முன்னோக்கு

அமெரிக்காவும், எகிப்தும், சோசலிச புரட்சிக்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று, எகிப்து முழுவதிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருந்திரளான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஆதரவுடனான சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை ஆட்டம் காண செய்தது. பெரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையைக் கண்டித்து, ஜனாதிபதியின் இராஜினாமா கோரிக்கையுடன், பொலிஸூடன் மோதிக்கொண்டு, ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தீவைத்து நூறு ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர்.

துனிசியாவின் மற்றொரு அமெரிக்க ஆதரவுடனான சர்வாதிகாரி ஜைன் எல் அபிடைன் பென் அலி ஆர்ப்பாட்டங்களால் துரத்தப்பட்ட, வெறும் இரண்டு வாரங்களில் இந்த போராட்டங்கள் வந்தன. யேமன், ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா உட்பட அப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளிலும் கணிசமாக ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன.

அனைத்து புரட்சிகர எழுச்சிகளைப் போலவே, எகிப்தில் உருவாகியுள்ளவையும், உலகின் எல்லாயிடங்களிலும் ஜனநாயகத்திற்கு ஆதரவு என்ற அமெரிக்க ஆளும் மேற்தட்டின் வேஷங்கள் உட்பட அனைத்து பொய்களையும் பழைய மாயைகளையும் விலக்கித் தள்ள உதவுகின்றன. இந்த நிகழ்வுகள் மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் பிற்போக்கின் அச்சாணியாக உள்ள அமெரிக்க அரசாங்கத்தின் பாத்திரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

மக்கள் எழுச்சியின் ஆரம்பத்திலிருந்தே, ஒரு முக்கிய அமெரிக்க கூட்டாளியான எகிப்திய ஆட்சிக்கும், முபாரக்கிற்கும் ஒபாமா நிர்வாகம் அதன் ஆதரவைத் தெளிவுபடுத்தி வந்துள்ளது.

ஜனாதிபதி ஒபாமா பெருந்திரளான மக்கள் பேரெழுச்சியின் முன்னால் வெள்ளியன்று மாலை முபாரக்கை ஆதரித்து அவருடைய கருத்துக்களை வெளியிட்டார். முபாரக்கின் பொலிஸ் குறைந்தபட்சம் ஒரு டஜன் கணக்கான மக்களை கொன்ற, நூற்றுக்கும் மேலானவர்களைக் காயப்படுத்திய, அறிவிக்கப்படாத எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த அதே நாளில், ஒபாமா எரிச்சலூட்டும் விதத்தில், 'அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வன்முறையையும் எகிப்திய அதிகாரிகள் தவிர்க்க வேண்டுமென்று அமெரிக்கா கேட்டு கொள்கிறது' என்பதாக குறிப்பிட்டார்.

அவர் ஓர் அப்பாவி பார்வையாளனைப் போல பேசினார். ஆனால் மக்களை ஒடுக்க எகிப்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட கைத்தடிகளும், துப்பாக்கிகளும், கண்ணீர் புகைவீசிகளும், தண்ணீர் பீய்ச்சிகளும் மற்றும் டாங்கிகளும், எழுத்துபூர்வமாகவே கூட, “அமெரிக்காவில் செய்யப்பட்டவை' என்ற முத்திரையை தாங்கி இருக்கின்றன. அமெரிக்கா எகிப்தின் ஒடுக்குமுறை கருவிகளுக்கு நிதியுதவியாக ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலரை அதற்கு வழங்கி வருகிறது. இது இஸ்ரேலை அடுத்து அமெரிக்க உதவி பெறும் மிகப் பெரிய இரண்டாவது உதவிபெறுவோராக எகிப்தை ஆக்கியுள்ளது.

முபாரக் அவருடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக சித்திரவதை மற்றும் படுகொலைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை ஒபாமா நிர்வாகம் அறியும் என்பதுடன் அதற்கு உடந்தையாகவும் இருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை கசிவுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதேநாளில், மனித உரிமைகளை மதிப்பது குறித்து ஒபாமா முபாரக்கிற்கு உபதேசித்தார்.

