எகிப்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முபாரக் ஆட்சிக்கு எதிராக அணிவகுப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

39 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஹொஸ்னி முபாராக்கின் சர்வாதிகாரம் செவ்வாயன்று ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று அலையென முன்னோடியில்லாத வகையில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் பெரும் அதிர்விற்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 20,000 ஆர்ப்பாட்டக்காரர்கள், பெரும்பாலும் இளைஞர்களையும் இளந் தொழிலாளர்களையும் கொண்டிருந்ததோடு, கெய்ரோ நகர மையத்தில் நிலைநிறுத்தியிருந்த பெரும் கலகம் அடக்கும் பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படையை எதிர்த்து நின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் நாடெங்கிலுமுள்ள நகரங்களில் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர்.

துனிசியாவில் பல காலமாகவிருந்த அரசியல் சர்வதிகாரி ஜைன் எல் அபிடைன் பென் அலியை ஜனவரி 14ம் தேதி வெகுஜன எதிர்ப்புக்களால் அகற்றியதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராட்டுத் தெரிவித்ததுடன், முபாராக்கும் ஜைன் அலி பென்னின் உதாரணத்தைப் பின்பற்றி இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினர். கெய்ரோ, இன்னும் பிற நகரங்களில் பொலிசார் அணிவகுப்புக்களைத் தாக்கி, கண்ணீர்க் குண்டுப் புகையை வீசியும், தடியடியும் நடத்தினர். கெய்ரோவின் கிழக்கில் சூயசில் இரு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

“வறுமையை வேண்டாம் என்போம், வேலையின்மையை வேண்டாம் என்போம், சித்திரவதையை வேண்டாம் என்போம்.”

நகர மையத்தில் பொலிசார் மற்றும் துணை இராணுவப் பிரிவுகள் ஏராளமாகத் குவித்து நிறுத்தப்பட்ட நிலையில் கெய்ரோவில் அன்றைய தினம் ஆரம்பமாகியது. மத்திய பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் கைரோ நகர்நடுவில் உயர்நீதிமன்றத்திற்கு முன்னே நிலை கொண்டன. பொலிசார் நகர மையத்தில் பெரும் பிரிவுகளை தனியே பிரித்து வைக்கும் வகையில் செயல்பட்டனர்.

கெய்ரோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரத்தின் புறப்பகுதிகளிலிருந்து நகர மையத்தில் கூடுவதற்கு நட்சத்திர வடிவமைப்பில் முன்னேறினர். நண்பகலில், கெய்ரோவிற்கு தெற்கே டார் எல் சலாமில் “ரொட்டியும் சுதந்திரமும் தேவை” என்று கோஷமிட்டபடி நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த எதிர்ப்பு பொலிசாரால் விரைவில் அடக்கப்பட்டது.

அணிவகுப்பாளர்கள் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் கெய்ரோ தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “ஒரு சுதந்திரமான அரசாங்கம் எங்களுக்குத் தேவை”, “முபாரக் வீழ்க” என்ற கோஷங்களை எழுப்பினர். பின்னர் டஹிர் சதுக்கத்திற்கு கூட்டம் முன்னேறி, எகிப்தியப் பாராளுமன்றத்திற்குள் புக முயன்றனர். அவர்கள் அலையென பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் எதிர்கொள்ளப்பட்டனர். மேலும் நீர் பாய்ச்சுதல், கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

சில நேரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசுக்கும் இடையே நடந்த மோதல்கள் உள்நாட்டுப்போரைப் போல் இருந்தன. எதிர்ப்பாளர்கள் வாகனங்களில் ஏறி பொலிசார் நீர் பாய்ச்சுதலை தடை செய்ய முயன்றனர். சில நேரங்களில் பொலிசார் சூழப்பட்டு, அருகிலே உள்ள தெருக்களில் ஓட நேரிட்டது. டஜன் கணக்கான கைதுகள் செய்யப்பட்டன, பல எதிர்ப்பாளர்கள் தடிகளால் பொலிஸ் பாய்ந்து தாக்கியபோது காயமுற்றனர்.

அதே நேரத்தில் அரசாங்கமானது எதிர்ப்புக்கள் பற்றிச் செய்தி ஊடகம் தகவல் சேகரிப்பதை நிறுத்த முயன்றது. செய்தியாளர்களின் அடையாள அட்டைகள் பல சிறு நகரங்களில் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்ப்புக்களைப் பற்றித் தகவல் கொடுத்து வந்த சுயாதீனமான வலைத் தளங்கள் மூடப்பட்டு எகிப்தில் ட்விட்டர் சேவையும் தடைக்குட்பட்டது.

எகிப்தின் அரசாங்க-எதிர்ப்புத் தின நடவடிக்கை வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அரபு முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் அவற்றின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிராக அவற்றின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பெருகிவரும் எழுச்சியின் ஒரு பகுதியாகும். துனிசியாவில் நடந்துவரும் எதிர்ப்புக்களை தவிர, அல்ஜீரியா, யேமன், ஜோர்டான் மற்றும் சூடான் ஆகியவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

அரபு அரசுகளிலேயே அதிக மக்கள் தொகையையும், வலிமையையும் கொண்ட எகிப்து, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இராணுவ உதவியையும் பெறுவது, அரபு உலகில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் முக்கிய அரண் ஆகும். எகிப்தில் நடக்கும் நிகழ்வுகளின் விளைவுகளானது ஒரு புறத்தில் அரபு ஆளும் உயரடுக்கிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் அதே போல் மறுபுறம் தொழிலாள வர்க்கத்திற்கும் பாரியளவில் ஈடுபாட்டை உயர்த்துகிறது.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் எழுச்சி என்பது, மக்கள் புரட்சிகரப் போராட்டத்தில் நுழைவதின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தின் பெரும் சமூகச் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் மற்றும் அவைகளின் கூட்டு அரபு முதலாளித்துவமும் பெயரளவு எதிர்த்தரப்புச் சக்திகளின் - அதாவது இதில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், இஸ்லாமியவாதக் குழுக்கள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோர் -- மீள் குழுவாக்கத்தையும் ஆதரவைத் திரட்ட முற்படும்போது தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களைக் கொடுக்கும், அச்சக்திகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, திசை மாற்றி இறுதியில் இயக்கத்தையே நசுக்கி விடும்.

முக்கியமான பிரச்சினை பிராந்தியம் முழுவதும் ஒரு புரட்சிகரத் தலைமையை அபிவிருத்தி செய்வதாகும். மத்திய கிழக்கும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களைப் புரிந்துகொள்ளுதலை அது வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதையொட்டி முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் அது அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதுடன், நிரந்தரப் புரட்சியின் சோசலிச முன்னோக்கு அடிப்படையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் துனிசியாவில் அது மக்கள் இயக்கத்திற்குக் கொண்டுள்ள விரோதப்போக்கை ஜனநாயகச் சீர்திருத்தம் பற்றி வெற்றுத்தனமாகப் பேசி, மூடி மறைக்க முற்பட்டுள்ளதுடன், எகிப்தில் நடக்கும் மக்கள் எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில் முபாரக்கிற்கு ஆதரவை வலியுறுத்தியுள்ளது. வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறினார்: “எகிப்திய அரசாங்கம் உறுதிப்பாடு குலையாமலுள்ளது, மக்களுடைய நெறியான கோரிக்கைகளுக்கு விடையளிக்கும் வழிவகைகளைக் காணும், எகிப்திய மக்களின் நலன்களை பாதுகாக்கும் என்பதுதான் எங்கள் மதிப்பீடு.”

வாஷிங்டனானது எகிப்தில் ஒரு வழியைக் காண திடமாயுள்ளதுடன் முபாரக்கின் மிருகத்தன அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கவும் தயாராக உள்ளது என்பதைத்தான் இது குறிக்கிறது.

செவ்வாயன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியான சமூக மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளை கோரினார்கள்: வேலைகளையும், வறுமைக்கு எதிராகவும் மற்றும் நாட்டிலுள்ள அவசரக்காலச் சட்டங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு என. எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் -இவைகள் பேஸ்புக் மற்றும் இணையத்தின் வலைத் தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன-“சித்திரவதை, வறுமை, ஊழல் மற்றும் வேலையின்மைக்கு” எதிராகப் “புரட்சி தினம்” என்பதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது பொலிசாரைக் கௌரவிக்கும் ஒரு தேசிய விடுமுறை நாளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. மரபார்ந்த முறையில் அதிருப்தியாளர்கள் பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்க்கும் நாளாகப் பயன்படுத்தப்படுகிறது

துனிசியாவில் நடப்பதற்கு ஒப்பான சமூக எழுச்சி வந்துவிடுமோ என அஞ்சும் எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டங்களைப் புறக்கணித்து அவர்களுடைய ஆதரவாளர்கள் பங்குபெறக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்ட அறிக்கைகளை விடுத்தனர்.

துனிசிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலில் முபாரக்கை எதிர்த்துப் போட்டியிட்ட மஹ்மத் எல்பரடெய் “ஒழுங்கு முறையான வகையில் வரவேண்டும், துனிசிய மாதிரியில் அல்ல” என்பதுதான் தன் விருப்பும் என்பதை வெளிப்படுத்தினார். ஜனவரி 25 நடக்கவுள்ள எதிர்ப்புக்களில் தான் பங்கு பெறப்போவதில்லை என அறிவித்த அவர், சிடுமூஞ்சித்தனமான முறையில் Der Spiegel பேட்டி ஒன்றில் கடந்த வாரம் கூறினார்: “அவர்களுடைய இடியோசையை நான் ஒன்றும் திருட விரும்பவில்லை.”

எதிர்ப்புக்கள் முஸ்லிம் பிரதர்ஹுட் என்னும் அமைப்பினாலும் புறக்கணிக்கப்பட்டன. கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் முன்னாள் உறுப்பினராக இருந்த சொபி சலே தன் அமைப்பு மக்கள் வெகுஜன இயக்கம் அரசாங்கத்தை எதிர்க்கும் திறனைக் கொண்டிருப்பதை எதிர்க்கிறது என்பதையும் தெளிவாக்கினார். “நம் சக்தியுடன் இணைந்த மிகப் பெரிய கலந்துகொள்ளுதல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். நாங்கள் அதை விரும்பவில்லை. அதைத் தவிர்க்க முயல்கிறோம்” என்றார்.

அமைப்பின் மற்றொரு முக்கிய உறுப்பினிரான எசெம் எல்-எரியன் ஒரு படி மேலே சென்று பிரதர்ஹுட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அன்றைய தினம் பொலிசுடன் இணக்கமாக இருக்கும் என்றும் நாம் “அனைவரும் ஒன்றாக (பொலிஸ் தினத்தை) கொண்டாட வேண்டும்” என்றும் கூறினார்.

தேசிய சீர்திருத்த El Tagamu (தேசிய முற்போக்கு ஒன்றியக் கட்சி), சோசலிஸ்ட் என்று தன்னைத் தவறாக விவரித்துக் கொள்ளுவதும் தான் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த அமைப்புக்களின் நிலைப்பாட்டை நிராகரித்து சர்வாதிகாரத்தை வீழ்த்தும் தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து நின்றனர். கெய்ரோவைத் தவிர, அலெக்சாந்திரியா, சினாய் ஜிசா, போர்ட் சையத், மற்றும் சூயஸ் ஆகிய சிறு நகரங்கள், பெரு நகரங்கள் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சினாயில் எதிர்ப்பாளர்கள் சர்வதேசப் படை நோக்கர்களால் பயன்படுத்தப்படும் விமான நிலையத்திற்கு செல்லும் சாலையை மூடிவிட்டனர். அலெக்சாந்திரியாவில் எதிர்ப்பாளர்கள் முபாரக் மற்றும் அவருடைய மகன்களில் ஒருவரான கமல் ஆகியோரின் சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பிந்தையவர் அவர் தந்தை ஓய்வு பெற்றால் அல்லது இறந்தால் அப்பதவியை வகிப்பதற்குத் தயார் செய்யப்படுகிறார்.

கெய்ரோவிற்கு மேற்கே மஹல்லா மாவட்டத்தில் பொலிஸ் சோதனைச் சாவடிகள் போடப்பட்டன. ஏப்ரல் 6, 2008ல் பல்லாயிரக்கணக்கான மஹல்லா வாழ் மக்கள் உயரும் விலைவாசிகள், குறையும் ஊதியங்களுக்கு எதிராக வேலைநிறுத்த எதிர்ப்பை நடத்தினர். செவ்வாயன்று மஹல்லாவில் மீண்டும் தொழிலாளர்களுக்கும் பொலிசிற்கும் இடையே நடந்த மோதல்களின் இடமாயிற்று. கசல் எல் மஹல்லாவில் இருக்கும் ஆலைத் தொழிலாளர்களும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர்.

துனிசியாவில் இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன. இராணுவம் தலையிட்டு பென் அலி அகற்றப்பட்டபின் முதல் தடவையாக எதிர்ப்பாளர்களைக் கலைத்தது. படையினர்கள் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு நூற்றுக்கணக்கான மக்கள் எப்சா மைய நகரத்திற்குள் சிதறியோடுமாறு செய்தனர். ஒரு இளைஞர் எதிர்ப்பைக் காட்டும் வகையில் பிராந்திய தொழிற்சங்கத் தலைமையகத்திற்குள் தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டார்.

உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக மத்திய கிழக்கு, மக்ரெப் ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற பதாகையின் கீழ் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச கட்சிகள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் கட்டியமைக்கப்பட வேண்டும்.

இப்போராட்டம் வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு அரேபியத் தொழிலாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டுள்ள பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உருவாகிவரும் தொழிலாளர்களுடைய போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading