மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 2006ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக் இன் முன்னாள் உறுப்பினர்கள், அலெக்ஸ் ஸ்ரைனர், பிராங்க் பிரென்னர் இருவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த வேலை, அரசியல் நிலைப்பாடு மற்றும் நடைமுறை செயற்பாடுகள் பற்றி ஒரு விமர்சனத்தை வெளியிட்டனர். புறநிலைவாதமா அல்லது மார்க்சிசமா ("Objectivism or Marxism") (1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், இதன் ஆசிரியர்கள் தாங்கள் உணர்ந்த வகையில் இருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளே அரசியல் மற்றும் அறிவார்ந்த வாழ்வின் தன்மை இறக்கும் தறுவாயிலுள்ளது என்ற குறைகூறல்களில் மிகக் கடுமையாக இருந்தனர். இவர்கள் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து இராஜிநாமா செய்து, தீவிர சோசலிச செயற்பாடுகளையும் கைவிட்டு மூன்று தசாப்தங்கள் முடிந்துவிட்டன என்ற நிலையில் அனைத்துலகக் குழு ஒன்றும் ஸ்ரைனர், பிரென்னர் ஆகியோருடைய குறைகூறல்களுக்கு விடையிறுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. ஆனால் பல முறை கடந்த காலத்தில் இருந்தது போலவே, இக்குறைகூறலும் புரட்சிகர வரலாறு, மார்க்சிச தத்துவம் மற்றும் சோசலிச வேலைத் திட்டம் ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தெளிவாக்குவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது. மிகப்பரந்த விடையை கொடுப்பதற்கு மிகவும் இன்றியமையாத காரணமாக இருந்தது பிரென்னரின் ஆவணம் போலி மார்க்சிசவாதத்தின் பொருளுரையாக இருந்ததும், குட்டி முதலாளித்துவத்தினரிடையே செல்வாக்கு பெற்றிருந்த அடிப்படை பிற்போக்குக் கருத்துக்கள் நிறைந்ததாகவும், பிராங்க்பேர்ட் பள்ளி மற்றும் தற்காலிக புதிய கற்பனாவாதம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பல சிந்தனைப் பள்ளிகளின் செல்வாக்கு நிரம்பியதாகவும் இருந்ததுதான். இந்த நூலில் அளிக்கப்படும் ஆவணம், (Marxism, History and Socialist Consciousness) மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு முதலில் ஜூன் 28, 2006ல் வெளியிடப்பட்டு, [சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவின் சுற்றறிக்கைக்கு விடப்பட்டது], ஸ்ரைனர், பிரென்னர் ஆவணத்திற்கு அனைத்துலகக் குழுவின் விடை ஆகும்.

மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு மின்னஞ்சல் மூலமாக ஸ்ரைனர், பிரென்னருக்கு அனுப்பப்பட்டு சரியாக ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. இது கிடைக்கப்பெற்றது பற்றி அவர்கள் வலைத் தளத்தில் ஒரு குறிப்பு வந்தது; "இது கவனமான, ஆராய்ந்த பதிலைப்பெறும் தகுதி உடையது" என்றும் எழுதப்பட்டது. "வருங்கால புரட்சிகர இயக்கமே அந்த பதிலை நம்பியுள்ளது" என்று அறிவித்தபோதிலும், ஸ்ரைனர் பிரென்னரும் தாங்கள் அவசரப்பட்டு முடிவிற்கு வரப்போவதில்லை என்றும் கூறினர். குறைந்தபட்சம் இதிலேனும் அவர்கள் உண்மையைக் கடைபிடிக்கின்றனர். உலகம் அவ்வளவு தூரம் நம்பியிருக்க வேண்டும் என்று கூறப்பட்ட அவர்களுடைய பதிலோ இன்னமும் அளிக்கப்படவில்லை.

ஆனால் உலகம் எதற்கும் நிற்பதில்லை. தங்களுடைய தலை சிறந்த படைப்பை ஸ்ரைனர், பிரென்னர் இருவரும் தாமதமாக கனிய வைத்துக் கொண்டுவந்தாலும், எங்களை பொறுத்தவரையில் வரம்பு என்பது முடிந்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு என்பதை மார்க்சிச தத்துவத்தில் ஆர்வம் உடைய பரந்த மக்கள் பிரிவின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு இனியும் தாமதிக்கத் தேவையில்லை. மார்க்சிசத்திற்கும் பல தற்காலத்திய குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்குடைய கருத்தியல் வடிவமைப்புக்களுக்கும் இடையிலான ஆழ்ந்த, சரிக்கட்ட முடியாத பிளவைப்பற்றி தெளிவூட்டுவதில் இந்த ஆவணம் பயனுள்ளது என்பதை நிரூபிக்கும் என்பது எனது நம்பிக்கை.

டேவிட் நோர்த்

டிட்ரோயிட்

ஜூன் 28, 2007

-------------------------

அலெக்ஸ் ஸ்ரைனர் மற்றும் ஃபிராங்க் பிரென்னருக்கு டேவிட் நோர்த்தின் பதில்

1. Introduction

முன்னுரை

அன்பின் தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னருக்கு:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது அதன் சார்பில் "புறநிலைவாதம் அல்லது மார்க்சிசம்" என்ற உங்களது ஆவணத்திற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இது நான் ஒரு குறிப்பிட்டளவு வருத்தத்துடன் ஏற்றுக்கொண்ட ஒரு பணியாகும். கடந்த மூன்று தசாப்த காலங்கள் பூராவும் நாம் எடுத்துக்கொண்ட வாழ்கையின் வேறுபட்ட பாதைகள் எப்படியிருந்த போதிலும், எமது இயக்கத்தில் நாம் நெருக்கமாக செயற்பட்ட காலகட்டத்தின் பசுமை நிறைந்த நினைவுகளை நான் இன்னும் வைத்திருக்கிறேன். எவ்வாறெனினும், அது மிகவும் நீண்டகாலத்திற்கு முன்னையதாகும்; அது மட்டுமன்றி உங்களது சமீபத்திய ஆவணங்கள் கடந்த பல ஆண்டுகளாக உங்களுடைய பல்வேறு கட்டுரைகள் மேலும் மேலும் வெளிக்கொணர்ந்த விடயத்தை கோடிட்டுக் காட்டவே சேவை செய்கின்றன: அதாவது நீங்கள் மார்க்சிசம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் மரபியம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்தும் வெகுதூரம் பயணித்துவிட்டீர்கள். இந்த தவிர்க்கவியலாத அரசியல் யதார்த்தமானது இந்தப் பதிலின் உள்ளடக்கத்தையும், தொனியையும் நிர்ணயிக்கவேண்டும்.

உங்களுடைய கடிதம், உங்களது முன்னைய ஆவணங்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பதிலளிக்க தவறிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தொடங்குகின்றது, அதிலிருந்து நீங்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய முடிவுகளை எடுத்துள்ளீர்கள்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு "விமர்சனம் சம்பந்தமாக வெறுப்படையும்" நிலையிலுள்ளது இது "அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரவாளரும் அக்கறைசெலுத்த வேண்டிய இயக்கத்திற்குள்ளேயான ஆழமான பிரச்சினைகளின் அறிகுறியாகும்." இயக்கத்தின் தலைமையானது "அரசியல் விவாதங்களுக்கு கற்சுவர் எழுப்புவதோடு" "விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக கலந்துரையாடல்களையும் தவிர்க்க" முயற்சிக்கின்றது. உங்களது ஆவணங்களுக்கு நாம் பதிலளிக்கத் தவறியமை என்று கூறப்படுவது "இயக்கத்திற்குள் மெய்யான விமர்சனபூர்வமான விவாதத்தை மேற்கொள்ளும் வழக்கம் எந்தளவிற்கு அந்நியமாக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே கோடிட்டுக்காட்டுகிறது."

தகவல் தெரியாத பார்வையாளருக்கு, நீங்கள் விபரித்துள்ள நிலைமையானது ஒரு சர்வாதிகார முறையிலான அரசியல் கட்சிக்குள், ஒரு முற்றுகையிடப்பட்ட எதிர்ப்புப் போக்கு தனது கருத்துக்களை சாதாரண உறுப்பினர்கள் மத்தியில் முன்வைப்பதற்கு உள்ள உரிமையானது அதிகாரத்துவ ராஜ்யத்தால் நசுக்கப்படுவதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பது போன்றே தோன்றும். நீங்கள் இருவரும் அறிந்தவாறு, யாதார்த்தமானது முற்றிலும் வேறுபட்டதாகும். உங்களில் எவருமே சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. நீங்கள் இருவரும் கட்சியில் இருந்து வெளியேறி சுமார் 28 வருடங்கள் ஆகப்போகின்றன1. இது ஒருவகையில் கவனத்திற்கொள்ள வேண்டியதாகும். நீங்கள் "இயக்கத்துடனான நீண்ட வரலாற்றை" பற்றிக் குறிப்பிடுவதானது சுயநனவுடன் பலபொருள்பட கூறுவது பற்றி ஒரு விவரிப்பாகும். அங்கே "உடன்" என்பதற்கும் "உள்ளே" என்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது. உங்களது முதிர்ச்சி பெற்ற வாழ்வின் பெரும்பகுதியில் நீங்கள் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கவில்லை. நீங்கள் இயக்கத்துடன் நட்பார்ந்த உறவுகளை பேணிவந்தீர்கள் என்ற சாதாரண விடயத்திற்காக, நாம் சோ.ச.க. உறுப்பினர்கள் அல்லது ஏனைய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருப்பது போல் உங்களுடைய ஆவணங்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கவில்லை.

எமது இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை விமர்சித்து நீங்கள் எழுதுவதை அனைவரும் வாசிப்பதற்காக உங்களது சொந்த இணைய தளத்தில் நீங்கள் வெளியிடுவதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எவரும் தடுக்கவில்லை. (அது அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கான முற்றிலும் நியாயமான முறையாக இணையத்தை நீங்கள் நிராகரிப்பது போல் தோன்றுவதை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள விழைகின்ற அளவுக்கு மட்டும்தான்.) உங்கள் கருத்துகளுடன் ஒத்த நோக்குள்ள கருத்துக்களைக் கொண்ட தனிநபர்கள் ஆதரவை திரட்டவும் மற்றும் அதற்காக பிரச்சாரம் செய்யவும் உங்களுக்கு சுதந்திரம் உண்டு. அதே போல், எங்களுக்கு பொருத்தமானது என தோன்றுகின்ற உங்களுடைய ஆவணங்களுக்கு பதில் அளிக்கவும் அல்லது பதிலளிக்காமல் விடுவதற்குமான அரசியல் உரிமைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் உண்டு. நான்காம் அகிலத்தின் பாரம்பரியங்களையும் வேலைத்திட்டத்தையும் எதிர்க்கும் ஒரு முன்நோக்குக்காக உங்களுக்கு மன்றம் அமைத்துக்கொடுக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பல்ல. உங்களுடைய பகிரங்க விமர்சனங்களுக்கு இந்த பதிலை முன்வைப்பதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு "சட்டப்பூர்வமான" பொறுப்பை பூர்த்தி செய்யவில்லை; மாறாக மார்க்சிச சோசலிசத்திற்கும் தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர் நீங்கள் ஆதரிக்கும் மத்தியதர வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவமான போலி கற்பனாவாதத்திற்கும் இடையிலுள்ள ஆழமான மற்றும் அடிப்படையான வேறுபாடுகளை தெளிவுபடுத்துகிறது.

2. The International Committee and the World Socialist Web Site

அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது இயக்கத்தில் நீங்கள் அங்கத்தவர்ளாக இருக்காததோடு அதன் உள்ளக வாழ்க்கை பற்றிய அறிவும் இல்லாத போதிலும், நீங்கள் அனைத்துலகக் குழுவுக்கு எதிராக மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களை விடுக்கின்றீர்கள். "இயக்கத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட தத்துவார்த்த அல்லது அரசியல் கலந்துரையாடல்கள் அமைதியைக் குலைக்கும் விதத்தில் இல்லாமல் போயுள்ளன" என நீங்கள் உறுதியாகக் கூறுகின்றீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கான அடிப்படை என்ன? உங்களுடைய ஆவணங்களை நாங்கள் கையாண்ட முறை தொடர்பான உங்களது மகிழ்ச்சியின்மையை தவிர, எமது அரசியல் நிலைப்பாட்டில் இந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் வீழ்ச்சி வெளித்தோன்றியிருப்பது எவ்வாறு? இவை உங்களால் பதிலளிக்கப்படாத கேள்விகளாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உங்களது ஆவணங்களின் தகுதிக்கேற்ற அளவு கவனம் செலுத்த தவறிவிட்டது என்ற சாத்தியக்கூற்றை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்த தவறானது உலக வரலாற்று நிகழ்வின் மட்டத்திற்கு அதுவாகவே எழப்போவதில்லை. உங்களுடைய முறையீடு மற்றும் உங்களுக்கு புறம்பான உலக அபிவிருத்திகளுடன் தொடர்புபட்ட மிகவும் முக்கியமான அரசியல் பிரச்சினைகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எடுத்துக்காட்டுவது இன்னும் அவசியமாக உள்ளது. இத்தகைய தொடர்பு இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்வது மட்டும் போதுமானதல்ல. நீங்கள் அதை நிரூபித்துக் காட்டவேண்டும். இது மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில், எந்த வழியில் செய்யப்பட்டது என்றால், விமர்சனத்திற்கு உள்பட்ட அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை கவனமாகவும் பூரணமாகவும் பகுப்பாய்வுக்குட்படுத்துவதன் ஊடாகவே இது செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் இந்த தத்துவார்த்த ரீதியான கொள்கை அடிப்படையில் செயற்படத் தீர்மானித்திருந்தால், நீங்கள் சேகரித்துக்கொள்ளும் விஷயதானங்களுக்கு குறைவே இருக்காது. கடந்த 20 வருட காலமும் பிரமாண்டமான மாற்றங்களுக்கு சாட்சி பகர்கின்றன: தொழில்நுட்பம், உலக முதலாளித்துவத்தின் அமைப்பு மற்றும் பூகோளப் பொருளாதாரம் தேசிய அரசுகளில் கொண்டுள்ள உறவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு உலகின் அரசியல் புவியியலிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் மறந்துவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட பூகோளவரைபடங்கள் இப்போது பயனற்றவையாகியுள்ளன. இத்தகைய உள் உறவுகொண்ட நிகழ்முறைகள் - தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் அரசியல் நிகழ்முறைகள்- அனைத்தும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்த வரலாற்று மாற்றங்களுக்கான அனைத்துலகக் குழுவின் பதில் பல டஜன் தொகுப்புக்களை இலகுவாக நிரப்பிவிடும்.

எவ்வாறெனினும், இப்போது இங்கு உங்களுடைய ஆவணத்தில் அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாடுப்பற்றிய எந்தவொரு ஆய்வோ அல்லது குறிப்போ காணக்கிடைக்கவில்லை. "ஈராக் யுத்தம்," "புஷ் நிர்வாகம்," "செப்டெம்பர் 11", "சீனா," "ஆப்கானிஸ்தான்," "ஈரான்," "பயங்கரவாதம்," அல்லது "பூகோளமயமாக்கல்" என்ற சொற்களைக்கூட ஒருவரால் காண முடியவில்லை. இவை கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறுகள் அல்ல. நீங்கள் குறைந்த பட்சம் நான்காம் அகிலத்தினுள் அரசியல் ஆய்வுகள் மற்றும் முன்நோக்குகள் பற்றி வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளப்பட்டுள்ள முறையின்படி, இந்த விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. முற்றிலும் எதிரான முறையில்: மார்க்சிச அரசியல் ஆய்வுகள் மற்றும் விளக்கவுரைகள் சம்பந்தமாக அனைத்துலகக் குழு அக்கறைசெலுத்துவதையும் கூட ஒரு அடிப்படையான தவறு என நீங்கள் நம்புகிறீர்கள். வரலாற்று சடவாத விதி முறையின் அடிப்படையிலான அத்தகைய ஆய்வுகளும் மற்றும் விளக்கவுரைகளும் சோசலிச நனவின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானது அல்லது பொருத்தமானது என்ற கருத்துருவைக் கூட நீங்கள் கடுமையாக நிராகரிக்கிறீர்கள். இந்த நிலைப்பாடு உலக சோசலிச வலைத் தளம் தொடர்பான உங்களது கசப்பான பகைமையை கோடிட்டுக் காட்டுகிறது, அனைத்துலகக் குழுவினுள் தவறு என நீங்கள் நம்பும் அனைத்தின¢ பிரதான வெளிப்பாடு உலக சோசலிச வலைத் தளம் தான் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

"சகல கருத்துக்கள் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் அனைத்துலகக் குழுவானது இயங்காமல் நின்றுவிட்டது" என நீங்கள் எழுதுகிறீர்கள். இந்த முடிவு எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது? "அனைத்துலகக் குழு தனது சொந்தப் பெயரில் கடைசியாக நடத்திய கூட்டத்தை ஞாபகப்படுத்திக்கொள்வது கூட கடினமாக உள்ளது. இப்போது பல வருடங்களாக இயக்கத்தின் அனைத்து அதிகாரபூர்வமான அறிக்கைகளும் உலக சோசலிச வலைத் தள அறிக்கைகளாகவே வெளிவருவதோடு, இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒன்றுகூடல்கள் -அது தெளிவாக இயக்கத்தின் சர்வதேச மாநாடு- புரட்சிகரமான கட்சியின் பெயரில் அன்றி வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் பேரில் தான் வெளியிடப்பட்டன''.

அது மட்டுமல்ல. நீங்கள் பின்வருமாறு கேட்கிறீர்கள்: "அனைத்துலகக் குழுவை உலக சோசலிச வலைத் தளத்திற்குள் உருமாற்றியமை எப்போதாவது கட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா?" மற்றும் "அத்தகைய ஒரு முக்கியமான மாற்றத்திற்கான காரணத்தை பொதுவான தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவுபடுத்திய ஆவணம் எங்கே? புரட்சிகர அனைத்துலக வாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாட்டை கரைத்து விட்டு மீண்டும் மீண்டும் அனைத்துலக வாதத்தை பற்றி முழக்கமிடுவதுடன் சமப்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?''

உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்ததில் ஏதோ ஒரு நியாயமற்ற மற்றும் சூழ்ச்சி வேலைகள் இருந்தது போன்று நீங்கள் "அனைத்துலகக் குழுவை உலக சோசலிச வலைத் தளத்திற்குள் உருமாற்றியமை" குறித்து பேசுகிறீர்கள். இந்த விஷயத்தில், உங்களது தாக்குதலானது உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்ததையிட்டு ஸ்பாட்டசிஸ்ட் லீக் காட்டிய பதிலுக்கு நெருக்கமாக இணையாக உள்ளது. எவ்வாறாயினும், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டமை அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என நீங்கள் எங்குமே குறிப்பிடவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் பெயர்தளம் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது போல் அது அனைத்துலக குழுவினாலேயே வெளியிடப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்துடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு உள்ள அரசியல் தொடர்பு பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும், அதன் ஆயிரக்கணக்கான அன்றாட வாசகர்களுக்கு அது இரகசியமானதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, மார்க்சினுடைய Neue Rheinische Zeitung என்ற பத்திரிகை வெளிவந்த நாட்களில் இருந்தே புரட்சிகர மற்றும் வேலைத் திட்ட அடையாளமானது அதனுடைய வெளியீட்டுடன் ஒரே கருத்தைக் கொண்டதாக இருந்து வந்துள்ளது. நாம் புரட்சிகர ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் Neue Zeit, Iskra, Vperyod மற்றும் பிராவ்தா சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் விரோத எதிர்ப்பு இயக்கத்தின் புல்லடீன், 1920கள் மற்றும் 1930 களில் அமெரிக்காவில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வெளியிடப்பட்ட The Militant மற்றும் The Socialist Appeal, பிரித்தானிய தொழிற் கட்சிக்குள் வேலைசெய்த பிரித்தானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வெளியிடப்பட்ட The Newsletter, மற்றும் வேர்க்கஸ் லீக்கின் புல்லட்டீனையும் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். உலக சோசலிச வலைத் தளத்தை ஆயிரக்கணக்கான வாசகர்கள் சோசலிச அனைத்துலக வாதத்தின் உண்மையான குரலாக காண்கின்றனர் என்ற உண்மையையிட்டு நாம் குழப்பமடைய எந்தவொரு காரணமும் கிடையாது.

உலக சோசலிச வலைத் தளம் ஏதோ ஒரு வழியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரியாமல் ஸ்தாபிக்கப்பட்டது என்ற உங்களது கருத்து, முற்றிலும் முட்டாள்தனமாகும். ஆம், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்படும் போது பகிரங்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. நீங்கள் விரும்பினால் அதை வாசிக்கலாம் [3] மற்றும், உண்மையில் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிதமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு பகுதிகளிலும் பெரும்பாலும் ஒரு ஆண்டு முழுவதும் உக்கிரமாக விரிவடைந்த கலந்துரையாடலின் மூலமே முன்னெடுக்கப்பட்டது என்பதை நீங்கள் கேட்டதற்காக சொல்லவேண்டியுள்ளது. இல்லையேல், கடந்த எட்டரை ஆண்டுகளாக அன்றாட உலக சோசலிச வலைத் தள வெளியீடுகளை தளராது நீடிக்கச் செய்யும் காரியாளர்களின் உயர்ந்தளவிலான செயற்திறம் கொண்ட ஆதரவையும் பங்களிப்பையும் அணிதிரட்டுவது எப்படி சாத்தியமாகும்? 1998 பெப்பிரவரியில் உ.சோ.வ.த. நிறுவப்பட்டதில் இருந்து, கொள்கை, வரலாறு, தத்துவார்த்தரீதியான பார்வை மற்றும் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கின் அடிப்படையில் திரட்டப்பட்ட மார்க்சிய எழுத்தாளர்களின், தொடர்ந்தும் விரிவடைந்துவரும் காரியாளர்களின் கூட்டுழைப்பை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஆசிரியர் குழுவினால் 18,000ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தத்துவம் மற்றும் நடைமுறை ஆகிய இரண்டிலும், புரட்சிகரமான அனைத்துலகவாதத்தின் அபிவிருத்தியில் உ.சோ.வ.த. ஒரு வரலாற்று மைல் கல்லைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ரஷ்யா, போலிஷ், சேர்போ குரோஷியன், துருக்கி, சிங்களம், தமிழ் மற்றும் இந்தோனேஷியன் ஆகிய 13 மொழிகளில் கருத்துரைகளை வழங்கும் ஒரு வலைத் தளத்தின் அன்றாட வெளியீட்டை நிர்வகிக்கின்ற ஒரு காலகட்டத்தில், "புரட்சிகர அனைத்துலக வாதத்தின் அமைப்பு ரீதியான வெளிப்பாட்டை அந்துப் பூச்சியாய் அரிப்பது பற்றிப்" பேசுவதற்கு, உங்களது தனிப்பட்ட அகநிலைவாதத்தால் அரவணைக்கப்படும் அரசியல் குருட்டுத்தனம் உங்களை இட்டுச்சென்றிருக்கிறது. இது உங்கள் மனதில் அனைத்துலகக் குழுவின் "சகல நோக்கங்களும் மற்றும் குறிக்கோள்களும்" முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணத்தை பிரதிநிதித்துவம் செய்தால், உண்மையான அனைத்துலக நடவடிக்கை என நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையிட்டு ஒருவர் ஆச்சரியப்பட முடியும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக, நீங்கள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்த போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உட்கட்சி வாழ்க்கையானது, அதன் உறுப்பாக இணைந்திருந்த அல்லது ஆதரவாக இருந்த பகுதிகளின் பிரதிநிதிகள் லண்டனில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு.க.) அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்துபோவதை விட மேலதிகமாக எதையும் கொண்டிருக்கவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெயரளவிலான செயலாளரான கிளிவ்ஃ சுலோடர், அனைத்துலக காரியாளர்களுடன் முறையான தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. கூட்டுழைப்பு ஒரு புறம் இருக்க, அனைத்துலகக் குழுவின் முன்நோக்கு பற்றிய முறையான கலந்துரையாடல்கள் இருக்கவில்லை. அனைத்துலகவாதம் பற்றிய உங்களது கருத்துரு, ஹீலியின் அமைப்பின் தீவிரமான சீரழிவு சகாப்தத்தில் உருவமைக்கப்பட்ட வரையில், உங்கள் இருவரில் ஒருவருக்கேனும், ஒரு இயக்கத்தின் அன்றாட அரசியல் நடவடிக்கைகள் மிக மிக அதிகமான அனைத்துலக கூட்டுழைப்பை ஏற்படுத்துகிறது என்பதை கருதிக்கூட பார்க்க முடியாதுள்ளது.

3. The International Editorial Board and the perspectives of the ICFI

சர்வதேச ஆசிரியர் குழுவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்குகளும்

கடந்த ஆண்டில், இரு பிரதான தத்துவார்த்த மற்றும் அரசியல் நிகழ்ச்சி திட்டத்தை அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்திருந்தது: முதலாவது 2005, ஆகஸ்ட் 14 முதல் 20ம் திகதி வரை மிச்சிகன் அன் ஆபரில், "மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்களும்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது தொடர் விரிவுரைகளாகும்; இரண்டாவது, 2006 ஜனவரி 22 முதல் 27ம் திகதி வரை ஆஸ்திரேலியா, சிட்னியில் நடந்த உலக சோசலிச வலைத்தள சர்வதேச ஆசிரியர் குழு கூட்டமாகும். இந்த நிகழ்வுகளுக்கான உங்களது பிரதிபலிப்புகள், நீங்கள் மார்க்சிசத்தை கைவிட்டுள்ளதையும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் பார்வை மற்றும் பாரம்பரியங்கள் மீதான உங்களது விரோதப்போக்கையும் அழிவுகரமான முறையில் சுய-அம்பலப்படுத்தல் செய்வதாகும்.

இந்தக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் விரிவுரைகள் மீதான உங்களது கோபாவேசமான பிரதிபலிப்புகள் சம்பந்தமாக நாங்கள் வியப்படையவில்லை. உங்களது ஆவணங்களுக்கு நா.அ.அ.கு. பதிலளிக்கத் தவறியதாக நீங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு சம்பந்தமாக நீங்கள் உத்தியோகபூர்வமாக "கண்டனம்" தெரிவித்திருந்த போதிலும், இந்த விரிவுரைகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட தத்துவார்த்த கருத்துருக்களும் முன்நோக்கும், வில்ஹெம் ரீச், ஏர்ன்ஸ்ட் புலொச் மற்றும் ஹேர்பர்ட் மார்க்கூஸ் ஆகியோரின் நோக்குநிலையற்ற மார்க்சிச விரோத போலி-கற்பனாவாதத்தை நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவச் செய்வதற்கான -- அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்கள் மற்றும் வர்க்க நோக்குநிலை அடிப்படையில் மாற்றுவதற்கான-- உங்களது பிரச்சாரத்தை ஐயத்திற்கிடமின்றி தள்ளுபடி செய்வதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். "இந்த ஒன்றுகூடல்களில் வெளியிடப்பட்ட விரிவுரைகள் மற்றும் அறிக்கைகளின் சாரம், விமர்சன ரீதியான விவாதத்திற்கு எந்தவொரு புதிய திறவுகோள்களையும் பிரேரிக்கவில்லை" என நீங்கள் எழுதும் போது மறைமுகமாய்க் குறிப்பிடுவது இதையேயாகும்.

நீங்கள் ஆசிரியர் குழு அறிக்கைகளைப் பற்றி விவரிப்பதாவது, "முன்நோக்கு ஆவணங்களின் ஒரு போலித்தோற்றமாகத்தான் அதிகமாக உள்ளதே தவிர உண்மையானதாக அல்ல: அவை மார்க்சிச ஒத்துழைப்புடனான வெளிநாட்டு விவகார அறிக்கைகளே தவிர, புரட்சிகர நடைமுறைக்கான கையேடு அல்ல. அவை உண்மையில் ஆசிரியர் குழு அறிக்கைகளே -- அதாவது மிகவும் அதிகமான ஊடகவியலுக்கான முன்நோக்காகும். என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினை, புரட்சிக் கட்சியை கட்டியெழுப்புவதன் தேவையைப் பற்றிய சமயச் சடங்கான அறிக்கையாக, கடைசியில் சேர்ப்பதற்கும் மேலாக, அவற்றுக்குள் எந்தவிதத்திலும் நுழைந்திருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த அறிக்கைகளில் புரட்சிகர முன்நோக்கின் சாரம் தவறவிடப்பட்டுள்ளது. ஆனால் இதைத்தான், அனைத்துலகக் குழு கலந்துரையாட மறுக்கிறது."

ஆசிரியர் குழு கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பற்றி நீங்கள் கூறவிருந்ததின் மொத்தமும் இதுதான். உண்மையில் அங்கு முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பற்றி எந்தவொரு திறனாய்வும் உங்களிடம் கிடையாது. 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து நடந்த ஒன்றுகூடல்களில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளில், உலக அரசியல் நிலைமைகள் பற்றிய மிகப் பெரும் உள்ளடக்கத்தைக் கொண்ட ஆய்வை கூட்டாக பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அறிக்கைகளின் உள்ளடக்கம் பற்றிய உங்களது அலட்சியமானது, உங்களது சொந்த அரசியல் பார்வை மற்றும் வர்க்க நிலைப்பாடு பற்றி புரிந்துகொள்வதற்கு திறவுகோலை வழங்குகிறது.

நீங்கள் "முன்நோக்கு ஆவணத்தின் ஒரு போலித்தோற்றம்" என வெறுப்புணர்ச்சியுடன் விலக்கிவைக்கும் சர்வதேச ஆசிரியர் குழு கூட்டத்தின் உள்ளடக்கத்தை மீளாய்வு செய்து பார்ப்போம். நீங்கள் நிராகரிப்பது என்னவென்றால், உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கிய முழுமைபெற்ற ஆய்வின் அடிப்படையில், சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புகளின் புறநிலை அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்கான அனைத்துலகக் குழுவின் முயற்சிகளையே ஆகும். உலகப் புரட்சிகர முன்நோக்கை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச ஆசிரியர் குழு எடுத்துக்கொண்டுள்ள அணுகுமுறையை, எனது ஆரம்ப அறிக்கையில் இருந்து ஒரு நீண்ட மேற்கோளை முன்வைப்பதன் மூலம் சிறப்பாக தெளிவுபடுத்த முடியும்.

'அரசியல் முன்கணிப்பு பற்றிய எந்தவொரு தீவிர முயற்சியும் மற்றும் நிலவும் அரசியல் நிலைமைக்குள் காணப்படும் சாத்தியப்பாடுகள் பற்றிய மதிப்பீடும் உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று வளர்ச்சி பற்றிய துல்லியமான மற்றும் தெளிவான புரிதலிலிருந்து கட்டாயம் தோன்ற வேண்டும்.

முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய பகுப்பாய்வு கீழ்க்காணும் இன்றியமையாத வினாவிற்கு விடையிறுக்க வேண்டும்: முதலாளித்துவம் ஓர் உலகப் பொருளாதார அமைப்புமுறை என்ற வகையில், மேல்நோக்கிய வளைவரை பாதையில் நகர்ந்து சென்று அதன் மிக உயர்நிலையை எட்டிக் கொண்டிருக்கிறதா அல்லது வீழ்ந்து கொண்டிருக்கிறதா அல்லது பெரும் பாதாளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறதா?

இந்த வினாவிற்கு நாம் அளிக்கும் விடை, தவிர்க்க முடியாமல் நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறை பணிகளுக்கு மட்டும் அல்லாமல், எமது இயக்கத்தின் முழு தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட நோக்குநிலைக்கும் தொலைநோக்கான விளைபயன்களைக் கொண்டிருக்கும். உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நிலைமை பற்றிய எமது பகுப்பாய்வு சமூகப் புரட்சிக்கான அகநிலை விருப்பத்தால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, புரட்சிகர முன்னோக்கு என்பது சமூகப் பொருளாதார வளர்ச்சியின் புறநிலை போக்குகளை பற்றிய விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுடனான மதிப்பீட்டில் கட்டாயம் வேரூன்றியிருக்க வேண்டும். தேவையான புறநிலை சமூகப் பொருளாதார முன்நிபந்தனைகளால் ஆளுமை செலுத்தப்படாத நிலையில் ஒரு புரட்சிகர முன்னோக்கு வெறும் கற்பனை கோட்டையாகிவிடும்.

அப்படியானால், முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தை நாம் எங்ஙனம் அறிந்து கொள்ள இயலும்? சமரசத்திற்குட்படாமல் எதிர்க்கும் இரு கருத்துருக்களை ஆராய்வோம். நாம் அறிந்துள்ளவாறு, மார்க்சிச நிலைப்பாட்டின்படி, உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு நெருக்கடியின் முன்னேறிய கட்டத்தில் உள்ளது -- உண்மையில் 1914ல் உலகப் போர் வெடிப்பு 1917ல் ரஷ்ய புரட்சியால் பின் தொடரப்பட்டதானது உலக வரலாற்றில் ஒரு அடிப்படை திருப்புமுனையை பிரதிநிதித்துவம் செய்தது. முதலாம் உலகப் போர் தொடங்கி 1945ல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்திற்கும் இடையேயான மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தின் அதிரவைக்கும் நிகழ்வுகள், முதலாளித்துவம் தன்னுடைய முற்போக்கான வரலாற்றுப் பணியை குறிப்பிட்ட காலப்பகுதி வரை வாழ வைத்திருந்தது என்பதையும் நிரூபித்தது. மேலும், உலகப் பொருளாதாரம், சோசலிச மாற்றத்தை காண்பதற்கான புறநிலை முன்நிபந்தனைகள் தோன்றி இருந்தன என்பதையும் நிரூபித்தது. அந்த தசாப்தங்களின் நெருக்கடிகளில் இருந்து முதலாளித்துவ அமைப்பு தப்பிப் பிழைத்ததற்கு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன கட்சிகள், அமைப்புக்களின் தோல்வியும், அவற்றின் தலைமைகளின் காட்டிக் கொடுப்புகளுமே பேரளவிற்கு பெரும் காரணங்களாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கொண்டிருந்த பங்கினால்தான். அவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்றால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவின் வளங்களை கணிசமாகப் பெற்று உலக முதலாளித்துவ அமைப்பு மீண்டும் ஸ்திரமடைந்திருக்க முடியாது. உண்மையில் போருக்குப் பிந்தைய காலத்தில் உறுதித்தன்மை இருந்தபோதிலும் கூட, பழைய காலனித்துவ பிராந்தியங்களில் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் உலகந்தழுவிய எதிர்ப்பும் தொடர்ந்திருந்தன. ஆனால், அவற்றின் புரட்சிகர சாத்தியப்பாடுகள் பழைய அதிகாரத்துவ அமைப்புக்களால் நசுக்கப்பட்டிருந்தது.

'இறுதியாக, 1960களிலும் 1970களிலும் பெரும் வெகுஜனப் போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டமையும், தோல்விக்கு இட்டுச்செல்லப்பட்டமையும், முதலாளித்துவ எதிர் தாக்குதலுக்கு பாதையை வகுத்துக் கொடுத்தன. பொருளாதார நிகழ்முறைகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு முதலாளித்துவ அமைப்பின் உலகந்தழுவிய ஒருங்கிணைப்புக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது. தேசிய முன்னோக்குகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த பழைய தொழிலாள வர்க்க அமைப்புக்களை சிதறடித்தது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும்- தேசியவாத போலி சோசலிசத்தின், மார்க்சிச-விரோத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு இந்த நிகழ்வுப்போக்கின் விளைவுகளாயின.

'1990களில் முதலாளித்துவத்தின் விரைந்த எல்லைப்புற விரிவாக்கம் இருந்தபோதிலும்கூட, அதன் வரலாற்று நெருக்கடி தொடர்ந்ததுடன், ஆழமடைந்தும் வந்தது. பழைய தொழிலாளர் இயக்கங்களுக்கு மரண அடியை கொடுத்த பூகோளமயமாக்கல் நிகழ்முறை, ஒரு உலகப் பொருளாதார அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் பூகோளரீதியான ஒருங்கிணைக்கப்பட தன்மைக்கும் முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய அரசு கட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பதட்டமடையச் செய்த அளவுக்கு உயர்ந்ததுடன் அதிலிருந்து அது தப்பிக்கவும் முடியாததாக இருந்தது. இந்த முரண்பாட்டின் அடிப்படையிலேயே தீர்க்கமுடியாத தன்மையானது- அல்லது குறைந்தபட்சம் எந்தவொரு முற்போக்கான அடிப்படையிலும் "தீர்வு காணமுடியாத தன்மையானதாக"உள்ளது, அது பெருகிவரும் ஒழுங்கின்மை, வன்முறை ஆகியவற்றில் நாள்தோறும் வெளிப்பாட்டை காண்கிறது, அது தான் தற்போதைய உலக நிலைமையின் குணாம்சமாக உள்ளது. ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக் காலம் தொடங்கிவிட்டது. அதுதான், சுருக்கமான, மார்க்சிச பகுப்பாய்வாகும்.

இதற்கான மாற்றீடான முன்னோக்கு என்ன? கீழே உள்ள எதிர் கருத்தாய்வை கவனிப்போம்:

மார்க்சிசவாதிகள் "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" என்று லியோன் ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய வனப்புடைய சொற்றொடரில், கூறிய நிலைமையானது முதலாளித்துவத்தின் வன்முறை மிகுந்த, நீடித்த பிரசவ வலியாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் பல சோசலிச மற்றும் புரட்சிகர பரிசோதனைகள் பெரிதும் பக்குவமடையாதவை என்பது மட்டுமல்லாமல் அடிப்படையில் கற்பனாவாதமாகவும் போயின. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பொருளாதார ஒழுங்குபடுத்தலின் உயர்ந்த அமைப்பு முறையாக, சந்தையின் ஈவிரக்கமற்ற வெற்றிக்கு அனைத்து தடைகளையும் தகர்த்து கடந்துவந்த முதலாளித்துவத்தின் கதையாகவே வாசிக்க வேண்டியுள்ளது. சோவியத் யூனியனின் சரிவும், சீனா சந்தை பொருளாதார முறைக்கு திரும்பியதும், இந்த நிகழ்முறையின் உச்சநிலையையே பிரதிநிதித்துவம் செய்தன. இந்த தசாப்தமும் அனேகமாக இதைத் தொடரும் தசாப்தமும் ஆசியா முழுவதும் முதலாளித்துவத்தின் விரைந்த விரிவாக்கத்தை காண்பது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இந்த நிகழ்வுப்போக்கின் மிக முக்கியமான கூறாக சீனாவும் இந்தியாவும் பக்குவம் அடைந்த மற்றும் உறுதியான உலக முதலாளித்துவ சக்திகளாக வெளிப்படக்கூடும் என்பதாகும்.

மேலும், முன்வைக்கப்படும் இந்த கருத்து சரியென்றால், w.w. ரொஸ்ட்கொவ் கொடுக்கும் நிலைப்பாட்டின் படி, முதலாளித்துவம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் அதன் 'புறப்பட தயாராகும்' கட்டத்தை அடையும். நைஜீரியா, அங்கோலா, தெற்கு ஆபிரிக்கா, எகிப்து, மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா (இன்னும்/அல்லது மற்ற நாடுகளும்) மிகப் பெரிய வெடிப்புத் தன்மையுடைய பொருளாதார வளர்ச்சியை பெறும். மேலும் சொல்லப்போனால் அடுத்த அரை நூற்றாண்டில், 2047ல் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 200வது ஆண்டு நிறைவு நாள் காணப்போகும் காலத்திற்குள் (இப்பொழுதில் இருந்து 41 ஆண்டுகள்தான் உள்ளன), உலக முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய வெற்றி முழுமை அடைந்து பாதுகாப்பாக இருப்பதாக தோன்றும்.

'இந்த கற்பனை கருத்து உலகின் சமகால நிகழ்முறையை புரிந்துகொள்ள உண்மையான அடிப்படையை பிரதிபலிக்கிறதா? அவ்வாறு பிரதிபலிக்குமானால் மார்க்சிச புரட்சிகர முன்னோக்கில் எஞ்சுவது சொற்பமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் பற்றிய எமது அக்கறையை கைவிடும் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படமாட்டோம். உண்மையில், நாம் அக்கறை செலுத்தவேண்டிய நிலைமைகளில் எந்தக் குறைவும் இருக்காது. உலகின் மிக வறிய, சுரண்டப்படும் மக்களின் நிலைமையை உயர்த்துவதற்கு குறைந்தபட்ச கோரிக்கைகள் அடங்கிய ஒரு வேலைத் திட்டத்தை சூத்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆயினும், ஓரளவிற்கு இது சமூக சேவையில் நடைமுறைப்படுத்துவது போல் இருக்கும். முன்னால் மார்க்சிசவாதிகளை பொறுத்தவரை -குறைந்தது வரலாற்றில் காணக்கூடிய வருங்காலம் வரையிலாவது- ஒரு புரட்சிகர செயல்திட்டத்தின் கற்பனாவாத தன்மையை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருப்பார்கள். மற்றும் தங்களுடைய கடந்த காலம் பற்றிய விளக்கத்தை கணிசமான அளவு அவர்கள் திருத்திக் கொள்ளும் கட்டாயமும் ஏற்படும்.

'ஆனால் பூகோள ரீதியாக வெற்றி பெற்றுவிட்ட முதலாளித்துவம் என்ற இந்த கருத்தாய்வு யதார்த்தமானதா? அனைத்து முந்தைய வரலாற்று அனுபவத்தில் காணும்போது, நிலவும் உலக ஒழுங்கின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் தொடுவானத்தில் ஏற்கனவே காணக்கூடிய வெடிப்புத் தன்மையுடைய பல பிரச்சினைகளையும் தீர்த்துவிட அல்லது குறைத்துவிட உலக முதலாளித்துவ அமைப்பை அனுமதிக்கும் ஒரு தொகை நிலைமைகளை கற்பனைசெய்து பார்ப்பது பொருத்தமானதாக இருக்குமா?

ஏகாதிபத்திய அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் உள்ள பெரிய உலக சக்திகளுக்கு இடையே காணப்படும் புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார மோதல்கள் சர்வதேச அரசியலை சீர்குலைத்து விடுவதற்கு முன், பேச்சு வார்த்தைகள் மூலம், பன்முக உடன்பாடுகள் மூலம், இப்பிரச்சினைகள் சமாதான முறையில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நாம் கருதுகிறோமா?

பொருளாதார வளர்ச்சிக்கு மிவும் இன்றியமையாத குறிப்பாக எண்ணெய், எரிவாயு மட்டுமன்றி ஏனைய மூலப்பொருட்களை அடைவதும், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் வன்முறை பூசல்களுக்கு இடமளிக்காமல் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவதற்கு இடமுள்ளதா?

சீனாவிற்கும் ஜப்பானுக்கும் அல்லது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆசியாவில் மேலாதிக்கத்திற்காக நடைபெறுவது போன்ற பிராந்திய செல்வாக்கை அடைவதற்கான எண்ணற்ற போராட்டங்கள் மோதலுக்கு இடமளிக்காமல் தீர்க்கப்பட்டுவிடுமா?

அமெரிக்காவால் உலகப் பொருளாதாரத்தை அடிப்படையில் சீர்குலைக்காமல், தனது செலவாணி கணக்குப் பற்றாக்குறையை ரில்லியன் டாலர்கள் அளவுக்கு தொடர்ந்து பெருக்கிக் கொண்டே காலம் தள்ளிவிட முடியுமா? அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதில் இருந்து வெளிப்படும் நிதிக் கொந்தளிப்பின் தாக்கத்தை உலகப் பொருளாதாரத்தால் அதிக சிரமமின்றி உறிஞ்சிக் கொண்டுவிட முடியுமா? தன்னுடைய உலக மேலாதிக்க அபிலாஷைகளில் இருந்து பின் வாங்கிக் கொண்டு, உலக நாடுகளிடையே சமத்துவமுறையில் பூகோள அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா முன்வருமா? சமரசம், சலுகைகள் அடிப்படையில் ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ பொருளாதார, இராணுவ வகையில் போட்டியிடக்கூடிய நாடுகளுக்கு உரிய இடத்தை அது அளிக்குமா?

'சீனாவின் எழுச்சி பெற்று வரும் செல்வாக்கை அமெரிக்கா சமாதானத்துடனும், கருணையுடனும் ஏற்குமா?

சமூக அடிப்படையில் எடுத்துக்கொண்டால் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் அதிர்வு தரக்கூடிய வகையில் பெருகியுள்ள சமூக சமத்துவமின்மை குறிப்பிடத்தக்க, வன்முறைமிக்க சமூகப் பூசல்களை உற்பத்தி செய்யாமல் தொடருமா? அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஆண்டுக்கணக்கிலும், தசாப்தங்களிலும் அதன் வாழ்க்கைத் தரங்கள் பெரும் சரிவிற்குட்பட்டுள்ளதை கடுமையான, கசப்பான எதிர்ப்பைக் காட்டாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அமெரிக்க அரசியல் மற்றும் சமூக வரலாறு ஆதரிக்கிறதா?

உலக முதலாளித்துவம் ஒரு புதிய விரிவாக்கமும் ஸ்திரத்தன்மையும் கொண்ட ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்துள்ளது என்று முடிவாகக் கூறுவதற்கு முன் இத்தகைய கேள்விகளுக்கு தக்க விடை காணப்பட்டாக வேண்டும்.

மேற்கூறிய வினாக்கள் அனைத்திற்கும் "ஆம்" என்று விடையிறுப்பவர்கள் வரலாற்றின் படிப்பினைகளுக்கு எதிராக பந்தயம் கட்டுபவர்களாவர்.

வரும் வாரத்தில் இப்பிரச்சினைகள் பற்றி நன்கு ஆராயப்படும்.

முடிவில், சர்வதேச ஆசிரியர் குழுவை வழி நடத்தும் ஆய்வு வழிமுறைகளை நான் சுருக்கமாக விளக்கினேன்:

இந்த வாரம் நாம் எம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான இலக்கு உலக முதலாளித்துவ அமைப்பின் விரைவாக வளர்ந்து வரும் நெருக்கடியின் முக்கிய கூறுபாடுகளை கோடிட்டுக் காட்டலாகும்.

1914 இல் லெனின் எழுதினார். "முழுமை ஒன்றைப் பிரித்து, அதன் முரண்பட்ட கூறுகளை அறிகை செய்வது ....இயங்கியலின் ('இன்றியமையாத கூறுகளில்' ஒன்று, ஒரு பிரதான, அல்லது பிரதானமானதாக உள்ள இயல்புகள் அல்லது தனிச்சிறப்பான) முக்கிய கூறு ஆகும்."

இத்தகைய தத்துவார்த்த அணுகுமுறையின்படி, நாம் கேட்க இருக்கும் அறிக்கைகள் பல விதங்களில் இருந்தும் நிலைமையையும் உலக நெருக்கடியின் வளர்ச்சிக் கூறுபாடுகளையும் ஆராயும்.

என்னுடைய ஆரம்ப அறிக்கையை அடுத்து பின்வரும் விரிவுரைகள் இடம்பெற்றன:

1. தற்போதைய நெருக்கடி சூழ்நிலைகளின் இணைவை 20ம் நூற்றாண்டு முழுதும் பூகோள பொருளாதார அமைப்பில் அமெரிக்காவின் தீர்க்கமான மற்றும் சிக்கலான பாத்திரம் பற்றிய உள்ளடக்கத்தில் வைக்கும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலைமை பற்றிய நிக் பீம்ஸின் அறிக்கை.

2. "ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்தின் விளைவுகள்" என்ற தலைப்பிலான ஜேம்ஸ் கோஹனின் பகுப்பாய்வு.

3. "புஷ் நிர்வாகமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் பரி கிறே முன்வைத்த அறிக்கை.

4. "அமெரிக்காவின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியும் 2006 சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமும்," என்ற தலைப்பிலான பற்றிக் மாட்டினின் ஆய்வு.

5. "உலக சோசலிசத்திற்கான சீனாவின் உட்குறிப்புக்கள்" பற்றிய ஜோன் சானின் ஆய்வு.

6. "ஐரோப்பிய முதலாளித்துவத்தின் முட்டுச்சந்தும் தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்" என்ற தலைப்பில் உல்ரிச் ரிப்பர்ட் முன்வைத்த அறிக்கை.

7. "புதிய தொழிற்கட்சியும் பிரித்தானியாவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் ஜூலி ஹைலண்ட் முன்வைத்த அறிக்கை.

8. "லத்தீன் அமெரிக்க முன்நோக்குகள்" பற்றி பில் வான் ஓகென் வெளியிட்ட அறிக்கை.

9. "சமகால நிலைமையில் கலைத்துவ மற்றும் காலாச்சர பிரச்சினைகள்" என்ற தலைப்பில் டேவிட் வோல்ஷ் முன்வைத்த மதிப்பீடு.

10. "ஜனநயாக உரிமைகளும் அரசியல்யாப்புவாதத்தின் மீதான தாக்குதலும்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஹொஃவ்மன் முன்வைத்த பகுப்பாய்வு

11. "தெற்காசியாவும் முதலாளித்துவ தேசியவாதத்தின், ஸ்ராலினிசத்தின் அரசியல் திவாலும் " என்ற தலைப்பில் விஜே டயஸ் முன்வைத்த அறிக்கை.

12. "ஆபிரிக்காவும் அனைத்துலக சோசலிச முன்நோக்கும்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் டெயிலர் முன்வைத்த ஆய்வு.

13. "சியோனிச செயற்திட்டத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பேரழிவு" என்ற தலைப்பில் ஜீன் ஷோல் முன்வைத்த பகுப்பாய்வு.

சர்வதேச ஆசிரியர் குழுவில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பற்றி கூறுவதற்கு உங்களிடம் ஒன்றும் கிடையாது. நான் சர்வதேச ஆசிரியர் குழு மாநாட்டின் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் எந்த பதிலையும் வழங்கவில்லை. அந்த அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பகுப்பாய்வுகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா அல்லது உடன்படவில்லையா என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. தோழர் நிக் பீம்ஸ், உலக அமைப்பிற்குள் நிலவும் சமத்துவமின்மை மற்றும் இந்த சமத்துவமின்மையானது ஏகாதிபத்திய உள் உறவுகளுடனும் மற்றும் அனைத்துலக வர்க்கப் போராட்டத்துடனும் நீண்ட விளைவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விசேடமான வலியுறுத்தல்களில் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை நிறுத்துவதன் மூலம் பரந்த ஆய்வு ஒன்றை வழங்கினார். இந்த ஆய்வுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கிற்கு தீர்க்கமான அடித்தளத்தை வழங்குகின்றன. இந்த அறிக்கை பற்றி நீங்கள் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன? தோழர் கோகனின் அறிக்கை, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற ஒரே மிக முக்கியமான சர்வதேச சம்பவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உங்களுடைய ஆவணம் இந்த அறிக்கைபற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அல்லது யுத்தம் பற்றிய பிரச்சினையை நீங்கள் எழுப்பியுள்ளீர்களா? கோகனின் திறனாய்வுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா அல்லது உடன்படவில்லையா? நான் அறிக்கைகளின் பட்டியலை முன்வைத்தால், அதே கேள்வி மீண்டும் மீண்டும் எழக்கூடும். தனது விரிவான அறிக்கைகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைத்த அரசியல் ஆய்வுகளின் எந்தவொரு நோக்கையும் பற்றி உறுதியாக அணுகுவதற்கு நீங்கள் தவறியது ஏன்? நீங்கள் பதிலளிக்க தவறியமையை வெறுமனே அலட்சியப் போக்கு என கருதிக்கொள்ள முடியாது. இங்கு தலைநீட்டியிருப்பது என்னவெனில், புறநிலை உலகை சாத்தியமான வரையில் சரியாகவும் துல்லியமாகவும் பகுப்பாய்வு செய்வதில் புரட்சிகர நடைமுறையை வேரூன்றச் செய்ய முயற்சிக்கும் முன்நோக்கு பற்றிய மார்க்சிச கருத்துருவை மொத்தமாக நிராகரிப்பதேயாகும். உங்களைப் பொருத்தளவில் இது காலத்தை வீணாக்குவதாகும். ஆசிரியர் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அத்தகைய அறிக்கைகள், "சோசலிச நனவு" என நீங்கள் கருதும் அபிவிருத்தியுடன் தொடர்புபட்டுள்ளது என்பதை நீங்கள் நம்பவில்லை. நாம் இதன் பின்னர் தெளிவுபடுத்தவுள்ளது போல், அந்தப் பதத்தின் மூலம் நீங்கள் அர்த்தப்படுத்தும் விடயமானது, மார்க்சிசத்தின் சிறந்த பிரதிநிதிகளின் வேலைகளை ஊக்குவிக்கும் புரட்சிகர நனவு என்ற கருத்துடன் முற்றிலும் வேறுபடுகின்றது. அனைத்துலகக் குழு அரசியல் மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொள்வதில் அக்கறை செலுத்தாமல், குறிப்பாக வில்ஹெம் ரைய்க் மற்றும் ஹேர்பேட் மார்க்கூஸ் ஆகியோரின் நூல்களில் முன்வைக்கப்பட்டுள்ளது போல் உளவியல் மற்றும் பாலியலை அடிப்படையாகக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களைப் பொருத்தளவில், "சோசலிச நனவு" மற்றும் "சோசலிச கருத்தியல்" ஆகியவை மேற்கூறிய விடயங்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இதனாலேயே சர்வதேச ஆசியர் குழு முன்னெடுத்த வேலைகளைப் பற்றி நீங்கள் உணர்ச்சியற்ற அலட்சியத்துடன் பிரதிபலிக்கின்றீர்கள். பூகோள அமைப்பு என்றவகையில் வரலாற்று ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட முதலாளித்துவத்தின் சமூகப்-பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட உலக புரட்சிகர முன்நோக்கை விரிவாக்குவதற்கான அதன் முயற்சிகள், நீங்கள் முழுமையாக அந்நியப்பட்டுவரும் மார்க்சிச அரசியல் மரபில் வேரூன்றியுள்ளன.

4. Dialectics, pragmatism and the theoretical work of the ICFI

இயங்கியல், நடைமுறைவாதம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த பணிகள்

அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரதான தத்துவார்த்த வேலைத்திட்டங்களுடன் கடந்த கோடை காலத்தில் ஆன் ஆபரில் நடந்த விரிவுரைகளையும் நீங்கள் கையாளும் விதம், கேலிக்கூத்தானதாகும். மீண்டுமொருமுறை நீங்கள் அந்த விரிவுரைகளின் உள்ளடக்கத்தை கவனமாகவும் புறநிலைரீதியிலும் அணுக முயற்சிக்கவில்லை. கோடைகாலப் பள்ளியில் முன்வைக்கப்பட்ட ஒன்பது விரிவுரைகளில் நீங்கள் ஐந்தை கைவிட்டுள்ளீர்கள். நான் வழங்கிய நான்கு விரிவுரைகளில் இருந்து முழுமைபெற்ற ஒரு வரியைக் கூட நீங்கள் மேற்கோள் காட்டவில்லை. என்னுடைய விரிவுகள் மீது நீங்கள் தொடுக்கும் தாக்குதலில் பொதுவில் உள்ளடங்கியிருப்பது திரிபுபடுத்தலும், பெருமளவில் எளிமைபடுத்தலுமாகும் அல்லது நான் முன்னெடுத்த நிலைப்பாடுகள் பற்றிய நேரடியான பொய்க்கூற்றாகும். நீங்கள் எழுதக்கூடிய வாசகர்கள் இந்த விரிவுரைகளின் உண்மையான உள்ளடக்கத்தை வாசிக்காதவர்களாக அல்லது வாசிக்க விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்ற முடிவுக்கு ஒருவர் வர முடியும்.

நீங்கள் கோடைகால பள்ளி பற்றிய உங்களது விமர்சனத்தை பின்வரும் அறிக்கையுடன் தொடங்குகிறீர்கள்:

'அனைத்துலகக் குழுவில் இயங்கியல் ஒரு உயிரற்ற எழுத்தாகும். 20 ஆண்டுகளாக இந்த இயக்கம் இயங்கியல் மெய்யியல் பற்றி ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருக்காததோடு கோடைகால பள்ளியின் விரிவுரைகளில் ஒன்று கூட அதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கவில்லை. ஓரளவு எதிர்பார்த்தவகையில், இயங்கியலை கைவிடுவதானது நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதையே அர்த்தப்படுத்துகிறது. எந்தவொரு விரிவுரையிலும் நடைமுறைவாதம் பற்றி ஒரு தடவையேனும் குறிப்பிடுமளவிற்கு மதிப்புடையது எனவும் கருதப்படவில்லை. அனைத்துலகக் குழுவின் கண்ணோட்டத்தில் நடைமுறைவாதம் எவ்வாறு காணாமல் போயுள்ளது என்பதற்கான அறிவுறுத்தும் எடுத்துக்காட்டு என்னவெனில், ஒரு விரிவுரையில் பின் நவீனத்துவ வாதப் பிரதிநிதியாக ரிச்சட் ரொட்ரி பற்றி கலந்துரையாடப்பட்டுள்ள அதேவேளை, முன்னணி மெய்யியல் நடைமுறைவாதியாக அவர் வகிக்கும் பாத்திரம் பற்றிய விடயம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் அனைத்துலகக் குழுவுக்குள் நனவான புரட்சிகர தலைமைத்துவத்தை பயிற்றுவிப்பதில் மிகவும் முக்கியமான அடிப்படைக் கூறாக ஒரு காலத்தில் கருதப்பட்டதை மனதில் கொண்டு பார்த்தால், இது திகைப்பூட்டுவதாய் இருக்கின்றது.

எந்தளவு நேர்மையற்ற விவாதமுறை இது! நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இயங்கியல் செத்துவிட்டதாகவும் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, ரிச்சார்ட் ரொர்டி நடைமுறைவாதியாக வகிக்கும் பாத்திரத்தை விட, அவர் ஒரு முன்னணி பின் நவீனத்துவவாதியாக வகிக்கும் பாத்திரத்தை குறித்தே எமது ஆய்வின்மையம் இருந்தது என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். இந்த வெற்றுரையின் அர்த்தமென்ன? அமெரிக்காவின் மிகவும் கொண்டாடப்படும் மெய்யியல்வாதியான ரிச்சார்ட் ரொர்டி ஒரு நடைமுறைவாதி என்பது பார்வையாளர்களில் எவருக்கும் தெரியாது என நீங்கள் திட்டவட்டமாக நம்புகிறீர்களா? அல்லது, பின் நவீனத்துவம் என்பதே சமகால நடைமுறைவாத மெய்யியலுக்குள்ளே ஒரு பிரதான போக்கு தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லையா. பல பக்கங்கள் நீடித்த ரொர்டி பற்றிய எனது கலந்துரையாடல், நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மையப் புள்ளியாக உள்ள இரு தத்துவார்த்த கேள்விகளில் குவிமையப்படுத்தப்பட்டுள்ளது: 1) புறநிலை அறிவின் சாத்தியம் மற்றும் புறநிலை உண்மை கருத்துரு பற்றிய ரொர்டியின் நிராகரிப்பு; 2) வரலாறு என்பது படிப்பினைகளை கறந்துகொள்ளக் கூடிய புறநிலை மற்றும் விதிகளின் படி நடக்கும் நிகழ்முறை என்ற கருத்தின் மீதான அவரது தீவிர நிராகரிப்பு. ரொர்டி பற்றிய எனது ஆய்வின் போது நான் தெரிவித்ததாவது:

200 ஆண்டுகளுக்கும் மேலான சமூக சிந்தனையின் உற்பத்தியை, கலந்துரையாடலில் இருந்து அகற்றுமாறு அவர் முன்மொழிகிறார். இந்த முன்மொழிவின் பின்னமைந்திருப்பது, சிந்தனையின் அபிவிருத்தியானது முழுக்கவும் தன்னிச்சையான மற்றும் மிகப்பெரும் அகநிலையான நிகழ்முறை என்ற கருத்துருவாகும். சொற்கள், தத்துவார்த்த கருத்துருக்கள், தர்க்கரீதியான வகைப்படுத்தல்கள் மற்றும் மெய்யியல் ஒழுங்குமுறைகளும், பலவித அகநிலை முடிவுகளின் நலன்களில் நடைமுறைவாத ரீதியில் எழுந்த, வெறுமனே வாய்மொழியான கட்டமைப்புக்களாகும். தத்துவார்த்த சிந்தனையின் அபிவிருத்தியானது இயற்கை மற்றும் சமூகம் பற்றிய முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலான சிக்கல் மற்றும் துல்லியத்துடனான, ஆழமடைந்துவரும், மனிதனின் பரிணாமமுறும் புரிதலை வெளிப்படுத்தும் ஒரு புறநிலையான நிகழ்முறை என்ற கூற்றானது, ரொர்டியை பொறுத்தளவில் ஹேகேலிய-மார்க்சிச பரிபாஷைக்கும் மேற்பட்டதல்ல.

தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரேனர், மார்க்சிசத்திற்கும் நடைமுறைவாதத்திற்கும் இடையிலான முக்கியமான மோதலின் சுருக்கமான மற்றும் சரியான விளக்கமாக இது இல்லையா?

