ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தினால் ஜனவரி 21, 2001ல் அவுஸ்திரேலிய சர்வதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை.

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் இருந்து 60 ஆண்டுகள்

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1940ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் திகதி, மனிதனின் சுயவிடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றில், சர்ச்சைக்கு இடமற்ற விதத்தில் முதலாவது இடங்களில் ஒன்றை எப்போதும் பிடித்துக் கொண்டுள்ள ஒரு மனிதன் இறந்தார். வரலாற்றாசிரியர்கள் எதிர்வரும் ஆண்டுகளிலும், தசாப்தங்களிலும் 20ம் நூற்றாண்டை அறிந்து ஆராய்ச்சி செய்து, விளக்கும்போது லியோன் ட்ரொட்ஸ்கி என்ற உருவம் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் பிரமாண்டமானதாக இருக்கும். போராட்டங்களும் அபிலாசைகளும் கடந்த நூற்றாண்டின் துன்பியல்களும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையில் போன்று வேறு எவரது வாழ்க்கையிலும், ஆழமாகவும் உயர்ந்த விதத்திலும் வெளிப்பாடாகவில்லை. நாம் தோமஸ் மானின் (Thomas Mann) சிறப்பான கருத்தான -"எமது காலத்தில் மனிதனின் தலைவிதி அரசியல் வார்த்தைகளில் முன்வைக்கப்படுகின்றது"- என்பதை ஒப்புக் கொண்டால் ட்ரொட்ஸ்கியின் 60 ஆண்டுகால வாழ்க்கையில் அந்தத் தலைவிதி பெரிதும் நனவான முறையில் யதார்த்தமாகியது என மிகைப்படுத்தும் அச்சம் இல்லாமல் கூறலாம். லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை இறுதிக் காலப்பகுதியில் உலக சோசலிசப் புரட்சியின் சுகதுக்கங்களில் (நிலைமாற்றங்களில்) பெரிதும் அத்தியாவசியமானதும் ஒருமுனைப்படுத்தப்பட்டதுமான வெளிப்பாடாகும்.

அவரது மரணத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகமும், எதிர்ப்பும் (குரோதமும்) கொண்ட ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளருடன் நடாத்திய ஒரு கலந்துரையாடலில் ட்ரொட்ஸ்கி தமது வாழ்க்கையை ஒரு தொகை குழப்பமும் அத்தோடு இறுதியில் துன்பகரமான நிகழ்வுகளும் கொண்டதாக காணவில்லை எனவும் புரட்சிகர இயக்கத்தின் வரலாற்று வளைபாதையின் வேறுபட்ட கட்டங்களின் வார்த்தைகளின் அர்த்தத்தில் கண்டதாகவும் கூறினார். 1917ல் அவர் அதிகாரத்துக்கு எழுச்சி கண்டமை தொழிலாளர் வர்க்கத்தின் முன்னொருபோதும் இல்லாத எழுச்சியின் விளைவாகும். ஆறு வருடகால அவரது அதிகாரம் அந்த எழுச்சியினால் சிருஷ்டிக்கப்பட்ட சமூக, அரசியல் உறவுகளில் சார்ந்து கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கியின் தனிப்பட்ட அரசியல் அதிஸ்டங்களின் வீழ்ச்சி புரட்சிகர அலையின் வீழ்ச்சியிலிருந்தே ஈவிரக்கமற்ற முறையில் பெருக்கெடுத்தது. ட்ரொட்ஸ்கி அதிகாரத்தை இழந்ததற்குக் காரணம், அவர் ஸ்ராலினைக் காட்டிலும் திறமை குறைந்த அரசியல்வாதியாக இருந்தது அல்ல. ஆனால் அவரது அதிகாரம் அடிப்படையாகக் கொண்டிருந்த சமூக சக்தியான ரஷ்ய, சர்வதேச தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியில் பின்வாங்கியிருந்தமையாலாகும். உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் சோர்ந்து போனமையும் சோவியத் அதிகாரத்துவத்தின் (Soviet Bureaucracy) அரசியல் அதிகார வளர்ச்சியும், ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் அடைந்த தோல்விகளும், இறுதி ஆய்வுகளில் குறிப்பாக ஜேர்மனியில் ஏற்பட்ட தோல்வியும் ட்ரொட்ஸ்கி அதிகாரத்தில் இருந்து வீழ்ச்சி கண்டதற்கான தீர்க்கமான காரணிகளாகும்.

இதைத் தொடர்ந்து சர்வதேசத் தொழிலாள வர்க்கம் கண்ட சகல தோல்விகளும் ட்ரொட்ஸ்கியின் தனிப்பட்ட தலைவிதியில் பதிவாகியது: 1927ல் சீனப்புரட்சியின் தோல்வியால் தூண்டப்பட்ட அரசியல் சீர்குலைவானது (செயலிழந்த நிலை), ஸ்ராலின் இடது எதிர்ப்பாளர்ளை (Left Opposition) கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்து விலக்கவும் ட்ரொட்ஸ்கியை முதலில் Alma Ata வுக்கும் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு வெளியேயும் நாடுகடத்தும் வாய்ப்பை வழங்கியது. ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொலைகாரத்தனமானதும், பொறுப்பற்றதுமான கொள்கைகள் 1933ல் ஹிட்லரின் வெற்றியை சாத்தியமாக்கியது. இது மொஸ்கோ பொய் வழக்குகள், ஸ்ராலினிச மக்கள் முன்னணி வாதத்தின் அரசியல் பேரழிவு, இறுதியாக ட்ரொட்ஸ்கி ஐரோப்பா கண்டத்தில் இருந்து தூரஇடமான மெக்சிக்கோவுக்கு நாடுகடத்தப்பட்டமை போன்றவற்றிற்கு வழிவகுத்த ஒரு தொடரான பயங்கர நிகழ்வுகளை நடைபெற வைத்தது.

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியான கொயோகானில் (Coyoacan) ட்ரொட்ஸ்கி ஒரு ஸ்ராலினிச கையாளால் படுகொலை செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கியின் மரணமானது பாசிச, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் இரத்தம் தோய்ந்த வெறியாட்டத்தின் உச்சக் கட்டத்தில் இடம்பெற்றது. அச்சமயத்தில் ட்ரொட்ஸ்கியின் நிஜமான சகல பழைய தோழர்கள் அனைவரும் சோவியத் யூனியனில் ஒழித்துக் கட்டப்பட்டனர். ட்ரொட்ஸ்கியின் சகல நான்கு பிள்ளைகளும் இறந்து போயினர். இரண்டு மூத்த பெண் பிள்ளைகளும் தமது தந்தையின் படுகொலையினால் ஏற்பட்ட கொடுமையைச் சகிக்க முடியாமல் அகாலமாக மரணமாகினர். இரண்டு மகன்களான சேர்ஜியும் (Sergei) லேவும் (Lev) ஸ்ராலினிச ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டனர். லேவ் செடோவ் (Lev Sedov) 1938 பெப்பிரவரியில் பாரிசில் இறந்தபோது தந்தைக்கு அடுத்ததாக நான்காம் அகிலத்தின் பெரிதும் முக்கியமான அரசியல் பிரதிநிதியாக விளங்கினார். நான்காம் அகிலத்தின் செயலகத்தில் ஏனைய தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக விளங்கிய எர்வின் வொல்வும் (Ervin Wolf) ரூடோவ் கிளமென்டும் (Rudolf Klement) 1937லும் 1938லும் கொலை செய்யப்பட்டனர்.

1940ல் ட்ரொட்ஸ்கி, தனது படுகொலை தவிர்க்க முடியாத ஒன்றெனக் கருதினார். இது எந்த விதத்திலும் அவர் தமது தலைவிதிக்கு ஏதோ ஒரு வகையான அவநம்பிக்கையோடு அடிபணிந்து போனார் என்பதைக் கருதிவிடாது. ஸ்ராலினும் அவரது ஏஜன்டுகளும் ஜி.பி.யூ, என்.கே.வி.டி. (GPU/NKVD) இல் உள்ள அவரது ஏஜன்டுகளும் தாக்குதல் நடாத்துவதைத் தவிர்க்கவும் தாமதப்படுத்தவும் தம்மால் முடிந்த சகலதையும் அவர் செய்தார். ஆனால் அவர், ஸ்ராலினின் சதிகள் எதிர்ப்புரட்சியினால் போஷிக்கப்பட்டு வந்தன என்பதை புரிந்து கொண்டிருந்தார். அவர் எழுதுகையில் கூறியதாவது: "நான் உயிர்வாழ்வது சட்டப்படி அல்ல: ஆனால் அதற்கு விதிவிலக்கான முறையிலாகும்."

1940 வசந்த காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் யுத்தம் வெடிப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்ராலின் ஒரு தாக்குதலை நடத்தலாம் என அவர் தீர்க்கதரிசனமாகக் கூறி இருந்தார். ட்ரொட்ஸ்கி கூறியது சரியென்பது நிரூபிக்கப்பட்டது.

முதலாவது மாபெரும் கொலை முயற்சி 1940 மே 24ம் திகதி மாலை ஹிட்லரின் முன் பிரெஞ்சு இராணுவ தோற்கடிப்பின் மீது உலக கவனம் திசை திருப்பப்பட்டு இருந்த சமயம் இடம்பெற்றது. இரண்டாவதும் வெற்றிகரமுமான முயற்சி, அதே ஆண்டு கோடை காலத்தின் கடைப்பகுதியில் பிரித்தானியாவின் மீதான போரின் போது இடம்பெற்றது.

ட்ரொட்ஸ்கி நாடு கடந்த நிலையிலும், வெளிப்படையாக தனிமைப்படுத்தப்பட்டும் இருந்த ட்ரொட்ஸ்கி ஏன் அச்சத்துக்கு உரியவராக இருந்தார்? அவரின் மரணம் அவசியமாக விளங்கியது ஏன்? ட்ரொட்ஸ்கி இதற்கு அவரே ஒரு அரசியல் விளக்கத்தை வழங்கினார். 1939ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு (இதை அவர் தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தார்) பல வாரங்களின் பின்னரும் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியதன் பின்னரும் ட்ரொட்ஸ்கி பாரிஸ் புதினப் பத்திரிகையில் வெளியான ஹிட்லருக்கும் பிரெஞ்சு தூதுவர் குலோன்ட்ருக்கும் (Coulondre) இடையே இடம்பெற்ற ஒரு உரையாடலின் பக்கம் கவனத்தை ஈர்த்திருந்தார். ஹிட்லர், ஸ்ராலினுடனான தமது உடன்படிக்கை மேற்கு நாட்டில் ஜேர்மனியின் எதிரிகளை தன்னிஷ்டப்படி தோற்கடிக்க வாய்ப்பளிக்கும் என ஜம்பமடித்துக் கொண்ட அதே வேளையில் "(யுத்தம் இடம்பெறும் நிலையில்) நிஜ வெற்றியாளனாக ட்ரொட்ஸ்கி விளங்குவார். நீங்கள் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்ததுண்டா?" என குலோன்ட்ர் எச்சரிக்கையுடன் வினாவினார். ஹிட்லர், பிரெஞ்சு தூதுவரின் மதிப்பீட்டுடன் இணக்கம் தெரிவித்தார். ஆனால் அவர் தமது எதிரிகள் தமக்கு வேறு வழி இல்லாதாக்கியதற்காக குற்றஞ்சாட்டினார்.

இந்த அற்புதமான அறிக்கையை சுட்டிக்காட்டி எழுதுகையில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது: "இந்தக் கனவான்கள் புரட்சியின் பேயுருவத்திற்கு ஒரு தனிப்பட்ட பெயர் சூட்ட விரும்புகின்றனர்... குலோன்ட்ர், ஹிட்லர் இருவரும் ஐரோப்பாவில் வளர்ச்சி கண்டு வரும் காட்டுமிராண்டித் தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அதே சமயம் இவர்களில் எவரும் சரி தமது காட்டுமிராண்டித்தனம் சோசலிசப் புரட்சியினால் வெற்றி கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் கொள்ளவில்லை."

பாசிச, ஜனநாயக முகாம்களைச் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகள் ட்ரொட்ஸ்கியைக் கண்டு அஞ்சியதைப்போலவே சோவியத் அதிகாரத்துவத்தின் அச்சமும் இன்னமும் பாரியதாக விளங்கியது. முதலாம் உலக யுத்த காலத்தில் ரஷ்யன் இராணுவம் அடைந்த தோல்விகள் ஆட்சியாளர்களை அவமானப்படுத்தியதையும் வெகுஜனங்களை கிளர்ந்து எழச்செய்ததையும் ஸ்ராலின் மறந்து போய் விடவில்லை. ஹிட்லருடன் அத்தகைய உடன்படிக்கை இல்லாது போனால் கூட யுத்தம் மீண்டும் வெடிக்கும் அத்தகைய ஒரு ஆபத்து இல்லாது போகுமா? ட்ரொட்ஸ்கி உயிர் வாழ்ந்த வரை அவர் அதிகாரத்துவ சர்வாதிகாரத்துக்கான மாபெரும் புரட்சிகரப் பதிலீடாகவும் 1917 அக்டோபர் வேலைத்திட்டம் இலட்சியங்கள், உணர்வுகளது கண்கூடான மனித உருவாக, அதிகாரத்துவ சர்வாதிகாரத்துக்கு மாபெரும் புரட்சிகரப் பதிலீடாகவும் தொடர்ந்து இருந்துவந்தார். எனவே தான் ட்ரொட்ஸ்கி உயிர்வாழ அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் மரணத்திலும் கூட ட்ரொட்ஸ்கியைப் பற்றிய அச்சம் தணிந்து போய்விடவில்லை. இன்னுமொரு பிரதிநிதி தனது வாழ்க்கைக் காலத்தில் மட்டுமல்லாது தனது மரணத்தின் பல தசாப்தங்களின் பின்னரும் கூட, இருக்கக் கூடிய அதிகாரங்களை அச்சுறுத்தும் சக்தியை கொண்டிருப்பார் என நினைப்பது கஷ்டம். ட்ரொட்ஸ்கியின் வரலாற்று மரபுரிமை (Historical legacy) எந்த வடிவிலான உள்ளீர்ப்பையும் உரிமை மொழிகளால் தேர்ந்தெடுத்தலையும் எதிர்க்கின்றது. மார்க்ஸ் மரணமடைந்து 10 ஆண்டுகளுள் ஜேர்மன் சமூக ஜனநாயக கோட்பாட்டாளர்கள் அவரது ஆக்கங்களை சமூகச் சீர்திருத்தத்தின் முன்நோக்காக அங்கீகரிக்கச் செய்வதற்கான வழிவகைகளைக் கண்டுபிடித்தனர். லெனினின் தலைவிதி இன்னமும் பெரிதும் பயங்கரமானதாக விளங்கியது -அவரது சடலம் கெடாது பாதுகாத்து பேணப்பட்டதோடு அவரது தத்துவார்த்த மரபுரிமைகள் பொய்மைப்படுத்தப்பட்டு ஒரு அதிகாரத்துவரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசமதமாக மாற்றம் செய்யப்பட்டது. இது ட்ரொட்ஸ்கி விடயத்தில் சாத்தியப்படாததாக நிரூபணமாயிற்று. அவரது எழுத்துக்களும் நடவடிக்கைகளும் அவற்றின் புரட்சிகர சம்பந்தங்களில் பெரிதும் சுருக்கமானதும் ஸ்தூலமானதும் ஆகும். மேலும் ட்ரொட்ஸ்கி ஆய்வு செய்த அரசியல் பிரச்சினைகளும் அவர் வரையறுத்துக் கூறிய சமூக -அரசியல் உறவுகளும் அவர் துல்லியமாகவும் அறிவுக்கூர்மையாகவும் பண்படுத்தும் வகையில் புண்படுத்தும் விதத்திலும் கட்சிகளைப் பற்றி செய்த பண்பாக்கங்கள் நூற்றாண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கு தாக்கிப் பிடித்து நின்றன.

