WSWS : Tamil : õóô£Á

சோசலிசத் தொழிலாளர் கட்சியும் 1940ம் ஆண்டுத் தேர்தலும்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
 

Chapter 3: The SWP and the 1940 Elections

சோசலிசத் தொழிலாளர் கட்சியும் 1940ம் ஆண்டுத் தேர்தலும்

Use this version to print | Send this link by email | Email the author

"இடதுசாரி ரூஸ்வெல்ட் வாதத்திற்கு" சோசலிசத் தொழிலாளர் கட்சி சரணடைந்ததும், அது ஸ்ராலினிச இயக்கத்தைத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொள்ள நிராகரித்ததும் அமெரிக்க  ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக பண்டா சுமத்தியுள்ள குற்றத்தின் பிரதான பகுதியாகும்.  "இடதுசாரி ஜனநாயகவாதிகளுக்கு" ஏற்றவாறு கனன் அடிபணிந்து செல்லும் பொழுது, "றோசன் பேர்க் மரணதண்டனைகளின் போது "அவை பற்றி வெட்கமற்ற முற்றிலும் மர்மமான மௌனத்தைக்" கடைப் பிடித்தனர் எனவும், ஸ்ராலினிசம் பற்றிய கனனின் கட்டுரைகள், ஐக்கிய அமெரிக்க அரசு கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது சம்பந்தமாகத் திடுக்கிட வைக்கும் அரசியல் அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றதுடன், கனன் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொழிலாள வர்க்கத்தின் உத்தியோகபூர்வமான ஒரு பகுதியாக ஒரு பொழுதும் கருதவில்லை என்ற குற்றச்சாட்டை இது உறுதி செய்கின்றது" எனவும் பண்டா குறிப்பிடுகின்றார்.

கனனுக்கும் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கும் எதிரான திரித்தலும், பொய்ப்புனைவினதும் ஒரு சேர்க்கையான இக்குற்றச்சாட்டின் அரசியல் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள இக்குற்றச்சாட்டின் வரலாற்று ரீதியான தோற்றத்தைத் தேடிப் பிடிக்க வேண்டும். சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பப்லோவாத கன்னையின் தலைவர்களான ஃபேட் கொக்கிரான் (Bert Cochran) மற்றும் ஜோர்ஜ் கிளாக் (George Clarke) ஆகியோர் அவர்களது "கட்சி நெருக்கடியின் வேர்கள்" என்ற பத்திரத்தில் பப்லோவை ஆதரித்த வண்ணம் சோசலிசத் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிடப் போராடிய வண்ணம் 1953ம் ஆண்டில் முதல் முதலில் இதை கிளப்பினார்கள். கொக்கிரான் வாதிகள் பண்டாவையும், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் உள்ள அவரது ஓடுகாலிச் சகாக்களையும் முன் கூட்டியே எதிர்பார்த்தவர்கள் போல ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்மேல் எவ்வளவுக்கு எவ்வளவு வெறுப்பையும் பரிகாசத்தையும் வாரிக் கொட்ட முடியுமோ, அவ்வளவையும் கொட்ட முயன்றனர். அவர்கள் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் "பழைய தலைவர்களை" "அருங்காட்சியகப் பொருட்கள்" என்று நையாண்டி செய்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணியை நான்காம் அகிலம் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்று உரிமை கொண்டாவடுவதையும் எள்ளி நகையாடினர்.

ஐரோப்பாவில் உள்ள ஸ்ராலினிஸ்டுகளால் வழி நடத்தப்படும் கட்சிகளின் பலத்தையும், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் கவிழ்க்கப் பட்டதை மற்றும் மாஓவின் தலைமையின் கீழ் ஏற்பட்ட சீனப்புரட்சியின் வெற்றியையும் சுட்டிக் காட்டி, கொக்கிரான்வாதிகள் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் "மலட்டு குழுநிலைவாதத்தைச்" சாடினர். அவர்கள் "சுதந்திரத்தை" அனைத்து நோய்களுக்குமான மருந்தாக்குவதாகவும், மேலும் அது இயக்கத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் மற்றும் முன்னோக்கு பற்றிய பிரச்சினைகளையும் பூடகமான விசுவாசம் மற்றும் நம்பிக்கை மூலமும் கட்சியை மாயமானதொன்றாக்குவதன் மூலமும் எதிர் கொள்ள முயலுகின்றது என்றனர்.

சோசலிசத் தொழிலாளர் கட்சி ''காலாவாதியான சூத்திரங்களுடன்'' முறித்துக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முற்போக்கான பங்கை மட்டுமல்லாது அவற்றின் புரட்சிகரப் பங்கை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு ஊற்றுக்காலாக இருப்பது அதைப் பீடித்துள்ள பயங்கர நோயான "ஸ்ராலினிச வெறுப்பாகும்". இப்படி நோய்வாப்பட்டவர்களுள் அதிக நோயுற்றிருப்பவர் கனன் என்று கொக்கிரான்வாதிகள் பிரகடனப்படுத்தினர். அவர்கள் தமது வாதத்தை நிரூபிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள் வருடக் கணக்கில் நோய்வாப்பட்ட குணம் கொண்ட ஸ்ராலினிச விரோதம், அதாவது ஒரு வகை கம்யூனிச விரோதம் இருந்து வந்துள்ளது என்று நிரூபிக்க முயன்றனர்.  இந்த நோய் ட்ரொட்ஸ்கியால் 1940ம் ஆண்டளவு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றனர். இப்பொழுது பண்டா குறிப்பிடும் கலந்துரையாடலைப் பற்றி --ட்ரொட்ஸ்கி கனன் மற்றும் மற்றைய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பங்கு கொண்ட கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் கொள்கை பற்றிய கலந்துரையாடல் பற்றி அவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். அவர்கள் அதை வெட்கக்கேடற்ற முறையில் அதன் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தியதோடு அதைத் திரித்தும் கூறினர். அதிலிருந்து அவர்கள் சோசலிசத் தொழிலாளர் கட்சி அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அடக்கு முறையை சரியென ஆதரிக்கும் அளவிற்கு எல்லா வகையிலும் சென்றது என்கின்றனர்.

கொக்கிரான்வாதிகள் பின்வருமாறு எழுதுகின்றனர்;

ஸ்ராலினிசம் பற்றிய நமது பிரச்சாரம் பெரும் பகுதியான நேரங்களில் நடைமுறையில் முற்றிலும் பொருத்தம் அற்றவையாக, மிகவும் அடிப்படை மட்ட பயிற்றுவிக்கும் பண்புகள் இல்லாதனவாக உள்ளன. தங்குதடையற்ற அடக்குமுறை, அச்சுறுத்தும் யுத்தம், மற்றும் அனைத்துப் பத்திரிகைகளும், முதலாளித்துவ பொதுஜனக் கருத்து வெளியீடுகளும் உரத்த குரலில் ஸ்ராலினிசத்தைப் பற்றிக் கூக்குரலிடும் பொழுது இந்தப் பண்புகள் எவ்வளவோ தேவைப்படுகின்றன. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஸ்ராலினிஸ்டுகளைத் தாக்குவதுதான் நமது பிரதான அக்கறையாக உள்ளது.  இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்படும் புதிய சூழ்நிலைகள் அவற்றினால் கையாளப்பட வேண்டிய முறைகள் என்பன பற்றி எவ்வித சிந்தனையும் இல்லை. நமது நோக்கம் நம்மை ஸ்ராலினிஸ்டுகளிலிருந்து எம்மை வேறுபடுத்திக் காட்டுவதாக தான் உள்ளது. கையாளப்படும் இந்த முறையுடன் உள்ள பிரச்சினை என்னவென்றால், ஒன்றில் இந்த வேறுபடுத்தல் விளங்கிக்கொள்ள முடியாது உள்ளது அல்லது நமக்கும், முதலாளித்துவ ஸ்ராலினிச விரோதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, வசைமாரிகளின், புரிந்து கொள்ள முடியாத பண்புருப்படுத்தல்கள் என்பனவற்றின் வெள்ளப்பெருக்கத்தில் காணாமற் போகின்றன.

ஸ்ராலினிசத்தின் ஏகாதிபத்தியத்துடனான "சமாதான சகவாழ்வு" என்கின்ற அரசியல் நிலைப்பாடு பற்றி அங்கம் வேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தும் கனனின் அமைதிக்கான பாதை என்ற வெளியீட்டிற்கு எதிராகக் கொக்கிறானும், கிளார்க்கும் தமது கண்டனத்தைத் பின்வருமாறு தெரிவித்தனர்:

"ஏகாதிபத்தியத்தால் அவர்கள் துன்புறுத்தப்படுவதால் தமது இயக்கம் நிஜமாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றது என்று தவறாக நம்புகின்ற, மக்களின் மனப்பான்மை எவ்வளவோ கோபமானதாகவும், நட்பற்றதாகவும் இருப்பினும், அவர்கள் இரண்டாம் பந்தியை வாசிப்பதற்கு முன்னரே அவ்வெளியீட்டை கைவிட்டுவிடச் செய்கின்றது. அது கட்சி உறுப்பினர்களுக்காக எழுதப்பட்டதும், இது எமது அணியுள் மாயையான ஸ்ராலினிச அபாயங்கள் பற்றி அளவு கடந்து ஆதிக்கம் இருக்கின்றது என்பதால் இப்படி எழுதப்பட்டிருப்பாதாகவே ஒருவர் முடிவிற்று வரமுடியும்''.

"மாயையான ஸ்ராலினிச அபாயங்களுடன்" கனன் முன்னீடுபட்டுள்ளார் என்று குற்றம் காண முயன்றவர்கள் வெறும் ஆறே மாதங்களுள், சர்வதேச ரீதியான ஸ்ராலினிச சார்பு மற்றும் கலைப்புவாதப் போக்கின் ஒரு பகுதியாகச் சோசலிசத் தொழிலாளர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்கள். இங்கிலாந்தில் பப்லோவாதக் கன்னையின் தலைவரான ஜோன் லோரன்ஸ் (John Lawrence) உள்ளிருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கலைக்க முயன்று கொண்டிருக்கும் அதே வேளையில் இரகசியமாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டார். அரசியல் ரீதியில் கட்டுப்பாடற்ற முறையிலும் மற்றும் தத்துவார்த்த ரீதியில் கல்வியூட்டப்படாத ரீதியிலும் ஸ்ராலிசத்திற்கு எதிராகக் காட்டப்படும் வெறுப்பு இறுதியில் கொச்சையான கம்யூனிச விரோதமாக உருமாற்றம் பெறுவதற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பயன்படுத்தும் பதம்தான் "ஸ்ராலினிச குரோத நோய்", கனன் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியும் "ஸ்ராலினிச குரோத நோய்" வாய்ப்பட்டவர்கள் என்ற கொக்கிரான் வாதிகளின் பழைய பொய்யை பண்டா மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் என்ற உண்மை பப்லோவாதத்திற்கு அவரது சொந்த சரணாகதியடைதலை அம்பலப்படுத்துகின்றது. சீன, யூகோஸ்லாவிய மற்றும் இந்தோசீன புரட்சிகளின் அல்லது செம்படையினால் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையின் "உலக வரலாற்று முக்கியத்துவத்தை" நான்காம் அகிலத்தால் சரியாக மதிப்பிடத் தவறியது என்று பண்டா கூறுவதன் மூலம் அவரது அரசியல் ஐயுறவாதம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் மேல் அவருக்கு ஏற்பட்டுள்ள முற்று முழுதான நம்பிக்கை இழப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ராலினிசத்திற்கு ஒரு புரட்சிகரப் பங்கை விட்டுக் கொடுக்கும் இந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, பண்டா இலகுவில் பப்லோவாதிகளின் பழைய சேறடிப்புகளினால் கவரப்பட்டுள்ளார்.  அவர் வரலாற்றைத் தவறாகத் திரிந்து அமைக்கக் கிளம்பியிருக்காவிட்டாலும், அவரது அரசியல் கருத்துக்கள், அப்பங்கிற்கு அவரைப் பதனிட்டுள்ளன. பண்டாவின் சீரழிவு அது ட்ரொட்ஸ்கிசத்தை ஸ்ராலினிச குரோத நோயாலான கம்யூனிச விரோதத்தின் ஒரு வகையைச் சேர்ந்ததாக உண்மையில் இனம்காட்ட அல்லது ஸ்ராலினிஸ்டுகள் தாமாகவே கூறக் கூடியது போல "வடிவத்தில் இடது, சாராம்சத்தில் வலது!" என கூறக்கூடியளவிற்கு தூரம் அவரை கொண்டு சென்றுள்ளது.

பண்டாவின் குற்றச்சாட்டுகளின் ஊற்றுக்காலை நாம் நிலைநாட்டியுள்ளோம், இப்பொழுது நாம் அதன் உள்ளடக்கத்தை ஆராய்வோம்.

ஓவியர் டேவிட் ஸ்குயிறோஸ்சின் (David Siqueiros) தலைமையிலான ஜீ.பி.யூ (G.P.U) கொலைப்பிரிவு ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்ய மே 24ம் தேதி செய்த முயற்சியின் ஏறக்குறைய மூன்று வாரங்களின் ஜூன் 1940 இல், பாதுகாப்பு ஒழுங்குகளைப் பலப்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஆராய கனனும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் மற்றைய பல தலைவர்களும் மெக்சிக்கோவில் உள்ள கோயோகானுக்குப் (Coyoacan) பயணம் செய்தார்கள். ஜூன் 12 முதல் 15ம் தேதிவரை அரசியல் முன்னோக்கு பற்றிக் கலந்துரையாடல்கள் நடந்தன. குறிப்பாக சோசலிசத் தொழிலாளர் கட்சியின் இராணுவக் கொள்கை பற்றியும் மற்றும் 1940ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி நடந்த கலந்துரையாடலில், சோசலிசத் தொழிலாளர் கட்சி தனது சொந்த வேட்பாளரை ஜனாதிபதிக்குப் போட்டியிட நிறுத்தத் தவறியதன் பின், பலன் உள்ள முறையில் தேர்தலில் தலையீடு செய்யும் வழிமுறையை வகுத்துக் கொள்ளவில்லை. ரூஸ்வெல்ட் மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாவதற்குத் தொடுத்த பிரச்சாரத்திற்குத் தொழிலாளர் இயக்கத்தினுள் உள்ள ஒரே மாற்று ஸ்ராலினிச வேட்பாளராக நின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏர்ல் பிரவுடராகும் (Earl Browder). கம்யூனிஸ்ட் கட்சியினுள் உள்ள நேர்மையான சாதாரண உறுப்பினர்களைத் தந்திர உபாய ரீதியில் அணுக விமர்சன ரீதியாக பிரவுடரை ஆதரிக்கும்படி ட்ரொட்ஸ்கி தனது கருத்தை முன் வைத்தார். அவர் ஸ்ராலின் ஹிட்லருடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ரூஸ்வெல்டின் யுத்த திட்டங்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்காலிக யுத்த எதிர்ப்பு, சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு ஸ்ராலினிசத் தொழிலாளர் மத்தியில் ஊடுருவ ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது என குறிப்பிட்டார்.

ட்ரொட்ஸ்கி முன்வைத்த கருத்தைக் கனனும் மற்றவர்களும் எதிர்த்தார்கள். இவர்கள் வருடக் கணக்கில் ஸ்ராலினிஸ்டுகளை சளையாது எதிர்த்து வந்ததன் பின், தந்திரோபாயத்தில் கடும் மாற்றம் செய்தால் அதை ஸ்ராலினிஸ்டுகளின் அணிகளிலோ அல்லது தொழிற் சங்கங்களுள் உள்ள தமது முற்போக்கு நண்பர்கள் மத்தியிலோ புரிந்து கொள்ளப்பட மாட்டாது என்று வாதிட்டனர். சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தொழிற் சங்க வேலை பற்றி ட்ரொட்ஸ்கி சூட்சுமமானது மற்றும் ஆழமாகத் தைக்கக் கூடிய முறையிலும் விமர்சனம் செய்தார். இது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புறநிலை ரீதியான பிரச்சினைகளின் உயிர் நாடியைத் தொட்டது. தாம் தலைமை தாங்கிய 1934ம் ஆண்டு மாபெரும் மினியாபோலிஸ் (Minnaepolis) பொது வேலை நிறுத்தத்தின் பின், ஸ்ராலினிஸ்டுகளின் பலாத்கார எதிர்ப்பின் மத்தியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொழிற்சங்க இயக்கத்தினுள் தமது காலடியை ஊன்றப் போராடி வந்தனர். ஸ்ராலினிஸ்டுகளின் குண்டர் முறைகள், வலதுசாரி அமெரிக்க தொழிலாளர் சம்மேளத்தின் மிக ஊழல் மிக்க அதிகாரிகளின் முறைகளுடன் போட்டி போடுகின்றனவாக இருந்தன. தேவையின் காரணமாக தொழிற்சங்கங்களுடன், ஸ்ராலினிசவாதிகள் அல்லாத சக்திகளுடன், மேலோட்டமாக "முற்போக்கானவர்கள்" என்று கூறப்பட்டவர்களுடன் ஒரு தந்திரோபாயரீதியான கூட்டினை ஏற்படுத்த முன்தள்ளப்பட்டனர். பொதுவாக இதன் பொருள் இந்த சக்திகள் தொழிற் சங்கப் போராட்டங்களைப் போர்க்குணம் மிக்க அடிப்படையில் நடத்தத் தயாராக இருந்தன என்பதாகும். இந்தப் பகுதிகளின் சிறந்த பிரதிநிதிதான் ரீம்ஸ்ரேர் (Teamster) இன் தலைவர் பற்ரிக் கொர்கோரன் (Patric Corcoran) ரொபின் (Tobin) இன் பிற்போக்கு கைத்தொழில் தொழிற்சங்க வாதத்திலிருந்து முறித்துக் கொண்டு, அவர் 1937ம் ஆண்டில் படுகொலை செய்யப்படும்வரை மினியாபோலிஸ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் ஒத்துழைத்து லோக்கல் 544க் கட்டினார். தொழிற்சங்கப் போராட்டங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அரங்கினுள், கிரெம்ளினின் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்படும் திடீர் திருப்பங்களிற்கு ஏற்ப, சாதாரண உறுப்பினர்களின் போராட்டங்களை அடிபணியச்செய்ய தயங்காத ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராகச் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கும் மற்றும் "முற்போக்காளர்களுக்கும்" இடையில் ஒரு கோட்பாட்டு ரீதியான கூட்டிற்கு இடம் இருந்தது. இருந்த பொழுதும் இந்தக் கூட்டு அரசியல் அபாயங்களைக் கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி காரசாரமாகக் கூறியது போல தேர்தல் வருடம் உருண்டோடியதும் இந்த முற்போக்காளர்கள் ரூஸ்வெல்ட்டின் அரசியல் முகவர்களாகச் செயற்பட்டார்கள்.