நடைமுறைவாதம் பற்றி நான் ஆராயத் தவறியதாக நீங்கள் குற்றஞ்சாட்டுவதானது, வெறுமனே குழுவாத நோக்கங்கொண்ட திரிபுபடுத்தல்களாக மட்டுமன்றி, உங்களுடைய சொந்த தத்துவார்த்த கருத்துருக்களின் வெளிப்பாடாகவும் இருக்கும் மட்டத்திற்கு, பின் நவீனத்துவ பிரச்சினை குறித்த உங்களது தற்செயலான அணுகுமுறையானது முக்கியத்துவம் இல்லாதது இல்லை. நீங்கள் பின்வருமாறு எழுதியுள்ளீர்கள்:

மார்க்சிசத்திற்கு அடிப்படை அச்சுறுத்தலாக இருப்பதில் நடைமுறைவாதத்தையும் அனுபவவாதத்தையும் பின்நவீனத்துவம் இடம்பெயர்த்துவிட்டது என்கிற அனுமானம் என்று ஊகிப்பதானது ஆழமான தவறான வழிநடத்தலாகும். அறுபதுகளில் இருந்த தீவிரப் போக்குடைய தலைமுறையின் வலதுபுற திருப்பம் மற்றும் அவர்களில் பலர் உயர் மத்தியதர வர்க்கத்துடன் கூட்டிணைந்தது இவற்றின் மூலம் ஆதாயம் பெற்ற ஒரு புத்தகக்கல்வியின் ஆர்வக்கொள்கையே பின் நவீனத்துவம் ஆகும். இதற்கு மாறாய் நடைமுறைவாதமும் அனுபவவாதமும் மேற்கத்திய முதலாளித்துவத்தின் முழு வரலாற்று அபிவிருத்தியுடன் கட்டுண்டதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, நடைமுறைவாதமானது இப்போது பெருமளவில் தேய்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆர்வக் கொள்கையாகும். அதன் அடிப்படை பேச்சாளர்களில் பலர் இறந்துவிட்டார்கள் அல்லது ஓய்வுபெற்றுவிட்டார்கள். மற்றும் எஞ்சியிருந்து செயற்படுபவர்களும், தீவிரவாத மற்றும் தாராளவாத வட்டாரத்தினுள் பின் நவீனத்துவவாதம் கண்டனத்திற்குள்ளாவதில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னரென்றால் பின் நவீனத்துவவாதத்தின் மீது தாக்குதலைக் குவிப்பது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது; இப்பொழுது அது இறந்த குதிரைக்கு, குறைந்தபட்சம் ஒரு நோஞ்சான் குதிரைக்கு, கசையடிகொடுக்கும் செயலாகும்''

மெய்யியல் போக்குகளை ஆய்வு செய்வதில் இது மூடத்தனமான, பதிவுவாத, அக்கறையற்ற அணுகுமுறை ஆகும். எல்லாவற்றுக்கும் முதலாவதாக, பின் நவீனத்துவவாதமானது நடைமுறைவாதத்தை பதிலீடு செய்திருப்பதாக நான் எங்கும் தெரிவிக்கவில்லை அல்லது குறிப்பிடவும் இல்லை. உண்மையில் இது நடைமுறைவாதத்தின் ஒரு வகை தான், செவ்வியல் நடைமுறைவாத சிந்தனையில் இருக்கும் அகநிலையான கருத்துவாத, தன்னார்வவாத மற்றும் இன்னும் அறிவுக்கொவ்வாத கூறுகளையும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்று, இது தமது தீவிர மற்றும் பிற்போக்குவாத முடிவில் ஜேம்ஸ் காலம் வரையும் பின்னோக்கி செல்கிறது. உங்கள் கருத்து கூறுவதுபோல், பின் நவீனத்துவம் என்பது தத்துவார்த்த சிந்தனையின் ஒரு அடிப்படை ரீதியான வேறுபட்ட வகை என்று கூறுவது, நடைமுறைவாதத்திற்கு ஒரு பெரும் சலுகை காட்டுவதை போன்றதாகும், அதன் பின்நவீனத்துவ வழித்தோன்றலின் வரம்பு மீறலினால் அனுபவிக்கும் புத்திஜீவித்தன சங்கடத்தில் இருந்து நடைமுறைவாதத்தை பாதுகாப்பதாக அமையும்.

அதேபோல், பின் நவீனத்துவத்தை "தேய்வில் இருக்கும் ஒரு தற்காலிக பித்து' எனக் குறிப்பிடுவதானது பூர்சுவா சிந்தனையின் பிற்போக்குத்தன்மை மற்றும் ஆழ்ந்த நெருக்கடி இரண்டின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக இருக்கும் ஒரு மெய்யியல் போக்கினை மிக எளிதாக கருதிக் கொள்வதாக அமையும். ஒரு அரைவேக்காட்டு கருத்துருவில் இருந்து இன்னொன்றுக்கு தாவுகின்ற, குட்டி முதலாளித்துவ கல்வியாளர் ஒருவர், குறிப்பாக, தனது முந்தைய மெய்யியல் முகத்திரைக்கு முறையான கணக்கு கூற எந்த அக்கறையுமின்றி, அடுத்த புதிய புத்திஜீவித்தன உற்சவத்திற்கு தயார் செய்து கொண்டிருக்கும் சமயத்தில், பின்நவீனத்துவத்தை "பித்து" என்று விவரிக்கக் கூடும். ஆனால் ஒரு தத்துவார்த்த போக்கின் முக்கியத்துவத்தை மார்க்சிஸ்டுகள் மதிப்பீடு செய்யும் விதம் அதுவல்ல. ஒரு அல்லது மற்றொரு அகநிலையான- கருத்துவாத மெய்யியல் போக்கு தன்னை எப்படி அழைத்துக்கொள்கின்றது என்பது இரண்டாம் பட்சமாகும். பிரதானமான விஷயம் என்னவென்றால் மெய்யியல் வரலாற்றுக்கு அதற்குள்ள உறவுமுறையாகும். நடைமுறைவாதமும், அனுபவவாதமும் ''மேற்கத்திய முதலாளித்துவத்தின் முழு வரலாற்றுடனும் பிணைந்துள்ளது'' என்று நீங்கள் சரியாக கூறுகின்றீர்கள். ஆனால் பின்நவீனத்துவத்துடன் உள்ள பிரச்சனையும் அதுவல்லவா? அது அமெரிக்க நடைமுறைவாத பாரம்பரியங்களில் இருந்து மட்டுமல்ல ஏனைய ஆழமான பிற்போக்கு மெய்யியல் போக்குக்களில் இருந்தும் எடுத்துக்கொள்கிறது? நடைமுறைவாதி ரிச்சார்ட் ரொர்டி போன்றவர்கள் உட்பட சமகாலத்திய பின்நவீனத்துவவாதிகளின் எழுத்துக்களில் -கியார்கேகாட், சோஃபன்ஹோவர், நீட்சே மற்றும் ஹைடெக்கர் ஆகியோரின் ஆழமான மற்றும் கவலையளிக்கும் எதிரொலிகள் இல்லையா?


5. How the ICFI has fought pragmatism

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடைமுறைவாதத்தை எதிர்த்துப் போராடியது எப்படி?

"அனைத்துலகக் குழுவுக்குள் இயங்கியல் ஒரு உயிரற்ற எழுத்து'' என்றும் நாங்கள் நடைமுறைவாத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றும் நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். எங்கள் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டில் அது எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை நீங்கள் துல்லியமாய் விளக்க தவறிவிட்டீர்கள். கடந்த 20 வருடங்களில் இயங்கியல், மெய்யியல் பற்றி ஒரு கட்டுரையைக்கூட நாங்கள் தயாரிக்கவில்லை என்று நீங்கள் எங்களுக்கு கூறுகிறீர்கள். தகவல்விவர அடிப்படையில் இந்த கூற்றில் உண்மையில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட அப்போதும், இயங்கியல் மீதான அலட்சியம் இந்த நெடிய காலத்தில் இயக்கத்தின் வேலை மற்றும் அரசியல் பகுப்பாய்வுகளில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்பதை விளக்குவது அவசியமாகிறது. நாங்கள் ஏதோ ஒரு வழிமுறையுடன்தான் வேலைசெய்து வருகின்றோம் என்று கருதலாம். அனைத்துலகக் குழுவுக்குள் இயங்கியலின் மரணமானது நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டதுடன் சேர்ந்துள்ளது என்று நீங்கள் கூறுவீர்களாயின் அப்போது எங்களது இயக்கத்தின் வேலையானது பிந்தைய வழிமுறையினால் தான் ஆதிக்கம் செலுத்தப்பட்டு இருந்திருக்கவேண்டும். ஆயினும் நீங்கள் உங்கள் கூற்றிற்கு வலுசேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு ஆவணத்திலும் சம்பிரதாயம் போல ''ஒரு பியானோ வாசிப்பவருக்கு விரல் பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மனதிற்கு இயங்கியல் பயிற்சியளிப்பது ஒரு புரட்சிகர போராளிக்கு முக்கியமாகும்'' என்னும் ட்ரொட்ஸ்கியின் கூற்றை மேற்கோளிடுகிறீர்கள். ட்ரொட்ஸ்கி இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவை இயங்கியல் வழிமுறையில் நிபுணத்துவம் கொண்டு, அது உலக நிகழ்வுகளின் மீதான அவரது அற்புதமான ஆய்வுகளில் ஒப்பீடற்ற வெளிப்பாட்டைக் கண்டதான, ஒரு அரசியல் மேதாவியின் படைப்பின் முழு வீச்சையும் கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக நீங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வேடதாரித்தனமாக பிரசங்கம் செய்யும் ஒரு சோம்பேறியைப்போன்று அதிகமாக ஒலிக்கிறது.

இயங்கியல் முக்கியமானது என்று பேர்ன்ஹாம் மற்றும் ஷாக்ட்மனுக்கு ட்ரொட்ஸ்கி வெறுமனே சொல்லவில்லை. பேர்ன்ஹாம் நடைமுறைவாதம் மற்றும் ஷாக்ட்மனின் சடவாத இயங்கியல் தொடர்பான அறியொணாவாத அணுகுமுறையும் சோவியத் அரசின் வர்க்கத்தன்மை பற்றிய அவர்களது ஆய்விலும் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பை அவர்கள் நிராகரித்ததிலும் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டப்பட்டது என்பதை ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்திக் காட்டினார். 1939-40-ல் சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் நடந்த போராட்டத்தில் இயங்கியல் பற்றிய விஷயம் அரசியல் பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக அறிமுகப்படுத்தப்படவில்லை, மாறாக அவற்றை தெளிவுபடுத்துவதற்காகத்தான். பேராசிரியர் ஜேம்ஸ் பேர்ன்ஹாமிற்கு ட்ரொட்ஸ்கி எழுதியவாறு, ''நான் அல்ல நீங்கள் தான் சோவியத் ஒன்றியத்தின் தன்மை பற்றி பிரச்சனையை எழுப்பினீர்கள் அதன் மூலமாக அரசின் வர்க்கத் தன்மையை நிர்ணயிக்கும் வழிமுறை பற்றிய கேள்வியை முன் வைக்கும்படி என்னை நீங்கள் தான் நிர்பந்தித்திருக்கிறீர்கள் (மார்க்சிசத்தின் பாதுகாப்பில், லண்டன் 1971-பக்கம் 101)

மற்றும் மேலும் அவர் விளக்குவது போல, "சரியான வழிமுறை சரியான முடிவினை எட்ட வழிவகுப்பதோடு மட்டுமல்ல, ஒவ்வொரு புதிய முடிவினையும் சங்கிலித் தொடராக அதன் முந்தைய முடிவுகளுடன் இணைப்பதின் மூலம், முடிவுகளை ஒருவரின் நினைவில் நிறுத்துகிறது. அரசியல் முடிவுகள் அனுபவவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமாயின், சீரற்ற தன்மை ஒரு வகை சாதகம் என்பதாக பிரகடனப்படுத்தப்படுமாயின், பின் அரசியலில் மார்க்சிச முறையே பதிவுவாதத்தின் மூலம் பரவலாய் இடம்பெயர்த்தப்படுவதாகி விடும் -இது பல வகைகளில் குட்டிமுதலாளித்துவ புத்திஜீவிகளின் குணநலனை ஒத்ததாகும். நிகழ்வுகளின் ஒவ்வொரு புதிய திருப்பமும் அனுபவவாதி-பதிவுவாதியை திகைக்க செய்து, முந்தைய நாள் தான் என்ன எழுதினோம் என்பதையே அவர் மறந்து போகும்படி நிர்ப்பந்திப்பதோடு, தன் தலையில் புதிய கருத்துகள் உதயமாகியிருக்கும் முன்பே புதிய சூத்திரங்களுக்கான அபரிமித ஆவலை அவருக்கு உற்பத்தி செய்கிறது." [ப.73]

நடைமுறைவாத வழிமுறை பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் அதன் செல்லுபடியாகும் தன்மையை தொடர்ந்து வைத்திருக்குமாயின் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாட்டில் உள்ள தொடர்ச்சியின்மைகள் மற்றும் முட்டாள்தனமான தவறுகளை விளங்கப்படுத்துவது உங்களுக்கு பிரச்சினையாய் இராது. நீங்கள் அத்தகையதொரு ஆய்வை முன்வைக்கவில்லை. இதன்படி இரண்டு முடிவுகள் மட்டும்தான் சாத்தியம்: ஒரு அரசியல் நிலைப்பாட்டை சூத்திரப்படுத்துவதில் அதற்கு ஒரு சூட்சமபுத்தியுள்ளதாக்கமில்லை என்பதால் வழிமுறை முக்கியம் இல்லை என்பது அல்லது நாங்கள் இயங்கியலை கைவிட்டு நடைமுறைவாதத்திற்கு அடிபணிந்துவிட்டோம் என்று நீங்கள் கூறுவது எந்த ஆதாரமும் இல்லாத வாய்வீச்சு என்பது. இரண்டாவது விளக்கம்தான் சரியானது என்று நாங்கள் கருதுகின்றோம்.[5]

உங்கள் பிரச்சனையின் மூலவளம் என்னவென்றால் புரட்சிகரமான அரசியலுக்கும், வழிமுறைக்கும் இடையிலுள்ள உறவுமுறைபற்றி நீங்கள் அறியவில்லை அல்லது அதில் அக்கறைசெலுத்தவில்லை. நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் இயங்கியலின் முக்கியத்துவத்தை ஆவேசமாய பேசுவது ஒரு விஷயம். அதை ஒரு அருவமான முழக்கத்திற்கும் மேலானதாக ஆக்குவது -அதாவது நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கட்சியின் வேலையுடன் தொடர்புபடுத்துவது என்பது பிறிதொரு விஷயமாகும் உங்கள் ஆவணத்தில் ''ஹீலியினால் அறிமுகம் செய்யப்பட்ட கருத்துச்சிதைவுகளில் இருந்து இயங்கியலை நோர்த் சரியாக பாதுகாத்தார்'' என்று நீங்கள் ஏதோ ஒரு வழியாக ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளையில் ஹேகலிய சொற்றொடர்களை ஹீலி மோசடியாகப் பயன்படுத்தியதை நான் அம்பலமாக்கிய ஆவணங்களை நீங்கள் உண்மையிலேயே படித்தீர்கள் என்பதற்கோ அல்லது அந்த முக்கியமான தத்துவார்த்த போராட்டத்தின் படிப்பினைகளை கிரகித்துக்கொண்டீர்கள் என்பதற்கோ உங்கள் பல்வேறு விதமான எழுத்துக்கள் எதிலும் எந்த ஒரு அறிகுறியும் கிடையாது. ஹீலியின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் அதற்கும் இயங்கியல் வழிமுறையை அவர் பொய்மைப்படுத்தியதற்கும் உள்ள உறவுமுறை தொடர்பான அமெரிக்கப் பகுதியின் விமர்சனம் அபிவிருத்தியுறும் முன்பே நீங்கள் இயக்கத்தை விட்டு சென்று விட்டீர்கள் என்கிற உண்மையால், உங்களின் இந்த விடுதல் கூடுதல் மட்டத்திற்கு விளக்கப்பட அவசியம் பெறுவதாய் இருக்கிறது. தோழர் ஸ்ரைனர் நீங்கள் 1978-ல் இயக்கத்தைவிட்டு சென்றபோது நீங்கள் இன்னும் ஹீலியின் "அறிகை பற்றிய நடைமுறை" மீது பிரமிப்புற்றிருந்தீர்கள், அது சாராம்சத்தில் நடைமுறைவாதத்தின் ஒரு வகையே, நவீன ஹேகலிய ஆடையணிந்து வேடமிட்டிருந்தது.

நமது இயக்கம் மேற்கொள்ள தொடங்கியிருந்த முக்கியமான தத்துவார்த்த அபிவிருத்தியை நீங்கள் முழுமையாக தவறவிட்டிருந்தீர்கள். நவம்பர் 7-1978-ல் வேர்கஸ் லீக்கின் முன்னோக்குகள் மற்றும் பணிகள் பற்றிய ஒரு வரைவு தீர்மானம் அரசியல் குழுவினால் வெளியிடப்பட்டது. அது ''காரியாளர் பயிற்சி மற்றும் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையாக ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று தொடர்ச்சியை கொள்ளல்'' என்று தலைப்பிட்ட ஒரு பகுதியை உள்ளடக்கியிருந்தது. இந்தப்பகுதியின் மிகவும் பிரதானமான பந்தியிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்:

"தொழிலாள வர்க்கம் மற்றும் அவ் வர்க்கத்தை அதன் வரலாற்றுப் பாத்திரத்துக்கு தயார் செய்வதற்கான அதன் போராட்டத்தின்பாலான வேர்க்கர்ஸ் லீக்கின் நோக்குநிலையானது கனனால் கருதப்பட்டவாறு ''பாட்டாளி வர்க்க நோக்குநிலை'' என்று அழைக்கப்படும் ஒரு விஷயமாக இல்லை. போல்ஷிவிசத்தின் வளர்ச்சிக்கும் வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களின் முழுமையான உள்ளடக்கத்திற்கும் எதிரிடைகளின் ஐக்கியமாக கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய போராட்டங்களுக்கும் இடையிலான வரலாற்று தொடர்ச்சியின் வழிகளை பாதுகாப்பதற்கான நனவுபூர்வமான போராட்டத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கத்தின் பக்கம் உண்மையான திருப்பம் இருக்க முடியாது. கட்சியின் ஒட்டுமொத்த வேலையையும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று நலன்களின் மீதும் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்திற்கு விட்டுச்சென்ற மரபியத்தில், ஆழமான அரசியல் மற்றும் தத்துவார்த்த மூலதனத்தின் மீதும் அடிப்படையாக கொண்டிருப்பதற்கான போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே கட்சியின் அணிகளுக்குள்ளேயும் எனவே தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் அக்கறையுடன் நிறுத்தப்பட முடியும். ட்ரொட்ஸ்கிச இயக்கம் கடந்துவந்த நாளாந்த அனுபவங்களுக்கு இடையிலான நேரடி வரலாற்று தொடர்புகளை பராமரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் எப்போது பிரிக்கப்படுகிறதோ, அக்கணமே அது தனிநபர் வாய்ச்சண்டையின் மிகவும் செயலிழந்த வடிவங்களாக சீரழிவுறுகிறது. அல்லது இன்னும் மிகவும் துல்லியமாக சொல்வதாயின் அது எளிதாக இன்னொரு வகையான நடைமுறைவாதமாகவே மாறுகிறது.

''நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம்'' என்ற வாய்ஜால வேண்டுகோள்களின் இடத்தில் இந்த ஆய்வானது ஒரு அரசியல் ரீதியாக ஸ்தூலமான உள்ளடக்கத்துடன் ஹீலி மற்றும் சுலோட்டரின் கீழ் ஒரு வெற்று சொற்றொடராக மாற்றப்பட்டது. நடைமுறைவாதிகளின் குணாம்சமான பதிவுவாத மற்றும் இசைந்து செல்லும் நடைமுறைக்கு முற்றிலும் வேறுபட்டதாக மார்சிஸ்டுக்கள் எப்படி வர்க்கப்போராட்டத்தின் நாளாந்த வளர்ச்சி மற்றும் கட்சியின் நடவடிக்கையை அதன் சொந்த வரலாற்றின் விசாலமான தொடர்ச்சியிலும் சர்வதேச வர்க்கப்போராட்டத்திலும் நனவுடன் அடையாளப்படுத்திக் காண முற்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது. உடனடியான மற்றும் குறுகியகால நடைமுறை வெற்றிகளை எடுப்பதற்காக சம்பவங்கள் தொடர்பாக சாதாரணமாக எதிர்வினை ஆற்றுவதற்கு பதிலாக, மார்க்சிஸ்டுகள், இப்படியான புதிய வளர்ச்சிகளினால் அபிவிருத்திகளால் மேலெழும்பிய அரசியல் கோட்பாட்டின் அடிப்படையான பிரச்சனைகளை அடையாளம் காணவேண்டும், கட்சியின் முழுமையான வரலாற்று ரீதியாக திரட்டப்பட்ட தத்துவார்த்த மூலதனத்தை அந்த புதிய அரசியல் இயல் காட்சியை ஆய்வுசெய்வதற்கு பயன்படுத்தவேண்டும் மற்றும் முதலாளித்துவ சமுதாயத்தினுள் சர்வதேச புரட்சிகரமான சக்தியாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களுக்கு வெளிப்பாட்டை தரவேண்டும்.

நான்கு வருடங்களுக்கு பின்னர் அக்டோபர் 1982-ல் வேர்கஸ் லீக்குக்கும், பிரிட்டனில் உள்ள தொழிலாள புரட்சி கட்சிக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் வெளிப்படையாக தோன்றின. அக்டோபர் 19,1982-ல் புல்லட்டீனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் 1978-ல் முதல் முறையாக அபிவிருத்தி செய்யப்பட்ட கருத்துருக்கள் மிகவும் துல்லியமாகவும் கூர்மையான வடிவத்திலும் வெளிப்படுத்தப்பட்டன:

''ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு தொடர்பற்ற அத்தியாயங்களின் ஒரு தொடராக புரிந்துகொள்ளப்பட முடியாது. அதன் தத்துவார்த்த அபிவிருத்தியானது தொடர்ந்து விரிவடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களில் இருந்து அதன் காரியாளரினால் உள்கிரகிக்கப்படுகின்றது. ஒரு முழுமையான வரலாற்று சகாப்தத்தில் வர்க்கப் போராட்டத்தின் அனைத்து அடிப்படையான அனுபவங்கள் பற்றிய அதன் முறிவற்ற தொடர்ச்சியான அரசியல் ஆய்வுகளின் தொடர்ச்சி 1924-ல் லெனினின் மறைவிற்கு பின்னர் மார்க்சிசத்தின் முழுமையான அபிவிருத்தியாக ட்ரொட்ஸ்கிசத்தின் பிரம்மாண்டமான வளத்தினை கொண்டிருக்கிறது.

இந்த முழுமையான வரலாற்றினை கூட்டாக உள்ளீர்த்துக்கொள்ள முயற்சி செய்யாத ஒரு தலைமையானது தொழிலாள வர்க்கத்திற்கு அதன் புரட்சிகரமான பொறுப்புக்களை போதுமான அளவு பூர்த்திசெய்யமுடியாது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய ஒரு உண்மையான அறிவில்லாமல் இயங்கியல் சடவாதம் பற்றிய குறிப்புக்கள் வெறுமையுற்றவை என்பது மட்டும் அல்ல, அவ்வாறான வெற்றுக்குறிப்புக்கள் இயங்கியல் வழிமுறையை உண்மையிலேயே திரிப்பதற்கும் வழிவகுப்பவை. தத்துவத்துக்கான மூலவளம் சிந்தனையில் அல்ல மாறாக புறநிலையான உலகில் தான் இருக்கிறாது. இவ்வாறான ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சியானது நமது இயக்கத்தின் முழுமையான வரலாற்று ரீதியாக பெறப்பட்ட அறிவில் நிலைகொண்டுள்ளதான வர்க்க போராட்டத்தின் புதிய அனுபவங்களில் இருந்து முன்செல்கிறது.

''இவ்வாறாக அறிகை உள்ளடக்கத்திலிருந்து உள்ளடக்கம் உருண்டு முன்னே செல்கிறது..... அது ஒவ்வொரு அடுத்த நிர்ணயமான கட்டத்திலும் அதற்கு முந்திய உள்ளடக்கத்தின் முழுமையான ஜடத்தையும் உயர்த்துகிறது, மற்றும் அதன் இயங்கியல் முன்னேற்றத்தின் மூலமாக எதையும் இழக்கவும் இல்லை பின்னே எதையும் விட்டுச்செல்லவும் இல்லை ஆனால் அதனுடன் அது பெற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்துச்செல்கிறது, தன் மேலேயே தான் வளப்படுத்திக் கொள்ளவும் செறிவுபடுத்திக் கொள்ளவும் செய்கிறது...''

ஹேகலின் தர்க்க அறிவியலில் இருந்து இந்த பத்தியை மேற்கோள்காட்டி லெனின் அவரது ''மெய்யியல் குறிப்பு நூல்களில்'' எழுதியதாவது: ''இயங்கியலினை ஒரு வகையில் சுருங்கக் கூறும் இந்த திரட்டை மோசமானதாகக் கூற முடியாது." (திரட்டு நூல்கள் தொகுப்பு,38, பக்கம் 230) அல்லது இந்த சாரத்தினை ட்ரொட்ஸ்கிச தத்துவத்தின் நிலையான இயங்கியல் அபிவிருத்தியை "ஒரு வகையில் சுருங்கக் கூறும் விதத்திலும்" மோசமெனக் கூற முடியாது. (டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் (Detroit,1985), பக்கம் 18-19, தொடக்க நூலில் வலியுறுத்தல்)

தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்துடன் இயங்கியலுக்குள்ள உறவுமுறை பற்றி விளக்கிய மேலும் ஒரு பத்தியை நான் மேற்கோள் காட்டுவேன். அது ஜெரி ஹீலி, டிசம்பர் 14-1989-ல் அவர் இறந்த பின்னர் எனது நினைவுக்குறிப்பின் ஒரு பகுதியாக தோன்றியது.

மார்க்சிச இயக்கத்தின் நீண்ட வரலாற்றில் அரசியல் முன்னாய்வு, நோக்குநிலை மற்றும் ஆய்வுக்கான ஒரு மறுபிரதியீடு செய்யமுடியாத தத்துவார்த்தக்கருவியாக இயங்கியல் வழிமுறை தன்னை நிரூபித்துள்ளது. எவ்வாறாயினும் பொருத்தமாக பயன்படுத்தப்படுகின்றபோது இயங்கியல் வழிமுறையானது தொலைநோக்கு ஆய்வு மற்றும் தாக்கமுள்ள தந்திரோபாய முன்முயற்சிகளை வகுப்பதற்கு உதவிசெய்யும் அதே சமயம் அது அரசியல் சீரழிவிற்கு எதிரான என்றென்றைக்குமான உத்திரவாதங்களை வழங்கவில்லை. இயங்கியல் சடவாதம் என்பது ஏதோ ஒருவகையான சித்தாந்த மந்திரக்கவசமாக செயல்பட்டு- அதை ஒரு தடவை பெற்றுக்கொண்ட பின்னர் அதை வைத்திருப்பவருக்கு வர்க்க சக்திகளின் விடாப்பிடியான அழுத்தங்களுக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்தவில்லை. சமுதாயத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் மற்றும் அவை தன்னியல்பாக தோற்றுவிக்கும் தோற்ற வடிவங்கள் இவை தொடர்பான ஒரு விமர்சன ரீதியான, -புரட்சிகர அணுகுமுறைதான் இயங்கியல் வழிமுறையின் உரைகல்லாகும். அது ஒரு உறுதிபட்ட விஞ்ஞான, அது வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியினால் எழுப்பப்படும் ஒவ்வொரு அரசியல் பிரச்சனை தொடர்பாகவும் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அணுகுமுறையை வேலைத்திட்டத்திலும் நடைமுறையிலும் நிலைநாட்டுவதற்கான விடாப்பிடியான போராட்டத்தை கோருகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவத்தின் மற்றும் அதன் ஏஜன்டுகளின் மூலம் ஊடுருவியிருக்கும் அரசியல் மற்றும் சித்தாந்த செல்வாக்கை எதிர்த்து போராடுகின்ற வரையில் மட்டும்தான் ஒரு புரட்சிகரமான கட்சி 'மார்க்சிஸ்ட்டாக' இருக்க முடியும். ஒவ்வொரு முக்கியமான சம்பவம் தொடர்பான மார்க்சிச அணுகுமுறை, சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்வதை சுமத்துகிறது. வர்க்கப் போராட்டத்தின் புறநிலையான அபிவிருத்தியால் முன்வைக்கப்படும் புதிய பிரச்சனைகளை தன்வசமுள்ள அனைத்து தத்துவார்த்த வளங்களைக் கொண்டு விடாப்பிடியாக எதிர்கொள்வதன் மூலம் மட்டும்தான் ஒரு மார்க்சிச கட்சி -தன்னை மறுநிரப்பல் செய்து கொள்வதுடன் தன் தத்துவார்த்த மூலதனத்திற்கும் வலு சேர்க்க முடியும். ஒரு மார்க்சிச கட்சியானது அதன் தத்துவார்த்த மூலதனத்தை மறுபடி நிரப்புவதுடன் கூடுதலாக சேர்க்கமுடியும். (ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும், டெட்ராயிட் 1991 பக்கங்கள் 79-80)

இந்த பத்திகள் கால்நூற்றாண்டுக்கு மேலாக (1978-முன்னோக்கு தீர்மானங்களை இந்த திட்டத்தின் தொடக்கமாக எடுத்துக்கொண்டால்) அசாதாரணமான தொடர்ச்சியுடன் சோசலிச சமத்துவக் கட்சியினால் பின்பற்றப்பட்டு வந்த ஒரு தத்துவார்த்த- அரசியல் திட்டத்திற்கான அறிவுஜீவித அடித்தளங்களை வழங்குகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முழுமையான வரலாற்று அனுபவம் மற்றும் படிப்பினைகளை ஒரு விடாப்பிடியான மற்றும் முறைப்படியான மறு ஆய்வு செய்வதை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவுக்கு புத்துயிர் ஊட்டவும் வளர்ச்சி செய்யவும் முயற்சித்தது. அதே சமயம் தொழிலாள வர்க்கத்தின் நடைமுறையை சமகால சமூக- பொருளாதார, அரசியல், மற்றும் கலாச்சார இயல் நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் அர்த்தங்கள் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை அடிப்படையாக கொள்ள முயற்சிக்கிறது. இந்த தத்துவார்த்த வேலையின் விளைபொருளானது 1985-86-ல் தொழிலாள புரட்சிக் கட்சியிடன் முறித்துக்கொண்டதிலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரலாற்று அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ஆய்வு மற்றும் விமர்சன குறிப்புக்களைக்கொண்ட மிகப்பெரும் அங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன் ஆர்பரில் நடந்த 2005 கோடைக்கால பள்ளியின் வேலை, அதையடுத்து 2006 சர்வதேச ஆசிரியர் குழு கூட்டம், இவை இந்த நீடித்த மற்றும் கடினமான திட்டத்தின் உயர்ந்த பட்ச சாதனையை பிரதிநிதித்துவம் செய்தன.

இரண்டு நிகழ்வுகளையும் பிரம்மாண்டமான நடைமுறைவாதத்திற்கு எதிரான பயிற்சிகளாக தத்துவார்த்த பதங்களில் சுருக்கமாக விவரிக்கலாம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சொற்பொழிவுகளையும் அறிக்கைகளையும் மட்டும்தான் வழங்கியிருந்தாலும் கூட அதுவும் எங்கள் இயக்கத்தில் இயங்கியலானது ஒரு ''இறந்த கடிதம்'' மற்றும் நடைமுறைவாத்திற்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என்ற உங்களது ஆத்திரமூட்டும் கூற்றுக்களை நிராகரிப்பதற்கு போதுமானதாகும்[6].

6. What is objectivism?

புறநிலைவாதம் என்றால் என்ன?

உங்களின் மறுப்பீட்டியல் மற்றும் உங்களுடனேயே நீங்கள் நேர்மையாக இருப்பீர்களாயின் இயங்கியலை மற்றும் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்ற உங்களது குற்றச்சாட்டு ஒரு சூழ்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உண்மையான விஷயம் என்னவென்றால் சோசலிசத்திற்கான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தினுள் வரலாறு பற்றிய ஒரு ஆழமான அறிவு -குறிப்பாக சோசலிச இயக்கம் பற்றியதே கூட- மற்றும் உலக முதலாளித்துவ அமைப்பின் புறநிலையான இயக்கம் பற்றி அதன் அனைத்து சிக்கலான முரண்பாடான மற்றும் உள்தொடர்புடைய வடிவங்களில் சாத்தியமான அளவு துல்லியமான மற்றும் ஸ்தூலமான விளக்கம் (முன்னெப்போதை விடவும் அதிக துல்லியமான கருத்துரு மதிப்பீடுகள் மூலமாக) ஆகிய இரண்டின் அபிவிருத்தியையும் கோருகிறது, என்கிற அனைத்துலக குழுவின் வலியுறுத்தலுடன் நீங்கள் உடன்படவில்லை. நீங்கள் ''புறநிலைவாதம்'' என்று தவறாக குறிப்பிடுவது புறநிலையான உலகத்தின் -இந்த புறநிலை உலகத்தில் சமூக மனிதன் ஒரு பகுதி- விதிகளின் ஆளுகைக்குட்பட்ட இயக்கத்தை அகநிலையான சிந்தனையில் மிக சரியாக பிரதிபலிப்பதற்கும் இந்த அறிவையும் புரிதலையும் புரட்சிகர நடைமுறையின் அடிப்படையாக ஆக்குவதற்குமான மார்க்சிச பாடுபடலைத் தான். ''இயங்கியல்'' மற்றும் ''நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம்'' பற்றிய உங்களது அனைத்து பேச்சும் இருந்தபோதிலும், நீங்கள் எழுதும் ஒவ்வொன்றும் மார்க்சிச தத்துவத்தினால் அறிவூட்டப் பெற்ற நடைமுறையை கொண்டிருக்கும் தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் அவசியங்களை அலட்சியம் செய்கிறது.

''புறநிலைவாதம்'' என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தும் முறை சரியானதல்ல, மற்றும் சடவாதத்துடன் ஒரு அடிப்படையான உடன்பாடின்மையை பிரதிபலிக்கிறது. மார்க்சிஸ்டுகளை பொறுத்தவரையில் புறநிலைவாதம், புறநிலை நிகழ்முறையிலேயே கூட முக்கியமான கூறுகளாக இருக்கும் நனவான சக்திகளின், அதாவது சமூக வர்க்கங்கள் மற்றும் தொடர்புடைய அரசியல் போக்குகளின், நடவடிக்கை பற்றிய அனைத்து கருதல்களையும் விலக்கிய சமூக இயல் நிகழ்வின் ஆய்வு குறித்த ஒருதலைப்பட்சமான மற்றும் அருவமான அணுகுமுறையைக் குறிக்கிறது. மார்க்சிசத்துக்கும், புறநிலைவாதத்துக்கும் இடையிலான வேறுபாடு பற்றி லெனின் அவரது மிகச்சிறந்த விளக்கத்தில் கூறியவாறு:

''புறநிலைவாதி தரப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்முறையின் அவசியத்தை பற்றி பேசுகிறார்; சடவாதி தரப்பட்ட சமூக -பொருளாதார வடிவாக்கம் மற்றும் அது தோற்றுவிக்கும் பகைமையான உறவுகள் பற்றிய திட்டவட்டமான படத்தைத் தருகிறார். தரப்பட்ட தொடர்ச்சியான தகவல்களின் அவசியம் பற்றி எடுத்துக்காட்டும்போது புறநிலைவாதி எப்பொழுதுமே இவ்வாறான தகவல்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவராக மாறும் அபாயத்தைக் கொண்டிருக்கிறார்: சடவாதியோ வர்க்க முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதோடு அவ்வாறு செய்கையில் தனது நிலைப்பாட்டையும் வரையறை செய்கிறார். புறநிலைவாதி ''கடந்து செல்லமுடியாத வரலாற்று போக்குகள்' பற்றி பேசுகிறார்''; சடவாதி தரப்பட்ட பொருளாதார அமைப்பை 'வழிநடத்தும்' வர்க்கம் பற்றியும் அதனால் ஏனைய வர்க்கங்களினால் அதே போன்ற மற்றும் அதே போன்ற வடிவங்களில் எதிர் நடவடிக்கை தோன்றுவதையும் பேசுகிறார். இவ்வாறாக ஒரு புறம் புறநிலைவாதியை விட சடவாதி அதிகமான தொடர்ச்சியைப் பாதுகாப்பவராக இருக்கிறார் மற்றும் அவரது புறநிலைவாதத்துக்கு ஆழமான மற்றும் முழுமையான தாக்கத்தை தருபவராகவும் இருக்கிறார். அவர் ஒரு நிகழ்வுப்போக்கின் அவசியம் பற்றி பேசுவதுடன் தன்னையே மட்டுப்படுத்தி கொள்ளமாட்டார், ஆனால் இந்த அவசியத்தை திட்டவட்டமாக எந்த வர்க்கம் நிர்ணயிக்கிறது என்பதை உறுதியாக கூறுவார். உதாரணமாக தற்போதைய விஷயத்தில் சடவாதி ''கடந்து செல்லமுடியாத வரலாற்று போக்குகள்'' பற்றி கூறுவதுடன் தானாக திருப்தி கொள்ளமாட்டார், மாறாக தரப்பட்ட அமைப்பின் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கின்ற மற்றும் உற்பத்தியாளர்கள் தாமாகவே எடுக்கும் நடவடிக்கையை தவிர வேறெந்த தீர்வுக்கான சாத்தியத்தையும் இல்லாமல் செய்கிற குறிப்பிட்ட வர்க்கங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுவார். மறுபுறம் சடவாதமானது கட்சிவாதத்தை அடக்கியிருக்கிறது, சொல்வதாயின், நிகழ்வுகளினை எப்பொழுது மதிப்பிடும்போதும் ஒரு குறிப்பிட்ட சமூக குழுவின் நிலைப்பாட்டுடன் நேரடியாகவும் வெளிப்படையாகவும் கைகோர்த்துக் கொள்கிறது. (திரட்டு நூல்கள், தொகுப்பு 1 (மாஸ்கோ, 1972) பக்கம் 400-01,)

புரட்சிகரமான நடைமுறையின் அடிப்படையை கொண்டிருக்கும் சமூக பொருளாதார நிகழ்முறைகளை ஆய்வு செய்பவர்களுக்கு எதிராக செலுத்தப்படும் ஒரு பட்டப்பெயராக ''புறநிலைவாதம்'' என்ற பதத்தை லெனின் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, புறநிலை உலகம் பற்றிய ஆய்வு வழங்கப்படும் ஒரு சமூக நிலைமையின் வர்க்க இயக்கவியலை அடையாளம் காண வேண்டும், அந்த அடிப்படையில் புரட்சிகர கட்சியின் அரசியல் பணிகளை சாத்தியமான அளவு துல்லியமாக வரையறை செய்ய வேண்டும் என்று கோருவதன் மூலம் அந்த ஆய்வுக்கு அவர் ஒரு வளமான, மேலும் ஆழமான சடவாத உள்ளடக்கத்தை வழங்க முயற்சிக்கிறார். ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தின் முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் நடவடிக்கையை புறநிலை யதார்த்தம் பற்றிய ஒரு திட்டவட்டமான துல்லியமான புரிதலில் வேரூன்ற செய்வதற்கான லெனின் விடாப்பிடியான உறுதியை பிரதானமான குணாம்சமாக அவரது பிரமாண்டமான தத்துவார்த்த படைப்புக்கள் கொண்டிருந்தன. ''புறநிலைவாதம்'' என்ற சொல்லை நீங்கள் தூக்கிவீசும் போது நரோதினிசத்தின் பொருளாதார உள்ளடக்கம், ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் ரஷ்யாவில் விவசாயப் பிரச்சனை தொடர்பாக அவர் தயாரித்த (இந்த பகுதியில் தான் குறிப்பிடத்தக்க நிபுணத்துவத்தை அபிவிருத்தி செய்திருப்பதாக லெனின் கருதினார்) பல தொகுப்புகளாக நீடிக்க கூடிய பல்வேறு பிரமாண்டமான ஆய்வுகளை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துவீர்கள் என்பது பற்றி ஒருவர் ஆச்சரியப்படத்தான் முடியும்.[7]

''மார்க்சிச விஞ்ஞானம் மரபுவழியிலான அர்த்தத்தில் ஒரு விஞ்ஞானம் அல்ல; அதன் குறிக்கோள் உலகத்தை அறிந்து கொள்வது மட்டும் அல்ல மாறாக அதனை மாற்றியமைப்பதும் ஆகும்'' என்று நீங்கள் எங்களுக்கு கூறுகிறீர்கள். ஆனால் தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர், உலகத்தை புரட்சிகரமானதாக அல்லது வேறுவிதமாக கூறினால் வரலாற்று ரீதியாக முற்போக்கானதாக மாற்றியமைப்பது எந்த அளவு என்பது அது பற்றிய ஒரு சரியான புரிதலில் தங்கியுள்ளது? இந்த கேள்விக்கு என்ன பதிலளிக்க போகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் மிகவும் அதிகமாக, கவனமாக சிந்திக்கவேண்டும். நீங்கள் அதை ''மரபுவழி'' என்றோ அல்லது ''மரபுவழி அல்லாதது'' என்றோ எப்படி அழைத்தாலும் சரி, மார்க்சிசத்தை ஒரு விஞ்ஞானமாக கருதுவது என்பது உலகை மாற்றியமைப்பதற்கான அதன் நடைமுறையின் -முதலாளித்துவ சுரண்டலை முடிவுக்குகொண்டு வருவதும் ஒரு சோசலிச சமூகத்தை நிலைநாட்டுவதும்- குறிக்கோளானது மாற்றத்துக்கான ஒரு சாதாரணமான ஆர்வம், என்றில்லாமல் சமூக அபிவிருத்தி விதிகள் பற்றிய ஒரு சரியான புரிதலின் அடிப்படையில் தங்கியிருக்கும் மட்டத்திற்குத் தான் உள்ளது; 'ஆட்சி அதிகாரத்துக்கான விருப்பம்' என்பது ஒருபுறம் இருக்கட்டும், மார்க்சிசத்தில் புரட்சியாளர்கள் உலகத்தை மாற்ற முயற்சிக்கும் வழிகள் சமுதாயத்தின் இயக்கத்தை வழிநடத்தும் புறநிலையான விதிகள் பற்றிய புரிதலில் வேரூன்றி இருப்பதோடு அதிலிருந்து பிரிக்கமுடியாததும் ஆகும். மார்க்சிச தத்துவத்தின் அதிமுக்கிய பின்னிணைப்புகளில் ஒன்றான இது அரசியல் பெருந்துயரத்துக்கு அழைப்பு விடாமல், அறநிலை நொருங்குவதையும் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும், மீறப்பட முடியாது.

நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் தேவை பற்றி மிகவும் அகந்தையுடனான அருவமான வகையில் நீங்கள் எழுதுகிறீர்களே தவிர, அது இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற போக்குகளை அது உண்டாக்கியது என்பது பற்றி முழுமையாக அறியாதிருப்பது போல் தெரிகிறது. அப்போக்குகள் மனித நடைமுறையின் மாற்றியமைக்கும் திறன்களை மிக அதிகப்படியாக புகழ்பாடுவதன் மூலமாக -இயங்கியல் ஜடவாதம் வலியுறுத்தல் செய்யும், புறநிலை உலகத்துக்கும், அகநிலையான நனவில் அது பிரதிபலிக்கும் வடிவங்களுக்கும் இடையிலான முக்கியமான இருப்பின் தன்மை பற்றிய (Ontological) மெய்ப்பொருள் மூல வேறுபாட்டை கலைக்க முயற்சிக்கின்றன. மனிதன் வாழுகின்ற உலகமானது மனித நடவடிக்கையின் மூலமாக செயலாற்றப்பட்டு மற்றும் மாற்றியமைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து மனிதனிலிருந்து சுதந்திரமாக இருக்கும் மனிதனின் நடவடிக்கையில் வரம்புகளை போடும் ஒரு புறநிலை யதார்த்தம் பற்றி பேசுவது மெய்யியல் ரீதியாக அபத்தமானது என்று குறிப்பிட்ட நடைமுறைவாத போக்குகள் பிரகடனம் செய்கின்றன. இவ்வாறாக புறநிலை மற்றும் அகநிலைக்கு இடையில் முழுமையான பிரிவு இல்லாதநிலையில் அவர்கள் ஒரு சார்புரீதியான பிரிவுகூட இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளனர். ஜேம்ஸின் நடைமுறைவாதத்தின் அகநிலைவாத அடிப்படைகள் இந்த மிகதீவிரமான வடிவத்தில் F.C.J ஷில்லர், ஹென்ரி பேர்க்சன், ஜோர்ஜெஸ் சோரெல் மற்றும் இத்தாலிய கியுசெர்பே பிரேஜொலினி மற்றும் கியோவனி பப்பினியினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. தங்களின் நடைமுறைவாதத்தில் அகநிலைவாத தன்னார்வத்தின் மிக தீவிர வடிவங்களின் அரசியல் ரீதியாக பாசிச அர்த்தங்கள், மிகவும் வெளிப்படையாக தோன்றுகின்ற வகையில், பிந்தையவர்கள் குறிப்பான முக்கியத்துவம் பெறுகின்றனர். நடைமுறைவாதம் பற்றி பப்பினி எழுதியதாவது:

''நடவடிக்கைக்கான ஒரு மெய்யியல், செய்கைக்கான, மறுபடி கட்டுவதற்கான, மாற்றத்திற்கான, உருவாக்கத்திற்கான ஒரு மெய்யியல்! கற்பனைநிறைந்த தர்க்கவாதிகளின் வலைகள் மற்றும் பொறிகளுக்குள் எங்குமே பாதுகாப்பு இல்லாத வழிகளுக்கு இட்டுச்செல்வது இனிமேலும் கிடையாது. உபயோகமானது தான் உண்மையானது. ஒன்றை அறிவது செய்வதற்காகத்தான். பல நிச்சயமற்ற உண்மைகளின் மத்தியில், வாழ்க்கையின் தொனியை உயர்த்தும் மற்றும் மிகவும் நீடித்த வெகுமதிகளை உத்திரவாதம் செய்யும் ஒன்றை சிறந்த முறையில் கணிப்பிட்டு தேர்ந்தெடுக்கவேண்டும். ஏதாவது உண்மை இல்லையானால் நாம் அது உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புவோமாயின் அதை நாம் உண்மையாக்குவோம்: நம்பிக்கையின் மூலமாக (கோர்னெலிஸ் டி வாலினால் நடைமுறைவாதம் பற்றி என்பதில் மேற்கோள் காட்டப்பட்டது (வாட்ஸ்வெத் மெய்யியல் தலைப்புக்கள், 2005) பக்கம் 73)

ஜேம்ஸின் நடைமுறைவாதத்தின் ரசிகனாக தன்னை கூறிக்கொண்ட முசோலினி பின்வருமாறு பிரகடனம் செய்தார்: ''தரப்பட்ட தருணத்தில் நமது தனிப்பட்ட கருத்துக்கு சிறப்பான முறையில் பொருந்துகின்ற சமூக ஒழுங்கை ஸ்தாபிப்பதற்கான போராட்டம் மனித நடவடிக்கைகளிலேயே மிகவும் பெறுமதியானவற்றில் ஒன்றாகும்'' (அதே நூல் பக்கம் 74).

இங்குள்ள விஷயம் நடைமுறைவாதிகள் அவசியமாகவே அரசியல் பிற்போக்காளர்களாக, பாசிஸ்டுகளாக என்பது ஒருபுறம் இருக்க, மாறுவதற்கு இஷ்டம் உள்ளவர்கள் என்பதல்ல. வில்லியம் ஜேம்ஸ் உண்மையிலேயே மனிதர்களில் மிகவும் மதிப்புள்ள மற்றும் அமெரிக்காவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆவார். ஆனால் தத்துவார்த்த கருத்துருக்களுக்கு அவற்றுக்கு சொந்தமான ஒரு தர்க்கம் உள்ளது; நடைமுறைவாத சிந்தனையின் குறிப்பிட்ட வகைககளின் பரிணாமம் புறநிலை உலகம் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான ஆய்வில் அரசியல் நடைமுறையை நங்கூரம் இடுவதற்கான மார்க்சிச முயற்சியை நிராகரிக்கும் அபாயகரமான உட்குறிப்புகளை விவரிக்கிறது. நடைமுறைவாத தன்னார்வம் தீவிரவாத இடது அரசியலின் உள்ளடக்கத்தில் கூட அழிவுகரமான முடிவுகளை கொண்டிருக்கலாம். அகநிலையான உறுதியின் மூலம், எல்லா நிலைமைகளிலும், அரசியல் சூழலுக்கு புறநிலையாக இல்லாதிருக்கும் ஒரு புரட்சிகர சாத்தியத்தை கொண்டுவர முடியும் என்று அனுமானிக்கிற, புறநிலைமை பற்றிய ஒரு பதிவுவாத மதிப்பீட்டின் அடிப்படையை கொண்ட ஒரு அரசியல் முன்முயற்சியானது, தொழிலாள வர்க்கத்தை ஒரு அழிவுகரமான எதிர்தாக்குதலுக்கு இலக்காகும்படி விடலாம்.

இந்த அபாயம் வெறுமனே ஒரு தத்துவார்த்த சாத்தியம் அல்ல என்பதை நான் வலியுறுத்த வேண்டும். 20-ம் நூற்றாண்டின் புரட்சிகர இயக்கங்களின் வரலாறு எங்கிலும், விதியின் ஆளுமைக்கு உட்பட்ட வரலாற்று மற்றும் சமூக - பொருளாதார நிகழ்முறைகளின் புறநிலையான தர்க்கத்தை புறக்கணிக்கும் தன்னார்வ கொள்கைகளினால் உருவாக்கப்பட்ட அரசியல் மற்றும் சமூக நாச அழிவு சிதறி கிடக்கிறது. அகநிலையான விருப்பத்தின் உருமாற்றுகிற புரட்சிகர சாத்தியத்திறனை மிகைப்படுத்துகின்ற, நிலவும் புற நிலைமைகள் குறித்த பற்றாக்குறையான அறிவு அல்லது அலட்சியம் ஆகியவற்றுடனான கொள்கைகளின் அழிவுகரமான பின்விளைவுகளுக்கு ஸ்ராலினின் கொள்கைகள் (அதாவது கூட்டுப்பண்ணைமயமாக்கல், அதி துரித தொழில்மயமாக்கல் போன்றவை) போதுமான ஆதாரங்களை வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறாக சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தேவையானது என்னவென்றால் தொழிலாள வர்க்கத்தின் தந்திரோபாயமானது உலக முதலாளித்துவ அமைப்பை ஆளுமை செய்யும் விதிகள் சர்வதேச வர்க்கப்போராட்டம் மற்றும் வெகுஜனங்களின் நனவில் அவை பிரதிபலிக்கும் வடிவங்கள் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். இங்கே தான் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மரபு ரீதியாக வைத்த அந்தளவு அதிகமான வலியுறுத்தலை கொண்ட ''புறநிலைமை'' பற்றிய முன்னோக்கு மற்றும் மிகவும் திட்டவட்டமான மதிப்பீட்டின் முக்கியத்துவம் உள்ளது [8].

நான் கடந்த கோடையில் விளக்கியது போல் ''மார்க்சிசம் என்பது ஒரு ஆய்வுக்கான வழிமுறை மற்றும் சடவாத உலகக்கண்ணோட்டமாக சமூக- பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்முறைகளை ஆளுமை செய்யும் விதிகளை கண்டுபிடித்துள்ளது. இப்படியான விதிகள் பற்றிய அறிவு கணிசமான வரலாற்று ''முன் கூறல்கள்'' அடிப்படையாக கொண்டிருக்க கூடிய, மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு சாதகமான விளைபயனை உருவாக்ககூடிய வகையில் நனவுபூர்வமாக தலையிடுவதற்கான சாத்தியத்தை அனுமதிக்கின்ற நாட்டங்கள் மற்றும் போக்குகளை வெளிக்காட்டுகிறது.''[9]

இதுதான் திட்டவட்டமாக மார்க்சிச நடைமுறையை நடைமுறைவாத செயலூக்கத்தின் -அது ஒரு ''இடது'' சாகசவாத குணாம்சத்தைக் கொண்டிருந்தாலும் சரி அல்லது சந்தர்ப்பவாத இசைவு குணாம்சத்தை கொண்டிருந்தாலும் சரி- அனைத்து வடிவங்களில் இருந்தும் பிரிக்கிறது. வரலாற்று உண்மைப்படி ''புறநிலைவாதம்'' பற்றிய வழிமுறையானது -அது நிலைமைகளைப் பொறுத்து ஒரு அல்லது மற்றொரு அரசியல் வடிவங்களை எடுக்க வழிவகுக்கலாம்- அதன் மிகவும் வளர்ச்சி கண்ட வெளிப்பாட்டை நான்காம் அகிலத்தினுள் பப்லோ மற்றும் அவரது சீடர்களான மண்டேல் மற்றும் ஹான்சனின் திருத்தல்வாத தத்துவங்கள் மற்றும் அரசியலில் கண்டது. பப்லோவாத திருத்தல்வாதமானது, அனைத்து சக்தியும் கொண்ட புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு அலை குறித்த பிம்பத்தை -அந்த அலையானது போராட்டங்களின் அரசியல் தலைமைகளும் வெகுஜன மக்களின் நனவு மட்டமும் என்னவாக இருந்தாலும் தனக்கு முன்னால் உள்ள அனைத்து தடைகளையும் துடைத்தெறிந்து அதிகாரத்தை வெற்றி கொள்ளும்- முழுக்க அருவமான முறையில் ஆரவாரமான முழக்கங்கள் வழியாக உருவாக்கும் சிறப்பை உருவாக்கியது. கிளிவ் சுலோட்டர் மிகவும் நன்றாக விளக்கியவாறு (1961-ல் அவர் இன்னும் மார்க்சிஸ்டாக இருந்த ஒரு சமயத்தில்) :

''SWP தீர்மானத்தின் அடிப்படையான பலவீனம் என்னவென்றால் மார்க்சிச வழிமுறையின் இடத்தில் 'புறநிலைவாதத்தை' அதாவது போலியான புறநிலைத்தன்மையை பிரதியீடு செய்ததுதான்... முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம் ஏகாதிபத்தியம் என்ற தனது ஆய்விலிருந்து தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் நனவுபூர்வமான புரட்சிகர பாத்திரம் அனைத்திலும் முக்கியமானதாகும் என்கிற முடிவிற்கு லெனின் வந்தார். ஆனால் 'புறநிலைவாதத்தின்' நாயகர்களோ, பாட்டாளி வர்க்கம் தனது போராட்டத்தில் மார்க்சிச தலைமையை பெறுகிறதோ இல்லையோ, தொழிலாளர் வர்க்க புரட்சி சாதிக்கப்பட்டு விடும், முதலாளித்துவவாதிகளின் அதிகாரம் தூக்கிவீசப்படும், அந்த அளவுக்கு 'புறநிலைக் காரணிகளின்' வலிமை மிகவும் பெரிதாய் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகின்றனர். (திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம், தொகுப்பு 3,லண்டன் 1974,பக்கம் 161).

பப்லோவாதிகளுக்கு எதிராக இங்கு கிளீவ் சுலோட்டரால் வரையறுக்கப்படும் "புறநிலைவாதத்திற்கும்", புரட்சிகர அரசியலுக்கு சமூக பொருளாதார இயல் நிகழ்வுகளின் ஒரு சரியான மார்க்சிச ஆய்வினை அடித்தளமாகக் கொள்ள முற்படுவோருக்கு எதிராக செலுத்தப்படும் ஒரு பட்டப்பெயராய் நீங்கள் அந்த பதத்தை பயன்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலகப்பொருளாதாரம் பற்றி ஒரு ஸ்தூலமான ஆய்வினை செய்ய பப்லோவாதிகள் மறுத்தனர், அந்த மாற்றங்களை சர்வதேச வர்க்கப்போராட்டத்தின் அபிவிருத்திகளுடன் தொடர்புபடுத்துவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். உண்மையிலேயே ''வர்க்க உறவுகள் பற்றிய பொதுவான வரலாற்று முன்னோக்கு'' என்ற கட்டமைப்பிற்குள் அதன் ''புறநிலைவாத'' முடிவுகளை நியாயப்படுத்தும்படி SWP-யை சுலோட்டர் தொடர்ந்து சவால் செய்தார். ''உலக நிலைமையில் 'புறநிலையான காரணிகள்' சில சமயங்களில் ஒரு புரட்சிகரமான தலைமையை தயார்செய்யவும், கட்டியமைக்கவும், அவசியமற்றதாக எந்த வகையில் ஆக்குகின்றன என்பதை SWP காட்டவேண்டும்'' என்று அவர் கூறினார். (அதே நூல் பக்கம் 162) பப்லோவாதிகளின் ''புறநிலைவாதத்திற்கும்'' செயலுக்கான அவர்களது தொடர்ச்சியான அறைகூவலுக்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றியும், ஒரு மார்க்சிச தலைமையை கட்டும்வரையில் புரட்சியை தாமதப்படுத்த முடியாது என்று வெகுஜனங்களின் ''பொறுமையின்மை'' பற்றிய அவர்களது உணர்ச்சி பொங்கும் உரைகள் பற்றியும் அவர் கவனத்தில் கொண்டார். (அதே பக்கம்) பப்லோவாத புறநிலைவாதத்தின் மற்றொரு குணாதிசயம் என்னவென்றால் தொழிலாள வர்க்க போர்குணத்தின் மிகவும் அடிப்படையான வடிவங்களை அவர்கள் போற்றிப் புகழ்வதாகும், அது வெகுஜன இயக்கத்தை அதன் புரட்சிகரமான அரசியல் பணிகளிலிருந்து நில்லாது திசைத்திருப்பும் தற்போதைய அதிகாரத்துவ தலைமைகளுக்கு அவர்களது சொந்த அடிபணிவை நியாயப்படுத்துவதற்கு சேவை செய்தது.

அத்துடன் திட்டவட்டமாக அங்கேதான் நமது ''புறநிலைவாதம்'' பற்றிய உங்களது ஏமாற்றுத்தனமான கண்டனம் முடிவடைகிறது. இறுதி ஆய்வில் எங்களது ''புறநிலைவாதம்'' பற்றிய உங்களது விமர்சனம் தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் அரசியல் போக்குக்களின் வர்க்கத்தன்மை மற்றும் சமூக- பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிதலையும், ஆய்வையும், நிராகரிக்கின்றது. அதேபோல், எங்களது ''பங்கெடுக்காமை'' பற்றிய உங்களது கண்டனம் தொழிற்சங்கங்களின் பிற்போக்குப்பாத்திரம் பற்றிய கட்சியின் மதிப்பீட்டினை மறைமுகமாக தாக்குவதைவிட வேறெதுவுமாக மாறவில்லை. ''ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு எந்தவொரு சாத்தியமும் இனிமேலும் கிடையாது என்று கட்சி மதிப்பீடு செய்து ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆகிவிட்டது, இருப்பினும் தொழிலாள வர்க்கத்திற்கு அந்த சமயங்கள் அனைத்திலும் எந்தொரு மாற்றீடுகளையும் முன்மொழிவதற்கு எதுவுமே செய்யப்படவில்லை. இப்படியான அமைப்புகளுக்குள் இன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடப்பட்டிருக்கும் நிலையில் தொழிற்சங்கங்களின் சீரழிவின் பிரதிவிளைவுகள் பற்றி ஆய்வு எதுவுமே செய்யப்படவில்லை, பத்திரிகை வேலை தவிர தொழிற்சங்கங்களினுள் எந்தொருவேலையும் நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டதாக தோன்றுகின்றது''.