முபாரக்கால் எல்லைமீறி நடத்தப்பட்ட அரசு வன்முறைக்கும், தங்களைத்தாங்களே பாதுகாத்து கொள்வதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் செய்யப்பட்ட முயற்சிகளுக்கும் இடையில் ஏதாவது ஒப்பீடு இருக்கும் என்று காட்டும்வகையில் “வீதிகளில் போராடி வருபவர்கள் அமைதியானமுறையில் அவர்களை வெளிப்படுத்திக் காட்டும் பொறுப்பை கொண்டிருக்கிறார்கள்,” என்ற ஏனைய அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்திய நிலைப்பாட்டையே ஒபாமாவும் அழுத்தந்திருத்தமாய் குறிப்பிட்டார்.

அந்த நிர்வாகம் முபாரக்கிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துவதே ஒபாமா குறிப்புகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. எகிப்திய ஜனாதிபதி, தாம் பதவியிலிருந்து இறங்கப் போவதில்லை என்பதை அறிவிக்கவும், “குழப்பங்களுக்கு' எதிராக 'பாதுகாப்பை' அமுலாக்கப் போவதாக எச்சரிக்கவும் தொலைக்காட்சியில் தோன்றிய சிறிது நேரத்திலேயே ஒபாமாவும் பேசினார். ஒரு புதிய மந்திரிசபை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள், பொருளாதார வாய்ப்புகளின் விரிவாக்கம் குறித்த அவரின் வெற்று வாக்குறுதிகளும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி இன்னும் அதிகளவிலான மக்களை வீதிகளில் இறங்க செய்து, மக்களின் வெறுப்பை மட்டும் தான் தூண்டிவிட்டது.

எகிப்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அமெரிக்காவின் உண்மையான மனோபாவத்தை ஒபாமாவின் அறிக்கை வெளியிட்டது: “அமெரிக்கா எகிப்துடன் ஒரு மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது, மேலும் நாங்கள் பல பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொண்டிருக்கிறோம்.”

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா, எகிப்து மக்களை இழிவுபடுத்தி, எகிப்திய அரசாங்கத்தை அதன் ஒரு முக்கிய மூலோபாய கூட்டாளியாக பார்க்கிறது. இந்த குறிப்புகள் துணை ஜனாதிபதி ஜோசப் பெடனிடமிருந்தும் எதிரொலிக்கின்றன. முபாரக் இணைய சேவையை முடக்கி, சிறப்பு நடவடிக்கை படைகளை நிறுவ முடிவெடுத்த போது, 'அப்பிராந்தியத்தின் (அமெரிக்காவின்) பூகோள-அரசியல் நலன்களின் பொருட்டு… ஜனாதிபதி மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்' என்று ஜோசப் வியாழனன்று தெரிவித்தார்.

“பூகோள-அரசியல் ரீதியான நலன்கள்' என்பதன் மூலமாக, அந்த நிர்வாகம் மத்தியகிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உட்பட, அப்பிராந்தியத்தின் மீது அமெரிக்காவின் தலைமையைத் தக்கவைக்கும் அதன் தீர்மானத்தைக் குறிக்கிறது. இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளுடன், எகிப்திலிருந்து சவூதி அரேபியா மற்றும் ஏனைய எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா அரசுகள் வரையில் அமெரிக்கா ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு உதவியுள்ளது.

இரகசியமான மற்றும் பகிரங்கமான இராணுவ நடவடிக்கைகள் மூலமாக, அமெரிக்கா அதன் நலன்களுக்கு ஒரு முக்கிய சவாலாக முன்வந்து நிற்கும் எந்த அரசாங்கத்திற்கும் குழிதோண்ட திட்டமிட்டு வேலை செய்து வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா மட்டுமே ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இரத்தந்தோய்ந்த காலனித்துவ யுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க செல்வாக்கைத் தக்க வைப்பதில் எகிப்து, குறிப்பாக முபாரக்கிற்கு முன்னால் அப்பதவியிலிருந்த 1978இல் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அன்வர் சதாத் காலத்திலிருந்து, ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. 1979இல், ஈராக்கில் ஷா பதவியிலிருந்து இறக்கப்பட்ட போது அமெரிக்கா ஒரு முக்கிய கூட்டாளியை இழந்தது. அப்போதிருந்தே, எகிப்திய இராணுவமும், உளவு அமைப்புகளும் அப்பிராந்தியத்தில் பெருந்திரளான மக்களை ஒடுக்குவதில் அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வருகின்றன.

எகிப்தில் நடந்த நிகழ்வுகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும், அப்பிராந்தியத்தில் எழக்கூடிய வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சி அதன் பூகோள-மூலோபாய நலன்களுக்கு ஒரு பெரும் தாக்குதலை கொண்டிருக்கும் என்ற அதன் ஆழ்ந்த அச்சத்தால் வழிநடத்தப்படுகிறது.

முபாரக் இல்லாமலோ அல்லது அவரிடத்தில் நேரடியாக இராணுவத்தைக் கொண்டு வந்தோ அல்லது வேறு யாராவது 'எதிர்தரப்பு' நபரைக் கொண்டு வந்தோ அதனால் செயல்பட முடியுமா என்பதை நிர்வாகம் கவனித்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும் கூட, துனிசியாவின் பென் அலி விரட்டப்பட்டதைத் தொடர்ந்து, முபாரக்கின் வீழ்ச்சியென்பது, அப்பிராந்தியம் முழுவதிலுமே ஒரு மக்கள் எழுச்சியலையைக் கட்டவிழ்த்துவிடக்கூடும் என்பதை அது நன்கு அறிந்துள்ளது.

மத்திய கிழக்கிலும், மெஹ்ரெப்பிலும் உள்ள தொழிலாளர்கள் ஆழமான தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறிருப்பினும், போராட்டம் அதன் ஆரம்பகட்ட நிலைகளில் தான் உள்ளது. ஒரு புதிய புரட்சிகர தலைமை மற்றும் வேலைதிட்டத்தை அபிவிருத்தி செய்வதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு இல்லையானால், அப்பிராந்தியத்தின் ஆளும் மேற்தட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டணியுடன் சேர்ந்து, ஒன்று இப்போதிருக்கும் கொடுங்கோலர்களைத் தக்க வைக்கவோ அல்லது தற்போதிருக்கும் அதே அரசியல் அமைப்புமுறையைப் பாதுகாக்க அதேஅளவிற்குப் பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்தைக் கொண்டு வரவோ மீள்குழுவாக்கம் செய்யும்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், சில அடிப்படை பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முதலில், எந்த எதிர்தரப்பு குழுக்களின் மீதும், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் மொஹமத் எல்பரடே உட்பட, எதன்மீதும் சிறிது கூட நம்பிக்கை வைக்க முடியாது. போராட்டங்கள் கைமீறி சென்றுவிடாமல் தடுக்கும் உள்நோக்கத்தோடு மொஹமத் எல்பரடே சமீபத்தில் தான் எகிப்திற்குத் திரும்பியுள்ளார். இந்த சக்திகள் அனைத்துமே, அத்துடன் இற்றுப்போன, அரசு-கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்களும், முற்றிலுமாக எகிப்திய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவுகளுக்கு பொறுப்பேற்றுள்ளன.

இரண்டாவதாக, போராட்டத்தை விரிவாக்குவதற்கு, அப்பிராந்தியத்தில் மொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் தலைமைதாங்கும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவது அவசியமாகிறது. அந்த எழுச்சியின் ஆரம்பக்கட்ட வடிவம் ஏற்கனவே, மதம், தேசியவாதம், இனம் அல்லது பாரம்பரியம் அனைத்தையும் கடந்து, வர்க்கம் தான் ஒவ்வொரு நாட்டிலும் அடிப்படை சமூகப் பிரிவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இப்போதிருக்கும் ஜனநாயக-எதிர்ப்பு சமூக மற்றும் அரசியல் வடிவங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள விரும்பும், மற்றும் அதற்குள் கட்டுப்படுத்த உபதேசிக்கும் அனைவரோடும் சேர்த்து, அமெரிக்க மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு தங்களின் அழைப்புகளை முன்வைப்பவர்களையும் நிராகரிப்பது அவசியமாகிறது. தற்போதைய அரசை, மக்கள் ஜனநாயகத்தின் புதிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்தால் மாற்றி அமைப்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஓர் அரசாங்கம், எல்லா முக்கிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளையும் தேசியமயமாக்குவது உட்பட, சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அடித்தளத்தை அளிக்கும்.