1991ம் ஆண்டில் டியூக் பல்கலைக் கழகம் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் பற்றி றொபேட் ஜே.அலெக்சாண்டர் எழுதிய 1000 பக்கங்கள் கொண்ட ஒரு ஆய்வு நூலை வெளியிட்டது. ஒரு கடும் மார்க்சிச எதிர்ப்பாளரான இவர் கல்விசார் வட்டாரங்களில் இத்துறையில் ஒரு நிபுணராக கணிக்கப்பட்டார். அலெக்சாண்டர் தமது நூலின் முன்னுரையில் பின்வரும் விசேடமான அவதானிப்புக்களை குறித்துள்ளார்: "1980பதுகளின் இறுதியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த ஒரு நாட்டிலும் ஆட்சிக்கு வரவில்லை. சர்வதேச ட்ரொட்ஸ்கிசம், ஸ்ராலினிசத்தின் வாரிசுகள் செய்தது போல் ஒரு நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆட்சியின் ஆதரவினை அனுபவிக்காத போதிலும் கூட, உலக நாடுகளில் பலவற்றில் அரசியல் வாழ்க்கையின் ஆட்டங்கண்ட நிலையுடன் இணைந்த விதத்தில் பல்வேறுபட்ட நாடுகளில் உள்ள உறுதியான இவ்வியக்கமானது, அதாவது ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி எதிர்பார்க்கக் கூடிய ஒரு காலத்தில் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியத்தை அடியோடு நிராகரித்துவிட முடியாது என்பதைக் குறிக்கின்றது." (International Trotskyism -P.32)

அந்த "நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆட்சி" யானது அலெக்சாண்டரின் நூல் வெளியாகி நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே மறைந்து போயிற்று. சோவியத் அதிகாரத்துவம் லியோன் ட்ரொட்ஸ்கிக்கு புனர்வாழ்வு அளிக்கவேயில்லை. அடிக்கடி குறிப்பிடப்பட்டதைப்போல் வரலாறு அனைத்து வஞ்சப் புகழ்ச்சியாளர்களுள்ளும் பிரமாண்டமானது. பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகள், ட்ரொட்ஸ்கி சோவியத் யூனியனை ஒழித்துக்கட்டிவிட முயன்றார் என்றும் அவர் சோவியத் யூனியனை துண்டாட ஏகாதிபத்தியவாதிகளுடன் சதிகளில் ஈடுபட்டார் எனவும் கூறிவந்துள்ளனர். அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எனப்படுபவற்றின் பேரில் ட்ரொட்ஸ்கி நாட்டில் இல்லாத நிலையிலேயே சோவியத் ஆட்சியாளர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் ட்ரொட்ஸ்கி, தூரதிருஷ்டியான முறையில் எச்சரிக்கை செய்து வந்துள்ளதுபோல் சோவியத் அதிகாரத்துவமே இறுதியில் சோவியத் யூனியனை துண்டாடியதோடு கலைத்தும் விட்டது. இது ட்ரொட்ஸ்கிக்கும் அவரது மகன் லேவ் செடோவுக்கும் எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் இரத்துச் செய்யாமலே வெளிவெளியாகவும் நேரடியாகவும் இங்ஙனம் செய்தது. இதற்குப் பதிலாக ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களதும் முழு மோசடியையும் அங்கீகரிப்பதைக் காட்டிலும் கோர்பச்சேவுக்கும் யெல்ட்சினுக்கும் சோவியத் யூனியனின் மரண அத்தாட்சிப்பத்திரத்தில் கைச்சாத்திடுவது இலகுவாக இருந்தது.

கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள பொருளாதார, சமூக மாற்றங்களில் பிரமாண்டமான பரிமாணங்களை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடாமல் நாம் இதுவரை காலமும் ட்ரொட்ஸ்கி கையாண்ட பிரச்சினைகளையும் விடயங்களையும் பிரச்சினைகளில் இருந்து தள்ளி வைத்ததில்லை. சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னரும் கூட, ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் ஒரு அசாதாரணமான முறையிலான பரிமாணத்தைத் தனதாக்கிக் கொண்டிருப்பது ஒரு சமகாலப் பண்பாகும். ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் பற்றிய ஒரு ஆய்வு அவசியமாகி இருப்பது 20ம் நூற்றாண்டின் அரசியலைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமன்றி 21ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் நாம் முகம் கொடுக்கும் ஒரு மிகவும் சிக்கலான உலகின் அரசியலுடன் ஒருவர் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும் நோக்கத்துக்கும் அவசியமாகியுள்ளது.

ஒரு அரசியல் பிரதிநிதியின் மாபெரும் தன்மை அவரது மரபுவழியின் அளவினாலும் நிலைத்து நிற்கும் தொடர்பினாலும் அளவிடப்படுமேயானால் அப்போது ட்ரொட்ஸ்கி 20ம் நூற்றாண்டின் தலைவர்களின் முதலாவது வரிசையில் வைக்கப்பட வேண்டும். நாம் 1940ல் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் பிரதிநிதிகளை ஒரு கணம் நோக்குவோம். அந்த சகாப்தத்தின் சர்வாதிகாரத் தலைவர்களின் பெயர்களை -ஹிட்லர், முசோலினி, ஸ்ராலின், பிராங்கோ- அவர்களை ஒழுக்கக் கேடாகத் திட்டாமல் குறிப்பிட முடியாது. அவர்கள் தமது நினைவுச் சின்னங்களாக விட்டுச் சென்றிருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத குற்றங்களே அன்றி வேறொன்றும் அல்ல. ஏகாதிபத்திய ஜனநாயகங்களின் "மாபெரும்" தலைவர்களான ரூஸ்வெல்ட், சேர்ச்சில் போன்றவர்கள் பாராளுமன்ற அரசியல் கட்டுமானத்தினுள் சிறப்பு பிரசித்தி பெற்றவர்களாகவும் திறமையைக் காட்டியவர்களாகவும் விளங்கினர் என்பதை எவரும் மறுக்க மாட்டர். சேர்ச்சில் அமெரிக்க ஜனாதிபதியைக் காட்டிலும் பெரிதும் புத்திக் கூர்மை படைத்தவராயும் ஒரு ஆற்றல் நிறைந்த பேச்சாளராகவும் அத்தோடு ஒரு எழுத்தாளர் என்ற விதத்தில் சில திறமைகளையும் வெளிக் காட்டினார். ஆனால் இவர்களில் எவரும் மரபுவழிபற்றி உண்மையில் பேச முடியுமா? சேர்ச்சிலினதும் ரூஸ்வெல்டினதும் பேச்சுக்களிலும் அல்லது நூல்களிலும் (ரூஸ்வெல்ட் எந்த ஒரு நூலையும் எழுதியதில்லை) உள்ள ஆய்வுகளும் நோக்குகளும் நாம் இந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை ஒருவர் புரிந்து கொள்ளப் பங்களிப்புச் செய்யும் என எவரும் கண்டிப்பான முறையில் கூற முடியுமா?

இவர்களின் காலத்திலும் கூட ட்ரொட்ஸ்கி அவரது அரசியல் சமகாலத்தவர்களை விட உச்சியில் நின்று கொண்டிருந்தார். நான் குறிப்பிட்ட சகலரதும் செல்வாக்கானது அரச அதிகாரத்தின் கருவிகளின் மீது அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டுடன் நேரடியாக பிணைந்துகொண்டிருந்தது; தங்கியிருந்தது. அந்த அதிகாரத்தில் இருந்து பிரிக்கும் போது அவர்கள் உலக அவதானத்தில் ஆதிக்கம் கொண்டிருப்பது கடினம். ஸ்ராலினை கிரேம்ளினில் இருந்தும் அதன் பயங்கரத்தின் கருவிகளில் இருந்தும் பிரிக்கும் போது அவர் 1917 அக்டோபருக்கு முன்னர் இருந்ததை போல் "ஒரு பின்னணியில் உள்ள தெளிவற்றவராக'' அல்லாது வேறொன்றாகவும் இருந்திருக்க முடியாது.

ட்ரொட்ஸ்கி 1927ம் ஆண்டில் அதிகாரத்தின் சகல உத்தியோகபூர்வ அந்தஸ்துகளும் மறுக்கப்பட்டார். எவ்வாறெனினும் அவர் ஒரு போதும் அதிகாரம் இல்லாதவராக இருந்ததில்லை. ட்ரொட்ஸ்கி, டாக்டர். ஸ்ரொக்மன் பேசிய புகழ்பெற்ற வசனத்தை மேற்கோளாகக் காட்டுவதில் பெருவிருப்புக் கொண்டவராக விளங்கினார். இப்சன் (Ibsen) நோர்வே நாடகாசிரியர் (1828-1906) மக்களின் எதிரி (Enemy of the people) என்ற நாடகத்தை முடிக்கையில் பின்வருமாறு கூறுகின்றார்: "எவன் தனித்து நிற்கிறானோ அவனே மிகவும் சக்திவாய்ந்த மனிதன்" மாபெரும் நோர்வே நாடகாசிரியரின் ஆழ்ந்த அறிவு சகல மாபெரும் ரஷ்ய புரட்சியாளர்களுள்ளும் மகத்தானவரது வாழ்க்கையில் யதார்த்தமாகியது. மனித இனத்தின் முற்போக்கு முயற்சிகளோடு சம்பந்தப்பட்டதும் அவற்றைத் தெளிவாகப் பேசுகின்றதும் ஆதலால் அவற்றினுள் வரலாற்று அவசியங்களின் சக்தியைக் கொண்டுள்ளதுமான கருத்துக்களதும் உயர் இலட்சியங்களதும் பெரும் ஊக்கத்தை ட்ரொட்ஸ்கி வழங்கினார்.

எழுத்தாளராக ட்ரொட்ஸ்கி

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது ஒருவர் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரகாலம் அனைத்தையும் அவரது எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்ட அர்ப்பணிக்கத் தள்ளப்படுவதை எதிர்த்து நிற்பது என்பது கஷ்டமானது. ஆனால் குறைந்த பட்சம் ஒருவர் தனது சபையினருக்கு ஒரு விதிவிலக்கான அழகியல் சம்பந்தப்பட்ட அனுபவத்தை வழங்குவதில் நிச்சயம் வெற்றி பெறுவார். ஒருவரின் அரசியல் அனுதாபங்களை ஒரு கணத்துக்கு ஒதுக்கி வைத்தால் எந்த ஒரு வாசகரும் ஒரு புறநிலையான தீர்ப்பை வழங்க இலாயக்கானவராக இருப்பின் அவர் ட்ரொட்ஸ்கி 20ம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்கள் வரிசையில் நின்று கொண்டுள்ளார் என்பதை மறுப்பது கஷ்டம். நான் ட்ரொட்ஸ்கியின் முதலாவது நூலை வாசித்து அவரின் ஞாபகச் சின்னமான ரஷ்யப் புரட்சியின் வரலாறு - சுமார் 30 ஆண்டுகள் கடந்து சென்று விட்டன. ட்ரொட்ஸ்கியின் அதிசயிக்க வைக்கும் உரைநடையை எதிர் கொண்ட முதலாவது சந்தர்ப்பத்தின் உணர்வுபூர்வமானதும் புத்திஜீவி தர்க்கம் கொண்டதுமான தருணத்தை இன்னமும் நினைவில் கொண்டுள்ள ஒரே ஆள் நான் இல்லை என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். ட்ரொட்ஸ்கியின் நூல்களின் மொழிபெயர்ப்பை வாசித்த நான் அவரின் ஆக்கங்களை மூல மொழியான ரஷ்யன் மொழியில் வாசிக்க முடிந்தவர்கள் ஒரு எழுத்தாளர் என்ற விதத்தில் அவரின் தோற்றத்தை எங்ஙனம் எடை போட்டு இருப்பர் என ஆச்சரியம் அடைந்தேன். எதிர்பாராத விதத்தில் எனது ஆர்வத்தை திருப்தி செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் எழுந்தது. அக்டோபர் புரட்சியின் பின்னர் தனது தாயகத்தை விட்டு வெளியேறிய ஒரு நிபுணர் ரஷ்ய இலக்கியம் பற்றி நிகழ்த்திய விரிவுரையில் நான் கலந்துகொண்டேன். ட்ரொட்ஸ்கியின் பேரில் ஒரு துளியும் அனுதாபத்தை எதிர்பார்க்க கூடிய பேர்வழியாக இம்மனிதன் இருக்கவில்லை. 19ம் நூற்றாண்டில் ரஷ்ய இலக்கியம் பற்றிய ஒரு ஆய்வு என்ற இந்த அவரது விரிவுரையின் இறுதியில் ட்ரொட்ஸ்கி ஒரு எழுத்தாளர் என்ற விதத்தில் அவரின் அபிப்பிராயத்தை தெரிவிக்கும்படி நான் வேண்டினேன். நான் அவரின் பதிலையும் அவர் இதனைத் தெரிவித்த பாணி இரண்டையும் நினைவு கூர்கின்றேன்: "ட்ரொட்ஸ்கி ரோல்ஸ்ரோய்க்கு (Tolstoy) பின்னர் ரஷ்ய வசனநடையின் மாபெரும் ஆசான்" என அவர் பதிலளித்தார். பல வருடங்களின் பின்னர் இந்த மதிப்பீடு 1989ல் நான் சோவியத் யூனியனுக்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது நான் சந்தித்த ஒரு மாணவனின் கருத்தில் பிரதிபலித்தது. ட்ரொட்ஸ்கியை வாசிப்பது என்பது தமக்கு ஒரு மிகவும் சங்கடமான அனுபவமாக இருந்ததாக அவர் ஒப்புக் கொண்டார். இது ஏன் அப்படி? இதை அவர் விபரிக்கையில் கூறியதாவது: "நான் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை வாசித்தபோது நான் அப்படி செய்யவிரும்பாதபோதும் அவருடன் உடன்பாடு கொள்ளத் தள்ளப்பட்டேன்!" என்றார்.

ட்ரொட்ஸ்கியின் பலதரப்பட்ட எழுத்துக்களும் -கலை, இலக்கியம், கலாச்சாரம், விஞ்ஞான அபிவிருத்திகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் அத்தோடு உண்மையில் அரசியல் பற்றி எல்லாம்- ஏறக்குறைய மனோசக்தியை தாண்டிச் செல்கின்றன. சாதாரண மனிதர்கள் என்றவகையில் எமது மிதமான சக்திகளோடு நாம் எம்மை சமாளித்துக்கொண்டிருக்க முயல்கையில், ட்ரொட்ஸ்கியின் இலக்கிய வெளியீட்டின் பரிமாணத்தின் முன்னால் நாம் செயலற்றவர்களாகி நிற்கவேண்டியுள்ளது. இதை வேர்ட் புரொசசரும் (Word Processer) ஸ்பெல் செக் (Spell Check) இயந்திர யுகமும் வருவதற்கு முன்னர் அவரால் செய்து கொள்ள முடிந்தது எப்படி? என ஒருவரை ஒருவர் கேட்கிறார். இதற்கான பதிலில் பாதி அவர் தயாரிப்பின்றி உடனடியாகப் பேசுவதுபோல் அழகாகவும் சிந்திக்கத்தக்க விதத்திலும் எழுதியது ட்ரொட்ஸ்கியின் குறிப்பிடத்தக்க வல்லமையில் தங்கியுள்ளது. எல்லாவிதத்திலும் அவரது சொல்வதெழுதல் (Dictation) மிகவும் திறமைவாய்ந்த எழுத்தாளர்களால் வரையப்பட்டு மெருகூட்டப்பட்டதை விட நன்றாக வாசிக்க கூடியதாக இருக்கும்.

20ம் நூற்றாண்டின் இலக்கியத்தின் ஒரு மாபெரும் பிரதிநிதியான ட்ரொட்ஸ்கி 19ம் நூற்றாண்டின் மாபெரும் ரஷ்ய மேதைகளுக்கு -குறிப்பாக ரேக்கனேவ் (Turgenev) ரோல்ஸ்த்தோய் (Tolstoy) ஹேர்சென் (Herzen) பெலின்ஸ்கி (Belinsky) போன்றவர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டவர். இதே மனிதன் வளைந்து கொடுக்காத விதத்தில் இராணுவ வசன நடையில் பிரகடனங்களையும் யுத்தக் கட்டளைகளையும் எழுதியபோது அது இலட்சக்கணக்கானோரைத் தூண்டியது. அது வட்டமிடும் அழகையும்கூட உருவாகியது. உதாரணமாக சைபீரியாவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து 1907ல் தப்பிச் சென்ற ஒரு தருணத்தை நினைவு கூர்கையில் அவர் எழுதியதாவது:

"பனிச்சறுக்கு வண்டி ஒரு சிறு குளத்தின் பளபளப்பான மேற்தரையில் செல்லும் ஒரு படகு போன்ற சாந்தமாயும் ஒலியின்றியும் வழுகிச் சென்றது. குவிந்து வரும் இருளில் காடு முன்னரைவிட பெரிதும் இராட்சத வடிவாகத் தோன்றியது. என்னால் பாதையை காண முடியாததோடு எனது பனிச்சறுக்கு வண்டியின் சலனத்தையும் உணர முடியாது இருந்தது. இது மரங்கள் வசிய சக்தியின் கீழ் இருப்பது போலவும் அவை எம்மை நோக்கி ஓடி வருவது போலவும் இருந்தது. புதர்கள் நழுவிச் சென்றன. பனிக்கட்டியால் மூடப்பட்ட பழைய மர அடிக்கட்டைகள் வேகமாக ஓடின. அனைத்துமே மர்மம் நிறைந்தது போல் தோன்றியது. ஒரே ஓசை, வேகமானதும் ஒழுங்கானதுமான கலைமானின் சூ-சூ-சூ-சூ என்ற மூச்செடுப்பு மட்டுமே. அமைதியின் மத்தியில் நீண்டகாலத்துக்கு முன்னரே மறந்து போய்விட்ட ஆயிரக்கணக்கான ஓசைகள் எனது தலையை நிரப்பின. திடீரென அடர்ந்த காட்டின் ஆழத்தில் இருந்து ஒரு பெரும் விசில் சத்தம் எனக்கு கேட்டது. இது மர்மம் நிறைந்ததாயும் எல்லையற்ற துரத்தில் இருந்து வந்ததாயும் தோன்றியது. இன்னமும் இது எமது 'ஒஸ்டியாக்' (Ostyak-சைபீரியாவில் வாழும் மக்கள்) பனிச்சறுக்கு வண்டிகளுக்கான கலைமான்களுக்கு கொடுக்கும் சைகையாகும். அப்போது மீண்டும் அமைதி நிலவியது. வெகுதூரத்தே விசில் ஊதும் சத்தம் கேட்டது. பல மரங்கள் சப்தமில்லாமல் வெளிச்சத்தில் இருந்து இருளுக்குள் முண்டியடித்துக் கொண்டன." (1905- New York: Vintage, 1971,பக்கம் 459-60)

கையிலுள்ள விடயம் என்னவாக இருந்தாலும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் முக்கிய அடிப்படையும் அடிநாதமுமாக விளங்கியது புரட்சியே... வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உயிர்ப்புஷ்டியாக வெளிப்பாடாகும் ஒரு புரட்சியாகும். ட்ரொட்ஸ்கி தனது வாசகர்களுக்கு புரட்சி தன்னை வெளிப்படுத்தும் எதிர்பாராத வடிவங்களின் பக்கம் கவனத்தை ஈர்ப்பதில் மகிழ்ச்சி கண்டார். ஆதலால் 1905 புரட்சியின் பின்னைய சோவியத் தொழிலாளர் பிரதிநிதிகள் சபையை வருணிக்கையில் ட்ரொட்ஸ்கி, கொடுவாள் ஏந்திய காவல்துறை படைவீரர்களைக் கூட்டமாக கொண்ட நீதிமன்றக்கட்டிடத்தின் இரக்கமற்றதும் பயமுறுத்தும் உத்தியோகபூர்வ சுற்றுசூழலுக்கும் புரட்சிகர பிரதிவாதியின் ஆதரவாளர்களாலும் பாசம் கொண்டவர்களாலும் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட "எண்ணிலடங்காத பூக்களுக்கும்" இடையேயான முரண்பாட்டை சுவைக்கின்றார்.

"உடைகளின் பொத்தான் துவாரங்களிலும், கைகளிலும், மடிகளிலும் இறுதியில் பூக்கள் வாங்குகள் மீதும் கிடந்தன. நீதிமன்றத்தின் தலைவர் இந்த நறுமணம் கொண்ட ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அஞ்சவில்லை. இறுதியில் காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றத்தின் அதிகாரிகளும் கூட நிலவும் சூழ்நிலை காரணமாக அடியோடு மனமுடைந்து போய் பூக்களை பிரதிவாதிகளிடம் கையளித்துக் கொண்டு இருந்தனர்." (அதே நூல் பக்கம்-356)

நான் நம்புகிறேன், ஜோர்ஜ் பேர்னாட் ஷா என்ற எழுத்தாளர் ஒரு முறை, ட்ரொட்ஸ்கி ஒரு எதிரியின் தலையை வெட்டித் தள்ள தனது பேனையைப் பயன்படுத்தியபோது அவர் அதனைப் பொறுக்கி எடுத்து அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதற்கு மூளை இருக்கவில்லை என்பதை சகலருக்கும் காட்டும் வாய்ப்பை தவிர்க்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரொட்ஸ்கியின் வாதத்தின் பலம் இந்த அல்லது அந்த அரசியல்வாதியின் அகநிலை நோக்கங்களுக்கும் ஒரு புரட்சிகர சகாப்தத்தில் சமூக முரண்பாடுகளின் புறநிலை அபிவிருத்திக்கும் இடையேயான பொருந்தாமையை அது அம்பலப்படுத்திய அழகில் தங்கியுள்ளது. அவசியமான விரியும் வரலாற்று போக்கை தனது அளவு கோலாகப் பயன்படுத்தும் ட்ரொட்ஸ்கியின் சுருங்கிய விமர்சனங்கள் கொடூரமானவையாக இருக்கவில்லை. அவை சாதாரணமாக சரியானவையாக விளங்கின. இதன் மூலம் 1917ல் இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தின் முக்கிய தலைவர்: "கெரன்ஸ்கி ஒரு புரட்சியாளன் அல்ல. அவர் சும்மா புரட்சியை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தார்.... அவருக்கு கோட்பாட்டு தயாரிப்பு இருந்ததில்லை. அவருக்கு அரசியல் கல்வி கிடையாது. சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. அரசியல் மனவுறுதி கிடையாது. இந்தக் குணாம்சங்களுக்கு பதிலாக அவரிடம் வேதனைக்குரிய ஆட்டங்கண்ட நிலை காணப்பட்டது. கொதித்துப் பறக்கும் மனோநிலை நிலவியது. அது அவரது சிந்தனையிலோ அல்லது விருப்பத்தின் பேரில் செயற்படாத ஆனால் உணர்ச்சியினால் தொழிற்படும் பேச்சுத்திறனாகும்" (ரஷ்யப் புரட்சியின் வரலாறு -லண்டன்: புளூட்டோ பிரஸ்- பக்கம் -201)

விக்டர் சேர்னோவ் என்ற சமூகப் புரட்சியாளர்களின் தலைவரைப் பற்றி ட்ரொட்ஸ்கி பின்வருமாறு கூறினார். "கல்வி கற்றதை விட பல நூல்களை வாசித்துள்ளது போல் தோன்றும் கணிசமான அளவு என்றாலும் ஒருங்கிணையாத அறிவைக் கொண்ட ஒருவரான சேர்னோவின் கைகளில் எப்போதும் அளவற்ற மேற்கோள்கள் இருந்து வந்தன. அவை நீண்ட காலம் ரஷ்ய இளைஞர்களின் கற்பனையை கவர்ந்தது. எனினும் அவர்களுக்கு வேறு எதையும் போதிக்கவில்லை. இந்த வாயாடித் தலைவர் பதிலிளிக்க முடியாத ஒரு பிரச்சினை இருந்து வந்தது. தான் யாரை வழிநடாத்துகின்றேன்? எங்கு இட்டுச் செல்கின்றேன்? ஒழுக்கவியல்களாலும் வார்த்தைகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட சேர்னோவின் திரட்டுவாத- சூத்திரங்கள் ஒரு காலத்தில் மிகவும் தீர்க்கமான தருணங்களில் வெவ்வேறுபட்ட திசைகளில் இழுபட்டு ஒரு கூடுதலாக வித்தியாசமான பொதுமக்களை ஐக்கியப்படுத்தியது. சேர்னோவ் ஒரு கட்சியை ஸ்தாபிக்கும் தனது விதிமுறைகளை லெனின் "குறுங்குழுவாதம்" (Sectarianism) âù குறிப்பிட்டதற்கு மனத்திருப்தியுடன் எதிரெதிராக நிறுத்தியது ஆச்சரியப்படக்கூடியதல்ல". (அதே நூல் -பக்கம் 247)

ஒரு காலத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் பலம் வாய்ந்த கோட்பாட்டாளனாக விளங்கிய கார்ல் கவுட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கி எழுதியவற்றை நான் இறுதியாக முன்வைக்கின்றேன்: "கவுட்ஸ்கி மீட்சிக்கான ஒரு தெளிவானதும் தனிவழிப் பாதையையும் கொண்டுள்ளார். அவசியமானது எல்லாம் ஒவ்வொருவரும் அதை அங்கீகரித்து அதற்கு இணங்க வேண்டும். வலதுசாரி சோசலிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் அபிலாசைகளை இட்டு நிரப்பும் குரூரமான படுகொலைகளை கைவிட வேண்டும். முதலாளி வர்க்கம் தமது சலுகைகளை இறுதி மூச்சுவரை கட்டிக் காக்கும் பொருட்டு தமது நொஸ்க்குகளையும் (Noskes) லெப்டினன்ட் வோகல்சுகளையும் (Vogels) பயன்படுத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். இறுதியாகத் தொழிலாளர் வர்க்கம் அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள முறைக்கு முரணாக முதலாளி வர்க்கத்தை தூக்கி வீசும் எண்ணத்தை அடியோடு கைவிட வேண்டும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை (சகலரும்) கடைப்பிடித்தால் சோசலிசப் புரட்சி ஜனநாயகத்தினுள் கரைந்து போகும். இதனை வெற்றியீட்டுவதற்கு நாம் பார்ப்பதுபோல் எமது புயல் நிறைந்த வரலாறு, தலைக்கு இரவுத் தொப்பி போட்டுக் கொண்டு கவுட்ஸ்கியின் மூக்குத்தூள் (மூக்குப்பொடி) டப்பியில் இருந்து ஒரு சிட்டிகை அறிவை இழுத்துக் கொள்வதாகும்." (Terrorism and communism -Ann/arbor university of michigan press -1969 P- 28)

ஒருவர் ட்ரொட்ஸ்கியின் இலக்கிய மேதாவிலாசத்தை வெளிப்படுத்தும் பந்திகளை மேற்கோளாகக் காட்டுவதற்கு ஒரு முழு நாளையும் ஒரு பிரச்சனையுமின்றி செலவிடலாம். ஆனால் இந்த மேதாவிலாசம் பொதுவான அல்லது சாதாரணமாக ஒரு எழுத்துப்பாணி பற்றிய பிரச்சினை அல்ல. ட்ரொட்ஸ்கியின் இலக்கியப் படைப்புக்களை அதனது மொத்தத்தில் 20ம் நூற்றாண்டின் மாபெரும் புத்திஜீவி தேட்டங்களில் ஒன்றாகின்றதான பெரிதும் ஆழமான மூலகம் இருந்து கொண்டுள்ளது. அதனது சொந்தமான உடனடி அபிவிருத்தியின்போது வரலாறு தனது நனவுபூர்வமான வெளிப்பாட்டை காணமுடியும். அந்நிகழ்ச்சிப்போக்கு லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் தெளிவாகக் காணப்படுகின்றது. பொதுவில் அரசியல் விமர்சனம் போல் பெரிதும் அற்ப ஆயுள் கொண்டது வேறு கிடையாது. நன்கு எழுதப்பட்ட ஒரு செய்தித்தாள் பத்தியின் (Coloumn) அரை வாழ்க்கை கூட -ஒரு கோப்பை காப்பியைக் குடிக்க எடுத்த நேரத்தை விட குறுகிய நேரத்துக்குள்-காலைப் போசன (உணவு) மேசையில் இருந்து கழிவு பேப்பர் கூடைக்கு நேரடியாகச் செல்கின்றது.

ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் விஷயம் அப்படி அல்ல- நான் பேசுவது அவரின் பாரிய படைப்புக்களை பற்றியல்ல. அவர் பத்திரிகைகளுக்காக தயார் செய்த விமர்சனங்களைப் பற்றியுமே. லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் நான் சேர்க்க வேண்டும். அவை வரலாறு தாம் என்ன செய்துகொண்டிருந்தது மற்றும் முயற்சித்துக் கொண்டிருந்தது என்பதை தமக்கு முடிந்த விதத்தில் விளக்குவதற்கு எடுக்கும் முதலாவது முயற்சியாக தோற்றமளித்தன. ட்ரொட்ஸ்கியின் மாபெரும் அரசியல் எழுத்துக்களின் முக்கிய நோக்கம் அண்மைய நிகழ்வுகளை சோசலிசப் புரட்சியின் உலக வரலாற்று வளைபாதையில் வைத்துப் பார்ப்பதை நோக்கமாக கொண்டவை. இது அவர் தேர்ந்தெடுத்த நூல் தலைப்புக்களில் பிரதிபலித்தது: "எந்தக் கட்டத்தின் ஊடாக நாம் சென்றுகொண்டுள்ளோம்"? (Through what stage are we passing?) "பிரித்தானியா எங்கே செல்கின்றது?" (Where is britain going?) பிரான்ஸ் எங்கே செல்கின்றது?" (Whither France?) "முதலாளித்துவத்தை நோக்கியா அல்லது சோசலிசத்தை நோக்கியா?" (Towards Socialism or Capitalism) லுனாசார்ஸ்கி ஒரு தடவை ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் குறிப்பிட்டதாவது: "அவர் எப்போதும் வரலாற்றில் தமது நிலையை தெரிந்து கொண்டிருந்தார். இதுவே ட்ரொட்ஸ்கியின் பலம்- சந்தர்ப்பவாதத்துக்கும் சகல வகையான நெருக்குவாரங்களுக்கும் எதிரான அவரின் அரசியல் எதிர்ப்பின் மூலமாகும். ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தை "முன்நோக்கின் விஞ்ஞானமாக" புரிந்து கொண்டு இருந்தார்.

இதையிட்டு ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்: ஸ்ராலினிசத்தினால் புரட்சிகரக் காரியாளர் நாசமாக்கப்பட்டதன் பலன்களில் ஒன்றும் தொழிலாள வர்க்கத்தின் விடுதலை போராட்டத்துக்கான ஒரு கோட்பாட்டு ஆயுதமான மார்க்சிசம், இதைத் தொடர்ந்து அடியோடு இல்லாது செய்யப்பட்டமையும், இப்போராட்டத்துடன் தொடர்புபடாத எல்லா வகையறாக்களையும் சேர்ந்தவர்கள் மார்க்சிச பொருளியலாளர்கள், மார்க்சிச தத்துவஞானிகள் மார்க்சிச அழகியல்வாதிகள் என்றெல்லாம் கொண்டாடப்பட்டனர். மேலும் அவர்கள் தமது இயங்கியலின் மேதாவிலாசம் எனப்படுவதை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த நிகழ்வுகளின் அரசியல் ஆய்வுக்கு பிரயோகிக்க முயற்சி செய்தபோது அவர்களின் தகுதியீனம் நிரூபிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி மார்க்சிச சிந்தனை பாடசாலையின் இறுதியான பிரதிநிதியாவார். இதனை நாம் புலமைத்துவம் வாய்ந்த பாடசாலை என அழைப்போம். அவரது இயங்கியலின் நிபுணத்துவம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் நிலைமையை மதிப்பீடு செய்யவும், ஒரு அரசியல் தீர்க்கதரிசனத்தை முன்வைக்கவும் ஒரு மூலோபாய தகவமைவினை (நோக்குநிலையை) விரிவுபடுத்தவும் கொண்டிருந்த இயலளவில் தன்னை வெளிப்படுத்தியது.

ட்ரொட்ஸ்கியை மறுமதிப்பீடு செய்தல்

வரலாறு பூராவும் நான்காம் அகிலத்தின் பெரிதும் தீர்க்கமான பணி ஸ்ராலினிஸ்டுகளின் தூஷிப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கியின் வரலாற்று பாத்திரத்தை கட்டிக் காப்பதாக விளங்கியது. இந்தப் பணியானது சாதாரணமாக ஒரு தனிநபரை காப்பது சம்பந்தமான விடயமாக இல்லாமல் மிகவும் அடிப்படையான முறையில் அக்டோபர் புரட்சியினதும் சர்வதேச மார்க்சிசத்தினதும் முழு வேலைத்திட்ட மரபுரிமைகளையும் காப்பதாக விளங்கியது. ட்ரொட்ஸ்கியை பேணிக் காக்கும்போது நான்காம் அகிலம், போல்ஷிவிக் புரட்சி அடிப்படையாகக் கொண்ட அடிப்படைக் கொள்கைகள் மோசமான முறையில் பொய்மைப்படுத்தப்படுவதற்கும் காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் எதிராக வரலாற்று உண்மைகளை ஸ்தாபிதம் செய்தது.

ஆயினும் லியோன் ட்ரொட்ஸ்கியை சமரசத்துக்கு இடமில்லாது பாதுகாத்தபோதிலும் நான்காம் அகிலம் "வயது முதிர்ந்த மனிதனின்" அரசியல் வரலாற்று மரபுரிமைகளுக்கு முழு நியாயம் வழங்கியதா? ட்ரொட்ஸ்கி உயிர் வாழ்ந்த நூற்றாண்டு இன்று எம்பின்னால் உள்ள நிலைமையில் இதை நம்புவதற்கு நல்ல காரணம் உண்டு. அவரது அரசியல் மரபுரிமையையும் வரலாற்று தோற்றத்தையும் நன்கு வளமாயும் பெரிதும் ஆழமானதாயும் பாராட்டுவதும் இப்போது சாத்தியமானது. இந்தப் பணியினை நாம் ட்ரொட்ஸ்கி 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு தான் ஆற்றிய சொந்தப் பங்களிப்பினை மதிப்பீடு செய்யும் ஒரு புகழ்பெற்ற பந்தியை விமர்சன ரீதியில் மீளாய்வு செய்வதோடு ஆரம்பிக்கலாம்.

மார்ச் 25, 1935 திகதியிடப்பட்ட தனது நாட்குறிப்பில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: 1917ல் நான் பீட்டர்ஸ் பேர்க்கில் இல்லாது போயிருந்தாலும், லெனின் அங்கு இருந்ததோடு தலைமையிலும் இருந்தார் என்ற நிபந்தனையுடன் அக்டோபர் புரட்சி நடைபெற்றிருந்திருக்கும். பீட்டர்ஸ் பேர்க்கில் லெனினோ அல்லது நானோ இல்லாது இருந்திருந்தால் அங்கு அக்டோபர் புரட்சி இடம்பெற்றிராது: போல்ஷிவிக் கட்சியின் தலைமை இது இடம்பெறுவதை தடுத்து இருக்கும். இதையிட்டு எனக்கு ஒரு துளியும் சந்தேகம் கிடையாது. லெனின், பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்திராது போயிருந்தால் போல்ஷிவிக் தலைவர்களின் எதிர்ப்பை என்னால் சமாளிக்க முடிந்திருக்கும் என நான் எண்ணவில்லை. 'ட்ரொட்ஸ்கிசத்துடனான" போராட்டம் (அதாவது, பாட்டாளி வர்க்கப் புரட்சியுடனான போராட்டம்) 1917 மேயில் ஆரம்பித்து இருக்கும். அத்தோடு புரட்சியின் பெறுபேறு சந்தேகத்துக்கு இடமாகி இருக்கும். ஆனால் நான் மீண்டும் கூறுகின்றேன் லெனின் அங்கு பிரசன்னமாகி இருந்ததால் அக்டோபர் புரட்சி எதுவிதத்திலும் வெற்றியீட்டக் கூடியதாக இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் முதல் காலப்பகுதியில் இதையே பெருமளவுக்கு கூடவோ குறையவோ கூறமுடியும். சிம்பிர்ஸ்க் (Simbirsk), காஸான் வீழ்ச்சி அடையும் சமயத்தில் லெனின் ஆட்டங்கண்டு, சந்தேகங்களால் பீடிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அது தற்காலிக மனோநிலை என்றாலும் -அவர் அதை என்னைத் தவிர வேறு எவரிடமும் ஒப்புக் கொள்ளவில்லை எனலாம். இவ்வாறு 1917-1921 வரையிலான காலப்பகுதியிலான எனது நடவடிக்கைகளின் "இன்றியமையாத தன்மையை" பற்றி பேச முடியாது." (நாடுகடந்து வாழ்ந்த கால நாட்குறிப்பு -நியூ யோர்க்- பக்கம் -46-47)

இந்த மதிப்பீடு சரியானதா? இப்பந்தியில் ட்ரொட்ஸ்கி முக்கியமாக போல்ஷிவிக் கட்சியினுள்ளான அரசியல் போராட்டத்தையே குறிப்பிடுகின்றார். பெரிதும் சரியான விதத்தில் அவர் தனது ஆரம்ப (புறப்பாட்டு) புள்ளியாக 1917 ஏப்பிரலில் போல்ஷிவிக் கட்சி மறுதகவமைத்துக்கொள்வது (மறுநோக்கு நிலைப்படுத்திக் கொள்வது) தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தாக கொள்கின்றார். 1917ல் லெனினின் மாபெரும் சாதனையான போல்ஷிவிக் கட்சியின் அரசியல் ஒழுங்கமைவில் (நோக்குநிலைப்படுத்தலில்) ஒரு மூலோபாய மாற்றத்துக்கு பழைய போல்ஷிவிக் தலைவர்கள் -குறிப்பாக காமனேவும் ஸ்ராலினும்- காட்டிய எதிர்ப்பை தாண்டியதிலேயே புரட்சியின் வெற்றி தங்கியிருந்தது.

மேலும் போல்ஷிவிக் கட்சியின் உள்ளேயான இப்போராட்டத்தின் தீர்க்கமான முக்கியத்துவம் அரசியல் முன்நோக்கு பிரச்சினைகள் சம்பந்தமாக ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியினுள் (Russian Social Democratic Labour Party) இருந்து வந்த முன்னைய தகராறுகளின் தாக்கங்களை கோடிட்டுக் காட்ட உதவுகின்றது. ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கி திசைவழிப்படுத்தவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிதம் செய்வதற்கும் போல்ஷிவிக் கட்சியினுள்ளேயான எதிர்ப்பைத் தாண்ட லெனின் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார் என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் அவர் லியோன் ட்ரொட்ஸ்கியின் முன்நோக்குக்கு எதிராக இதுவரை காலமும் லெனின் கடைப்பிடித்த அரசியல் போக்கை கடைப்பிடித்தவர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தையும் நடாத்திக் கொண்டிருந்தார்.

லெனின் 1917 ஏப்பிரலில் ரஷ்யாவுக்கு திரும்பி "தொழிலாளர், விவசாயிகள் ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற முன்நோக்கை நிராகரித்தபோது, அவர் இதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதிலும் ஒரு தசாப்தத்துக்கு மேலாக ட்ரொட்ஸ்கி தொடர்புபட்டிருந்த ஒரு அரசியல் போக்கான நிரந்தரப் புரட்சிக்கு இயைந்து போகின்றார் என்பது பரந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டது.

ட்ரொட்ஸ்கியும் அக்டோபரின் தத்துவார்த்த எதிர்பார்ப்பும்: நிரந்தரப் புரட்சி தத்துவமும்

நான், ஜார் ஆட்சியின் இறுதி தசாப்த காலங்களில் ரஷ்ய புரட்சிகர இயக்கம் முகம் கொடுத்த அடிப்படை விடயங்களை சுருக்கமாக ஆராய விரும்புகின்றேன். ரஷ்ய சமூக-அரசியல் அபிவிருத்தியின் மூலோபாய வளைபாதையை தீர்மானம் செய்கையில் ரஷ்ய சோசலிஸ்டுகள் மூன்று வகையான முரண்பாடானாதும், சாத்தியமுமான வழிமுறைகளை முன்வைத்தனர்.

ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான பிளெக்ஹானோவ் (Plekhanov) ரஷ்யாவின் சமூக அபிவிருத்தியை ஒரு சாதாரண தர்க்கீக தொடர்ச்சியாக கண்டார். அதாவது இதில் அபிவிருத்தியின் வரலாற்றுக் கட்டங்கள் ஒரு தரப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மட்டத்தினால் தீர்மானிக்கப்படுமெனவும், நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவத்தினால் பதிலீடு செய்யப்பட்டதுபோல், முதலாளித்துவமும் சகல பொருளாதார அபிவிருத்தியின் அவசியமான சகல நிலைமைகளையும் வெற்றி கொள்ளுமிடத்து, சோசலிசத்துக்கு இடமளித்து விலகிக் கொள்ளும் என்று கருதப்பட்டது. பிளெக்ஹானோவின் கோட்பாட்டு மாதிரியானது (Theoretical model) ரஷ்ய அபிவிருத்தி மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ-ஜனநாயக பரிணாம வடிவத்தை எடுக்கும் என ஊகித்தது. இதன்படி மேற்கில் உள்ள பெரிதும் முன்னேறிய நாடுகளுக்கு முன்னதாக ரஷ்யா ஒரு சோசலிச திசையில் பயணம் செய்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை. 20ம் நூற்றாண்டின் திருப்பத்தில் ரஷ்யாவின் எதிரில் இன்னமும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை வெற்றிகொள்ளும் பொறுப்பே இருப்பதாக பிளக்கானோவ் கூறிவந்தார். இதன் மூலம் அவர் ஜார் ஆட்சியாளர்களை தூக்கி வீசி, பின்னர் நீண்ட எதிர்காலத்தில் சோசலிசப் புரட்சிக்கு அரசியல், பொருளாதார நிலைமைகளை நிர்மாணம் செய்யப்படும் என கருதினார். சகல சாத்தியமான வகையிலும் ரஷ்யாவின் அதனது பொருளாதார சமூக அமைப்பை, சோசலிச மாற்றத்தினால் தாக்கிப் பிடிக்க கூடிய அளவுக்கு அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக ரஷ்யா பல தசாப்தகால பாராளுமன்ற அபிவிருத்திக்கு ஊடாக பயணம் செய்ய வேண்டும் எனத்தோன்றிற்று. ரஷ்யாவின் அபிவிருத்தி பற்றிய இந்த உயிர் கருத்துரு (Organic Conception) 20ம் நூற்றாண்டின் முதல் காலப்பகுதியின் பரந்த தட்டினரான ரஷ்ய சமூக-ஜனநாயக இயக்கத்தினரிடையே நிலவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவாக விளங்கியது.