எல்லாவற்றிற்கும் முதலாக தொழிற்சங்கங்கள் பற்றிய எமது ஆய்வு சரியானதா அல்லது சரியற்றதா? AFL-CIO -மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ தொழிற்சங்க அமைப்புக்களின் தன்மை மற்றும் பாத்திரம் பற்றிய எந்தொரு ஆய்வையும் நீங்கள் வழங்க தவறிவிட்டீர்கள். ''ஒரு முற்போக்குப் பாத்திரம்'' என்று நீங்கள் கூறுகின்ற ஒன்றை ஆற்றும் சாத்தியத்தை அது இன்னும் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் தாக்குதலில் இருந்து நீங்கள் இன்னும் நம்புவதாக ஒருவர் அனுமானிக்கலாம். ஆனால் இதைத்தெளிவாக கூற நீங்கள் ஏன் தவறுகிறீர்கள், உங்கள் நிலைப்பாடு எதை அடிப்படையாக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும்? நமது கொள்கைவயப்பட்ட நிலைப்பாட்டின் தத்துவார்த்த அடிப்படையை விரிவாக விளக்கும் தொழிற்சங்கங்கள் பற்றிய கேள்வியில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விரிவான எழுத்துக்கள் பற்றி ஒரு விமர்சன ஆய்வையும் நீங்கள் செய்ய முயற்சிக்கவில்லை. ஆலோசனைக்காக உலக சோசலிச வலைத் தளத்தை கேட்டு எழுதும் ஒரு தொழிலாளிக்கு ''தொழிலாள அதிகாரத்துவத்தின் வரலாறு பற்றிய ஒரு சொற்பொழிவு எப்பொழுதும்போல் வழங்கப்படுகிறது, ஆனால் அவர் ஈடுபட்டிருக்கும் போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதுபற்றி எவ்வித சுட்டிக்காட்டலும் இல்லை'' என்று மிகவும் முரட்டுத்தனமான நடைமுறைவாத பாணியில் நீங்கள் முறையீடுசெய்கிறீர்கள். ஆனால் தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர் எங்களுக்கு சொல்லுங்கள், தொழிற்சங்கங்களின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய விளக்கமின்றி ஒரு தொழிலாளி அவர் உடனடியாக ஈடுபட்டிருக்கும் ஒரு போராட்டத்தை நடத்துவது குறித்து அறிவது எப்படி சாத்தியமானது? தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட போராட்டத்திலிருந்து அது தோன்றிய வரலாற்று அனுபவத்தை பிரிப்பதன் பிரதிவிளைவுகள் என்ன? ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்ட வரலாற்றில் தொழிலாளர்களை படிப்பிக்காமல் நடைமுறை தலையீடுகளுக்கான ஒரு முன்னோக்கை ரஷ்யாவில் அபிவிருத்தி செய்ய முடியுமா? அல்லது சீனாவில்? அல்லது கிழக்கு ஐரோப்பாவில்? மத்தியக்கிழக்கில் இருக்கும் ஒரு தொழிலாளிக்கு முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம் மற்றும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிய படிப்பின்றி ''அவர் ஈடுபட்டிருக்கும் போராட்டத்தை எப்படி நடத்துவது'' என்று தெரியுமா? சியோனிசத்தின் தோற்றம் மற்றும் தன்மைப்பற்றிய விளக்கமின்றி யூத தேசியவாத முட்டுச்சந்திலிருந்து இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினர் வெளியே செல்வதற்கான வழியை எப்படி காணமுடியும்? இந்த விஷயத்தை சாத்தியமான அளவிற்கு துல்லியமாக கூறவேண்டுமாயின், எந்தொரு குறிப்பிட்ட போராட்டத்தின் ''தன்மையானது'' அவசியமான வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்தும்போதுதான் புரிந்துகொள்ளப்பட முடியும்.

வரலாற்றில் தொழிலாளர்களை படிப்பிக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் முயற்சிகளுக்கு எதிரான உங்களது மலிவான ஏளனம், இயங்கியலுக்கு உங்களது ஆரவாரமான வாய்வீச்சு மரியாதைகள் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கம் கடந்து வந்த புறநிலையான சமூக அனுபவங்களின் ஒரு கடின உழைப்பு கோரும் திறனாய்வில் இருந்து தேற்றம் செய்யப்பட்ட தத்துவத்தினை நோக்கி அலட்சியம் காட்டும் காட்டிக் கொடுப்பினை செய்கிறது. ட்ரொட்ஸ்கி நன்கு விளக்கியவாறு, ''தத்துவத்தினால் வழிநடத்தப்படுவது என்பது, இன்றைய நாளின் இந்த அல்லது இன்னொரு நடைமுறைப் பிரச்சினையுடன் சாத்தியமான அளவு வெற்றிகரமாக சமாளித்துச் செல்லும் பொருட்டு மனித குலத்தின் அனைத்து முந்தைய நடைமுறை அனுபவங்களின் அடிப்படையிலான பொதுமைப்படுத்தல்களினால் வழிநடத்தப்படுவதாகும். இவ்வாறாக தத்துவத்தின் மூலமாக, நடைமுறையின் குறிப்பிட்ட அம்சங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்தமாக -ஒரு-நடைமுறையின் முக்கியத்துவ முதன்மையை நாம் துல்லியமாக கண்டறிகிறோம்'' {''அதிகாரத்துவத்ததின் மெய்யியல் போக்குகள்,'' இடது எதிர்ப்பின் சவால் 1928-29,(நியூயார்க் 1981) பக்கம் 396}.

தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர் சொல்லுங்கள் எங்களுக்கு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தொழிலாள வர்க்கத்தின் துயரமான அனுபவங்களில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அரசியல் பொதுமைப்படுத்தல்கள் என்ன? இந்த அதிகாரத்துவ அமைப்புகளின் குற்றவியல் துரோகத்தின் ஒரு விளைவாக அமெரிக்க தொழிலாள வர்க்கம் அனுபவித்த முடிவற்ற சங்கிலித்தொடரான தோல்விகளிலிருந்து? சர்வதேச தொழிலாள வர்க்க அனுபவங்களின் உள்ளடக்கத்தை நீங்கள் எந்த வழியில் அமெரிக்காவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணிகள் பற்றிய உங்கள் விளக்கத்திற்குள் உள்ளீர்த்துக் கொண்டீர்கள்? சோவியத்யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியில் இருந்து நீங்கள் என்ன படிப்பினைகளை எடுத்துக்கொண்டீர்கள், இவை அனைத்துமே ஆளும் அதிகாரத்துவங்களால் கலைக்கப்பட்டன? அல்லது சீன ''மக்கள் குடியரசு'' மலிந்த கூலி முதலாளித்துவ தொழில்துறை உற்பத்தியின் இன்றியமையாத உலக மையமாக மாற்றம் அடைந்ததில் இருந்து? அல்லது தொழிலாள வர்க்கத்துடன் அனைத்து தொடர்புகளையும் முறித்துக்கொண்ட ஒரு விஷமத்தனமான வலதுசாரி முதலாளித்துவ கட்சியாக பிரிட்டனின் தொழிலாளர் கட்சி மாற்றம் அடைந்ததில் இருந்து? அல்லது இந்த கட்சிக்கு தொழிற்சங்கங்க பேரவை (TUC) வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவில் இருந்து? நாம் இந்தவகையான மேலும் பல கேள்விகளுடன் தொடர முடியும், ஆனால் அவற்றுக்கு எந்த பதிலும் கிடைக்காது என்று நாம் நியாயமாக ஊகிக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து மரபுவழி அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களின் வீழ்ச்சியின் அரசியல் முன்னோக்குகள் மற்றும் நடைமுறை இரண்டின் பிரதிவிளைவுகள் பற்றி நீங்கள் எதுவுமே சிந்திக்கவில்லை.

7. The New York City transit strike

நியூ யோர்க் நகர போக்குவரத்து வேலைநிறுத்தம்

அருவமான பொதுமைகளின் களத்தில் உங்களது மறுப்பீட்டியல் போர்களை நீங்கள் நடத்த விரும்பும் அதே வேளையில் நிஜமான நிகழ்வுகளின் உலகத்திற்கு நீங்கள் இறங்கும் ஒரு சமயத்தில் எங்கள் ''புறநிலைவாதம்'' பற்றிய உங்கள் கண்டனத்தின் அரசியல் உள்ளடக்கம் தெளிவாகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் நடத்திய போராட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள். நியூயோர்க் போக்குவரத்து வேலைநிறுத்தத்தில் கட்சியின் பாத்திரம் மீதான உங்களது நீண்ட தாக்குதல் போக்குவரத்து தொழிலாளர்களை ஒரு அரசியல் முன்னோக்கு கொண்டு பலப்படுத்துவதற்கான எங்களது முயற்சியை மதிப்பிழக்கச் செய்யும் நோக்கம் கொண்டது. எவ்வாறாயினும் விரிவாக உங்கள் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் முன்னதாக உங்கள் முழு ஆவணத்திலும் நீங்கள் நிஜமாகவே குறிப்பிடும் ஒரே ஒரு நிகழ்வு போக்குவரத்து வேலைநிறுத்தம் மட்டும்தான் என்பதை கவனத்தில் கொள்வது பெறுமதியானது. நீங்கள் வசிக்கும் நகரத்துக்கு வெளியே நடந்த ஒரு நிகழ்வைக்கூட குறைந்தபட்சம் உங்களால் குறிப்பிட்டிருக்க முடியாதா? ஈராக்கில் போருக்கு எதிரான கட்சியின் பிரச்சாரம் பற்றிய ஒரு ஆய்வு ஏன் இல்லை? அல்லது பிரெஞ்சு நெருக்கடியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீடுபற்றி? அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக போரை புதுப்பிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக இலங்கையில் எங்களது தோழர்கள் நடத்தும் போராட்டம் பற்றி? இவை எதிலுமே உங்களுக்கு அக்கறை கிடையாது. வேறு எந்த நிகழ்வுகளுமே -ஈராக்கில் போர் கூட- குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையான நிலையில் போக்குவரத்து வேலைநிறுத்தத்தின் மீது நீங்கள் மேலதிகமாக செலுத்தும் கவனம் முழுமையாக சமநிலை அற்றதாக உள்ளது. மிகவும் குறைந்தபட்சமாக, அது ஒரு பிராந்தியவாத கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டை குழப்பம் மற்றும் செயலின்மையின் ஒரு கலவையாக நீங்கள் சித்தரிப்பதில் குழுவாத நோக்கம் கொண்ட நேர்மையின்மையின் வாடை வீசுகிறது. நிகழ்வுகள் தொடர்பான உங்கள் மீளாய்வு மிகவும் ஸ்தூலமின்றியுள்ளது. நீங்கள் ''டிசம்பர் (2005) ல் மூன்று நாள் வேலைநிறுத்தம்'' பற்றி குறிப்பிடுகிறீர்கள், ஆனால் அவை நடைப்பெற்ற சரியான தேதிகள் கூட குறிப்பிடவில்லை. இது ஒரு சிறிய தவிர்ப்பு அல்ல. உங்கள் மதிப்பீட்டில் தங்கியிருந்த யாராலும் புறநிலையான அபிவிருத்திகளை சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டுடன் தொடர்புபடுத்த முடியாமல் இருக்கும். ''இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒரு நீண்ட தயாரிப்பு இருந்தபோதிலும் இந்த சங்கம் ஒன்றில் கட்சிக்கு ஒரு நீண்ட வரலாறு இருந்த போதிலும், வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்னைய நாள் வரையில் எந்த கோரிக்கைகளுமே எழுப்பப்படவில்லை'' என்று நீங்கள் எழுதுகிறீர்கள். ஒரு குறிப்பான காலகட்டம் இல்லாததுடன் சேர்த்து உங்கள் விமர்சனமானது போக்குவரத்து வேலைநிறுத்தம் பற்றி சோசலிச சமத்துவக் கட்சியினால் எழுதப்பட்டவற்றில் இருந்து ஒரு தனி வசனத்தைக்கூட மேற்கோள் காட்டவில்லை. உங்கள் ஆவணத்தை படித்த யாராலும் கட்சியின் தலையீட்டு அளவு பற்றியோ அல்லது அது போராடிய வேலைத்திட்டம் பற்றியோ ஒரு துல்லியமான கருத்துருவை எவ்வழியிலும் ஏற்படுத்தி இருக்க முடியாது.

போக்குவரத்து வேலைநிறுத்தத்தில் கட்சியின் தலையீட்டின் மீதான உங்கள் தாக்குதல் கட்சியின் ''புறநிலைவாதம்'' மற்றும் ''பங்கெடுக்காவாத'' த்தை எடுத்துக்காட்டும் நோக்கம் கொண்டதாக இருப்பதால் கணிசமான அளவு விரிவாக பதிலளிப்பது அவசியமாகிறது. அந்த வேலைநிறுத்தம் டிசம்பர் 20 செவ்வாய்கிழமை தொடங்கி, டிசம்பர் 22 வியாழக்கிழமை முடிவடைந்தது. அபிவிருத்திகள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி அறியாது இருந்தது எனவே வேலைநிறுத்தம் தொடங்கும் அந்த தறுவாயில் தான் ஒரு அறிக்கையை வெளியிடக்கூடியதாக இருந்தது என்றவாறாக பதிவை உங்கள் ஆவணம் வாசகர்களுக்கு வழங்குகிறது.

போக்குவரத்து போராட்டத்துக்கு கட்சியின் உண்மையான பதில் என்ன என்பதுபற்றி இப்போது மீண்டும் கட்டி எழுப்புவோம்.

டிசம்பர்10-2005-ல் அந்த வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது அலன் வைட்டினால் எழுதப்பட்ட அது நியூயோர்க் பெருநகர போக்குவரத்து நிர்வாகத்திற்கும் (MTA), போக்குவரத்து தொழிலாளர்கள் லோக்கல் யூனியன் 100-க்கும் இடையிலான மோதலில் எழுப்பப்பட்ட மையமான விஷயங்களை ஆய்வு செய்தது. ஒப்பந்த முறை சச்சரவு பற்றிய ஒரு கவனமான மீளாய்வுக்கு பிறகு வைட் எழுதினார்:

"கடைசி போக்குவரத்து வேலைநிறுத்தம் நடந்ததிலிருந்து 25-வருடங்கள் ஆகிவிட்டன, அப்போது தொழிலாளர்கள் அமைப்பையே 11 நாட்களுக்கு மூடி விட்டார்கள். அந்த கால் நூற்றாண்டில் நியூயோர்க் மற்றும் அமெரிக்க முழுவதும் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அவர்களது வருமானம் தொடர்ந்து உறுதியாக குறைந்து வருவதை கண்டனர், அத்துடன் தரமான -சம்பளமுள்ள வேலைகள் லட்சக்கணக்கில் இல்லாமல் போனதையும் சமூக நலத்திட்டங்கள் அழிக்கப்படுவதையும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலையும் அத்துடன் கண்டனர். இப்படியான தாக்குதல்கள் அதிர்ச்சி ஏற்படுத்தும் அளவு சமூக சமத்துவமின்மையின் தடுமாற்றமான வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கின, பிரம்மாண்டமான செல்வம் உச்சத்திலுள்ள ஒரு சதவீதத்தினரின் வங்கி கணக்குகளுக்குள் மாற்றப்பட்டது.

இவ்வாறான தாக்குதலை எதிர்கொள்வதற்கு சங்கங்கள் திறனற்றவை என்பதை நிரூபித்தன. இன்னும் சரியாக சொன்னால் ஜனநாயகக் கட்சி மற்றும் இலாப அமைப்பிற்கு கீழ்படிந்துள்ள ஒரு சந்தர்ப்பவாத அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் ஒரு முடிவற்ற தொடரான சலுகைகளை திணிப்பதில் ஒத்துழைத்தனர்.

வோல் ஸ்ரீட்டின் கட்டளைகளுக்கு சவால்விடும் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை எடுத்துக்காட்டும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது நியூயோர்க் நகரத்திலும் நாடு பூராவும் சக்திவாய்ந்த ஆதரவை வென்றெடுக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. வாழ்க்கைத் தரங்களை பாதுகாக்கவும் கடந்த 25 வருட தாக்குதல்களை மாற்றியமைப்பதற்கான ஒரு கடுமையான போராட்டம் எவ்வாறாயினும் போர்குணம் கொண்ட வேலைநிறுத்த நடவடிக்கையைவிட அதிகமானதை அர்த்தப்படுத்தும்.

அதற்கு அனைத்துக்கும் மேலாக தேவைப்படுவது இலாப அமைப்புக்கு எதிராக உழைக்கும் மக்களை முழுமையாக ஒரு அரசியல் போராட்டத்தில் அணி திரட்டுவதுதான். இதன் அர்த்தம் ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக்கொள்வதும் மற்றும் ஒரு சிறிய நிதிக்குழுவினர் செல்வத்தை திரட்டுவதற்கு பதிலாக மனிததேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் சமுதாயத்தை மறுசீரமைப்புசெய்வதற்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் கட்சியை கட்டுவதுமாகும்.

இத்தகையதொரு கட்சி மட்டும் தான், பத்திரக் கடன்களை மறுத்து இந்த கடன்களின் மூலம் இலாபம் ஈட்டிய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் செறிந்த வளங்களை பொது உரிமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வெகுஜன போக்குவரத்து துறைக்கான முழு நிதியையும் வழங்குவதற்கு, போராடும். (பார்க்கவும் "Strikebreaking threats as contract deadline nears: Transit dispute exposes New York City’s class divide")

இந்த அறிக்கை ஒரு துண்டு பிரசுரமாக வெளியிடப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் சுற்றுக்குவிடப்பட்டது. இவ்வாறாக உண்மையிலேயே வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு (TWU தலைமையினால் ஒரு தடவை தள்ளிப்போடப்பட்ட பின்னர்) 10- நாட்களுக்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளம் ஒரு தெளிவான அரசியல்- வேலைத்திட்ட அறிக்கையை வெளியிட்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர் டிசம்பர் 12-ல் வைட்டினால் எழுதப்பட்ட மற்றொரு கட்டுரையை உலக சோசலிச வலைத் தளம்வெளியிட்டது, அது டிசம்பர்16 நடு இரவில் தொடங்குவதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ஒரு வேலைநிறுத்தத்திற்கு அங்கீகார ஓட்டு பற்றி அறிவித்தது. தொழிற்சங்க உத்தியோகஸ்தர்களின் ஏமாற்றுத்தனம் பற்றி அந்த கட்டுரை எச்சரிக்கை செய்தது, மற்றும் வேலைநிறுத்த - ஓட்டு கூட்டத்தில் அரசியல் ஜாலக்காரர் ஜெசே ஜாக்சனின் இருப்பு, TWU தலைமை ஜனநாயக கட்சியுடனான அரசியல் ரீதியாக- திவாலான கூட்டுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி ஆகும். (பார்க்கவும் “New York City transit workers vote to authorize strike”)

''நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சனைகள்'' என்று தலைப்பிடப்பட்டு பில்வான் ஓகென் செய்த ஒரு ஆய்வு டிசம்பர் 16-ல் உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. அது தொழிற்சங்கத்திற்கு எதிராக ஒரு பிரமாண்டமான சட்ட ரீதியான தாக்குதலுக்கு மேயர் புளூம்பேர்க்கின் தயாரிப்புகள் பற்றி போக்குவரத்து தொழிலாளர்களை உஷார்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பகுதிகளை அணிதிரட்டுவதற்கு போராடாமல் ஒரு வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கத்தால் நடத்த முடியாது என்று அது வலியுறுத்தியது. ஆனால் அந்த அறிக்கை எச்சரித்ததாவது: ''அவ்வாறான ஒரு போராட்டத்தை TWU லோக்கல் 100-ன் தலைமை தயார் செய்வதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. தலைவர் ரோஜெர் ரூசெயின்டினால் தலைமை தாங்கப்படும் லோக்கல் 100-யூனியன் அதிகாரத்துவம், தொழிற்சங்க போர்க்குணத்தின் தாழ்ந்த மிகக்குறைவான பொதுபகுதிக்கு தான் கண்டிப்பாக விண்ணப்பிக்கிறது. அதே சமயம் அது ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை தொழிலாளர்களின் நண்பர்களாக மேல் உயர்த்துகிறது.''

ஒரு முழு அளவிலான வெளிநடப்பை தாமதப்படுத்தி தேர்ந்தெடுத்த வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுவதற்கான TWU - வின் முடிவு பற்றி டிசம்பர் 17-ல் வான் ஓகென் அறிவித்தார். (பார்க்கவும் "After rejecting MTA’s ‘final offer’: New York City transit union calls selective strikes")

டிசம்பர் 19-ல் ''நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளர்கள் வர்க்க மோதலின் விளிம்பில்'' என்று தலைப்பிட்டு பீட்டர் டானியல்ஸினால் எழுதப்பட்ட ஒரு அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது (அது ஒரு துண்டு பிரசுரமாகவும் அச்சிடப்பட்டு சுற்றுக்கு விடப்ட்டது). ஏப்ரல் 1980-ல் நியூயோர்க் போக்குவரத்து வேலைநிறுத்தம் காட்டிக்கொடுப்பு மற்றும் 1981-ல் PATCO வின் அழிவு நடந்ததில் இருந்து அமெரிக்க தொழிலாள வர்க்கம் கடந்து வந்த பெரும் அனுபவங்களின் படிப்பினைகளை அது மீளாய்வு செய்தது. அந்த அறிக்கை ஒரு அரசியல் மூலோபாயத்திற்கான அவசியத்தை வலியுறுத்தியது.

''இந்த போராட்டம் பற்றிய உண்மை தொடக்கத்திலிருந்தே சொல்லப்படவேண்டும். ஒன்று இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், வேலைகள் மற்றும் பொதுச்சேவைகள் மீதான அனைத்துத் தாக்குதலுக்கும் எதிராக ஒரு அரசியல் எதிர்தாக்குதலில் தொழிலாளர்களின் ஏனைய பகுதிகளின் செயலூக்கமான ஆதரவை எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது அது தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படும்.'' அது மேலும் எச்சரித்ததாவது: "இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு டுசையன்ட் மீது எந்தவகையிலும் தங்கியிருப்பது ஒரு துயரமான தவறாக இருக்கும். லோக்கல் 100-ன் தலைவர் அவ்வப்போது உணர்ச்சி பொங்க எச்சரிப்பதனை பெரும் தொழில் நிறுவன ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவுடனும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்திற்கான எதிர்ப்புடனும் ஒன்றுசேர்க்கிறார்." ''உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவனருக்கும் -ஏனைய தொழிற்சங்கவாதிகளுக்கும், சங்கமயப்படுத்தப்படாதோர் மற்றும் வேலையற்றோருக்கும், குடிபெயர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வாழ்க்கைத் தொழிலாய் கொண்டவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் ஐக்கியம் மற்றும் போராட்ட செய்தியை கொண்டுவருவதற்கு சுதந்திரமான வேலைநிறுத்தக் குழுக்களை ஏற்பாடுசெய்ய'' அந்த அறிக்கை தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது.

இந்த அறிக்கை -அதிலிருந்து நீங்கள் ஒரு தனி வசனத்தைக்கூட மேற்கோள்காட்ட தவறிவிட்டீர்கள்- பற்றிய உங்களது பிரதான விமர்சனம் என்னவென்றால் உலக சோசலிச வலைத் தளம் ''இப்படியான குழுக்கள் எப்படி அமைக்கப்படவேண்டும், அவை எப்படி செயல்படவேண்டும், அனைத்திற்கும் மேலாக அவை எதற்காக போராடவேண்டும் என்பது பற்றி எந்த அறிவுறுத்தலும் தரவில்லை." இல்லை, வேலைநிறுத்தக் குழுக்கள் அமைப்பது எப்படி என்பதுபற்றி ஒரு கையேடை எழுத நாங்கள் முயற்சிக்கவில்லை. TWU- லோக்கல் 100ன் தலைமை மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஒரு மாற்றீடு அவசியம் என்று தொழிலாளர்கள் புரிந்தவரையில் அவர்கள் சாதாரண வேலைநிறுத்தக் குழுக்களை உருவாக்கி நடத்துவது பற்றிய விவரங்களை வகுப்பதற்கு மிகவும் அதிகமாக திறனுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் நாம் அவ்வாறான குழுக்கள் எதற்காக போராடவேண்டும் என்பது பற்றி மிகவும் திட்டவட்டமாக விளக்கியுள்ளோம்¢¢: அந்த வேலைநிறுத்தத்தின் இறுதி முடிவு தங்கியிருந்ததான, அரசியல் மூலோபாயத்தை அந்த அறிக்கை எடுத்துக்கூறியது. இந்த விமர்சனத்திலிருந்து ஒருவர் இதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளமுடியும், அதாவது நியூயோர்க் வெகுஜன தொழிலாளர்களுக்கு மேலதிகமான தினசரி கஷ்டங்களை இந்த வேலைநிறுத்தம் ஏற்படுத்தக் கூடிய நிலையில், அவர்களின் ஆதரவை வெல்வதற்கான ஒரே வழியாக, ஒரு அரசியல் போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்துவதற்கான அவசியம்பற்றி உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தல் செய்ததுடன் நீங்கள் உடன்படவில்லை.

டிசம்பர் 21-ல் உலக சோசலிச வலைத் தளம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது (அத்துடன் அச்சிட்டு நகரம் முழுவதும் பரந்தளவில் விநியோகித்தது): ''நியூயோர்க் போக்குவரத்து வேலைநிறுத்தம்: வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்''. அது அமெரிக்காவினுள் சமூக துருவமுனைப்பின் உள்ளடக்கத்தினுள் அந்த போராட்டத்தின் பிரதிவிளைவுகளை ஆய்வுசெய்தது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக மேயர் புளூம்பேர்க் செலுத்திய குரூரமான சட்டத்தாக்குதலின் பின்னிருக்கும் நிதி நலன்களையும் அம்பலப்படுத்தியது. வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று கண்டனம் செய்ததுடன் உடனடியாக வேலைக்கு திரும்பும்படி அழைப்புவிடுத்த -TWU- சர்வதேச தலைமையின், நயவஞ்சக துரோக பாத்திரத்தை அந்த அறிக்கை தாக்கியது. அது அரசியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு சுருக்கத்துடன் முடிந்தது:

கடந்த இருபது வருட காலத்தின் எந்தவொரு நிகழ்வையும் விட மிக அப்பட்டமானதாக, நியூயோர்க் போக்குவரத்து தொழிலாளர்களின் இப்போதைய வேலைநிறுத்தம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் முன்னதாக, நிதியாதிக்க மேல்தட்டினரின் இலாப உந்துதலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளை உறுதி செய்கிற ஒரு வேலைத்திட்டத்தின் மீது நிறுவப்பட்ட அவர்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு புதிய தலைமையையும் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான தேவையை கொண்டு நிறுத்தியிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டுமாயின் போக்குவரத்து தொழிலாளர்கள் நிதிமேலாதிக்க ஒருசிலர் கூட்டம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் அனுமானங்களை புறக்கணிக்கும் ஒரு முன்னோக்கினால் வழிநடத்தப்பட வேண்டும். தொழிலாளர்களின் வாழ்கைத்தரங்களில் குறைப்புக்கான முடிவற்ற கோரிக்கைகள் முதலாளித்துவ இலாப அமைப்பின் தேவைகளுடன் தொழிலாளர்களின் நலன்கள் இயைந்து செல்லமுடியாது என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது.

இந்த அறிக்கையுடன் கூடுதலாக உலக சோசலிச வலைத் தளம் டிசம்பர் 21-ல் வேலைநிறுத்த தொழிலாளர்களுடன் எண்ணற்ற நேர்காணல்களையும் வெளியிட்டது. (பார்க்கவும்: "New York transit workers set up picket lines: ‘Today’s strike is for all working people’")

டிசம்பர் 22-ல் உலக சோசலிச வலைத் தளம் மற்றொரு பெரிய அறிக்கையை (அதுவும் கூட அச்சிடப்பட்டு பரந்தரளவில் விநியோகிக்கப்பட்டது) வெளியிட்டது, அது ''நியூயோர்க் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகரித்துவரும் தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்'' என்று தலைப்பிடப்பட்டது. அது மேயர் புளூம்பேர்க் மற்றும் கவர்னர் பட்டக்கியின் அரசியல் மூலோபாயம் மற்றும் வேலைநிறுத்தத்திற்கு மூர்க்கத்தனமான பதிலிறுப்பிற்கான காரணங்கள் பற்றியும் மீளாய்வுசெய்தது. அந்த அறிக்கை ஏன் ஆளும் மேல்தட்டினர் அந்த வேலைநிறுத்தத்தை தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு மிகப்பெரும் சவாலாக பார்த்தார்கள் என்பது பற்றி விளக்கியது. அந்த வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி, நாசப்படுத்துவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் எடுத்த முயற்சிகளுக்கும் ஆளும் வர்க்கத்தினுள் உள்ள ஐக்கியத்தையும் உலக சோசலிச வலைத் தளம் ஒப்பிட்டது. ஒரு பெரும் காட்டிக்கொடுப்பு தயாராகிவருவது பற்றி அது எச்சரிக்கை செய்தது மற்றும் தொழிலாளர்கள் ''அவர்களது சொந்த சுயாதீனமான வேலைநிறுத்தக் குழுக்களை ஏற்பாடு செய்யவேண்டும் மற்றும் ஆதரவைத்திரட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பகுதியிடம் திரும்பவேண்டும்'' என்ற அதன் அழைப்பை மீண்டும் விடுத்தது.

உலக சோசலிச வலைத் தளம் வேலைநிறுத்தத் தொழிலாளர்களுடனான கூடுதல் நேர்காணல்களை வெளியிட்டது. (பார்க்கவும் "New York City transit workers defiant: ‘Bloomberg and his friends are the thugs, not us’")

டிசம்பர் 23-ல் உலக சோசலிச வலைத் தளம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது வேலைநிறுத்தத்தின் திடீர்முடிவு பற்றிய ஒரு ''ஆரம்ப மதிப்பீட்டை'' வழங்கியது. (பார்க்கவும் : "The sudden end of the New York transit strike: A preliminary assessment") தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட அந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவு பற்றிய ஒரு அப்பட்டமான மற்றும் தெளிவான மதிப்பீட்டினை அந்த அறிக்கை வழங்கியது. ''டெய்லர் சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக அணிதிரட்டப்பட்ட அரசின் முழு அதிகாரத்தையும் போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளின் கீழ் அந்த வேலைநிறுத்தத்தை ஒரு தூய மற்றும் எளிய தொழிற்சங்க போராட்டமாக டுசெயன் ''நடத்தினார்'' என்று கீஷிகீஷி கூறியது. இந்த அனுபவம் பற்றிய பரந்த படிப்பினைகளை கணக்கில் எடுத்து அந்த வேலைநிறுத்தமானது தொழிலாள வர்க்கமானது ஒரு சமூக சக்தியாக மறைந்துவிட்டது என்று கூறிய அனைவரையும் நிராகரித்துள்ளதை உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியது. முழு போக்குவரத்து அமைப்பையும் மூடியதன் மூலமாக தொழிலாள வர்க்கமானது அதன் பிரம்மாண்டமான சமூக எடையையும், போர்க்குணத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும் அந்த போராட்டமானது ''தற்போதிருக்கும் தொழிற்சங்கங்கள் சமூக போராட்டத்திற்கு எவ்வகையிலும் நம்பிக்கையளிக்காத, பற்றாக்குறையான கருவிகள் என்பதையும் கூட அம்பலப்படுத்தியது. இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் சமூகப் போராட்டத்திற்கு நம்பிக்கையற்ற பொருத்தமற்ற கருவியாக உள்ளன என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அடக்குமுறையில் இவை நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், TWU இன்டர்நேசனல் மற்றும் AFL-CIOமொத்தமாக செய்துகொண்டிருப்பது போல் ஒரு மாற்றீடான அரசியல், சமூக, பொருளாதார முன்னோக்கும் வேலைத்திட்டமும் இல்லாதது அரசின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு கொண்டிருக்கும் அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமான அதிகாரத்துவத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், ஆளும் தட்டினரின் கோரிக்கைகளை தொழிலாள வர்க்கம் மீது திணிப்பதற்கான சாதனங்களாக இந்த அமைப்புகள் தவிர்க்கவியலாமல் மாற்றமுறுகின்றன. "சமரசமற்ற முதலாளித்துவ-எதிர்ப்பு நிலைப்பாட்டின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் திறன்படைத்த ஒரு புதிய சோசலிச இயக்கத்திற்கு" உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுத்தது.

டிசம்பர்24-ல் மற்றொரு பெரும் அறிக்கையை (அதுவும் கூட அச்சிடப்பட்டு பரந்தளவில் விநியோகிக்கப்பட்டது) உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது, அது லோக்கல் 100- வேலைநிறுத்தத்தை சங்கங்கள் எவ்வாறாக நாசம் செய்தன என்பது பற்றி மேலும் விவரங்களை வழங்கியது. (பார்க்கவும் : "New York City transit strike was quashed by the unions")

இந்த போக்குவரத்து வேலைநிறுத்தத்தில் கட்சியின் தலையீடுபற்றி உங்கள் தாக்குதல் ஆதாரமற்றது. உங்கள் வாசகர்களுக்கு எழுதப்பட்ட பதிவை பெறுவதற்கான வழி இருக்காது என்று நீங்கள் அனுமானித்துக்கொள்கிறீர்கள். எவ்வாறாயினும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் பதிலிறுப்பை நாம் மீளாய்வு செய்வோமாயின் டிசம்பர் 10-ற்கும் 24-ற்கும் இடையிலான இரண்டுவார காலத்தில் அது ஆறு பெரிய கொள்கை அறிக்கைகளை, மற்றும் எட்டு கட்டுரைகளை வெளியிட்டது -அவை நீடித்த செய்தி அறிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேட்டிகள் அல்லது நியூயோர்க் நகரத்தில் வர்க்க பிளவுடன் தொடர்புடைய பல்வேறு சமூக பிரச்சனைகளாகும். இப்படியான 14-கட்டுரைகளில் எட்டு அச்சிடப்பட்டு பரந்தளவில் விநியோகிக்கப்பட்டது. [10] இந்த பதிவுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் ''பங்கெடுக்காமையை'' (Abstentionism) எடுத்துக்காட்டுகிறது என்று கருதப்படுகிறது! போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கான பதிலிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தை வளர்ச்சி செய்யும் போராட்டத்தில் உலக சோசலிச வலைத் தளம் வகித்த முக்கியமான பாத்திரத்தை விளங்கப்படுத்தியது. இந்த முழு காலப்பகுதியிலும் சங்கமே கூட வெகுஜன விநியோகத்திற்காக ஒரு தனி அறிக்கையைக்கூட வெளியிடவோ அல்லது விநியோகம் செய்யவோ இல்லை, தொடரும் போராட்டம் பற்றிய தினசரி ஆய்வை வழங்குவது ஒருபுறமிருக்கட்டும். அதிகாரத்துவத்தின் நாசகரமான செயலை உலக சோசலிச வலைத் தளத்தினால் தனியாக நின்று வெற்றிகாண முடியவில்லை. எவ்வாறாயினும் அது தொழிலாளர்களின் வர்க்க நனவை உயர்த்துவதற்கான மற்றும் எதிர்கால வெற்றிகளுக்கான அடித்தளங்களை போடுவதற்கும் முக்கியமான பங்களிப்பை செய்தது.

இந்தப் போராட்டத்திற்கு தோழர் ஸ்ரைனரின் நடைமுறைப்பங்களிப்பு தொடர்பான ஒரு விரிவான கணக்கை கேட்கும் அளவிற்கு நான் மரியாதையில்லாமல் நடந்துகொள்ளமாட்டேன், ஆனால் இந்த வேலைநிறுத்தத்தின்போது உங்களுடைய நடவடிக்கைகள் என்னவாக இருந்தது என்பது பற்றி நீங்கள் எங்களுக்கு சொல்ல தவறிவிட்டீர்கள் என்பது சரியாக கவனிக்கக்கூடியதாக உள்ளது. நீங்கள் ஏதாவது செய்தீர்களா, அது என்ன? நீங்கள் என்ன எழுதினீர்கள்? நீங்கள் ஒரு அறிக்கையை வரைந்தீர்களா, ஒருவேளை ''போக்குவரத்து வேலைநிறுத்தம் மற்றும் கற்பனாவாதம்'' என்ற தலைப்பில்? ஒரு வேளை இந்த வேலைநிறுத்தத்தில் நீங்கள் நேரடியாக பங்கெடுக்காமல் தவிர்ப்பதற்கு ஒரு வகையான அல்லது இன்னொருவகையான கஷ்டங்கள் நிர்பந்தித்திருக்கலாம். அப்படியாயின் மன்னிப்புக்கள் கேட்கவேண்டிய அவசியமில்லை. எவ்வாறாயினும் நீங்கள் உங்கள் விமர்சனத்தினால் வழங்கப்பட்ட வாய்ப்பை எடுத்துக்கொண்டு கற்பனாவாதம் என்பது நடவடிக்கையில் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை குறைந்தபட்சம் தத்துவார்த்த ரீதியாகவேனும் விளக்காதது ஏமாற்றமளிப்பதாய் உள்ளது. உங்கள் கற்பனாவாத திட்டங்கள் பெருமளவில் குட்டிமுதலாளித்துவ தீவிரவாத வட்டங்களினுள் விவாதிப்பதற்கான நோக்கம் கொண்டது என்று நாங்கள் முடிவுசெய்ய தகுதி உடையவர்கள். தொழிலாளர்கள் என வரும்போது தொழிற்சங்க வாதத்தின் நீர்த்த கஞ்சியை தவிர அவர்களுக்கு வழங்க உங்களிடம் எதுவுமில்லை.

8. The WSWS and "political exposures"

உலக சோசலிச வலைத் தளமும் ''அரசியல் அம்பலப்படுத்தல்களும்''

இப்போது சோசலிச நனவுக்கான போராட்டம் பற்றிய எனது கருத்துரு தொடர்பான உங்களது ஆய்விற்கு திரும்புவோம். என்ன செய்யவேண்டும்? என்ற எனது சொற்பொழிவை குறிப்பிட்டு (ஆனால் அதிலிருந்து மேற்கோள் காட்டவில்லை) நீங்கள் கூறுவதாவது, ''அரசியல் அம்பலப்படுத்தல்கள்'' என்ற சொற்றொடரை வெளிச்சம்போட்டுக் காட்டி இந்த பங்கெடுக்காமைக்கான ஒரு நியாயப்படுத்தலை வழங்குவதற்கு நோர்த் லெனினை நுழைக்க முயற்சிக்கிறார், இதன் மூலம் லெனின் வர்க்க நனவு அபிவிருத்தி தொடர்பான அவரது அணுகுமுறையை பொருளாதாரவாதிகள் குவிமையப்படுத்தும் அரிசி மற்றும் பருப்பு விஷயங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தினார். இந்த சொற்றொடரின் மீது நோர்த் பாய்கிறார் காரணம் அது உலக சோசலிச வலைதளத்தின் பத்திரிகை இருப்பை அங்கீகாரம் செய்வதுபோல் உள்ளது, ஆனால் லெனின் இந்த சொற்றொடரை வர்க்க நனவினை அபிவிருத்தி செய்வது போன்ற ஒரு சிக்கலான விஷயத்தை கையாள்வதற்கான அனைத்து தேவைகளுக்குமான மருந்துபோன்ற ஏதோவொன்றாக பார்த்தார் என்று கருதுவது முட்டாள்தனமாகும்''

தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர், மறுப்பீட்டியலில் மோசமானது எதுவென்றால், வாசகரின் அறியாமையை அனுமானித்துக் கொள்கின்ற அல்லது அதற்கு விண்ணப்பிக்கிற ஒன்றாகும். திட்டவட்டமாக இந்த வழிமுறையைத்தான் நீங்கள் கையாள்கிறீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், நீங்கள் எனது அறிக்கைகளிலிருந்து துல்லியமாகவோ மற்றும் ஏதாவது எனது அறிக்கைகளின் உள்ளடக்கத்திலிருந்தோ மேற்கோள் காட்டவில்லை. உங்களது குறிக்கோள் கல்வியூட்டுவதல்ல, மாறாக தவறாக வழிநடத்துவதும் ஏமாற்றுவதும் ஆகும். என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய எனது ஆய்வு தொடர்பான உங்களது தாக்குதலில் நீங்கள் எனது சொற்பொழிவிலிருந்தோ அல்லது நான் குறிப்பிட்ட லெனினின் ஆராய்ச்சி வேலையின் எந்தப்பகுதியிலிருந்தும் கூட மேற்கோள்காட்டவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைக்கு ஒரு போலியான செல்வாக்கை வழங்குவதற்காக நான் ''அரசியல் அம்பலப்படுத்தல்கள்'' என்ற சொற்றொடரை ''வெளிச்சம் போட்டு'' (அதாவது மிகைப்படுத்தி) காட்டவில்லை. இந்த வார்த்தைகள், ''வெகுஜனங்களின் தன்னியல்பு மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் நனவு'' எனும் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியின் (''அரசியல் அம்பலப்படுத்தல்களும் புரட்சிகரமான நடவடிக்கையின் பயிற்சியும்'') தலைப்பின் ஒரு பகுதியாக உண்மையில் தோன்றுகிறது. லெனின் பயன்படுத்தியவாறு, ''அரசியல் அம்பலப்படுத்தல்கள்'' என்பது வெறுமனே ஒரு சொற்றொடர் அல்ல, மாறாக, சோசலிச நனவு பற்றிய அவரது தத்துவத்தின் ஒரு மையக்கருத்துவாகும். ரஷ்யாவில் பேர்ன்ஸ்டைன்வாத திருத்தல்வாதம் எடுத்த சிறப்பு வடிவமான பொருளாதார வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பல வருட காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது தான் இந்த கருத்துருவாகும். பின் குறிப்பிட்ட போக்கானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வி தொடர்பான புரட்சிகரமான சமூக ஜனநாயகத்தின் செறிவுப்படுத்தலை -அதற்கு பிளக்கனோவ் மற்றும் லெனின் முதன்மையான மற்றும் அனைத்திற்கும் மேலான முக்கியத்துவத்தை வழங்கினர்- மரபுவழி போர்க்குணம் கொண்ட தொழிற்சங்கவாத வழிகளில் பொருளாதார விஷயங்கள் தொடர்பான கிளர்ச்சியினால் பிரதியீடு செய்ய முயற்சித்தது. லெனின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் எழுதியதாவது:

''பலவற்றைப் புரிந்துகொள்ளும் திறனுள்ள அரசியல் அம்பலப்படுத்தலை ஒழுங்கமைத்து நடத்துவது அரசியல் கிளர்ச்சியை அவசியமாக விரிவாக்குவதற்கு ஓர் அடிப்படை நிபந்தனை. இப்படிப்பட்ட அம்பலப்படுத்தலை கொண்டல்லாமல் வேறெந்த வழியிலும் அரசியல் நனவிலும் புரட்சிகர நடவடிக்கையிலும் மக்களுக்கு பயிற்சி அளிக்க முடியாது. எனவே, சர்வதேச சமூக - ஜனநாயகவாதம் முழுவதற்கும் உள்ள மிக முக்கியமான வேலைகளில் இவ்வகைப்பட்ட நடவடிக்கையும் ஒன்றாகும். ஏனெனில், அரசியல் சுதந்திரம்கூட அம்பலப்படுத்தல்களை எவ்விதத்திலும் விலக்குகிறதில்லை; அவற்றின் திசை சம்மந்தப்பட்ட துறையைத்தான் கொஞ்சம் மாற்றுகிறது.{லெனின் திரட்டு நூல்கள், தொகுதி 5, (மாஸ்கோ 1961), பக்கம் 412, முதல் நூலில் வலியுறுத்தல்}

லெனின் தொடர்ந்தார்:

''எந்த வர்க்கம் பாதிக்கப்படுகிறதாயினும் சரி, கொடுங்கோன்மை ஒடுக்குமுறை, வன்முறை, அநீதி சம்பந்தப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பதிலிறுக்க தொழிலாளிகள் பயிற்றுவிக்கப்படாவிட்டால் -மேலும், அவர்களது பதிலிறுப்பு ஒரு சமூக-ஜனநாயக பார்வையில் இருந்து அல்லாமல் வேறு எந்த பார்வை வழியும் இல்லாதிருக்கும் வண்ணம் பயிற்றுவிக்கப்படாவிட்டால், தொழிலாள வர்க்க நனவு உண்மையான அரசியல் நனவாக இருக்கமுடியாது. ஸ்தூலமான, எல்லாவற்றிற்கும் மேலாக நடப்பில் முக்கியமாக உள்ள அரசியல் உண்மைகள் மற்றும் நிகழ்வுகளில் இருந்தும், மற்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் அதனதன் புத்திஜீவித்தன, அறநிலை, மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்து வெளிப்பாடுகளிலும் உற்றுக்கவனிக்க தொழிலாளிகள் கற்றுக்கொள்ளாவிட்டால்; மக்கள் தொகையின் எல்லா வர்க்கங்களின், தட்டுக்களின், குழுக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் பற்றிய சடவாதப் பகுப்பாய்வையும் சடவாத மதிப்பீட்டையும் நடைமுறையில் செயற்படுத்த தொழிலாளிகள் கற்றுக்கொள்ளாவிட்டால், உழைக்கும் மக்களின் நனவு உண்மையான வர்க்க நனவாக இருக்கமுடியாது. '' [அதே பக்கம்]

அதே பந்தியின் முடிவில் லெனின் கூறியதாவது: ''வெகுஜனங்களை புரட்சிகர நடவடிக்கையில் பயிற்றுவிப்பதற்கு இந்த முழுவிரிவான அரசியல் அம்பலப்படுத்தல்கள் அவசியமான, அடிப்படையான நிபந்தனையாகும்''. [அதே பகுதி ப.413]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலையை சிறுமைப்படுத்தும் (Disparage) முயற்சியில் நீங்கள் ''உலக சோசலிச வலைதளத்தின் பத்திரிகை இருப்பு'' பற்றி கேலியுடன் குறிப்பிடுகிறீர்கள், மற்றும் அரசியல் அம்பலப்படுத்தல்களை கூட வெறுமனே ''இதழியல்" (Journalism) என சமப்படுத்தி கூறுகிறீர்கள். அரசியல் பிற்போக்குத்தனத்திற்கும் புத்திஜீவித்தன-எதிர்ப்புக்கும் அழைப்பு விடுவதன்றி இது வேறொன்றும் இல்லை. அனைத்துலகக் குழுவானது ஒரு அரசியல் கருவியை உருவாக்கி (Organ) அதன் மூலமாக சோசலிச மற்றும் அரசியல் ரீதியாக முற்போக்கான தொழிலாளர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் இளைஞர்களைக்கொண்ட ஒரு உலக வாசகர்களுக்கு அதன் ஆய்வையும், வேலைத்திட்டத்தையும் அது வழங்குவதற்காக நீங்கள் தாக்குகிறீர்கள். மார்க்சிசம் மற்றும் சோசலிச கருத்துக்களுக்கான போராட்டத்தை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் அவ்வாறான அத்தியாவசிய நடவடிக்கையை சிறுமைப்படுத்துவார்கள். அரசியல் ஆய்விற்கான வேலையை நீங்கள் பிற்போக்கு முதலாளித்துவ ஊடகங்களிடம், அல்லது Salon மற்றும் The nation (அது சமீபத்தில் கணிசமான வளங்களை அதன் வலைத் தளத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணித்தது) போன்ற வெளியீடுகளில் ஜனநாயகக் கட்சியின் இடது- தாராளவாத ஆலோசகர்களிடம், அல்லது பரவலாக ஒருவருக்கொருவர் நோக்குநிலை இழந்து காணும் குட்டிமுதலாளித்துவ தீவிரவாத குழுக்களிடம் விட்டுவிடலாம் என்று விரும்புகிறீர்களா?

எவ்வாறாயினும் எப்போதிருந்து மார்க்சிஸ்டுகள் ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் பரப்பும் கருவியை வெளியிடுவதில் அவர்களது சக்திகளை ஒருமுகப்படுத்துவது பொருத்தமற்றது என்று கருதினார்கள்? உங்களுக்கு நன்கு தெரிந்தவாறு இஸ்க்ரா எனும் ஒரு அரசியல் பத்திரிகையை - உருவாக்கியது ரஷ்ய சோசலிச இயக்கத்தில் ஒரு மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்தது. இந்த பணிக்கு லெனின் அவரது ஆரம்ப அரசியல் வாழ்க்கையில் பல வருடங்களை அர்ப்பணித்தார். எங்கிருந்து தொடங்குவது என்ற அவரது கட்டுரையில் அவர் 1901-ல் எழுதியதாவது:

''நம் கருத்தில், ஓர் அகில ரஷ்ய அரசியல் செய்தித்தாளை நிறுவுவதே, நம் செயலின் ஆரம்பப் புள்ளியாக, நாம் விரும்பும் அமைப்பை படைப்பதற்கான முதல் படியாக அல்லது, இப்படிச் சொல்வோம், தொடர்ந்து செல்கையில் அந்த அமைப்பை அபிவிருத்தி செய்ய, ஆழப்படுத்த, மற்றும் விரிவுபடுத்துவதற்கு நமக்கு சீராக வழிவகை செய்துதரும் முக்கிய திரியாக இருக்கும். மக்கட்பகுதியின் மிகப் பரந்துபட்ட அடுக்குகளில் அரசியலிலும் சோசலிச கேள்விகளிலும் அக்கறை எழுப்பப்பட்டிருக்கும் ஒரு சமயத்தில், பொதுவாக சமூக-ஜனநாயகத்தின் தலைமையான நிரந்தரமான பணியாக இருப்பதும், குறிப்பாக அந்த தருணத்தின் அவசரக் கடமையாகவும் திகழும் ஒரு ஒழுங்குபட்ட, முழுவீச்சு பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை இது இல்லாமல் நம்மால் நடத்த முடியாது. ஒரு அரசியல் கொள்கை பரப்பு கருவி இல்லாமல் இன்றைய ஐரோப்பாவில் பெயருக்கு தகுதியான ஒரு அரசியல் இயக்கத்தை எண்ணிப்பார்க்க முடியாது. அப்படியான ஒரு செய்தி பத்திரிக்கை இல்லாமல் நமது பணியை -அரசியல் அதிருப்தி மற்றும் எதிர்ப்பின் அனைத்து கூறுகளிலும் கவனம் செலுத்தி அதன் மூலமாக பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரமான இயக்கத்திற்கு பலமூட்டல்- இதனை நாம் பூர்த்திசெய்வது சாத்தியமல்ல. நாம் முதலாவது அடியை எடுத்துவைத்துள்ளோம், தொழிலாள வர்க்கத்தினுள் "பொருளாதார", தொழிற்சாலை அம்பலப்படுத்தல்களுக்கான ஒரு ஆர்வத்தை தூண்டினோம். இப்போது நாம் அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும். அதாவது மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவினர் உள்ளேயும் அரசியல் அம்பலப்படுத்தலுக்கான மிகவும் அரசியல் ரீதியான நனவுபூர்வமான ஆர்வத்தை தூண்டுவதாகும். (அதே நூல் பக்கம் 20-21)

''அரசியல் அம்பலப்படுத்தல்களை'' நீங்கள் நிராகரிப்பது தத்துவார்த்த கண்டனத்திற்கு மிகவும் அதிகமாக ஆளாகக்கூடியது என்று உணர்ந்து நீங்கள் திடீரென்று (Gear)கியரை மாற்றி அடித்துக்கூறுகிறீர்கள் ''1902-லிருந்து காலங்கள் மாறிவிட்டது என்று கவனத்தில் கொள்வது லெனினுக்கு சேவைசெய்யவில்லை என்றாகாது: இன்றைய குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகள், அவர்களது பொருளாதாரத்துவ முன்னோடிகளைப்போல் அல்லாது அரிசி, பருப்பு விஷயங்களில் இருந்து மட்டுமல்ல, தொழிலாள வர்க்கம் சம்பந்தப்பட்ட எதில் இருந்தும் அகன்று வெகுதூரம் சென்று விட்டனர்".

ஒரு வெற்று சொல்வழக்கையும், சம்பந்தமில்லாத ஒரு அரசியல் கருத்தையும், ஒரு தெளிந்த போலி கூற்றினையும் ஒற்றை வாக்கியத்தில் சமாளித்து சேர்த்திருக்கிறீர்கள். ''காலங்கள் மாறிவிட்டது'' என்று நீங்கள் எங்களுக்கு கூறுகிறீர்கள் ஆம், நம் அனைவருக்கும் தெரியும் நாம் 1902-ல் அல்ல 2006-ல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழிலாள வர்க்கத்தின் நனவை அபிவிருத்தி செய்வதில் லெனின் இருத்திய கோட்பாட்டு ரீதியான தத்துவார்த்த ரீதியாக வேரூன்றப்பட்ட வலியுறுத்தலின் சம்பந்தத்தை நடப்பு சூழலின் எது இல்லாமல் செய்திருக்கிறது? முதலாளித்துவ சமூகத்தின் இயல்பான தன்மையில் வேரூன்றி இருப்பதான பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதின் பிரச்சினையை ஆய்வு செய்வதில் இருந்து தான் அரசியல் அம்பலப்படுத்தல்களின் கருத்துரு எழுந்தது. அந்த ஆய்வின் சம்பந்தத்தை எப்போது இல்லாமல் செய்ய முடியும் என்றால், முதலாளித்துவ உற்பத்தி முறையில் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் பொதுவான அமைப்பிலும் அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டு, மார்க்சிச ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட அரசியல் அம்பலப்படுத்தல்களுக்கான கூடுதலான தூண்டுதல் சோசலிச வர்க்க நனவின் வளர்ச்சிக்கு இனிமேலும் அவசியம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருந்தால் மட்டுமே. ஆனால் அது உண்மையாகுமானால், சோசலிச நனவு தன்னியல்பாக அபிவிருத்தியுற முடியாது, அது தொழிலாள வர்க்கத்துக்குள் வெளியிலிருந்து தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற லெனினின் மிகப் பொதுவான கூற்றின் பொருத்தத்தை மறுபரிசீலனை செய்யும் நிர்ப்பந்தம் நமக்கு நேரும்.

தற்போதைய நிலைமைகளுக்கும் 1902-ன் அன்றைய நிலைமைகளுக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள், அது அரசியல் அம்பலப்படுத்தல்களின் முக்கியத்துவத்தை குறைக்கிறது என்றும். அது என்னவென்றால் ''அரிசி- பருப்பு விஷயங்களில் இருந்து மட்டுமல்ல தொழிலாள வர்க்கத்துடன் தொடர்புடைய அனைத்திலும் இருந்து வெகுதூரத்திற்கு அகற்றப்பட்டுவிட்டார்கள்" என்பதில் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகள் பழைய பொருளாதாரவாதிகளில் இருந்து முழுமையாக வேறுபட்டு விடுகிறார்கள் என்கிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் முதலாக, நனவு பற்றிய லெனினின் தத்துவத்தின் பொருத்தமானது குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் எந்த வடிவங்களினாலான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் அல்லது ஈடுபடமாட்டார்கள் என்பதில் தங்கியிருக்கவில்லை மாறாக முதலாளித்துவ சமுதாயத்தின் புறநிலையான கட்டமைப்பு மற்றும் சமூக உறவுகளில் தான் அது தங்கியிருக்கிறது. இரண்டாவது, உள்ளது உள்ளவாறான அடிப்படைப் பார்வையில் இருந்து உங்களது கூற்று முழுமையாக தவறானதாகும். தொழிற்சங்கங்களின் தற்போதைய அதிகாரத்துவம் 1960-கள் 1970-கள் மற்றும் 1980-களைச்சேர்ந்த தீவிரவாத அரசியல் அமைப்புக்களிலிருந்து வந்த மத்தியதர வர்க்க அகதிகளினால் நிறைந்து போய் இருக்கிறது. SEIU வின் தலைவரான அன்ரூ ஸ்டோன், தொழிலாளர் அதிகாரத்துவத்தின் மேல்சபைகளில் தொழில்களை பெற்றுக்கொண்ட பழைய - தீவிரப்போக்குடைய சிலருள் ஒருவர் ஆவார். TWU லோக்கல் 100-ஐ கட்டுப்படுத்தும் புதிய திசைகள் இயக்கமானது பல்வேறு தீவிரவாத போக்குகளின் உருவாக்கமாகும். குட்டி முதலாளித்துவ தீவிரவாத ஐக்கிய போக்கு பல்வேறு சங்கங்களின் அதிகாரத்துவத்தினுள் ஆழமாக ஒருங்கிணைந்திருந்தது. நாங்கள் சுட்டிகாட்டக் கூடியது என்னவெனில் வேறுயாரும் அல்ல நான்சி பீல்ஸ் வொல்போர்த் தான், அவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நான் நிச்சயமாக கூறுவேன், சமீபத்தில் AFL-CIO வின் சர்வதேச நிர்வாக குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [12] குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் ''தொழிலாள வர்க்கத்துடன் செய்வதற்கு'' எதுவுமே இல்லை என்ற கூற்றுக்கு இது ரொம்பவே அதிகம். திட்டவட்டமான நேரெதிர்தான் உண்மையாகும்: மிகவும் பிற்போக்கான வடிவங்களில் இருக்கும் தொழிற்சங்க சந்தர்ப்பவாதத்திற்கு மிகவும் வெறிபிடித்து மாற்றமுற்றவர்களானார்கள். அவர்களது நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச அரசியல் நடவடிக்கை அபிவிருத்தியுறுவதற்கு எதிராக முரட்டுத்தனமாக செலுத்தப்படுவதாகி விட்டது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான உங்கள் அடுத்த வாதம் அபத்தமானது. அரசியல் அம்பலப்படுத்தல்கள் 'இணையதளத்தில் மிதமிஞ்சி இருக்கும் தீவிர போக்குடைய வலைத் தளங்களில் மற்றும் ஆவணப்படம் தயாரிப்பது என்னும் பிரபலத்தில் வளர்ச்சியுற்று வரும் ஜனரஞ்சகமான ஊடகத்திலும் அதிகப்படியாக' காணத்தக்கதாய் இருக்கிறது. மைக்கேல் மூர் 'அரசியல் அம்பலப்படுத்தல்களை' உருவாக்குவதில் புகழ்பெற்றார், ஆனால் இது வர்க்க நனவிலிருந்து இன்னும் வெகுதூரத்தில் உள்ளது, இந்த இடைவெளியானது, ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக பாரன்ஹீட் 9/11 போன்ற திரைப்படத்தை பயன்படுத்திய முறையில் வேதனையுடன் தெரிவதாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைக்கு எதிரான ஒரு முக்கியமான வாதமாக இது எடுக்கப்படவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கறீர்களா? உங்கள் சந்தேகத்திற்கிடமான நேரியல் வாதமுறையில் (Syllogism) இருந்து என்ன முடிவு எடுக்கப்படவேண்டும்: 1) உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் அம்பலப்படுத்தல்களை உருவாக்குகிறது; 2) மைக்கேல் மூர் அரசியல் அம்பலப்படுத்தல்களை உருவாக்குகிறார்; அதனால் 3) உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியலும், மைக்கேல் மூரின் அரசியலும் ஒரே மாதிரியானது? அல்லது ஒரு வேளை 1) குட்டிமுதலாளித்துவ தீவிரப்போக்கினர் அரசியல் அம்பலப்படுத்தல்களை செய்கின்றனர்; 2) உலக சோசலிச வலைத் தள எழுத்தாளர்கள் அரசியல் அம்பலப்படுத்தல்களை செய்கின்றனர்; அதனால் 3) உலக சோசலிச வலைத் தள எழுத்தாளர்கள் குட்டிமுதலாளித்துவ தீவிரப்போக்கினர்?

உங்கள் ஆவணத்தின் இந்த பகுதியை பின்வரும் திடுக்கிடச் செய்யும் வாசகத்துடன் முடிக்கின்றீர்கள், ''இன்று லெனின் உயிருடன் இருந்திருப்பாராயின் அவர் மிக அநேகமாய் சொல்லியிருக்கக் கூடியது, 'அரசியல் அம்பலப்படுத்தல்கள்' எல்லாம் நல்லது சிறந்தது தான், அதே சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்களினதை போன்ற அந்தப் போராட்டங்களில் இருக்கும் மிகப்பெரும் தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கு தம்மால் இயன்றதை செய்வதுதான் மார்க்சிஸ்டுக்களின் அத்தியாவசியமான அவசர பணியாகும்.'' ஒரு தொழிற்சங்கவாத செயல்வாதியாக லெனின்! அது உண்மையாக இருக்குமாயின் அப்போது இதுவும் கூட சாத்தியம்தான் அதாவது மார்க்ஸ் இன்று உயிருடன் இருப்பாராயின் அவர் டொச்ஷே வங்கியில் விலை வேற்றுமை வணிகத் துறையை நடத்திக்கொண்டிருப்பார். மற்றும் ஏங்கெல்ஸ் ஒருவேளை டெய்ம்லெர் பென்சின் CEO - ஆக (தலைமை நிர்வாக அதிகாரியாக) இருப்பார். ஆனால் இப்படியான மறுபிறப்புக்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினாக இருக்கமாட்டார்கள்.

9.The 2004 Election

2004-தேர்தல்கள்

உங்களது அடுத்த பத்தியில் நீங்கள் கூறுவதாவது நனவு பற்றிய எனது புறநிலைவாத மற்றும் இயந்திரவியல் என்று குற்றம் சாட்டப்படும் கருத்துருவின் காரணமாக 2004-தேர்தல் முடிவுகள் பற்றி நான் விளக்கம்தர முடியாமல் இருக்கிறேன், மற்றும் அந்த தேர்தல் முடிவு ''விளக்கமுடியாதது'' என்று நான் கருதியதாகவும் கூறுகிறீர்கள். இந்த ஒரு நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் பற்றி நவம்பர் 2004-ல் நான் வழங்கிய ஒரு சொற்பொழிவிலிருந்து நீங்கள் உண்மையிலேயே ஒரு முழுமையான வசனத்தை மேற்கோள் காட்டுகிறீர்கள் அதில் மிகவும் வறுமையான மாநிலங்களில் புஷ்ஷிற்கு சார்பான பெரும்பான்மை வாக்குகள் பற்றி நான் குறிப்பிடுகிறேன்: "அந்த வாக்காளர்கள் குடியரசுக் கட்சியினரை ஆதரித்தனர் என்றால், அதற்கு அவர்கள் தங்களின் சொந்த சடரீதியான நலன்களைக் காட்டிலும் "மதிப்புக்களை" தங்களுக்கு வெகு நெருக்கமாகக் கொண்டிருந்தது தான் காரணம் என்று கூறுவதானது அறிவியல் பூர்வமான சமூக -அரசியல் ஆய்வுக்கு மர்ம வாதத்தை பிரதியீடு செய்வதாகும்.'' நீங்கள் அங்கேயே மேற்கோளை முடித்துவிடுகிறீர்கள் (பக்க குறிப்பு பற்றி குறிப்பிடாமலேயே) மற்றும் பின்வருமாறு கூறுகிறீர்கள்: ''ஆனால் தேர்தலில் என்ன நடந்தது என்பது பற்றி அறிந்து கொள்ளமுடியாமல் இது எங்களை முழுமையாக ஒரு நட்டாற்றில் விடுகிறது, காரணம் தெளிவாக ஏதோ சில வகை மதிப்புக்கள் அதில் ஒரு பாத்திரத்தை ஆற்றியிருந்தன.''