1940ம் ஆண்டுத் தேர்தலில் ஸ்ராலினிஸ்டுகள் பக்கம் ஒரு கூர்மையான திருப்பத்தைச் செய்ய சோசலிசத் தொழிலாளர் கட்சி காட்டிய தயக்கம் அது தொழிற்சங்கங்களில் உள்ள "இடது ரூஸ்வெல்ட்வாதிகளுடன்" அதன் கூட்டை உடைப்பதற்கு இது இட்டுச் செல்லும் என்ற அச்சத்தில் இருந்து ஓரளவு எழுந்துள்ளது என்று ட்ரொட்ஸ்கி தனது சரியான மற்றும் வரவிருப்பது பற்றிய ஆழ்ந்த பார்வையினால் எழுந்த அக்கறையை வெளிப்படுத்தினார். ஸ்ராலினிசத் தொழிலாளர் பக்கம் கடைப்பிடிக்க வேண்டிய நிலை நோக்கை வலியுறுத்திய வண்ணம், ட்ரொட்ஸ்கி சோசலிசத் தொழிலாளர் கட்சியை அந்த முற்போக்காளர்களுடனான அதன் கூட்டின் மேல் அளவுக்கு மிஞ்சிய பெறுமதிப்பை வைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். இவ்வாறு அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தினுள் உள்ள முரண்பாடுகள் பற்றி அவரது ஆய்வை காரியாளர்கள் எதிர்கொள்ளும் நிஜமான சிக்கல்களை புரிந்து, அவற்றை நடைமுறைச் செயற்பாட்டிற்கான ஸ்தூலமான யோசனையாக உருவம் கொடுத்தார்.

"நமது உரையாடலின் விளைபயன், ஸ்ராலினிஸ்டுகள் பற்றி மேலும் திட்டவட்டமான ஆய்விலும் பார்க்க வேறு எதுவும் அல்லாமல் இருந்திருக்குமாயின் அது மிகவும் பலன் உள்ளதாகும். "எப்படி சோசலிசக் கட்சி பக்கம் திரும்பிய தந்திரோபாயத்தின் நடைமுறை மூலம் நமது கட்சி கட்டுப்படவில்லையோ, அதிலும் பார்க்கக் கூடுதலாக ஸ்ராலினிஸ்டுகள் பக்கம் திரும்பும் தந்திரோபாய நடைமுறை மூலம் கட்டுப்பட வேண்டியதில்லை. நாம் சாதகமானவற்றையும், பாதகமானவற்றையும் கூட்டிப் பார்க்க வேண்டும். ஸ்ராலினிஸ்டுகள் தமது செல்வாக்குகளைக் கடந்த பத்தாண்டுகளில் பெற்றுள்ளனர். பொருளாதாரத் தாழ்வு ஏற்பட்டு, பிரமாண்டமான தொழிற்சங்க இயக்கம் ஏற்பட்டு சீ.ஐ.ஓ (CIO) அமைப்பதில் முடிவடைந்துள்ளது. கைத்தொழில் தொழிற் சங்கவாதிகள்தான் அக்கறை அற்றவர்களாக இருக்க முடியும்.

"ஸ்ராலினிஸ்டுகள் இந்த இயக்கத்தைத் தமக்கும் சாதகமாகப் பயன்படுத்தி தமது  சொந்த அதிகாரத்துவத்தைக் கட்ட முயன்றுள்ளனர்.  முற்போக்காளர்கள் இதைப்பற்றி அஞ்சுகின்றனர். இந்த முற்போக்காளர்கள் என்பவர்களின் அரசியல் இந்த இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்பதால் நிர்ணயிக்கப்படுவதுடன் மறுபக்கத்தில் இது  ஸ்ராலினிஸ்டுகள் பற்றிய அச்சத்தில் இருந்து வருகின்றது. அவர்கள் பசுமைக்கட்சியினைப்  போன்ற அதே கொள்கையை வைத்திருக்க முடியாது. இல்லாவிட்டால் ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது பதவிகளில் உட்கார்ந்து விடுவார்கள்.  அவர்களின் இருப்பு இந்தப் புதிய இயக்கத்தின் பிரதிபலிப்பாகும். ஆனால் அது சாதாரண உறுப்பினர்களின் நேரடிப் பிரதிபலிப்பல்ல.  இந்த நிலைமைக்குப் பழைமைவாத அதிகாரிகளின் இயைந்து போதலாகும்.  இங்கு உள்ள இரு போட்டியாளர்கள் முற்போக்கு அதிகாரிகளும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளும்.  இந்த உணர்வுகளைக் கைவசப்படுத்த முயலும் மூன்றாவது போட்டியாளர்கள்தான் நாம்.  இந்த முற்போக்கு அதிகாரிகள், ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், ஆலோசகர்களுக்காக நம்மேல் சார்ந்திருக்க முடியும்.  ஆனால் நீண்ட காலப் போக்கில் முற்போக்கு அதிகாரிக்கான ஆலோசகரின் பங்கு, அதிகம் தரும் என்று உறுதியளிப்பதாக இல்லை.  நமது உண்மையான பங்கு எதுவென்றால் மூன்றாவது போட்டியாளரின் பங்காகும்.

"அதன் பின் இந்தப் போட்டியாளர்கள் பற்றி நமது நிலைப்பாடு பற்றிய பிரச்சினையாகும் -- இந்தப் போட்டியாளர்கள் சம்பந்தமாக பூரணமாகத் தெளிவாக உள்ள நிலைப்பாடு நம்மிடம் உண்டா? இந்த அதிகாரிகள் ரூஸ்வெல்ட்வாத இராணுவவாதிகள். அவர்களது உதவியுடன் நாம் தொழிற் சங்கங்களை ஊடுருவ முயன்றோம். இது சரியான தந்திரோபாய நடைமுறை என்று நம்புகின்றோம். நாம் நமது பிரதான தந்திரோபாய நடைமுறையில் எவ்வளவுக்கு எவ்வளவு வெற்றியடைகின்றோமோ, ஸ்ராலினிஸ்டுகள் பற்றிய பிரச்சினை அப்போது தானாகத் தீர்க்கப்படும் என்று நம்மால் கூற முடியும்.  ஆனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கும், யுத்தப் பிரச்சினைக்கும் முன்னர் நமக்கு ஒரு சிறிய தந்திரோபாய நடைமுறைக்கு இடம் உண்டு.  நாம் உங்களது தலைவர்கள் உங்களைக் காட்டிக் கொடுக்கின்றார்கள் என (ஸ்ராலினிஸ்டுகளின் சாதாரண உறுப்பினர்களுக்குக்) கூற முடியும். ஆனால் நாம் உங்களது தலைவர்களின் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல், உங்களது தலைவர்கள் உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள் என்பதை எடுத்துக் காட்ட உங்களுடன் கூடச் செல்ல முடியும்

"இது ஒரு குறுகிய தந்திரோபாய நடைமுறையாகும்.  பிரதான பிரச்சனையான யுத்தம் பற்றிய பிரச்சினையில் தங்கியிருக்கவில்லை. ஆனால் ஸ்ராலினிஸ்டுகளைப் பற்றி, தொழிற் சங்கங்களுள் அவர்களுக்கு உள்ள இடத்தைப் பற்றி, நமது கட்சியை தொடர்பான அவர்களது எதிர்விளைவுகளைப் பற்றி எல்லாம் நாம் ஒப்பிட முடியாத அளவு சிறப்பாக அறிந்திருக்க வேண்டும். நமது சமாதானவாத மற்றும் "முற்போக்கு" அதிகாரி நண்பர்கள் மேல் நாம் ஏற்படுத்தும் எண்ணம் பற்றி அளவுக்கு மிஞ்சி அக்கறை காட்டுவது அழிவுகரமானதாகும்.  இந்த விசயத்தில் நாம் அதிகாரிகளின் பிழிந்த எலும்பிச்சம் பழமாகின்றோம். அவர்கள் நம்மை ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் யுத்தம் நெருங்க அவர்கள் எங்களை தேச பக்தியற்றவர்கள் என்று வெளியேற்றுகின்றார்கள். குறிப்பாக மொஸ்கோ அதன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி தேசபக்தி உள்ளதாக  மாறுமாயின், இந்த ஸ்ராலினிசத் தொழிலாளர்கள் புரட்சிகரமானவர்களாக மாற முடியும்.  பின்லாந்து தொடர்பான பிரச்சனையில் மாஸ்கோ ஒரு கஷ்டமான திருப்பத்தைச் செய்தது; புதிய திருப்பம் ஒன்று அதிலும் பார்க்க வேதனையுள்ளதாக இருக்கும்.

ஆனால் நாம் தொடர்புகளை மற்றும் தகவல்களை வைத்திருக்க வேண்டும். புரிந்து கொள்ளுங்கள், நான் இந்தத் திட்டத்தை வற்புறுத்தவில்லை. ஆனால் நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எந்தத் திட்டத்தை முன்வைக்கின்றீர்கள்? தொழிற்சங்க இயக்கத்தின் முற்போக்கு அதிகாரிகளும் மற்றும் நேர்மையற்ற மத்தியவாதிகளும் அடித்தளத்தின் முக்கிய மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றார்கள். ஆனால் கேள்வி என்னவெனில், அடித்தளத்தை எவ்வாறு அணுகுவது என்பதாகும். நாம் அடித்தளத்திற்கும் எமக்கும் இடையில் ஸ்ராலினிஸ்டுகளை நாம் எதிர்கொள்கின்றோம்.

யுத்த வெடிப்பு உருவாக்கும் பிரமாண்டமான அரசியல் அழுத்தங்களை எதிர்பார்த்து, ட்ரொட்ஸ்கி தொழிற் சங்கங்களினுள் உள்ள பழமைவாதத் தட்டுக்களுக்கு இயைந்து போவதன் அபாயத்தை அடிமேல் அடியடித்து விளக்கினார்.

"நீங்கள் முன் வைப்பது, ஒரு தொழிற் சங்கக் கொள்யகையேயன்றி, ஒரு போல்ஷேவிக் கொள்கையல்ல ரூஸ்வெல்ட் வாதத் தொழிற்சங்கவாதிகளின் கண்களின் முன் விட்டுக் கொடுத்துவிடுவீர்கள் என நீங்கள் அஞ்சுகின்றீர்கள். மறுபுறம் அவர்கள் உங்களுக்கு எதிராக ரூஸ்வெல்ட்டிற்கு வாக்களிப்பதன் மூலம் தாம் விட்டுக் கொடுப்பது பற்றி அவர்கள் இம்மியளவும் கவலைப்படவில்லை. நாம் விட்டுக்கொடுத்துவிடுவோமா எனபதையிட்டு அஞ்சுகின்றோம். நீங்கள் அஞ்சினால், நீங்கள் உங்களது சுதந்திரத்தை இழந்து அரை ரூஸ்வெல்ட்வாதிகளாவீர்கள். சமாதான காலத்தில் இது பேரழிவானதல்ல. யுத்த காலத்தில் இது எம்மை சமரசத்திற்குள்ளாக்கிவிடும். அவர்கள் நம்மை அடித்து நொருக்க முடியும். நமது கொள்கை ரூஸ்வெல்ட் சார்பான தொழிற் சங்கவாதிகளுக்கு அளவுக்கு மிஞ்சி ஆதரவானதாக இருக்கும். இது உண்மையானது என்பதை நான் அதை Northwest organizerல் கவனிக்கக் கூடியதாக இருந்தது. அதை நாம் முன்பு கலந்துரையாடினோம். ஆனால் ஒரு சொல்லு மாற்றப்படவில்லை, வெறும் ஒரு சொல்லுக்கூட. அபாயம்- பயங்கர அபாயம் என்னவென்றால் ரூஸ்வெல்ட் சார்பு தொழிற்சங்க வாதிகளுக்கு அடிபணிந்து போவதாகும்."

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் வேலைகளில் அதிகாரத்துவத்திற்கு இயைந்து போகின்ற அம்சம் ஒன்று உண்டா என்று நேரடியாக ட்ரொட்ஸ்கியிடம் கேட்கப்பட்டது. அவர் "ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அப்படித்தான் என்று நான் நம்புகின்றேன்.  முற்று முழுதாக நிச்சயமாக இருக்க போதுமான அளவு என்னால் நெருக்கமாக கவனிக்க முடியாது. இந்தக் கட்டம் போதுமான அளவு சோசலிச அப்பீலில் பிரதிபலிக்கப்படவில்லை..... அப்படியான செய்தி வெளியீடு ஒன்று இருப்பது, அதில் நமது தொழிற் சங்க வேலை பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிடுவது மிகவும் நல்லது. Northwest organizerஐ கவனிக்கும் பொழுது ஒரு முழு காலப் பகுதியில் ஒரு இம்மியளவும் மாற்றத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அது அரசியல் சார்பற்றதாக இருக்கின்றது. இது ஒரு அபாயகரமான அறிகுறி. ஸ்ராலினிசக் கட்சி சம்பந்தமான வேலையை முற்று முழுதாகப் புறக்கணித்தல் மற்றுமொரு அபாயகரமான அறிகுறி.

"ஸ்ராலினிஸ்டுகள் பக்கம் திரும்புவது என்பதன் பொருள், நாம் முற்போக்காளரை விட்டு விட்டு மறுபக்கம் திரும்புவதில்லை. இதன் பொருள் நாம் ஸ்ராலினிஸ்டுகளுக்கு உண்மையைக் கூறுவதாகும், ஸ்ராலினிஸ்டுகளை அவர்களது புதிய திருப்பத்திற்கு முன் கூட்டியே நாம் பிடித்து விடுவதாகும்."

"நமது தொழிற் சங்க வேலைக்கு ஒரு வகை அமைதிவாத முறையிலான இயைந்து போதலைக் காணக் கூடியதாக எனக்கு உள்ளது. உடனடியாக அபாயம் ஒன்றில்லை.  ஆனால் மிகவும் கருத்திற்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும். இது செல்லும் திசையில் மாற்றத்தின் தேவையைச் சுட்டிக் காட்டுகின்றது. பல தோழர்கள் தொழிற் சங்க வேலையில் அக்கறை கொண்டுள்ளார்களே அன்றி கட்சி வேலையில் அல்ல. கூடிய கட்சிக் கட்டுக் கோப்பு தேவைப்படுகின்றது, கூடிய கூர்மையான தந்திரோபாயத் திருப்பங்கள், கூடிய கருத்தூன்றிய நெறிப்படுத்தப்பட்ட தத்துவார்த்த பயிற்சி தேவை இல்லாவிட்டால் தொழிற்சங்கங்கள் நமது தோழர்களைத் தமது பக்கம் ஈர்த்துக் கொள்ள முடியும்.

தொழிற் சங்க பணித்துறையினர், கட்சியின் வலதுசாரிப் பகுதியை உருவாக்குவர் என்பது ஒரு வரலாற்று நியதியாகும். இதற்கு ஒரு விதிவிலக்கும் இல்லை. இது சமூக ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் உண்மையாக இருந்தது. போல்ஷிவிக்குகளைப் பொறுத்தவரையும் கூட இது உண்மையாக இருந்தது. உங்களுக்குத் தெரியும் ரொம்ஸ்கி (Tomsky) வலதுசாரிப் பகுதியினருடன்தான் இருந்தார் என்று. இது முற்று முழுதாக இயற்கையானது. அவர்கள் பின்தங்கிய பகுதியினரான வர்க்கத்துடன் இயங்குகின்றனர். தொழிலாள வர்க்கத்தினுள் அவர்கள்தான் கட்சியின் முன்னணிப் படை. அடிபணிந்து போவதற்கான களம் தொழிற்சங்கங்கள்தான். இந்த அடிபணிந்து போதலைத் தமது தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் தொழிற்சங்கங்களில் உள்ளவர்களாகும். இதன் காரணமாகவே பின்தங்கிய பகுதியினரின் அழுத்தம் எப்பொழுதும் தொழிற்சங்கத் தோழர்களினூடு கட்சியினுள் பிரதிபலிக்கும். இது ஒரு ஆரோக்கியமான அழுத்தமாக இருந்தபொழுதும், இது வரலாற்று ரீதியான வர்க்க நலன்களில் இருந்து அவர்களை முறிக்கவும் முடியும் --அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாறவும் முடியும்.

கட்சி முக்கியமான வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தப் பேறுகள் குறிப்பிட்ட அளவிலான இயைந்து போதலின் மூலம்தான் சாத்தியமாகின, ஆனால் மறுபுறம் தவிர்க்க முடியாத அபாயங்களைச் சுற்றி இடைமறிக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்''.

ட்ரொட்ஸ்கியின் தலையீட்டை, சோசலிசத் தொழிலாளர் கட்சியையும் மற்றும் கனனையும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டது என்று எடுத்துக்காட்ட எடுக்கும் முயற்சி வரலாற்றுப் புறநிலைவாதத்தை நையாண்டித்தனமாக போலியாக்குவதாகும். 1940 ம் ஆண்டுத் தேர்தலுக்கான கட்சிக் கொள்கை பற்றிய கலந்துரையாடல் மூலம், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் நிஜ வளர்ச்சி மற்றும் அரசியல் பெறுபேறுகள் மூலம் எழுந்த அடிப்படை ரீதியான முரண்பாடுகளை ட்ரொட்ஸ்கி தெளிவுபடுத்தினார். இந்தப் பெறுபேறுகளை ட்ரொட்ஸ்கி விளக்கியது போல "முற்போக்காளர்களுடன்" கூட்டு வைக்காமலும் மற்றும் குறிப்பிட்டளவு அடிபணிந்து போதல் இல்லாமலும் பெற்றிருக்க முடியாது. ஆனால் இந்த இன்றியமையாத அடிபணிந்து போதல் ஒரு காலப் பகுதியில் சாதகமாக இருந்திருக்குமாயின் அது இப்பொழுது அண்மித்துவரும் யுத்த நிலமையின் கீழ், அதன் பாதகமான அம்சங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இவை தந்திரோபாயத்தில் மாற்றங்களை அவசியமாக்கின.

பிரவுடர் (Browder) பற்றித் தான் முன் வைத்த கருத்தின் சரியான தன்மையை ட்ரொட்ஸ்கி கனனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியவில்லை. இது இரண்டாந்தர முக்கியத்துவம் வாய்ந்த தந்திரோபாயப் பிரச்சினையாகும். இது சம்பந்தமாக ட்ரொட்ஸ்கி ஒரு பொழுதும் பிரச்சினைப்படுத்தவில்லை. "முற்போக்காளர்களுக்கு" அடிபணிந்து செல்லும் அபாயத்தின் சாத்தியக்கூறு பற்றிய எச்சரிக்கை உள்ளார்ந்த அக்கறையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மையில் ஜி.பி.யு. உளவாளி ராமொன் மெக்கடர் (Ramon Mercader) இன் மரணத் தாக்கல் ஏற்படுவதற்கு சில மணி நேரத்தின் முன் மினியாப்போலிஸின் உள்ள சோசலிசத் தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தில், லோக்கல் 544 (Local 544) இன் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள Northwest organizer இல் ஏற்பட்ட மாற்றங்களை வரவேற்கிறார். " Northwest organizer கூடுதலாகத் துல்லியமானதாக --தீவிரமானதாகவும், கூடுதலாக அரசியல் ரீதியானதாக மாறுகின்றது. நாம் அதையிட்டு மிகவும் சந்தோசமடைந்தோம்."

ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்கு ஒரு மாதத்தின் பின் நடந்த மாநாடு ஒன்றில், யூன் மாதக் கலந்துரையாடலில் எழுந்த கருத்துவேறுபாடுகளைக் கனன் கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார். பிரவுடர் சம்பந்தமாக முன் வைக்கப்பட்ட கருத்து பற்றி தனக்குள்ள கருத்து வேறுபாட்டை மீண்டும் கூறிய வண்ணம் கனன், ஸ்ராலினிஸ்டுகளின் அணிகளை ஊடுருவ மேலும் கூடுதலாக வலிந்து தாக்கும் தன்மையுள்ள பிரச்சார இயக்கத்தின் தேவையை ஏற்றுக் கொண்டார். ட்ரொட்ஸ்கியின் வாதத்தின் பிரதான அம்சத்தை எடுத்துக் கொண்ட கனன் "முற்போக்காளர்கள்" பற்றிய பிரச்சினையை அவர் மீளாய்வு செய்தார்.

ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக இந்த சக்திகளுடன் கூட்டமைத்ததன் சரியான தன்மையை பாதுகாத்த வண்ணம் கனன், "தொழிற் சங்கங்களினுள் நமது வேலை பெரும்பகுதி நாளாந்தப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட நாளுக்கு நாள் நடக்கும் சமாச்சாரமாக இருந்து வந்துள்ளது. அதற்குப் பொதுவான அரசியல் நிலை நோக்கு மற்றும் முன்னோக்கு இல்லாதிருந்து வந்துள்ளது. இது நமக்கும் வெறும் சாதாரண தொழிற்சங்கவாதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மழுங்கடிக்கச் சென்றுள்ளது. பல சந்தர்ப்பங்களில், சில நேரங்களில் அவர்கள் எங்களுடன் ஒன்றாக உள்ளவர்களாகத் தோன்றியுள்ளனர். அப்பொழுது காலம் நல்லதாக இருந்தது, நல்லவர்கள் ஒருமித்து இருந்தனர். யுத்தம் கிழப்பிடியுள் மிகப் பெரும் பிரச்சினைகள் இந்த சுகந்தத்தை முரட்டுத்தனமாகக் குலைக்கின்றது.  நமது சில தோழர்களுக்கு எப்படி ஒரு யுத்த நிலைமை எப்படி ஐயப்பாட்டிற்கு முடிவு கட்டி மனிதர்களை அவர்களது உண்மையான உருவத்தை காட்டச் செய்கின்றது என்று இப்பவே வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. சிலபேர் கிட்டத்தட்ட நாம் முன்வைத்த எல்லா யோசனைகளுடனும், முதலாளிகளிடமிருந்து எப்படி மேலும் சிறந்த உடன்பாடுகளைப் பெறக் கூடியதாகச் சங்கத்தை மேன்மைப்படுத்த முடியும் என்பன போன்ற யோசனைகளுடன் எம்முடன் கை கோர்த்த வண்ணம் வந்தார்கள். இதையடுத்து தொழிற்சங்க வழக்காறு ரீதியான சமாதான செயற்பாடுகள் அத்தனையும் திடீரென யுத்தத்தின், தேசபக்தி, தேசிய தேர்தல், போன்ற இன்னோரன்னவற்றின் பிரச்சினைகளால் நிலை குலைக்கப்பட்டு ஆட்கொள்ளப்படுகின்றன. சாதாரண காலங்களில் எவ்வளவோ நல்லவர்களாகத் தோன்றிய இந்த தொழிற் சங்கவாதிகள் எல்லாம் தேசபக்தர்களாகவும், ரூஸ்வெல்ட் வாதிகளாகவும் தோன்ற ஆரம்பிக்கின்றார்கள். இப்பொழுது அவர்களுடன் நாம் ஒத்துழைப்பதும் எவ்வளவோ குறுகியதாகி உள்ளது.