இறுதியாக, எகிப்திய தொழிலாளர்களின் போராட்டம், நனவுபூர்வமாக அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். ட்ரொட்ஸ்கி அவருடைய நிரந்தர புரட்சியில் விளக்கியபடி, சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவது உட்பட, மிக அடிப்படை ஜனநாயக தேவைகளுக்கும் கூட, தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்பில் மற்றும் தேசிய முதலாளித்துவ ஆட்சியில் தீர்வு கிடையாது. எகிப்து உட்பட, மத்தியகிழக்கு முழுவதிலும் கடந்த நூற்றாண்டில் எழுந்த எத்தனையோ மக்கள் போராட்டங்களின் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணிந்த ஸ்ராலினிச அமைப்புகளின் காட்டிக்கொடுப்புகள் காரணமாக இருந்தன.

இந்தப் போராட்டங்களை உருவாக்கிய சமூக நிலைமைகள் ஒரே தன்மையுடையன. அவையாவன, பெரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின்மீது ஒன்றுதிரண்டுள்ள கோபம், ஊழல்மீதான வெறுப்பு, ஒரு குறுகிய ஆளும் மேற்தட்டு ஏமாற்றிச் சேர்த்த செல்வம், ஒட்டுமொத்தமாக மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பொறுப்பில்லாமல் இருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக உள்ளடங்கி இருக்கும் ஆக்ரோஷம் ஆகும். இந்த நிலைமைகள் மத்தியகிழக்கிலும், முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் மட்டுமல்ல, மாறாக முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் கூட அவ்வாறே உள்ளன.

ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவமும்—முதலாகவும், முக்கியமாகவும் அமெரிக்க முதலாளித்துவம்—அதன் 'சொந்த' தொழிலாளர் வர்க்கத்தையே இரக்கமில்லாமல் தாக்கி, முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலைமுறிவிற்கு பிரதிபலிப்பைக் காட்டி வருகின்றனர். இதுதான், முன்னாள் காலனிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும், ஒடுக்கப்பட்டோரையும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள அவர்களின் வர்க்க தோழர்களோடு ஐக்கியப்படுத்த முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு புறநிலைமை சாதகமாக இருக்கின்றன.

முபாரக் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதில் அமெரிக்காவின் பாத்திரம், எகிப்திய மக்கள் போராட்டங்களின் எந்த தீர்வும் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்காமல் சாத்தியமில்லை என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. இந்த பணியில், எகிப்திய மக்களின் மிக முக்கிய கூட்டாளிகளாக இருப்பது அமெரிக்க தொழிலாள வர்க்கமாகும்.

தசாப்த காலமாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்திய முண்டுகோல்களின் நிலைப்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, மக்கள் பேரெழுச்சிகள் அபிவிருத்தி அடைந்திருக்கும் வேகமானது, உலகம் முழுவதிலும் நிலவும் சமூக மற்றும் வர்க்க பதட்டங்களின் நிலையை வெளிப்படுத்தும் மரண சாசனமாக உள்ளது. 2008இல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைந்து வருகிறது. மேலும் 2011 புரட்சிகர பேரெழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்தை இது அறிவிக்கும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது.

இந்த போராட்டங்களை முன்னெடுக்க, இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினால் மட்டுமே காப்பாற்றி வரப்படும் ஒரு முன்னோக்கான இருபதாம் நூற்றாண்டின் பாடங்களிலும் சர்வதேச சோசலிச புரட்சியிலும் நனவுபூர்வமாக வேரூன்றிய ஒரு புதிய தலைமை கட்டியமைக்கப்பட வேண்டும். ஆகவே எகிப்து, துனிசியா மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் நிலவும் சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

Loading