நீங்கள் மேற்கோள்காட்டிய வசனம்தான் நான் சொன்னதெல்லாம் என்றால் அது மிகவும் வறுமையான மாநிலங்களில் ஏன் புஷ் வெற்றிக்கண்டார் என்பதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு போதுமானதாக இருந்திருக்காது. ஆனால் விஷயம் என்னவெனில் அது உண்மையிலேயே ஒரு நீடித்த ஆய்விற்கான தொடக்கம் அதை நீங்கள் குறிப்பிடாமல் விடுகிறீர்கள். நான் பின்வருவதை (அந்த வசனத்திற்கு பிறகு உடனடியாகவே) தொடர்ந்து கூறினேன்:

ஒருவருக்கும் பொருள் தெளிவாகப் புரியாத "மதிப்பீடுகள்" என்பதற்கான அருவமான குறிப்புகள், ஏன் தொழிலாளர்கள் குடியரசுக் கட்சி மற்றும் அதன் துணையிருக்கும் மத வியாபாரிகள் மற்றும் அறநெறி புகட்டும் மோசடித்தந்திரக் கூட்டத்தின் செல்வாக்கின் கீழ் வந்தார்கள் என்று விளக்குவதற்கு எதனையும் செய்யவில்லை. முன்பு போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களின் கோட்டைகளாக விளங்கிய மாநிலங்களில் பழைய தொழிலாளர் இயக்கம் கிட்டத்தட்ட பொறிவுற்றதானது மில்லியன் கணக்கான மக்களை சமுதாயப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதற்கும், தங்களுடைய நலன்களை ஒரு வர்க்கம் என்ற முறையில் காத்துக் கொள்ளுவதற்கும் இயலாத தன்மையில் விட்டு விட்டிருக்கிறது என்பது சற்று கூடுதலாக ஏற்கக்கூடிய விளக்கமாக இருக்கிறது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவின் சமுதாய அனுபவத்தை மட்டும் ஆராய்வோம்.

இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், UMWA விற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெஸ்ட் வர்ஜினியா, கென்டக்கி மற்றும் வேர்ஜினியா, டென்னசி, அர்கன்சாஸ், ஓகியோ, இண்டியானாப் பகுதிகளில்கூட மிகப்பெரிய வகையில் சீற்றத்துடன் பரவியிருந்தன. வாதத்திற்கிடமிருப்பினும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தான் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடையே மிக அதிகமான வர்க்க நனவினை பெற்றிருந்த தொகுப்பினர் ஆவர். அவர்கள் ஜோன் எல். லீவிஸ் தெரிவித்திருக்கக் கூடிய முறையில் "நேர்த்தியான பாகுபாடின்மையுடன்" மிகப்பெரிய நிலக்கரி நிறுவனங்களுக்கு எதிராக போராடியதோடு, கணக்கிலடங்கா சமயங்களில் வெள்ளை மாளிகையின் உத்தரவுகளையும் மீறி நின்றிருந்தனர். ஆனால் 1980 களில் பேரழிவு தரக்கூடிய தோல்விகளை தொடர்ச்சியாகச் சுரங்கத் தொழிலாளர்கள் சந்தித்தனர்; இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் காட்டிக் கொடுப்பாகும்; அது UMWAஐ ஒரு வெறுமையான முக்கியத்துவம் அற்ற ஒரு கூடாக மாற்றிவிட்டது. ஆயிரக்கணக்கான நிலக்கரிச் சுரங்க வேலைகள் துடைத்துக்கட்டப்பட்டு விட்டன.

வேலைகள் ஏதும் இன்றி, பல தலைமுறைப் போராட்டத்தில் அவர்களது வர்க்க நனவைப் பாதுகாத்து வந்திருந்த ஆழமாய் வேரூன்றியிருந்த சமூக உறவுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, அவர்களை கைவிட்டுவிட்ட தொழிற்சங்கத்தில் இருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், நேற்றைய நாளின் போர்க்குணமுடைய தொழிலாளர்கள், எப்போதுமே புதிய வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் திருச்சபை ஊழிய தொழிற்பிரிவின் நன்கு பயிற்சி பெற்று, உரத்த குரலில் கூவக்கூடிய வியாபாரப் பிரதிநிதிகளின் இலக்கானார்கள். ஒழுங்குபட்ட தொழிலாளர் இயக்க சூழலுக்கு முற்றிலும் புறத்தே வளர்ந்தும், வர்க்கப் போராட்டத்தின் மரபுகளைப் பற்றிய உணர்வே தெரியாமலும் வளர்ந்துள்ள, இத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வர்க்க நனவை வளர்த்துக்கொள்ளுவதில் தடைகள் நிறையவே உள்ளன. சமகால சமூகத்தை நோக்கிய ஒரு விமர்சன பார்வையை அபிவிருத்தி செய்ய வழிவகை செய்கிற தகவல்களையும் உள்ளார்ந்த பார்வைகளையும் - இந்த உலகத்தில் ஒரு மேம்பட்ட கூடுதல் மனிதத்தன்மையுடனான ஒரு சமூகம் அதுவும் தான் வாழ்நாளிலேயே சாத்தியம் என்கிற உணர்வை கூட விட்டுத் தள்ளலாம் - அவர்கள் எந்த ஆதாரங்களில் இருந்து பெறுவார்கள்? இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்தோ, சாக்கடைத் தொட்டியான வெகுஜன ஊடகங்களில் இருந்தோ, நிச்சயமாக அதைப் பெற இயலாது.

ஒரு சராசரி அமெரிக்கத் தொழிலாளி, செய்தி ஊடகத்தாலும், குடியரசுக் கட்சியின் அரசியல் இயந்திரத்தாலும் தன்மீது இடைவிடாது நடத்தப்படும் பிரச்சாரத்தை ஏற்றுவிடுகிறார் என்று இதற்கு பொருள் கொள்ள வேண்டியதில்லை. மிகக் குறைவான வாய்ப்புக்களில்கூட அவ்வாறு நடைபெறுவதில்லை. வாழ்க்கையைப் பற்றி போதுமான அளவு அவர்கள் கண்டுள்ளனர்; உலகில் பொருட்கள் எல்லாம் அவை எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறு இருப்பதில்லை என்பதை அவர்கள் நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். ஒரு தொழிலாளி "மதிப்புக்கள்" பற்றி பேசும்பொழுது, அந்த வார்த்தையின் பொருளானது என்ரானின் கென்னத் லே அல்லது ஜார்ஜ் புஷ்ஷிற்கானதில் இருந்து மாறுபட்ட பொருளை கொண்டிருக்கிறது.

2004 தேர்தலில் "மதிப்புக்கள்" பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் பற்றி கேள்விக்கு உட்படுத்தி, ஏற்கனவே பல அறிக்கைகள் வந்துள்ளன. ஆரம்பத்தில் தேர்தலுக்குப் பின் இவ்வாறு இருக்கும் என்று வந்திருந்த கருத்துக் கணிப்புக்களான ஆதார இருப்புக்கள், பிழையாக வழிநடத்தப்பட்டிருந்தன அல்லது தவறான முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டன என இப்பொழுது தோன்றுகிறது. இது சரியாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் கூறப்பட்டாக வேண்டிய முக்கியமான கருத்து என்னவென்றால், உழைக்கும் அமெரிக்கர்களின் பெரும்பான்மையான மக்களின் உண்மையான சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் பற்றி இரு கட்சிகளில் ஒன்று கூட அதைப்பற்றி உரைக்காத தன்மையால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் வெற்றிடத்தில் "மதிப்புக்கள்" பிரச்சினை எழுந்துள்ளது என்பதாகும். ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர், வெகுஜன ஊடகங்கள் என்று அனைத்துமே, அமெரிக்க முதலாளித்துவத்தின் பெருமைகளுக்கு துதிபாடும் ஒரே கூட்டுப் பாடலின் பல பகுதிகளாக அமைகின்றன.

ஆட்களை மாற்றி வேலைகள் கொடுப்பதன் மூலமோ, வேறு சிறந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமோ கடந்துசெல்லக்கூடிய தற்காலிகப் பலவீனம் அல்ல இது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி, ஒப்புமையில் ஒருசிலரிடம் மட்டும் குவிந்துள்ள மிக மிக அதிகமான செல்வம், சமூக சமத்துவமின்மையின் மிக அதிஉயர் மட்டங்கள், ஒருகாலத்தில் முதலாளித்துவவாதிகளுக்கும் தொழிலாளருக்கும் இடையே வர்க்கப்போராட்டத்தில் மத்தியஸ்தராக சேவை செய்ததும் சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க களத்தை உருவாக்கியதுமான மரபுவழி 'நடுத்தர வர்க்கத்தின்' அதிவிரைந்த சரிவு, மற்றும் இறுதியாக, ஆளும் மேல்தட்டிற்குள்ளேயே, மரபுவழியான முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பராமரிப்பதற்கு தீவிரமாய் அர்ப்பணித்திருந்த எந்ததவிதமான முகாமும் இல்லாது போனமை ஆகியவற்றின் விளைபொருள் தான் இது. [அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி: 2000 மற்றும் 2004 இன் ஜனாதிபதி தேர்தல்கள் (டெட்ராயிட், 2004), pp. 104-05, emphasis in the original]

தேர்தல் முடிவு 'விளக்க முடியாதது' என்று நான் கொஞ்சம்கூட கருதவில்லை என்பது மிகத்தெளிவானது. எனது விளக்கத்தை மேற்கோள்காட்டாமல் விட்டுவிடுவதற்கு நீங்கள் சுலபமாக முடிவுசெய்துவிட்டீர்கள். பொய்யுரைப்பது அத்துடன் முடியவில்லை. அதற்குப்பிறகு நீங்கள் உறுதிபடக் கூறுகிறீர்கள் நான் ஒரு 'இயந்திரவியல் சடவாதியாக' ''நனவானது அதனை உருவகப்படுத்திய யதார்த்தத்தை துல்லியமாக அறிந்துகொள்ளும்'' வேறுவிதமாகக்கூறினால் "புறநிலைமைகள் தாமாகவே நேரடியாக அந்த நிலைமைகள் பற்றிய ஒரு சரியான நனவாக மொழிபெயர்க்கும்'' என்று எண்ணுவதாக. அவ்வாறான ஒரு கருத்துரு உண்மையிலேயே சரியானதல்ல. எவ்வாறாயினும் அப்படியான எதையும் நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று உங்களுக்கு நன்கு தெரியும். உண்மை என்னவெனில் கடந்த கோடையில் நான் வழங்கிய மூன்றாவது சொற்பொழிவின் கணிசமான பகுதியை தொழிலாளவர்க்கத்தினுள் தன்னியல்பாக எழும் நனவானது சோசலிச நனவல்ல என்பதை விளக்குவதற்கு அர்ப்பணித்தேன். மறுப்பீட்டியல் (polemics) தொடர்பான உங்களது கோட்பாடற்ற (Unscrupulous) அணுகுமுறையின் விளைவாக, அதில் நீங்கள் உங்களது அரசியல் எதிராளிகளுக்கு அவர்கள் நம்பும் மற்றும் உண்மையிலேயே கூறியவற்றிற்கு எதிரான நிலைப்பாடுகளை காரணம் காட்ட தயாராக இருக்கிறீர்கள். மீண்டும் நான் எனது சொற்பொழிவிலிருந்து ஒரு நீண்ட பகுதியை வழங்க கடமைப்பட்டுள்ளேன்:

மக்கள் வேலைக்கு செல்லும் பொழுது, தங்களுடைய சொந்த வேலையும் இந்த உலகின் மிகப்பரந்த உலகப்பொருளாதார ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வலைப்பின்னலுக்குள் மிகச்சிறிய கூறு என்பதை எந்த அளவிற்கு அறிந்துள்ளனர்? மிக புத்திசாலித்தனமான தொழிலாளிகூட தன்னுடைய பணி, அல்லது தன்னுடைய நிறுவனம், நவீன நாடுகடந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை என்னும் மிகச் சிக்கலான நிகழ்முறைகளுடன் கொண்டுள்ள உறவு குறித்து மிகத் தெளிவற்ற ஒரு புரிதலைத் தான் கொண்டிருப்பார் என்று ஒருவர் நியாயமாக ஊகிக்க முடியும். சர்வதேச முதலாளித்துவ நிதி, உலகளாவிய முறைப்படுத்தப்படாத தனியார் நிதித் தொகுப்புகளின் (Hedge Funds) பாத்திரம், மற்றும் ஒவ்வொரு நாளும் சர்வதேச எல்லைகளை கடந்து நிதி சொத்துகளில் தசாப்தக் கணக்கான பில்லியன் டாலர்கள் நகர்கின்ற இரகசியமான மற்றும் பல சமயங்களில் நுழைந்துபார்க்க முடியாத வழிகள் (சமயங்களில் துறை வல்லுநர்களுக்கே கூட) இவற்றின் மர்மங்களை ஊடுருவிப் பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு தனி தொழிலாளிக்கும் இதே நிலை தான். தற்கால முதலாளித்தவ உற்பத்தி, வணிகம், நிதியம் இவற்றைப் பற்றிய உண்மைகளானது, பெருநிறுவன மற்றும் அரசியல் தலைவர்கள் பெரும் கல்வியியல் ஆய்வுநிலையங்களின் ஆய்வுகளையும், ஆலோசனையையும் சார்ந்திருக்க வேண்டிய அளவுக்கு பெரும் சிக்கல் வாய்ந்தவையாக இருக்கின்றன, அந்த ஆய்வுநிலையங்களும் தங்களுக்கு கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் தரும் புரிதலில் தங்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

ஆனால் வர்க்க நனவு பற்றிய பிரச்சினை, நவீன பொருளாதார வாழ்வு என்னும் சிக்கலான இயல் நிகழ்வினை கிரகித்துக் கொள்வது மற்றும் நிபுணத்துவம் பெறுவது என்னும் வெளிப்படையான சிக்கலையும் தாண்டிச் செல்கிறது. இன்னும் அடிப்படையான இன்றியமையாத மட்டத்தில், முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலானது கூட வேண்டாம், ஒரு தனித் தொழிலாளிக்கும் அவருடைய முதலாளிக்கும் இடையே இருக்கும் சமூக உறவின் துல்லியமான தன்மை புலனுணர்வு காட்சி மூலமோ, உடனடி அனுபவத்தினாலோ அறியப்படுவதில்லை, அறியப்படவும் முடியாது.

தாம் சுரண்டப்படுகிறோம் என்பதில் நம்பிக்கையுற்றிருக்கும் ஓர் ஆண் அல்லது பெண் தொழிலாளிகூட அந்த மோசமான தனி அனுபவத்தின் அடிப்படையில் சுரண்டலின் சமூக-பொருளாதார செயற்பாட்டின் அடித்தளத்தில் இருக்கும் தன்மையை உள்வாங்கி உணர முடியாது. மேலும் சுரண்டல் என்கிற கருத்துருவே, தனக்குப் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்ற உள்ளுணர்வில் இருந்து இது நேரடியாக தருவிக்கப்படுகிறது என்பது கூட போகட்டும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததாய் உள்ளது. ஒரு வேலைக்கு மனுவைப் பூர்த்திசெய்யும் தொழிலாளி தான் தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்பதற்கு முன்வருகிறோம் என்பதை உணர்வதில்லை; அல்லது இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த உழைப்பு சக்தியானது அது வாங்கப்படும் விலையை (ஊதியத்தை) விடக் கூடுதலான மதிப்புத்தொகையை உருவாக்கும் பண்பைக் கொண்டிருக்கிறது; இலாபம் என்பது இந்த உழைப்பு சக்தியின் விலைக்கும், உழைப்புசக்தி தோற்றுவிக்கும் மதிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருந்து பெறப்படுகிறது என்பதை உணர்வதில்லை.

அதேபோல், ஒரு தொழிலாளிக்கு ஒரு பண்டத்தை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கும்போது, அந்த பரிவர்த்தனையின் சாரம் பொருட்களுக்கு இடையே உள்ள உறவையொட்டி அல்ல (ஒரு கோட் அல்லது வேறு ஒரு பண்டம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கப்படும்போது), மக்களுக்கு இடையே இருக்கும் உறவை ஒட்டியது என்று தெரியாது. உண்மையில், அவருக்கு பணத்தின் இயல்பான தன்மை; வரலாற்றுரீதியாக மதிப்பின் வடிவத்தின் வெளிப்பாடாக அது தோன்றியதை, உற்பத்தியும் பரிவர்த்தனையும் உலகமயமாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில், முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் சமூக உறவுகளை மறைக்கும் கருவியாக அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் உண்மையில் அவருக்குப் புரிவதில்லை.

நான் இப்பொழுது கூறிக்கொண்டிருப்பவை மார்க்சின் மிக முக்கியமான நூலான மூலதனத்தின் தத்துவார்த்த-மனித அறிவாதார முறைஇயல் (Epistemological) அடித்தளமாகக் கருதப்படுவதற்கு பொது முன்னுரையாக பயன்படுத்தப்படலாம். முதல் தொகுதியின் முக்கியமான முதல் அத்தியாயத்தின் இறுதிப் பிரிவில் மார்க்ஸ் தன்னுடைய பண்ட வழிபாடு (Commodity fetishism) என்பது பற்றிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்; அது முதலாளித்துவ சமூகத்திற்குள் இருக்கும் சமூக உறவுகளில் காணப்படும் புதிரின் புறநிலை மூலத்தை விளக்குகிறது; அதாவது ஏன் இந்த குறிப்பிட்ட பொருளாதார முறையில் மக்களுக்கு இடையேயான சமூ உறவுகள் பொருட்களுக்கிடையேயான உறவுகளைப் போல் இன்றியமையாமல் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகிறார். எந்தப் பொருளின் மதிப்பும், அதன் உற்பத்திக்காக செலவிடப்பட்டுள்ள மனித உழைப்புச்சக்தியின் உறுதிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு என்று புலன் உணர்வு காட்சி மற்றும் உடனடி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வெளிப்படையாக தெரியாது, தெரியவும் முடியாது. மதிப்பின் வடிவின் (Value form) புறநிலையிலான சாரத்தைக் கண்டுபிடித்தமையானது விஞ்ஞான சிந்தனையில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். இந்தக் கண்டுபிடிப்பு இல்லாவிடின், வர்க்கப் போராட்டத்தில் புறநிலையான சமூக-பொருளாதார அடித்தளங்களை பற்றியோ அல்லது அவற்றின் புரட்சிகரமான தாக்கங்களைப் பற்றியோ ஒருபோதும் புரிந்து கொண்டிருக்க முடியாது.

தான் வாழும் அமைப்பின் சமூக விளைவுகளை பற்றி ஒரு தொழிலாளி எத்தகைய வெறுப்பை கொண்டிருந்தாலும், உடனடி அனுபவத்தின் அடிப்படையில், அதன் தோற்றம், அதன் உள்முரண்பாடுகள் அல்லது வரலாற்றளவில் வரம்பிற்குட்பட்ட அதன் இருப்பின் தன்மை ஆகியவற்றை அவர் உணர்ந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள், மூலதனத்திற்கும் கூலி உழைப்பிற்கும் இடையே நிலவும் சுரண்டும் தன்மையுடைய உறவு, வர்க்கப் போராட்டம் மற்றும் அதன் புரட்சிகர விளைவுகளின் தவிர்க்க முடியாத தன்மை, ஆகியவற்றின் மீதான புரிதல் உண்மையான விஞ்ஞானபூர்வமான பணியின் அடிப்படையில் இருந்து எழுந்தவை; இவற்றுடன் மார்க்சின் பெயர் எக்காலத்திலும் பிணைந்திருக்கும். இந்த விஞ்ஞானத்தின் மூலம் பெறப்பட்டுள்ள அறிவு, இந்த அறிவின் சாதனை அதன் விரிவாக்கத்தில் தொடர்புடைய ஆய்வு முறையானது தொழிலாள வர்க்கத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதுதான் ஒரு புரட்சிகரக் கட்சியின் பணியாகும்’’.

கடந்த கோடை சொற்பொழிவிலிருந்து நேரடியாக மேற்கோள்காட்டப்பட்ட இப்படியான பத்திகள் நான் கூறியதாக நீங்கள் சொல்வதற்கு முழுமையாக எதிரான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கிறது.

10. Marxism and the Enlightenment

மார்க்சிசமும் அறிவொளியும்

எதிராளியின் வாதங்களை துல்லியமாக சமர்ப்பிப்பது என்பது மறுப்பீட்டியலின் ஒரு கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைக்கு அவசியமானதாகும். நீங்கள் இதனை செய்ய முடியாமல் இருக்கிறது என்ற உண்மை அதாவது நீங்கள் தவறாக வழிநடத்தவும் தவறாக பிரதிநிதித்துவம் செய்யவும் - விளைவாக பொய் சொல்வதற்கு- நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக உணர்வது என்பதே முக்கியமான மற்றும் தொந்தரவு ஏற்படுத்தும் அரசியல் பிரதிவிளைவுகளை தன்னகத்தில் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுள்ளது போல, பொய் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான செயல்பாட்டுக்கு சேவை செய்கிறது: அது சமூக நலன்களை மூடி மறைக்கவும் ஒரு அரசியல் நிலைப்பாட்டின் பலவீனங்களையும் முரண்பாடுகளையும் மூடி மறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் விஷயத்தை பொறுத்தவரையில் மார்க்சிச தத்துவார்த்த மற்றும் அரசியல் அஸ்திவாரங்களை நிராகரித்துள்ள நிலையில், -இது முழுக்க நனவின்றி நடந்ததாக சொல்ல முடியாது- அதே சமயம் ஒரு மார்க்சிஸ்டாக உங்களை வெளிப்படையாக காட்டிக்கொள்ளும் முயற்சிகளிலிருந்து உங்களது நேர்மையற்ற வழிமுறைகள் ஊற்றெடுக்கிறது. அனைத்துலகக் குழுவுடன் உங்களது பேதங்கள் தனித்தனியான வேலைத்திட்ட புள்ளிகளின் மீது அல்ல, மாறாக சோசலிசத்திற்கான போராட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் மெய்யியல் உலக கண்ணோட்டத்தின் மிக அடிப்படை பிரச்சினைகள் குறித்ததாகும்.

உங்களது புரட்சிகர கௌரவத்தின் மீதான இந்த ''அவமதிப்புக்கு'' எதிர்ப்பு தெரிவித்து உங்கள் ஆசனத்தில் இருந்து நீங்கள் எழுவதற்கு முன்னதாக உங்களது ஆவணம் மார்க்சிசத்தின் உலக வரலாற்று கண்ணோட்டத்துக்கு முழுமையாக அந்நியமான, பந்திகளை உள்ளடக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட என்னை அனுமதியுங்கள். குறிப்பாக கவனிக்கத்தக்க உதாரணங்களில் ஒன்று, உங்களது பின்வரும் கூற்று அதாவது எனது ''பின் நவீனத்துவம் பற்றிய விமர்சனம் அறிவொளியை விமர்சனமின்றி பாதுகாப்பதை அனுமதிக்க பயன்படுகிறது."

எனது முதலாவது சொற்பொழிவில் ஒரு பத்தியை பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், ஆனால் அதனை மேற்கோள் காட்டவில்லை, அது ''வரலாற்று நனவும் எதிராக பின் நவீனத்துவமும்'' என்று தலைப்பிட்ட பகுதியில் தோன்றுகிறது. நான் பின்வருமாறு கூறினேன் :

"மனித விடுதலைக்கான போராட்டத்தில் அத்தகைய ஒரு முக்கியமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை, வரலாற்று அனுபவம் பற்றிய அறிவிற்கும் தத்துவார்த்த உள்வாங்கலுக்கும் ஒதுக்கிக் கொடுப்பதான, நாம் உயர்த்திப்பிடிக்கும் வரலாறு பற்றிய கருத்துருவானது, நிலவுகின்ற முதலாளித்துவ சிந்தனையின் அனைத்து போக்குகளுக்கும் சமரசப்படுத்த முடியாத பகைமையுடையது. முதலாளித்துவ சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக சிதைவானது, அதன் அறிவுஜீவித தாழ்நிலையில் பிரதிபலிக்கிறது, முனைகொண்டுள்ளது என்று கூறமுடியாவிட்டாலும். அரசியல் பிற்போக்குக் காலத்தில், அறியாமை தன் கோரப் பற்களை காட்டும் என்று ட்ரொட்ஸ்கி ஒரு தடவை கூறினார்.

முதலாளித்துவ சிந்தனையின், மிகத் தேர்ச்சிபெற்ற மற்றும் சிடுமூஞ்சித்தனமான அவநம்பிக்கை கல்வியாளர்களால், அதாவது பின்நவீனத்துவ வாதிகளால், இன்று முன்வைக்கப்படும் அறியாமையின் குறிப்பிட்ட மற்றும் வினோதமான வடிவம் வரலாறு பற்றிய அறியாமையும் வெறுப்புணர்வும் ஆகும். வரலாற்றின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் சமூகச் சிந்தனையின் அனைத்து உண்மையான முற்போக்கான போக்குகளாலும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையப் பாத்திரத்தை பின்நவீனத்துவ வாதிகள் தீவிரமாக நிராகரிப்பதானது, புறநிலை உண்மையை மெய்யியல் விசாரணையை, மைய இலக்கு கூட வேண்டாம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்காக ஏற்கமறுப்பது மற்றும் வெளிப்படையாக மறுதலிப்பது என்கிற அவர்களின் தத்துவார்த்த கருத்துருக்களின் இன்னொரு அடிப்படை மூலக்கூறுடன் பிரிக்கவியலாதபடி பிணைந்துள்ளது.-

அப்படியானால், பின் நவீனத்துவம் என்றால் என்ன? இப்போக்கின் முக்கியமான காவலராக கல்வியாளர் பேராசிரியர் கீத் ஜென்கின்ஸ் எழுதியுள்ள ஒரு பந்தியை ஒரு விளக்கமாக மேற்கோளிட அனுமதியுங்கள்:

"இன்று நாம் பின்நவீனத்துவத்தின் பொதுச் சூழலில் வாழ்கிறோம். நமக்கு இந்த விசயத்தில் வேறு தேர்ந்தெடுப்பு கிடையாது. ஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது நாம் ஏற்பதற்கு தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நிலைப்பாடோ அல்லது 'கருத்தியலோ' அல்ல; பின்நவீனத்துவம் என்பது துல்லியமாக நம்முடைய சூழ்நிலையாகும்: அதாவது நம்முடைய கதியாகும். இந்த நிலைமையானது பொதுத் தோல்வியால் ஏற்படுத்தப்பட்டது என்று வாதிடலாம் - இருபதாம் நூற்றாண்டின் தூசி அடங்கத் தொடங்கி விட்டதால், இந்த பொதுத் தோல்வியை நவீனத்துவம் என்று நாம் அழைக்கும் சமூக வாழ்வின் அந்த பரிசோதனையில் இருந்து நாம் மிகத் தெளிவாக எடுக்க முடியும். அதன் சொந்த வார்த்தை பதங்களால் அளவிடப்பட்டவாறு, ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டைச்சுற்றி அதிலிருந்து, பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றைப் பிரயோகிப்பதன் மூலம், அவர்களின் குடிமகன்களை / குடிமக்களை அதிகரித்த அளவில் தாராளமாய் விடுதலை செய்வதற்காக சட்டமியற்றும், சமூக உருவாக்கங்களுக்குள்ளே தனிநபர் மற்றும் சமூக நலன்புரி வாழ்க்கையின் மட்டத்தை கொண்டுவர எடுத்த முயற்சியின் பொது தோல்வியாகும் இது. 'மனித உரிமை சமுதாயங்களாக' ஆவதற்கு சிறந்த முறையில் அவர்கள் முயற்சி செய்தார்கள் என்று வர்ணித்து கூறலாம்.

"நவீன பரிசோதனையை தாங்கிநிற்கும் கட்டுமானம் என்று கூறப்படும் வகையில் எந்த 'உண்மையான' அஸ்திவாரங்களும் இப்பொழுதும் இல்லை, இதற்குமுன் இருந்ததுமில்லை."

பின் நவீனத்துவவாதிகளின் மொழியிலேயே இந்த மேற்கோள் பகுதியைக் "கட்டுடைப்பதற்கு" என்னை அனுமதியுங்கள். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, 18ம் நூற்றாண்டு வரை பின்னோக்கி நீடிக்கின்ற காலத்தில், அறிவொளியின் மெய்யியல் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றினால் உந்தப்பட்ட சிலர், மனித முழுமை அடைவதின் சாத்தியத்தில், முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்த சிலர்; வரலாற்றின் புறநிலை விதிகளுக்குள் விஞ்ஞான உள்ளார்ந்த பார்வை என்று தாங்கள் நம்பியவற்றின் அடிப்படையில் சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுதற்கு விழைந்தனர்.

அத்தகைய மனிதர்கள், தனி மனிதர்களுடைய அகநிலை நனவில் இருந்து முற்றிலும் சுயாதீனமாய் இருக்கும் சமூக பொருளாதார சக்திகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு விதி ஆளுமைசெய்யும் நிகழ்முறை என்ற வகையில் வரலாற்றில் (தடித்த எழுத்துக்களில் வ) நம்பிக்கை கொண்டனர், ஆனால் அவ்விதிகளை மனிதர்கள் கண்டுபிடிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும், மனித முன்னேற்றத்தின் நலன்களுக்காக அவற்றின் மீது செயல்பட முடியும் என்றும் நம்பினர்.

ஆனால், அத்தகைய கருத்துருக்கள் யாவும் கள்ளம் கபடமற்ற பிரமைகளாக காட்டப்பட்டன என்று பின்நவீனத்துவ வாதிகள் அறிவித்தனர். இப்பொழுது எங்களுக்கு நன்றாகவே தெரியும்; வரலாறு ஒன்றும் (பெரிய முதலெழுத்துடன் வ) இல்லை. சொல்லப் போனால், வெறும் ஒரு புறநிலை நிகழ்முறையாக மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய (சிறிய எழுத்துடன் வ தொடங்கும்) வரலாறு கூட கிடையாது. நோக்கங்கள் என்னவாக இருக்கட்டும், அகநிலை ரீதியாக தீர்மானிக்கப்படும் பயனுடைய நோக்கம் ஏதாவதொன்றை அடைவதற்கு, மாறுகின்ற சொல்லகராதிகளுடனான, வெறுமனே அகநிலை "விளக்க உரைகளும்", அல்லது "சொல்லாடல்களாக" இருக்கின்றன.

இத்தகைய நிலைப்பாட்டில் இருந்து, "வரலாற்றில் இருந்து" "படிப்பினைகளை" பெறுதல் என்ற கருத்தே முறைமையற்ற திட்டமாகும். உண்மையில் படிப்பதற்கு மற்றும் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லை. ஜென்கின்ஸ் வலியுறுத்துகின்றவாறு, இறுதியில் சுயமேற்கோள் காட்டும் உரையாடலின் (வாய்ஜால) அந்தஸ்திற்கு அப்பால் எமது நம்பிக்கைகளுக்கான ஒரு முறைமையான மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக்குரிய அல்லது மனித அறிவை பற்றிய இயலுக்குரிய அல்லது ஒழுக்கநெறி சார்ந்த அடிப்படைகள் இருக்காத சமூக உருவாக்கங்களுக்கிடையே நாம் வாழ்கிறோம் என்பதை நாம் இப்பொழுதுதான் புரிந்துகொண்டிருக்கிறோம்...... அதன் விளைவாக, ஏதோ ஒருவகை சாரத்தை வெளிப்படுத்தும் கடந்த காலம் என்ற அத்தகைய ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப் போவதும் இல்லை என்பதை இன்று நாம் அறிகிறோம்."

சாதாரணமாகப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் கூறவேண்டும் என்றால், ஜென்கின்ஸ் கூறவிரும்புவதாவது: 1) இருக்கக்கூடிய அல்லது கண்டிபிடிக்கப்பட இருக்கின்ற புறநிலை விதிகளின் அடிப்படையில் கடந்த கால அல்லது தற்கால மனித சமுதாயங்களின் செயல்பாடு அறியப்பட முடியாதது; மற்றும் 2) மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தை பற்றி என்ன நினைப்பார்கள், கூறுவார்கள், அல்லது செய்வார்கள் என்பதற்கு ஆதாரமாய் இருக்கும் புறநிலை அடித்தளங்கள் எதுவும் கிடையாது. தங்களை வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள், கடந்த காலத்தை பற்றி ஒருவிதமான அல்லது இன்னொரு விதமான ஏதாவதொரு பொருள் விளக்கத்தை முன்வைக்கலாம்; ஆனால் ஒரு விளக்கத்திற்கு பதிலாக மற்றோர் விளக்கத்தை முன்வைப்பதன் மூலம் அது முன்னால் எழுதப்பட்டதைவிட ஏதோ புறநிலைரீதியாக உண்மையை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கில்லை; ஏனெனில் புறநிலை உண்மை என்று ஏதும் நெருக்கமாக அடைவதற்கு இல்லை. வரலாற்று ஆசிரியர் அகநிலையாக மனத்தால் உணரும் பயன்களுக்கு பொருந்தும் காரணங்களுக்காக, அதுவெறுமனே கடந்த காலத்தை பற்றி ஒருவிதமாக கூறுவதை இன்னொரு விதமாகக் கூறுவதைக் கொண்டு இடம்பெயர்ப்பது தான்.

இத்தகைய பார்வையை முன்மொழிபவர்கள் நவீனத்துவத்தின் இறப்பை வலியுறுத்திப் பேசுகின்றனர், ஆனால் அவர்களது முடிவுரைகள் மூலாதாரமாய்க் கொண்டிருக்கும் சிக்கலான ஒட்டுமொத்த வரலாற்று மற்றும் அரசியல் மதிப்பீடுகளை ஆராய மறுக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள் தான், அவை அவர்களுடைய தத்துவார்த்த கருத்துக்களின் பின்புலமாய் அமைந்திருப்பதோடு அவற்றில் தங்களது வெளிப்பாட்டையும் காண்கின்றன. பின்நவீனத்துவத்தின் முன்னணி வாதிடுபவர்களில் ஒருவரான பேராசிரியர் ஹைடன் வைட், வெளிப்படையாகவே கூறினார்: "அது சமூக படிநிலைகளில் "மேலிருந்து வந்தாலும்" சரி, "கீழிருந்து வந்தாலும்" சரி, மற்றும் சமுதாயம், வரலாறு பற்றிய விஞ்ஞானங்களில் நுட்பம் உடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, அரசியல் 'தன்னியல்பை' புகழ்பவர்களால் வழிநடத்தப்பட்டாலும் சரி, இப்பொழுது நான் புரட்சிகளுக்கு எதிரானவன்."

எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு மெய்யியல் கருத்துருவின் முறைமையானது அதை முன்வைக்கும் தனிநபரின் அரசியலால் தானாகவே மறுக்கப்பட்டுவிடாது. ஆனால் பின்நவீனத்துவத்தின் மார்க்சிச விரோத, சோசலிச-விரோத திசைமுகமானது மிகவும் தெளிவாக உள¢ளது, அதன் தத்துவார்த்த கருத்துருக்களை அதன் அரசியல் முன்னோக்கில் இருந்து சிக்கலகற்றி பிரித்தெடுப்பது அனேகமாக சாத்தியமின்றி இருக்கும் மட்டத்திற்கு"

இந்த ஆய்வை நீங்கள் தாக்கத் தொடங்கி பதிலாக எழுதுவதாவது:

அறிவொளி மரபினை பாதுகாப்பவர் யாராக இருப்பினும் முற்போக்கானவர் மற்றும் அதற்கு எதிராக யாராக இருப்பினும் பிற்போக்காளர். ஆனால் இந்த கொச்சையான கிளைப்பிரிப்பானது (dichotomy) முக்கியமான உண்மையை மறைக்கிறது, அதாவது பகுத்தறிவிற்கான யுத்தத்தில் மார்க்சிசம் இரண்டு முனைகளில் போராட வேண்டி உள்ளது- பகுத்தறிவின்மைக்கு எதிராக (அது மதத்தின் மர்மமான வடிவத்தில் இருந்தாலும் சரி அல்லது நீட்சே-ஹெய்டெகரின் வழியிலான சூன்யவாதம் மற்றும் அதன் பின்நவீனத்துவ தருவிப்புக்கள் என்றாலும் சரி) ஆனால் வர்க்க ஆதிக்கத்தை (குறிப்பாக நடைமுறைவாதம் மற்றும் அனுபவவாதத்தின் வடிவில்) நியாயப்படுத்துகின்ற முதலாளித்துவ சமூகத்தின் மிகவும் அதிகமாக பரந்து ஊடுருவும் ''காரணத்திற்கு '' எதிராகவும் கூட பிந்தியதன் அர்த்தத்தில் மார்க்சிசமானது அறிவொளி இயக்கத்தை ஒரு இயங்கியல் மறுப்பு செய்வதை பிரதிநிதித்துவம் செய்கிறது. அறிவொளி இயக்க மெய்யியலாளர்களின் ''பகுத்தறிவை" மார்க்ஸ் அகற்றிவிட்டு வர்க்க ஒடுக்கு முறையின் ஒரு புதிய வடிவத்திற்கான நியாயங்களை திரைவிலக்கிக்காட்டினார்.

இது ஒரு முழுமையான குழப்பம். அனைத்துக்கும் முதலாக ''யாராக'' என்ற மறுபெயரை நீங்கள் பயன்படுத்துவது நீங்கள் குறிப்பிடும் போக்குகளை தெளிவாக அடையாளம் காண்பதிலிருந்து வாசகரை தடுப்பதற்கு போதுமான அளவு மங்கலாக உள்ளது. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அந்த பத்தியில் பின் நவீனத்துவத்தின் அடிப்படை கருத்துருவை நான் தாக்கினேன், அது அறிவொளி காலத்திற்கு பின்னோக்கிச்சென்று 20ம் நூற்றாண்டின் பெரும் பகுதிக்கு ஊடாக நீடித்து வளர்ந்த மனித முன்னேற்றத்தின் சாத்தியத்திற்கான நம்பிக்கையை அடிப்படையாக்க்கொண்ட ”நவீனத்துவ’' திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கூறுகிறது. எனது சொற்பொழிவில் இந்த பத்திக்கு உங்களது பதில் நான் விமர்சிக்கும் நிலைப்பாடுகளுடன் உங்களை நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள் என்பதைத்தான் பிரதானமாக காட்டுகிறது. எவ்வாறாயினும் அறிவொளி இயக்கத்தின் பகுத்தறிவு மரபு மற்றும் மனித முன்னேற்றத்தில் சாத்தியத்திற்கான நம்பிக்கையைப் பாதுகாப்பவர்களில் யாரை நீங்கள் பிற்போக்காளர் என்றும் அதன் எதிராளிகளில் யாரை நீங்கள் முற்போக்காளர் என்றும் கருதுவதாக சொல்ல தவறிவிட்டீர்கள் அத்துடன் பெரும் மார்க்சிஸ்டுகளின் எந்த படைப்புகளில் அறிவொளி இயக்க சிந்தனையாளர்கள் கண்டனம் செய்யப்படுவதை அல்லது அவர்களது எதிராளிகள் பாராட்டப்படுவதை ஒருவர் காண முடியும் என்று நான் கேட்கலாமா?

அறிவொளி சிந்தனையாளர்களின் பகுத்தறிவு எளிதாக வர்க்க ஒடுக்குதலுக்கான நியாயங்களை வழங்கியது என்று பக்குவமற்ற வகையில் கூறும் விதமாக உங்கள் பத்தி அந்த சக்திவாய்ந்த தத்துவார்த்த போராட்டங்களை வகைப்படுத்தப்படாத மற்றும் வரலாறு அற்ற நிகழ்வுப்போக்கு ஒன்றினுள் கல்க்கிறது, அந்த போராட்டங்கள் 18ம் நூற்றாண்டின் மகத்தான முதலாளித்துவ புரட்சிகளுக்கான மற்றும் அப்படியான எழுச்சிகளிலிருந்து இறுதியாக தோன்றிய பூர்ஜூவா- முதலாளித்துவ சமுதாயங்களின் சமூக-பொருளாதார யதார்த்தத்திற்கான அறிவுஜூவி அத்திவாரங்களை போட்டது. அறிவொளி சிந்தனையாளர்களின் பகுத்தறிவானது வெறுமனே வர்க்க ஒடுக்குதல்களுக்கான நியாயக்களை வழங்கியது என்று கொச்சையாக உரைக்கும் வகையில், உங்களது பத்தி, 18 ஆம் நூற்றாண்டின் மகத்தான முதலாளித்துவ புரட்சிகள் மற்றும் அந்த எழுண்ணிகளில் இருந்து இறுதியாக எழுந்து பூர்சுவா-முதலாளித்துவ சமூகங்களின் சமூக-பொருளாதார யதார்த்தம் ஆகியவற்றுக்கான புத்திஜீவித்தன அஸ்திவாரங்களை இட்ட பலம் வாய்ந்த தத்துவார்த்த போராட்டங்களை ஒரு வகைப்படுத்தாத வரலாறல்லாத நிகழ்முறைக்குள்ளாக ஒன்றாக கலந்துவிடுகிறது. அறிவொளி கால சிந்தணையாளர்களின் வரலாற்றுரீதியாக பக்குவப்படுத்தப்பட்ட பிரமைகள் எதுவாக இருந்தாலும் எவ்வாறாக இருந்தாலும் – குறிப்பாக ''மூன்றாவது தூணை'' விடுதலை செய்வது மனித இனத்தை விடுதலை செய்வதை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது--அவர்களது தத்துவார்த்த வேலை இறுதியாக முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான சோசலிச தாக்குதலுக்கான அறிவுஜீவி மற்றும் (ஒரு குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருந்தாலும்) தார்மீக அடிப்படையையும் கூட வழங்கியது என்று ஒருவர் சேர்த்துக்கொள்ளலாம்.

17ம் மற்றும் 18ம் நூற்றாண்டின் புரட்சிகரமான சிந்தனையாளர்கள் செதுக்கிய ஆயுதங்கள் இறுதியாக 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிராக புதிய சோசலிச இயக்கத்தினாலும் தோன்றி வரும் தொழிலாள வர்க்கத்தினாலும் பயன்படுத்தப்படுவதாகிது. பிரஞ்சுப் புரட்சிக்கு பின்னர் முதலாளித்துவ வர்க்கம் பகுத்தறிவு பூர்வமான கொள்கைகளை காட்டிக்கொடுத்ததன் முதலாளித்துவ சமுதாயத்தை விமர்சிப்பதற்கு பெருமளவில் தத்துவார்த்த தூண்டுதலை வழங்கியது. மேலும் அறிவொளி மெய்யியலாளர்கள் ''ஒரு புதிய வடிவிலான வர்க்க ஒடுக்குமுறைக்கு நியாயங்களை ''வழங்கினார்கள் என்று நீங்கள் கூறுவது மோசமான ஒருதலைப்பட்சமாகவும் அடிப்படையில் தவறாகவும் உள்ளது. அறிவொளி சிந்தனையாளர்கள் கம்யூனிசம் தொடர்பான தத்துவங்களை முன்னெடுத்தார்கள் என்பதை நீங்கள் இலகுவாக புறக்கணிக்கிறீர்கள் மற்றும் அறிவொளியின் சடவாத மெய்யியலானது அதற்கு வரம்புகள் இருந்தபோதிலும் அவை சொத்து மற்றும் சமத்துவமின்மையை நிராகரிக்கும் திசையில் இருந்தது என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது.

பிரான்சின் 18ம் நூற்றாண்டு சடவாதம் பற்றி மார்க்ஸ் 'புனித‚ குடும்பத்தில்' சுட்டிக்காட்டியவாறாக;

”சடவாத்தை கற்பிப்பதில் இருந்து, மனிதனின் அசலான நற்குணம் மற்றும் சமமான இருப்பு மற்றும் அனுபவம், பழக்கவழக்கம், கல்வி ஆகியவற்றின் சர்வ சக்தி மற்றும் மனிதன் மீது சுற்று சூழலின் செல்வாக்கு, தொழில்துறையின் பெரும் மகத்துவம், மகிழ்ச்சியாக இருப்பதை நியாயப்படுத்தல் போன்றவற்றை கான்பதற்கு எந்தப் பெரிய ஊடுருவலும் அவசியமில்லை, சடவாதமானது கம்யூனிசம் மற்றும் சோசலிசத்துடன் எத்தனை அவசியமான வகையில் தொடர்புள்ளதாக உள்ளது. (மார்க்ஸ் ஏங்கல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 4 நியூயோர்க், 1975, பக்கம் 130).

நீங்கள் குறிப்பிடும் முதலாளித்துவ சமுதாயத்தின் ''பகுத்தறிவு'' அதை எதிர்த்து மார்க்சிஸ்டுகள் போராட வேண்டும் என்று நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள்-- அது குழப்பமானதாகவும் தவறாக வழி நடத்துவதாகவும் உள்ளது. முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று அபிவிருத்தி மற்றும் முதலாளித்துவ வர்க்க பகைமைகளின் வளர்ச்சி காலத்தின் போது முதலாளித்துவ வர்க்கமானது அதிகமாக அகநிலைவாத மற்றும் பகுத்தறிவற்ற மெய்யியல்களுக்கு சாதகமாக ''பகுத்தறிவை'' கைவிட மேலும் மேலும் விழைந்தது. 1848-49 களில் புரட்சிகளின் தோல்விக்கு பின்னர் ஹேகலின் மதிப்பின் உயரம் வீழ்ச்சி கண்டது மற்றும் அவர் ஸொபென்ஹவர் மற்றும் பின்னர் நீட்ஜேயினால் மெய்யியலின் மேம்பட்ட உருவங்களாக பிரதியீடு செய்யப்பட்டது, பகுத்தறிவை முதலாளித்துவம் மறுதலித்ததை பிரதிநிதித்துவம் செய்தது. இவ்வாறாக பெரும் மார்க்ஸிட்கள் எப்பொழுதுமே அறிவொளி பகுத்தறிவின் புரட்சிகரமான மரபை, பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி வந்துள்ளனர். இயற்கை மற்றும் சமூகத்தின் விதிகள் தொடர்பாக ஒரு அறிவியல் பூர்வமான உள்ளார்ந்த பார்வையின் அடிப்படையில் சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கு முடிவு கட்டுவதற்காக செயல்படக்கூடிய மனிதனின் புரிந்துகொள்ளும் திறனென்றே அந்த பதத்திற்கு புரிதல் கொள்ளப்பட்டது. இந்த மரபைத்தான் ட்ரொட்ஸக்கி மாஸ்கோ வழக்கு குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை கமிஷனுக்கு முன்பாக அவரது பெரும் உரையின் முடிவில் விண்ணப்பித்தார், அந்த கமிஷனுக்கு அமெரிக்க மெய்யியலாளர் ஜோன் டுவே தலைமை தாங்கினா:

மதிப்பிற்குரிய கமிஷனர்களே! வெற்றி தோல்விகளுக்குப் பஞ்சமில்லாத என் வாழ்க்கை அனுபவம், மனித குலத்தின் பிரகாசமான எதிர்காலத்தின் மீதான எனது நம்பிக்கையை சிதைக்கவில்லை என்பதோடு, மாறாக, அந்நம்பிக்கைக்கு ஒரு அழிக்கமுடியாத உறுதியை அளித்திருக்கிறது. பகுத்தறிவில், உண்மையில், மனித ஐக்கியத்தில் உள்ள இந்த நம்பிக்கையை நான் 18- வயதில் மாகாண ரஷ்ய பட்டினமான நிகோலைவில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்களுக்கு என்னுடன் எடுத்துச்சென்றேன் -இந்த நம்பிக்கையை நான் முழுமையாகவும், பூரணமாகவும் பேணிவைத்திருக்கிறேன். (லியோன் ட்ரொட்ஸ்கியின் வழக்கு (நியோர்க் 1969, பக்கம் 584 -85).

அறிவொளிக்கு எதிரான உங்களது முக்கிய குற்றம்குறை குறிப்புகளில் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பாரம்பரியம் அதன் மூலங்களின் தடயங்களை மார்க்சில் அல்ல, ஆனால் பிராங்பேர்ட் பள்ளியைச்சேர்ந்த விரக்தியடைந்த குட்டிமுதலாளித்துவ தத்துவாதிகளில்தான் காண்கிறது- குறிப்பாக மார்க்ஸ் ஹொர்கெயிமர் மற்றும் தியோடெர் அடோர்னா அவர்களின் அறிவொளியின் இயங்கியல் என்பதில் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில்தான். இந்த படைப்பில் 18ம் நூற்றாண்டின் அறிவொளி 20-ம் நூற்றாண்டின் அழிவுகளுக்கு பொறுப்பாளியாக்கப்பட்டது. மனித பகுத்தறிவு, விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றம் கூட பாசிசத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் காரணியாக பட்டியலிடப்பட்டது. அறிவொளியின் இயங்கியலில் உள்ள மைய வாதங்கள் கடந்த கோடையில் அன் ஆர்பரில் தோழர் பீட்டர் சுவாட்ஸினால் வழங்கப்பட்ட சொற்பொழிவில் சுருக்கிக்கூறப்பட்டது. உங்களது ஆவணம் அவரது ஆய்வு பற்றிய எதையும் குறிப்பிடவில்லை. ''இயங்கியல் மறுப்பு'' மற்றும் ''இயங்கியல் முறிவு'' போன்ற பதங்களை தூக்கி வீசுவதினால் அது அறிவொளி மீதான உங்கள் தாக்குதலுக்கு ஏற்புத்தன்மையையோ அல்லது அறிவாழத்தையோ கூடுதலாக சேர்க்கவில்லை. மாறாக, அது மார்க்சிசத்திற்கு பாதகமான கருத்துருக்களுக்கு சேவைசெய்யும் வகையில் போலியான ஹெகெலியன் சொற்றொடரை சுரண்டுவதற்கு நீங்கள் எப்படி தலைப்படுகிறீர்கள் என்பதை விவரிக்கிறது.

11. The origins of the campaign for "Utopia"

''கற்பனாவாத'' பிரச்சாரத்திற்கான மூலங்கள்

அனைத்துலகக் குழுவுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுப்பதற்கான தேவை என்னவென்றால் உங்களது போலி-கற்பனாவாத தொழில் முயற்சியை புரட்சிகர வேலைத்திட்டத்தின் ஒரு அடிப்படையான மூலபாகமாக நாங்கள் ஏற்க மறுப்பது ''சோசலிச வர்க்க நனவுக்கான'' போராட்டத்தின் மீது புறநிலைவாதத்தின் மரணத்தாக்கத்தின் விளைபொருள்'' என்று காட்டுவதாகும். அது மட்டுமல்ல நான் ''கற்பனாவாதத்தை கடுமையாக கண்டனம் செய்வது'' எடுத்துக்காட்டுவது என்னவென்றால், மார்க்சிசமானது தொடர்ந்து மனித காரணிகளை அலட்சியப்படுத்துகின்ற மற்றும் சோசலிச வர்க்க நனவுக்கான போராட்டத்தை இழிவுபடுத்துகின்ற பொய்யான மற்றும் ஆற்றல் குறைக்கும் சடவாதத்தால் (Reductive Materialism) தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றது என்பதாகும்.

இந்தப் புள்ளியில் நான் அனைத்துலகக் குழு மற்றும் எனது சொந்த தத்தவார்த்த மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை நீங்கள் மோசமாக தாக்குவதற்கு வழிவகுத்த பாதையை சுமாராக ஒரு பத்தாண்டுக்கு பின்னோக்கி நீடித்து மறுதேடல் செய்வது அவசியமாகும்.

நாம் வெவ்வேறு திசைவழிகளில் நகர்ந்து செல்கிறோம் என்பதற்கான முதலாவது முக்கியமான அறிகுறி 1998-ல் தோன்றியது. அப்போது நீங்கள் தோழர் பிரென்னர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு பாலியல் மற்றும் பால் அடையாளம் என்ற விஷயம்பற்றி ஒரு நீண்ட கட்டுரையை சமர்ப்பித்தீர்கள் அதனை வெளியிட வேண்டாமென்று நாங்கள் முடிவு செய்தோம். அந்தக் கட்டுரையானது பாலியல் நோக்கு நிலையில் உயிரியலின் முக்கியத்துவத்தை முழுமையாக மறுக்கவில்லை என்றாலும் அதை குறைத்துக்கூறியது. அது பாலியல் நோக்குநிலையில் உயிரியல் முக்கியத்துவத்தை மிகக் குறைத்து -முற்றிலுமாய் மறுத்திருக்கவில்லை என்றால்- பெரியளவிலான ஊகம் மற்றும் சந்தேகத்திற்கிடமான முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டிருந்ததாக எங்களுக்கு தோன்றியது. அந்தக் கட்டுரையானது பரிணாம உயிரியல் அல்லது மானிட அறிவியல் (Anthropology) பற்றிய ஒரு முக்கியமான ஆய்வு பற்றி தெரிந்திருப்பதற்கான அறிகுறி எதுவுமே கிடையாது அந்தக் கட்டுரையை மீளாய்வு செய்த டேவிட் வோல்ஷ் தனது சில அக்கறைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதற்கு நீங்கள் ஜூன்-28-1998- தேதியிட்ட ஒரு நீளமான பதிலை அனுப்பினீர்கள், அது உங்களது கட்டுரை தொடர்பான எங்களது எதிர்ப்புக்களை தணிக்கவியலாமல் போனது என்பது மட்டுமல்ல, ஆனால் உங்களது புதிய வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரல் பற்றி கூட எங்களது சொந்த சிந்தனையிலும் கவலைகளை எழுப்பியது.

உங்களது கடிதம் 'ஒரு மாற்று பால் தத்துவத்தை" அவசரமாக விருத்திசெய்ய வேண்டியதன் அவசியம் பற்றி எங்களுக்கு அறிவித்தது, அதாவது ''இது குடும்பத்தை மறுசீரமைப்பதற்கான எந்த சோசலிச திட்டத்திலும் ஒரு ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும்' அதாவது ''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு உள்ள பணயங்கள் கணிசமானவை'' மற்றும் ''இந்த மாதிரியான பிரச்சனையில் எமது நிலைப்பாடு புரட்சியை செய்வதற்கு ஆதரவை வென்றெடுக்கும் நமது முயற்சிக்கு உதவி செய்யலாம்- அல்லது தடையாகவும் இருக்கலாம்.

உங்கள் கடிதம் கிடைக்கும் வரையில் ''குடும்பத்தை மறுசீரமைப்பதற்கான சோசலிசத் திட்டம் ''ஒன்றுக்கான அவசர தேவை ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எங்களில் யாருக்குமே தோன்றவில்லை, பால் பற்றிய ஒரு புதிய கருத்துரு அல்லது ''பாலியல் பற்றிய ஒரு மார்க்சிச தத்துவம் என்பதெல்லாம் அதற்கும் பின்னால். அதற்கும் மேலாக தோழர் பிரென்னரின் பாணி- சுய நனவுடனும், பக்குவமின்மையுடனும் வாசகரை அதிர்ச்சி அடையச்செய்யும் நோக்கத்துடன், எழுதப்பட்டிருப்பது போல் தோன்றியதோடு அது இலக்கிய அழகியலில் தனித்துவமான பற்றாக்குறையுடன் நின்றது.[13] ஆனால் எல்லாவற்றையும் விட மோசமானது என்னவென்றால் அந்தக் கடிதம் தன் சொந்த பகட்டான மற்றும் கொந்தளிக்கின்ற வாதங்களை உறுதி செய்வதற்கு அறிவியல் உரை ஒன்றிலிருந்தான ஒற்றை மேற்கோளைக் கூட வழங்கவில்லை.

பால் தொடர்பான உங்களது கட்டுரையை நாங்கள் வெளியிட மறுத்தது தொடர்பாக நீங்கள் அதிருப்தி அடைந்தீர்கள் என்று உத்தியோகபூர்வமற்ற முறையில் நாங்கள் கேள்விப்பட்டாலும் கூட, புதிய வேறுபாடுகள் 2002-வரையில் தோன்றவில்லை. மே 20,2002-ல் உலக சோசலிச வலைத் தளமானது ஆஸ்திரேலியாவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான தோழர் நிக் பீம்ஸ், சோசலிசத்தின் கீழ் வாழ்க்கையின் தன்மை பற்றி ஒரு வாசகர் எழுப்பிய கேள்விகளுக்கு வழங்கிய பதில் கடிதத்தை வெளியிட்டது. அந்த கேள்விகள் ஒரு நீண்ட தொடரான விஷயங்களை தொட்டது, அது பொருளாதார செயல்திறன் மற்றும் முழுமையான வேலைவாய்ப்புக்குள்ள உறவுமுறை, தனிநபர் நோக்கம் மற்றும் முன்முயற்சி பற்றிய பிரச்சினை, சிறு வியாபாரத்தின் எதிர்காலம், அரசாங்க முடிவெடுக்கும் வடிவங்கள், ஒரு எதிர்கால உலகத் தலைநகரின் திட்டவட்டமான இருப்பிடம், சோசலிச சமூகத்தின் தார்மீக அடிப்படை, மற்றும் குடும்பம், மனித உரிமைகள், மற்றும் சுற்று சூழலியல் மீது சோசலிசத்தின் தாக்கம் இவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த கேள்விகள் சோசலிசத்திற்கு அப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்ட மக்களுடன் அரசியல் கலந்துரையாடல்களில் எழுகின்றவற்றின் எடுத்துக்காட்டாகும். அவ்வாறான கேள்விகள் நிச்சயமாக ஒரு பொறுப்பான பதிலை வேண்டிநிற்கிறது அதே சமயம் சோசலிசமானது முன்கூட்டி தயாரிக்கப்பட்ட தொடர்ச்சியான பல பரிந்துரைகளை கொண்டிருப்பதல்ல என்பதை விளக்குவது தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவுப்படுத்தலின் நலன்களுக்கு முக்கியமானது என்பதையும் மார்க்சிஸ்டுகள் புரிந்து கொள்கிறார்கள். சோசலிசத்தின் கீழ் எதிர்காலம் பற்றி ஊகிக்க எல்லா நிலைமைகளின் கீழும் நாம் மறுக்கின்றோம் என்பதல்ல. ஆனால் வரலாற்று சடவாதிகளாக அவ்வாறான ஊகத்தின் வரம்புகளை நாம் புரிந்து கொள்கிறோம். எவ்வாறாயினும் இத்தகைய ஊகம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் உண்மையான முரண்பாடுகள் மற்றும் அது தோற்றுவிக்கும் சமூக உறவுகள் பற்றிய ஒரு ஆழமான ஆய்வை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அதற்கும் மேலாக ஒரு சோசலிச சமுதாயத்தின் அடிப்படையான அம்சங்கள் முன்னதாகவே தலைவர்களினால் வகுக்கப்பட்ட ஒரு திட்டப்படியான வெளிப்பாடு என்பதை விட தொழிலாள வர்க்கத்தின் சுய விடுதலையின் ஒரு வெளிப்பாடாக தோன்றுவதாகும்.