''அரசியல் ரீதியாகத் தொழிற்சங்க "முற்போக்காளர்களுடன்"  ஒத்துழைக்க எமக்கு அடிப்படை எதுவுமில்லை. போகப்போக, யுத்த எந்திரத்தின் அழுத்தம் மேலும் பலமானதாக இது நமக்கு மேலும் மேலும் குறைவானதாகும்."

1941ம் ஆண்டின் சிமித் சட்ட (Smith Act) வழக்கும் யுத்த வெடிப்பு போன்ற பிந்திய அபிவிருத்திகள், அரசியல் கோட்பாடு பற்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகச் சோசலிசத் தொழிலாளர் கட்சி உண்மையில் "முற்போக்காளர்களை" எதிர்த்துப்போராடவும் அவர்களுடன் முறித்துக் கொள்ளவும் உண்மையில் தயாராக இருந்தது என்பதை எடுத்துக் காட்டின.  மறுபுறம் நாசிகள் சோவியத் ஒன்றியத்தை 1941இல் ஆக்கிரமித்ததையடுத்துக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தேசபக்த நிலைப்பாட்டிற்குச் சென்றது. இது ஸ்ராலினிச அணிகளில் ஒரு தாற்பரியமான நெருக்கடியை உண்டுபண்ணவில்லை.  ஆனால் ட்ரொட்ஸ்கி எச்சரித்த பலவீனத்தைச் சோசலிசத் தொழிலாளர் கட்சி காட்டாததும், மற்றும் அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் அணிகள் அவர் சாத்தியமானது என்று எண்ணியதிலும் பார்க்க மிகவும் குறைவான புரட்சிகர நனவை எடுத்துக் காட்டின என்பதும் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, அவரின் தலையீட்டை செல்லாதாக்கவில்லை.  ட்ரொட்ஸ்கி ஒரு  மார்க்சிச இயங்கியல்வாதியே தவிர ஒரு சோதிடர் அல்ல.  அவர் புரட்சிகரத் தலைமைக்குக் கல்வியூட்ட மற்றும் அவரது அகண்ட மற்றும் ஒப்பிட முடியாத அனுபவத்தில் இருந்து அது பலன் அடையவும் போராடினார்.

1940 ஜூன் மாத சோசலிசத் தொழிலாளர் கட்சியுடனான கலந்துரையாடலை ஒரு பயங்கரமான நேருக்கு நேரான மோதல் என்று பண்டா படம் பிடித்துக்காட்டுவது இது ட்ரொட்ஸ்கி கையாண்ட முறையைத் திரித்து மிகைப்படுத்திக் கேலிக்கூத்தாடுவதற்கு ஒத்ததாகும். இதில் மீண்டும் சரி செய்ய முடியாத முறையில், ஐயத்திற்கு இடமின்றி மற்றும் என்றென்றைக்குமாக சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பயனற்ற தன்மையை மட்டுமல்லாது, ட்ரொட்ஸ்கியுடன் இணைந்து இயங்கிய எல்லோரினதும் பயனற்ற தன்மையும் நிரூபணம் ஆகின்றது என்கிறார் பண்டா. உண்மையில் அந்தக் கலந்துரையாடல் கல்வியூட்டலில் ஒரு மாபெரும் முயற்சி ஆகும். இது சர்வதேச இயக்கத்தின் தத்துவார்த்த தலைவர் என்ற ரீதியில் ட்ரொட்ஸ்கி ஆற்றிய பிரம்மாண்டமான சாதகமான பங்கின் ஒரு எடுத்துக்காட்டாகும். இப்படியான சந்தர்ப்பங்களில் சுருக்கெழுத்தாளர்கள் இருந்திருப்பார்களாயின், அப்படியான கலந்துரையாடல்களின் எழுத்துப்படிகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் ஆவணக்களஞ்சியங்களில் இருப்பதைப் போன்றதைபோல் காணக்கூடியதாக இருந்திருக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில், அவர்களுடைய கடிதப்பரிமாற்றங்கள் எடுத்துக்காட்டுவதுபோல, குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் வடக்கின் சாத்தியக்கூறுகள் பற்றி மார்க்ஸ் தனது "அன்புள்ள பிரெட்டின்" கருத்துக்களைத் திருத்த வேண்டி இருந்தது. பண்டா இந்தக் கடிதப் பரிமாற்றத்தைப் பற்றி அறிந்திருந்தார்.  (இன்றுவரை இல்லை, ஆனால் யாருக்குத் தெரியும் எவ்வளவு காலத்திற்கு ஸ்ரோன்வெல் ஜாக்சனுக்கு (Stonewall Jackson) "ஏங்கெல்சின் இகழார்ந்த ரீதியான சரணாகதி" என்ற தூற்றலில் இருந்து நாம் தப்பித்துள்ளோம் என்று).  இந்தக் கலந்துரையாடல்கள் எந்த அரசியல் சூழ்நிலைகளினுள் விரிவுற்றன என்பதை பண்டாவால் கிரகித்துக் கொள்ள முடியாது போனதோடு, அவற்றை வரவிருக்கும் பிளவின் முன்அறிகுறிகள் என்று மட்டும் எண்ணமுடிந்தது என்றால் அதற்கான காரணம் அரசியல் கருத்து வேறுபாடுகள் பற்றிய முக்கிய கலந்துரையாடல்கள், தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் ஒரு தசாப்தமாக முடியாத விடயமாக இருந்து வந்துள்ளமையாகும்.

Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved