரசியலின் மிக உறுதியற்ற தன்மையைத்தான் உறுதிப்படுத்துகின்றன. தேர்தல் முடிவுகளின் பெரும்பாலான முரண்பட்டதன்மைகளை அவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; பல மக்களுக்கும் இது விளக்கமுடியாத நிலையில்தான் இருக்கிறது.

நவம்பர் 2ம் தேதி வாக்களிப்பிற்குப் பின் சில நாட்கள், வாரங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களின்படி, பெரும்பாலான அமெரிக்கர்கள் புஷ் தேர்தலில் அடிப்படையாகக் கொண்டு நின்ற கொள்கைகளை எதிர்க்கின்றனர் என்பதைக் காட்டியுள்ளன. ஒரு வாஷிங்டன் போஸ்ட்--ஏபிசி நியூஸ் கருத்துக் கணிப்பு, டிசம்பர் 21 அன்று பதிவுசெய்தது, முதல் தடவையாக ஒரு உறுதியான பெரும்பான்மைக் கருத்து (56 சதவீதம்) ஈராக்கியப் போர் ஒரு தவறு எனக் கருதியதாக தெரிவிக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின்படி, ஈராக்கில் புஷ் நடந்து கொண்ட விதத்தை 57 சதவீதத்தினர் ஏற்கவில்லை என்றும், இந்த கருத்தை கூறிய சதவீதம் செப்டம்பர் கருத்தை விட 7 புள்ளிகள் அதிகம் என்று உள்ளது. பயங்கரவாதத்தின் மீதான போரை பொறுத்தவரையில் புஷ்ஷின் தலைமையை 53 சதவிகிதத்தினர்தான் ஏற்றுள்ளனர்; இது ஓராண்டிற்கு முன்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்த எண்ணிக்கையை விட 17 சதவிகிதம் குறைவாகும்.

ஏனைய கருத்துக் கணிப்புக்களும் புஷ்ஷின் திட்டங்களான சமூக பாதுகாப்பை பகுதியளவு தனியார்மயமாக்கல், வரி விதிப்பு முறை "சீர்திருத்தம்" ஆகியவற்றை உறுதியான பெரும்பான்மை எதிர்க்கிறது என்பதைக் காட்டுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி நியூஸ், பொது கருத்துக் கணிப்பு மையம், டைம் இதழ் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மொத்தத்தில் புஷ்ஷிற்கான ஆதரவு என்பது 48 அல்லது 49 சதவீதமாகக் கொள்ளப்பட்டது. இது இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மறுபடியும் தேர்தலுக்கு நிற்கும் ஜனாதிபதி ஒவ்வொருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளுவதற்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதரவில் 10ல் இருந்து 20 புள்ளிகள் குறைவாகும்.

குடியரசுக் கட்சி உட்பட, அரசியல் நடைமுறைக்குள்ளும், அரசாங்க இயந்திரத்திற்குள்ளும், கடும் பிளவுகள் இருப்பதற்கான அடையாளங்களை காண்கின்றோம். தேர்தல் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே, முன்னணி குடியரசுக் கட்சித் தலைவர்கள் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

12 ஓய்வு பெற்ற உயர் இராணுவ அதிகாரிகள், ஆல்பேர்டோ கொன்சலேசை தலைமை அரசாங்க வழக்குரைஞராக புஷ் நியமித்துள்ளதை எதிர்த்து, ஒரு பொதுக் கடிதத்தை வெளியிட்டுள்ள அசாதாரணமான காட்சியை சமீபத்திய நாட்கள் கண்டன. ஒரு முன்னாள் முப்படைத் தலைவர் உள்பட, இந்த இராணுவ உயரதிகாரிகள் குழு, சித்திரவதைக்கு உத்திரவிட்டும், ஜெனிவா மரபுகளுக்கும் எதிராக செயல்படுவதற்கு அனுமதி தந்தும் நடந்துள்ள செயற்பாட்டில், ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்த இந்த நபரை, புஷ்ஷின் வெள்ளை மாளிகையில் ஆலோசகராக இருக்கும் இவரை, நாட்டின் சட்டச் செயல்பாட்டினை செலுத்தும் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் நிலைக்கு உயர்த்துதலானது, உலகெங்கிலும் இருக்கும் அமெரிக்க படையினரின் நிலையை அபாயத்திற்குள்ளாக்கும் என்றும், வாஷிங்டன் பேசிவரும் சுதந்திரம், மனித உரிமைகள் இவை ஏளனத்திற்குரியதாகிவிடும் என்றும் கூறியுள்ளது.

தரைப்படைகளின் தலைவருக்கு, அமெரிக்க நெருக்கடிகால இராணுவப் படையின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஜேம்ஸ் ஹெம்லி எழுதியுள்ள குறிப்பு ஒன்றும் வந்துள்ளது. Baltimore Sun பத்திரிக்கைக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டுள்ள இந்த வியத்தகு ஆவணம், பென்டகனுடைய கொள்கைகளினால் நெருக்கடிகால இராணுவம் "ஒரு சிதைந்த படையாகிவிடும்" ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்த நெருக்கடிகால இராணுவம் "ஈராக், ஆப்கானிஸ்தான் இவற்றோடு தொடர்புடைய தேவைகளின் பணிகளை செய்ய இயலாத தன்மையில் உள்ளது" என்று ஹெம்லி எழுதியுள்ளார்.

Stratfor என்னும் இராணுவ, உளவுத்துறை அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்புகளையுடைய வலைத்தளம், இந்தக் குறிப்பு கசிவடைந்தது "தன்னுடைய பணிகளை செய்யமுடியாத நிலையில் இராணுவம் உள்ளது" என்பதைக்கூறும் "மூத்த படைத்தலைவர்களது ஒரு பெரும் கிளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