எதிர்கால சோசலிச சமூகம் பற்றிய ஒரு காட்சியை வரையும்படி கேட்டதற்கு இவ்வாறான வழிகளில் தான் பீம்ஸ் வாதிடுகிறார். (http://www.wsws.org/articles/2002/may2002/corr-m30.shtml). ''சோசலிச சமுதாயத்தின் அபிவிருத்தியானது ஒரு தனிநபர், ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு அரசாங்க அதிகாரம் இவற்றினால் வகுக்கப்பட்ட ஒரு தொடரான பரிந்துரைகள் மற்றும் விதிகளின்படி நடக்காது'' என்று அவர் எழுதினார். "பதிலாக அது சமூக உறுப்பினர்களின் செயல்களின் அடிப்படையில் வளர்ச்சி அடையும், அவர்கள் வரலாற்றில் முதல் தடவையாக அவர்களுக்கு மேலாக நிற்கும் சுதந்திர சந்தை அல்லது ஒரு அதிகாரத்துவ நிர்வாகம் இவற்றின் ஆதிக்கம் மற்றும் பரிந்துரைகளில் இருந்து சுயாதீனப்பட்டு, தங்களது சொந்த சமூக அமைப்பை அவர்களது தினசரி வாழ்க்கைகளின் ஒரு பகுதியாக நெறிப்படுத்துவார்கள்''. நிஜமான மனித விடுதலைக்கு பாடுபடும் ஒரு சமூகத்திற்கான சடரீதியான முன்னிபந்தனை என்னவென்றால் "மனித இனத்தின் மிகப்பெரும்பகுதியினர் ஒரு நாளின் மிக அதிகமான பகுதியை தம்மை பராமரிப்பதற்கான வளங்கள் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் மட்டும் செலவிடவேண்டியதில்லை என்ற மட்டத்துக்கு உழைப்பின் சமூக உற்பத்தி திறனை அபிவிருத்தி செய்வதாகும்." மனித நாகரீகத்தை முன்னேற்றுவதில் முதலாளித்தவத்தின் பெரும் பங்களிப்பு என்னவென்றால் அது உற்பத்தி சக்திகளையும் உழைப்பின் உற்பத்தித்திறனையும் தொடர்ந்து அபிவிருத்தி செய்ததன் மூலமாக அது அத்தகையதொரு உண்மையான மனித விடுதலைக்கு அவசியமான சடத்துவ அஸ்திவாரங்களை உருவாக்கியிருக்கிறது." அதற்கு பின்னர் பீம்ஸ், எப்படி இப்படியான சடரீதியான அடித்தளங்களின் அடிப்படையில் ஒரு சோசலிச சமூகமானது, கடித தொடர்பாளரின் கடிதத்தில் எழுப்பப்பட்ட சில பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை கையாள்வது பற்றி சுருக்கமாக காட்டியுள்ளார். ஆனால் ஒழுக்க நெறி (Morality) பற்றிய விஷயம் தொடர்பாக பீம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டார், ''மார்க்சிசம் எப்போதுமே ஏதோ சில ஒழுக்க வறட்டுவாதத்தை திணிக்கும் முயற்சியை நிராகரித்து வந்திருக்கிறது, சமூகமானது எப்போதுமே வர்க்கங்களாக பிளவுண்டு இருக்கும்வரையில் ஒழுக்கநெறி ஒரு வர்க்கப் பிரச்சனையாகும். ஒழுக்க மதிப்பீடுகள் ஆளும் தட்டின் நலன்களை நியாயப்படுத்துகிறது அல்லது ஒடுக்கப்படும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. வர்க்க சமூகம் இல்லாதுபோகும்போது ஒரு புதிய ஒழுக்கநெறி வளர்ச்சி அடையும்." இந்த பதில் மார்க்சிசம் மற்றும் ஒழுக்கநெறி பற்றிய விஷயத்தில் இறுதியான வார்த்தை என்பதான நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படை. எவ்வாறாயினும் அது ஒரு வாசகரின் கேள்விகளுக்கு பதிலாக எழுதப்பட்ட ஒரு சுருக்கமான கடிதம் என்ற அளவில் போதுமானதும் சரியானதும் ஆகும். அதே போல் மிகப்பெருமளவில் சிக்கல் கொண்ட ஒரு விஷயமாக இருக்கும் குடும்பம் பற்றிய விஷயத்தில் நிக் பின்வருமாறு சொல்வதுடன், சரியாக, தன்னை மட்டுப்படுத்திக்கொண்டார்: அதாவது ''சோசலிச சமூகத்தில், எழுதப்பட்ட பரிந்துரைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மக்கள் அர்த்தமுடையது என்று காணும் உறவுமுறைகளுக்குள் சுதந்திரமாக நுழைவதற்கான சடரீதியான சாதனங்களை கொண்டிருக்கும்''

தோழர் பிரென்னர், நீங்கள் அதற்குப் பின்னர் ஜூலை 24,2002 தேதியிட்ட ஒரு கடிதத்தை எழுதினீர்கள் அதில் வாசகரின் கேள்விகளுக்கு பீம்ஸ் பதிலளித்த விதத்துடன் உங்கள் பலமான உடன்பாடின்மையை தெரிவித்தீர்கள். ''பீம்ஸின் பதிலில் இருந்து சமகாலத்திய மார்க்சிசத்தின் கண்ணோட்டத்தில் கற்பனாவாதம் எங்கே இருக்கிறது என்பதை உணர்வது சாத்தியம் அற்றதாக உள்ளது'' என்று நீங்கள் எழுதினீர்கள். இந்தக்கேள்விக்கு சுருக்கமான பதில் -அது நீங்கள் கேட்க விரும்பாத ஒன்றாக இருந்தாலும் கூட- என்னவென்றால் முதலாளித்துவத்தின் சமூக- பொருளாதார அடித்தளங்கள் மற்றும் வரலாற்று அபிவிருத்தியின் விதிகள் பற்றிய ஒரு ஆய்வில் தன்னை கொண்டுள்ள ஒரு பொறுப்பான புரட்சிகர வேலைத்திட்டத்தில் கற்பனாவாதம் திட்டவட்டமாக எங்கே இருக்கவேண்டுமோ அங்கேதான் இருக்கிறது: அதாவது அது ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்தின் பகுதி அல்ல. சற்று பின்னர் இந்த விஷயம் பற்றி நாங்கள் பலமாக கூறுவோம்; ஆனால் முதலில் நாங்கள் உங்கள் கடிதத்திற்கு திரும்ப வேண்டும். வாசகருக்கு பொருத்தமான முறையில் பீம்ஸ் பதிலளிக்க தவறிவிட்டார் என்று எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் பின்வருமாறு பிரகடனம் செய்தீர்கள்: ''அவரது (வாசகரின்) அனைத்து கேள்விகளும் சாராம்சத்தில் ஒரே கேள்விதான்: சோசலிஸ்டுக்கள் தாங்கள் சமூகத்தை நடத்தினால் என்ன செய்வார்கள்? நிச்சயமாக ஒரு புரட்சிக்கு அழைப்புவிடும் ஒரு இயக்கமானது அந்த கேள்விக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு பதிலை கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதன் அர்த்தம் ஒரு பரந்த முழு எல்லை கொண்ட(Gamut) சமூக பிரச்சனைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் இந்த புரட்சிகர வேலைத்திட்டமானது உருவாக்கும் என்று கருதப்படும் சமூகத்தின் தன்மை பற்றிய ஒரு தெளிவான பார்வை ஆகியவை. அப்படி இல்லையென்றால் புரட்சிக்கான அழைப்பு ஏதோ பொறுப்பற்றதாக இருக்க வேண்டும்.''

நான்காம் அகிலமும் அதன் பகுதிகளும் ஒரு வேலைத்திட்டம் இல்லாமல் இருக்கிறது என்ற கருத்து, ''ஒரு பரந்த முழு எல்லை கொண்ட சமூக பிரச்சனைகள் தொடர்பாக'' நாங்கள் கொள்கைகள் அற்று இருக்கிறோம், மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்றீடாக நாங்கள் எந்த வகையான சமூகத்தை முன்வைக்கிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இல்லாமல் நமது இயக்கம் புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறது என்றெல்லாம் கூறுவதானது முற்றுமுழுதாக முகாந்தரமற்றது. வேலைத்திட்ட அறிக்கைகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதை போன்று பரந்த திறம்பட்டதாக இருக்கும் சாதனைபடைத்த கட்சி எதுவுமே கிடையாது. நா.அ.அ.குழு ஒரு வேலைத்திட்டம் இன்றி இருக்கிறது என்று குற்றம் சாட்டும்போது, நீங்கள் உண்மையிலேயே அர்த்தப்படுத்தியது என்னவென்றால் வேலைத்திட்டம் பற்றிய மார்க்சிச கருத்துரு மற்றும் தொழிலாள வர்க்க ஆட்சிக்கான போராட்டத்துடன் அதற்குள்ள உறவுமுறை உங்களின் கருத்துருவுடன் முரண்படுகிறது. புரட்சிக்கு-பிந்தைய குடும்பத்தின் பொருத்தமான வடிவம் மற்றும் கம்யூனிசத்தின் கீழ் பாலியலின் தன்மை போன்ற ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் எல்லைகளுக்கு நன்றாக வெளியே அமைகின்ற விஷயங்கள் (Subjects) மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புரட்சிகர இயக்கமானது ''சோசலிச'' சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டுமென்று நீங்கள் நம்புகிறீர்கள். நாம் அதை பார்ப்போம். முதலாளித்துவ சமூகத்தின் புறநிலையான முரண்பாடுகளில் அதன் உள்ளடக்கம் வேரூன்றி இருக்கும், மற்றும் முதலாளித்துவ ஒடுக்குதல், சுரண்டல், மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான அதன் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக- பொருளாதார நலன்களை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை முறைப்படுத்திக் கூறுவதில் நீங்கள், தோழர் பிரென்னர் குறிப்பான அக்கறை கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, உங்கள் கடிதத்தில் மேற்கோள்காட்டி கூறுவதாயின் நீங்கள் வேலைத்திட்டத்தை, ''ஒரு சோசலிச கனவு, அதில் சோசலிசமும் ஒரு ஆனந்தமான வாழ்க்கையும் பல லட்சக்கணக்கான மக்களின் சிந்தனையில் ஒன்று சேர்ந்ததாக மாறிவிட்டது'' என்று கருதுகிறீர்கள். இதுதான் கற்பனாவாத்திற்கு புத்துயிரூட்டவேண்டுமென்று உங்கள் அழைப்பின் சாராம்சமான அத்திவாரத்தை கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 29,2002 ல் பிரென்னரின் முறையீட்டிற்கு பீம்ஸ் பதிலளித்த போது அவர் ஒரு முக்கியமான விஷயத்தில் குவியச்செய்தார்: ''நான் சொல்கின்ற விஷயம் மற்றும் நீங்களும் விடாப்படியாக எதிர்ப்பு காட்டும் விஷயம் என்னவென்றால் சோசலிச சமூகம் என்பது சோசலிஸ்டுகளினால் நடத்தப்படும் ஒன்றல்ல. மாறாக, மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாள வர்க்கமானது வரலாற்றில் முதன் முறையாக பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் எடுத்து அமைகின்ற ஒரு சமூக வடிவம். அங்கே ஒரு மிக முக்கியமான கருத்துரு இருக்கிறது: உழைப்பின் விடுதலையானது சில நிர்வாகத்தினால் கையளிக்கப்படும் ஒரு தொடரான உத்தரவுகளினால் வகுக்கப்படக் கூடாது மாறாக மக்களால் தாங்களாகவே வகுத்துக்கொள்ளப்படுவதாய் அமைய வேண்டும்''.

நிக் பீம்ஸிடமிருந்து வந்த இந்த கடிதத்திற்கு பதிலாக நீங்கள் கற்பனாவாதத்தில் உங்கள் அறிக்கையை தயாரித்தீர்கள். இந்த ஆவணத்தின் தேவை இரண்டு மடிப்பைக்கொண்டது என்று நீங்கள் (தோழர் பிரென்னர்) எங்களுக்கு அறிவித்துள்ளீர்கள்: முதலாவது மார்சிசத்திற்கும் கற்பனாவாதத்திற்கும் இடையிலுள்ள உறவுமுறை பற்றி ''ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தப்படும்'' கருத்துக்களை சரிசெய்வது; மற்றும் இரண்டாவதாக ''அறிவியலுக்கும் கற்பனாவாதத்திற்கும் இடையிலுள்ள பதட்டம்", மார்க்சிச இயக்கத்தினுள் "பின்னயதை ஒரு நிஜமான தடைசெய்யப்பட்ட பொருளாக மாற்றியுள்ளது'', இதை ஆய்வு செய்வதற்காகவாகும். ''இப்படியான அனைத்து விஷயங்கள் பற்றிய ஒரு திட்டவட்டமான கணக்கெடுப்புக்கு ஒரு புத்தக நீளமுள்ள கலந்துரையாடல் தேவைப்படும்'' என்று எங்களை எச்சரித்த பின்னர் இப்படியான விஷயங்கள் தொடர்பான உங்கள் அணுகுமுறையை வெறும் 27,393 சொற்களுக்குள் நீங்கள் மட்டுப்படுத்தி விட்டீர்கள். இது ''தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச கலாச்சாரத்தை மறுபிறப்பு செய்வதற்கு கற்பனாவாத்திற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை செலுத்துவது முக்கியமானது என்பதற்கு இது போதுமானது'' என்று எங்களுக்கு நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள்.

12. Marx, Engels and utopianism
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் கற்பனாவாதம்.

நாம் ஏற்கனவே குறித்தவாறு, நீங்கள், பீம்ஸின் கற்பனாவாதம் பற்றிய ''ஆபத்தாக வழிநடத்தப்பட்ட'' கருத்துக்கள் ''மார்க்சிச இயக்கத்தினுள் நிலவுகின்ற (மற்றும் நீண்டகாலமாக இருந்துவருகின்ற) அபிப்பிராயத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது''.... என்று கூறுகிறீர்கள். அவரது தவறுகள் அதற்கும் மேலாக ''கற்பனாவாதத்தை ஏறக்குறைய தடை செய்யப்பட்ட ஒன்றாய் மாற்றி விட்டிருக்கும், விஞ்ஞானத்திற்கும் கற்பனாவாதத்திற்கும் இடையிலுள்ள பதட்டத்திலிருந்து" எழுகின்றது என்று நீங்கள் தெரிவிக்கிறீர்கள். 19-ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இரண்டாம் அகிலத்தின் காலத்திற்கு திரும்பி பார்க்கையில், மார்க்சும், ஏங்கெல்சும் தமது சொந்த புரட்சி- எதிர்ப்பு சீர்திருத்தவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக கற்பனாவாதத்திற்கு விரோதமாக இருந்ததாக தவறாக கூறி வந்த திருத்தல்வாதிகளின் ஒரு நீண்ட வரிசையில் பீம்ஸ் மிகப்புதியவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பிரான்சில் உள்நாட்டுப்போர் (அதனை 1871-ல் பாரிஸ் கம்யூனை பாதுகாத்து மார்க்ஸ் எழுதினார்) என்பதிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி, பிரென்னர் நீங்கள் வலியுறுத்துவதாவது:

'இந்த பத்தியில் முன்வைக்கப்பட்டவாறாக கற்பனாவாத்திற்கும் மார்க்சிசத்திற்கும் இடையிலான உறவுமுறையானது வழக்கமாக மார்க்சிஸ்டுகளினால் அந்த உறவுமுறை முன்வைக்கப்படும் விதத்திலிருந்து தனித்து வேறுபட்டிருக்கிறது. பின்பு கூறியதில் நான் அர்த்தப்படுத்துவது என்னவென்றால் சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக மார்க்சிசம் ஆக்கிய பின்னர் கற்பனாவாதம் ஒவ்வாததாகிவிட்டது. இந்த பார்வையை அடிப்படையாக கொண்டிருக்கும் முதன்மையான புத்தகம் பின்வருமாறு: ஏங்கெல்சின் சோசலிசம்: கற்பனாவாதமும் அறிவியலும், மற்றும் அங்கேயும் ஏனைய இடங்களைப் போலவே அவரும் மார்க்சும் கற்பனாவாத சோசலிசத்தை ஒரு மிக ஆழமான விமர்சனத்துக்கு உள்படுத்தினார்கள் என்பதில் கேள்விக்கிடமில்லை; அது ஒரு விஞ்ஞான சோசலிசம் பற்றிய முழுமையான திட்டத்திற்கு முக்கியமானது. ஆனால் அந்த விமர்சனமானது, மார்க்சிசத்தின் தோற்றம், ஹேகலின் மெய்யியல் அல்லது ஸ்மித் மற்றும் ரிக்கார்டோவின் அரசியல் பொருளாதாரத்தை ஒவ்வாததாக ஆக்கியதைக் காட்டிலும் அதிகமாக கற்பனாவாதத்தை ஒவ்வாததாக மாற்றி விடவில்லை.

''ஒவ்வாதது'' (Irrelevant) என்ற சொல்லை நீங்கள் அறிமுகம் செய்வது கலைச்சொல் ரீதியான ஒரு செப்படிவித்தை. பெரும் கற்பனாவாத சோசலிஸ்டுக்களின் கருத்துக்கள் ''ஒவ்வாததா'' என்பது பற்றியதல்ல, பிரச்சினை. நிக் பீம்ஸ் அப்படியான ஒரு கூற்றினை வெளியிடவில்லை. புத்திஜீவித வரலாற்றின் மாணவர்கள் கடந்தகால பெரும் சிந்தனையாளர்களின் படைப்புக்களுக்கு பிரயோகம் செய்யும் ஒரு சொல்லாக ''ஒவ்வாதது'' இல்லை. ஒவ்வொரு புதிய தலைமுறை சிந்தனையாளர்களும் அவர்களுக்கு முந்தியவர்களினால் போடப்பட்ட அத்ஸ்திவாரங்களின் மேல் தான் நிற்கிறார்கள். பிளாட்டோவிலிருந்து பிந்திய 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் தொடக்க பகுதி கற்பனாவாதிகள் வரையிலான சோசலிச சிந்தனையின் முழுமையான முந்திய வரலாற்றை விமர்சன கண்ணோட்டத்துடன் உள்கிரகிப்பது மார்க்சிசம் பற்றிய ஒரு ஆழமான புரிதலுக்கு அவசியமானதாக இருக்கிறது. எவ்வாறாயினும் கடந்த சிந்தனையாளர்களின் பங்களிப்பின் மதிப்பை சரியாக உணர்ந்து கொள்வது என்பது அவர்களது தத்துவங்களை அவை வரலாற்றுரீதியாக தரப்பட்டுள்ள வடிவத்தில் சமகாலத்திய நிலைமைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அர்த்தப்படாது.

நவீன விஞ்ஞான சோசலிசம், பெரும் கற்பனாவாதிகளான செயின்ட்-சிமோன், ஃபூரியர் மற்றும் ஓவென் இவர்களுக்கு புத்திஜீவித்தன ரீதியாக மிகப்பெருமளவில் அறிவார்ந்த கடனை செலுத்தவேண்டி உடன்பட்டுள்ளது என்று மார்க்சும், ஏங்கெல்சும் எண்ணற்ற தடவைகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் பங்களிப்புக்களின் வரலாற்று சூழ்நிலைக்குட்பட்ட தன்மை மற்றும் வரம்புகள் பற்றிக்கூட மிக நீண்ட அளவில் விளக்கியுள்ளனர். ஏங்கெல்ஸ் எழுதியவாறாக கற்பனாவாதிகள் ''கற்பனாவாதிகளாக இருந்தனர் என்றால் அதன் காரணம் முதலாளித்துவ உற்பத்தியானது இன்னமும் மிகக்குறைந்த அளவில் வளர்ச்சிக்கண்டிருந்த ஒரு நேரத்தில் அவர்கள் வேறெதுவுமாக இருந்திருக்க முடியாது. அவர்கள் ஒரு புதிய சமூகத்திற்கான ஆதாரப்பொருட்கூறுகளை அவர்களது சொந்த தலைகளிலிருந்துதான் அவசியமாக உருவாக்கவேண்டியிருந்தது, ஏனென்றால் பழைய சமூகத்தினுள் புதியதற்கான மூலக்கூறுகள் இன்னமும் பொதுவாக வெளிப்படையாக தோன்றியிருக்கவில்லை. புதிய ஆதாரத்திற்கான அடிப்படைத்திட்டத்திற்கு அவர்கள் பகுத்தறிவுக்கு மட்டும்தான் விண்ணப்பிக்கமுடியும். அதற்குக் காரணம் இன்னமும் அவர்களினால் சமகாலவரலாற்றிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை''. (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள் தொகுப்பு 25 (நியூயார்க் 1987, பக்கம் 253))

கற்பனாவாதம் என்ற விஷயத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பார்வைகள் அடுத்தடுத்து வந்த தலைமுறையினால் தவறாக பிரநிதித்துவம் செய்யப்பட்டன, அதாவது கற்பனாவாதத்திற்கு அவர்களது எதிர்ப்பு என்று கூறப்படுவது அஸ்திவாரம் இல்லாமல் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது, என்ற உங்களது இந்த கூற்று அடிப்படையற்றது. அவர்களது திரட்டு நூல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும் எவருமே கற்பனாவாதம் தொடர்பான அவர்களது விமர்சன அணுகுமுறை துல்லியமாக முறைபடுத்திக்கூட சூத்திரப்படுத்தப்பட்டிருப்பதை எண்ணற்ற மேற்கோள்களில் இலகுவாக காணமுடியும். சோசலிசத்திற்கான வளர்ச்சியில் அதன் பங்களிப்பிற்காக தேவையான அபிவிருத்தியில் கற்பனாவாதத்தின் பங்களிப்பிற்கு உரிய மரியாதையை வழங்கிய அவர்கள் வலியுறுத்துவது என்னவென்றால், கற்பனாவாதம் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் கடந்தகாலத்திற்கு உரியதே அன்றி, நிகழ்காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ உரியதல்ல, என்று வலியுறுத்தினர். திட்டவட்டமாக, இது தான் நீங்கள் மேற்கோள் காட்டும் ''பிரான்சில் உள்நாட்டு யுத்தம்'' என்பதிலிருந்து சொல்லப்பட்டுள்ள புள்ளியாகும். இந்த பத்தி மார்க்சிசத்தின் உங்களது குண்டுச்சட்டி பொருள்விளக்கத்தை ஆதரிப்பதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக இருப்புக்கு கொண்டுவரும் அந்த புள்ளியில் தான் கற்பனாவாதத்திற்கான சகாப்தம் திட்டவட்டமாக முடிவிற்கு வந்தது என்று அது விளக்குகிறது. நீங்கள் மேற்கோள் காட்டும் பகுதிக்கு முன்னதாக முந்தைய நான்கு வாக்கியங்களையும் ஒருவர் சேர்த்துப் படித்தால் இன்னும் அந்த நிலைப்பாடு மேலும் தெள்ளத்தெளிவானதாய் இருக்கும்:

பிரிவுகளின் அனைத்து சோசலிச ஸ்தாபகர்களும் -உலக மேடையின் மீது வரலாற்று நடிகர்களாக முதலாளித்துவ சமூகம் தானே நுழைவதற்கு நடைபோடுகையில் தொழிலாள வர்க்கமானது போதுமான அளவு பயிற்றுவிக்கப்பட்டும், ஒழுங்கமைக்கப்பட்டும் இல்லை, அதேபோல் அவர்களின் விடுதலைக்கான சடரீதியான நிலைமைகள் பழைய உலகத்திலேயே போதுமான அளவு முதிர்ச்சியுறவில்லை- என்றிருந்த ஒரு காலகட்டத்திற்கு உரியவர்களாக இருந்தனர். அவர்களது துன்பம் இருந்தது, ஆனால் அவர்களது சொந்த இயக்கத்திற்கான நிலைமைகள் இன்னும் இருக்கவில்லை. பிரிவுகளின் கற்பனாவாத ஸ்தாபகர்கள் தற்போதைய சமூகம் பற்றிய அவர்களது விமர்சனத்தில், வர்க்க ஆட்சிக்கான தனது அனைத்து பொருளாதார நிலைமைகளுடன் சேர்த்து கூலி அமைப்பினை ஒதுக்கி வைப்பது எனும், சமூக இயக்கத்தின் குறிக்கோளை தெளிவாக விவரித்த அதே சமயத்தில், அவர்கள் சமூகத்திற்குள்ளே அதன் உருமாற்றத்திற்கான சடரீதியான நிலைமைகளையோ, அல்லது தொழிலாள வர்க்கத்தினுள் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி மற்றும் இயக்கத்தின் மனச்சாட்சியையோ காணவில்லை. அந்த இயக்கத்தின் வரலாற்று நிலைமைகளை ஈடுசெய்வதற்காக அவர்கள் ஒரு புதிய சமூகத்திற்கான அற்புதமான படங்களையும், திட்டங்களையும் வரைய முயன்றார்கள், அவற்றின் பரப்புரையில் தீர்வுக்கான உண்மையான வழிவகையை அவர்கள் கண்டார்கள். (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள் தொகுப்பு 22 ( நியூயோர்க்,1986) பக்கம் 499)

இந்த புள்ளியில்தான் பிரென்னர் நீங்கள் மேற்கோளை எடுக்கிறீர்கள்:

"உழைக்கும் மனிதர்களின் வர்க்க இயக்கமானது நிஜமாகிய கணத்திலிருந்து அற்புதமான கற்பனாவாதங்கள் மறைந்து போயின, அதற்கு காரணம் இந்த கற்பனாவாதிகள் குறிக்கோளாய் கொண்டிருந்த முடிவுகளை தொழிலாள வர்க்கம் கைவிட்டதால் அல்ல, ஆனால் அதற்கு மாறாக அவற்றை அடைவதற்கான நிஜமான வழிகளை அவர்கள் கண்டுகொண்டார்கள் என்பதால்தான், மாறாக அவற்றின் இடத்தில் அந்த இயக்கத்தின் வரலாற்று நிலைமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இராணுவ அமைப்பினது மேலும் மேலும் ஒன்றுதிரளும் சக்தி தொடர்பான ஒரு உண்மையான உட்பார்வை வந்தது. மாறுவதும் வந்தது. ஆனால் கற்பனாவாதிகளினால் பிரகடனம் செய்யப்பட்ட கடைசி இரண்டு முடிவுகள், பாரிஸ் புரட்சியினாலும் அகிலத்தினாலும் பிரகடனம் செய்யப்பட்ட கடைசி முடிவுகள் ஆகும். வழிகள் மட்டும்தான் வேறுபட்டிருக்கிறது மற்றும் இயக்கத்தின் நிஜமான நிலைமைகள் இதற்கு மேலும் கற்பனாவாத கட்டுக்கதைகளினால் மறைக்கப்படவில்லை. (அதே நூல் பக்கம் 499-500)

தாங்கள் வாசிப்பதை புரிந்துகொள்ளக்கூடிய அனைவருக்கும் பூரணமாக தெளிவாக இருப்பது என்னவென்றால் கற்பனாவாதம், சோசலிச வளர்ச்சியின் ஒரு ஆரம்ப கட்டத்திற்கு உரியது, அது முதலாளித்துவத்தின் வளர்ச்சியினாலும் மற்றும் ஒரு பரந்தளவிலான தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்தினாலும் கடந்து செல்லப்பட்டு பதிலீடு செய்யப்பட்டு விட்டது என்று மார்க்ஸ் வாதிடுகிறார்.

மார்க்சை பொறுத்தவரையில் கற்பனாவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக ஒரு விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் சோசலிச தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக சுமார் 30- வருடங்களுக்கு மேலாக அவர் நடத்திய போராட்டத்தின் உன்னதமான வரலாற்று சான்றை பாரீஸ் கம்யூன் பிரதிநிதித்துவம் செய்தது. ''1843-க்கும் 1847-க்கும் இடையிலான மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் தத்துவார்த்த படைப்பு -அவர்களின் மகத்தான சாதனைகள் ஹேகெலிய கருத்துவாதம் பற்றிய விமர்சனமாக இருந்தது மற்றும் அதன் அடிப்படையிலான வரலாற்றின் சடத்துவ கருத்தாக்கத்தின் விரிவுபடுத்தலானது- நவீன சோசலிச இயக்கத்துக்கான மெய்யியல் மற்றும் அரசியல் அஸ்திவாரங்களை இட்டது. இந்த உக்கிரமான புத்திஜீவி உழைப்பிற்கான காலம் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதுவதில் முடிந்தது. அடுத்த 20- வருடங்களின் போது மார்க்ஸ் அவரது சக்திகளை அநேகமாக முழுமையாகவே அது முன்னெடுத்த புரட்சிகரமான முன்னோக்கிற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தை வழங்க அர்ப்பணித்தார். இந்த ஆதாரம் பிரதானமாக பின்வருவனவற்றை கொண்டிருந்தது: 1) அரசியல் ஆய்வுக்கான ஒரு கருவியாக வரலாறு பற்றிய சடரீதியான கருத்துருவை வெற்றிகரமாக பயன்படுத்துவது (லூயி போனபார்ட்டின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய இழிபுகழ் பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு போல, அரசியல் அபிவிருத்திகளை புதிர் அகற்றுவது மற்றும் பகுத்தறிவுடன் புரிந்து கொள்வது); மற்றும் 2) முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தை வழிநடத்தும் பொருளாதார விதிகள் கண்டுபிடிக்கப்பட்டதானது, இது 1867-ல் மூலதனத்தின் முதலாவது தொகுப்பு வெளியிடப்பட்டதில் முடிவடைந்தது.[15]

ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் தொடக்க நாட்களின்போது மார்க்சும் ஏங்கல்சும் இப்படியான தத்துவார்த்த வெற்றிகளிடமிருந்து ஒரு பின்வாங்கலை வெளிப்படுத்திய எந்த ஒரு போக்கு பற்றியும் மூர்க்கமான விமர்சனத்தை கொண்டிருந்தனர். கம்யூன் ஒடுக்கப்படல் மற்றும் பிஸ்மார்க்கின் ஜேர்மன் சாம்ராஜ்யம் பலப்படுத்தப்படலை அடுத்து வந்த அரசியல் பிற்போக்கு சூழலில் அவர்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக மார்க்சும் ஏங்கல்சும் நிராகரித்த காலாவாதியான கொள்கைகளுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் அரCயல் சித்தாந்த நீரோட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அக்டோபர் 19, 1877-ல் ஹொபோகென், நியூஜேர்சியில் வாழ்ந்து வந்த அவரது நண்பரான பிரடெரிக் அடோல்ப் சோக்கிற்கு கோபமாக முறையிட்டு கடிதம் எழுதினார்;

''ஜேர்மனியில் நமது கட்சிக்குள் ஒரு ஊழலான உணர்வு தன்னைத்தானே நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. அது தலைவர்கள் (மேல் தட்டு வர்க்கம் மற்றும் ''தொழிலாளர்கள்') மத்தியில் இருக்கும் அளவு அதிகமாக மக்கள் மத்தியில் இல்லை. லாசாலெலியன்களுடன் சமரசமானது ஏனைய ஊசலாட்டக்காரர்களுடன் சமரசத்திற்கு வழி இட்டுச் சென்றிருக்கிறது; பெர்லினில் (மோஸ்தினு மூலமாக) டூரிங் மற்றும் அவரது "புகழ்பாடிகளுடன்'', பக்குவமற்ற இளம் பட்டதாரிகள் மற்றும் சோசலிசத்திற்கு ''உயர்ந்த கருத்துவாத'' நோக்குநிலையை வழங்க விரும்பும் - அதாவது, சடத்துவ அடிப்படைக்குப் பதிலாக (மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு அது தீவிரமான, புறநிலை ஆய்வினை அவசியமாக்குகிறது) நீதி, சுதந்திர், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான கடவுள்களை கொண்ட ஒரு நவீன கற்பனை இயலைக் கொண்டு பிரதியிடுவது - அதிமேதாவித்தன பட்டதாரிகள் இவர்களின் ஒரு முழுமையான கூட்டத்தைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. சுகுன்பட் (எதிர்காலம்) பத்திரிகையின் ஆசிரியரான டாக்டர் ஹொல்க்பேர்க்[16] என்ற கனவான் இந்தபோக்கின் ஒரு பிரதிநிதி ஆவார், அவர் கட்சிக்குள் ''அவரது வழியை வாங்கிக்கொண்டார்'' -அது ''உயர்ந்த'' எண்ணங்களுடன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஆனால் ''எண்ணங்கள்' பற்றி கொஞ்சம் கூட எனக்கு அக்கறையில்லை. சுகுன்பட் இற்கான அவரது வேலைத்திட்டத்தை விட மிகவும் பரிதாபகரமானது ஏதாவது ஒன்று ''தன்னடக்கமான பகட்டாணைகளுடன்'' உலகத்திற்கு காட்டப்படுவது அபூர்வமாய்த்தான் நிகழ்ந்திருக்கிறது.

தொழிலாளர்கள் தாமாகவே, திரு மோஸ்த் மற்றும் சகாக்கள் போல வேலை செய்வதை கைவிட்டு 'தொழில்ரீதியாக கல்வியாளராக மாறும்போது, மாறாதவகையில், ''தத்துவார்த்த" அழிவுகளை ஏற்படுத்துகின்றனர் மற்றும் ''கற்ற'' சாதியினர் எனக்கருதப்படும் குழப்பவாதிகளுடனும் கூட்டுச்சேர எப்பொழுதுமே தயாராகயிருக்கின்றனர். குறிப்பாக பல தசாப்தங்களுக்கு முன்னதாக ஜேர்மன் தொழிலாளர்களின் தலைகளிலிருந்து எதனை நீக்குவதற்கு அவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோமோ,அதன்மூலம் பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேய தொஇலாளர்களை விடவும் தத்துவார்த்த ரீதியாக (அதன் மூலம் நடைமுறைரீதியாகவும் கூட) முன்னேறுவதை உறுதி செய்திருக்கிறோமோ, சமூகத்தின் வருங்கால கட்டமைப்பு மீதான கற்பனை நாடகமான கற்பனாவாத சோசலிசம் என்கிற அது, மகத்தான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய கற்பனவாதிகளுடன் ஒக்கிடும்போது மட்டுமல்ல, வையிட்லிங்குடன் ஒப்பிடும்போதும் கூடுதல் பயனற்றதான ஒரு வடிவத்தில், மீண்டுமொருமுறை பரவலுற்றுள்ளது. கற்பனாவாதமானது அதனுள்ளேயே விமர்சன மற்றும் சடரீதியான சோசலிசத்திற்கான விதைகளை கொண்டிருந்தது, பின்னையது கண்டுபிடிப்பதற்கு முன்னதாக, இப்போது, அந்தக் காலம் கடந்த பின்னர் (post festum) அது மடத்தனமாக சுவராசியம் அற்றதாக, திறமற்றதாக, மற்றும் முற்று முஉதாய் பிற்போக்கானதாக தோன்றுகிறது என்பது பகுத்தறிவுபூர்வமானதாகும். (மார்க்ஸ், ஏங்கல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 45, மாஸ்கோ 1991, v.283-84)

இந்த பத்தி சோசலிச இயக்கத்தினுள் கற்பனாவாதத்தை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் பற்றிய மார்க்சின் மதிப்பீட்டின் ஒரு சுருக்க குறிப்பாகும். ஆம் இது உண்மை தான், அதாவது பீம்ஸ் கற்பனாவாதத்தை கைதுறப்பதானது பிரதிநிதித்துவம் செய்வது, தோழ˜ பிரென்னர், நீங்கள் கூறுவது போல் ''"மார்க்சிச இயக்கத்தினுள் நிலவுகின்ற (மற்றும் வெகுகாலமாக நீடித்திருக்கும்) அபிப்பிராயத்தை'' தான். ஆனால் இந்த ''அபிப்பிராயம்'' ''தவறாக வழிநடத்தப்படுவதாயின், உங்களது பெதங்கள் முதலாவதாகவும் முதன்மையாகவும் நிக் பீம்சை விட மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சுடன் தான் இருக்கிறது.

13. The idealist method of utopianism

கற்பனாவாதத்தின் கருத்துவாத வழிமுறை

ஒரு குறிப்பிட்ட வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட தர்க்கத்தின் படிதான் கருத்துக்கள் வளர்ச்சி அடைகின்றன. அவர்களது காலத்தின் ஒரு விளைபொருளாக 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியின் மகத்தான முற்போக்கு கற்பனாவாதிகளின் கருத்துக்கள் அந்த சகாப்தத்தின் சடரீதியான மெய்யியலில் வேரூன்றி இருந்தன. ஆனால் அந்த சடவாதமானது முதன்மையாக இயந்திரவியல் ரீதியானதாக, நிலையானதாக மற்றும் வரலாறு அற்ற குணாம்சம் கொண்டதாக இருந்தது, அதன் காரணமாக சமூக நனவின் அபிவிருத்திக்கு போதுமான அளவு பொறுப்பானதாய் இருக்க முடியவில்லை. இந்த வடிவிலான சடவாதத்தின் வரம்பானது அதன் மிகவும் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டை, நனவுக்கும் தாங்கள் வாதிட்ட சமூக கருத்துக்களை நிறைவேற்றுவதற்கும் இடையிலான உறவுமுறை பற்றிய கற்பனாவாதிகளின் கருத்துருவில் கண்டது. ஒரு புறம் 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலத்து பிரெஞ்சு சடவாதிகள் மனிதன் என்பவன் அவனது சமூக சூழ்நிலையின் விளைபொருள் என்று வலியுறுத்தினர். அவனது சீரிய பண்புகள் மற்றும் தீய ஒழுக்கங்கள் இரண்டுமே இந்த புறநிலையான மூலத்திலிருந்து தோன்றின; எனவே அவனது சூழ்நிலையின் மாற்றங்களின் மூலமாக மட்டும்தான் அந்த மனிதனின் சீரிய பண்புகளை பெருக்க முடியும் மற்றும் அவனது தீய ஒழுக்கங்களை ஒழிக்கமுடியும். இவ்வாறாக நனவிலான மாற்றங்களுக்கு மனிதனின் நனவு அபிவிருத்தியுறுவதான சமூக சூழ்நிலையில் மாற்றங்கள் தேவைப்பட்டது. அதனுள் தான் மனிதனின் நனவு வளர்ச்சிபெற்றது. ஆனால் இது மேலும் ஒரு கேள்வியை எழுப்பியது: இந்த சமூக சூழ்நிலை எப்படி மாற்றப்பட முடியும்? இங்கேதான் பிரெஞ்சு சடவாதிகள் தான் ஒரு புதிருக்குள் மாட்டிக்கொண்டதாக உணர்ந்தனர், அதிலிருந்து தப்பிச்செல்வதற்கான மார்க்கம் எதையுமே அவர்களது மெய்யியல் வழங்கவில்லை.

மனிதன் அவனது சூழ்நிலையின் விளைபொருள். ஆனால் சமூக சூழ்நிலையானது பொது அபிப்பிராயத்தின் ஒரு விளைபொருள் என்று அவர்கள் வாதிட்டனர்! ஆனால் இந்த முடிவானது 18-ம் நூற்றாண்டின் சடவாதிகளை எங்கே விட்டுச் சென்றது? மனிதன் என்பவன் அவனது சமூக சூழ்நிலையின் ஒரு விளைபொருளாயின், அதிலிருந்து பொது அபிப்பிராயம் கூட அந்த சூழ்நிலையின் ஒரு விளைபொருளாக வருவதாக தோன்றும். ஆனால் பின்னர் சடவாதிகள் அந்த வாதத்தை திருப்பிப்போட்டனர் மற்றும் சமூக சூழ்நிலையை பொது அபிப்பிராயத்தின் ஒரு விளைபொருளாக மாற்றினர்! இவ்வாறாக அவர்களது மனித அறிவாதார முறையியலின் (Epistemology) அத்தியாவசியமான சடரீதியான அஸ்திவாரங்கள் இருந்தபோதிலும், பிரெஞ்சு மெய்யியல்வாதிகள் சமூக நனவில் எப்படி மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய பிரச்சனைக்கு தங்களது கருத்துவாத முடிவிற்கு வந்தனர். அதாவது, சமூக சூழ்நிலையில் மாற்றங்கள் முதன்மையாக சிந்தனையின் மாற்றங்களில் தான் தங்கியிருந்தது, அல்லது, பிரான்சு சடவாதிகள் பல சமயங்களில் முன்வைப்பது போல் ''மனித இயல்பில்'' தங்கியிருந்தது என்கிற முடிவுக்கு.

பிரெஞ்சு சடவாத கட்டமைப்பிற்குள் சமூக சூழ்நிலைக்கு -பொது அபிப்பிராய புதிருக்கு- எந்த தீர்வையும் காணமுடியாது. மாறாக, "பொது அபிப்ராயத்தை" சார்ந்திராத, சமூக சூழ்நிலையை நிர்ணயிப்பது மற்றும் சமூக நனவின் வடிவம் மற்றும் திசைக்கு உருவம் கொடுப்பது ஆகிய இரண்டுக்கும் காரணமான புறநிலை சக்திகளை கண்டறிவதில் தான் ஒரு தீர்வு தங்கியிருந்தது. அவ்வாறான புறநிலையான சக்திகள் பற்றிய கண்டுபிடிப்பு தான் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சினால் விவரிக்கப்பட்ட வரலாறு பற்றிய சடவாத கருத்துருவின் தனிச்சாதனையாகும்.

இவை எல்லாவற்றிக்கும் உங்களின் ஆவணத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளது, தோழர் பிரென்னர்? கற்பனாவாதத்தின் மறுமலர்ச்சிக்காக மன்றாடும்போது, நீங்கள், 18-ம் நூற்றாண்டின் சடவாதிகளுக்கு திகிலூட்டிய அதே தத்துவார்த்த புதிரை ஏறத்தாழ மறுஉற்பத்தி செய்கிறீர்கள். ஆனால் அவர்களது தவறுகள் சுயமான தன்மை மற்றும் மேதாவித்தனமான வசீகரத்தை கொண்டிருந்தது, அதே சமயம் 250-வருடங்களுக்கு பின்னர் உங்களுடையவையோ வெறுமனே முட்டாள்தனமாகக் காட்சியளிக்கின்றன. நீங்கள் எழுதுகிறீர்கள்: ''நான் கூறும் மையமான விஷயம் என்னவென்றால் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் வரலாற்றின் எண்ணிப் பார்க்கத்தக்க ஒரே புரட்சிகரமான ஆய்வுப்பொருளாக இருக்கிறது என்கின்ற காரணத்தால் கற்பனாவாதம் முக்கியமானதாகும்: சோசலிசம் என்பது மீண்டும் ஒரு பெரும் சமூக கருத்தியல் இலக்காக மாறி, பரந்த வெகுஜன தொழிலாளர்கள், இளம் மக்கள் மற்றும் புத்திஜீவிகளின் இலட்சியங்கள் மற்றும் கனவுகளின் குவிமையமையப் புள்ளியாக மாறாத வரையில் வர்க்க நனவானது ஒருபோதும் மறுமலர்ச்சியுறாது.'' .(வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

இந்த வாதத்திற்கு செலுத்தப்படவேண்டிய கவனத்துடன் நாம் இதனை ஆய்வு செய்வோம்: ''சோசலிசம் என்பது மீண்டும் ஒரு பெரும் சமூக கருத்தியல் இலக்காக ஆகின்றவரையில் வர்க்க நனவானது ஒருபோதும் மலர்ச்சியுறாது." ஆனால் ''பரந்த வெகுஜன தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் அபிலாசைகள் இலட்சியங்கள் மற்றும் கனவுகளின் குவிமையமயப் புள்ளியாக'' சோசலிசம் தோன்றுவது என்றால் வர்க்க நனவில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்கெனவே ஏற்பட்டிருப்பதை மட்டும்தான் அர்த்தப்படுத்தும். அதன் மிகவும் அம்மணமான அடிப்படைகளுக்கு கீழிறக்கப்பட்டநிலையில், உங்களின் சூத்திரமானது வர்க்க நனவின் புதுப்பித்தலை கருத்து இலக்குகளின் புதுப்பித்தலில் தங்கியிருக்கச்செய்கிறது, அதாவது வர்க்க நனவின் அம்சங்களில் அல்லது உட்கூறுகளின் ஒன்றில் தங்கியுள்ளது. நீங்கள் அதே போல் பின்வருமாறு எழுதியிருக்கலாம் அதாவது ''ஒரு மகத்தான சமூக கருத்தியல் இலக்காக சோசலிசம் மாறுகின்றவரையில் சோசலிசமானது (வர்க்க நனவின் ஒரு சிறப்பான முன்னேறிய வெளிப்பாடாக) எப்போதுமே புத்துயிர் பெறாது''. இதில் கூறியது கூறும் சொல்லடுக்கு தான் எங்களுக்கு கிடைக்கிறது. ஒரு தெளிவான கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் தவறுகிறீர்கள்: சோசலிசமானது எப்படி ஒரு ''மகத்தான சமூக கருத்ததியல் இலக்காக'' மாற்றமடையும்''? அங்கே? அந்த அபிவிருத்திக்கு ஒரு உண்மையான சமூக-பொருளாதார தூண்டுதலை வழங்கக்கூடிய, சுயாதீனமான புறநிலையான நிலைமைகள் இருக்கின்றனவா? இயந்திரவியல் சடவாதத்திற்கு எதிரான உங்களது அத்தனை வசைமொழிகள் (Invective) இருந்த போதிலும், அந்த சிந்தனை முறையின் அடிப்படையான குறைகளை (Flaws) தான் மீண்டும் கூறுகிறீர்கள்.

சமூக நனவின் வளர்ச்சி குறித்த ஒரு கருத்தியல்ரீதியான கருத்துருவுக்குள் பழையபடி செல்வதை தவிர்க்கமுடியாததாக்கிய 18-ம் நூற்றாண்டு சடவாதத்தின் இயந்திரவியல் தன்மையானது அன்று நிலவிய சமூக பொருளாதார மற்றும் அறிவியல் -தொழில்நுட்ப வளர்ச்சியின் மட்டத்தினால் வரலாற்று ரீதியாக பக்குவப்படுத்தப்பட்டு இருந்தது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியும் அவை வழிவகுக்கும் சமூக உறவுகளும் தான் சமூக நனவிற்கான உண்மையான மற்றும் புறநிலையான அஸ்திவாரத்தை அடக்கியிருக்கின்றன என்பதை கண்டறிய அவசியமான புள்ளிக்கு தொழில்துறை முதலாளித்துவமும் சரி அல்லது தொழிலாள வர்க்கமும் சரி முதிர்ச்சியுற்றிருக்கவில்லை. சோசலிச சிந்தனை ஒரு கற்பனாவாத தன்மையை பெற்றதற்கு திட்டவட்டமான காரணம் சமூக நனவுக்கும், சமூக - பொருளாதார சக்திகளின் புறநிலையான அபிவிருத்திக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான வரலாற்று நிலைமைகள் இன்னும் இருக்கவில்லை. மேலும் நனவில் ஏற்படும் மாற்றங்களுக்கான புறநிலையான மூலத்தை அடையாளம் காண கற்பனாவாதிகள் திட்டவட்டமாக இயலாமல் இருந்ததன் காரணமாக நனவை மாற்றுகின்ற நிகழ்முறையை அறிவொளி பெற்ற தனி நபர்களினால் நடத்தப்பட்ட கல்வியின் மூலமாகவே மட்டுமே எண்ணிப் பார்க்க முடிந்ததாக இருந்தது.

1840-கள் வாக்கில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் முதலாளித்துவம் மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டுமே கணிசமான அளவு வளர்ச்சியை பெற்றிருந்தது. சமூக நனவில் பெருமளவிலான மாற்றங்களுக்கு பின்புலமாக அமைந்த, வெளிப்படையான வர்க்க மோதல்களின் தீவிர வெடிப்பினை உருவாக்கிய புறநிலை சக்திகளை, சார்புரீதியாக மக்களின் சிந்தனையில் இருந்து சுயாதீனப்பட்டு செயல்படுகிற வகையில் அடையாளம் காண்பது சாத்தியமானது. இப்படியான அபிவிருத்திகளுக்கு முகம் கொடுக்கையில், முன்னேறிய மற்றும் தனித்த சிந்தனையாளர்களின் போதனை (pedagogical) முயற்சிகளை சார்ந்திருந்த சமூக நனவில் அடிப்படையான நகர்வுகளை உருவாக்கிய கருத்துருக்கள் இன்னும் கூடுதல் வெளிப்படையான பிற்போக்கு தன்மையை எடுத்துக் கொண்டது. ஜேர்மனியில் அவ்வாறான கருத்துருக்கள் விமர்சனரீதியான விமர்சகர்கள் என்றழைக்கப்பட்ட ஒரு போக்குடன் சம்பந்தப்பட்டு இருந்தது. அதன் பிரதான பிரதிநிதி புரூனோ பவர். இந்த போக்கை ஆய்வு செய்து பிளாக்கானோவ் எழுதியதாவது:

''அபிப்பிராயம் உலகை ஆளுமை செய்கிறது" - இவ்வாறாக பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர்கள் பிரகடனம் செய்தார்கள் அவ்வாறாக பேசவும் செய்தார்கள். நாம் பார்ப்பது போல், ஹேகெலிய கருத்துவாதத்திற்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்தபோது பவர் சகோதரர்கள் அவ்வாறுதான் பேசினார்கள். ஆனால் அபிப்பிராயம் உலகை ஆளுமை செய்யுமாயின் அப்போது வரலாற்றை பிரதானமாக இயக்குபவர்கள் இப்போது பழையதை விமர்சிக்கும் மற்றும் புதிய கருத்துக்களை உருவாக்கும் சிந்தனையுள்ள மனிதர்கள்தான். பவர் சகோதரர்கள் உண்மையிலேயே அப்படித்தான் நினைத்தார்கள், அவர்களது கண்ணோட்டத்தில் வரலாற்று நிகழ்முறையின் சாராம்சம் என்பது, இருக்கும் அபிப்பிராய சேகரங்கள் மற்றும் அந்த சேகரத்தால் பக்குவப்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வாழ்க்கை வடிவங்கள் இவற்றின் "விமர்சன ஆன்மா" வால் மறுநாகரிகத்துக்குட்படுவதாக தன்னை சுருக்கிக் கொள்கிறது.

ஒரு தடவை தன்னைத்தானே பிரதான சிற்பியாக, வரலாற்றின் படைப்பு கடவுளாக (Demiurge), கற்பனை செய்து கொண்டவுடன், "விமர்சனரீதியாக சிந்திக்கும்'' மனிதன் அதன் மூலமாக தன்னையும் மற்றும் தன்னைப் போன்றவர்களையும் ஒரு சிறப்பான, ரகத்திற்குள் பிரித்தெடுத்துக் கொள்கிறான். இந்த உயர்ந்த ரகமானது வெகுஜனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக, விமர்சனரீதியான சிந்தனைக்கு அந்நியமானதாக மற்றும் ''விமர்சனரீதியாக சிந்திக்கும்'' மனிதர்களின் படைப்பாற்றல் உள்ள கைகளில் களிமண்ணாகும் திறனை மட்டுமே கொண்டிருக்கின்றதாய் இருக்கிறது. (வரலாறு பற்றிய ஒருதலைப்பட்சமான பார்வையின் வளர்ச்சி (மாஸ்கோ, 1974), பக்கம் 118-19)

14. Socialists and the masses

சோசலிஸ்டுகளும் வெகுஜனங்களும்

அதே போன்ற கருத்துவாத கருத்துருக்களின் அடிப்படையில் முன்செல்கையில் நீங்கள், தோழர் பிரென்னர், சோசலிஸ்டுகளுக்கும் வெகுஜனங்களுக்கும் இடையிலான உறவுமுறை பற்றிய ஒரு கருத்துருவுக்கு வருகிறீர்கள். அது மேலே பிளாக்கனோவினால் சுருக்கி கூறப்பட்டவாறாக ''விமர்சனரீதியாக விமர்சகர்களின்'' நிலைப்பாட்டை கொண்டதாக ஒரு குறிப்பிடத்தக்க அளவு தோன்றுகிறது.

''பிரென்னர் பின்வருமாறு நீங்கள் எழுதுகிறீர்கள்: ''பீம்சை பொறுத்தவரையில் சோசலிச சமூகத்தை நடத்துபவர்கள் சோசலிஸ்டுகள் அல்ல, மாறாக மக்களாகத்தான் இருப்பார்கள், எனவே அங்கே, குடும்பம், வேலை, சுற்றுச்சூழல் போன்ற விஷயங்கள் தொடர்பான சோசலிச கொள்கைகளுக்கான அவசியம் கிடையாது, அதை அவர் சிறுமைப்படுத்தும் வகையில் (Disparagingly) 'செயல்படுவதற்கான குறிப்புரைகள்’ (Prescriptions) என்று குறிப்பிடுகிறார்- சோசலிச சமூகம் எப்படியாக இருக்கும் என்பது பற்றிய ஒத்திசைவான (Coherent) பார்வை ஒருபுறம் இருக்கட்டும். இங்கே ஒரு அடிப்படையான உண்மை உள்ளது -தொழிலாள வர்க்கமானது தன்னைத்தானே விடுதலை செய்யவேண்டும்- அது சோசலிச வேலைத்திட்டத்திற்கு அடிப்படையானதாகும். ஆனால் இதன் அர்த்தம் சோசலிஸ்டுகளுக்கு ஒரு வேலைத்திட்டம் அவசியமில்லை என்று கருதுவதாக இதற்கு முன்பு எப்போதுமே அர்த்தப்படுத்தப்படவில்லை''.

மீண்டும் ஒருமுறை நீங்கள் வாதப்பிரதிவாத செப்படி வித்தையில் இறங்குகிறீர்கள்: ஒரு சோசலிச சமூகமானது சோசலிஸ்டுகளினால் ''நடத்தப்படும்'' ஒன்றல்ல என்ற பீம்சின் அறிக்கை மற்றும், அது தொழிலாள வர்க்கம் தனது சுய விடுதலைக்கான நிகழ்முறையில், முன்கூட்டி வகுக்கப்பட்ட ''செயற்குறிப்புக்கள்" இல்லாமல் சமூகத்தின் புதிய வடிவங்களை உருவாக்குவது என்பது தொழிலாள வர்க்கத்தின் பணியாகும், என்ற பீம்சின் அறிக்கை, வேலைத்திட்டத்தை மறுதலிக்கும் ஒரு அறிக்கையாக பிரென்னரினால் தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

''மக்கள் தம்மைத்தாமே விடுதலை செய்வதற்கும் சோசலிஸ்டுகள் சமூகத்தை நடத்துவதற்கும் இடையில் முரண்பாடு எதுவும் கிடையாது'' என்று நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். நீங்கள் இல்லை என்று சொல்வதன் காரணமாக அதுதான் சரி என்று வெகுஜனங்கள் எண்ணிக் கொள்ள வேண்டுமா? தொழிலாள வர்க்கத்தின் சுயவிடுதலை என்பது மக்கள் தங்களது சொந்த விடுதலைக்கான வடிவங்களை உருவாக்கி வகுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகுமா அல்லது அப்படி இல்லையா. இது வெறுமனே ஒரு அருவமான தத்துவார்த்த அக்கறை பற்றிய விஷயம் அல்ல. முன்வைக்கப்படவேண்டிய எளிமையான கேள்வி: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் ஒரு புரட்சிகர சோசலிச அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படுத்தப்படுமா? கொள்கைகள் வடிவாக்கமானது, ஆளும் சோசலிஸ்டுகளால் வழங்கப்படும் உத்தரவுகளின் அடிப்படையில் இருக்குமா அல்லது தங்களின் கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்காக போராடும் உரிமையை ஜனநாயக உரிமைகளில் மிகவும் விலைமதிப்பற்றதாக மற்றும் உத்வேகத்துடன் பாதுகாக்கப்படுவதாக கொண்டிருக்கக் கூடிய பல்வேறு சமூக போக்குகளிடையிலான வெளிப்படையான போராட்டத்தின் வழி இருக்குமா?

இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய புரட்சிக்கு பிந்தைய நிலை எவ்வாறு இருக்கும் என்ற உங்களது விவரிப்பை ஒருவர் வாசிப்பதே போதுமானது: சில தொழிலாளர்கள் புரட்சியை செயலூக்கத்துடன் எதிர்ப்பார்கள்: அவர்கள் ஒரு சோசலிச சமூகத்தில் எதையாவது நடத்துவார்கள் என்று எண்ணுவது வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகும். ஏனையோர் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருப்பார்கள்: அவர்கள் அப்போது தான் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கும் ஒரு புரட்சிக்கான பொறுப்புக்களை அவர்கள் மீது உடனடியாக சுமத்துவது அவர்களை விரோதமாக்கச் செய்வதைவிட அநேகமாக மேலதிகமாக எதையும் செய்யப்போவதில்லை; அவர்களது அரசியல் நனவு (மற்றும் மிகவும் பரந்தளவில் அவர்களது பொதுவான கலாச்சாரம் மட்டம்) பொறுமையாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். எனவே ஒரு கணிசமான காலத்திற்கு சோசலிச சமூகத்தை நடத்துவது ''திட்டவட்ட ஒழுங்கமைப்பற்ற "வெகுஜனங்களின்" கைகளில் அல்லாமல், வர்க்க நனவுள்ள தொழிலாளர்களின் கைகளில் இருக்கும்; வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அரசியல் நனவானது புரட்சிகர சோசலிச இயக்கத்தினால் உருக்கொடுக்கப்பட்டிருக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் (அவசியமாகவே அதன் ஒரு பெரும் பகுதி, அது ஒரு மிகப்பெரும்பான்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்) கைகளில் தான் இருக்கும். ''சோசலிசஸ்டுகள் சமூகத்தை நடத்துவது'' என்பதற்கு இதுதான் அர்த்தமாகும்: கட்சி அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறிய குழுவினால் அல்ல, மாறாக சோசலிச நனவு நிரம்பிய ஒரு பரந்த பிரிவு தொழிலாளர்களினால் என்பது வலிறுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஒரு சோசலிச அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலைமை பற்றிய உங்களின் பார்வையை ஒருவர் படிக்கும் போது அவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்பது தெரியாது. புரட்சிக்கு பெரும்பான்மையான தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்கும் (இருப்பினும் ஒரு முழுமையாக பார்க்கையில் தெளிவாகவே மக்கள் தொகையின் பெரும்பாமையினர் அல்ல) என்ற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள், இருப்பினும் சோசலிஸ்டுகள் மக்களை விடுதலை செய்யும் அதே சமயம், குறைந்தபட்சம் அதே அளவு நேரத்தை, அவர்களை நசுக்குவதற்கும் செலவிடுவார்கள் என்பது பற்றி உங்கள் மனதில் எவ்வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை. அதற்கும் மேலாக எதிர்ப்பு அல்லது அலட்சியத்தை நீங்கள் எதிர்பார்க்கும் தொழிலாள வர்க்கத்தின் அந்த பிரிவைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் ''எதையாவது நடத்துவதில்'' இருந்து விலக்கப்படுவார்களாயின், ஒரு முன்னேறிய சமூகத்தின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக கட்டுமானத்தின் ஒரு கணிசமான உள்கட்டமைப்பின் தொடர்ச்சியான செயல்பாடு என்பதே, மிருதுவாகக் கூறுவதாயின், பிரச்சனைக்குரியதாக இருக்கும். முற்றுமுதலாய் அரசியல் அக்கறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கக்கூடியவை எவை என்பதற்கு வரம்புகள் உண்டு. அதிகாரத்தை வென்றபின்னர் ஒரு சோசலிச தொழிலாளர் அரசாங்கத்திற்கு பெருமளவிலான மக்களின் ஆர்வமுள்ள ஒத்துழைப்பு தேவைப்படும், அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவர்கள் சமூகத்தின் உள்கட்டமைப்பில் முக்கியமான பாத்திரங்களை தொடர்ந்து வகிப்பார்கள். சோசலிஸ்டுகள், தங்களுக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்தாலும் கூட, இப்படியான மக்களுக்கு ஆணையிட முடியாது. அவர்களின் அனுபவம் மற்றும் திறமைகளின் தகுதிகளுக்கேற்ப அவர்கள் சொல்வது காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அவர்கள், தங்கள் அனுபவத்திற்கும் நிபுணத்துவத்திற்கும் உரிய மரியாதையுடனும் அவர்கள் நடத்தப்படவேண்டும்.

எதிர்கால சோசலிச சமூகத்திற்கான செயல்பாட்டு பரிந்துரைகளை கொண்டு வருவதில் நீங்கள் ரொம்பவும் உறுதியோடு இருக்கும் அதே சமயம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு இடைமருவுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிகமான சிந்தனையை நீங்கள் கொடுத்ததாக தெரியவில்லை. சோசலிசம் அதன் இயல்பான தன்மை காரணமாக, மக்களின் வாழ்க்கைகளை பாதிக்கும் அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுப்பதில் வெகுஜன பங்கெடுப்பு இல்லாமல், அதாவது ஜனநாயகத்தில் பிரம்மாண்டமான விரிவாக்கம் இல்லாமல் சோசலிசம் பற்றி, எண்ணணிப் பார்க்க முடியாது. கார்ல் மார்க்சின் 'பிரான்சில் வர்க்கப் போராட்டம்' என்ற நூலின் ஒரு புதிய பதிப்பிற்கு 1895-மே யில் ஏங்கெல்ஸ் மிகவும் நன்றாக கூறியது போல் (அது அவரது சொந்த மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக பூர்த்தி செய்யப்பட்டது) நனவற்ற வெகுஜனங்களுக்கு தலைமை தாங்கி நனவான சிறுபான்மையினர்களினால் கொண்டு நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள், புரட்சிகளுக்கான காலம் கடந்த காலமாகி விட்டது. அங்கே அது சமூக அமைப்பின் ஒரு முழுமையான மாற்றம் பற்றிய பிரச்சனைகளாக இருக்கையில் அதில் வெகுஜனங்களும் கூட தாமாகவே இருந்தாக வேண்டும், பணயமாக இருப்பது என்ன, தாங்கள் போராடுவது எதற்காக என்பதையெல்லாம் அவர்கள் உடலும் உயிருமாக ஏற்கெனவே கட்டாயம் கிரகித்துக் கொண்டிருக்க வேண்டும். கடந்த ஐம்பது வருடங்களின் வரலாறும் நமக்கு அதனைக் கற்பித்திருக்கிறது''. (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 27, (மாஸ்கோ 1990), பக்கம் 520)

வேறுவார்த்தைகளில் சொல்வதாயின், புரட்சி தொழிலாளர்களுக்காக செய்யப்பட முடியாது. அது தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை புரிந்த தொழிலாளர்களால் செய்யப்பட வேண்டும். தொழிலாள வர்க்கமானது அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதற்கும் மற்றும் அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கும் திறன் படைத்தது என்ற கருத்துருவானது யாருக்கு நியாயமானதாக தோன்றும் என்றால், தொழிலாளர்களின் பரந்தளவிலான பகுதியினர் அவர்களது சொந்த வாழ்க்கைகளின் அனுபவங்களிலிருந்து சோசலிச முன்னோக்கிற்கு ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புபவர்களுக்கு மட்டும்தான். ஆனால் இதனை தோழர் பிரனர், நீங்கள் நம்பவில்லை. வெகுஜனங்களுக்குள் நீங்கள் (பிரென்னர்) பார்ப்பது எல்லாமே மோசமான பின்தங்கிய நிலையின் காட்சிதான். நீங்கள் (பிரென்னர்) எழுதுகிறீர்கள்: ''புரட்சியில் பங்கெடுக்கும் அந்த ஒரு செயலினால் மட்டும் வேறுபடுத்தப்படாத வெகுஜனங்கள், அவர்களது தோல்களைத் தாண்டி பாய்ந்து வந்து, ஒரு வாழ்நாள் பூராக பட்ட ஒடுக்குமுறை மற்றும் பின்தங்கிய நிலையினைக் கடந்து, சொந்தமாகவே மிக பிரம்மாண்டமான பணியான சோசலிச கட்டுமானத்தை நடத்தும் திறமையுள்ளவர்களாக மாறுவார்கள், அதாவது, சோசலிஸ்டுகளிடமிருந்து எவ்வித வழிகாட்டலோ அல்லது "செயல்பாட்டு பரிந்துரைகளோ" இல்லாமல், சோசலிச கட்டுமானம் என்னும் மிகப் பிரம்மாண்டமான பணியை நடத்த இயலும் மட்டத்திற்கு வர முடியுமென்றால், முதலில் ஒரு புரட்சியை செய்வதற்கு அவர்களுக்கு தலைமை ஏற்க இதே சோசலிஸ்டுகள் ஏன் தேவை என்பது குறித்து ஒருவர் ''ஆச்சரியம் தான் படவேண்டியிருக்கும். சுருக்கமாக சொன்னால், அவர்களுக்கு நனவில் ஒரு மாற்றம் ஏன்தான் தேவைப்படுகிறது என்று ஒருவர் வியக்க நேரிடும்."

பின்தங்கிய நிலையில் தொழிலாளர்கள் புரட்சிக்குள் வருகிறார்கள். பின்தங்கிய நிலையிலேயே அவர்கள் அதை விட்டு விலகுகின்றனர். பிராங்க் பிரனரின் மிக பிரம்மாண்டமான முயற்சிகளின் மூலமாக மட்டும்தான் இந்த பொதுவான குழப்பத்திலிருந்து ஏதாவது மீட்டெடுக்க முடியும் மற்றும் வெகுஜனங்கள் அவர்கள் அப்படியே இருந்த போதிலும், ஒரு புதிய கற்பனாவாதத்திற்கு வழிநடத்தப்படுவார்கள்.

15. Consciousness and socialism
நனவும் சோசலிசமும்

அதிர்ஷ்டவசமாக நிஜமான வரலாற்று நிகழ்முறையானது மிகவும் வேறுபட்டமுறையில் நிகழ்கிறது. புரட்சியின் வெடிப்பிற்கும் அதே போல அதனைத் தொடர்ந்த மகத்தான போராட்டங்களின் பாதையிலான பரிணாமத்திற்கும், அவசியமாக முன்வருவதான சமூக நனவிலான மாற்றம் என்பது, தனிமனித நனவில் இருந்து சுயாதீனப்பட்டு அபிவிருத்தியடையும் சமூக -பொருளாதார நிகழ்முறைகளில் வேரூன்றி இருக்கிறது. மற்றும் அவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. அதற்கு மேலாய், ஒரு புரட்சிகர போராட்ட காலகட்டத்தின் நனவான பண்பில் ஏற்படும் தீவிர "பாய்ச்சல்கள்", (அதனால் வெடிப்புதன்மையுடதான) சமூக சிந்தனையானது புறநிலை சமூக யதார்த்தத்துடன் மிகவும் நீண்ட காலம் ஒத்திப்போடப்பட்ட மறுஒழுங்கமைதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[18] வெகுஜனப்போராட்டங்களின் அனுபவம் மக்களையும் அவர்களது நனவையும் மாற்றுகிறது அல்லது 1840-களின் பிரென்னர்களுக்கு மார்க்சும், ஏங்கெல்ஸும் தமது பதிலில் கூறியவாறாக:

இந்த கம்யூனிச நனவானது பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கும் மற்றும் அந்த நோக்கத்திற்குமான வெற்றிக்கும், இரண்டுக்குமே, மனிதர்கள் பெருமளவில் மாற்றம் பெறுவது அவசியமாகும், அந்த ஒரு மாற்றமானது ஒரு நடைமுறை இயக்கத்தில், ஒரு புரட்சியில் மட்டும்தான் ஏற்படமுடியும்; எனவே, புரட்சி அவசியமாயிருப்பது ஆளும் வர்க்கத்தை வேறு எந்த வழியிலும் தூக்கிவீச முடியாது என்பதனால் மட்டுமல்ல, மாறாக, அதனை தூக்கி வீசுகின்ற வர்க்கமானது காலங்களின் குப்பைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெற்றி காணவும், சமூகத்தை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திறனுடையதாகவும் முடியும் என்பதற்காகவும் ஆகும். (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 5 (நியூயார்க் 1976),பக்கங் 52,53)

இந்த புகழ்பெற்ற பந்தி 1845-ல் மார்க்சும், ஏங்கெல்ஸும் இணைந்து எழுதிய 'ஜேர்மன் சித்தாந்தத்தில்' தோன்றியது. வரலாறு பற்றிய சடவாத கருத்துருவின் விளக்கத்தை முதல் விவரிப்பை இந்த படைப்பு பிரதிநிதித்துவம் செய்தது, அது மனிதனின் இருப்பை அவனது நனவின் அடிப்படையிலிருந்து அல்லாமல் மனிதனின் சமூக நனவை அவனது சமூக இருப்பின் அடிப்படையிலிருந்து விளக்கியது. மனிதன் சிந்திக்கும் வடிவங்கள் ஒரு புறநிலையான சடவாத அடிப்படையில் வளர்ச்சி அடைகிறது, என அவர்கள் கண்டுபிடித்தார்கள். ''வாழ்வை நிர்ணயிப்பது நனவல்ல மாறாக வாழ்வுதான் நனவை நிர்ணயிக்கிறது.'' (அதே நூல் பக்கம் 37) வரலாறு மற்றும் நனவின் அபிவிருத்தி பற்றிய அவர்களது புதிய கருத்துருவானது ''அனைத்து வரலாற்றின் அடிப்படையாக, வாழ்வின் சடரீதியான உற்பத்தியிலிருந்தேயும் தொடங்குகின்ற உண்மையான உற்பத்தி நிகழ்வுமுறையை விளக்குவதிலும் மற்றும் இந்த உற்பத்தி முறையுடன் தொடர்புபட்ட மற்றும் அதனால் உருவாக்கப்படும் சமூகக் கூட்டுறவின் வடிவத்தை, அதாவது நாகரீக சமூகத்தை அதன் பல்வேறு கட்டங்களில், புரிந்து கொள்வதிலும் தங்கியிருக்கிறது..." (அதே நூல் பக்கம் 53)

தோன்றிவரும் முதலாளித்துவ அமைப்பின் உண்மையான சமூக -பொருளாதார முரண்பாடுகளின் ஒரு புறநிலையான விளைபொருளாக சமூகப்புரட்சி எழுகிறது என்ற கருத்துருவானது வரலாறு பற்றிய அனைத்து கருத்துவாத அர்த்தப்படுத்தல்களுக்கும் ஒரு மரண அடியை வழங்கியது. அதற்கு மேலாக, சமூகத்தினுள் ஒரு புரட்சிகரமான சக்தியாக, முதலாளித்துவத்திற்கு ''குழிப்பறிப்பாளனாக, தொழிலாள வர்க்கம் வளர்ச்சி அடைவது முதலாளித்துவத்தின் புறநிலையான நிகழ்வுப்போக்காக இருந்தது. அதன் உலக வரலாற்றுப்பாத்திரம் நிர்ணயிக்கப்பட்டது, மிகவும் அடிப்படையான அர்த்தத்தில், அதன் நனவினால் அல்ல மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறையில் அது கொண்டுள்ள தனிச்சிறப்பான இடத்தின் மூலமாகத் தான். பாட்டாளி வர்க்கமானது ஒரு புரட்சிகரமான சக்தி என்ற கருத்துருவிற்கு மிகவும் நீடித்த ஆட்சேபனைகளாக -அதாவது தொழிலாள வர்க்கம் புரட்சிகர நனவின்றி இருந்தது, அது புரட்சியை விரும்பவில்லை போன்றவற்றுக்கு- மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் புனித குடும்பத்தில் பதிலளித்தனர்:

"பிரச்சனை இந்த அல்லது அந்த பாட்டாளி அல்லது முழு பாட்டாளி வர்க்கம் கூட அந்த தருணத்தில் அதன் குறிக்கோள் பற்றி என்னகருதுகிறது என்பதல்ல. பாட்டாளி வர்க்கம் என்பது என்ன, மற்றும் இந்த இருப்புடன் தொடர்புடையதாக அது வரலாற்று ரீதியாக செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவதென்ன என்பதுதான் பிரச்சினை. அதன் குறிக்கோளும் வரலாற்று நடவடிக்கையும் அதன் சொந்த வாழ்க்கை நிலைமையிலும் அதே போல் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒட்டுமொத்தத்திலும் காணக்கூடியதாகவும் திரும்ப மாற்றமுடியாததாகவும் பின் நிகழவிருப்பதை முன் குறித்துக் காட்டுகிறது. (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 4 (நியூயார்க் 1975),பக்கம் 37)

நனவின் பாத்திரம் -இந்த தலைப்பை ஒருவேளை ''பிரென்னர்'' கவனிக்காவிட்டால், நாம் சுட்டிக்காட்டவேண்டும், அதாவது அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு கணிசமான அளவு அக்கறையுள்ளதாக இருந்துவந்துள்ளது என்று- இதன் மீதான அனைத்து மார்க்சிச கலந்துரையாடலும் சமூக -பொருளாதார அபிவிருத்தியின் சடரீதியான நிகழ்முறைகளுடன் அதற்குள்ள உறவுமுறை பற்றிய ஒரு சரியான விளக்கத்திலிருந்து தொடங்கப்பட்டாக வேண்டும். ஒரு புரட்சிக் கட்சியை கட்டுவது மற்றும் சோசலிச நனவை வளர்ப்பதற்கான திட்டங்கள் எல்லாம் இப்படியான குறிக்கோள்களை நிறைவேற்றுவதை அனுமதிப்பதற்கான புறநிலையான நிலைமைகள் அங்கு இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் போய்விடும். வரலாறு பற்றிய சடரீதியான கருத்துரு விரிவாக விளக்கப்பட்டது, தனது சொந்த சமூக நடைமுறை மற்றும் நனவு பற்றிய மனிதனின் புரிதலில் ஒரு மிகப் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை குறித்தது. ஏங்கெல்ஸ் விளக்கியவாறாக, ''அனைத்து சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் புரட்சிகளுக்கான இறுதிக் காரணங்கள் தேடப்பட வேண்டியது மனிதர்களின் மூளைகளில் அல்ல, என்றென்றைக்குமான உண்மை மற்றும் நீதி பற்றிய மனிதனின் சிறந்த உள்ளார்ந்த பார்வைக்குள்ளும் அல்ல, மாறாக உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் தான். அவை தேடப்பட வேண்டியது மெய்யியலில் அல்ல, மாறாக ஒவ்வொரு குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளியலில்தான்.'' (மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 24. (லண்டன் 1989) பக்கம் 306). ''நிலைமைகள் மாறவேண்டும்" என்று சமூகத்தின் பரந்த பிரிவினருக்குள் இருக்கும் ஒரு பொதுவான ''உணர்வின்(உள்ளுணர்வின்)'' தோற்றம் கூட நிலவும் அரசியல் மற்றும் சமூகப்பொருளாதார அமைப்பின் காலாவதியான தன்மை பற்றி சமூக நனவில் ஏற்படும் ஒரு பிரதிபலிப்பாகும். [19]

சோசலிச இயக்கத்தின் தோற்றத்திற்கு ஒரு புறநிலையான அஸ்திவாரம் உள்ளது என்பதை அங்கீகரிப்பது, சோசலிச நனவை வளர்ச்சி செய்வதற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிடவில்லை. உண்மையிலேயே சோசலிசத்தின் புறநிலையான அடித்தளம் பற்றிய தெளிவுபடுத்தலே கூட தொழிலாள வர்க்கத்துக்கான தத்துவார்த்த கல்வியூட்டலின் ஒரு முக்கியமான உள்கூறாகும். ஆனால் சோசலிச இயக்கத்தின் கல்வியூட்டும் பணிகள் பற்றிய சரியான சூத்திரப்படுத்தலானது, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தான் புரட்சிகர நனவின் அபிவிருத்திக்கான முதன்மையான மற்றும் தீர்க்கமான தூண்டுதலை வழங்குகின்றன என்ற விளக்கத்தின் கட்டமைப்புக்குள்ளே மட்டும்தான் சாத்தியமானது.

சோசலிச நனவு பற்றிய பிரச்சனையானது அதனை ஒரு உண்மையான சமூகப்பொருளாதார நிகழ்முறையின் கருத்துவாத பிரதிபலிப்பாக அங்கீகரிப்பவர்களுக்கு ஒரு விதமாக தன்னை காண்பிக்கிறது, சமூக சிந்தனையின் தோற்றத்திற்கும் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அஸ்திவாரங்களுக்கும் இடையில் அப்படியான எந்த புறநிலையான மற்றும் அவசியமான உறவுமுறையும் இல்லை என்று கருதுபவர்களுக்கு முற்றிலும் வேறுபட்ட வேறொரு விதத்தில் அது தன்னை காண்பிக்கிறது. மார்க்சிஸ்ட்டுகளை பொறுத்தவரையில் சோசலிச நனவுக்கான போராட்டமானது முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தும்படி பரந்த வெகுஜன தொழிலாளர்களை நம்பவைப்பதை கொண்டிருக்கவில்லை. பதிலாக, முதலாளித்துவ அமைப்பின் ஆழமுறும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உக்கிரமாக்கப்படும் உபரி மதிப்பை கறந்தெடுக்கும் புறநிலையான சுரண்டும் நிகழ்வுப்போக்கிலிருந்து எழுகின்ற அத்தகைய போராட்டங்களின் தவிர்க்க முடியாத தன்மையை அங்கீகரிப்பதில் இருந்து தொடங்கும். மார்க்சிச இயக்கமானது, தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக, வரலாற்றை விதி ஆளுமை செய்யும் ஒரு நிகழ்முறையாக காணும் ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தை விருத்தி செய்ய முயற்சிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அது தோற்றுவிக்கும் சமூக உறவுகள் குறித்த அறிவு மற்றும் நடப்பு நெருக்கடியின் உண்மைத் தன்மை மற்றும் அதன் உலக வரலாற்றுரீதியான தாக்கங்கள் ஆகியவற்றில் உள்ளார்ந்த பார்வை ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய பாடுபடுகிறது. இது நனவற்ற வரலாற்று நிகழ்முறையை ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக மாற்றுவது பற்றிய விஷயமாகும், உலக முதலாளித்துவ நெருக்கடி உக்கிரப்படுத்தல்களின் விளைவுகளை எதிர்பார்ப்பது மற்றும் அதற்காக தயார் செய்வது பற்றிய விஷயமாகும், சம்பவங்களின் காரணகாரியத்தை தோலுரித்துக் காண்பிப்பது, மற்றும் பொருத்தமான அரசியல் பதிலிறுப்பை மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் சூத்திரப்படுத்துவது பற்றிய விஷயமாகும்.

ஆனால் முதலாளித்துவத்தினாலேயே உருவாக்கப்பட்ட புறநிலையான நிலைமைகளுக்குள் சோசலிசத்திற்கான அடிப்படை எதையும் காணாதவர்கள், தோல்விகள் மற்றும் பின்னடைவுகளின் அனுபவத்தினால் சோர்வடைந்திருப்பவர்கள், மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் தன்மை பற்றி புரிந்துகொள்ளவும் முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான சாத்தியத்திறனை உணரவும் முடியாமல் இருப்பவர்களுக்கு, நனவை மாற்றுகின்ற பிரச்சனையானது சாராம்சத்தில் கற்பனை ரீதியாகவும் மற்றும் உளவியல் ரீதியாகவும் கூட முன்வைக்கப்படுகிறதாக இருக்கிறது. சோசலிச நனவுக்கான ஒரு உண்மையான அடித்தளம் அங்கே இல்லாதவரையில் அதன் அபிவிருத்திக்கான சாத்தியத்தை வேறெங்காகவதுதான் காண வேண்டும். திட்டவட்டமாக அதனால்தான், தோழர்கள் 'பிரென்னர்' மற்றும் 'ஸ்ரைனர்', நீங்கள் ''சோசலிச கலாச்சாரத்தின் ஒரு மறுமலர்ச்சிக்கு கற்பனாவாதம் முக்கியமானது'' என்று நம்புகிறீர்கள்.

16. Brenner on the family and backwardness

குடும்பம் மற்றும் பின்தங்கிய நிலைபற்றி பிரென்னர்

தோழர் பிரென்னர், உங்களைப் பொருத்தவரையில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டுவதற்கான அனேகமாக தாண்டமுடியாத தடைகளுக்கான பிரதான மூலவளத்தை மனித மனத்தின் காயம்பட்ட நிலையில்தான் காணமுடியும். இதற்கான குற்றம் நனவின்மீது குடும்பம் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். அதனால் சோசலிச நனவின் அபிவிருத்தியை நோக்கி எந்த ஒரு உண்மையான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்னர் இந்த நிலைமையைக் கையாள ஒரு வேலைத்திட்டமானது வகுக்கப்பட்டு, கட்சி வேலையின் குவிமையமாக்கப்படவேண்டும். ''குடும்பம் பற்றிய ஒரு கொள்கை சோசலிஸ்டுகளுக்கு தேவையா என்று ஒருவர் வாதிட வேண்டியதில்லை" என்று நீங்கள் உரத்துக் கூக்குரலிடுகிறீர்கள். ''வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் முழுமையான மனித வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு உலகத்தை படைப்பதற்கு நாம் போராடுகிறோம் என்பதால், பிள்ளைகளை சமூகமயப்படுத்தலுக்கு -அதாவது அவர்களை மனிதத்தன்மையானவர்களாக ஆக்குவதற்கு- பொறுப்பான அந்த நிறுவனத்தை சீர்செய்யாமல் இந்த குறிக்கோளை அடைதல் எண்ணிப் பார்க்க முடியாது என்பது தெளிவானது. ஒரு வர்க்க சமுதாயத்தில் அடிக்கடி ஆழமானதான காயங்கள் மனித ஆளுமையின் மீது ஏற்படுத்தப்படுகிறது. குடும்பமானது ''பாலியல் ஒடுக்குமுறை மற்றும் பின்தங்கிய நிலையை'' பிரதிநிதித்துவம் செய்கிறது. பீம்ஸ் இந்த தலையாய பிரச்சனையை பேசத் தவறியது ''கொஞ்சமும் நம்பமுடியாததாய் இருக்கிறது" என்று நீங்கள் திட்டவட்டமாய் கூறுகிறீர்கள். "மக்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைகளை எப்படி வாழ வேண்டும் என்று உத்தரவிடுவது சோசலிஸ்டுகளின் வேலை அல்ல" என்று எங்களுக்கு நீங்கள் உறுதியளிக்கும் அதே சமயம், நனவின் அபிவிருத்திக்கு குடும்பத்தினால் உருவாக்கப்படும் தடைகளை வெற்றி காண்பதற்கு "எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை'' பீம்ஸ் முழுக்க கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்" என்று நீங்கள் பிரமிப்படையும் மட்டத்திற்கு போய்விட்டீர்கள். பாலியல் ஒடுக்குமுறை மற்றும் பின்தங்கிய நிலைமை இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைத்திட்ட கோரிக்கைகள் தொடங்கி, சோசலிசத்தின் கீழ் தனிநபர் வாழ்க்கையின் தன்மை மற்றும் கூட்டுக்குடும்பத்திற்கான இலக்கு பற்றிய கல்வியூட்டும் விஷயதானங்கள் வரை", சோசலிஸ்டுகள் ''குடும்பம் பற்றி சொல்வதற்கு பெரிய பல விஷயங்கள் இருக்க வேண்டும்" என்று நீங்கள் வலியுறுத்துகிறீர்கள்.

இப்போது இருக்கும் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளை கொண்ட குடும்ப அமைப்பிற்கு (Nuclear family) ஒரு மாற்றீட்டிற்கு வாதாட புரட்சிகரமான இயக்கத்தை அர்ப்பணிக்க பீம்ஸ் தவறியதானது "சோசலிச 'தலையிடாக் கொள்கையின்’" ("Socialist ‘Laissez–faire’ ") ஒரு வடிவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. எதிர்கால குடும்பம் ''சோசலிச சமூகத்தினுள் தோன்றுகின்ற பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் தொடர்ந்து மாற்றமடையும் வடிவங்களின் அடிப்படையில் அபிவிருத்தியடையும்" என்ற பீம்ஸின் கூற்றை நிராகரித்து, நீங்கள் கூறுவதாவது: ''எவ்வாறாயினும், சோசலிசத்தின் முழுமையான அம்சமே, வரலாற்றில் முதல் தடவையாக குடும்பம் உட்பட ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனிதர்கள் நனவுபூர்வமாக வழிநடத்துவார்கள், என்பது தான்".

பிரென்னரால் முன்மொழியப்படும் சர்வரோக நிவாரணி "கூட்டுக்குடும்பமாகும்", அது "வில்ஹெம் ரெய்கினால் ஒரு முறை 'குடும்ப நோய்’ (Familyitis) என்று அழைக்கப்பட்டதிலிருந்து பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருமே உடைத்து வெளியே வருவதை சாத்தியம் ஆக்குகிறது. உணர்ச்சிபூர்வமாக அளவுக்கதிகமாக சுமையையும் கொண்டதும் நிர்ப்பந்தப்பட்டதுமான இந்த குடும்ப பிணைப்புகளின் நெருக்கும் சூழ்நிலையானது, பல ஆழமான மற்றும் சகித்துக்கொண்டு செல்லும் உளவியல் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கிறது." இந்த 'கூட்டுக்குடும்பம்' எப்படி நிறுவப்படும் மற்றும் அது தற்போதிருக்கும் நிலையிலிருந்து எப்படி வேறுபடும் என்பது பற்றி நீங்கள் ஏதோ தெளிவில்லாமல் கூறுகிறீர்கள். உங்களுடைய சீடர்களாக தம்மை கருதிக்கொள்பவர்கள் உங்கள் கற்பனாவாதத்தில் குடும்பம் எப்படி செயல்படும் என்பது பற்றிய ஒரு சில பொதுவான அடையாளங்களுடன் தங்களை திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்:

"அங்கே காதலர்களுக்கிடையில் ஆழமான பாலியல் மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகள் உள்ளது. மற்றும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலானவையும் கூட ஒரு கூட்டுக்குடும்பத்தில் சேர்க்கப்படவேண்டும். அந்த அர்த்தத்தில் 'கூட்டுக்குடும்பமானது' நியூக்கிளியர் குடும்பத்தை இல்லாமல் செய்யவில்லை. மாறாக இயங்கியல் அர்த்தத்தில் அதனையும் கடந்து செல்கிறது. வேறுவிதமாகச்சொன்னால் இது, களிப்புறும் காதல் மற்றும் பெற்றோரின் அன்பு இவற்றையெல்லாம் பாதுகாக்கும் அதே வேளை, முதலாளித்துவ சமூகத்தில் குடும்பவாழ்க்கையை இவ்வளவு துன்பமானதாக ஆக்கும் ஒடுக்குதல் உறவுமுறைகளையும் சமூக அந்நியப்படல்களையும் இல்லாமல் செய்கிறது.

தோழர் பிரென்னர், உங்களைப் பொறுத்தவரையில் குடும்பப் பிரச்சனைகள் வேரூன்றி இருப்பது சமூக நிலைமைகளில் அல்ல மாறாக தனிநபர் உளவியலில் தான். உங்களது வெறுப்பு, தீவிரமான துயரத்தை உற்பத்தி செய்வதாய் நீங்கள் உறுதிப்பாடு கொண்டிருக்கும் குடும்பத்திற்கு எதிராக நீங்கள் காட்டும் அளவுக்கு, தற்போதைய பொருளாதார அமைப்பிற்கு எதிராக அதிகமாக செலுத்தப்படாததாக இருக்கிறது. அதன் காரணமாக நீங்கள் சோசலிஸ்டுகளிடம் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் அவர்கள் ஒரு வேறுபட்ட, 'கூட்டுக்குடும்பம்' என்று அழைக்கப்படும், கற்பனா, உறவுமுறையை- கண்டுபிடித்து அதனை அவர்களுடைய வேலைத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்பதாகும். இது மார்க்சும் ஏங்கெல்ஸும் எடுத்த அணுகுமுறை பற்றிய குறிப்பிடத்தக்க அளவு தவறான பிரதிநிதித்துவத்தை அவசியமாய் கொண்டுள்ளது. [20]

அவரது அனைத்து தொலைப்பார்வை பகட்டுகள் இருந்தபோதிலும் பெரும்பாலான தொழிலாள வர்க்க குடும்பங்களின் வாழ்க்கை யதார்த்தங்கள் பற்றி அவர் கொஞ்சம் கூட அக்கறையின்றியும் தகவல் அறியாமலும் இருக்கிறார். குடும்ப அதிர்ச்சிகளின் உளவியல் மற்றும் பாலியல் பரிணாமத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் பிரென்னருக்கு, பெரும்பாலான தொழிலாள வர்க்க குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நடைமுறை அம்சங்கள் பற்றி சொல்வதற்கு அதிகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தரமான குழந்தை பராமரிப்பு சர்வவியாபகமாக கிடைப்பது பற்றிய ஒரு குறிப்பு ஓசையின்றி தூக்கிவீசப்பட்டுள்ளது. ஒரு சோசலிசப் புரட்சியானது நடைமுறை நடவடிக்கைகளில், சார்புரீதியாக மிகவும் சிறியதுதான் செய்ய முடியும் என்று நம்பவைக்கும் தோற்றத்தை நீங்கள் அளிக்கிறீர்கள். ஆனால் அது சமூக பின்தங்கிய நிலையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்துவதென்பது ஒரு புறம் இருக்க, தொழிலாள வர்க்க குடும்பங்களின் நிலைமைகளை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றும்.[21] "சோசலிசம் வந்தவுடன் குடும்பத்தின் பிரச்சினைகள் தானாக மறைந்து விடாது என்பது தான் பிரச்சினையின் சாரம்" என்று நீங்கள் எழுதுகிறீர்கள்.

தானாகவே ஏதாவது நடக்கும் என்று யாரெல்லாம் கற்பனை செய்தார்கள்? சோசலிச புரட்சியானது ஒருவரது கணினியில் தானாக - நிறுவும் நிரலை இயக்குவதற்கு ஒப்பானது அல்ல (அது அவ்வாறு நடக்கும் போது, வழக்கமாக எதிர்பார்த்திராத சிக்கல்கள் நிரம்பியதான ஒரு நிகழ்முறையாக இருப்பது தான் காணக்கூடியதாக இருக்கிறது). ஆனால், குதர்க்கவாதிகளுக்கே வழக்கமான இந்த வகையான குறிப்பு, சோசலிசத்தின் அடிப்படை முன்னோக்கை ஏளனப்படுத்தும் நோக்கம் கொண்டது- மனித துன்பங்களின் அனைத்து வடிவங்களிலும் இருந்து நிவாரணம் பெறுவதற்கான திறவுகோல் சமகால சமூகத்தின் அடிப்படையாக இருக்கும் தற்போதைய முதலாளித்துவ சொத்துறவுகளை தூக்கி வீசுவதில் தான் இருக்கிறது. உற்பத்திச்சாதனங்களின் மீதான தனியுடைமையினால் முன்வைக்கப்படும் பெரும் பிரச்சனைக்கான தீர்வு, மனித நிலைமையின் பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை படிப்படியாக தீர்ப்பதற்கான வழியை திறந்துவிடும்.

இல்லை, குடும்பத்தின்-உறவுமுறைகளுக்குள்ளான அனைத்து பிரச்சனைகளும் சோசலிசத்தின் முதல் வருடத்திலோ அல்லது இன்னும் சொல்லப் போனால், முதல் நூற்றாண்டிலோ கூட தீர்க்கப்படமாட்டாது. சோசலிசத்தின் கீழ் விருப்பமான ஜோடிகளுக்கிடையிலான அனைத்து திருமணங்கள் அல்லது இணைப்புக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் என்றோ அல்லது அனைத்து பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்கள் மீது, அதேபோல் பெற்றோர்கள் பிள்ளைகள் மீதும், திருப்தியாக இருப்பார்கள் என்றோ, மாறாக இருக்கும் என்றோ யாருமே நியாயமாக அனுமானித்துக் கொள்ள முடியாது. எவ்வாறாயினும் நாம் எதை திட்டவட்டமாக ஊகிக்க முடியும் என்றால், தற்போதைய குடும்ப கஷ்டம் மற்றும் துன்பத்தின் ஒரு பெரும் பகுதிக்கான பிரதான சடரீதியான காரணங்களை சோசலிச வழிகளின் பாதையில் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பை ஒரு புரட்சிகரமான முறையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலமாக மிக சீக்கிரமாக தணிக்கமுடியும்.

ஒரு நவீன சோசலிச வேலைத்திட்டமானது 21-ம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பிரச்சனைகள் அவை தாமாகவே எப்படி ஸ்தூலமாக வெளிப்படுத்தப்படுகின்றனவோ அவற்றுக்கு நடைமுறை ரீதியில் அது முகம் கொடுக்கவேண்டும். 'மிகப்பெரும்பான்மையான தாய்மார்கள் அவர்களது வீடுகளுக்கு வெளியே வேலைகளை வைத்திருக்கும் ஒரு சமயத்தில் ''வீட்டு அடிமைத்தனத்தில் இருந்து'' பெண்களை விடுவிப்பது பற்றிய பிரென்னரின் குறிப்புக்கள் வியப்பளிக்கிறது. "தகப்பனுக்கு சிறந்தது தெரியும் (Father knows best)" என்ற இரண்டு பெற்றோர் மாதிரியுடன் தொடர்புபடக்கூடிய வீடுகளின் சதவீதம், அந்த தொடர் ஒலிபரப்பான 1950களில் இருந்ததின் ஒரு சிறு பகுதியாகும் என்பதை நீங்கள் வெளிப்படையாகவே கவனிக்கத் தவறியிருக்கிறீர்கள். மற்றும் நாம் கூடுதலாக சொல்லக்கூடியது, குடும்பத்தலைவன் (Pater familias) என்ற சர்வாதிகார போக்குடைய காட்சி சமகால யதார்த்தத்துடன், குறிப்பாக, ''நட்பு நீதிமன்றம்'' என்று அழைக்கப்படும் அமைப்பின் (அது பிள்ளை- பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட அவரது வார சம்பளத்தில் இருந்து ஏறக்குறைய பாதியளவு தொகையைக் கூட பிடித்தம் செய்ய கட்டளையிட முடியும்) சட்டரீதியான சித்தரவதை பிடிகளுக்குள் சிக்கியதாக தம்மை காண்கின்ற தொழிலாள வர்க்க தந்தைகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. தொழிலாள வர்க்க குடும்பங்கள் நிதி கஷ்டங்களினால் அல்லல்படுகின்றனர், அதிலிருந்து தப்புவதற்கு அவர்களுக்கு வழி ஏதும் காண முடியவில்லை. சமூக வாழ்க்கையின் பிரம்மாண்டமான சிக்கலான நிலைக்கும் மற்றும் அது குடும்பங்கள் மீது சுமத்தும் அழுத்தத்திற்கும் தேவையானது ஒரு புதிய குடும்ப வடிவத்தை கண்டுபிடிப்பது அல்ல, மாறாக தற்போது ஏறக்குறைய தனிநபர்கள் மீது வீழ்கின்றதாய் இருக்கும் பாரங்களின் சுமையை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் மாற்றம் செய்வதாக இருக்கும்.

ஆனால் குடும்பங்கள் பற்றிய பிரென்னரது விவாதத்தின் முக்கியத்துவம் அவர் முன்னெடுக்கின்ற கோரிக்கைகளில் தங்கியிருக்கவில்லை. மாறாக சமகாலத்திய நவீன- கற்பனாவாதத்தின் முழுமையான கருத்துவாத கண்ணோட்டம் மற்றும் வழிமுறையின் மீது அவர் அறியாமல் பாய்ச்சுகின்ற வெளிச்சத்தில் தான் தங்கியுள்ளது. அதாவது குடும்பம் என்பது சமூக பின்தங்கிய நிலையின் ஒரு கோட்டையாகும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

ஆனால், எப்போதும் போல், இந்த பின்தங்கிய நிலைக்கான மூலவளத்தை நீங்கள் காண்பது சமூகத்தின் பொருளாதார அமைப்பில் அல்ல, மாறாக தனிநபர் உளவியலில்தான். குறிப்பாக 'அது ஒரு மனிதனின் "உறைந்து போன பரீட்சிக்கப்படாத கடந்த காலத்தில்'' நீடிக்கிறதான "ஆழ்மனதில் பொதிந்திருக்கும் ஒடுக்கப்பட்ட உணர்வுகளில்". பொருளாதார அமைப்பில் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், நீடிக்கின்ற மற்றும் தன்னைத்தானே தூண்டிக் கொள்கிற, பின்தங்கிய நிலையை வெல்வதில் நிரூபணமாகும் என்ற கண்ணோட்டத்தை நீங்கள் எதிர்க்கின்றீர்கள். ஒரு வேறுபட்ட வகை தலையீடு அவசியமானதாக இருக்கும்: ''அந்த தலையீட்டின் உள்ளடக்கம் பற்றியது தான் இந்த கலந்துரையாடல் மொத்தமும்- பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மற்றும் குடும்பத்தை சோசலிச உருமாற்றம் செய்வது ஆகியவை, ஏனென்றால் மனித ஆளுமையின் வேரில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கான ஒரே வழி மனிதர்கள் வளரும் விதத்தை மாற்றுவது தான்.'' [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது]

உங்களின் முன்னோக்கிற்கும் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் முன்னோக்கிற்கும் இடையிலுள்ள பிளவை இதனை விடவும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. உங்களது முன்மொழிவுகளும் முன்னோக்கும் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் அதன் விளைவு சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைப்பதாகத் தான் இருக்கும். முழுமையான சமூக- பொருளாதார அமைப்பை ஆளுமை செய்யும் புறநிலையான விதிகள் மீதான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான புரிதலை அபிவிருத்தி செய்வதை அடைப்படையாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான -மூலோபாய நோக்குநிலையை தனது குறிக்கோளாகக்கொண்ட ஒரு சர்வதேச கட்சிக்கான அவசியம் எதுவும் அங்கே இருக்காது. உளவியல் சிகிச்சையை மையமாக கொண்ட ஒரு அமைப்பினால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதியீடு செய்யப்படும், அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நனவற்ற முறையில் இருக்கும் ''ஆழ்மனதின் ஒடுக்கப்பட்ட உணர்வுகளை'' அது ஆய்வு செய்வதாயும், மற்றும் குடும்ப கட்டமைப்பினுள் பொதிந்து இருப்பதாக பிரென்னர் நம்புகின்ற பாலியல் கவலைகளுக்கு அது முகம் கொடுப்பதாயும் இருக்கும்.

இந்த ஆழமான நோக்குநிலை தவறிய முன்னோக்கின் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் பிற்போக்குத்தனமான தாக்கங்கள் பற்றி நாம் சற்று பின்னர் வருவோம். ஆனால் முதலில் பிரென்னரின் வாதத்தில் உள்ள அப்பட்டமான முரண்பாடு பற்றி கவனத்தில் எடுப்பது அவசியமாகும். நீங்கள் கூறுவது போல் சமூக பின்தங்கிய நிலையை வெல்வதற்கு உளவியல் மறு நிவாரணம், மனித ஆளுமையின் மறுகட்டுமானம் மற்றும் குடும்பத்தின் உருமாற்றம் ஆகியவற்றை கொண்ட ஒரு பிரம்மாண்டமான வேலைத்திட்டத்துக்கு குறைந்த எதுவும் அவசியப்படாதெனில், சமூக மறுகட்டுமானத்தின் முன் கண்டிராத செயற்திட்டம் புரட்சியில்தான் தங்கி இருக்கின்ற நிலையில், எப்படி வெகுஜனங்களின் நனவானது புரட்சியை சாத்தியமாக்கும் ஒரு புள்ளிக்கு என்றும் உயர்த்தப்பட முடியும்? பிரென்னர் கூறுவதின்படி அவர்களது வளர்ப்பு விதத்தின் ஒரு விளைவாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள ஒரு சமூகத்தில் சோசலிசம் எப்படி ஒரு வெகுஜன இயக்கமாக மாற முடியும்? பிரென்னரால் இந்த முரண்பாட்டுக்கு தீர்வுகாணமுடியாது. அதற்குப் பதிலாக, அவர் பழைய கற்பனாவாதிகளின் வரலாற்றை நிராகரிக்கும் கருத்துருக்களை மறுஉற்பத்தி செய்வதன் மூலம் அந்த முரண்பாட்டை ஆழப்படுத்துகிறார். அதாவது "மனித ஆளுமையின் வேரில் இருக்கும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான ஒரே வழி மனிதர்கள் வளரும் விதத்தை மாற்றுவது தான்" என்று பிரென்னர் பழைய கற்பனாவாதிகளை போலவே உறுதிபடக் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாம் அவர்களுக்கு ஒரு வேறுபட்ட வகையான குடும்பத்தை வழங்கவேண்டும். ஆனால் இதனை சோசலிச புரட்சிக்கு முன்னதாக செய்யமுடியாது என்பதன் தெளிவான காரணங்களினால், அதன் அர்த்தம் ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மக்கள் இன்றிருக்கும் நிலையிலிருந்து எடுக்கும் நடவடிக்கைகளில் தங்கியிருக்கவேண்டும் - அது ஒரு புரட்சிக்கான சாத்தியத்தை இல்லாமல் செய்வதுபோல் ஆகும். இருப்பினும் ஏதோ ஒரு அற்புதத்தின் மூலம், இப்படியான அனைத்து பாதிக்கப்பட்ட மனிதர்களும் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து விடுகிறார்கள் என்றால், அப்போது அதன்பின் அவர்களை செப்பம்செய்து மீண்டும் கல்வியூட்டல் செய்வது அவசியமானதாக மாறும். சமூகத்தை நடத்துவது என்பது ''ஒரு கணிசமான காலகட்டத்திற்கு, குறிப்புரைக்கப்பட்ட நனவின் மூலம் கொள்கையை ஏற்று தனதாக்கிக் கொண்ட, சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட சோசலிஸ்டுகளின் கைகளில் விடப்படவேண்டும்" என்ற பிரென்னரின் உறுதிப்பாடானது அவரது கருத்துவாத திட்டத்திலிருந்து தர்க்க ரீதியாக வருகிறது.[22]

17. Bernstein, science and utopianism

பேர்ன்ஸ்டைன், விஞ்ஞானம் மற்றும் கற்பனாவாதம்

பிரென்னரின் ஆவணம் மற்றும் உங்களது இணைந்த கடிதம் இரண்டிலுமே நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால், இரண்டாம் அகிலத்தின் சகாப்தத்தில் கற்பனாவாதத்திற்கான எதிர்ப்பு பெருமளவில் சந்தர்ப்பவாத வளர்ச்சியின் ஒரு விளைபொருளாகும். ''போருக்கு முந்தைய இரண்டாம் அகிலத்தில் 'விஞ்ஞானம்' என்பது ஒரு ஆர்வமின்மையுடன் மேற்கொள்ளப்பட்ட தத்துவ அபிவிருத்தி அல்ல. (நோர்த் அப்படித்தான் நம்புவதாய் தெரிகிறது); 'புற நிலைமைகள்' அவற்றைப் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லி புரட்சிகர பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான காரணமாக அது இருந்தது. அதனால் தான் கற்பனாவாதத்தை ஏறக்குறைய ஒரு தடைசெய்யப்பட்ட ஒன்றாக மாற்ற அவசியம் வந்தது, ஏனென்றால் அது அச்சுறுத்தியது விஞ்ஞானத்தை அல்ல, மாறாக இந்த புறநிலைவாதத்தை. ஆனாலும், மார்க்சிசத்தின் உண்மையான அபிவிருத்தியில், விஞ்ஞான சோசலிசம் அதன் கற்பனாவாத முன்னோடிகளின் ஒரு இயங்கியல் ரீதியாக "செம்மைப்படுத்திய" வடிவமாக இருந்தது, அத்துடன் கற்பனாவாதமும் விஞ்ஞானமும் ஒரு திட்டவட்டமாய் பிளவுற்ற இருகிளைகளாக இருக்கவில்லை, மாறாக எதிரிடைகளின் ஐக்கியமாகத் தான் இருந்தது. இவையெல்லாம் கோதா வேலைத்திட்டத்திற்கான விமர்சனம் அல்லது அரசும் புரட்சியும் போன்ற பெரும் படைப்புகளில், மற்றும் சோம்பேறியாக இருப்பதற்கான உரிமை என்ற போல் லாபர்கேயின் ஒரு குட்டி சிறு ரத்தினம் போன்ற படைப்பு பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை, வெளிப்படக் காண கூடியதாக உள்ளது.''

போலி-இயங்கியல் இருமொழி சொற்றொடர் பிரயோகத்தின் மூலம் பூசி மெஉகப்பட்டிருக்கும், கற்பனாவாத-எதிர்ப்பின் மூலவளங்கள் பற்றிய இந்த மதிப்பீடு சாராம்சத்தில் தவறானது.[23] பேர்ன்ஸ்டைன் கற்பனாவாதத்தின் எதிரி அல்ல. சோசலிச இயக்கமானது விஞ்ஞானத்தின் அடிப்படையில் அதன் இருப்பை நியாயப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்துருவுக்கு எதிராக பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். அவர் பின்வருமாறு எழுதினார்: ''சோசலிசம் என்பது, தனது நிலைக்கு முன்னெப்போதையும் விட மிகத் தெளிவானதொரு வகையில் வடிவளிக்கும் வகையில், ஒரு நடைமுறை ரீதியான பாட்டாளி வர்க்க இயக்கமாக பல நாடுகளில் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்த போதிலும், ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவமாக பெரும் பின்னடைவுகளையும் அனுபவித்து, தனது பிரதிநிதிகளின் வெறுப்பூட்டும் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களின் ஒலிகளுக்கு இடையில் தனது கருத்து லீதியான முரண்பாடற்ற தன்மை மற்றும் செவிக்கினிய சந்தேகமும் இல்லை”. ஆக, சோசலிசத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறதா என்கின்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. விஞ்ஞான சோசலிசத்தின் சாத்தியம் பற்றிய இந்தக் கவலையுடன் நான் கூடுதலாக சேர்த்துக்கொள்ள விரும்பும் கேள்வி என்னவென்றால் ஒரு விஞ்ஞானபூர்வமான சோசலிசம் தேவைதானா என்பதாகும். ”(”விஞ்ஞானபூர்வமான சோசலிசம் எப்படி சாத்தியம்," எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் தேர்வு நூல்கள் 1900-1921 (நியூ ஜேர்சி, 1996) பக்கம் 94)

மார்க்சிசம் கற்பனாவாதத்துடன் அதற்குள்ள தொடர்புகளை மறுப்பது அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ கூட பேர்ன்ஸ்டைன் நம்பவில்லை. அது ஒரு சோசலிச இயக்கத்தில் அவசியமாகவே இருக்கிறது என்று அவர் நம்பினார். "ஆயினும், ஒருவர் அதனை ஒரு நிபந்தனை என்றோ, தத்துவம் என்றோ அல்லது ஒரு இயக்கம் என்றோ எப்படி வரையறை செய்தாலும் சரி, சோசலிசம் எப்பொழுதுமே ஒரு கருத்துவாத அம்சத்தினால், அந்த அம்சம் கருத்தியல் குறிக்கோளையோ அத்தகைய ஒரு கருத்தியல் குறிக்கோளை நோக்கிய இயக்கத்தையோ குறிக்கலாம் - ஊடுருவிப் பரவியுள்ளது. இவ்வாறாக சோசலிசம் என்பது அப்பாற்பட்டதன் ஒரு பகுதியாகும்- தெளிவுபட, அது நாம் வாழும் கிரகத்திற்கு அப்பாற்பட்டதல்ல. மாறாக ஒரு சாதகமான அனுபவத்தை கொண்டிருக்கும் ஒன்றிற்கு அப்பாற்பட்டது.'' [அதே நூல் பக்கம் 95)]

''கற்பனாவாதத்தை விஞ்ஞானத்திற்கு எதிராக முன்நிறுத்தி அதன் தர்க்கரீதியான முடிவுக்கு பேர்ன்ஸ்டைன்¢ தள்ளுகிறார்'' என்ற பிரென்னரின் கூற்று வெறுமனே நவீன திருத்தல்வாதத்தின் ஸ்தாபகர் எழுதியதை தவறாக பிரதிநிதித்துவம் செய்வதாகவே உள்ளது. அவர் கற்பனாவாதம் என்கிற பதத்தை "யதார்த்தமற்ற கனவுகள் மற்றும் கற்பனைகளுக்கான ஒரு நாகரிக வார்த்தையாய்" தான் பயன்படுத்தவில்லை என்பதை அவர் பெரும் கவனத்துடன் விளக்குகிறார். அவ்வாறாக அந்த பதத்தை பயன்படுத்துவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்று மகத்தான கற்பனாவாத கனவு கண்டவர்கள் மற்றும் நவீன சோசலிசத்தின் முன்னோடிகளுக்கு மிகப்பெரும் அcதி இழைப்பதாக இருக்கும்'' என்று அவர் எதிர்ப்பு தெரிவித்தார்..........(அதே நூல் பக்கம் 96) கற்பனாவாதத்தையும் மார்க்ஸிசத்தையும் எதிரிடைகளாக முன் வைப்பதற்கு அப்பாற்பட்டு பேர்ன்ஸ்டைன் வாதிட்டார்; ''நாம் இந்த மூன்று கற்பனாவாதிகளின் (ஒவன், செயின்ட் சைமன் மற்றும் ஃபூரியர்) தத்துவங்களை மார்க்சின் தத்துவத்துடன் ஆய்வு செய்து ஒப்பிடுவோமாயின், மார்க்ஸ் அந்த விஞ்ஞான அம்சத்தை ஒரு உயர்ந்த மட்டத்துக்கு வளர்ச்சி செய்து வலியுறுத்தியுள்ளார் என்பதை நாம் காண முடியும். ஆனால் கற்பனாவாத படைப்புகளிலும் சரி அல்லது மார்க்சின் போதனைகளிலும் சரி விஞ்ஞானர் தான் எல்லாமே என்பதாக இல்லை. நிச்சயமாக மார்க்ஸ் விருப்பம், கற்பனை, மற்றும் மனச்சாய்வு இவற்றைச் சுற்றிய எல்லைகளைச் குறுக்கி வரைந்தார் தான். ஆனால் அவர் அதனை முழுமையாக அழித்து விடவில்லை." [அதே நூல் பக்கம் 97)]

மார்க்சின் படைப்புக்கும் அவரது கற்பனாவாத முன்னோடிகளின் படைப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை ஏங்கல்ஸ் மிகைப்படுத்தியதாக பேர்ன்ஸ்டைன் குற்றம் சாட்டினார். ''ஒரு புறம் கற்பனாவாதிகளை அவர்களது படைப்புகளில் எண்ணத்துக்கான பாத்திரத்துக்கு மிகை வலியுறுத்தல் செய்வதாக ஒரு சாதகமற்ற வெளிச்சத்தில் அவர்களை காண்பிக்கின்றார், அவர்கள் உண்மையிலேயே புதிய கண்டுபிடிப்புகளுக்கு (Invention) மேலாக இருப்பதை கண்டுபிடிப்பதற்கு (Discovery) வலியுறுத்தல் செய்திருந்தபோதிலும் கூட. மறுபுறம் நவீன சோசலிசமானது எந்த வடிவிலான புதிய கண்டுபிடிப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டது என்று அவர் பிரகடனம் செய்கிறார். எனது அபிப்பிராயத்தில் சோசலிசமானது 'புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ‘கற்பனைகளிலிருந்து சுதந்திரமாக' எப்போதுமே இருந்ததில்லை, இனிமேலும் இருக்கமாட்டாது’." (அதே நூல் பக்கம் 97)

இப்படியான பந்திகள் மிகவும் தெளிவாக்குவது என்னவென்றால், பேர்ன்ஸ்டைன் அவரது திருத்தல்வாத திட்டத்துக்கான பிரதான சவால் கற்பனாவாதத்திலிருந்து தோன்றவில்லை மாறாக சோசலிசத்தை விஞ்ஞானத்துடன் ஒன்றாக அடையாளம் காண்பதிலிருந்து தோன்றியது என்பதை அறிந்து கொண்டார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் "புறநிலைவாதம்'' மற்றும் ''பங்கெடுக்காமை'' யை தாக்கும்போது நீங்கள்தான் பேர்ன்ஸ்டைனின் நிலைப்பாடுகளை எதிரொலிக்கின்றீர்கள். அதற்கு மேலாக ஒரு புதிய சோசலிச கலாச்சாரத்துக்கான வேலைத்திட்ட அடிப்படையாக ''சோசலிச கருத்துவாதத்தை'' புதுப்பிப்பதற்கான உங்களது தொடர்ச்சியான அழைப்பு உங்களை ஒரு முக்கியமான மெய்யியல் விஷயத்தில் முழுமையாக திருத்தல்வாதிகளின் முகாமுக்குள் நிறுத்துகிறது. 1860-களின் பிற்பகுதியில் தொடங்கி, இறுதியாக பேர்ன்ஸ்டைன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தத்துவார்த்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் ஒரு மிகப்பிரதான பாத்திரத்தை வகித்த ''கான்ட்டுக்கு (Kant)திரும்புவோம்'' என்ற இயக்கத்தின் பின் அமைந்திருந்த கருத்துரு என்னவென்றால், சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் அவசியமில்லை என்பதாகும். கட்டாய விதி (Categorical imperative) - ("உங்களில் இருப்பதையானாலும் சரி அல்லது வேறு எந்த மனிதரில் இருப்பதையானாலும் சரி, மனிதத்தை எப்பொழுதுமே ஒரு வழிவகையாக மட்டுமன்றி, அதேசமயத்தில் அதுவே இறுதி இலக்காகவும் எப்போதும் கருதும் வகையில் செயல்படுங்கள்.") கான்ட்டின் இரண்டாவது சூத்திரப்படுத்தலில் வெளிப்பாட்டை காண்பது போன்ற அறநெறி கருத்தியல் இலக்குகளை அழைப்பது என்பது வரலாற்று நிர்ணயவாதம் குறித்த மார்க்சிச கருத்துருவை போன்ற மட்டத்திற்கு சோசலிசப் போராட்டத்திற்கு சேவை செய்ய முடியும். உண்மையிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிந்தைய கால ஜேர்மனியில் இருந்த இடதுசாரி கல்வியாளர்களில் ஒரு பிரிவினரான கார்ல் வொலென்டர் போன்றவர்கள், சோசலிச இயக்கமானது அதன் மெய்யியலுக்கான வழிமரபை கான்டில் தான் தேட வேண்டும் என்று வாதிட்டனர். மார்க்சிசத்தின் அடிப்படையான வரலாற்று கருத்துருவாக்கங்களை தூக்கி வீசுவதற்கான உங்களது சொந்த தவறான தகவலின்படியான அவசரத்தில் உங்களது சொந்த வாதங்களின் தத்துவார்த்த வேர்கள் மற்றும் பிரதிவிளைவுகள் பற்றி நீங்கள் சற்றும் அக்கறை செலுத்தவில்லை.

18. Neo-utopianism and the demoralization of the petty-bourgeois left
நவீன-கற்பனாவாதமும் குட்டி முதலாளித்துவ இடதின் விரக்தியும்

நவீன கற்பனாவாதம் பற்றிய எனது குறிப்பு என்பது நான் கட்டி எழுப்பிய "வெறுமனே ஒரு வைக்கோல் பொம்மை" என்பதாக உங்கள் ஆவணம் கூறுகிறது. இந்தப் போக்கு இருக்கிறது என்பதற்கும் அது சமகாலத்திய அரசியல் அவநம்பிக்கையின் ஒரு வடிவத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதற்கு ஆதாரமாகவும் நான் வின்சென்ட் ஜியோ ஹெகன் என்பவரின் கற்பனாவாதமும் மார்க்சிசமும் என்ற ஒரு நூலிலிருந்து தான் மேற்கோள் காட்டுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில், தேவையான மற்றும் தேவையற்ற கற்பனாவாதங்கள் என்று தலைப்பிடப்பட்ட 2000ம் ஆண்டிற்கான 'சோசலிஸ்ட் ரெஜிஸ்டர்'ல் இருந்தும் மேற்கோள் காட்டியிருந்தேன். எவ்வாறாயினும் இந்த குறிப்பிட்ட நூலிலிருந்து மேலும் தாராளமாக நான் மேற்கோள்கள் காட்டியிருக்கவேண்டும், அந்த குறைபாடானது இலகுவாக சரிசெய்யப்பட்டுள்ளது. முன்னுரையில் இருந்து மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள்:

"சோசலிஸ்ட் ரெஜிஸ்டாரின் இந்த தொகுதியின் கருப்பொருளானது முதலாவதாக 1995-ல் மனதில் பின்வரும் பொதுவான கேள்வியுடன் கருத்தில் கொள்ளப்பட்ட.து: மில்லெனியத்தின் முடிவை நாம் நெருங்கும் சமயத்தில், 19-ம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் கருத்துருவம் பெற்று 20-ம் நூற்றாண்டில் பல்வேறுவிதமாக அமுல்படுத்தப்பட்ட மகத்தான முதல் சோசலிச திட்டத்தை அடுத்து தொடர இருப்பது என்ன? எவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இடதுசாரி அறிவுஜீவிகளின் மூளைகளானாலும் அவற்றை புரிந்து கொள்வதின் மூலம் இதற்கு விடை காண முடியும் என்றெல்லாம் எமக்கு எந்த பிரம்மையும் கிடையாது. ஆனால் இடதுகளின் இலட்சியநோக்கையும் ஆன்மாவையும் புதுப்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று நாம் நினைத்தோம், அந்த நோக்காகத்திற்கு ரெஜிஸ்டர் ஏதாவது உபயோகமாக பங்களிப்பு செய்ய முடியும் என்றும் நாங்கள் சிந்தித்தோம். கோட்பாட்டு ரீதியாகவும் ஒரு வெளிவரையாகவும் நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்க ஒரு மேம்பட்ட சமூகத்திற்கான நம்பிக்கை இல்லாமல் தொடர்ந்த அரசியல் போராட்டம் என்பது சாத்தியமில்லாதது என்கின்ற உண்மையை புறக்கணித்து, அது கற்பனாவாதத்தை சேர்ந்தது என்பதாலேயே "விஞ்ஞானபூர்வமற்றதாக" கற்பனாவாத சிந்தனையை நிராகரித்த ஒருவகை மார்க்சிச சிந்தனை மரபில் இருந்து நாம் முறித்துக் கொள்ள விரும்பினோம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி, அத்துடன் சோசலிச வேலைத்திட்டத்துடன் எவ்விதத்திலும் அடையாளம் காணப்படுவதை 'மூன்றாம் வழி' சமூக ஜனநாயகம் நிராகரிப்பது ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலையில், இப்போது, குறிப்பாக நவீன-தாராளவாத மீட்சியின் வளரும் நெருக்கடியின் உள்ளடக்கத்தில், கற்பனைவளமான சிந்தனைக்கு இடமும் அவசியமும் இருப்பதாக நாங்கள் குறிப்பாக உணர்ந்தோம். (ஸபோல்க் 1999, பக்கம் vii). நவீன கற்பனாவாதத்துக்கும் அறிவுஜீவிகள், சோசலிஸ்டுகள் மற்றும் முன்னாள் தீவிரப்போக்கினரின் ஒரு தட்டினர் மத்தியில் நிலவும் விரக்திக்கும் இடையிலான தெளிவான இணைப்பு இந்த தொகுதிக்கான முதலாவது பங்களிப்பில் ஸ்தாபிக்கப்பட்டது. அது ''நம்பிக்கையின்மையைக் கடந்து: சோசலிச கற்பனையை ஊக்குவித்தல்'' என்று தலைப்பிடப்பட்டது.

லியோ பெனிட்ச் மற்றும் சாம் கின்டினால் எழுதப்பட்டது என்பதால், பிரென்னரின் கட்டுரையில் இருக்கும் பல கருப்பொருட்கள் இந்த அத்தியாயத்தில் முன் கூட்டியே எதிர்பார்க்கப்படுவனவாக உள்ளன - அதில் ஏர்ன்ஸ்ட் பிளாக்கின் படைப்பு அழைக்கப்பட்டதும் அடங்கும். அவரிடமிருந்து தான் தோழர் பிரனர் தனது கற்பனாவாதத்தின் பாதைக்கான தலைப்பை (ஒரு விஷயத்தை அறிவது அதன் முடிவை அறிவதாகும்)[24] பெற்றார். பிரென்னரின் சொந்த படைப்பு தெளிவாகவே இந்த அத்தியாயத்தின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. எனவே, சமகாலத்திய கற்பனாவாதமானது நம்பிக்கையின்மைக்கான ஒரு பதிலிறுப்பு என்பதை நீங்கள் நிராகரிப்பது சற்று விநோதமாக உள்ளது, ஏனென்றால் பெனிட்ச் மற்றும் ஜின்டின் சுட்டிக்காட்டுவதுபோல் பிளாக்சின் சொந்த தொடக்க மூலப் படைப்பே 1930-களின் அழிவுகளினால் உருவாக்கப்பட்ட அவநம்பிக்கையை எதிர்கொள்வதற்கான முயற்சியினால் திட்டவட்டமாக ஊக்குவிக்கப்பட்டது. அவர்கள் குறிப்பிட்டதுபோல் ''பிளாக்கின் பதிலிறுப்பானது கற்பனாவாத கருத்துக்கு புத்துயிரூட்டுவதற்கான முயற்சியாகும். சோசலிச அரசியல், ஓரம் கட்டப்படுகின்ற ஒரு உலகில் கூட நாம், பகற்கனவுகளில் தான் என்றாலும், மகிழ்ச்சி மற்றும் நல்லிணத்திற்கான அழிக்க முடியாத மனித ஆசையை, பொருளாதார போட்டி, தனியுடைமை மற்றும் அதிகாரத்துவ அரசு ஆகியவற்றிற்கு எதிராக சீராக மோதுகின்ற ஒரு ''ஏக்கத்தை கண்டுபிடிக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்." (அதே நூல் பக்கம் 2)

மார்க்சிசம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்தன்மை பற்றி யதார்த்தம் அற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டது என்ற தங்களது சொந்த நம்பிக்கையை பனிச்சும் கின்டினும் இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர்கள் எழுதியதாவது: ''தலைமுறைகளாக சோசலிஸ்டுகளுக்கு முன்மாதிரியாக தோன்றிய மார்க்சின் வரலாற்று ரீதியான நன்னம்பிக்கையானது, கற்பனாவாத கனவின் அளவு மற்றும் எல்லையை குறைமதிப்பீடு செய்ததுடன், முதலாளித்துவம் உருவாக்கிய முகவாண்மை தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் என கௌரவிக்கும் அல்லது பொறுப்பு சுமத்துவதுடனும் இணைந்து வந்தது என்பதைக் கூறியாக வேண்டும். மார்க்சின் விசாலமான வரலாற்றுரீதியாக ஊக்கம்பெற்ற புரட்சி/ மாற்றம் பற்றிய பார்வை தொலைநோக்கிற்கும், அரசியல் பொருளாதாரம் தொடர்பான அவரது விரிவான விமர்சனத்துக்கும் இடையில், அங்கே ஆய்வு ரீதியான மற்றும் மூலோபாய ரீதியான இடைவெளி ஒன்று உள்ளது. அது சிக்கலான தொழிலாள வர்க்க திறன்கள் பற்றிய பிரச்சனைக்கு முகம் கொடுக்காமல் நிரப்ப முடியாதது. பிந்தைய மார்க்சிஸ்டுகள் சிலசமயம் அதற்கு முகம் கொடுத்தனர், ஆனால் ஒருபோதும் வெற்றிகாணவில்லை. ஒவ்வொரு முற்போக்கான சமூக இயக்கமும் சீக்கிரமாகவோ அல்லது பிந்தியோ தப்பிக்கமுடியாத ஒரு உண்மையை எதிர்கொண்டாக வேண்டும்: அது முதலாளித்துவம் நமது திறன்களை முடக்குகிறது, நமது கனவுகளை தடைப்படுத்துகிறது மற்றும் நமது அரசியலையும் உள்சேர்த்துக் கொள்கிறது'' [அதே நூல் பக்கம் - 5)]

தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரென்னர்: அனைத்துலகக் குழுவை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் உங்களது உரிமை. ஆனால் எங்களை முட்டாள்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். குட்டி முதலாளித்துவ அரசியல் மற்றும் அறிவுஜீவி வட்டங்களில் சுற்றிவரும் இலக்கியம் சம்பந்தமாக நாங்கள் மிகவும் பழக்கப்பட்டவர்கள், அத்துடன் நீங்கள் வேலைசெய்து வரும் ஆதாரவளங்களையும் (Sources) அடையாளம் காணக்கூடியவர்களாக இருக்கிறோம். எனவே தயவுசெய்து நவீன-கற்பனாவாதம் -மற்றும் அதிலிருந்து பெறப்படுகின்ற அவநம்பிக்கை- என்பது உங்களது மேதாவித்தனமான சொந்த கருத்துக்களை எதிர் கொள்வதற்காக நாங்கள் உருவாக்கிய ஒரு "வைக்கோல் பொம்மை"( Straw man) என்று வாதிடாதீர்கள். நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை, மாறாக, உங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள்.

ஜியோஹேகனுடைய கற்பனாவாதம் மற்றும் மார்க்சிசம் பற்றிய எனது முதலாவது சொற்பொழிவிலுள்ள குறிப்புகள் பற்றி நீங்கள் முறையீடு செய்கிறீர்கள். அது ''நாஜி பாணியிலிலான கதை கட்டலின் ஒரு இடது பதிப்பிற்காக ஜியோஹேகன் (எனவே 'நவீன கற்பனாவாதம்') வாதிடுகிறார் என்பதை நிரூபிக்கும் நோக்கத்தில், பொருள் சிதையும் வகையில் பிரிக்கப்பட்ட மேற்கோள் உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கெட்ட நோக்கத்துடனான விமர்சனம்" என்பதாய் கூறுகிறீர்கள். தொடர்ந்து எழுதுகிறீர்கள்: "அந்த நூலை படிக்கின்ற எவருக்குமே தெரிவது போல, இது மீண்டும் ஒரு அபத்தமாகும். நோர்த்தினால் மேற்கோள் காட்டப்படும் மேற்கோளில் ஜியோ ஹேகன் சொல்லுகின்ற விஷயம் என்னவென்றால் வெகுஜன உளவியலுக்கு விண்ணப்பங்கள் செய்வதில் ஜேர்மன் இடதுசாரியை விட நாஜிகள் மிகவும் திறம்பட்டவர்களாக இருந்தனர்".[25]

பொருள் சிதையும் வகையில் மேற்கோள் உள்ளடக்கம் பிரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, ஜியோஹேகனிலிருந்து மேலும் நெடிய மேற்கோள்கள் காட்டப்பட்டிருந்தால், அது, மனித நடத்தையை ஊக்குவிப்பதில் பகுத்தறிவின்மையின் சக்தி மற்றும் முக்கியத்துவத்தை குறைமதிப்பீடு செய்ததாக மார்க்சிசத்தை தாக்குகின்ற படைப்பு என்று, அவரது புத்தகம் குறித்த எனது மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கும். ஜியோஹேகன் பற்றிய எனது குறிப்பில் நான் குறிப்பிட்டதாவது: அவர் ''ஒரு உளவியலை அபிவிருத்தி செய்ய தவறியதற்காக மார்க்சையும், ஏங்கெல்சையும் விமர்சிக்கிறார். அவர்கள் மனித ஊக்கத்தின் சிக்கலான விஷயங்களில் ஒரு மிகவும் வறிய பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளனர். மற்றும் அவர்களுக்கு அடுத்து உடனடியாக வந்தவர்களும் இந்த குறைபாட்டை சரி செய்வது அவசியம் என்று அதிகம் உணரவில்லை.''

சிதைத்து உள்ளடக்கம் ''பிரித்தெடுக்கப்பட்ட'' மேற்கோளை அதன் உரிய பொருளில் முழுப் பத்தியுடன் வைப்போம். ஜியோஹேகன் எழுதுகிறார்:

மார்க்சிசத்தில் எப்போதும் பகுத்தறிவு நீரோட்டம் என்று ஒருவர் குறிப்பிடுகின்ற ஒன்று இருந்து வந்திருக்கிறது. அது தனிநபரின் அறிவொளி மாதிரியுடன் வேலை செய்கிறது மற்றும் அதன் பிரதானமான வேறுபடுத்தல் அறிவுக்கும், அறியாமைக்கும் இடையில் தான். இதுதான் முதலாளித்துவத்தின் மையமான முரண்பட்ட தன்மைக்கான அதன் சாவியாகும்: அதாவது, மக்கள் அவர்களுடைய சொந்த நலன்களினுடையதல்லாத நிலைமைகளில் அடைபட்டிருக்கிறார்கள். போலி-நனவாகவும் அந்நியப்படலாகவும் இருக்கின்ற அறியாமையானது, தன்னைத்தானே பல்வேறு வகையான பகுத்தறிவுபூர்வமற்ற நம்பிக்கைகளிலும், நடத்தைகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது. எவ்வாறாயினும் மக்கள், இந்த பட்டுப்பூச்சி அமைத்துக்கொள்ளும் கூடுபோன்ற மாயையில் இருந்து உடைத்து வெளியே வருவார்களாயின் அவர்கள் அப்படியான ஒரு விநோதமான முறையில் நடந்து கொள்வதை நிறுத்துவார்கள். இதுதான் பொட்டியரின் 'சர்வதேசத்தின்' உணர்வாகும்: ''பட்டினியில் இருக்கும் மனிதனே நீ, உனது தூக்கத்திலிருந்து எழு! இல்லாமையின் குற்றவாளிகளே எழுந்திருங்கள் /கிளர்ச்சியின் நியாயம் இப்பொழுது இடியென முழங்குகின்றது/ கடைசியாக கள்ளஞானப் பேச்சாளனின் காலமும் முடிகின்றது." அவ்வாறான கண்ணோட்டம் அறிவைச் சுமந்து செல்பவர்களுக்கு அதாவது, பிளாட்டோவின் குகையின் நிழல் உலகத்தில் இருந்து தோன்றிய உண்மையின் வெளிச்சத்தை கண்ண்டவர்களுக்கு - சிறப்புரிமையளிப்பதாக உள்ளது. இரண்டாம் அகிலத்தின் மார்க்சிசத்தின் பெரும் பகுதியில் இந்த மாதிரியான பகுத்தறிவுவாதத்தின் ஒரு வலிமையான அளவு இருந்தது, அது விஞ்ஞானத்துடனான பித்திற்கு உரமூட்ட உதவியது. இதற்கான ஒரு பகுதிக் காரணம், அது தானாகவே பிரச்சனையின் ஒரு பகுதியாகவும் உள்ளது, அது என்னவென்றால் மார்க்சும், ஏக்கெல்சும் உளவியலை அபிவிருத்தி செய்ய தவறிவிட்டனர். அவர்கள் மனித நோக்கத்தின் சிக்கலான விஷயங்களில் ஒரு மிகவும் வறிய பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளனர். மற்றும் அவர்களுக்கு அடுத்து உடனடியாக வந்தவர்களும் இந்த குறைபாட்டை சரி செய்வது அவசியம் என்று அதிகம் உணரவில்லை. தனிநபரின் ஒரு எளிமையான கருத்துரு எளிதான சமூக மூலோபாயங்களுடன் சகவாழ்வு நடத்தியது.'' (லண்டன் மற்றும் நியூயோர்க் 1987- பக்கங்கள் 67,68 -சாய்வெழுத்தில் போடப்பட்ட வார்த்தைகள் கடந்த ஆகஸ்டில் எனது சொற்பொழிவிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது).

அந்த முழுமையான பந்தி எவ்வகையிலும் ஜியோஹெகனின் வாதம் பற்றிய எனது சுருக்கமான குறிப்புடன் முரண்படவில்லை. அந்த ஆசிரியரை நான் தவறாக மேற்கோள் காட்டிவிட்டேன் என்று முறையீடு செய்வதற்கு பதிலாக ஜியோஹேகனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுடன் ஏன் மற்றும் எந்த நிகழ்முறையின் ஊடாக நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை நீங்கள் விளக்கவேண்டும். அறிவொளி தொடர்பான உங்களது இருமுகப்போக்கு அணுகுமுறையை நான் ஏற்கெனவே கவனித்துள்ளேன். மேலே மேற்கோள் காட்டப்பட்ட பந்தி, எனது ''அறிவொளி பற்றிய விமர்சனமற்ற பாதுகாப்பு'' தொடர்பான உங்களது முன்னைய எதிர்ப்பின் மூலத்தோற்றத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; அது நவீன கற்பனாவாதத்தை நீங்கள் அரவணைத்துக் கொண்டதானது உங்களை முழுக்க ஆரோக்கியமற்ற தத்துவார்த்த மற்றும் அரசியல் சேர்க்கையில் நிறுத்தியுள்ளது என்பதையும் இது தெளிவாக்குகிறது.[26]

19. What did Daniel Guerin really write?

டானியல் கெரான் உண்மையிலேயே எழுதியது என்ன?

சோசலிசத்துக்கான போராட்டத்தில் அதிமுக்கியமானதாக இருக்கும் ''மனித காரணிகளின்'' முக்கியத்துவத்தை அனைத்துலக் குழு புரிந்துகொள்ள தவறுவதுடன் புறக்கணிக்கவும் செய்கிறது என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள். 1933-ல் ஹிட்லரின் வெற்றிக்கு முன்னதாக, ''போலியான'' 'சடவாத'த்தின் பேரில் வெகுஜன ஆதரவை திரட்டுவதில் அரசியல் கருத்துவாதத்தின் பாத்திரம் பற்றி இகழ்ச்சியுடன் இந்ருந்த'' ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் செய்த அதே தவறை நாங்களும் செய்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். இந்த வாதத்துக்கு ஆதரவாக நீங்கள், 1930களின் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டான டானியல் கெரனின் பிரபல படைப்பான பாசிசம் மற்றும் பெரும் வணிகத்தை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இந்த 318- பக்க நூலில் இருந்து நீங்கள் திட்டவட்டமாக ஒரு பந்தியை தான் மேற்கோள் காட்டுகிறீர்கள்: ''சீரழிந்த மார்க்சிஸ்டுகள் மனிதக் காரணிகளை புறக்கணிப்பு செய்வது மிகவும் 'மார்க்சிசத்தனமானது' மற்றும் 'சடவாதமானது' என்று நம்புகிறனர். அவர்கள் எண்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் விகிதாசாரங்களை திரட்டுகின்றனர்; சமூக நிகழ்வுக்கான மிக ஆழமான காரணங்களை அவர்கள் பெரும் துல்லியமாக ஆய்வு செய்கின்றனர். ஆனால் அதே கவனத்துடன் அந்த காரணங்கள் மனிதனின் நனவில் எவ்வழியில் பிரதிபலிக்கிறது என்பதை ஆய்வு செய்யத் தவறுவதன் மூலம், மற்றும் மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவுவதில் தோல்வியுறுவதன் மூலம், இப்படியான நிகழ்வுகளின் வாழும் யதார்த்தத்தை தவறவிடுகின்றனர்.''

இந்த பந்தி பற்றிய உங்கள் கருத்துக்குறிப்பில் நீங்கள் கூறுவதாவது: ''திட்டவட்டமாக இதைத்தான் முப்பதுகளில் ரெய்க் மற்றும் போரொம் கூறினார்கள் மற்றும் நோர்த் மிகவும் கொடுமையாக காணுகின்ற அந்த குறிப்புக்களில் ஜியோஹேகனும் திருப்பிக் கூறுகின்றார்.'' இவ்வாறாக வாசகர் என்ன முடிவுக்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், விஞ்ஞானம் மற்றும் புறநிலையான நிலைமைகள் பற்றிய ஒரு சடரீதியான விளக்கத்தில் மிக அதிகமாக வலியியுறுத்தல் செய்ததும் மற்றும் உளவியல் ரீதியாக போதுமான விளக்கம் மார்க்சிஸ்டுகள் மத்தியில் இல்லாதிருந்ததும் நாஜி வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்தது என்று கெரான் நம்பினார் என்பதாகும். 1930-களில் ஒரு பிரபலமான ட்ரொட்ஸ்கிஸ்டாக கெரான் இருந்ததால் லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது என்று நீங்கள் வாசகர்களை நம்பவைக்கக் கூடும்.

ஆனால் மீண்டும் ஒரு முறையாக, ஒரு மேற்கோளை நீங்கள் வழங்கும்முறை தவறாக வழிநடத்துவதாகவும் நேர்மையற்றதாகவும் உள்ளது. உங்கள் வாதங்களுக்கு அவை கெரனிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருப்பதை நாம் பார்க்கப்போகின்றோம், ஆதரவாக மூன்று வசனங்கள் காட்டப்பட்டுள்ளன. ''சீரழிந்த மார்க்சிஸ்டுகள் என்று கெரான் எழுதுகின்ற அவர்கள் யார்? கெரான் கண்டனம் செய்யும் அந்த ''போலியான'' மார்க்சிசம் என்பது என்ன''?

இந்த ஆவணத்தில் பல தடவைகள் நாம் பயன்படுத்திய ஒரு ஒழுங்குமுறையை நாம் மீண்டும் தொடருவோம். ஆசிரியரின் உண்மையான மூலவாக்கியத்துக்கு திரும்ப சென்று உங்கள் மேற்கோளை பொருத்தமான உள்ளடக்கத்தில் நாம் போடுவோம். இந்த மேற்கோளை நீங்கள் பெற்றுக்கொண்ட அந்த அத்தியாயம் "பாசிச மர்மம்" என்று தலைப்பிடப்பட்டது. அது மக்களை பிரமையில் ஆழ்த்தவும் மற்றும் ஏமாற்றவும் பாசிஸ்டுகள் பயன்படுத்திய பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிவாத நுட்பங்கள் பற்றிய ஒரு பெறுமதியான மதிப்பீட்டை வழங்குகிறது. பாசிஸ்டுகள், பின்பற்றும் சாத்தியமுடையோரின் உணர்வுகளுக்கும் குருட்டு நம்பிக்கைக்கும் விடுத்த விண்ணப்பங்கள் அவர்கள் சேவை செய்கின்ற வர்க்க நலன்களினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்று கெரான் சுட்டிக்காட்டுகிறார். ''சொத்துள்ள வர்க்கங்களின் மானியங்களினால் ஆதரவளிக்கப்படும் ஒரு கட்சியானது சொத்துடைமையாளர்களின் சலுகைகளை பாதுகாக்கின்ற இரகசியமான நோக்கத்துடன், அது கட்சியில் சேர்ப்பவர்களின் விவேகத்துக்கு விண்ணப்பிப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை; அல்லது பதிலாக அவர்கள் முழுமையாக வசீகரிக்கப்படும் வரையில் அவர்களது புரிதலுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதுதான் புத்திக்கூர்மையானது என கருதுகிறது. ''[பாசிசம் மற்றும் பெரும் வணிகம் (நியூயோர்க், 1973) பக்கம் -63]

கெரான் மேலும் விளக்குகிறார், அதாவது குருட்டு நம்பிக்கைக்கு விடப்படும் விண்ணப்பமானது பாசிசம் ''அதன் விண்ணப்பத்தில் விரக்தி அடைந்தவர்கள் மற்றும் அதிருப்தி அடைந்தவர்களிடம் பேசுவதற்கு போதுமான அளவிற்கு அதிர்ஷ்டம் பெற்றதாக உள்ளது'' என்ற உண்மையினால் எளிதாக்கப்படுகிறது. "துன்பம் புதிர்போக்கிற்கு கட்டியம் கூறுகிறது என்பது உலகத்தின் அளவுக்கு பழையதான ஒரு உளவியல் நிகழ்வாகும். மனிதன் துன்பத்தில் இருக்கும் போது, பகுத்தறிவை கைவிடுகின்றான், தனது கஷ்டங்களுக்கான காரணரீதியான பரிகாரங்களை கோராமல் விடுகிறான், மற்றும் தன்னைத்தானே காப்பாற்றுவதற்கான தைரியம் இனியும் இல்லாதொழிகிறான். ஒரு அற்புதத்தை அவன் எதிர்பார்க்கின்றான் மற்றும், ஒரு இரட்சகரை (Savior) அழைக்கிறான், அவரை பின்பற்ற அவன் தயாராக இருக்கின்றான், அவருக்காக தன்னையே தியாகம் செய்யவும் அவன் தயாராக இருக்கிறான்."

''இறுதியாக, இவ்வாறு சொல்லலாம் என்றால், வெகுஜனங்களை அவமதிக்கும் விஷயத்தில் சோசலிசத்திற்கு மேலாக பாசிசத்திற்கு அனுகூலம் இருக்கிறது - அவர்களது பலவீனத்தின் மூலமாக அவர்களை வெல்ல அது தயங்குவதில்லை." (அதே நூல் பக்கம் 63-64)

இந்த பந்தியை படிக்கும் ஒருவர் உடனடியாக அறிந்து கொள்ளக்கூடியது என்றவென்றால், நீங்கள் குதூகலத்துடன் வழிமொழியும் ஜியோஹெகனின் படைப்பு கெரனின் கருத்துக்களுடன் எப்படி அடிப்படையிலேயே உடன்பாடு இல்லாமல் இருக்கிறது என்பதைத்தான். பாசிச விண்ணப்பத்தின் பகுத்தறிவின்மையில் கெரான் காண்பது அதன் பிற்போக்குத்தனமான குறிக்கோள்களின் ஒரு வெளிப்பாட்டைத்தான், அது கற்றுக் கொள்வதற்கான ஒரு உளவியல் மாதிரி அல்ல, அதனை முன்னுதாரணமாக பின்பற்ற முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

பல பக்கங்களுக்குப் பின்னர் பாசிச பிரச்சாரம் மற்றும் வெகுஜனங்களை அணி திரட்டும் நுட்பங்கள் பற்றிய தனது ஆய்வினை பூர்த்திசெய்த பின்னர் கெரான் முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார். ''பாசிச மர்மத்தைஎதிர்த்து போராட தொழிலாளர் இயக்கம் என்ன செய்திருக்கிறது?" திறம்பட்ட வழிமுறைகளை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர் இயக்கம் தோல்வியுற்றதற்கு கெரான் தரும் காரணங்கள் ஜியோஹெகன் முன்னெடுக்கும் நிலைப்பாட்டுடன் பொதுவானதாக எதையும் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் முதலாக, கெரான் தெளிவுபடுத்துகிறார் அதாவது வெகுஜனக்கிளர்ச்சி என்ற இடத்தில் சோசலிஸ்டுகள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சனைகள் சோசலிசத்தின் ''அதற்கே உரித்தான தன்மையில்'' இருந்து ஊற்றெடுக்கிறது. ''சோசலிசம் ஒரு மதம் என்பதை விடவும் ஒரு விஞ்ஞானபூர்வமான கருத்துருவே'' என்று அவர் விளக்குகிறார். எனவேதான் அது உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் விண்ணப்பிப்பதை விட அதிகமாக புத்திசாலித்தனத்திற்கும் பகுத்தறிவிற்கும் விண்ணப்பிக்கிறது. விவாதம் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு நம்பிக்கையை சோசலிசம் திணிப்பதில்லை; அது முதலாளித்துவ அமைப்பு பற்றிய பகுத்தறிவுபூர்வமான விமர்சனத்தை முன்வைக்கிறது, மற்றும் பின்பற்றுவதற்கு முன்னதாக ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையில் பகுத்தாய்ந்து முடிவு செய்ய தனிப்பட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகின்றது. அது கண் அல்லது நரம்பிற்கு விண்ணப்பிப்பதை விட மூளைக்கு விண்ணப்பிக்கிறது. அது வாசகரை அல்லது செவி மடுப்பவரை அமைதியாக வென்றெடுக்க முயற்சிக்கிறதே தவிர அவரை பிடித்துக்கொள்ளவோ, அவரை இயக்கவோ மற்றும் அவரை மயக்கவோ அல்ல'' (அதே நூல் பக்கம் -73 )

சோசலிசமானது "வெகுஜனங்களுக்கு எட்டும் தொலைவில் தன்னை நிறுத்திக் கொள்வதற்கும், அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தெளிவான நேரடியான மொழியில் பேசுவதற்கும்" உரிய வழியில் அதன் பிரச்சார நுட்பங்கள் "புத்துணர்ச்சியூட்டப் பெறவும் நவீனமூட்டப் பெறவும்" அவசியம் என்பதை கெரான் அனுமதிக்கிறார். எவ்வாறாயினும் இந்த ஆலோசனைக்கு கெரான் உடனடியாகவே எச்சரிக்கையுடன் தகுதி நிர்ணயிக்கிறார். அதாவது சோசலிசமானது ''சுய காட்டிக்கொடுப்பின் வலியினால் பாசிசத்தைப்போல் ஜனத்திரளின் கீழ்மட்ட உள்ளுணர்ச்சிகளுக்கு விண்ணப்பிக்கமுடியாது. பாசிசத்தை போலன்றி அது மக்களை இகழ்வதில்லை, மாறாக அவர்களை மதிக்கிறது. அவர்கள் இருப்பதைவிட சிறப்பாக இருக்கவேண்டும், நனவான பாட்டாளி வர்க்கத்தின் -அதிலிருந்து தான் சோசலிசம் ஆரம்பிக்கிறது- பிம்பமாக இருக்கவேண்டும் என்று அது விரும்புகிறது. அது அவர்களது அறிவுஜீவி மற்றும் அறநெறி மட்டத்தை தாழ்த்துவதற்கு அல்லாமல், உயர்த்துவதற்கு பாடுபடுகிறது." [அதே நூல் பக்கங்கள் 73-74), வலியுறுத்தல் மூலத்தில்]

தோழர்கள் ஸ்ரைய்னர் மற்றும் பிரெய்னர் நீங்களாகவே, வெட்கப்படத்தக்க வகையில் இப்படியான மிக அற்புதமான மற்றும் அழகான சொற்களை நீங்கள் மேற்கோள்காட்டவில்லை. அதற்குக்காரணம் அவை பகுத்தறிவின் சக்தியில் மார்க்சிசத்திற்குள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் பேசுவதுடன், சோசலிசத்தின் வெற்றிக்கு தேவைப்படுவது நனவற்ற தன் அரசியல் நனவை உயர்த்துவதே தவிர உளவியல் கைப்புரட்டு அல்ல என்கிற கண்ணோட்டத்தை உறுதி செய்கின்றன என்பதை நீங்கள் மிகவும் நன்றாக புரிந்திருக்கிறீர்கள். கெரனின் நூலில் -- நாம் மறந்து விடக் கூடாது, பாசிசத்திற்கும் ஆளும் மேல் தட்டினருக்கும் இடையிலான புறநிலை பொருளாதார மற்றும் அரசியல் இணைப்புகளை அம்பலப்படுத்துவது (அதாவது பாசிசம் என்னும் அரசியல் நிகழ்வுக்குள் ஆயும் ஒரு உள்ளார்ந்த அரசியல் பார்வையை வழங்குவது) தான் இப்புத்தகத்தின் மைய நோக்கம் என்பதை -மார்க்சிசத்தில் உள்ள பிரச்சினை "விஞ்ஞானத்துடனான அதன் பித்து" தான் என்பதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை.

அப்படியானால் ஏன் பாசிஸ்டுகளின் கிளர்ச்சியை திறம்பட எதிர்கொள்ள சோசலிசத்தால் இயலாதிருந்தது? எந்த வழியில் சோசலிச இயக்கமானது ''சீரழிந்தது?'' சோசலிச இயக்கம் அரசியல் ரீதியாக சந்தர்ப்பவாதமாக மாறியதால்தான் என்பது கெரினின் பதில். "உடனடியான சாதக நிலைகளும், அதேபோல் 'பூமியில்' சொர்க்கமும்' போராட்டம் மற்றும் தியாகம் இல்லாமல், அருவருப்பான 'வர்க்க சமரச' நடைமுறை மூலமாக அடையப்படமுடியும் என்று அது நம்பத்தொடங்கியது'' என்று அவர் எழுதுகிறார். [அதே நூல் பக்கம் 74)] தொழிலாள அதிகாரத்துவத்தினர் பற்றி கெரான் ஏளனத்துடன் எழுதினார். அவர்களை நினைவுகூரத்தக்க வகையில் விவரிக்கும் அவர், "பழைமைவாத மற்றும் வழக்கமான சிந்தனையிலுள்ள, இருக்கின்ற ஒழுங்கினில் நடப்பட்ட, நன்றாக சாப்பாடு போடப்பட்ட மற்றும் திருப்தியான பெரும் போதகர்கள், தொழிலாளர்களின் பைசாக்களிலிருந்து வழங்கப்படும் கட்டிடங்களை 'மக்களின் வீடுகள்' என்று அழைத்துக் கொண்டு அவற்றிலிருந்து நிர்வாகம் செய்கின்றனர். சட்டசபையில் ஒரு இடத்தை வெல்வதும் அல்லது சங்க அலுவலகத்தில் ஒய்யாரமான இடத்தை பெறுவதும் இவைதான் இந்த சீரழிந்த சோசலிசத்தின் தலைவர்களின் வாழ்க்கைக்கான விதியாக மாறியது. அவர்கள் மேற்கோண்டு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மற்றும் அவர்களது சொந்த பிம்பத்தில் துருப்புக்களை விரும்பினார்கள், இலட்சியங்கள் இல்லாத துருப்புக்கள், சடரீதியான அனுகூலங்களினால் மட்டுமே கவரப்படுபவர்கள்." [அதே நூல் - பக்கம் 75)]

கெரான் எழுதுகின்ற இந்த சீரழிவானது மார்க்சிசத்தின் தோல்வி மற்றும் பற்றாக்குறையில் வேரூன்றி இருக்கவில்லை, மாறாக தொழிலாளர் அதிகாரத்துவத்தின் சந்தர்ப்பவாதத்தில்தான். அதற்கு பின்னர் நீங்கள் மேற்கோள் காட்டும் பந்திக்கு உடனடியாக முன்னதாக இருக்கும் பத்தியில், மார்க்சிச வழிமுறையை எந்த முறையில் சந்தர்ப்பவாதம் கீழறுத்தது என்பதை கெரான் விளக்குகிறார்.

''அதே சமயம் கொள்கை விஷயத்தில், சோசலிசமானது அதன் அத்தியாவசிய கருத்துருக்களில் ஒன்றான ''வரலாற்று சடவாதத்தை'' சிதைத்தது. "பொருளாதார வாழ்க்கையில் உற்பத்தி சாதனங்கள் பொதுவாக சமூக, அரசியல் மற்றும் அறிவுஜீவி வாழ்க்கையின் நிகழ்முறைகளை நிர்ணயிக்கின்றன என்று அவர்கள் கருதுகின்ற பொருளில் முதல் மார்க்சிச சோசலிஸ்டுகளாக திகழ்வது சடவாதிகளே. வரலாற்றின் மிக மிக ஆழமான தூண்டும் சக்தி என்பது நீதி மற்றும் உரிமை பற்றி ஏற்கெனவே இருக்கும் ஒரு கருத்தாகும், அதனை மனித இனம் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது, அதனை படிப்படியாக நூற்றாண்டுகளின் காலத்தில் அது பெற்றுக்கொள்கிறது. என்று கருதும் ''கருத்துவாதிகளை" போலல்லாமல், அந்த ஆரம்ப காலத்து சோசலிசஸ்டுகள், உற்பத்தி உறவுகள், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்கு இடையே கொண்டுள்ள பொருளாதார உறவுகள், வரலாற்றில் ஒரு மிகவும் சக்திவாய்ந்த பாத்திரத்தை வகித்தது என்று சிந்தித்தனர். ஆனால் அவர்கள் தமக்கு முன்னதாக மிகவும் அடிக்கடி புறக்கணிக்கப்பட்ட பொருளாதார அடிப்படையை வலியுறுத்தி இருப்பார்களாயினும் அவர்கள் எவ்வகையிலும் சட்ட, அரசியல், மத, கலை, மற்றும் மெய்யியல் 'மேல் கட்டுமானத்தை' அலட்சியப்படுத்தவில்லை. அந்த அடிப்படையினால் அது பக்குவப்படுத்தப்பட்டிருந்தது என்று அவர்கள் நம்பினார்கள், ஆனால் மேற்கட்டுமானம் சொந்த மதிப்பைக் கொண்டிருந்தது, எவ்வாறாயினும் அது வரலாற்றின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. ([அதே நூல் பக்கம் 75 ), வலியுறுத்தல் மூலத்தில்]

இறுதியாக, ஆனால் அதன் பொருத்தமான உள்ளடக்கத்தில், வரலாறு பற்றிய மார்க்சிச சடவாத கருத்துருவை பாதுகாத்து மறுபடியும் பின்பற்றி கூறுவதன் படி, நீங்கள் மேற்கோள் காட்டிய பந்திக்கு நாம் வருகின்றோம் மற்றும் அதை தெளிவுபடுத்துவதற்காக மீண்டும் நாம் மேற்கோள் காட்டுவோம்:

''சீரழிந்த மார்க்சிஸ்டுகள் மனிதக் காரணிகளை புறக்கணிப்பது மிகவும் '''மார்க்சிசத்தனமானது' மற்றும் ''சடவாதமானது' என்று நம்புகின்றனர்; அவர்கள் எண்கள், புள்ளிவிவரங்கள், மற்றும் விகிதாசாரங்களை திரட்டுகின்றனர்; சமூக நிகழ்வுக்கான மிக ஆழமான காரணங்களை அவர்கள் பெரும் துல்லியத்துடன் ஆய்வு செய்கின்றனர். ஆனால் அதே கவனத்துடன் அந்த காரணங்கள் மனிதனின் நனவில் எவ்வழியில் பிரதிபலிக்கிறது என்பதை ஆய்வு செய்யத் தவறுவதன் மூலம், மற்றும் மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவுவதில் தோல்வியுறுவதன் மூலம், இப்படியான நிகழ்வுகளின் வாழும் யதார்த்தத்தை தவறவிடுகின்றனர்.''

இப்போது கெரான் கூறும் விஷயத்தை நாம் முறையாக புரிந்துகொள்ள முடியும். தன் சொந்த சந்தர்ப்பவாதத்திற்கு உண்மையான வகையில், சீரழிந்த அதிகாரத்துவமானது மிகவும் அருவருப்பான வகையிலும் இயந்திரவியல் ரீதியாகவும் மார்க்சிசம் பற்றிய கேலிக்கூத்தை நடைமுறையில் இட்டது. முதலாளித்துவ சமூகம் முகம் கொடுக்கும் அதிகமான நம்பிக்கையிழந்த சூழ்நிலையானது அரசியல் மற்றும் வெகுஜன நனவில் நனவான வெளிப்பாட்டை காண்கின்ற பல்வேறு வகையான வடிவங்களை புரிந்து கொள்ளும் திறனற்றதாய் இருந்தது. வைய்மார் ஜனநாயகத்தின் களியாட்டங்களுடன் பிணைக்கப்பட்டிருந்த ஊழல்மயமான சோசலிச இயக்கமானது வெகுஜனங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக ஒரு வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. பிரச்சனையிருப்பது மார்க்சிசத்தில் அல்ல, வரலாற்று சடவாதத்திலும் அல்ல, மாறாக மார்க்சிச புரட்சிகர முன்னோக்கு மற்றும் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பை சந்தர்ப்பவாத ரீதியாக மறுதலிப்பதில் தான்.

கெரான் அவரது ஆய்வினை பின்வரும் எச்சரிக்கையுடன் முடிக்கிறார்: அதாவது ''தம்மைத்தாமே தருவதற்கு துடித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் பருவ வயதினர் ஒருபோதும் சந்தர்ப்பவாதம் மிகுந்த பாராளுமன்றவாதம் மற்றும் அருவருப்பான தொழிற்சங்கவாத்திற்கு சுருக்கப்பட்ட ஒரு சோசலிசத்தினை நோக்கி கவரப்படமாட்டார்கள். ''பூமியில் சொர்க்கத்தை'' வென்றெடுப்பதற்கு, அதன் உன்னதமான இலட்சியமானது அடையப்பட மகத்தான போராட்டங்களும் தியாகங்களும் தேவைப்படுகின்றது என்று வெகுஜனங்களுக்கு சொல்வதன் மூலமாக மட்டுமே சோசலிசம் அதன் ஈர்க்கும் சக்தியை மீண்டும் பெறமுடியும்.''

கெரனின் நூல் பற்றிய நமது மீளாய்வை ஒரு முடிவிற்கு கொண்டு வருகையில், குறிப்பிடப்பட வேண்டியது ஒன்று இருக்கிறது. 1965- பிரெஞ்சு பதிப்பிற்கு அவரது முன்னுரையில், ஆசிரியர் ஒப்புக் கொள்கிறார்: "ஜேர்மனி மற்றும் பிரான்சு பற்றிய லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் ஒரு வழிகாட்டியாக பயன்பட்டன". "அவை மத்திய தர வர்க்கங்களின் சிக்கலான பிரச்சனைப்பற்றி புரிந்துகொள்ள எனக்கு உதவிசெய்தன. அவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையில் ஊசலாடினர். மற்றும் ஒரு புறம் அவர்கள் பொருளாதார நெருக்கடியினாலும் மறுபுறம் தொழிலாள வர்க்கத்தின் அலட்சியத்தாலும் அதிதீவிர வலதுசாரி ரவுடிகளின் பக்கம் நோக்கி உந்தப்பட்டனர்.'' ([அதே நூல் பக்கம் -17)]

20. Wilhelm Reich’s conception of socialist consciousness

சோசலிச நனவு பற்றிய வில்ஹெல்ம் ரைய்க் இன் கருத்துரு

நீங்கள் ஜியோஹேகனை பாதுகாக்கும் பொழுது வில்ஹெல்ம் ரைய்க்கின் படைப்பு பற்றி சாதகமாக குறிப்பிடுகிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் முன்னையவருக்கும், பின்னையவருக்கும் இடையில் ஏற்படுத்தும் தொடர்பு பற்றி நான் ஆட்சேபிக்க முடியாது. நாஜிக்கள் ''ஜேர்மன் இடதைவிட வெகுஜன உளவியலுக்கு விண்ணப்பிப்பதில் திறம்பட்டவர்களாக இருந்தனர்'' என்ற ஜியோஹேகனின் கூற்று சாராம்சத்தில் 1930-களில் ''வில்ஹெல்ம் ரைய்க்கினால் வைக்கப்பட்ட வாதத்தை திரும்பக் கூறுவதாக உள்ளது என்று நீங்கள் சொல்வது சரியே. ரைய்க் உடன் உடன்படுகின்ற வகையில் நீங்கள் எழுதுகிறீர்கள், "அரசியல் நனவானது, அழிவுகரமான பின் விளைவுகளுடன் இடதுசாரிகள் புறக்கணித்து வந்த ஒரு போர்க்களமாகும்,'' மற்றும் ''மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் விசுவாசத்தை வென்றெடுப்பதன் மூலமாக மட்டுமே சோசலிசம் வெற்றியடைய முடியும் என்பதால் அது நடப்பதற்கு இடதுசாரிகள் அந்த மில்லியன் கணக்கானவர்களின் நம்பிக்கைகள், பயங்கள், மற்றும் கனவுகளை பிணைக்கும் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது''

அங்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால் ''அரசியல்'' மற்றும் ''சோசலிச'' நனவின் அபிவிருத்தி வில்ஹெல்ம் ரைய்கினால் எந்த வகையில் புரிந்து கொள்ளப்பட்டது? இந்த ஆவணத்தில் இந்த விஷயம் தொடர்பாக ஆச்சரியமான முறையில் நீங்கள் சொல்வதற்கு அதிகமில்லை. ரைய்க் புதுப்பிக்கப்பட்ட சோசலிச கருத்துவாதம்'' எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதை ''முப்பதுகளின் தொடக்கத்தில் அவர் செக்ஸ்-போல் (Sex-pol) இயக்கத்தில் ஜேர்மன் தொழிலாள வர்க்க இளைஞர்களுடன் மேற்கொண்ட அவரது துடிப்பான வேலையின் மூலமாக'' ''நடைமுறைரீதியாக" விளங்கப்படுத்திக் காட்டினார் என்று போகிற போக்கில் குறிப்பிடுவதோடு சரி. இந்த படைப்பானது சம காலத்திய சோசலிஸ்டுகளுக்கு பெரும் படிப்பினைகளை கொண்டிருக்கிறது என்று அர்த்தப்படுத்துவதும் தவிர, ரைய்கின் கருத்துக்கள் பற்றிய ஒரு சுருக்க குறிப்பை வழங்கவோ அல்லது அவற்றின் நீடித்திருக்கும் பொருத்தத்தை விளக்கவோ நீங்கள் தவறிவிட்டீர்கள். எவ்வாறாயினும் ''கற்பனாவாதமும், புரட்சியும் என்று தலைப்பிடப்பட்ட ஒரு ஆவணத்தை நீங்கள் தோழர் ஸ்ரைனர் 2004-ல் எழுதினீர்கள் மற்றும் அதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழர் ஸ்டீப் லாங்கிற்கு அனுப்பினீர்கள். அதில் விஹெல்ம் ரைய்கின் முக்கியமான உள்ளார்ந்த பார்வை என்னவாக இருக்கும் என்று நீங்கள் நம்பியதற்கு ஒரு அறிகுறியை வழங்கினீர்கள். ஹேர்பேர்ட் மார்க்கூஸ அவரது "ஈரோசும் நாகரிகமும்’ ('Eros and Civilization’.Eros கிரேக்க புராணக் கதைகளில் வரும் காதல் தெய்வம்.) என்பதில் முன் வைத்த நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக நீங்கள் வாதிட்டு விளக்கினீர்கள். அதாவது மார்க்யூஸ் ''வில்ஹெல்ம் ரைய்க் அவரது பாசிசத்தின் வெகுஜன உளவியல் என்பதில் கூறிய அதே விஷயத்தை தான் சாராம்சத்தில் சொல்கிறார், அதாவது மார்க்சிச இயக்கமானது அடக்கப்பட்ட பாலியல் உந்துதல்களை ஒரு முற்போக்கான திசையில் திருப்புவதற்கான வழியை காணவில்லையென்றால் அப்பொழுது பாசிசமானது அதே உந்துதல்களை பயன்படுத்தி நம்மை ஒரு காட்டுமிராண்டித்தனமான காலத்துக்கு கொண்டு செல்லும்." நீங்கள் உடனடியாக கூடுதலாக சேர்த்துக்கொண்டதாவது: "நான் இந்த விஷயம் தொடர்பாக மேலும் நிறைய சொல்லவும் முடியும், ஆனால் நான் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்."

உண்மையில் நீங்கள் சொல்லி விட்டீர்கள் தான். ''அரசியல்'' மற்றும் ''சோசலிச'' நனவுக்கான போராட்டம் பற்றி நீங்கள் என்ன புரிந்திருக்கிறீர்கள் மற்றும் அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதற்கும் மார்க்சிசத்திற்கும் முழுமையாக எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் எழுதும் நிறைய விஷயங்கள் வில்ஹெல்ம் ரைய்கின் படைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன, அவரது கருத்துக்கள் வரலாற்று சடவாதம் மற்றும் புரட்சிகர மார்க்சிச பாரம்பரியத்துக்கு அடிப்படையில் அந்நியமானதாக இருக்கிறது. உண்மையிலேயே ரைய்க் அவரது காலம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு உற்பத்தியாவார் மற்றும் அவரது வாழ்க்கையில் சோகத்துக்கு ஒரு நிஜமான காரணம் உள்ளது. அவர் ஏனைய பலரை போலவே 1930-கள் மற்றும் 1940-களில் தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச அறிவுஜீவிகள் மீது துடைத்துக்கட்டிய பேரழிவுக்கு பலியான ஒருவராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தபின் அதிக அளவில் விடாப்பிடியானதாகவும், நோக்குநிலை தவறியதாகவும், இன்னும் அரசியல் ரீதியாக வலதுசாரி தன்மையைப் பெற்றதுமான அவரது படைப்பு மற்றும் கருத்துக்கள், 1930-களின் போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது பாசிசத்தினால் இழைக்கப்பட்ட பெரும் தோல்வியின் அழிக்கமுடியாத தழும்பைக் கொண்டிருந்தன. எப்படி ஒருவர் இந்த நாடுகடத்தப்பட்ட ஐரோப்பிய உளவியலாளரின் சோகமான இறுதிமுடிவு பற்றி பரிதாபப்படாமல் இருக்க முடியும். அவரது சொந்த அறிவுஜீவித்தன அபிவிருத்தி வேரூன்றி இருந்த வியன்னா மற்றும் பேர்லின் குழுவிடமிருந்து அவர் பிரிக்கப்பட்டிருந்தார். மனித பாலியல் துறைக்குள் அவரது ஆராய்ச்சிகள், பழிவாங்கும் போக்குள்ள அமெரிக்க நிர்வாகத்தினரின் கோபத்தை தூண்டி அவரை லுலிஸ்பேர்க், பென்சில்வேனியாவிலுள்ள கூட்டாட்சி சிறைக்கு கொண்டுபோய் விட்டது. அவர் அங்கே 1957-ல் 60-வயதில் இறந்தார். அவரது வாழ்க்கை அனுதாபத்துடனும் மரியாதையுடனும் படிப்பதற்கான தகுதியுடையது. அதிர்ஷ்டவசமாக அவ்வாறான ஒரு அணுகுமுறையை மைரன் ஷெரப்பினால் எழுதப்பட்ட ‘பூமியில் பெரும் கோபம்’ எனப்படும் சுயசரிதையில் காணமுடியும்.

ஆனால் வில்ஹெல்ம் ரெய்கின் மனித மற்றும் கலாச்சார துயரத்திற்கான அனுதாபமானது மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை ரெய்கியின் ''பால்-அரசியல்'' இல் கரைப்பதற்கான அல்லது பிரதியீடு செய்வதற்கான உங்களது முயற்சிகளுக்கு நீட்டிக்கப்படவில்லை. அதற்கு நம்மிடம் எவ்விதமான பொறுமையும் இல்லை. ரெய்கியின் பாலியல் தத்துவங்களில் இருந்து சோசலிசத்திற்கான மூலோபாயத்தை தேற்றம் செய்வதற்கான முயற்சி குறிப்பாக அவை பாசிசத்தின் வெகுஜன உளவியல் என்பதில் முன்வைக்கப்பட்டவாறாக அரசியல் நோக்குநிலை பிறழ்வின் மோசமான வடிவங்களில் மட்டும்தான் முடிவடையும். 20-ம் நூற்றாண்டின் சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் இருந்து எழுகின்ற முக்கியமான கேள்விகளில் ஒன்றாக இருக்கக் கூடிய - அதாவது ஏன் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் ஹிட்லர் மற்றும் நாஜிக்களினால் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கு ரெய்கினால் தரப்பட்ட பதில்கள் புரட்சிகரமான முன்னோக்குடன் இணக்கமில்லாத ஆரோக்கியமற்ற அவநம்பிக்கையால் நிரம்பியிருந்தது. மனித உளவியலின் இயற்கையான மற்றும் சர்வ வியாபகமாக பிறழ்வுறுகிற தன்மையில் பாசிசத்தை அவர் வேர் கொள்ள செய்ததானது வரலாற்று சடவாதத்தில் எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு மேலாக, ரெய்கினால் வழங்கப்பட்ட பதில்கள் தவறான அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துக்கு இட்டுச்செல்வது மட்டுமல்லாமல், புரட்சிகர அரசியல் மற்றும் சோசலிசத்தில் இருந்து விலகி அவற்றை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே அவை தலைமையேற்க முடியும். இந்த பயண திசை ரெய்கின் சொந்த பரிணாமத்திலேயே எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றாகும்.

டிசம்பர் 1933-ல் டென்மார்க்கிற்கு தப்பிச்சென்ற வில்ஹெம் ரைய்க், ஏர்ன்ஸ்ட் பரல் என்ற புனைபெயரின் கீழ் ''வர்க்க நனவென்றால் என்ன?'' என்ற தலைப்பிடப்பெற்ற ஒரு சிறு நூலை எழுதினார். ஒப்பீட்டளவில் சுருக்கமான இந்த ஆய்வு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட முடிவுகளை சுருக்கமாகக் கொண்டிருந்தது.

ரெய்கின் சிறு நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றிய பிரச்சனைகளுக்கு அது தருகின்ற அவசரமான கவனமாகும். தொழிலாள வர்க்கத்தை சோர்வடைய செய்து பிளவுபடுத்தி நாஜி வெற்றிக்கான வழியை தெளிவாக்கிய சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் பின்பற்றி வந்த உண்மையான கொள்கைகள் பற்றி அனேகமாக எதுவுமே சொல்லப்படவில்லை. இவை ரெய்கிற்கு குறிப்பான அக்கறையுள்ள பிரச்சனைகளாக இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கான அடிப்படையான காரணத்தை சமூக ஜனநாயகவாதிகளின் இழிவான சந்தர்ப்பவாதத்திலோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் அதி தீவிர இடது ''மூன்றாம் கால'' சாகசத்திலோ காண முடியாது. ஆனால் பதிலாக ''ஒரு தாக்கமுள்ள மார்க்சிச அரசியல் உளவியல் இல்லாமையில் தான்.......... எமது பக்கத்திலிருந்தான இந்த குறைபாடு தான் வர்க்க எதிரிக்கு மிகப்பெரும் சாதகமாகி மற்றும் பாசிசத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக மாறியது. ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் பற்றி மிகப்பெரும் வரலாற்று ஆய்வுகள் மற்றும் பொருளாதாரவாதங்களை வெகுஜனங்களுக்கு நாம் முன் வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது மிகவும் உள்ளார்ந்த உணர்வுகள் ஹிட்லருக்காக தூண்டப்பட்டுக் கொண்டிருந்தன.'' (லண்டன் 1971- பக்கம் 18)

வர்க்க நனவு பற்றிய தனது கருத்துருவை முன் வைக்கின்றபோது ரைய்க் தொழிலாள வர்க்கத்தின் அறிவுஜீவித திறமைகள் சம்பந்தமான ஒரு அணுகுமுறையைக் காட்டிக்கொடுத்தார். அது மிகவும் இழிவான மட்டத்துக்கு சென்றது. தொழிலாளர்களின் பெரும் திரளினர், ''முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் முரண்பாடுகள், சோசலிச திட்டமிடலுக்கான அட்டகாசமான சாத்தியங்கள், உற்பத்தி வடிவத்துக்காக உடமையாக்கலின் வடிவங்களுக்கு இடம் கொடுப்பதற்காக சோசலிச புரட்சிக்கான அவசியம், மற்றும் வரலாற்றில் முற்போக்கு மற்றும் பிற்போக்கு சக்திகள் இவைபற்றியெல்லாம் குறித்த அறிவு'' போன்ற பிரச்சனைகளுக்கு செவிமடுப்பவர்களாக இருப்பார்கள் என்று நம்புவது முட்டாள்தனத்துக்கு குறைவானது அல்ல, என்று அவர் கருதினார். இப்படியான பிரச்சனைகள் கட்சி தலைவர்களுக்கே முக்கியமானவை மற்றும் அவர்களது மிகவும் வளர்ச்சிகண்ட வர்க்க நனவின் அம்சங்களாக இருந்தன. ஆனால் வெகுஜனங்கள் மத்தியில் வர்க்க நனவானது ''அப்படியான அறிவில் இருந்து மற்றும் பரந்த முன்னோக்குகளில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. அது அற்பமான விஷயங்கள் சாதாரண நாளாந்த பிரச்சனைகள் பற்றி அக்கறை கொண்டதாக உள்ளது''. சர்வதேசிய அரசியல் பற்றிய பிரச்சனைகள் மிகவும் அவசியமாகவே அரசியல் தலைவர்களின் அக்கறையாக இருந்தன. ஆனால் வெகுஜன தொழிலாள வர்க்கத்தின் நனவானது ''ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் அல்லது இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி, மற்றும் உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் பற்றி முழுமையாக அக்கறையின்றி இருக்கிறது. மில்லியன் கணக்கான சிறிய நாளாந்த பிரச்சினைகளில் இந்த புறநிலை நிகழ்முறை தோற்றுவிக்கும் பிரதிபலிப்புக்கள், வெளிப்பாடுகள் மற்றும் தாக்கங்கள் மீது தான் அது முழுமையாக பிரத்யேகமான நோக்குநிலையை கொண்டிருக்கிறது. எனவேதான் அதன் அக்கறை எல்லாம் உணவு, ஆடை அணிதல், குடும்ப உறவுமுறைகள், பாலியல் திருப்திக்கான சாத்தியங்கள் அதன் மிகவும் குறுகிய அர்த்தத்தில், ஒரு பரந்த அர்த்தத்தில் பாலியல் மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு வேடிக்கை -அதாவது திரைப்படம், நாடகம், பொருட்காட்சி, கேளிக்கைகள் மற்றும் நடனங்கள் போன்றவை குறித்தும், அத்துடன் பிள்ளைகளை வளர்ப்பது, வீட்டை மேம்படுத்துவது ஆகியவற்றில் உள்ள சிரமங்கள் குறித்தும், கிடைக்கும் ஓய்வு நேரத்தின் அளவு மற்றும் பயன்படுத்தல் குறித்தும், இன்னும் இதுபோன்ற மற்றவை குறித்தும் தான் இருக்கிறது". (அதே நூல் பக்கம் 22 )

எனவேதான் மார்க்சிஸ்டுகளின் அதி முக்கிய பணியானது ''சமூகத்தில் பரந்த பெரும் மக்கள் திரளினரின் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட சூழல்களில், அவர்களின் அற்பமான சாதாரணமான புராதன, எளிய தினசரி வாழ்க்கை மற்றும் விருப்பங்களுடன் உள்ள தொடர்பை காண்பதாக'' இருக்க வேண்டும். (அதே நூல் பக்கம் 23)

ரைய்க் அப்படி மேலதிகமான வலியுறுத்தல் செய்யும் பாலியல் சம்பந்தமான விஷயங்களை சற்று விலக்கி விட்டுப் பார்த்தால், சோசலிச நனவின் அபிவிருத்தி தொடர்பான அவரது அணுகுமுறை, மார்க்சிச இயக்கத்தின் பெரும் அறிவுஜீவி மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கு வெளியே சமூக செல்வாக்குகளின் எடையை பிரதிபலித்தது. ரெய்கின் கண்ணோட்டம் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் ஒரு குறிப்பான அசிங்கமான வடிவத்தை வெளிப்படுத்தியது. தொழிலாள வர்க்கம் பற்றிய பதிவுவாத, வரலாறு அற்ற, மற்றும் ஒருவர் சேர்த்துக் கொள்ளலாம், அவர்களது சொந்த மத்தியதர வர்க்க மற்றும் தொழில்முறை நிபுணத்துவ சூழலின் தப்பெண்ணங்களில் ஊறிய கருத்துரு கொண்ட அறிவுஜீவிகளிடையே இதனை அடிக்கடி காணலாம். பாட்டாளி வர்க்கத்தை வரலாற்று ரீதியாக எழுச்சியுற்றுவரும் ஒரு வர்க்கமாகவும், சமூக அமைப்பின் ஒரு புதிய மற்றும் உயர்ந்த வடிவத்தின் பிரதான கதாபாத்திரமாகவும் அவர்கள் கருதுவதில்லை. பதிலாக, அவர்கள் பின்தங்கிய மற்றும் அறியாமையிலுள்ள தனி நபர்களின் ஒரு கூட்டத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள். கொடூர மிருகங்களின் மட்டத்திற்கு மேல் வளர்ச்சி கண்டிராதவர்களாக, கலாச்சாரம் பற்றி அறியாமையிலும் அலட்சியமாகவும் இருப்பவர்களாக, மற்றும் முக்கியமான அக்கறைகள் இன்றி இருப்பவர்களாக தான் அக்கூட்டத்தை காண்கின்றனர். அப்படியானால் அத்தகைய அறிவு ஜீவிகள் சிந்திக்கும் வரலாறு, அரசியல், பொருளாதாரம், மற்றும் கலாச்சாரம் பற்றி தொழிலாளர்களுடன் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நமது கருத்துக்கள் வெகுஜனங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் வகையில், சாத்தியமான அளவு கீழ்மட்டத்துக்கு செல்வது அவசியம். விநோதமானவகையில், அத்தகையதொரு அணுகுமுறை அரசியல்சாரா தொழிற்சங்கவாதத்தை புகழ்பாடுவதுடன் அடிக்கடி ஒன்றாகக் கைகோர்த்துக் செல்கிறது.

ஏன் ஜேர்மனியில் முதலாவது மிகவும் சக்திவாய்ந்த, மற்றும் அரசியல் ரீதியாக முன்னேறிய வெகுஜன தொழிலாளர் கட்சி தோன்றியது என்று ஒருவர் கேட்க கடமைப்பட்டுள்ளார். இந்த வரலாற்று இயல்நிகழ்வானது சந்தேகத்திற்கிடமின்றி அறிவொளியுடன் சேர்ந்த வியக்கத்தக்க கலாச்சார வளர்ச்சியுடன் பிணைக்கப்பட்டது. ஜேர்மனியில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கான்ட்டுடன் தொடங்கிய மெய்யியல் சிந்தனையில் ஏற்பட்ட புரட்சியின் அடிப்படையில் தோன்றிய வெகுஜன சோசலிச இயக்கத்தின் வரலாறு, முன்னேறிய தத்துவத்துடன் ஒரு சக்திவாய்ந்த வர்க்க நனவுள்ள தொழிலாளர் இயக்கத்துக்கு இடையில் உள்ள உயிர்த்துடிப்புள்ள பிணைப்புக்கு சாட்சியாக இருந்தது. கான்ட், லெசிங், ஹெகல், ஃபோயர்பாக், கோத்தே, ஹில்லர், க்ளெய்ஸ்ட், மோசார்ட் மற்றும் பீத்தோவன் ஆகியோரின் பாரம்பரியம், பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்துடன் ஒன்று கலந்து அசாதாரணமான கலாச்சார அறிவுஜீவி சூழலை உருவாக்கியது. அது, ஜேர்மனியின் தொழில்துறை மயமாக்கலுடன் வேகமாக வளர்ந்ததான புதிய பாட்டாளி வர்க்கத்தில் பாரிய சோசலிச நனவு அபிவிருத்தி காண்பதற்கான சாதகமான சூழ்நிலையாக நிரூபணமானது. உண்மையிலேயே மார்க்ஸ் எனும் வானளாவ உயர்ந்த உருவத்தில் தான் ஜேர்மனியின் முழுமையான அதற்கு முந்தைய அறிவுஜீவித வளர்ச்சி அதன் செறிவுற்ற வெளிப்பாட்டைக் கண்டது. தொழிலாள வர்க்கம் பற்றி ரெய்கின் பாணியில் மார்க்ஸ் கருதியிருந்தால் மனித இனத்தின் விடுதலைக்கான தலையாக மெய்யியலும் அதன் இதயமாக பாட்டாளி வர்க்கமும் இருக்கிறதென்று அவர் எழுதியிருக்கமாட்டார். ஏங்கெல்சும் கூட ''ஜேர்மன் தொழிலாள வர்க்க இயக்கமானது ஜேர்மனியின் செவ்வியல் மெய்யியலின் வாரிசு'' என்று கூறியிருக்க மாட்டார். [மார்க்ஸ் - ஏங்கெலங்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு 26, மாஸ்கோ 1990, பக்கம் 398]

ஜேர்மன் சமூக ஜனநாயகம் அதன் எண்ணற்ற கல்வி அமைப்புக்கள் மற்றும் திட்டங்கள் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல் ஒரு சக்திவாய்ந்த கலாச்சார இயக்கமாகவும் இருந்தது. அது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று லட்சியம் பற்றி தத்துவார்த்த ரீதியாக வேரூன்றிய விளக்கம் நிரம்பிய ஆசிரியர்களினால் ஊக்கமுற்றது. ஜேர்மன் தொழிலாள வர்க்கமானது தனது முயற்சிகள் தொடர்பாக அலட்சியமாக இருக்கிறது என்று நம்பியிருந்தால் களைப்பின்றி சொற்பொழிவாற்றியும் எழுதியும் புரட்சிகர கல்வியூட்டும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்தது எங்ஙனம் சாத்தியமாகியிருக்கும்? ரைய்க் எழுதுகின்ற விதத்தில் ஃபிரான்ஸ் மேஹ்ரிங் மற்றும் ரோசா லுக்செம்பேர்க் பாட்டாளி வர்க்கம் பற்றி எழுதுவார்கள் என்று ஒருவர் கற்பனை செய்து பார்ப்பதும் சாத்தியமல்ல.[27]

வர்க்க நனவு பற்றிய ரெய்கின் தரம் தாழ்ந்த கருத்துருவானது அவரது சொந்த சமூக பாரபட்சங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக ஒரு அரசியல் பெருந்துயரத்தினால் உருவாக்கப்பட்ட அரசியல் விரக்தி நிலைமையும் கூட அது பிரதிபலித்தது. அதற்கான காரணங்களை அவர் புரியவில்லை. அரசியல் சந்தர்ப்பவாதம் விரக்தியின் விளைபொருளாவது அபூர்வமானதல்ல. ஒருவருக்கு மனதில் ஏற்படும் பதிவு என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தினால் புரிந்துகொள்ள முடியாதது என்று அவர் கருதிய சிக்கலான அரசியல் மற்றும் தத்துவார்த்த விஷயங்கள் பற்றி கையாளும் அவசியமின்றி வெகுஜன நனவை சென்றடைவதற்கான ஒரு வழியினை பாலியல் பிரச்சனைகளில் தான் கண்டுபிடித்திருப்பதாக ரைய்க் நம்பினார். இளவயதினர் அப்படியான அணுகுமுறைக்கு குறிப்பாக வெளிப்படையாக இருந்தார்கள் என்று அவர் நம்பினார்: ''சோசலிசப் புரட்சிக்கான அவசியம் பற்றி அனைத்து நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்த இளைஞர்களுக்கு நாம் தத்துவார்த்த ரீதியாக நிரூபிக்க முடியாது, மாறாக அதனை இளைஞர்களின் தேவைகள் மற்றும் முரண்பாடுகளில் இருந்துதான் அபிவிருத்தி செய்யமுடியும். அவ்வாறான தேவைகள் மற்றும் முரண்பாடுகளின் மையத்தில் இளவயதினரின் பாலியல் வாழ்க்கை பற்றிய பிரம்மாண்டமான பிரச்சினை நிற்கிறது'' (வர்க்க நனவென்றால் என்ன, பக்கம் 30) [28]

மக்களை சென்று அடைவதற்கான ஒரு பிரதான சாவியை ''பாலியல் அரசியல்'' வழங்கியது என்ற ரெய்கின் உறுதிப்பாட்டின் அப்பட்டமான சந்தர்ப்பவாத மற்றும் இன்னும் சரியாக சொல்வதாயின், வெகுளித்தனமான தன்மை ஒரு நீண்ட பந்தியில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சோசலிஸ்டுகள் எப்படி, பாசிச கூட்டங்களில் மறைமுகமாக தலையீடுசெய்து, பாலியல் நடவடிக்கைகளின் அனுமதிக்கக்கூடிய வடிவங்கள் பற்றிய ஒரு விவாதத்தை சாதுரியமாக தொடங்குவதுதன் மூலம், அர்ப்பணிப்பான நாஜிகளையும் கூட காது கொடுத்து கேட்க செய்வது என்பதை காட்சிப்படுத்த அவர் முயற்சித்தார்.

"... தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஒரு நபர், (நாஜி) கூட்டம் ஒன்றில் எழுந்து நின்று அற ஒழுக்கத்திற்கும் கண்ணியத்திற்கும் இடையிலான வேறுபாடு எங்கே இருக்கிறது என்று உறுதிபடக் கேட்டால், எந்த ஒரு நாஜி அதிகாரியும் தான் ஒரு மிகவும் சங்கடமான நிலையில் இருப்பதை காண்பார். இவ்வாறாக பெண்கள், இளம் ஆண்களுடன் வெளியில் செல்வதை தடுப்பது கண்ணியமானதே, ஆனால் அது தேசிய சோசலிசம் கோரும் சிறந்த அற ஒழுக்கநெறி அல்ல; எனவே வெளியெ செல்வது அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஒரு இளைஞன் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால்? அது அற ஒழுக்க நெறியா? அல்லது அவன் அவளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினாலும் கூடவா? அது நிச்சயமாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்தலின் கீழ் வருகிறது அல்லவா? இந்தப்புள்ளியில் நாஜி மேலும் சலுகைகளை வழங்குவானாயின் மற்றும் சுதந்திர காதலைக் கூட அனுமதித்தால், அதை அவன் செய்யும் திறனுடையவன், அவனிடம் மேலும் கேட்கப்படும், அதாவது இது வெளிப்படையாக அனுமதிக்கப்படுமாயின், திருமணம் மற்றும் குடும்பம் இவற்றின் உறுதிப்படல் சமரசத்திற்குள்ளாகி விடாதா என........"

இந்த வழிகளில் அவரது கற்பனை வசனங்களை தொடர்ந்த பின்னர் ரைய்க் உறுதிபடக் கூறுகிறார்:

"இந்த வகையான தந்திரங்கள் முழுமையாக அரசியலற்ற வடிவத்தில் ஒரு உயிரோட்டமான பொது விவாதத்தை கொண்டுவர முடியும், அது ஆயிரக்கணக்கான சட்டவிரோத துண்டு பிரசுரங்களை விட நூறுமடங்குகள் அதிகமான சங்கடத்தை நாஜிகளுக்கு உருவாக்கக்கூடியன. அதற்கான எளிதான காரணம் என்னவென்றால் நாஜிகள் நனவற்ற முறையில் நமக்காக பிரச்சாரம் செய்வார்கள். வர்க்க நனவு என்று எதுவும் அங்கு கிடையாது? அது தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ளது! நீங்கள் அதை அபிவிருத்தி செய்ய முடியாது அல்லது நீங்கள் சிறைக்குள் தூக்கிவீசப்படுவீர்கள்? ஒவ்வொரு நாஜியையும் நெருக்கமாக அக்கறை கொள்ளச் செய்யும் வலதுசாரிகளினால் எப்பொழுதுமே பதிலளிக்க முடியாத இப்படியான பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வர்க்க நனவு பிரச்சினையையே மறந்து விடலாம். சட்டவிரோதமான ஒரு காலகட்டத்தின்போது முன்னணி படையினரின் பாத்திரம்? இந்த பிரச்சனையில் நாம் ஆர்வம் காட்டவில்லை; பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் ஸ்தூலமான சாரம் பற்றித்தான் நாம் அக்கறை கொண்டுள்ளோமே தவிர பாட்டாளி வர்க்க ஜனநாயக முழக்கத்தில் அல்ல, பத்தில் ஒன்பது பேருக்கு அது பொருட்டானதாகவே இல்லை. (அதே நூல் பக்கம்-35)

''உள்ளடக்கத்திலும் வடிவத்திலும்'' ''பரந்த வெகுஜனங்களின் "அடிப்படையான, சிக்கலற்ற உணர்வினை'' வெளிப்படுத்த கற்றுக்கொள்ளும் போது மட்டும் தான் புரட்சிகர அரசியல் வெற்றியடைய முடியும் என்று நம்பிய ரைய்க், அரசியல் போக்குகளை பிரித்த விஷயங்களை தெளிவுபடுத்துவதின் மீது ட்ரொட்ஸ்கியவாதிகள் அளித்த முக்கியத்துவம் சக்தியை வீணாக்கும் ஒன்று என இயற்கையாக முடிவுக்கு வந்தார். நான்காம் அகிலத்தை உருவாக்குவதற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு எதிராக நேரடியாகவே வாதிடும் ரைய்க் பின்வருமாறு எழுதினார்: ''வெகுஜனங்கள், எவ்வாறாயினும், தனித்தனியான புரட்சிகரமான போக்குகளுக்கிடையில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் பற்றி எதையும் புரியவில்லை மற்றும் அவற்றில் அவர்களுக்கு அக்கறையும் கிடையாது'' (அதே நூல் பக்கம்53)

நாஜிகளின் வெற்றிக்கான தனது விளக்கத்தை பாசிசத்தின் வெகுஜன உளவியல் என்பதில் ரைய்க் முன் வைத்தார். அது ஆழமான மன விரக்திக்கான வெளிப்பாட்டை தருகின்ற ஒரு படைப்பாகும். ஒரு வெகுஜன இயக்கமாக பாசிசத்தின் வளர்ச்சி அரசியல் நிலைமைகளின் விளைபொருள் அல்ல, மாறாக மனித மனதின் நோயுற்ற நிலையின் வளர்ச்சி. பாசிசம் சாராம்சத்தில் ஒரு அரசியல் இயக்கமாக பார்க்கப்பட கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அதன் அரசியல் கட்டுமானம் மிகவும் ஆழமாக வேரூன்றிய மனித இயல்காட்சியின் வெளிவடிவமாக மட்டுமே இருந்தது. ரைய்க் எழுதினார்:

"வெவ்வேறு வர்க்கங்கள், இனங்கள், தேசங்கள், மத நம்பிக்கைகளைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுடனான எனது மருத்துவ அனுபவங்கள் எனக்கு கற்று தந்தது என்றவென்றால், "பாசிசம்" என்பது சராசரி மனிதனின் குணத்தின் கட்டுமானத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வெளிப்பாடு மட்டும்தான். அந்த கட்டுமானம் குறிப்பிட்ட இனங்கள் அல்லது தேசங்கள் அல்லது குறிப்பிட்ட கட்சிகளுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக பொதுவானதாகவும் சர்வதேசியமானதாகவும் இருக்கிறது. மனிதனின் குணத்துக்கு மரியாதை கொடுத்து பார்க்கும் பட்சத்தில் ''பாசிசம்'' என்பது நமது சர்வாதிகார இயந்திர நாகரிகத்தின் அடக்கப்பட்ட மனிதனின் அடிப்படையான உணர்வுபூர்வமான அணுகுமுறையாகும் மற்றும் அதன் வாழ்க்கை பற்றிய இயந்திரவியல் ரீதியான மர்மமான கருத்துருவாகும்'' (பாசிசத்தின் வெகுஜன உளவியல், நியூயார்க் 1970- பக்கம்-13)

''பாசிச உணர்வு மற்றும் சிந்தனைக்கான கூறுகளை கட்டுமானத்தில் கொண்டிருக்காத எந்த ஒரு தனிநபரும் கிடையாது........ அதன் தூய வடிவத்தில் பாசிசமானது சராசரி மனித குணத்தின் அனைத்து பகுத்தறிவுபூர்வமற்ற எதிர் வினைகளின் மொத்த கூட்டுத்தொகையாகும்''. என்ற உறுதிப்பாடு கொண்டவராக தான் மாறிவிட்டதாக ரைய்க் எழுதினார். (அதே நூல் பக்கம் xiv)

மார்க்சிச கட்சிகளினால் ஹிட்லரை நிறுத்த முடியவில்லை, ரைய்க் அதற்கான காரணமாய் வலியுறுத்துகிறார்: "காரணம், முழுமையாக புதிய ஏதோ ஒன்றாக இருந்த 20ம் நூற்றாண்டு பாசிசத்தை அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்தான கருத்துருக்களுடன் புரிந்து கொள்ள முயற்சித்தது தான்.'' (அதே நூல் பக்கம் xxi) முந்திய 200-வருடங்களுக்கு மேலான முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியின் உள்ளடக்கத்தில் பாசிசம் பற்றி ஆய்வு செய்ய மார்க்சிசம் தவறான முறையில் முயற்சித்தது. ஆனால் பாசிசம்“‘மனிதனின் குணம், மனித மர்மம் மற்றும் அதிகாரத்துக்காக அலைதல் பற்றிய சுமார் ஆறாயிரம் வருடங்களை உள்ளடக்கிய காலகட்டத்தின் அடிப்படை பிரச்சினையை எழுப்பியது. இங்கேயும் கூட இழிவான மார்க்சிசம் ஒரு நரியின் குழிக்குள் ஒரு யானையை தள்ள முயற்சித்தது” (அதே நூல் பக்கம் xxvi)

ரைய்க்கின் கண்டறிதலின் படி மனித இனத்தின் நிலையானது ஏறக்குறைய நம்பிக்கையிழந்ததாய் இருந்தது.

''எவ்வளவு கசப்பானதாக இருப்பினும் உண்மை அப்படியே இருக்கிறது: அனைத்து நாடுகள், தேசங்கள் மற்றும் இனங்கள் (Races) போன்றவற்றில் உள்ள பாசிசத்தின் அடிப்படையில் அமைந்திருப்பது பெருந்திரளான மக்களின் பொறுப்பற்ற தன்மையாகும். பாசிசம் என்பது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாக மனிதனின் திரித்தல்களின் விளைவாகும்...... ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்னோக்கி செல்கின்ற ஒரு சமூக வளர்ச்சியினால் வந்தது இந்த நிலை என்கிறதானது உண்மையையே மாற்றிவிடவில்லை. மனிதன்தான் அதற்கு பொறுப்பே தவிர ''வரலாற்று அபிவிருத்திகள்'' அல்ல. வாழும் மனிதனில் இருந்து இவ்வாறு பொறுப்பினை ''வரலாற்று வளர்ச்சிக்கு" மாற்றுவதுதான் சோசலிச விடுதலை இயக்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது'' (அதே நூல் பக்கம் 320)

மனித இனம் பாசிசத்தினுள் வீழ்ந்தது பற்றிய ரைய்க்கின் உளவியல் பாலியல் (Pshchosexual) மதிப்பீட்டின் அனைத்து கவர்ச்சியூட்டும் மற்றும் தொடக்க கூறுகள் எல்லாம் இருந்த போதிலும், சாராம்சத்தில் அவரது வாதங்கள் விரக்தியடைந்த இடதுசாரி வட்டங்களில் பரந்தளவில் இருக்கக்கூடிய கண்ணோட்டத்துடன் அடிப்படையில் உடன்பட்டிருந்ததது. அதன்படி ஹிட்லரின் வெற்றியானது ஒரு சோசலிச புரட்சியை நடத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு ரீதியான திறனின்மை என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம். தோழர்கள் ஸ்ரைனர் மற்றும் பிரெய்னர் நீங்கள் தெளிவின்றி ஒருவேளை நினைவு கூறலாம். அங்கே 1930-களில் எண்ணற்ற இடதுசாரி குழுக்கள் இருந்தன, தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளுக்கான காரணம் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளில் உள்ள அவர்களது அரசியல் தலைவர்களின் தவறான மற்றும் துரோகத்தனமான கொள்கைகள் என்று ட்ரொட்ஸ்கி கூறியதன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அந்த விளக்கம் ஒட்டுமொத்தமாக போதுமானதல்ல என்று ட்ரொட்ஸ்கியின் இடது-மையவாத விமர்சகர்கள் பதிலளித்தார்கள். ஆம்! ஒரு வேளை தலைவர்கள் தவறு செய்தார்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை நனவுபூர்வமாக கூட காட்டிக்கொடுத்தார்கள். ஆனால் வெகுஜனங்கள் ஏன் தாங்களாகவே காட்டிக்கொடுக்கப்படுவதற்கு ''அனுமதித்தார்கள்''? நடந்ததற்கு அவர்கள் பொறுப்பாளிகளாக இருக்கவில்லையா? அவர்களது தலைவர்களை அவர்களினால் எதிர்த்திருக்க முடியாதா? வெகுஜனங்களையே விமர்சனரீதியாக ஆய்வு செய்வது அவர்களது இருப்பின் அந்த முக்கியமான கூறுகளை அடையாளம் காண்பதும் அவர்களது சமூக இருப்பின் உயிர்ப்புள்ள கூறுகளை அடையாளம் காண்பதும் அவசியமானதாக இருக்கவில்லையா, அவை அவர்களது சமூக இருப்பின் முடக்க முடியாத குணநலன்களில் தங்கியிருந்தாலும் சரி, அல்லது தவறான தலைவர்களை பின்பற்றி தங்களது சொந்த தோல்வியை ஒப்புக்கொள்ள அவர்களை பக்குவப்படுத்தும் மனதில் தங்கியிருந்தாலும் சரி.

வெகுஜனங்கள் அனுபவித்த அரசியல் அழிவுகளுக்கு வழிவகுத்த கட்சிகள் பற்றி வக்காலத்து வாங்கும் அணுகுமுறையை பிரதிபலித்த அப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் தலைமைக்கும் இடையிலுள்ள உறவுமுறை பற்றி ட்ரொட்ஸ்கி விளக்கினார். மக்கள் தமக்கு தகுந்த அரசாங்கத்தை பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது தொழிலாளர்கள் தமக்கு தகுந்த தலைவர்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற இரண்டுமே உண்மை அல்ல என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் இரண்டுமே, வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் மற்றும் அந்த வர்க்கங்களின் தொகுப்பிலேயே அமைந்திருக்கும் பலவகைக் கூறுகளிடையிலான உள்முக மோதல்கள் ஆகிய இரண்டும் அடங்கிய ஒரு சிக்கலான நிகழ்முறையின் விளைபொருளாக தோன்றுகின்றன. தொழிலாள வர்க்க தலைமை உருவாக்கம் என்பது ஒரு பெரும் கடினமான மற்றும் நீடித்த வரலாற்று நிகழ்முறை, அது பல தசாப்தங்களுக்கு மேலாக நீடிக்கக்கூடிய போக்குகளுக்கு இடையிலான போராட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்முறையின் ஊடாக ஒரு அதிகாரபூர்வமான தலைமை வெகுஜனங்களிடையே தனக்கான மதிப்பை அது நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தின் மூலமாக பெற்றுக்கொள்கிறது - தோன்றுவது ஒரு வரலாற்று சாதனை. ஆயினும் வெகுஜனங்கள் மத்தியில் அதிகாரத்தை பெற்றுக்கொண்டதும் அந்த தலைமையானது காலப் போக்கில் ஏனைய வர்க்கங்களினால் கொடுக்கப்படும் அழுத்தத்தின் கீழ் ஒரு உள்முகமான சீரழிவிற்கு உட்படும் அபாயம் அங்கு இருக்கவே செய்கிறது. சீரழிவு பற்றிய உண்மை, அதன் அளவென்பது ஒருபுறமிருக்க, வெகுஜனங்களுக்கு உடனடியாக வெளிப்படையாக தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமது பாரம்பரிய தலைவர்களில் அவர்களுக்குள்ள நம்பிக்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக சார்பு ரீதியான சமூக அமைதியுள்ள நிலைமைகளின் கீழ் அதாவது திட்டவட்டமாக அமைதியான நாளாந்த வேலைகள் சந்தர்ப்பவாத தகவமைவை நோக்கி போக்குகளை வளர்த்தெடுக்கிற அந்த காலகட்டங்களில் அரசியல் ரீதியாக தகுதியான புள்ளிக்கு அப்பால் நம்பிக்கையை நீடிப்பதற்கான இயற்கையான போக்கு குறிப்பாக அதிகமாகிறது. பழைய கட்சிகள் பின்பற்றி வந்த கொள்கைகளுக்கும் துரிதமாய் மாறும் அரசியல் சூழ்நிலையில் இருந்து எழுகின்ற மாறும் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளி, கவனித்திராத சமூக -பொருளாதார முரண்பாடுகளினால் தயாரிக்கப்படும் நெருக்கடி ஒரு மிகப்பெரும் வரலாற்று அதிர்ச்சியின் வடிவத்தில் எழுகின்ற வரையில் கவனிக்கப்படாமலே போகிறது. ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

".. சக்திவாய்ந்த வரலாற்று அதிர்ச்சிகள் போர்களும் புரட்சிகளுமாகும். திட்டவட்டமாக இந்த காரணத்தினால்தான் தொழிலாள வர்க்கம் போர் மற்றும் புரட்சியினால் அடிக்கடி செய்வதறியாது திகைக்கிறது. ஆனால் பழைய தலைமையானது அதன் உள்முகமான ஊழலை வெளிப்படுத்திய சமயங்களிலும் கூட அந்த வர்க்கத்தினால் ஒரு புதிய தலைமையை உடனடியாக மேம்படுத்திவிட முடியாது, குறிப்பாக முந்தைய காலகட்டத்தில் இருந்து பழைய தலைமையின் வீழ்ச்சியை பயன்படுத்தும் திறன்உள்ள பலமான புரட்சிகரமான வலிமைவாய்ந்த புரட்சிகர காரியாளர்களை அது மரபுவழியில் பெற்றிருக்கவில்லை என்றால். [''ஸ்பானிய புரட்சியில் வர்க்கம், கட்சி, மற்றும் தலைமை'' 1931,39,நியூயார்க் 1973- பக்கம் 358)]

அவர்களது தலைவர்களின் தவறுகள் மற்றும் குற்றங்களுக்கான பொறுப்பை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கின்ற, அரசியல் போராட்டத்தில் "தோல்விக்கான ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட வேலைத்திட்டங்கள், கட்சிகள், மற்றும் ஆளுமைகளாக இத்தகைய ஸ்தூலமான காரணிகளால்" ஆற்றப்பட்ட பாத்திரத்தை ஆய்வு செய்ய தவறுகிற, மற்றும் ஜேர்மனி, ஸ்பெயின் அல்லது இத்தாலியில் பாசிசத்தின் வெற்றியை ''பிரபஞ்ச அபிவிருத்திகளின் சங்கிலியில் ஒரு அவசியமான கண்ணியாக...." காட்டுகின்ற அரசியல் வக்காலத்துவாதங்களின் அனைத்து வடிவங்களையும் ட்ரொட்ஸ்கி கண்டனம் செய்தார். (அதே நூல் பக்கம் 364). ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி பற்றிய ரெய்கின் விளக்கத்திற்கும் ட்ரொட்ஸ்கியினால் விமர்சிக்கப்பட்ட மையவாத போக்குகளின் விளக்கத்திற்கும் இடையில் உள்ள ஒரேயொரு சாராம்சமான வேறுபாடு என்னவென்றால், பாசிசத்தின் வெற்றியை தலையெழுத்தில் கொண்டிருந்த ''பிரபஞ்ச அபிவிருத்திகள்'' ரெய்கை பொறுத்தவரையில் சமூகவியல்-அரசியல் தன்மையைக் காட்டிலும் ஒரு பாலியல் தன்மையை கொண்டதாக இருந்தது.

ஆனால் இப்போது நாம் வெகுஜன உளவியல் பற்றிய பிரச்சனைகளுக்கு திரும்புவோம், அதனை புரட்சியாளர்கள் புறக்கணிக்க முடியாது. எவ்வாறாயினும் ஒருவர் ஜேர்மன் பாசிசத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்த சமூக உளவியல் பற்றி ரைய்க்கின் படைப்புக்களை படிப்பதைவிட ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை படிப்பதன் மூலமாக வெகு அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். தோழர்கள் ஸ்ரைனர், பிரென்னர் நீங்கள் ட்ரொட்ஸ்கியின் மேதாவிலாசக் கட்டுரையான ''தேசிய சோசலிசம் என்றால் என்ன?'' என்பதை எப்போது கடைசியாக படித்தீர்கள்? அதில் அவர் ஹிட்லரின் காட்டுமிராண்டித்தனமான இயக்கம், மத்தியதர வர்க்கங்களில் இருந்து லட்சக்கணக்கான ஆதரவாளர்களை வென்றெடுப்பதற்கான உளவியல் நிலைமைகளை உருவாக்கிய முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்திய ஜேர்மனியின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றி விவரித்தார்:

''யுத்தத்திற்கு பிந்திய குழப்பம் தொழிலாளர்களை தாக்கிய அதேஅளவு மூர்க்கத்துடன் கைவினைஞர்கள், வீடு வீடாய் விற்பனை செய்பவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களையும் பாதித்தது. விவசாயத்திலான பொருளாதார நெருக்கடி விவசாயிகளையும் சீரழித்தது. இடைத்தர தட்டுக்களின் சிதைவினால் அவர்கள் பாட்டாளிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தப்படவில்லை, அந்தளவுக்கு பாட்டாளி வர்க்கமே நீடித்த வேலையற்ற ஒரு பிரமாண்டமான இராணுவத்தை உருவாக்கி கொண்டிருந்தது. செயற்கை பட்டாலான கழுத்துப் பட்டை மற்றும் காலுறைகளினால் மட்டும் ஓரளவுக்கு மூடப்படுகிற வகையில் குட்டி முதலாளித்துவம் ஓட்டாண்டியான நிலை, அனைத்து உத்தியோகபூர்வ கோட்பாடுகளையும் இல்லாமல் செய்தது, அனைத்துக்கும் முதலாக ஜனநாயக பாராளுமன்றவாதம் என்ற கொள்கைநெறியை இல்லாமல் செய்தது.

பலவகை கட்சிகள், தேர்தல் ஜூரம், அமைச்சகங்களில் முடிவில்லாத மாற்றங்கள் இவையெல்லாம் பயனற்ற அரசியல் கூட்டுகளின் பல வண்ணக் காட்சிகளை தொடர்ந்து உருவாக்கியதன் மூலம் சமூக நெருக்கடியை தீவிரமடையச் செய்தது. போர், தோல்வி, நஷ்டஈடுகள், பணவீக்கம், ரூர் ஆக்கிரமிப்பு, நெருக்கடி, தேவை, சோர்வு இவற்றினால் மிகவும் கொடுமையான கொதிப்புற்றிருந்த சூழலில், குட்டிமுதலாளித்துவம் தன்னை தந்திரமாக ஏய்த்திருந்த அனைத்து பழைய கட்சிகளுக்கும் எதிராய் எழுந்து நின்றது. எப்போதுமே திவால் நிலையிலிருந்து வெளியே வரமுடியாமல், தங்களின் பல்கலைக்கழக பிள்ளைகளுக்கு பணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இல்லாமல், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு சீதனங்கள் அல்லது வரன் கேட்போர் இல்லாமல், சிறு உடைமையாளர்களின் கூர்மையான துன்பங்கள் சட்ட ஒழுங்கையும் ஒரு இரும்புக் கரத்தையும் கோரின.

தேசிய சோசலிசத்துக்கான பதாகையானது பழைய இராணுவத்தின் கீழ்மட்ட மற்றும் நடுத்தர உத்தரவிடும் பதவிகளில் இருந்து புதுப் பவிசு பெற்றவர்கள் மூலம் எழுப்பப்பட்டதாகும். சிறந்த சேவைக்கான பதங்கங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், நியமிக்கப்பட்ட மற்றும் நியமனம் பெறாத அதிகாரிகளினால், தாயகத்துக்கான தங்களின் வீரசாகசம் மற்றும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போய்விட்டது மட்டுமல்ல, அவை நன்றிக்கடனுக்கான சிறப்பு உரிமைத்துவத்தையும் கோரவியலாமல் செய்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை. இதனால் தான் புரட்சி மற்றும் பாட்டாளிவர்க்கத்தின் மீது அவர்களுக்கு வெறுப்புண்டானது. அதே சமயம் அவர்கள் வங்கியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அமைச்சர்களினால் மீண்டும் புத்தக காப்பாளர்கள், பொறியாளர்கள், தபால் துறை எழுத்தர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போன்ற சாதாரண பதவிகளுக்கு திரும்ப அனுப்பப்படும் நிலைக்கு தங்களை சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் அவர்களின் "சோசலிசம்". எஸரில் நதிக்கரையில் வேர்டனில் நடைபெற்ற யுத்தத்தில் அவர்கள் தம்மையும் ஏனையவர்களையும் பணயமாக வைத்துக்கொள்ளவும், ஆணையிடும் மொழியை பேசவும் கற்றுக்கொண்டனர். அது இராணுவ அணிகளுக்கு பின்னே இருந்த குட்டி முதலாளித்துவத்தை சக்திவாய்ந்த முறையில் பிரமிப்புக்குள்ளாக்கியது. இவ்வாறாக இப்படியானவர்கள் தலைவர்களாக மாறினார்கள்.

ஹிட்லர், தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், தனித்து நின்றதற்கு காரணம் அவரது பெரும் மனோதிடம், ஏனையவர்களை விட மிகவும் சத்தமான ஒரு குரல், மற்றும் மிக அதிகமான மன உறுதியுடனான ஒரு சாதாரண அறிவுஜீவித்தனம். அவமதிக்கப்பட்ட இராணுவ வீரரின் பழிவாங்கலுக்கான தாகத்தை ஒருவர் கவனியாதிருப்பாராயின், அவர் எந்தொரு ஆயத்த வேலைத்திட்டத்தையும் இயக்கத்துக்குள் கொண்டுவரவில்லைதான். வெர்சாயில்ஸ் நிபந்தனைகள், உயர்ந்த வாழ்க்கை செலவு, ஒரு மெச்சத்தக்க நியமனம் பெறாத அதிகாரிக்கு மரியாதையின்மை, வங்கியாளர்கள் மற்றும் மோசஸ் நம்பிக்கை, பத்திரிகையாளர்களின் சதிகள் ஆகியவை மீதான துன்பங்கள் மற்றும் முறையீடுகளுடன் ஹிட்லர் தொடங்கினார்.

அங்கே நாட்டில் பெருமளவில் அழிக்கப்பட்டிருந்த மற்றும் தழும்புகள் மற்றும் புதிய வீக்கங்களுடன் மூழ்கிக் கொண்டிருந்த மக்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருமே மேசையின் மீது அவர்களது ஓங்கிய கைகளினால் அடிக்க விரும்பினர். இதை ஹிட்லரினால் ஏனையவர்களை விட சிறப்பாக செய்ய முடியும். உண்மைதான் அவருக்கு பிசாசை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் அவரது நீண்ட உணர்ச்சி பொங்கும் உரைகள் இப்போது ஆணைகள் போன்றும் மற்றும் அசைந்து கொடுக்காத தலைவிதியை நோக்கி கூறப்பட்ட பிராத்தனைகள் போன்றும் எதிரொலித்தன. தண்டனை பெற்ற வர்க்கங்கள், சாகக்கிடப்பவர்கள் போல், தங்களது முறையீடுகளில் மாற்றங்கள் செய்வதிலும், ஆறுதல் வார்த்தைகளை கேட்பதிலும் என்றுமே களைப்படைந்ததில்லை. இந்த சுருதிக்கு ஏற்றவாறு ஹிட்லரின் உரைகள் சரி செய்யப்பட்டுள்ளன. உணர்ச்சி பூர்வமான உருவமற்ற நிலை, ஒழுங்குற்ற சிந்தனையில்லாமை, பகட்டான கல்வியறிவுடன் கூடிய அறியாமை- இப்படியான அனைத்து பலவீனங்களும் பலங்களாக மாற்றமடைந்தன. அவை அவருக்கு தேசிய சோசலிசத்தின் பிச்சைக்கார தட்டிற்குள் அனைத்துவிதமான அதிருப்தியையும் ஒன்றுபடுத்தவும், அது அவரைத் தள்ளிய திசையில் வெகுஜனங்களை அவர் வழிநடத்துவதற்குமான சாத்தியத்தையும் வழங்கின. கிளர்ச்சியாளரின் சிந்தனையில் அவரது முன்னைய மேம்படுத்தல்களின் போது எதுவெல்லாம் ஒப்புதலாக இருந்ததோ அவையெல்லாம் பேணப்பட்டன. அவரது அரசியல் சிந்தனைகள், பிரசங்க ஒலியியலின் கனிகளாகும். அப்படித்தான் முழக்கங்களின் தேர்வு போய்க்கொண்டிருந்தது. அப்படித்தான் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டது. அப்படித்தான் கச்சாப் பொருளில் இருந்து ''தலைவர்" வடிவம் பெற்றார்.....

தேசிய சோசலிச மெய்யியலின் மிகப்பெரும் வறுமை, நிச்சயமாக, ஹிட்லரின் வெற்றி போதுமான அளவு தெளிவானதாக இருக்கும்போது,கல்வி, விஞ்ஞானங்கள் ஹிட்லரின் அடிச்சுவட்டில் தங்களது அனைத்து கப்பற்பாய்களையும் திறந்து விட்டு நுழைவதற்கு தடையாக இருக்கவில்லை. பெரும்பான்மையான பேராசிரியர் மந்தைக்கு, வைய்மார் ஆட்சியின் வருடங்கள் கலவரம் மற்றும் எச்சரிக்கைக்கான காலங்களாக இருந்தன. வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், மற்றும் மெய்யியல் அறிஞர்கள் எல்லாம் உண்மையின் அளவைகளுக்கு இடையிலான போட்டியில் எது சரி, அதாவது எந்த முகாம் இறுதியில் சூழ்நிலையின் எஜமானனாகப் போகிறது என்கிற ஊக வேலையில் தொலைந்திருந்தார்கள். பாசிச சர்வாதிகாரம் பல்கலைக்கழக பிரசங்க மேடைகளைச் சேர்ந்த போஸ்டுகளின் சந்தேகங்களையும், ஹெம்லட்டுகளின் ஊசலாட்டங்களையும் அழிக்கிறது. பாராளுமன்ற சார்பு நிலையின் அந்தி வெளிச்சத்திலிருந்து வெளிவந்து, அறிவானது மீண்டும் ஒருமுறை முழுமைகளின் ராஜ்ஜியத்திற்குள் நுழைகிறது. ஐன்ஸ்டைன் ஜேர்மனியின் எல்லைகளுக்கு வெளியே அவரது கூடாரத்தின் தளத்தை போட கடமைப்பட்டார். (லியோன் ட்ரொட்ஸ்கி, ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம், நியூயார்க் 1971-பக்கங்கள் 462-67)

இந்த சில பந்திகளில், ஜேர்மன் பாசிச வெறியின் சமூக மற்றும் அரசியல் தோற்றுவாய்கள் பற்றி, மற்றும் புறநிலையான சமூக -பொருளாதார நிகழ்முறைகளுக்கும் ஜேர்மன் மத்தியதர வர்க்கத்தின் மனதில் அவற்றின் பிரதிபலிப்புகளின் தெளிவற்ற வடிவங்கள் பற்றியும் இணையற்ற மேதமையுடன் ட்ரொட்ஸ்கி விளக்கினார். ட்ரொட்ஸ்கி ஒரு அரசியல்வாதியாகவும் மேதாவி எழுத்தாளராகவும் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரது மேதாவித்தனம் மார்க்சிசத்தினால் ஊட்டமளிக்கப்பட்டிருந்தது, அத்துடன் வரலாற்று சடவாத ஆய்வின் அடிப்படையில் என்ன சாதிக்கமுடியும் என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார். அவர் வழங்கும் உள்ளார்ந்த பார்வை வெறுமனே இலக்கிய மற்றும் வரலாற்று அக்கறை கொண்டது அல்ல, மாறாக சமூகத்தில் குட்டி முதலாளித்துவ தட்டுக்களின் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பாசிச பிரச்சாரத்திற்கு அவர்கள் அடிபணிந்து செல்வதற்கான பின் அமைந்த புறநிலையான காரணங்கள் ஆகியவை குறித்த ஒரு ஆய்வாக அது நீடிக்கும் பொருத்தத்தை தக்க வைத்துள்ளது. பாசிசத்தை புரிந்துகொள்ளும்படியாக செய்வதன் மூலம் அதனை எதிர்த்து போராடுவதற்கான மற்றும் தோற்கடிப்பதற்கான அரசியல் வழிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

வில்ஹெல்ம் ரெய்கின்ஆய்வு பற்றி இதேபோல் சொல்லமுடியுமா, அவர் நமக்கு கூறியதாவது:

".. பாலுறுப்புக்கள் பலவீனமாக இருக்க கூடிய மனிதன் அவரது பாலியல் கட்டமைப்பு முழுமையான முரண்பாடுகளாக இருக்கும்போது அவரது பாலியல் தன்மையை தானாகவே கட்டுப்படுத்தவும், அவரது பாலியல் கண்ணியத்தை பாதுகாத்துக்கொள்ளவும், தூண்டுதல்களுக்கு முகம் கொடுக்கையில் துணிச்சலுடன் இருக்கவும், மற்றும் தொடர்பானவை குறித்தும் தொடர்ச்சியாக தனக்குத்தானே நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். சுய இன்பத்திற்கான தூண்டுதலை தவிர்ப்பதற்கான போராட்டமானது விதிவிலக்கின்றி ஒவ்வொரு பருவ வயதினர் மற்றும் ஒவ்வொரு சிறுவரினாலும் அனுபவிக்கப்படும் போராட்டமாகும். இந்த போராட்டத்தில் தான் பிற்போக்கு மனிதனின் கட்டமைப்புக்கான அனைத்து கூறுகளும் வளர்ச்சி செய்யப்படுகின்றன. கீழ்தட்டு மத்தியதர வர்க்கங்களில்தான் இந்த கட்டமைப்பானது பலப்படுத்தப்பட்டு மிக ஆழமாக பதிந்திருக்கிறது." (பாசிச வெகுஜன உளவியல் பக்கம் 55)

இந்த ஆய்விலிருந்து எழுகின்ற முன்னோக்கு என்ன? என்ன கொள்கைகளும் ஸ்தூலமான அரசியல் முன் முயற்சிகளும் அமல்படுத்தப்படவேண்டும்? நீங்கள் தோழர் ஸ்டீப் லாங்கிற்கு அறிவித்தது போல் நீங்கள் வந்திருக்கும் முடிவு என்னவென்றால் மார்க்சிச இயக்கமானது ''அடக்கப்பட்ட பாலியல் தூண்டுதல்களை' ஒரு முற்போக்கான திசையில் வழிநடத்தி செல்வதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்..."[29]

இந்த இலட்சியத்துக்காக உங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பதற்கு உங்களை யாருமே தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் இந்த சந்தேகத்திற்கிடமான மற்றும் நோக்கு நிலை தவறிய திட்டத்தில் பங்கெடுக்க அனைத்துலகக் குழுவிற்கு கொஞ்சம் கூட ஆர்வம் கிடையாது.

21. Eros and Death

ஈரோசும் மரணமும்

நீங்கள் ஏதோ பயங்கர தைரியமானதும் மற்றும் மூலமுதலான ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஒரு வேளை நீங்கள் எண்ணலாம்: அதாவது அனைத்துலக குழு ஒரு கற்பனாவாத திட்ட நிரலை சேர்த்துக்கொள்ள வேண்டும், நாங்கள் வருங்காலத்தை பற்றி ஊகிப்பதில் கூடுதலான நேரத்தையும் கடந்த காலத்தின் கணக்குவழக்கிலும் நடப்பு காலத்தின் பகுப்பாய்வுகளிலும் குறைவான நேரத்தையும் செலவிட வேண்டும், எங்களது கவனத்தை அரசியலில் இருந்து பாலியலுக்கு திருப்ப வேண்டும், மற்றும் நாங்கள் உலக பொருளாதாரத்தின் புறநிலை நிகழ்முறைகளுக்கு குறைவான கவனத்தையும் தனிநபரின் அகநிலையான உந்துதல்களுக்கு அதிகமான கவனத்தையும் செலுத்த வேண்டும் ஆகிய உங்களது கோரிக்கைகளின் மூலம் தீவிரப்போக்குடைய சிந்தனைக்கான புதிய தொடு எல்லைகளை எப்படியோ திறந்து கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். உண்மையில், தோழர்கள் பிரென்னர் மற்றும் ஸ்ரைனர், உங்களது முன்மொழிவுகளில் முதன்முறையானது என்று சொல்லத்தக்கது எதுவுமில்லை. மார்க்சிஸ்டுகள் முன்பே பல தடவைகள் இவைபற்றியெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

1908-ல் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பட்ட ''ஈரோசும் மரணமும்'' என்ற ஒரு கட்டுரையில் அவர் ஒரு இளம் ரஷ்ய அறிவுஜீவியுடன் பாரிசிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் நடத்திய உரையாடலை நினைவு கூர்கிறார். அந்த அறிவுஜீவி கலையில் சீரழிந்த டெகாடன்ட் இயக்கத்தின் ஒரு ஆதரவாளர். அவர் மனிதர்களின் அகநிலையான உணர்வுகளுக்கு, அவர்களது பாலியல் தேவைகளுக்கு மற்றும் மரணம் பற்றிய அவர்களது பயத்திற்கு, மார்க்சிஸ்டுகள் மிகவும் குறைந்த கவனத்தை செலுத்தும் போக்கு பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தினார். டெகாடன்டுகள் பிரத்யேக முன்னீடுபாடு கொண்டுள்ளவற்றில் அடங்கியதான வாழ்நிலையிலுள்ள இரண்டு கணங்களுக்கு அவர்கள் ஏன் கூடுதல் மரியாதை செய்யவில்லை: 'இரண்டு உடல்களின் சங்கமத்தின் பேரானந்தம் மற்றும் உடலில் இருந்து ஆன்மா பிரிதல்?'. இப்படியான விஷயங்கள் மீது மார்க்சிஸ்டுகள் வறிய முறையிலும், எப்போதாவதும் தான் அக்கறை காட்டினார்கள் என்று அந்த அறிவுஜீவி முறையிட்டார். ''சிறப்பாக சொல்வதாயின், வரலாற்று சடவாதம் இந்த அல்லது அந்த சமூக மனோநிலைக்கான (காமம், மர்மவாதம்) மூலத்தை சமூகத்திலுள்ள வெவ்வேறு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் மூலம் விளக்க முயற்சிக்கிறது. இதனை அது நன்றாகவோ செய்கிறதோ அல்லது மோசமாக செய்கிறதோ, அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், உங்களிடம் இருந்து சந்தேகத்திற்கிடமான விளக்கங்களைப் பெறுகிற நான் எவ்வாறாயினும் இறக்கப் போகிறேன், எனக்கு முன்னால் பரப்பப்பட்டிருக்கும் உங்களது வரலாற்று சடவாதத்தின் அனைத்து முன்னோக்குகளைப் பொறுத்தவரை, எனது ஆத்மார்த்தமான வாழ்க்கையின் நலனுக்காக அவற்றில் நான் நம்பிக்கை வைத்தாலும், அவற்றை, நான் இன்னும் எனது தவிர்க்க முடியாத இறப்பின் முன்னோக்கில்தான் நிறுத்துகிறேன்.'' இப்படியான வாழ்க்கை இருப்பு பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக மார்க்சிசத்தில் திருப்திகரமான பதில்கள் இல்லை என்று அந்த அறிவுஜீவி எதிர்ப்பு தெரிவித்தார். ''ஆனால் நீங்கள் எனக்கு வழங்குவது என்ன?'' என்று அவர் ட்ரொட்ஸ்கியை கேட்டார். ''புறநிலை ஆய்வா? அவசியம் பற்றிய வாதங்களா? உள்ளார்ந்த வளர்ச்சியா? மறுத்தலை மறுத்தலா? ஆனால் இவை எல்லாமே மிகவும் போதாமையாக இருக்கிறது, எனது புத்தி விவேகத்திற்கு அல்ல மாறாக எனது விருப்பத்துக்கு.'' (லியோன் ட்ரொட்ஸ்கியின் சிந்தனையில் கலாச்சாரமும் புரட்சியும், லண்டன் 1999- பக்கங்கள் 54-55).

ட்ரொட்ஸ்கி, அப்போது தான் டெகாடன்ட்களையும் மற்றும் அவர்களது ''சதையின் அராஜகத்தையும்'' (Anarchy of the flesh) தாக்கி சொற்பொழிவு ஒன்றை வழங்கியிருந்தார். அவர் தனது எதிர்ப்புடன் பின்வருமாறு பதிலளித்தார்: ''நீங்கள் தேர்ந்தெடுத்த களத்தில் யுத்தத்தை ஏற்றுக்கொள்வது சாராம்சத்தில் சாத்தியமில்லை என்பதை நான் காண்கிறேன். அறிவுஜீவி வட்டத்தின் ஒரு உறுப்பினர் தனிநபர் ஆளுமையின் எல்லையைக் கடந்து மரண பயங்கரம் மற்றும் கள்ளத்தனமான ஐயுறவுவாதத்தை வெல்வதற்கு உதவக் கூடிய வகையான ஒரு மதக் கொள்கைநெறியினை, அவரது ஆன்மாவின் ஆன்மாவான 'ஆழ்மனதை' நாம் வாழும் இந்த பெரும் சகாப்தத்துடன் மர்மமான முறையில் இணைக்கும் திறனுடைய ஒரு கொள்கை நெறியினை உருவாக்குவதற்கு நீங்கள் போகிறபோக்கில் என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இது எனது கண்ணோட்டத்தை ஏளனம் செய்வதாக இருக்கும். அது பைபிளின் வரலாற்று தோற்றுவாய்கள் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான சொற்பொழிவை நான் கேட்டு, பின் அந்த சொற்பொழிவாளர் ஊழிக் காலத்தின் அடிப்படையில் இரண்டாவது வருகைக்கான தேதியை எனக்கு சொல்வார் என்று எதிர்பார்ப்பது போலிருக்கும். அதுவல்ல என்வேலை திருவாளரே (Mais ce n'est pas mon metier, messieurs), என்பதுதான் நான் உங்களுக்கு சொல்லக் கூடியது. [அதே நூல் பக்கம் 57)]

உங்களது ஆவணத்தை நான் படிக்கும் போது டெகாடன்ட்களுடன் ட்ரொட்ஸ்கியின் கலந்துரையாடல் எனது நினைவிற்கு வருகிறது. நாங்கள் எதிர்கால குடும்பத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்கவும், ஒடுக்கப்பட்ட பாலியல் உந்துதல்களை வெளியேற்றுவதற்கான வழிகளை கண்டறியவும், பால் அடையாளத்திற்கான புதிய வடிவங்களை வகுக்கவும், மற்றும் பாலுறுப்புக்களை மையமாகக்கொண்ட பாலியலின் கொடுமைக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்கு மிகவும் பொருத்தமான பதில், அதுவல்ல என்வேலை திருவாளரே! (Mais ce n' est pas mon metier, messieurs!) இது எல்லாமே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலட்சிய அறிக்கையின் பகுதியாக கொஞ்சம் கூட கிடையாது.

22. Objective conditions, science and history

புறநிலையான நிலமைகள், அறிவியல் மற்றும் வரலாறு

''புறநிலையான நிலைமைகள், விஞ்ஞானம் அல்லது வரலாற்றில் முக்திக்கான தேடலை'' நாங்கள் செய்வதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். "முக்தி'' (Salvation) என்ற சொல் நமது அரசியல் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதி அல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட என்னை அனுமதியுங்கள். சமூக வேலைத்திட்டம் முக்தியை உள்ளடக்கவில்லை; அதனை நாடுபவர்கள் அந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதகுருமார்களை பார்க்கும்படி சொல்ல வேண்டும்.

சந்தேகமே இல்லை, எங்களது ''புறநிலைவாதத்திற்கு'' எதிரான தத்துவார்த்த அழுத்தமாகவே ''முக்தி'' என்ற உங்களது குறிப்பு உள்நோக்குடன் சேர்க்கப்பட்டதாக நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். நான் அதனை நன்கு புரிந்து கொள்கிறேன், ஆனால் அது அரசியல் விரக்தி மற்றும் சிடுசிடுப்பு நாற்றத்தை உங்களது குறிப்புக்கள் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மாற்றிவிடவில்லை. 1970-களின் தொடக்கத்தில் உங்களை வேர்க்கஸ் லீக் மற்றும் அனைத்துலக குழுவுக்கு முதலில் கொண்டுவந்தவற்றுக்கு, அடிப்படையில் மிகவும் எதிரான மார்க்சிச விரோத கருத்துக்களின் செல்வாக்கின் கீழ், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைவிட்டு விலகியதில் இருந்து, நீங்கள் வந்தடைந்த நிகழ்முறையை நீங்கள் தடமறிய வேண்டும்.

இன்று நீங்கள் வரலாற்றின் மீது நாங்கள் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி பரிகாசம் செய்கிறீர்கள்.[30] ஆனால் நீங்கள், இருபதாம் நூற்றாண்டின் துயரமிக்க வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் ஒரே ஒரு இயக்கம் என்கிற காரணத்திற்காக மட்டும் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலக குழுவில் இணைந்த இளைய மாணவ தலைமுறையின் ஒரு பாகமாக முன்பொருசமயம் இருந்திருக்கிறீர்கள். நமது அரசியல் விழிப்புணர்வு சகாப்தத்தில் அரசியல் ரீதியாக செயல்துடிப்புடன் இருந்த ஏராளமான தீவிரவாத போக்குகளின் மத்தியில், அனைத்துலக குழு மட்டும்தான் ஒரு பரந்த வரலாற்று முன்னோக்கின் உள்ளடக்கத்தில் வியட்நாம் போர், அமெரிக்க நகரங்களில் வெடிப்புகள், தொழிலாள வர்க்க மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் விரிவடையும் அலை ஆகியவை பற்றிய ஒரு ஆய்வினை வழங்கக்கூடியதாக இருந்த ஒரே இயக்கமாக தனித்து நின்றது. வரலாற்று படிப்பினைகள் இல்லையென்றால் வேறு எந்த அடிப்படையில் ஸ்ராலினிசம், மாவோயிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதம் ஆகியவற்றுக்கு நமது எதிர்ப்பு இருக்கிறது?

1970-களின் தொடக்கத்தில் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்த நம்மைப்போன்றவர்களை லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் தான் 1917 அக்டோபர் புரட்சியின் தலைவிதி, போல்ஷிவிசம் மற்றும் சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டம் ஆகியவற்றின் மீதான விளக்கத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கின. ரஷ்யப் புரட்சி மற்றும் அதற்கு பின்னர் நடந்தவைகளிலிருந்து ட்ரொட்ஸ்கி பெற்றுக்கொண்ட அனைத்து பெரும் மூலோபாய படிப்பினைகளை கற்பதில் நம்மை ஆட்படுத்திக்கொண்டோம். 1919-ல் ஸ்பாட்டகாஸ் எழுச்சியின் தோல்வியிலிருந்து 1933ல் பாசிஸ்டுகளின் வெற்றி வரையிலும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் நீடித்த நெருக்கடி, 1926-ல் பிரிட்டன் பொதுவேலைநிறுத்தம், 1925-க்கும் 1927-க்கும் இடையில் சீனாவில் புரட்சிகரமான சம்பவங்கள், 1923 க்கும் 1933க்கும் இடையில் சோவியத்யூனியனில் இடதுசாரி எதிர்ப்பின் போராட்டம், 1930-களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மக்கள் முன்னணி வாதத்தின் அழிவுகரமான பிரதிவிளைவுகள் மற்றும் மாஸ்கோ வழக்குகள் இப்படியான அனைத்து பிரமாண்டமான வரலாற்று அனுபவங்களும் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழுவின் காரியாளரை பயிற்றுவிப்பதில் உள்சேர்க்கப்பட்டது. சமரசம் செய்யமுடியாத அனைத்து வேலைத்திட்ட வேறுபாடுகளையும் ஒரு கணத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்கும்போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளரை அனைத்து ஏனைய இயக்கங்களிலிருந்து உடனடியாக வேறுபடுத்திக் காண்பிப்பது, வரலாற்றுடன் அதற்குள்ள அதிக ஈடுபாடு தான், கடந்தவை இறந்து விட்டவை அல்ல என்ற அதன் தீவிரமான நம்பிக்கை, அதாவது போல்க்னரின் சொற்களை பயன்படுத்துவோமாயின் ''அது கடந்தவையே கூட அல்ல''. கடந்த காலத்திலிருந்து பெறப்பட்டதும், தனது கட்டமைப்புக்குள் நடப்பு போராட்டங்களின் அபிவிருத்தியை கொண்டிருப்பதுமான அரசியல் நிலைமைகள் மற்றும் முரண்பாடுகளின் ஸ்தூலமான வடிவத்திலும், அதேபோல் வெகுஜனங்களிடையேயான அரசியல் மற்றும் சமூக நனவு வடிவங்களிலும் வரலாறு வாழ்ந்ததாக நாம் நம்பினோம்.

ஆனால் வரலாற்றுடன் நமது தொடர்ச்சியான ஈடுபாடு அச்சுறுத்தலுக்கான காரணமாகியிருக்கிறது எனக் கண்டறிந்ததைப் போல் எழுதுகிறீர்கள்! பின் நவீனத்துவமானது தேய்ந்து செல்லும் ஒரு வெறுமனே ஒரு காலகட்ட சிந்தனை என்று எங்களுக்கு நீங்கள் சொல்லும் அதே சமயம் வரலாறு, தொடர்பான உங்களது சொந்த நிராகரிப்பு அணுகுமுறையானது முதலாளித்துவ மெய்யியலின் இப்பிற்போக்கு பள்ளியின் அதே அடையாளத்தைத் தாங்கியிருக்கிறது.

விஞ்ஞானத்தின் தொடர்பான உங்களது நிராகரிக்கும் குறிப்பு, முன்பு தீவிரவாதமாக இருந்த குட்டி முதலாளித்துவத்தினரின் பரந்த தட்டுக்கள் மத்தியில் காணக்கூடிய பகுத்தறிவற்ற விஞ்ஞான எதிர்ப்பு மற்றும் தொழில்நுட்ப எதிர்ப்பு உணர்வுகளுக்கு உங்கள் சரணாகதியின் வெளிப்பாடாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த கண்ணோட்டத்தின் மெய்யியல் வேர்கள் மற்றும் தாக்கங்களை நாம் ஏற்கனவே விவாதித்து விட்டோம். இப்போது அதன் நடைமுறை உய்த்துணர்வு பண்புகளைக் காண்போம். இந்த உள்ளடக்கத்தில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஜியோஹெகனின் நூல் மறைந்த ருடோல்ப் பெரோவின் ''கற்பனாவாதத்திக்கு'' அர்ப்பணித்த ஒரு அத்தியாயத்தை உள்ளடக்கியது. பெரோ, ஒரு கிழக்கு ஜேர்மனி அதிருப்தியாளர், அவர் இறுதியாக ஜேர்மன் கூட்டாட்சி குடியரசில் குடியேறினார், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பசுமைக் கட்சியில் (Green party) செயல் ஊக்கம் கொண்டவராக மாறினார். பெரோ தெள்ளத் தெளிவாக மார்க்சிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மையமான வரலாற்று பாத்திரம் இரண்டையுமே நிராகரித்தார். ஒருவேளை சங்கடத்தின் காரணமாக, பெரோவின் படைப்பு பற்றி ஜியோஹெகனின் அனுதாபத்துடனான மீளாய்வு பற்றிய குறிப்பை தவிர்க்க நீங்கள் முடிவு செய்திருக்கலாம். அவர் விளக்குகிறார்: பெரோ 'நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப/தொழிற்துறை முன்னேற்றம் பற்றிய கருத்தை நிராகரிக்கிறார். அது ஒரு சுயநலமான மற்றும் அழிவுகரமான கருத்துரு, அது சமூகத்தில் ஏனைய அனைத்து வகையிலான ஒடுக்குதலையும் தூண்டி விட உதவுகிறது. அத்தகைய வழிகளுடன் ஒரு முறிவை ஏற்படுத்த வேண்டும் - எதிர்கால சமூகம் எளிமையானதாக இருக்க வேண்டும் அல்லது அது இருக்கவே முடியாமலே போய்விடும்...'' (மார்க்சிசமும் கற்பனாவாதமும், பக்கம் 118)

இப்படியான கருத்துக்கள் உண்மையிலேயே தோழர் பிரென்னர், உங்களது ''ஒரு விஷயத்தை அறிய வேண்டுமாயின் அதன் முடிவை அறியவேண்டும்'' என்ற நவீன (அல்லது போலியான) கற்பனாவாத அறிக்கையில் நீங்கள் சமர்ப்பித்ததுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. ஒரு சோசலிச பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தின் முற்போக்கான சாத்தியத்திறனை அது உழைப்பின் உற்பத்தி திறனில் மற்றும் மனித சாத்தியத்திறனை அறிந்து கொள்வதில் ஒரு பிரம்மாண்டமான விரிவாக்கத்தை அனுமதிக்கும் என வலியுறுத்தியதற்காக தோழர் பீம்ஸை விமர்சித்து நீங்கள் கூறியதாவது: ''ஒரு சோசலிச பார்வை, பயனீட்டுவாத வகையான ஒன்றுக்கு எதிரானதாக, உற்பத்தி திறனை மனித அபிவிருத்திக்கு கீழ்படுத்துகிறது, மற்றும் அது பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு நேரடி எதிராக அடிக்கடி வரும் கருத்துக்களுக்கு, 'சோம்பேறியாக இருப்பதற்கான உரிமை போன்ற' கருத்துக்களுக்கு ஆதரவு என்று அர்த்தப்படும்."

அதிகபட்ச இலாபம் எடுப்பதையும் ஆளும்மேல்தட்டு உறுப்பினர்கள் பிரம்மாண்டமான அளவில் தனிப்பட்ட செல்வம் திரட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்ட, உற்பத்தி சாதனங்களில் தனியுடமையினால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு பொருளாதார அமைப்பில் தொழில்நுட்பம் மற்றும் மனிதத் திறன் தவறாக பயன்படுத்தப்படுவதை பற்றி நீங்கள் சாதாரணமாக பேசவில்லை. நீங்கள் கூறுவதாவது: ''சுதந்திரத்திற்கு முடிவற்ற பொருளாதார வளர்ச்சி தேவைப்படுவது ......... ஏன் என்பதற்கான காரணம் எதுவும் கிடையாது'', அதற்கு பின்னர் நீங்கள் சேர்த்துக் கூறுகிறீர்கள்: ''விஷயம் சரியாக என்னவென்றால் ஒரு புரட்சிக்கு பின்னர் முதலாவது தலைமுறைகளுக்கு அவர்களது முன்னுரிமைகள் எவ்வாறாயினும் பூகோள பட்டினி, வறுமை மற்றும் நோய்களை ஒழிப்பதாகும் - வலியுறுத்தல் தொழில்நுட்ப மாற்றத்தில் அல்லாது, பலப்படுத்தல் மீதும், மனித தேவைகளை எது சிறந்த வகையில் பூர்த்தி செய்கிறது மற்றும் எது சூழலியல் ரீதியாக சிறப்பாக செயல்படுகிறது போன்றவற்றை வகைப்படுத்துவதிலும் தான் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி மீதும் மற்றும் தொழில்நுட்ப மாற்றம் குறித்த நிர்ப்பந்தமான மனத்தயக்கம் மீதும் (தொழில்நுட்ப வளர்ச்சியில் கட்டுப்பாடுகளைக்கொண்டு வருவதற்கு போலீஸ் அரசு நடவடிக்கைகளுக்கு எவ்வகையிலும் குறைவில்லாதது தேவைப்படும்), பல தலைமுறைகள் நீடிக்கக்கூடிய, ஒரு முடக்கத்தின் சமூக பிரதிவிளைவுகளை ஆய்வு செய்துபார்ப்பது மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அது சமூக அழிவிற்கான தயாரிப்பு குறிப்பாக இருக்கிறது, அதற்கான ஜாடைகளை ஆட்சிக்கு வரும் சக்தி பெற்ற பல்வேறு மாவோயிச செல்வாக்கு உள்ள இயக்கங்களின் பிற்போக்குதனமான சோதனைகளின் பயமுறுத்தும் பின்விளைவுகளில் காணமுடியும். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் மார்க்சிச விரோதமானவை, அது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறாக, ''முன்னேற்றத்திற்கான அடிப்படை நீரூற்றாக தொழில்நுட்ப அபிவிருத்தியிலிருந்து தொடங்குகிறது, மற்றும் உற்பத்தி சக்திகளின் இயக்கவிசை மீது கம்யூனிச வேலைத்திட்டத்தை கட்டுமானம் செய்கிறது."(டெட்ராயிட்,1991, பக்கம்39)

மனித விடுதலையை தொழில்நுட்ப மற்றும் உற்பத்திதிறனின் வளர்ச்சியிலிருந்து பிரிப்பதற்கான உங்களது முயற்சி, தத்துவம் மற்றும் வரலாறு பற்றிய அறியாமையை காட்டிக்கொடுக்கிறது. நீங்கள் சொல்வது சரியாகுமானால், சோசலிசப் புரட்சியானது, தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் உழைப்பின் உற்பத்தி திறனின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக சமூகம் அதன் பொருளாதார அமைப்பின் தற்போதிருக்கும் வடிவங்களை தூக்கி வீசிய, முதலாவது வரலாற்று சம்பவத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக ஆகும். அப்போது, ''ஆரம்ப அடிப்படைக்கு குறைத்து பார்த்தால், வரலாறு என்பது ஒரு வேலை நேரத்தின் பொருளாதாரத்திற்கான போராட்டம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. சுரண்டலை தடை செய்வதை மட்டும் கொண்டு சோசலிசத்தை நியாயப்படுத்ததி விட முடியாது: அது சமூகத்திற்கு முதலாளித்துவம் அளிப்பதை விடவும் ஒரு உயர்வான நேர சிக்கனத்தை உத்தரவாதமளிக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல் சுரண்டலை மட்டும் அகற்றுவது என்பது ஒரு எதிர்காலம் இல்லாத, ஒரு திடீர் தருணமாக மட்டுமே இருக்கும்'' (அதே நூல் பக்கம் 68)

இப்போது தெளிவாக தெரிவதுபோல், அறிவியலின் சக்தி மீது எங்களுக்குள்ள நம்பிக்கை தொடர்பான உங்களது சிடுசிடுப்பான குறிப்பு ஒரு சமூக முன்னோக்கை காட்டிக்கொடுக்கிறது, அது ஒட்டுமொத்தமான பிற்போக்கு இல்லை எனில், சாராம்சத்தில் பின்தங்கியது.[31]

இறுதியாக அனைத்து அரசியல் பணிகளின் தீர்வுக்கான அத்திவாரங்களை ''புறநிலையான நிலைமைகள்'' வழங்கும் என்ற எங்களது நம்பிக்கை தொடர்பாக உங்களது ஏளனக்குறிப்புக்கு நாங்கள் வருகிறோம். வேறு எங்கே அவற்றைகாணமுடியும் என்று நாங்கள் கேட்கலாமா? அனைத்துலகக் குழுவை விமர்சிப்பதாக எண்ணிக் கூறிய உங்களது ஒரு வசனம், அகநிலை கருத்துவாதம் மற்றும் பகுத்தறிவின்மைக்குள் உங்களது சொந்த கீழிறக்கத்தை தற்செயலாகவே அம்பலப்படுத்துகிறது. நீங்கள் பின்வருமாறு எழுதுகிறீர்கள்: ''சோசலிச நனவுக்காக போராடுவதில் உள்ள நிஜமான பிரச்சனைகள் எவ்வளவு அதிகமாக 'புறநிலையான நிலைமைகளின்' அடிவானத்தின் மீது பின்வாங்குகிறதோ அவ்வளவு அதிகமாக தொழிலாள வர்க்கம் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அக்கறைகளில் இருந்து அந்நியமாகிறது." இது மார்க்சிசம் அல்ல புதிர்வாதம். (Mysticism)" 'புறநிலையான நிலைமைகளின்' அடிவானத்தை கடந்து" நனவுக்கான தங்கள் போராட்டத்தை நடத்த முன்மொழிபவர்கள் உண்மையில் யதார்த்தத்தில் இருந்து தப்பியோட முயற்சிக்கின்றனர்.

நாம் ''புறநிலையான நிலைமைகளின்'' உலகில் வாழ்கிறோம் மற்றும் போராடுகிறோம், அதுதான் நமது தற்போதைய பிரச்சனைகள் அதேபோல் அவற்றின் இறுதித்தீர்வுகள் இரண்டின் மூலவளமும். வருங்காலத்தில் எழும் எதுவும் இன்று நிலவும் நிலைமைகளின் விளைபொருளாகத்தான் இருக்கும். மார்க்சும் ஏங்கெல்சும் விளக்கியவாறு: ''.........யதார்த்தத்தில் மற்றும் நடைமுறையிலுள்ள சடவாதிக்கு, அதாவது கம்யூனிஸ்டுகளுக்கு, அது, இருக்கின்ற உலகை புரட்சிகரமாக்குவது பற்றிய, இருப்பில் காணக்கூடிய விஷயங்களை பற்றி நடைமுறையில் நன்கு அறிந்து கொள்வது மற்றும் மாற்றுவது பற்றிய பிரச்சினையாகும்.......

"எங்களை பொறுத்தவரையில் கம்யூனிசம் என்பது நிலைநாட்டப்பட வேண்டிய ஒரு விவகார நிலையாக, யதார்த்தமானது தன்னைத்தானே சரிசெய்து கொள்ள வேண்டிய ஒரு இலட்சிய இலக்காகவோ இல்லை. தற்போதுள்ள நிலைமைகளை ஒழிப்பதற்கான நிஜமான இயக்கம்தான் கம்யூனிசம் என்று நாங்கள் கூறுகின்றோம் இந்த இயக்கத்தின் நிலைமைகள் தற்போதிருக்கும் ஆதார அமைப்பிலிருந்து விளைகின்றன. (மார்க்ஸ் - ஏங்கெங்ல்ஸ் திரட்டு நூல்கள், தொகுப்பு நியூயார்க் 1976, பக்கங்கள் 38-49)

நாம் இன்று வாழுகின்ற இந்த உலகம், உலகத்தின் அத்தனை வன்முறை மற்றும் மனிதத்தன்மையற்ற நிலையை அகற்றத்தக்க ஒரு சோசலிசப் புரட்சிக்கான உண்மையான சாத்தியக் கூறினை தனக்குள்ளேயே உள்ளடக்கி இருக்கிறது என்கிற புரிதலே, எந்தவித கூடுதலான போலி-கற்பனாவாத மனச்சோர்வகற்றும் மருந்துகளுக்கும் அவசியமில்லாத ஒரு தனித்துவமான நம்பிக்கைக்கு மூலவளமாக இருக்கிறது.

உங்களது பல்வேறு ஆவணங்களில் நீங்கள் சமர்ப்பித்த கருத்துக்கள் நீங்கள் இருவருமே மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இயக்கத்தை விட்டு விலகியதில் இருந்து மார்க்சிசத்தில் இருந்து தத்துவார்த்த மற்றும் அரசியல் ரீதியாக எவ்வளவு தூரம் விலகி பயணித்துள்ளீர்கள் என்பதை பதிவு செய்கிறது. உங்களது தற்போதைய பயணத் திசையிலேயே நீங்கள் தொடர்வீர்களாயின் அது பல வருடங்களுக்கு முன்னர் நீங்கள் தழுவியிருந்த அரசியல் உறுதிப்பாடுகளில் எஞ்சியிருப்பவற்றையும் முழுமையாக மறுதலிப்பதற்கே இட்டுச் செல்லும். இது நடக்காது என்று நாம் எதிர்பார்க்கிறோம். இந்த ஆவணத்தை கவனமாக படிக்கவும் தற்போது நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும், அனைத்துலகக் குழு உங்கள் இருவரையும் வலியுறுத்துகிறது.

தோழமையுடன் உங்கள்

டேவிட் நோர்த்

தலைவர், சர்வதேச ஆசிரியர் குழு

உலக சோசலிச வலைத் தளம்.

Loading