1905ம் ஆண்டின் நிகழ்வுகள் -அதாவது முதலாவது ரஷ்யப் புரட்சியின் வெடிப்பு-பிளாக்கானோவின் கோட்பாட்டு மாதிரியின் சாத்தியப்படும் தன்மையையிட்டு பாரதூரமான பிரச்சினைகளை உண்டுபண்ணியது. ரஷ்யப் புரட்சியின் பெரிதும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சம், ஜாரிசத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஆற்றிய அதிகாரம் நிறைந்த அரசியல் பாத்திரமாகும். பொது வேலைத்தளங்களதும் ஆயுதக் கிளர்ச்சிகளதும் பின்னணியில் ரஷ்ய முதலாளி வர்க்கத்தின் அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிகள் சின்னத்தனமானவையாகவும் துரோகம் நிறைந்தவையாகவும் விளங்கின. முதலாளி வர்க்கத்தினரிடையே றொபேஸ்பியரையோ (Robespierre) அல்லது டான்ரொனையோ (Danton) காணமுடியவில்லை. கடெட் கட்சி (Cadet Party) (அரசியலமைப்பு சட்ட ஜனநாயகவாதிகள்) ஜாகோபியன்சுக்கு சமமானதாய் விளங்கவில்லை.

லெனினின் ஆய்வுகள் பிளெக்ஹானோவை காட்டிலும் அதிக தூரத்துக்கும் ஆழமாகவும் சென்றது. பிளெக்னோவ் ரஷ்யப் புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயக பண்பைக் கொண்டிருந்தது என்பதை ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அத்தகைய ஒரு மேலெழுந்தவாரியான வரைவிலக்கணம் வர்க்க சக்திகளின் உறவு சம்பந்தமாகவும் புரட்சியின் அதிகார சமபல நிலையைப் பற்றியும் இருந்து வந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் பணி அதனது சுயாதீனமான அமைப்பு, முயற்சிகள் ஊடாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பெரிதும் பரந்ததும் தீவிர அபிவிருத்தி கொண்டதுமான விதத்தில் இட்டுச் செல்வதேயாகும் என லெனின் வலியுறுத்தினார். அதாவது ஜாரிச நிலப்பிரபுத்துவத்தின் சகல பொருளாதார, அரசியல், சமூக அடிச்சுவடுகளையும் உடைத்து எறிவதற்கான அடியோடு சமரசமற்ற போராட்டத்தை நடாத்த வேண்டும் என்றார். அதன் மூலம் ரஷ்ய தொழிலாளர் இயக்கம் செழிப்பதற்கான ஒரு நிஜமான முற்போக்கு அரசியலமைப்பு ஜனநாயக கட்டுமானத்தை ஸ்தாபிதம் செய்வதற்கான பெரிதும் சாதகமான நிலைமைகளை சிருஷ்டிக்க வேண்டும் என்றார். லெனினைப் பொறுத்தமட்டில் இந்த ஜனநாயகப் புரட்சியின் இருதயத்தில் -"விவசாயப் பிரச்சினை" (Agrarian Question) இருந்து கொண்டு இருந்தது. இதன் மூலம் அவர் நிலப்பிரபுத்துவத்தின் சகல பொருளாதார, நீதித்துறை மிச்ச சொச்சங்கள் அழித்தொழிக்கப்படுவதை கருதினார். பிரபுக்களின் பரந்த அளவிலான நிலவுடமை, ரஷ்ய வாழ்க்கையை ஜனநாயகமயமாக்குவதற்கு ஒரு பிரமாண்டமான தடைக்கல்லாகவும், ஒரு நவீன முதலாளித்துவ பொருளாதாரம் அபிவிருத்தி அடைவதற்கும் தடையாக விளங்கியது.

முதலாளித்துவப் புரட்சி பற்றிய பிளாக்கானோவுக்கு எதிரான லெனினின் கருத்துப்பாடு சம்பிரதாயமான அரசியல் தப்பபிப்பிராயங்களுடன் மட்டும் மட்டுப்பட்டு நிற்கவில்லை. லெனின் அவ்விதத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை உள்ளிருந்து அணுகினார். ஒரு சம்பிரதாயமான அரசியல் திட்டமான முதலாளித்துவ புரட்சியின் தவிர்க்க முடியாத விளைவு ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தின் முழு அவசியமானது என ஆரம்பிப்பதற்கு மாறாக லெனின் அரசியல் வடிவத்தை புரட்சியின் அத்தியாவசியமானதும், உள்வாரி சமூக உள்ளடக்கத்திற்கும் தொடர்புபடுத்திக்காட்ட முயன்றார்.

ரஷ்யாவில் இடம்பெற இருந்த ஜனநாயகப் புரட்சியினுள் அடங்கிக் கொண்டு இருந்த பிரமாண்டமான சமூக பணிகளை புரிந்து கொண்டு லெனின் -பிளெக்ஹானோவுக்கு முரண்பட்ட விதத்தில்- அப்பணிகளை வெற்றி கொள்வது என்பது ரஷ்ய முதலாளி வர்க்கத்தின் அரசியல் தலைமையின் கீழ் அடைய முடியாதது எனச் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் வர்க்கம் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை சுயாதீனமாகவும் உண்மையில் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகவும் நடாத்தினால் மட்டுமே ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வெற்றி சாத்தியம். ஆனால் அதன் எண்ணற்ற பல பலவீனங்கள் காரணமாக ஜனநாயக புரட்சியின் பரந்த அடிப்படையை தொழிலாள வர்க்கத்தினால் மட்டும் வழங்கிவிட முடியாது. ரஷ்யத் தொழிலாள வர்க்கம் விவசாயப் பிரச்சினைகளுக்கு சமரசமற்ற தீவிரமான ஜனநாயக தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் அதன் பின்னால் பல கோடி ரஷ்ய விவசாயிகளை அணிதிரட்ட வேண்டியிருந்தது.

அந்த நிலையில் இரு பெரும் பரந்த வர்க்கங்களின் புரட்சிகரக் கூட்டில் இருந்து தோன்றுகின்ற ஆட்சியின் அரச வடிவம் என்னவாக இருக்கும்? லெனின் புதிய ஆட்சி ஒரு "தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்" ஆக விளங்கும் எனப் பிரேரித்தார். நடைமுறையில் இரண்டு வர்க்கங்களும் அரச அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதோடு ஜனநாயகப் புரட்சியின் பூரணமான நிறைவேற்றத்தின் சாத்தியத்தின் மீது கூட்டாக தலைமையும் தாங்கும். அத்தகைய ஒரு ஆட்சியில் நிலவக் கூடிய அதிகாரப் பகிர்வு ஒழுங்குகளின் திட்டவட்டமான தன்மையைப் பற்றி லெனின் திட்டவட்டமான தகவல்களை தயார் செய்யவில்லை. அவர் இரண்டு வர்க்கங்களது சர்வாதிகாரம் நடைமுறைப் படுத்தப்படும் அரச வடிவங்கள் பற்றி விளக்கவும் இல்லை விபரிக்கவும் இல்லை.

ஜனநாயக சர்வாதிகாரத்தின் தீவிரமான அரசியல் தீவிரவாதத்துக்கு இடையேயும் அதனது நோக்கம் சமுதாயத்தை சோசலிச திசையில் பொருளாதார மறுசீரமைப்பு செய்வது அல்ல என லெனின் வலியுறுத்தினார். மாறாக புரட்சி அவசியம் காரணமாக அதன் பொருளாதார வேலைத்திட்டத்தின் பதங்களில் தொடர்ந்தும் ஒரு முதலாளித்துவ தன்மை கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டார். உண்மையில் நிலப்பிரச்சினைக்கு ஒரு தீவிரமான தீர்வுக்கு பரிந்துரைக்கும் போதுகூட லெனின் நிலங்களின் தேசியமயமாக்கம் ரஷ்யாவின் பாரிய நிலப்பண்ணைமுறைக்கு (Russian latifundia) எதிராக நெறிப்படுத்தப்பட்ட ஒரு சோசலிச நடவடிக்கையைக் காட்டிலும் ஒரு முதலாளித்துவ ஜனநாயக ரீதியானதாக இருக்கும் என வலியுறுத்தினார்.

லெனின் தனது வாதங்களில் இந்த தீர்க்கமான விடயத்தில் உறுதியாக இருந்தார். 1905ல் அவர் எழுதியதாவது:

"மார்க்சிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியின் முதலாளித்துவ தன்மையையிட்டு முழு நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தம் ரஷ்யாவுக்கு அவசியமாகியுள்ள அவ் ஜனநாயக மாற்றம் அந்த விதத்தில் எடுக்கும்போது முதலாளித்துவத்துக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் குழிபறிப்பதை குறிக்காது. ஆனால் அதற்கு மாறாக அவை முதலாவதாகவும் பரந்ததும் வேகமான முறையிலும் ஒரு ஆசிய வழியில் அல்லாத ஐரோப்பிய வழியில் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கு நிலத்தைப் பண்படுத்துகின்றது. இது முதல் தடவையாக அவர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் முதலாளித்துவத்தின் ஆட்சியை சாத்தியமாக்குகின்றன." (ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் 1939-40 பக்கம் 57)

ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடு மென்ஷிவிக்குகளதும் லெனினதும் நிலைப்பாடுகளில் இருந்து ஆழமாக வேறுபட்டது. அவர்களது வேறுபட்ட முடிவுகளுக்கிடையேயும் பிளாக்கானோவ், லெனின் இருவரும் ரஷ்யப் பொருளாதார அபிவிருத்தி மட்டத்தின் தரப்பட்ட மதிப்பீட்டையும் நாட்டினுள் இருந்து கொண்டுள்ள சமூக சக்திகளின் உறவுகளையும் தமது முன்நோக்கின் அடிப்படையாகக் கொண்டிருந்தனர். ஆனால் ட்ரொட்ஸ்கியின் நிஜமான ஆரம்பப்புள்ளியாக இருந்தது, இன்றுள்ள ரஷ்யாவின் பொருளாதார மட்டமோ அல்லது அதன் உள்வாரி வர்க்க சக்திகளின் உறவுகளோ அல்ல, ஆனால் அதற்கு மாறாக ரஷ்யாவின் தாமதமான ஜனநாயகப் புரட்சியின் தலைவிதி தங்கியிருக்க நேரிட்ட உலக-வரலாற்றை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

ட்ரொட்ஸ்கி முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்று பாதையை ஆய்வு செய்தார். அதனது 18ம் நூற்றாண்டின் தனித்துவமான வெளிப்பாட்டில் இருந்து 19ம் நூற்றாண்டின் சங்கடங்கள் ஊடாக இறுதியில் 1905ம் ஆண்டின் நவீன அமைப்பு வரை ஆய்வு செய்தார். வரலாற்று நிலைமைகளிலான ஆழமான மாற்றங்கள் எப்படி -சிறப்பாக- உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்தியும், சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றமும்- முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் சமூக, அரசியல் சக்தியை அடிப்படையில் மாற்றம் காணச் செய்துவிட்டன என்பதை அவர் விளக்கினார். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவிய நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த பாரம்பரியமான அரசியல் சமன்பாடுகள் (equation) புதிய நிலைமையில் பெறுமானமற்றுப் போயின.

ட்ரொட்ஸ்கி, லெனினின் சூத்திரங்களின் அரசியல் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை கண்டுபிடித்தார். அவை அரசியல் ரீதியில் யதார்த்தமானவையாக விளங்கவில்லை. இது அரச அதிகாரப் பிரச்சினையை தீர்க்காமல் தட்டிக் கழித்தது. ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் ஒரு சம்பிரதாயமான ஜனநாயகப் பண்புகளுடன் நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ள முடியும் என்பதை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொள்ளவில்லை. வர்க்க உறவுகளின் யதார்த்தம் தொழிலாளர் வர்க்கத்தை முதலாளி வர்க்கத்தின் பொருளாதார நலன்களுக்கு எதிராக அதனது அரசியல் சர்வாதிகாரத்தை பிரயோகிக்கத் தள்ளப்படும். வேறு வார்த்தைகளில் சொன்னால் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் நிர்ப்பந்தத்தினால் ஒரு சோசலிசப் பண்பை பெறுகின்றது. ஆனால் ரஷ்யாவின் தரப்பட்ட பின்தங்கிய நிலைமையினுள்- அதனது சொந்தப் பொருளாதார அபிவிருத்தியின் வரையறைகளை கணக்கில் எடுக்கும் போது இது எப்படி சாத்தியமாகும். அது தெளிவான விதத்தில் சோசலிசத்துக்கு தயார் இல்லை?

ரஷ்யப் புரட்சியை உள்ளிருந்து நோக்கும் போது இந்தப் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இதை வெளியில் இருந்து ஆய்வு செய்யும் போது- அதாவது உலக வரலாற்றினதும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் சர்வதேச வளர்ச்சியினதும் சாதகமான நிலையில் இருந்து பார்க்கும் போது ஒரு எதிர்பாராத தீர்வு தோன்றியது. இதனால் 1905 ஜூன் அளவில் முதலாவது ரஷ்யப் புரட்சி விரிவடைந்த போது ட்ரொட்ஸ்கி "முதலாளித்துவம் முழு உலகையும் தனியொரு பொருளாதார, அரசியல் அலகு ஆக ஆக்கிவிட்டது" எனக் குறிப்பிட்டார். உலகப் பொருளாதார அமைப்பிலான இந்த ஆழமான மாற்றத்தை ட்ரொட்ஸ்கி உள்ளீர்த்துக் கொண்டிருந்தார்.

"இது இப்போது இடம்பெற்று வருபவைக்கு சர்வதேசப் பண்பை வழங்கி ஒரு பரந்த அடிவானத்தை திறந்து வைக்கிறது. தொழிலாளர் வர்க்கத் தலைமையிலான ரஷ்ய அரசியல் விடுதலை அந்த வர்க்கத்தை வரலாறு இன்னமும் கண்டிராத ஒரு உயரத்துக்கு உயர்த்தி வைக்கும். பரந்த அதிகாரத்தையும் வளங்களையும் அதற்கு வழங்கி ஏற்கனவே வரலாற்றினால் புறநிலை நிலைமைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டும் பணியின் ஆரம்ப கர்த்தாவாக அதை ஆக்கும்." (நிரந்தரப் புரட்சி, நியூபார்க் -பக்கம் 240)

ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறை ஒரு வியத்தகு கோட்பாட்டு முன்னேற்றத்தை பிரதிநிதித்துவம் செய்தது. ஐன்ஸ்ரைனின் (Einstein) சார்பு விதி (சார்பியல்) கோட்பாடு போன்று இதுவும் 1905ம் ஆண்டில் மனித இனத்துக்கு கிடைத்த மற்றொரு கொடையாகும். இது மனிதன் உலகை பார்த்து வந்த அடிப்படையாகவும் மாற்றமுடியாதுமான பொதுக்கொள்கை கட்டுமானங்களை மாற்றியதுடன், பாரம்பரியமான நியுட்டோனின் (Newtonian) பெளதீகத்தின் (இயற்பியல்) குறுகலான மூடுதிரையினுள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாத நிலைமையை கையாள்வதற்கான வழிவகைகளை வழங்கியது. ட்ரொட்ஸ்கியினுடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அடிப்படையான விதத்தில் ஆய்வு ரீதியான முன்நோக்குகளை மாற்றங்காணச் செய்தது. இதிலிருந்து புரட்சிகரமான போக்குகள் நோக்கப்பட்டன. 1905ம் ஆண்டுக்கு முன்னர் புரட்சிகளின் அபிவிருத்திகள் ஒரு தேசிய நிகழ்வுகளின் ஒரு வளர்ச்சியாகக் காணப்பட்டது. அதன் பெறுபேறுகள் அதனது உள்வாரி சமூக, பொருளாதார அடிப்படையினதும் உறவுகளதும் தாக்கத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டது. ட்ரொட்ஸ்கி வேறொரு அணுகுமுறையை பிரேரித்தார். நவீன சகாப்தத்தில் புரட்சியை புரிந்துகொள்வதற்கு முக்கியமாக தேசிய அரசுகளில் அரசியல் ரீதியாக வேரூன்றி உள்ள வர்க்க சமுதாயத்தின் சமூக மாற்றத்தினை ஒரு உலக வரலாற்றுத் தொடர்ச்சியாக, அதாவது ஒரு பூகோளரீதியாக ஒன்றிணைக்கப்பட்ட பொருளாதாரத்தினதும் சர்வதேச ரீதியாக ஒன்றிணைக்கப்பட்ட மனித சமுதாயத்தினதும் அடிப்படையில் ஒரு வர்க்கமற்ற சமுதாயம் வளர்ச்சி காண்கின்றது என்பதை முன்வைத்தார்.

ஐன்ஸ்ரைனுடன் ஒப்பிடுவது வலிந்துபெறும் முயற்சியென நான் நினைக்கவில்லை. ஒரு புத்திஜீவி நிலைப்பாட்டில் இருந்து 20 நூற்றாண்டின் திருப்பத்தில் புரட்சிகரக் கோட்பாட்டாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளும் பெளதீகவியலாளர்கள் (இயற்பியலாளர்கள்) எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஒத்தவையாக இருந்தன. ஐரோப்பா பூராவும் திரண்டு வருகின்ற பரீட்சார்த்தகரமான தரவுகளை நியுட்டோனின் பாரம்பரியமான பெளதீகத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட வாய்ப்பாடுகளுடன் ஒருமைப்படுத்த முடியாது. சடப்பொருள் குறைந்த பட்சம் உப-அணு துணிக்கைகளை (துகள்களை) (Sub-atomic particles) கொண்டுள்ளது. இது நியூட்டன் இருக்கும் என்று கூறிய விதத்தில் இருக்க மறுக்கின்றது. ஐன்ஸ்ரைனின் சார்பு விதி (சார்பியல் கோட்பாடு) சட உலகினை புரிந்து கொள்வதற்கான புதிய கருத்து அடிப்படையிலான கட்டுமானத்தை வழங்கியது.

அதே அர்த்தத்தில் சோசலிச இயக்கம் இன்றுள்ள கோட்பாட்டு ரீதியான கட்டுமானத்தில் போதுமான அளவுக்கு தொகுத்துக் கொள்ள முடியாத அளவிலான ஒரு தொகை சமூகப், பொருளாதார, அரசியல் தரவுகளை எதிர் கொண்டுள்ளது. நவீன உலகப் பொருளாதாரத்தின் அதிகரிக்கும் சிக்கலானது, எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்களை எதிர்த்து நிற்கிறது. உலகப் பொருளாதார அபிவிருத்தியின் தாக்கம் இதுகாறும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தேசியப் பொருளாதாரத்தின் அமைப்பினுள்ளும் வெளிப்பாடாகியது. பின்தங்கிய பொருளாதாரங்களினுள் கூட சர்வதேச வெளிநாட்டு முதலீட்டின் பெறுபேறாக சில உயர்ந்த முன்னேற்றமான தன்மைகள் காணப்படுகின்றன. அங்கு நிலப்பிரபுத்துவ அல்லது அரை நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைகள் இருந்து வந்தன. அவற்றினது அரசியல் கட்டமைப்பு மத்திய காலத்து (Middle Ages) மிச்ச சொச்சங்களை கொண்டிருந்தன. அவற்றின் பொருளாதாரத்தில் கனரக தொழிற்துறை ஒரு பெரும் பாத்திரம் வகித்த ஒரு முதலாளித்துவ கட்டமைப்பை கொண்டிருந்தது. முதலாளித்துவ அபிவிருத்தி பின்தங்கிய நாடுகளினுள் (தமது) ஜனநாயக புரட்சியையிட்டு சொந்த தொழிலாள வர்க்கத்திலும் பார்க்க அக்கறை காட்டாத ஒரு முதலாளி வர்க்கம் இருந்து வருவது வழமைக்கு மாறானது அல்ல. உள் முரண்பாடுகளால் தற்போதுள்ள சமூகவியல் தோற்றப்பாடுகள் குறைவாக தீர்மானிக்கப்படும் என நம்பப்படும் சாதாரண மூலோபாய கணிப்புக்களால் அத்தகைய வழமைக்கு மாறானவைகளை சமப்படுத்தமுடியாது.

ட்ரொட்ஸ்கியின் மாபெரும் சாதனை புதிய சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களுக்கு சமனான ஒரு புதிய கோட்பாட்டு ரீதியான அமைப்பு முறையை கொண்டு விபரிப்பதை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறையில் எந்த விதமான கற்பனாவாதமும் கிடையாது. மாறாக உலகப் பொருளாதாரம் சமூக அரசியல் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றிய ஒரு ஆழமான பார்வையைக் கொண்டிருந்தது. அது அரசியலுக்கு ஒரு யதார்த்தமான அணுகுமுறையும், தாக்கமான புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதும் சோசலிசக் கட்சிகள் தேசியத்திற்கு மேலாக சர்வதேசிய வாதத்தின் மேலாதிக்கத்தை எவ்வளவுக்கு தமது புறநிலையான தொடக்கப் புள்ளியாக கொள்ளுகின்ற அளவுக்கே சாத்தியமாகும். இது வெறுமனே சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒன்றிணைவினை ஊக்குவிப்பதை மட்டும் கருதாது. இதனது அத்தியாவசியமான புறநிலை அடிப்படையை உலகப் பொருளாதாரத்தில் இருந்து புரிந்து கொள்ளாமலும், உலகப் பொருளாதாரத்தின் பொருளாதார யதார்த்தத்தை மூலோபாயச் சிந்தனையின் அடிப்படையாக ஆக்கிக்கொள்ளாமலும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் என்பது ஒரு கற்பனாவாத குறிக்கோளாகவே தொடர்ந்து இருந்து வருவதுடன், இது தேசிய அடித்தளத்தை கொண்ட சோசலிசக் கட்சிகளின் நடைமுறையுடனும் வேலைத் திட்டத்துடனும் இன்றியமையாதவாறு தொடர்பற்றதாக இருக்கும்.

உலக முதலாளித்துவத்தின் யதார்த்தத்தில் இருந்தும் சர்வதேச பொருளாதார அரசியல் சூழ்நிலையின் மீது ரஷ்ய நிகழ்வுகளின் புறநிலை ரீதியான சார்பு நிலையை இனங்கண்டு கொள்வதன் அடிப்படையிலும் முன்னேறிச் செல்வதாகும். ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியின் ஒரு சோசலிச அபிவிருத்தியின் தவிர்க்க முடியாத தன்மையை முன்கூட்டியே கண்டார். ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றத் தள்ளப்படும் எனவும் ஏதோ ஒரு வழியில் ஒரு சோசலிசப் பண்பான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் எனவும் கண்டார். மேலும் சோசலிசப் பாதையில் தொடர்ந்து செல்கையில் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் தேசிய சூழ்நிலைகளின் வரையறைகளுக்கு எதிராக தவிர்க்க முடியாத விதத்தில் கிளர்ந்து எழும் எனவும் கண்டார். இந்தச் சிக்கல் நிலையில் இருந்து விடுபட எவ்வாறு அது ஒரு வழியை கண்டுகொள்ளும்? தமது தலைவிதியை ஐரோப்பிய, உலக புரட்சியுடன் இணைத்துக்கொள்வதன் மூலம், அதனது சொந்தப் போராட்டம் இறுதி ஆய்வுகளில் ஒரு வெளிப்படுத்திக்காட்டலாக இருந்தது.

இது ஐன்ஸ்ரைனைப் போலவே தமது வாழ்க்கையில் 26வது பிறந்த தினத்தை அண்மித்துக் கொண்டிருந்த மற்றொரு மனிதனின் தூரப் பார்வையாகும். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் உலக புரட்சியின் ஒரு யதார்த்தமான கருத்துப்பாட்டினை சாத்தியமாக்கியது. தேசியப் புரட்சிகளின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது அல்லது இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால் தேசியப் புரட்சிகளை உலக சோசலிசப் புரட்சியின் கட்டுமானத்தினுள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ட்ரொட்ஸ்கியும் போல்ஷிவிக்குகளும்

ட்ரொட்ஸ்கியினது முன்னேற்றத்தினது ஆழமான தாக்கங்களை ஒருவர் எண்ணிப்பார்க்கும்போது, அவர் போல்ஷிவிக்குகளையும் மென்ஷிவிக்குகளையும் நன்கு நியாயமாக விளங்கிக்கொள்ள முடியும். லெனினின் மாபெரும் தேட்டத்தின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பீடு செய்வது இங்கு எனது நோக்கமல்ல. அவர் வேறு எவரைக் காட்டிலும் பெரிதும் நன்றாக புரட்சிகர இயக்கத்தினுள் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருந்ததோடு, அந்தப் போராட்டத்தை கட்சி நடவடிக்கைகளின் உள்ளும் அமைப்பினுள்ளும் ஒவ்வொரு கட்டத்தினுள்ளும் முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டிருந்தார். புரட்சிகர அமைப்பு தொடர்பான கேள்வி முக்கியமானதாகவும் தீர்க்கமானதாகவும் இருந்தபோதும், 20ம் நூற்றாண்டின் அனுபவங்கள் தொழிலாளர் வர்க்கத்துக்கு போதிப்பது அல்லது போதிக்க வேண்டி இருப்பது ஒரு பலமான அமைப்பாக இருந்தாலும் அது ஒரு சரியான புரட்சிகர முன்நோக்கினால் வழிநடாத்தப்படாவிட்டால் இறுதி ஆய்வுகளில் அது புரட்சிக்கு ஒரு தடையாக மாற இடமுண்டு என்பதாகும்.

ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் இயக்கத்தினுள்ளேயான (Russian Social Democratic Labor Movement) சகல போக்குகள் சம்பந்தமாகவும் ட்ரொட்ஸ்கியின் மனப்பாங்கினை நிர்ணயம் செய்தது, அவற்றின் முன்நோக்கும் அவற்றின் வேலைத் திட்டமுமே. அவர்களின் அரசியல் வேலைத் திட்டம் ரஷ்யப் புரட்சியின் பரிணாமத்தையும் தலைவிதியையும் நிர்ணயம் செய்யும் ஒரு சரியான மதிப்பீட்டினை எந்தளவுக்கு அடிப்படையாகக் கொண்டிருந்தது? இந்த நிலைப்பாட்டில் இருந்து ட்ரொட்ஸ்கி, போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டத்தையும் திசைவழியையும் நியாயமான விதத்தில் விமர்சித்து வந்தார். அவர் 1909ம் ஆண்டில் எழுதிய கட்டுரையை வாசிக்கின்றேன். அதில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற்கட்சியில் இருந்து வேறுபட்ட பிரிவுகளும் கொண்டிருந்த வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.

அவர் எழுதியதாவது: "தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க நலன்களுக்கும் புறநிலை நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தொழிலாளர் வர்க்கம் தானாகவே அரசியல் ரீதியாக கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்று லெனின் நம்புகிறார். இந்த சுய கட்டுப்பாடு பாட்டாளி வர்க்கத்தின் தத்துவார்த்த விழிப்புணர்ச்சியின் விளைவாக இருக்கும், அது முன்னணிப் பாத்திரம் வகிப்பது ஒரு முதலாளித்துவ புரட்சியாக இருக்கும் என கருதுகின்றார். லெனின் புறநிலை முரண்பாடுகளை பாட்டாளி வர்க்கத்தின் நனவாக மாற்றுவதோடு அதை மத நம்பிக்கையில் அன்றி ஒரு விஞ்ஞான ரீதியான திட்டத்தில் வேரூன்றியுள்ள ஒரு வர்க்க கட்டுப்பாடு மூலம் தீர்வு காணலாம் என கருதினார். இந்த புத்திஜீவித படைப்பினை தெளிவாகக் கண்டுகொண்டதுதான் தாமதம் அது எந்தளவுக்கு உதவாக்கரையான கருத்தியல்வாதத் தன்மை கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

"இங்கு பிரச்சினை என்னவென்றால் போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தைக் காண்பது புரட்சியிலும் அதன் வெற்றியின் தருணம் வரையும் மட்டுமேயாகும். அதன் பின்னர் அவர்கள் அதை (வர்க்கப் போராட்டம்) தற்காலிகமான ஜனநாயகக் கூட்டினுள் கரைந்து போவிடும். பின்னர் ஒரு குடியரசு அமைப்பு திட்டவட்டமாக ஸ்தாபிதம் செய்யப்பட்டதன் பின்னர் மட்டும் தமது புனிதமான வடிவத்தில் சோசலிசத்திற்கான நேரடிப்போராட்டமாக வடிவெடுக்கும். எமது புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சி என்ற வெறும் கருத்தில் இருந்து மென்ஷிவிக்குகள் முன்நோக்கிச் செல்கையில் அரச அதிகாரத்தின் மாற்றத்தை முதலாளி வர்க்கத்துக்கு நிச்சயமாக்கும் பொருட்டு பாட்டாளி வர்க்கம் தனது உபாயங்கள் அனைத்தையும் தாராண்மை முதலாளி வர்க்கத்தின் பழக்கவழக்கங்களுக்கு இயைந்து போவதாகச் செய்ய வேண்டும் என்னும் கருத்துக்கு வருகின்றது. போல்ஷிவிக்குகள் இதற்குச் சமமான ஒரு வெறும் கருத்தில் இருந்து -சோசலிச சர்வாதிகாரம் அன்றி ஜனநாயக சர்வாதிகாரம்- முன்நோக்கிச் செல்கின்றனர். பாட்டாளி வர்க்கம் தன்மீது ஒரு முதலாளி வர்க்க ஜனநாயக வரையறைகளைத் திணிப்பதன் மூலம் அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறது என்ற கருத்திற்கு வருகின்றனர். இந்த விடயத்தில் அவர்களுக்கு இடையேயான வேறுபாடு மிகவும் கவனிக்கத்தக்கது என்பது உண்மை. மென்ஷிவிசத்தின் புரட்சிகர எதிர்ப்பு அம்சங்கள் ஏற்கனவே அப்பட்டமாகிவிட்ட அதே சமயம் போல்ஷிவிக்குகளினது புரட்சிகர எதிர்ப்பு அம்சங்கள் வெற்றியின்போது மட்டுமே ஒரு பாரதூரமான அச்சுறுத்தலாக வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது." (எமது வேறுபாடுகள்-L.T)

இது ரஷ்யப் புரட்சியில் நிச்சயமாக இடம்பெறப் போவதைப் பற்றிய ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் கொண்ட பார்வையாகும். ஜார் ஆட்சி தூக்கிவீசப்பட்டதும் லெனினின் ஜனநாயக சர்வாதிகார முன்நோக்கினது குறைபாடுகள் உடனடியாகவே தெளிவாகியது. ட்ரொட்ஸ்கி, ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை கைப்பற்றத் தள்ளப்படும் எனவும் "சோசலிசத்தின் புறநிலையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் எனவும் ஆனால் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஒரு சில கட்டத்தில் நாட்டின் பொருளாதார பின்னடைவினால் தடுக்கப்படும் எனவும் ஒரு தேசியப் புரட்சியின் கட்டுமானத்தினுள் இந்த முரண்பாடுகளுக்குள் இருந்து விடுபட மார்க்கம் இல்லை" எனவும் தொடர்ந்து கூறத் தள்ளப்பட்டார். ஆதலால் ட்ரொட்ஸ்கி, லெனினின் முன்நோக்கின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையை தெளிவாக இனங்கண்டது வெறுமனே அதனது அரசியல் கணிப்பீடுகளில் இருந்து மட்டுமன்று. ஆனால் அந்த (லெனினின்) அரசியல் கணிப்பீடுகள் முன் நோக்கிச் சென்றது ரஷ்யப் புரட்சி வெளிவர இருந்த கட்டுமானத்தை ஒரு சர்வதேச ரீதியில் மதிப்பாய்வு செய்வதற்கு மாறாக ஒரு தேசிய ரீதியில் சென்றதிலிருந்தேயாகும்.

1909ல் அவர் எழுதியதாவது: "தொழிலாளர் அரசாங்கம் அதனது சக்திகளை மேற்கு ஐரோப்பிய சோசலிச பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தும் பணிக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த வழியில் மட்டுமே அதனது தற்காலிக புரட்சிகர மேலாதிக்கம் ஒரு சோசலிச சர்வாதிகாரத்துக்கான முன்னுரையாக வருகின்றது. இதன் மூலம் நிரந்தரப் புரட்சி ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்க சுயபாதுகாப்பு தொடர்பான ஒரு கேள்வியாக வரும். தொழிலாளர் கட்சி உக்கிரமான புரட்சிகர மூலோபாயத்துக்குப் போதுமான முன்னெடுப்பினை காட்டிக் கொள்ள முடியாது போய் அது வெறுமனே தேசிய ரீதியானதாயும், ஜனநாயக ரீதியானதாயும் ஒரு சிக்கனமான புரட்சிகர சர்வாதிகார வரையறைகளை கொண்டதாக விளங்கின், தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற நேரிட்டால் ஐரோப்பாவின் ஒன்றிணைந்த பிற்போக்குச் சக்திகள் (United reactionary forces Europe) இதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதில் காலத்தை வீணடிக்காது. ஆதலால் தொழிலாள வர்க்கம் அதனது முழு சக்தியையும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்துக்கு செலவிட்டாக வேண்டும்.

உண்மையில் இது நிஜமான முக்கிய பிரச்சினையாகும். இறுதி ஆய்வுகளில் அரச அதிகாரத்தின் வடிவத்தைப் பற்றிய அரசியல் மதிப்பீடுகள் புரட்சிகர இயக்கத்தின் அரசியல் பெறுபேறுகளை நிர்ணயம் செய்யும் காரணியாக இருப்பது சர்வதேசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய வேறுபட்ட மதிப்பீடுகளில் இருந்தேயாகும். இதைத் தொடர்ந்து வரும் விடயம் போல்ஷிவிக் கட்சியின் அபிவிருத்தியை மதிப்பீடு செய்வதில் தங்கியுள்ளது. ஒவ்வொரு வேலைத் திட்டமும் இறுதியாக சமூக சக்திகளின் செல்வாக்கினையும் நலன்களையும் பிரதிபலிக்கின்றன. காலாவதியான முதலாளித்துவ அபிவிருத்திகளைக் கொண்ட நாடுகளில்- முதலாளி வர்க்கம் புரட்சியின் தேசிய, ஜனநாயக பணிகளை தொடர்ந்து பேணுவதற்கு இலாயக்கற்றதாக உள்ளன. அந்த பணிகளின் மூலகங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் முன்நிற்பதை நாம் அறிவோம். தொழிலாளர் வர்க்கம் அந்த ஜனநாயக தேசியக் கோரிக்கைகளுக்கு இயைந்து போகவும் முன்னெடுக்கவும் வேண்டிய நிலையில் உள்ளது. அவை ஒரு முற்போக்கு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. 20ம் நூற்றாண்டின் போது சோசலிச இயக்கம் அந்த ஜனநாயக தேசியப் பணிகளை முன்னெடுக்க வேண்டித் தள்ளப்பட்ட பல தருணங்கள் இருந்ததைக் கண்டோம். அத்தோடு தனது சொந்த அணியினுள் தொழிலாளர் வர்க்கத்தின் சோசலிச சர்வதேச அபிலாசைகள் பெரும் முக்கியத்துவத்தை கொண்டிராத, ஆனால் அந்தப் பணிகளில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மூலகங்களை ஈர்த்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது. போல்ஷிவிக் கட்சியின் அபிவிருத்தியின் மீது அத்தகைய போக்கானது செல்வாக்குச் செலுத்தியது என கூற முடியும் என நான் எண்ணுகிறேன். போல்ஷிவிக் கட்சியின் கட்டுமானத்தினுள் லெனின் உண்மையில் அத்தகைய தேசிய குட்டி முதலாளித்துவ ஜனநாயக தப்பெண்ணங்களுக்கு உறுதியான எதிர்ப்பை காட்டுவதைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவர் அவை இருந்து கெண்டுள்ளதை அறிந்துகொண்டிருந்ததோடு அவற்றை புறக்கணிக்கவும் முடியவில்லை.

முதலாவது உலக மகா யுத்தத்தின் வெடிப்பின் பின்னர் 1914 டிசம்பரில் அவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை நான் வாசிக்க விரும்புகின்றேன்.

"ஒரு அர்த்தத்தில் தேசிய பெருமை மாபெரும் ரஷ்ய வர்க்க நனவுள்ள பாட்டாளி வர்க்கமான எமக்கு அப்பாற்பட்டதா? உண்மையில் இல்லை! நாம் எமது மொழியையும் எமது நாட்டையும் நேசிக்கின்றோம். அத்தோடு நாம் அதனது உழைக்கும் மக்களது ஜனநாயக சோசலிச நனவு மட்டத்தை (சனத்தொகையில் 9/10 பங்கினர்) முடிந்த மட்டும் உயர்த்த எம்மால் ஆனதை எல்லாம் செய்கின்றோம். எமது அழகான நாடு ஜார் கொலைகாரர்களதும் பிரபுக்களதும் முதலாளிகளதும் கரங்களால் அடக்குமுறையையும் அவமானத்தையும் அனுபவிப்பதைக் காண்பது எமக்கு பெரிதும் துன்பகரமானது. எம் மத்தியில் -அதாவது மாபெரும் ரஷ்யர் மத்தியில் இருந்து இந்தக் காடைத் தனங்களுக்கு எதிராக எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம்; அவர்கள் மத்தியில் ரடிஷ்சேவும் (Radishchev), டிசம்பர்வாதிகளும் (Decembrists) 1870பதுகளின் புரட்சிகர பொது மக்களும் 1905ல் மக்களின் மாபெரும் புரட்சிகரக் கட்சியை உருவாக்கிய மாபெரும் ரஷ்ய தொழிலாள வர்க்கமும் ஜனநாயகத் திசையில் திருப்பி, மதகுருமாரையும் நிலச் சுவாந்தார்களையும் தூக்கி வீச போராட்டத்தை ஆரம்பித்த மாபெரும் ரஷ்ய விவசாயிகளும் உருவாக்கப்பட்டிருந்தனர்.

"மாபெரும் ரஷ்ய தேசமும் கூட ஒரு புரட்சிகர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. நாம் இதையிட்டு முழு தேசிய பெருமை கொண்டுள்ளோம். ஏனெனில் மாபெரும் இனக்கலவரங்களையும் தூக்கு கம்ப வரிசைகளையும் மாபெரும் பட்டினியையும் பாதாள சிறைக்கூடங்களையும் மட்டுமல்லாது சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டத்தின் மாபெரும் மாதிரிகளையும், (மாபெரும் ரஷ்ய தேசிய இனம் மனித இனத்துக்கு வழங்கியது) மனித இனத்துக்கு வழங்கியுள்ளது."

இதனை எழுதியவர் லெனின். இந்தக் கட்டுரையை லெனின் மாபெரும் ரஷ்ய பேரினவாதத்துக்கு ஒரு அரசியல் சலுகைகாட்டுவதாக வாசிப்பது நியாயமற்றது. அவரது முழு வாழ்க்கை வரலாறும் மாபெரும் ரஷ்ய தேசியவாதத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பை நிரூபிக்கின்றது. இருப்பினும் இக்கட்டுரை தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே ஆழமாக வேரூன்றிய தேசியவாத உணர்வுகளின் மீது ஒரு புரட்சிகரமான செல்வாக்கைப் பிரயோகிக்க லெனின் செய்யும் ஒரு முயற்சியாகும். இந்த உணர்வுகள் புரட்சிகர முடிவுகளையும் தொழிலாளர் வர்க்கத்தினுள் பலமான தேசியவாத உணர்வுகளை நோக்கி இட்டுச் செல்லவும் மட்டுமன்றி அவரது சொந்தக் கட்சியின் பகுதிகளினுள்ளும் கூட நிலவிய உணர்வுகளையிட்டு அவர் கொண்டிருந்த உணர்வை பிரதிபலிக்கின்றது. தேசியவாத உணர்வுகளை புரட்சிகர நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் தேசியவாத உணர்வுகளுக்கு புரட்சிகர இலக்குகளை இயைந்து போகச் செய்வதற்கும் இடையே தெளிவான கோடு இருந்து கொண்டுள்ளது. ஒரு ஆசிரியன் விடுக்க விரும்பும் செய்திக்கும் அந்தச் செய்தி எந்த விதத்தில் அர்த்தப்படுத்தப்படுகின்றது என்பதற்கும் இடையே ஒரு சரியான தொடர்பு இல்லை. முன்னொரு போதும் இல்லாத பரந்த கூட்டத்தினரிடையே அச் செய்தி எடுத்துச் செல்லப்படும்போது அந்தச் செய்தியின் அரசியல் தரத்தில் தவிர்க்க முடியாத வகையில் ஒரு தரக்குறைவு ஏற்படுகின்றது. மாபெரும் ரஷ்யத் தொழிலாள வர்க்க புரட்சிகரப் பாரம்பரியங்களுக்கு ஒரு பாராட்டாக லெனின் எதைக் கருதினாரோ அது கட்சித் தொழிலாளர்களில் பெரிதும் பின்தங்கிய பகுதியினரால் மாபெரும் ரஷ்யர்களின் புரட்சிகர இயலளபைத் தூக்கிப்பிடிப்பதாக அர்த்தப்படுத்தப்பட்டது. இதனது இடதுவடிவம் (Left form) என்னவாக இருந்தபோதிலும் 1915ல் ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியது போல் இதுவும் கூட அரசியல் ரீதியில் ஆபத்தான விளைவுகளைக் கொண்ட ஒரு பேரினவாத வடிவமாகும்.

ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: "தேசிய எல்லைகளினுள்ளே ஒரு சோசலிசப் புரட்சியின் சாத்தியத்தை அணுகுவதானது சமூக தேசாபிமான சாராம்சத்தைக் கொண்ட அதே தேசிய குறுகியதன்மைக்கு பலியாகிப் போவதாகும். பொதுவில் சமூக தேசாபிமானத்தில் மிகவும் கேடுகெட்ட சீர்திருத்தவாதத்துக்கு அக்கம் பக்கமாக ஒரு தேசிய புரட்சிகர இரட்சிப்புவாதம் இருந்து கொண்டுள்ளதை மறந்து போய்விடலாகாது. அதனது தொழிற்துறை மட்டத்தினாலோ அல்லது அதனது ஜனநாயக வடிவத்தினதும் புரட்சிகர வெற்றிகளாலுமோ அதனது சொந்த தேசிய அரசு மனித இனத்தை சோசலிசத்தை நோக்கி அல்லது ஜனநாயகத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டப்படுகின்றது எனக் கருதப்படுகின்றது. வெற்றிகண்ட புரட்சியை உண்மையில் தனி ஒரு பெரிதும் அபிவிருத்தியடைந்த நாட்டினுள் ஈட்டிக் கொள்ள முடியுமானால் இந்த இரட்சிப்புவாதம்- தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் சேர்ந்து சில சார்பு ரீதியான வரலாற்று நியாயப்படுத்தல்களை கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இதை நினைத்தும் பார்க்க முடியாது. அத்தகைய விதிமுறைகளைக் கொண்டு புரட்சியின் தேசிய அடிப்படைகளை காக்கப் போராடுவது புரட்சிக்கே குழி பறிப்பதாக இருக்கும். அவை ஒரு தேசிய அடிப்படையில் ஆரம்பிக்கலாம், ஆனால் அவை ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பொருளாதார, இராணுவ, அரசியல் பரஸ்பர சார்பு தன்மையின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட முடியாததாகும். இது இன்றைய யுத்தத்தில் போன்று வேறு என்றும் இந்தளவு சக்திவாய்ந்த முறையில் அம்பலப்படுத்தப்பட்டது கிடையாது".

லெனின் தமது அரசியல் முன்நோக்கினை எந்த நிலைமைகளின் கீழ் மறுமதிப்பீடு செய்தார் என்பதை ஆய்வு செய்வது பெறுமதி வாய்ந்தது. முதலாவது உலக யுத்தத்தின் தாக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரத்தை அவர் ஆய்வு செய்தமை ரஷ்யப் புரட்சியின் சக்தியையிட்டு ஒரு ஆழமான அறிவை வழங்கியது என்பதில் சந்தேகம் கிடையாது. அத்தோடு பல வருடங்களாக சாராம்சத்தில் ட்ரொட்ஸ்கியின் முன்நோக்குடன் இணைந்து கொண்டிருந்த அதைப் பின்பற்றவும் அவரை இட்டுச் சென்றது.