இதன்பின், புஷ்ஷின் இரண்டாம் நிர்வாகத்திற்காக அமைக்கப்படும் மந்திரி சபை பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது. இது மிகப் பெரிய அளவில் புஷ்ஷிடம் சொந்த விசுவாசத்தைக் கொண்டுள்ள முக்கியத்துவமற்றவர்களின் பெரும் தொகுப்பாகத்தான் இருக்கிறது. டொம் ரிட்ஜிற்குப் பதிலாக, பேர்னி கெரிக்கை உள்நாட்டுப்பாதுகாப்புச் செயலர் பதவிக்கு நியமனம் செய்துள்ளது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வை உயர்த்திக் காட்டியுள்ளது: பொது மக்களிடையேயோ, வணிகத் துறையிலோ, கல்வியுலகத்திலேயோ, சுதந்திரமான ஆதரவுத் தளத்தை பெற்றிராத முக்கிய மந்திரி சபை உறுப்பினர்கள் வந்துள்ளதுதான் அது. வெளிப்படையாகவே தெரிந்துள்ள குறைந்த திறமைகளிருந்தபோதிலும்கூட, ரிட்ஜ் பென்சில்வேனியாவின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கொலின் பெளல் நன்கறியப்பட்டுள்ள பிரமுகர். ஜோன் ஆஷ்கிராப்ட் மிசூரி கவர்னராக இருந்தவர். இவர்களுக்குப் பதிலாக அத்தகைய அரசியல் வாழ்வை கொண்டிராத கொண்டலீசா ரைஸ் மற்றும் ஆல்பேர்டோ கொன்சலேஸ், போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் மந்திரிசபைகள் குறிப்பிட்ட புவியியல், சமுதாய வாக்காளர் தொகுதிகளை பிரதிபலிக்கும் வகையில் கவனத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. புஷ் தனக்கு விசுவாசமுடையவர்களை கூட்டாகச் சேர்த்து மந்திரிசபை அமைப்பது என்பது அரசாங்கத்தின் உண்மையான சமூக தளத்தை இன்னும் குறுகியதாக்குவதைத்தான் பிரதிபலிக்கிறது; இது அமெரிக்க அரசியலின் இன்னும் கூடுதலான வகையில் குறுகிய எண்ணம்கொண்ட, சதித்தன்மை கொண்ட, செல்வந்தத்தட்டினரை கொண்ட, ஜனநாயகமற்ற தன்மையைக் காட்டும் வகையில் உள்ளது.

புஷ் மற்றும் முழு அரசாங்கமும் சுனாமிப் பேரழிவிற்கு ஆரம்பத்தில் காட்டிய செயற்பாடு அரசியல் திசைவிலகலின் மேலும் கூடிய வெளிப்பாடாகத்தான் அமைந்திருக்கிறது; இந்த ஆட்சியின் வேர்கள் ஆணித்தரமாக ஒரு நிதி ஆதிக்க குழுவிடம் வேரூன்றியுள்ள நிலையினால், அது வறியவர்கள் மற்றும் அடிமட்டத்திலுள்ளோர் மீதான தக்க மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கூட அது கஷ்டப்படுகிறது.

புஷ் ஏன் வென்றார்

இத்தகைய அபிவிருத்திகள், புஷ்ஷின் வெற்றியின் தோற்றத்தில் இருக்கும் ஒழுங்கின்மையை அதிகப்படுத்தித்தான் காட்டுகின்றன. மோசடியினாலும், சட்டவிரோதத்தினாலும் பதவியில் இருத்தப்பட்ட ஒரு நிர்வாகம், துணை ஜனாதிபதி உட்பட, ஜனாதிபதியின் மிக நெருங்கிய நிதிய ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ள, பெருவணிக நிறுவன மோசடிச் சகதியில் ஆழ்ந்திருக்கும் நிர்வாகம், சொல்லப்போனால் குற்றஞ்சார்ந்த தீயசெயல்களை செய்யும், மற்றும் அரசாங்கத்தின் தீயதுணையுடனேயே நடத்தப்பட்ட, நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பேரழிவை தந்திருந்த பயங்கரவாதத் தாக்குதல் காலத்தில் ஆட்சியில் இருந்த நிர்வாகம், ஒரேயடியான பொய்களின் அடிப்படையில் சட்டவிரோதமாக, பெருகிய முறையில் மக்களுடைய ஆதரவைக் கொண்டிராத போர்களை தொடக்கியதற்கு பொறுப்புக் கொண்டுள்ள நிர்வாகம், குடியுரிமைகள் மற்றும் அரசியல் விதிமுறைகள் மீது முன்என்றுமிராத வகையில் தாக்குதல்களை நடத்தி வரும் நிர்வாகம், ஈராக்கிய மற்றும் வெளிநாட்டு கைதிகளிடம் சித்திரவதை நடத்தியுள்ளமை அம்பலமாக்கப்பட்டுள்ள நிர்வாகம், வேலையின்மை, வறுமை, வீடின்மை, காப்பூதியத்திற்கு வழியில்லாதவர் எண்ணிக்கை பெருகிய நிலை இவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நிர்வாகம், இன்னும் கூடுதலான வகையில் செல்வந்தத்தட்டுகளுக்கு மேலும் பணக்குவிப்பு கொடுப்பதையே குறியாகக் கொண்டுள்ள கொள்கைகளை பின்பற்றி வரும் நிர்வாகம், இரண்டாம் தடவையாக வென்றது மட்டுமல்ல, தன்னுடைய கட்சியின் பெரும்பான்மையை பிரதிநிதிகள் மன்றம், செனட் மன்றம் இரண்டிலும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இதற்கான விளக்கம் புஷ்ஷிற்கும் அவருடைய கொள்கைகளுக்கும் மடைதிறந்தாற் போல் ஆதரவு பெருகி வந்துவிட்டது என்பதல்ல; மாறாக ஜனநாயகக் கட்சியின் மாபெரும் தோல்வி ஆகும். செயலற்று நின்றிருந்த கெர்ரியின் பிரச்சாரம் குடியரசுக் கட்சியின் வலதுசாரி பிரிவின் கொள்கைகளுக்கு தீவிரமான மாற்று எதையும் கொடுக்க இயலவில்லை; ஏனெனில் அடிப்படை பிரச்சினைகளில் அந்தக் கொள்கைகளுடன், கொள்கை அடிப்படையிலான கருத்து வேறுபாடுகளை இக்கட்சி கொண்டிருக்கவில்லை. ஜனநாயகக் கட்சியின் மிகப் பெரிய அக்கறை, தேர்தல் பிரச்சாரம் புஷ் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஒரு குவிமையப்புள்ளியாக்கும் அல்லது ஆதரிக்கும் ஈராக்கியப் போரின்மீதான வாக்கெடுப்பாக மாறிவிடக்கூடாது என்பதாக இருந்தது.

இந்த விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினர் ஏனைய அரசியல் அமைப்புகளுடன் ஒத்த கருத்தைத்தான் கொண்டிருந்தனர். இது, வெளியுறவுகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட, மோதலுக்குப் பிந்தைய ஈராக்கில் என்ன செய்யவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட இருகட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட சுதந்திரமான பணிக்குழுவால் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டிருந்த ஆவணத்தில் வெளிப்பட்டிருந்தது.

ஈராக்: ஓராண்டிற்குப் பின்னர் என்ற தலைப்பைக் கொண்டுள்ள இந்த ஆவணம் அறிவிப்பதாவது: "இந்தப் பொது ஒருமித்த கருத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது தேவை என்று பணிக்குழு கருதுகின்றது; அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் அரசியல் விருப்பு ஈராக்கில் வரவிருக்கும் மாதங்களில் மற்றும் வருடங்களில் சோதனைக்கு ஆளாகக் கூடும் என்பதால் இது தேவையாகும். 2004 தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் நாம் நுழைகையில், அமெரிக்காவில் அரசியல் விவாதத்தின் உச்சக்கட்டத்தில், அமெரிக்கப் படைகளின் மீதான இன்னும் கூடுதலான உயர் தாக்குதல்கள் உள்பட இச்சோதனைகள் வரக்கூடும். ...ஆயினும்கூட, அரசியல் முன்னோக்குகளில் பரந்த வகையிலான வேறுபாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிக்குழு உறுப்பினர்கள், மக்களுடைய விருப்பத்தை பிரதிபலிக்கும் தலைமையை கொண்டுள்ள ஸ்திரமான ஈராக் அமைக்கப்படுவதில் அமெரிக்கா முக்கிய நலன்களை கொண்டிருக்கிறது என்ற அவர்களின் நிலைப்பாட்டில் இணைந்தே இருக்கின்றனர். ஈராக்கில் உள்நாட்டு மோதல் என்றால்... ஈராக்கின் அண்டை நாடுகள் போட்டியிட்டும் குறுக்கிட்டும் அதில் தலையிடும் அபாயம் உண்டு; மேலும் எண்ணெய் உற்பத்தி, விற்பனை இவற்றில் நீண்ட கால உறுதியற்ற தன்மை ஏற்பட்டுவிடும்; மற்றும் தோல்வியுற்ற நாடு ஒன்று ஏற்பட்டுவிட்டால் பயங்கரவாதிகளுக்கு அது பெரும் புகலிடத்தை வழங்கக் கூடும். அதையும் தவிர அமெரிக்காவிற்கு மாபெரும் கொள்கைத் தோல்வியையும் இது பிரதிபலிக்கும்; அதையொட்டி அப்பகுதியில் இதற்கு அதிகாரம், செல்வாக்கு ஆகியவை குறைந்துவிடும்."

எனவேதான் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தில் ஹோவர்ட் டீனுடைய பிரச்சாரம் செய்தி ஊடகத்தால் மிகப் பெரிய தாக்குதல் முயற்சிக்கு உள்ளானது; இதையொட்டி ஈராக் படையெடுப்பிற்கு வாக்களித்திருந்த கெர்ரி மற்றும் ஜோன் எட்வர்ட்ஸ் இருவரும் முறையே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களாக தெரிந்தெடுக்கப்பட்டனர். மிகப் பெரும்பாலான ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப நிலை வாக்காளர்களின் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்திற்கு நேர் எதிரான முறையில், ஜனநாயகக் கட்சி தலைமையானது தேர்தல் பிரச்சார செயற்பட்டியலில் இருந்து போர் பற்றிய பிரச்சினையை அகற்றுவதற்கு சென்றது.

இந்த நேரடியான போர் ஆதரவுக் கொள்கை கெர்ரி பிரச்சாரத்தில் அரசியல் ஆதரவிற்கு அழிவு தரும் சரிவைக் கொடுத்தது: அதிலும் குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியைக் கொடுத்தது. செப்டம்பர் மாத நடுவில்தான், முக்கிய குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்களான இண்டியானாவின் லூகெர், நெப்ராஸ்காவின் ஹெகெல் மற்றும் அரிசோனாவின் மக்கையின் ஆகியோர் புஷ் போர் நடத்தும் முறை பற்றி வெளிப்படையாக குறைகூறத் தொடங்கியபின்னர்தான், கெர்ரி பிரச்சாரகர்கள் தாங்களும் போரை ஒரு பிரச்சினையாக எடுத்துவைத்து விவாதிக்கலாம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றனர்.

ஈராக்கில் எதிர்ப்பு சக்திகள் ஆபத்தான முறையில் வளர்ந்து வருவதும், அமெரிக்கவில் நிலை சரிந்து வருவதும், ஒருவேளை வெளிநாட்டுக் கொள்கை பேரழிவிற்கு உட்பட்டு மகத்தான தாக்கங்களை நாட்டினுள்ளேயும் வெளிநாடுகளிலும் கொண்டுவிடுமோ என்ற ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளேயான அச்சங்கள்தான் இந்தக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டின் பின்னணியில் இருந்தன. ஈராக்கைப் பற்றிய அக்கறைகள் அமெரிக்க வரவுசெலவுத்திட்டம், வணிகம், வர்த்தகக் கடன்கள் ஆகியவை மிகவும் வெடித்துப் பெருகிய நிலை, மற்றும் உலக நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் தொடர்ந்த, விரைவான வீழ்ச்சி இவற்றைப் பற்றிய கவலைகளுடன் இணைந்தன.

இதில் வேறு ஒரு கூடுதலான அக்கறையும் இருந்தது; கெர்ரியின் பிரச்சாரம் மிகவும் புலப்படக் கூடிய வகையில் சிதைவுற்றால், அது ஜனநாயகக் கட்சியை செல்வாக்கிழக்கவைத்து முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி என்ற நிலையில் இருந்து நிரந்தரமாக அகற்றிவிடுவதோடு, அமெரிக்க ஆளும் வர்க்கம், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் எதையும் வளரவிடாமல் நசுக்கி வரும் மற்றும் அதன் அரசியல் ஏகபோகத்தை நிலைநாட்டிவரும், இரு-கட்சி முறையைக் கீழறுத்து விடும்.

ஆனால் அவர் புஷ் நிர்வாகத்தை அது ஈராக்கியப் போரை நடத்தும் விதம், ஆக்கிரமிப்பு செய்தவிதம் ஆகியவை பற்றி தாககிப் பேசினாலும்கூட, கெர்ரி பலமுறையும் தன்னுடைய வேறுபாடுகள் வழிவகைகள், தந்திரங்கள் இவற்றைப் பற்றியே அன்றி, முடிவின் தன்மைகள் முலோபாய இலக்குகள் பற்றி அல்ல என்று கூறிவந்தார். அதற்குப்பின் நடந்த ஜனாதிபதி விவதாங்களிலும், பிரச்சாரக் கூட்டங்களிலும், கெர்ரி பலமுறையும், அமெரிக்க எதிர்ப்பு ஈராக்கிய போராளிகளையும் மற்றும் "பயங்கரவாதிகள்" என்று அழைக்கப்படுபவர்களையும் "கொல்லுவோம் அல்லது பிடிப்போம்" என்ற உறுதிப்பாட்டை வெறுப்பூட்டும் அளவுக்கு வலியுறுத்தினார்.