லெனின் தமது ஏப்பிரல் ஆய்வுரைகளை (April Theses) வாசித்த போது மண்டபத்தில் இருந்தவர்கள் அவர் பெரிதும் ட்ரொட்ஸ்கி வாதிட்ட திசையில் நின்று வாதிக்கின்றார் என்பதை உடன் புரிந்துகொண்டனர். "ட்ரொட்ஸ்கிசம்" என்ற குற்றச்சாட்டு உடனடியாக எழுப்பப்பட்டதோடு இந்த உண்மையில் இருந்து நாம் அந்த ஆண்டு புரட்சியின் வெற்றிக்கு ட்ரொட்ஸ்கியின் புத்திஜீவி பங்களிப்பின் மாபெரும் அளவை புரிந்து கொள்ள முடியும். ட்ரொட்ஸ்கி ஒரு புத்திஜீவி, அரசியல் கட்டுமானத்தை ஏற்கனவே வழங்கி இருந்தார். போல்ஷிவிக் கட்சியினுள்ளான விவாதம் இதனுள் தொடர்ந்து முன்நோக்கிச் செல்லக் கூடியதாக இருந்தது. இது ஆகாயத்தில் இருந்து முற்றிலும் ஒரு இடியாக வரவில்லை. போல்ஷிவிக் கட்சியினுள்ளான லெனினின் பிரபல்யமான ஆளுமையும் அவரது சவால் செய்ய முடியாத தோற்றமும் சார்பு ரீதியில் புதிய முன்நோக்குக்கு ஒரு துரிதமான வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்குமேயானால் 1917ல் ரஷ்ய வெகுஜனங்கள் இடது திசையில் நகரத் தொடங்கிய நிலைமைகளின் கீழ் ட்ரொட்ஸ்கி இக்கருத்துருக்களின் முன்னோடியாக விளங்கியமை லெனின் தொடுத்த போராட்டத்துக்கு வசதி செய்து கொடுத்தது.

ஒரு குறிப்பிட்ட விதத்தில் 1917 கோடையிலும், இளவேனிற் காலத்திலும், இலையுதிர் காலத்திலும் நடைபெற்றவை 12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் அபிவிருத்திகளின் ஆழமான வெளிப்பாடாகும். மென்ஷிவிக்கான தியடோர் டான் (Theodere Dan) எழுதிய போல்ஷிவிசத்தின் மூலம் (The Origins of Bolshevism) என்ற நூலில் இருந்து சுவராசியமான ஒரு பந்தியை இங்கு நான் வாசிக்க விரும்புகின்றேன். அவர் கீழ்கண்ட அவதானிப்புகளை 1905ம் ஆண்டு பற்றிச் செய்கின்றார்:

"நடைமுறை ரீதியில் பேசும்போது சுதந்திரத்தின் நாட்களின் பின்னணி (1905 புரட்சியின் உச்சக்கட்டம்) போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகள் இருசாராரும் ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி தள்ளப்படுவதாக விளங்கியதை நாம் கண்டோம். அக்காலத்தில் அது இன்னமும் இப் பெயரைக் கொண்டிருக்கவில்லை. ட்ரொட்ஸ்கிசம், குறுகிய காலத்தில் ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் வரலாற்றில் முதலும் கடைசியுமாக ஒரு ஒருங்கிணைப்பு மேடையாக மாறியது."

அதாவது இடது திசையிலான ரஷ்யத் தொழிலாளர் வர்க்கத்தின் குமுறும் இயக்க நிலைமைகளின் கீழ் ட்ரொட்ஸ்கியின் முன்நோக்கு பிரமாண்டமான கெளரவமும் தோற்றமும் ஈட்டிக் கொண்டது. இது 1905ல் இடம்பெற்றது. இது 1917ல் மீண்டும் இன்னும் பெரிதும் வெடித்துச் சிதறும் நிலையிலும் சக்திவாய்ந்ததாகவும் வரலாற்றை நிர்மாணிக்கும் உருவிலும் இடம்பெற்றது. 1917ன் மாபெரும் வெற்றி, பெருமளவுக்கு ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்நோக்குக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக விளங்கியது. 1922, 1923ல் இடம்பெற்றவை- அதாவது அக்டோபர் புரட்சிக்கு எதிரான அரசியல் பிரதிபலிப்புகளும் போல்ஷிவிக் கட்சியினுள் ரஷ்ய தேசியவாதத்தின் தோற்றமும் போல்ஷிக் கட்சியினுள் பழைய ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு போக்குகள் தலையெடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்கியது. அச்சமயத்தில் தலையெடுத்த அரசியல் போக்குகள் போல்ஷிவிக் கட்சியினுள் நிலவிய அரசியல் பிளவுகளுடன் சம்பந்தப்படாதவை எனக் கொள்ளக் கூடாது. ஆனால் இதன் அர்த்தம் அவை திட்டவட்டமாக ஒரேமாதிரியானவை எனவும் அர்த்தப்படாது.

1922-23ல் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கி இருந்த சமூகப் போக்குகள் 1917ல் போல்ஷிவிசம் தனது வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்தவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டதாகும். புரட்சிகர ஆண்டில் போல்ஷிவிசத்தின் வளர்ச்சி பெரிய நகர்ப்புற மையங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் வெடித்துச் சிதறும் தீவிரமயமாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. 1922ம் 1923ம் ஆண்டுகளில் கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கிய சமூக சக்திகளும் லெனினின் பெரும் அக்கறைக்குரிய மூலமுமாக விளங்கியவையும் ஒரு பெரும் அளவுக்கு பாட்டாளி வர்க்க மூலகங்கள் அல்லாதனவாக விளங்கின. நகர்ப்புறங்களில் இருந்து வந்த கீழ்மட்ட மத்தியதர வர்க்கத்தினருக்கே சிறப்பாக புரட்சி எண்ணற்ற தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது, அப்படியானால் பழைய ஸாரிச அதிகாரத்துவத்தின் மிச்சசொச்சங்களை பற்றி கூறத்தேவையில்லை. அத்தகைய மூலகங்கள் ரஷ்யப் புரட்சியை ஒரு சர்வதேச நிகழ்வுக்கு மாறாக கூடவோ அல்லது குறையவோ ஒரு தேசிய நிகழ்வாக நோக்கின. 1922ம் ஆண்டளவிலேயே லெனின் தேசிய போல்ஷிவிசத்தின் ஒரு வடிவமான வளர்ச்சி என எச்சரிக்கை செய்யத் தொடங்கியிருந்தார். பேரினவாதப் போக்குகளின் வளர்ச்சியையிட்டு அவரது எச்சரிக்கைகள் கண்டிப்பாக இருந்து வந்தன. நாம் அறிந்தது போல் 1922ன் கடைப்பகுதியிலும் 1923ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும் அந்த எச்சரிக்கைகள் சிறப்பாக ஸ்ராலினுக்கு எதிராகத் திருப்பப்பட்டு இருந்தன. லெனின் தனது இறுதி எழுத்துக்களில் நேரடியாக ஸ்ராலினை மோசமான பெரும் ரஷ்ய சோவினிசத்தின் மறுவெளிப்பாட்டை வெளிப்படுத்தும் மனிதராகக் காட்டி வந்தார்.

சாராம்சத்தில் ட்ரொட்ஸ்கிசத்துக்கு எதிரான போராட்டம், கட்சியினுள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு மறு எழுச்சியாகும். ட்ரொட்ஸ்கி இதை வெளிப்படையாக கூறுவதை தடை செய்தது என்ன? இதற்கான பதிலை லெனினின் இறுதி சுகவீனத்தினாலும் அவரின் மரணத்தினாலும் உருவாக்கப்பட்ட அசாதாரணமான கஷ்டமான சூழ்நிலைகளுக்குள் கண்டு கொள்ள வேண்டியிருக்கும். நான் சந்தேகிப்பது போல் ட்ரொட்ஸ்கி தம்மை முன்னர் லெனினில் இருந்து பிளவுபடுத்திய வேறுபாடுகளை பற்றி அவசியமான வரையில் புறநிலை ரீதியாகப் பேசுவது எதுவிதத்திலும் முடியாத ஒன்றென புரிந்து கொண்டிருக்க வேண்டும். இந்த வேறுபாடு புறநிலையாயும் நேர்மையாகவும் வெளிப்பட்டது ஜோவ்ஃபேயின் (Joffe) புகழ்பெற்ற இறுதி கடிதத்தின் ஒரு பந்தியிலேயேயாகும். அதில் முன்நோக்கு பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளில் நிரந்தரப் புரட்சிப் பிரச்சினை உட்பட என்னைக் காட்டிலும் ட்ரொட்ஸ்கியே சரியாக விளங்கினார் என லெனின் அடிக்கடி கூறுவதைத் தாம் கேட்டதாக ஜோவ்ஃபே (Joffe) ட்ரொட்ஸ்கிக்கு கூறினார்.

ட்ரொட்ஸ்கி 1923, 1924 காலப்பகுதி பூராவும் போல்ஷிவிக் கட்சியின் காரியாளர்களினுள் தேசியவாத போக்குகள் பற்றி ஒரு பெரிதும் விமர்சன ரீதியான மனப்பான்மையை ஏற்படுத்த முயன்றார். அவர் தேசியவாத போக்கினை ஒரு நிஜமான சோசலிச முன்நோக்கின் தெளிவாக்கத்துக்கு ஒரு மாபெரும் எதிரியாகக் கண்டார். தினசரி வாழ்க்கை பிரச்சினை (Problems Everyday life) எனும் நூலில் புத்திசாதுரியமான கட்டுரைகள் பல உள்ளன. அதில் ட்ரொட்ஸ்கி ரஷ்யாவின் தேசியவாத போக்கினது பிற்போக்கிற்கும், சோசலிச கொள்கைகளை அபிவிருத்தி செய்வதிலும் ரஷ்ய பொருளாதார வாழ்க்கையை சோசலிசமயமாக்குவதை ஆரம்பித்து வைப்பதிலும் ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கும் இடையேயான உறவுகளை அம்பலப்படுத்தியுள்ளார். பெரிதும் காலம் செல்ல- அவரின் வாழ்க்கையின் இறுதிப் பகுதியிலேயே ட்ரொட்ஸ்கி சோவியத் யூனியனில் ட்ரொட்ஸ்கிசத்துக்கு எதிரான போராட்டம் போல்ஷிவிக் கட்சியினுள் 1917க்கு முன்னைய கருத்து வேறுபாடுகளில் வேரூன்றி இருந்தது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றார். 1939ல் அவர் கூறியதாவது: "ஒரு கோட்பாட்டு மட்டத்தில் பார்க்கும்போது முழு ஸ்ராலினிசமும் 1905ல் நிரந்தரப் புரட்சி தத்துவம் உருவாக்கப்பட்ட போதே அதற்கு எதிரான விமர்சனத்தில் இருந்தே பிறந்தது." (1939-40 எழுத்துக்கள்- பக்கம் -55)

ட்ரொட்ஸ்கியை எப்படி நினைவு கூர்வது? சோசலிச வரலாற்றில் அவரது சிறப்பு முக்கியத்துவம் என்ன? நான் நினைக்கின்றேன், ட்ரொட்ஸ்கி, புரட்சிகர இயக்கத்தின் நனவில் உலகப் புரட்சிக் கோட்பாட்டாளனாக நினைவு கூரப்படுவதோடு ஒரு பரந்த இடத்தையும் பிடித்துக் கொண்டிருப்பார். உண்மையில் லெனினைக் காட்டிலும் அவர் நீண்ட காலங்கள் உயிர்வாழ்ந்ததோடு புதிய பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தார். ஆனால் 1905 தொடக்கம் 1940ல் அவரின் மரணம் வரையும் ட்ரொட்ஸ்கியின் சகல பணிகளிலும் ஒரு அடிப்படையான தொடர்ச்சி இருந்து கொண்டுள்ளது. உலகப் புரட்சிக்கான முன்நோக்குக்கான போராட்டம் அவரது பணிகளில் தீர்க்கமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாக விளங்கியது. லெனினது உள்ளடக்கம் அனைத்தும் ரஷ்யப் புரட்சியினுள்ளேயே அடங்கிக் கிடந்தது. ஆனால் ட்ரொட்ஸ்கிக்கோ இது அவரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக விளங்கியது. அது நிச்சயமாக ஒரு மாபெரும் நிகழ்வு, உலக சோசலிசப் புரட்சியின் மாபெரும் நாடகத்தில் ஒரு பகுதிக் கதை மட்டுமே.

ட்ரொட்ஸ்கியும் மரபுவழி மார்க்சிசமும்

ட்ரொட்ஸ்கி அரசியல் அதிகாரத்தில் இருந்து வீழ்ச்சி கண்டதன் பின்னர் அவரின் பணிகளை மீளாய்வு செய்வது தனி ஒரு விரிவுரையின் பரிமாணத்துக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் இந்த விரிவுரையை ஒரு முடிவுக்குக் கொணரும் விதத்தில் நான் ட்ரொட்ஸ்கியின் கோட்பாட்டு பாரம்பரியங்களின் ஒரு தீர்க்கமான அம்சத்தை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் அதாவது மரபுவழி மார்க்சிசத்தின் கடைசி மாபெரும் பிரதிநிதி என்ற விதத்தில் அவரின் பாத்திரம்.

மரபுவழி மார்க்சிசம் பற்றிப் பேசும் போது நாம் இரண்டு அடிப்படையான அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளோம்: முதலாவது, சமூகத்தில் உள்ள அடிப்படையான புரட்சிகர சக்தி தொழிலாளர் வர்க்கம்; இரண்டாவது, மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி ஒரு அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்ய கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறையாகவும் சளைக்காது செயற்படுவது.

சோசலிசப் புரட்சி இந்த தொடர்ச்சியானதும் உறுதியானதும் சமரசம் அற்றதுமான பணியின் விளைபயனே. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் புத்திசாலித்தனமான உபாயங்கள் மூலம் அடையப்படுவது அல்ல. ஆனால் பெரிதும் அடிப்படையான விதத்தில் கல்வியின் ஊடாக- முதலும் முக்கியமுமாக அதனது அரசியல் முன்னணிப் படையணி மூலம் அடையப்படுகின்றது. அங்கே குறுக்கு வழிகள் கிடையாது. ட்ரொட்ஸ்கி அடிக்கடி எச்சரிக்கை செய்து வந்தது போல் புரட்சிகர மூலோபாயத்தின் மாபெரும் எதிரி பொறுமையின்மையே.

20ம் நூற்றாண்டு தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் வெற்றிகளையும் மிகவும் பயங்கரமான தோல்விகளையும் தரிசித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளது படிப்பினைகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும். எமது இயக்கம் மட்டுமே இந்தப் பணியை ஆரம்பித்து வைத்துள்ளது. வரலாற்றில் எதுவும் வீணடிக்கப்பட்டதும் இல்லை மறந்து போனதும் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள ரீதியான ஒருங்கிணைப்பினால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் அடுத்த மாபெரும் எழுச்சியும் சர்வதேச நோக்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் புத்திஜீவித மீள்எழுச்சிக்கு அதாவது மரபுவழி மார்க்சிசத்திற்கு சான்றுரைக்கும்.

Notes:

1. International Trotskyism, p. 32 2 Volume 21, pp. 103-104

2. Volume 21, pp. 103-10

Loading