இந்த அறிக்கையின் வரம்பிற்குள், தேர்தல் பிரச்சார நிகழ்வுகளைப் பற்றி விரிவாக மீளாய்வு செய்வது இயலாது; ஆனால் புஷ்ஷின் நிர்வாகத்தை நெருக்கடிக்கு தள்ளி, சீர்குலையவைத்த, ஆளும் செல்வந்த தட்டுக்குள்ளேயே உட்பிளவுகளை ஏற்படுத்திய மற்றும் போருக்கும் புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கும் வெகுஜன எதிர்ப்பின் அளவை வெளிக்காட்டிய பிரதான அபிவிருத்திகளில் சிலவற்றை பட்டியலிடுவது பயனுடையதாக இருக்கும்.

* 2003 இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம்: போர் எதிர்ப்பு உணர்வு மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைமை புஷ்ஷிடமும் குடியரசுக் கட்சினரிடமும் சரணடைந்ததை அடுத்து ஏற்பட்ட கோபத்திற்கு அழைப்பு விடுத்த வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தில், டீன் முன்னணியில் வெளிப்படுகிறார்.

* ஜனவரி, 2004: முன்னாள் கருவூலச் செயலர் போல் ஓ நீல், 2001 ஆரம்பத்திலேயே புஷ் நிர்வாகத்திற்குள்ளே நடந்த ஈராக்கிற்கு எதிரான போருக்கான விவாதங்களை விவரித்தும், புஷ்ஷின் சொந்த அறியாமை, குறைவான அறிவு நுட்பம் இவற்றை விளக்கியும், ஒரு புத்தகம் வெளியிட்டார்.

* மார்ச்/ஏப்ரல் 2004: 9/11 பற்றிய விசாரணைக்குழு பொது விசாரணையை மேற்கொள்ளுதல், இதில் புஷ் நிர்வாகம் அமெரிக்காவில் வரவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி வந்த முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்தாதமை தெரியவந்தது. முன்னாள் வெள்ளை மாளிகை உளவுத்துறை ஆலோசகர் ரிச்சார்ட் கிளார்க், பாதுகாப்பில் தோல்வியை பற்றி புஷ் நிர்வாகத்தை குறை கூறுகிறார்; மேலும் ஈராக் போர் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை திசை திருப்பும் நிகழ்வு என்றும் கண்டனத்திற்கு உட்படுத்துகிறார். ஆகஸ்ட் 2001ல் ஜனாதிபதியின் அன்றாடக் குறிப்புக்களில் "பின் லேடன் அமெரிக்காவை தாக்க உறுதி கொண்டுள்ளது" தெரிவிக்கப்பட்டு இருந்தது என்று கொண்டலீசா ரைஸ் ஒப்புக் கொள்ளுகிறார்.

* மார்ச், 2004: ஸ்பானிய தேர்தலில் போருக்கு ஆதரவு கொடுத்திருந்த அஸ்நாரின் ஆட்சி படுதோல்வியை தழுவியது. சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி ஈராக்கிலிருந்து ஸ்பெயினின் படைகளை திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கிறார்.

* ஏப்ரல், 2004: சன்னி முக்கோணத்திலும், நஜாப்பின் ஷியைட்டு மையத்திலும் ஈராக்கியர் எழுச்சிகள்.

* ஏப்ரல் 2004: அபு கிரைப்பில் நிகழ்ந்த சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

* ஜூன், 2004: மைக்கல் மூரின் போரெதிர்ப்பு, புஷ்-எதிர்ப்பு ஆவணத் திரைப்படமான பாரன்ஹீட் 9/11 வெளியிடப்பட்டு, மிகப் பெரிய வசூலைக் கொடுக்கிறது.

* ஆகஸ்ட், 2004: குடியரசுக் கட்சியின் மாநாட்டின்போது, புஷ்ஷின் கொள்கைகளை எதிர்த்து 400,000 மக்கள் நியூ யோர்க்கில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகின்றனர். 2,000 பேர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்படுகின்றனர்.

* செப்டம்பர், 2004: ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை 1,000 ஐ எட்டுகிறது.

* அக்டோபர், 2004: ஜனாதிபதி வேட்பாளர்களின் இரண்டாவது விவாதத்திற்கு முன் CIA ஆயுதங்கள் ஆய்வாளர் சார்ல்ஸ் டுல்பெருடைய அறிக்கை வெளியிடப்படுகிறது. சதாம் ஹுசைன் 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் பேரழிவு ஆயுதங்களின் திறன்களை அழித்துவிட்டார் என்பதை டுல்பெர் உறுதி செய்கிறார்.

* அக்டோபர், 2004: ஈராக்கில் அமெரிக்க அவசரகால இராணுவத்தினரின் கலகம்.

கெர்ரியின் பிரச்சாரமும், ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்றத் தலைமையும் புஷ் நிர்வாகத்தின் பொய்கள், குற்றங்கள் அம்பலப்படலை பயன்படுத்திக் கொள்ளுவது பற்றி, ஒரு சுவடும் காட்டாமல் பேசாமல் இருந்து விடுகின்றனர். தங்களுடைய தேர்தல் விளைவுகளின் தாக்கங்கள் (உட்குறிப்புக்கள்) எப்படிப்போனாலும், முதலாளித்துவ வர்க்க ஆட்சியைப் பாதுகாத்தல் என்பதுதான் அவர்களுடைய பெரும் அக்கறையாக இருந்தது.

கெர்ரியின் பிரச்சாரம் உண்மையை தவிர்ப்பதிலும், போலித்தனத்திலும் நிறைந்திருந்தது. பெருநிறுனங்கள், செல்வந்தர்கள் நலன்களுக்கு துணையிருக்கும் புஷ் நிர்வாகத்தில் இருந்து தன்னை "மத்தியதர வர்க்கத்தின்" பாதுகாவலர் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு, இவர் வணிகர் குழுவிடம் "தொழில்முயலுவோருக்கு ஆதரவளிக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்" என்றும் "சிறந்த வணிகத்திற்கு உதவுபவர்" என்றும் கூறிக்கொண்டார். ஆண்டு ஒன்றிற்கு $200,000 க்கும் மேலாக வருமானம் பெறுபவர்களுக்கு புஷ் வரிவெட்டுக்கள் கொடுத்திருப்பது திரும்ப பெறவேண்டும் என்று அழைப்புவிடுத்த இவர், பெருநிறுவனங்கள் அனைத்திற்குமே கூடுதலான வரிகளில் வெட்டுக்கள் வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், செலவுகளைக் குறைக்கும் வகையிலும், நிதியக் கடும் சிக்கன முயற்சிகளை செயலாக்கும் வகையிலும் தான் அறிவித்திருந்த கஞ்சத்தனமான சீர்திருத்தக் கருத்துக்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும், சுகாதார பாதுகாப்பு போன்றவற்றில் "பணம் கொடுத்துப் பயனடைக" என்பதை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈராக்கின் மீதான படையெடுப்புக்கு புஷ் "அவசரப்பட்டு முன்பே எடுத்த" முடிவு, அதன் ஆக்கிரமிப்பை அது கையாளும்விதம் பற்றி அவர் விமர்சிக்கும் அதேவேளை, அவர் அமெரிக்கப் படைகளில் வலிமையை பெருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறப்பு படைகளில் உள்ள கொலைப் பிரிவுகள் இருமடங்காக ஆக்கப்படவேண்டும் என்றும் கூறினார். வட கொரியா, ஈரான் பற்றிய புஷ் கொள்கைகளை வலது புறத்திலிருந்து தாக்கி, அந்த ஆட்சிகள் மீது சமாதானப் போக்கை காண புஷ் முற்படுகிறார் என்றும் கூறியதோடு, அவற்றின் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதை தான் தள்ளிவிடவில்லை என்றும் தெரிவித்தார். கொள்கை அளவில் புஷ்ஷின் முன்கூட்டியே தாக்கும் போர் கொள்கை வழியை கொள்கை அடிப்படையில் ஏற்பதாகவும் அதேநேரத்தில் நிர்வாகம் இராணுவவாத கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஒருதலைப்பட்சமான தந்திரோபாயங்களை மேற்கொள்ளுவதாகவும் விமர்சிக்கிறார். மிகவும் இழிந்த தன்மையுடைய போலீஸ்-அரச தேசபக்த சட்டம் பற்றி ஒரு சில குறைபாடுகளை சுட்டிக் காட்டி, தன்னுடைய ஆதரவைக் கொடுத்தார்.

கெர்ரியின் பிரச்சாரத்தில் நிறைந்திருந்த இத்தகைய கூறுபாடுகள் வேட்பாளருடைய தனிப்பட்ட குணநலன்களில் வேரூன்றியவை என்றில்லாமல், ஜனநாயகக் கட்சியின் வர்க்கத் தன்மையிலும், அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் அது குறிப்பிட்ட பங்கை ஆற்றியதிலும்தான் இருந்தன. அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதியில் ஜனநாயகக் கட்சி தன்னை உழைக்கும் மனிதனின் பிரதிநிதி, சாதாரண மக்களுடைய பிரதிநிதி, "மத்தியதர வர்க்கத்தின்" பிரதிநிதி என்று முன்வந்து காட்டிக் கொண்டபோதிலும், உண்மையில் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுக்காகத்தான் செயல்பட்டுவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கூர்மையான வடிவத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இக்கட்சியின் முக்கிய வர்க்க தன்மைக்கும் பொதுமக்களுக்குரிய நபராக இருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டை, கெர்ரி உள்ளடக்கியிருந்தார்.

மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பே புதிய உடன்பாடு மற்றும் பெரிய சமுதாயம் இவற்றின் சமூக சீர்திருத்த கொள்கைகளை கைவிட்டுவிட்ட கட்சியாகவும்தான் இது உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார, சமூக அடக்குமுறைகளுக்கு எத்தகைய தீவிர நிவராணமும் அளிக்க இயலாத் தன்மையைத்தான் இது கொண்டுள்ளது; ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகப் பொருளாதார நிலையில் ஆழ்ந்த வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளதால் ஒருகாலத்தில் அத்தகைய சமூக சீர்திருத்தங்களுக்கு சாத்தியமாக இருந்த நிதி இருப்புக்கள் வற்றிவிட்டன.

ஜனநாயகக் கட்சியின் தாராள வாதம் தன்னுடைய தொடர்பை, சமூக சீர்திருத்த கொள்கையில் இருந்து உதறித் தள்ளிவிட்டதாலும், அதன் தொழிலாள வர்க்க ஆதரவுத் தளம் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டதாலும், கட்சி கூடுதலான முறையில் நிதிய உயர்மட்டம் மற்றும் உடன்பாட்டு நடவடிக்கை மற்றும் இன அடிப்படையிலான கொள்கைகளினால் நன்மை அடைந்த AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம், குறுகிய ஆபிரிக்க-அமெரிக்க தட்டுக்கள் உள்பட, மத்தியதர வர்க்க உயர் தட்டுக்களின் சலுகைமிக்க அடுக்கினரை, எக்காலத்தும் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டி வந்தது.

தேர்தல் பிரச்சாரக் கட்டக் காலத்தில், ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கிளின்டனும், பின்னர் கெர்ரி அவருடைய புஷ்ஷுடனான இரண்டம் தொலைக்காட்சி பேட்டியிலும் வெளிப்படையாகவும், சற்றே அகங்காரத்துடனும், கால் நூற்றாண்டாக தொழிலாள வர்க்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், மற்றும் அரசாங்க கொள்கைகள் இவற்றில் ஆதாயத்தை அறுவடை செய்த கோடீஸ்வரர்களின் மன்ற உறுப்பினர்கள் என்று தங்களை தனிச்சிறப்பாய் காட்டிக் கொண்டனர்.

அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளமை அமெரிக்க இராணுவவாத வெடிப்பின் முக்கியமான உள்நாட்டு விளைவுகளுள் ஒன்றாகும். கிளின்டனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்கு 1998-99ல் நடந்த வலதுசாரி அரசியல் சதியிலும், 2000ம் ஆண்டு தேர்தல் திருடப்பட்டதிலும் முன்னிகழ்வாய் அமைந்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சிதான் 2004 தேர்தல்கள் ஆகும். இடதுசாரி அல்லது போர் எதிர்ப்பு பற்றிய அறைகூவல் ஆகியவை முறையாக தவிர்க்கப்பட்டதில் மட்டுமின்றி, வாக்குரிமை அளிப்பதற்கு மிரட்டல் முறையில் அச்சுறுத்தலை கொடுத்த வகையிலும், இரு-கட்சி அரசியல் ஏகபோகத்தின் ஜனநாயக எதிர்ப்பு சாரம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்பட்டது.

நவம்பர் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது இரத்து செய்வது, அல்லது பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டால், இராணுவச்சட்ட சூழ்நிலையில் அதை நடத்தவேண்டும் என்று புஷ் நிர்வாகத்திடமிருந்து வந்த அசாதாரண அச்சுறுத்தலை நாம் நினைவு கூர்வோம். இப்படி வெளிப்படையாக சர்வாதிகார அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கான திட்டங்கள் ஜூலை மாதத்தில் Newsweek இதழிற்கு கசிய விடப்பட்டன; இந்நிலைப்பாடு, பின்னர், அமெரிக்க தாராளவாதத்தின் தொகுப்பு என்று கருதப்படும் (வாஷிங்டன் போஸ்ட்) பத்திரிகைகளின் உறுப்புக்களின் கொள்கை அளவு ஒப்புதலைப் பெற்றது, அல்லது அந்த வாதம் (நியூயோர்க் டைம்ஸ்) அலட்சியம் செய்யப்பட்டது. இதன் பின் குடியரசுக் கட்சியினர், தேர்தல் தினத்தன்று தொழிலாள வர்க்கம், சிறுபான்மை பிரிவு வாக்காளர்கள் ஆகியோரை, முக்கிய "போர்க்கள மாநிலங்களில்" சவால் செய்ய பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை திரட்டினர்.

ஜனநாயகக் கட்சி ஜனநாயக எதிர்ப்பு தாக்குதலின் முழுப்பகுதியாகத்தான் இருந்தது. குடியரசுக் கட்சி மற்றும் செய்தி ஊடகத்திடம் இது நடுங்கிய முழங்கால்களை கொண்டு, கோழைத்தனமாக செயல்பட்டது; ஆனால் போர் எதிர்ப்பு உணர்வு, இடதுசாரி மூன்றாம் கட்சி வேட்பாளர்களை வாக்குச் சீட்டுப் பதிவில் வராமல் பார்த்துக் கொள்ளுவதில் முறையான அல்லது நேர்மையற்ற முறைகளை கடுமையாக, இரக்கமின்றிக் கடைப்பிடித்தது. இது ஒன்றும் கெர்ரியின் பிரச்சாரத்தில் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம் அல்ல. அது ஜனநாயகக் கட்சியின் அத்தியாவசியமான மற்றும் ஆழமான பிற்போக்கு பாத்திரத்தை உள்ளடக்கியிருந்தது.

இறுதியில், புஷ் நிர்வாகத்தால் பிரதிநித்துவப்படுத்தப்படும், அமெரிக்க ஆளும் தட்டின் அதி வலதுசாரி மற்றும் குற்றம் சார்ந்த கூறுபாடுகள் கணிசமான எண்ணிக்கையில் தொழிலாளர்களின் வாக்குகளை வெல்வதற்கான திறமை, பிரதானமாக ஜனநாயகக் கட்சி மற்றும் AFL-CLO அதிகாரத்துவத்தில் உள்ள அதன் வலதுசாரிக் கூட்டாளிகள் மூலம் தசாப்த காலங்களாக இருகட்சி முறைக்கு அடிபணிந்து நின்றதாலும் விளைந்த அரசியல் திசைவிலகல் மற்றும் ஆற்றொணாநிலை ஆகியவற்றின் உற்பத்திப் பொருளாக இருந்தது. குடியரசுக் கட்சியின் நம்பிக்கையற்றவர்களும் மற்றும் பிரச்சார முகவர்களும் சமய உணர்விற்கும், "ஒழுக்கநெறி மதிப்பீடுகளுக்கும்" விடுத்த வேண்டுகோளானது, மிகவும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையிலும் தங்கள் சுயாதீனமான வர்க்க நலன்களை வெளிப்படுத்தக்கூடிய வெகுஜன அமைப்பு ஏதும் இல்லாத நிலைமையின் கீழ்தான், ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற முடிந்தது.

தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு மற்றும் கைவிடப்பட்டு, இரக்கமற்ற பெருநிறுவனங்களினதும் விரோதப் போக்குடைய அரசாங்கங்களினதும் இடைவிடாத தாக்குதல்களை எதிர் கொண்டும், ஊழல் மலிந்த, பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குட்பட்ட செய்தி ஊடகத்தின் ஓய்வில்லாத, மனத்தை மரக்கடித்துவிடும் பொய்கள் மற்றும் பிரச்சாரத்திற்குள்ளாகியும், எதிர்த்துப் போரிடுவதற்கான சமூக பலத்தை பிரயோகிப்பதற்கான சகல வழிவகைகளும் பறிக்கப்பட்ட நிலைமையில் இருந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களை தனிநபர்கள் என்ற நிலைக்குள்ளாக்கிவிட்டனர்.

குடியரசுக் கட்சியின் வலதுபிரிவின் வலிமை என்று கூறப்படுவதானது, உண்மையில் முதலாளித்துவ தாராளவாதத்தின் உடைவினால் ஏற்பட்ட மிகப் பெரிய அளவு அரசியல் வெற்றிடத்தின் எதிர்மறை வெளிப்பாடுதான். ஜனநாயகக் கட்சி தேசிய தேர்தலில் பாதித் தொகுதிகளில் போட்டியிடக் கூட இல்லை, அதிலும் முன்பு தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் நிறைந்திருந்த தொகுதிகளான, மேற்கு வர்ஜீனியா, கென்ற்ருக்கி போன்றவற்றில் பங்கு பெறவில்லை என்னும் அளவிற்கு இழிந்து விட்டது.

இந்தத் தேர்தல் "புஷ்ஷைத் தவிர எவரேனும்" என்ற பதாகையின் கீழ் கெர்ரிக்கு ஆதரவு கொடுத்த மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு சுயாதீனமான தொழிலாள வர்க்க மாற்றீட்டை எதிர்த்த இடது-தாராள, மத்தியதர தீவிரப்போக்கினர் ஆகியோருக்கு கடுமையான தாக்குதலைக் கொடுத்தது. இதில் மிக வெளிப்படையாக கெர்ரிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த Nation, Noam Chomsky மட்டுமல்லாமல் பெயரளவிற்கு சுதந்திரமான பிரச்சாரங்கள் செய்த பசுமைக் கட்சியினர் மற்றும் ரால்ப் நாடெரும் அடங்குவர். அவர்களுடைய முயற்சிகள் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் தன்மையையும், வேண்டுமேன்றே பொய்மையை பரப்பும் ஒரு கலவையாக இருந்ததுடன், கெர்ரியை ஏதேனும் ஒரு விதத்தில் போர் எதிர்ப்பாளர்போல் சித்தரித்தும், உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாப்பவர் போன்றும் காட்டிய முயற்சிகள், ஜனநாயகக் கட்சியினரின் படுதோல்விக்கு பின்னர், அமெரிக்க மக்களை வெளிப்படையான நிராகரிப்பு மற்றும் வெளிப்படையான சோர்வு நிலையில் இருத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் மட்டுமே புஷ் நிர்வாகம் மற்றும் போருக்கு எதிராக கொள்கை ரீதியான பிரச்சாரத்தை நடத்தின; "குறைந்த தீமை" நல்லது என்ற தீவிர இடதின் ஊகக் கருத்துக்களை எதிர்த்தன; சோசலிச, சர்வதேச வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடவும் தன்னுடைய வேட்பாளர்களுடன் தேர்தலில் தலையீடு செய்தன; இவற்றால் உழைக்கும் வர்க்கம் மகத்தான அளவில் வலுவுற்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்

2004 தேர்தல்களில் நாம் தலையீடு செய்தோம்; அதற்குப் பின் எமது அரசியல் பணியை தொடர்வதற்காக தயார் செய்து கொண்டுள்ளோம்: தேர்தல் கண்ணோட்டத்தில் என்றில்லாமல், இந்த தேர்தல்கள் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் தொடர்பான உறவில் குறிக்கும் முக்கியத்துவத்திலிருந்து, வர்க்கப் போராட்டத்தின் விரைவுத்தன்மை, இயல்பு மற்றும் வளைவரைபாதை இவற்றில் ஏற்பட்ட மாற்றம், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள், இவை அனைத்தில் இருந்தும் எழும் சவால்களும் பணிகளும் நம் கட்சியின் முன் வைக்கப்பட்டுள்ளன. நம்மைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான பிரச்சினையாக இருந்ததும், இன்னமும் இருப்பதும், வர்க்கப் போராட்டத்தின் வருங்கால வளர்ச்சிக்கு இந்த தேர்தல் எவற்றை முன்னறிவிக்கின்றது என்பதுதான்.

எமது தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது போல், எமது முக்கிய நோக்கம் வாக்குகளை வெற்றி கொள்ளுவது அல்ல; மாறாக மிகப் பரந்த முறையில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஏனையோருக்கும் ஒரு புரட்சிகரமான சோசலிச மற்றும் சர்வதேச முனனோக்கை அளித்தலும், அதையொட்டி அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு, அதிகாரத்தை கைப்பற்றவும் சோசலிசத்திற்காகவும் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்தான். ஆகையால், நம்முடைய தலையீடு ஒரு தேசிய, முற்றிலும் ஊகத் தன்மை நிறைந்த, தேர்தல் நோக்குநிலையிலிருந்து எழவில்லை, மாறாக, தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களை தெளிவாய் உரைக்கும் வரலாற்றுரீதியாய் வளர்க்கப்பட்டுள்ள முன்னோக்கிலிருந்து எழுந்தது.

தேர்தல் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ள ஒரு சுயாதீன சோசலிச, சர்வதேச அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் உறுதியாக நின்று, சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் தனக்கென தானே நிர்ணயித்திருந்த அடிப்படை இலக்கை அடைந்தது. ஆவணத்தில் இருந்து மேற்கோளிட்டால், "எமது நோக்கம், அமெரிக்காவிற்குள்ளும், சர்வதேச அளவிலும் அரசியல் விவாதத்தின் தரத்தை உயர்த்துவதே ஆகும்; இறுகப்பிடித்துள்ள வலதுசாரி முதலாளித்துவ அரசியலை உடைத்து, நடைமுறையிலுள்ள அரசியல் கட்சிகள், செய்தி ஊடகங்கள் இவற்றின் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் பொய்களுக்கும் ஒரு சோசலிச மாற்றை முன்வைப்பது ஆகும். எங்கள் பிரச்சாரம் வாக்குகளை பற்றியது அல்ல. அது கருத்தியல்களையும், கொள்கைகளையும் பற்றியது ஆகும்.... சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தல்களை, சமூக, அரசியல் நெருக்கடி பற்றிய ஆழ்ந்த விவாதத்தை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்காக ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதற்கு தேவையான வேலைத்திட்ட அடித்தளங்களை அமைக்கும்."

தற்போதைய எமது சக்திகளின் வரம்புகள், மற்றும் அரசியல் நடைமுறை, செய்தி ஊடகம் குறுக்கே நிறுத்தியிருக்கும் முட்கம்பி வேலித் தடைகள் இருந்தபோதிலும், பிரதானமாக உலக சோசலிச வலைத் தளம் மூலமும், நம்முடைய வேட்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஆகியோருடைய நேரடி அரசியல் நடவடிக்கைகள் மூலமும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கான மக்களைச் சென்று அடைந்திருக்கிறோம்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென் லண்டனிலும், இலங்கையிலும் பொதுக் கூட்டங்களில் அக்டோபர் மாதம் நிகழ்த்திய உரைகள் இப்பிரச்சாரத்தின் மற்றும் அதன் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் சர்வதேச தன்மையையும் முழுமையாக உருவகப்படுத்தி நின்றன.

தேர்தல் அறிக்கையானது அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பின் பின்னே இருக்கும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றிய முக்கிய சிறப்பியல்புகளை கோடிட்டுக் காட்டியதுடன், தொழிலாள வர்க்கத்திற்கு நம்முடைய கட்சியின் அரசியல் நோக்குநிலையை தெளிவாக வரையறுத்தது. அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியை நன்கு அளவிட்டது; சமூக சமத்துவமற்ற நிலை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதன்மீது மையப்படுத்தியது. மிகப் பரந்த வகையிலான உழைக்கும் மக்களுடைய தேவைகளுக்கேற்ப நடைமுறையில் கொள்ளப்படவேண்டிய ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்ட கட்டமைப்பை நிர்ணயித்துக் காட்டியது.

இறுதியாக, இது ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளவேண்டிய தேவைக்கும் அனைத்துவிதமான முதலாளித்துவ அரசியலில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் பற்றியும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவிக்கொள்ளுவதற்கான போராட்டத்தை ஏற்க வேண்டியது பற்றியும் வாதிட்டது. இந்த தீர்க்கமான மற்றும் வரலாற்றுப் போராட்டம் சோசலிச சமத்துவக் கட்சியை வளர்ப்பது என்று அடையாளம் கொள்ளப்பட்டது. தேர்தல் அறிக்கையில் இருந்து மேற்கோளிடுவோம்:

"தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. இது இருகட்சி முறையிலிருந்து வெளிப்படையாக முறித்துக் கொள்ளுவது என்பது மட்டுமின்றி, அனைத்து "தீவிர" மற்றும் அரைகுறை மக்கள் விருப்பு அரசியலின் அனைத்து வடிவங்களையும் நிராகரிப்பது ஆகும். ஏனெனில் இறுதிப் பகுப்பாய்வில், இவை அனைத்தும் முதலாளித்துவ அரசியல் ஒட்டுமொத்தத்திற்குமான இடதுபுற தூண்களே ஆகும்...

இத்தகைய "குறைந்த கெடுதல்" என்ற வகையிலான அரசியல் அனைத்தும் உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு பொறி ஆகும். ஏகாதிபத்திய போருக்கும் சமூக பிற்போக்கிற்கும் எதிரான போராட்டத்தில் குறுக்கு வழி ஏதும் கிடையாது. ஒரு சுயாதீனமான, வெகுஜன சோசலிச கட்சியை அமைத்திடல் இப்பொழுது இன்றியமையாததாகும். இந்த போராட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்கவும் ஒருமுகப்படுத்தவும் சோசலிச சமத்துவக் கட்சி 2004ம் ஆண்டு தேர்தலில் பங்கு கொள்ளுகிறது.

மிக முக்கியமான பிரச்சினையான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்குப் பின்னர் வருவோம். தற்போது, தேர்தலில் எமது கட்சியின் தலையீடு இந்த அவசரமான, வரலாற்றுப் பணியை சாதிப்பதற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறித்தது என்று மட்டும் கூறுவோம்.

சோசலிச சமத்துவக் கட்சி செய்துவரும் ஆய்வும், தேர்தல் காலம் முழுவதுமான அரசியல் தலையீடும், டேவிட் நோர்த் ஆற்றிய உரைகள் மூலம் நன்கு பதிவாகியுள்ளன; இதை இப்பொழுது நாங்கள் வெளியிட்டுள்ளோம் (அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி: 2000 மற்றும் 2004 ஜனாதிபதி தேர்தல்கள், Mehring Books). மேலும் இவற்றில் உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்டுள்ள ஏராளமான கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியையும் பொதிந்துள்ளன.

இந்தக் கொள்கை அடிப்படையிலான அரசியல் நிலைப்பாட்டில், நாங்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே புதிய சக்திகளை வென்று திரட்ட முடிந்தது; ஒரு முக்கிய அரசியல் அனுபவத்தின் ஊடாக அரசியலுக்கு ஓரளவு புதிதாகவுள்ள ஏனையோரையும் திரட்ட முடிந்தது. எமது இயக்கத்தின் வளர்ச்சி, இந்தக் கூட்டத்திற்கு பலரும் வருகை தந்ததில் பிரதிபலிக்கிறது.

ஒருதலைப்பட்சமான, ஜனநாயக விரோத வாக்குப் பதிவு அந்தஸ்து பெறும் விதிகளுக்கு எதிராகவும், செய்தி ஊடக புறக்கணிப்பிற்கு எதிராகவும், எங்களை வாக்குச் சீட்டுப் பதிவில் இருந்து அகற்றுவதற்கான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அதிகாரிகளின் ஏராளமான முயற்சிகளுக்கு எதிராகவும், எங்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக முறையே பில் வான் ஓகென், மற்றும் ஜிம் லோரன்சை ஐந்து மாநிலங்களில் - நியூ ஜெர்சி, மின்னிசோட்டா, அயோவா, வாஷிங்டன், கொலராடோ ஆகியவற்றில் நிறுத்த முடிந்தது. நாம் இரண்டு வேட்பாளர்களை அமெரிக்க பிரதிநிதிகள் மன்ற வாக்குச் சீட்டுப் பதிவில், மைன் மாநிலத்தில் கார்ல் கூலி, மிச்சிகனில் ஜெர்ரி வைட் ஆகியோரை நிறுத்திவைக்க முடிந்தது. மிகக் கடுமையான தேர்தல் விதிகளினால் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன், கலிஃபோர்னியா, பாசடேனாவில் இருந்து தேசிய சட்ட மன்றத்திற்கு வாக்குச்சீட்டில் அவரின் பெயரை எழுதும் (எழுத்து மூலமான) வேட்பாளராக நின்றார். சின்சின்னாட்டி, ஒகியோவில் வாக்குச்சீட்டு பதிவிற்கு தேவையான கையெழுத்துக்களை பெற்றிருந்த டேவிட் லோரன்ஸ், சட்ட நடவடிக்கை, கடிதங்கள், எதிர்ப்பு அறிக்கைகள் என்று நாடு முழுவதும், உலகின் பல பகுதிகளில் இருந்து வெளிவந்திருந்த போதிலும்கூட, சில விதிக் கடுமைகளினால் வாக்குச் சீட்டுப் பதிவில் இடம் பெறாமல் போனார். அவரும் வாக்குச்சீட்டில் அவரின் பெயரை எழுதும் (எழுத்து முறையில்) வேட்பாளராக நின்றார்.

இல்லிநோய் மாநிலப் பிரதிநிதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக ஷாம்பைன்-அர்பனா தொகுதியில் ரொம் மக்கமென் வாக்குச்சீட்டுப் பதிவிற்கு வெற்றிபெற்றார்; மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி எப்படியும் இவரை விட்டுவிடக் கூடாது என்று நேர்மையற்ற முறையிலும், மக்கள் விரோத முயற்சியிலும் ஈடுபட்டபோதிலும் இவ்வெற்றி அடையப்பட்டது. கட்சி நிகழ்த்திய பிரச்சாரத்திற்கு பரந்த மக்கள் ஆதரவு இருந்தது; ஜனநாயகக் கட்சி இவருக்கு வாக்குச்சீட்டுப்பதிவு தகுதி மறுக்கப்படவேண்டும் என்று கொண்டிருந்த முயற்சிகள் தோல்வியுற்றன.

எமது கட்சி குறிப்பிடத்தக்க தேர்தல் ஆதரவை மைன் மற்றும் இல்லிநோயில் கண்டது. அந்த மாநிலத்தின் முதல் முறையாக போட்டியிடும் சோசலிஸ்ட் என்ற வகையில் கார்ல் கூலி தன்னுடைய சட்டமன்ற தொகுதியில் 2.5 சதவிகித வாக்குகளை பெற்றார். இல்லிநோயின் 103வது மாவட்டத்தில், இல்லிநோய் பல்கலைக்கழகத்தின் பிரதான இடத்தில், ரொம் மக்கமன் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.

எமது கட்சி வெற்றிகரமான பிரச்சாரக் கூட்டங்களை மிச்சிகன், மைன், இல்லிநோய், மின்னிசோட்டா, ஓகையோ, நியூ யோர்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன் மாநிலம் மற்றும் கலிஃபோர்னியாவில் நடத்தியது. கட்சி பல ஆண்டுகள் ஒழுங்கமைக்கப்பட்டரீதியாக தலையிட்டிராத இடங்களும் இவற்றுள் உள்ளடங்கும்.

தொடரும்...

See Also:

மேஹ்ரிங் நூலகத்திலிருந்து புதிய வெளியீடு: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி: 2000 மற்றும் 2004 ஜனாதிபதி தேர்தல்கள்

Top of page