எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தாம் பதவியிறங்கப் போவதில்லை என்றும் செப்டம்பர் வரை பதவிகாலத்தில் நீடிக்க இருப்பதாகவும் வெளியிட்ட அவருடைய அறிவிப்புடன் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், அவருடைய ஆட்சியை எதிர்த்து வரும் மில்லியன் கணக்கானவர்களுக்கு முன்னால் சவால் விடுத்துள்ளார்.

இராணுவத்தின் கணிசமான பிரிவுகளிடமிருந்தும் மற்றும் வாஷிங்டனிலிருந்து அவருக்கு நிதிபட்டுவாடா செய்யும் எஜமானர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லாமல் முபாரக்கால் பதவியை தக்கவைக்க முடியாது. ஒபாமா நிர்வாகம் யாருடைய நலன்களுக்காக ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் நிதியளிக்கிறதோ, அந்த எகிப்திய உயர்மட்ட தளபதிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற முபாரக்கின் வாக்குறுதி அர்த்தமற்றது. வாஷிங்டனும் எகிப்திய இராணுவமும், ஆட்சிக்கு எதிரான மக்களை நிலைகுலைக்க, கலைக்க, ஒடுக்க தேவையான காலஅவகாசத்தை எடுத்துக் கொள்வது தான் அதன் ஒரே நோக்கம். கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், முபாரக் இராணுவம் மற்றும் அவர்களின் அமெரிக்க ஆலோசகர்கள், ஆட்சியைக் காப்பாற்ற உத்தரவாதமளிக்கும் வகையில், பொங்கிவரும் எதிர்ப்பிற்கு எவ்வாறு ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் பிரதிபலிப்பைக் காட்டுவது என்பதைத் தீர்மானிக்க தீவிர மூலோபாய ஆலோசனைகளில் பரபரப்பாகியுள்ளனர்.

எகிப்தில் கணிசமான ஆதரவைப் பெற்றிருக்காத மொஹ்மத் எல்பரடேய் பேசிய முதல்கட்ட அறிக்கைகள், முன்னாள் உளவுத்துறை தலைவரும் புதிதாக பெயரிடப்பட்ட துணை ஜனாதிபதியுமான ஒமர் சுலெய்மன் மற்றும் பல்வேறு எதிர்கட்சியின் பிரதிநிதிகளிடையே விவாதத்தில் உள்ளன. சுலெய்மன், தரைப்படையின் முதன்மை தளபதி சமி அனன், எல்பரடே மற்றும் இரசாயனத்துறையில் நோபல் பரிசு பெற்ற அஹ்மத் ஜேவேயல் ஆகியோரைக் கொண்ட ஒரு 'பொறுப்பாளர்கள் குழுவை' உருவாக்குவது தான் இந்த விவாதங்களின் நோக்கமென்று செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் முபாரக்கிற்கு இந்தளவு விரைவாக குழிபறிப்பது ஓர் அதிகார வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுவதால், இந்த நடவடிக்கையின் போக்கு தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

முபாரக்கின் விடாபிடியான நிலைப்பாடு, இராணுவம் வகித்துவரும் பிற்போக்குதனமான மற்றும் இரட்டைவேஷ பாத்திரத்தை அடிக்கோடிடுகிறது. இராணுவம் போராட்டத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு ஓர் அறிகுறியாக காட்டப்பட்ட, “எங்கள் மக்களுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்த போவதில்லை' என்ற அதன் வாக்குறுதி, ஒன்றுக்கும் உபயோகமற்றது. இராணுவம் நாட்டிற்கு எதிராக நிற்கிறது. இன்னும்கூட டாங்கிகளும் துருப்புகளும் தஹ்ரிர் சதுக்கத்தைச் சூழ்ந்துள்ளன.

நேரடியாக இராணுவத்தை சார்ந்துள்ள எகிப்திய ஆட்சியாளர்கள், 1952இல் பரூக் அரசரைத் தூக்கியெறிந்த Free Officers Movement இன் தலைமையிலிருந்த முஹமத் நக்யூப் மற்றும் கமால் அப்தெல் நாசர் காலத்திலிருந்து, இராணுவத்தின் பதவியிலிருந்தவர்களைத் தான் அவர்களின் தலைவர்களாக இழுத்துள்ளனர். முஹமத் அன்வர் எல் சதாத்தின் படுகொலையைத் தொடர்ந்து, 1981இல் முபாரக் இராணுவத்திலிருந்து ஜனாதிபதியாக உயர்ந்தார்.

இராணுவம் முபாரக்கின் அதிகாரத்திற்கு அடித்தளமாக இருக்கிறது. கடந்த வாரம் மேலெழுந்த போராட்டங்களுக்கு எதிராக தம்முடைய ஆட்சியைப் பாதுகாக்க, அவர் எடுத்த ஆரம்பகட்ட முயற்சியாக ஒரு மந்திரிசபையை நியமித்ததில், மிக வெளிப்படையாக அது இராணுவத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அவர், ஒரு முன்னாள் தளபதியான சுலெய்மனை துணை ஜனாதிபதியாகவும், முன்னாள் விமானப்படை தளபதி அஹ்மத் ஷபீக்கை பிரதம மந்திரியாகவும், பாதுகாப்பு மந்திரி ஜெனரல் மொஹமத் ஹூசை டன்தாவியை துணை பிரதம மந்திரியாகவும், ஜெனரல் மஹ்முத் வாக்தியை உள்துறை மந்திரியாகவும் அதில் நியமித்தார்.

'நாட்டையும், குடிமக்களையும் பாதுகாப்பதில் தனது கடமையைச் செய்ய காத்திருக்கிறது' என்ற இராணுவத்தின் அறிவிப்பு, உண்மையில் இதைத் தான் குறிக்கிறது.

சுலெய்மன் தெரிவித்ததாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டது: “விரைவாக மாறிவரும் அதிகார சூத்திரத்தின் ஆதாரமாக தம்மைத்தாமே நிறுத்திக்கொண்டு, எதிரெழுச்சியின் இறுதிக்காட்சியை எழுதுவதற்காக, உளவுத்துறை தலைவர் ஒரு வலிமையான இடத்தில் துணை ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருக்கலாம்.”

Guardian இன் சைமன் இதையும்விட தெளிவாக, எகிப்திய ஆட்சியின் 'உயிர்பிழைக்கும் திட்டம்' சுலெய்மனை மையமாக கொள்கிறது என்று எழுதினார்: “இப்போதைய நிலைமையில், இராணுவம் (இது அவரை வரவேற்கிறது) மற்றும் பாதுகாப்பு கருவிகள் பின்புலத்துடன் சுலெய்மன் தான் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக உள்ளார். நடுங்கிகொண்டிருக்கும் ஆளும் மேற்தட்டு, அவரைக் கொண்டு சீரழிவுகளிலிருந்து ஓரளவிற்காவது காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறது.'

“முன்னாள் மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் இதற்கு முன்னர் இருந்த அனைத்து முக்கிய உள்நாட்டு அதிகார பதவி வகிப்போரையும் சேர்த்து, இப்போதைய நிலைமையில், நடைமுறையில், சுலெய்மன் ஓர் இராணுவ ஜண்டாவை அவர் தலைமையில் ஏற்றுள்ளார்.”

இராணுவம் 'நாட்டின் பாதுகாவலர்' என்பது முற்றிலும் பொய்யானது என்பதே முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் முறையீடாக உள்ளது. இராணுவம் முதலாளித்துவ வர்க்கத்தின் பாதுகாவலராக உள்ளது.

உழைக்கும் மக்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்குவது தான் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் பங்காகும். ஆளும் மேற்தட்டால் அனுபவிக்கப்படும் செல்வவளம் மற்றும் ஏகபோக அதிகாரத்தைக் காப்பாற்ற நோக்கம் கொண்டுள்ள அரசியல் உபாயங்களுக்கு நம்பிக்கையூட்டுவது தான் தற்போதைய அதன் பிரச்சாரமாக உள்ளது. எவ்வாறிருப்பினும், இறுதியாக, நிஜமான மாற்றம் முன்னிறுத்தப்படும் போது, 1973இல் சிலியிலும் மற்றும் 1989இல் தியனன்மென் சதுக்கத்திலும் கிடைத்த இரத்தந்தோய்ந்த அனுபவங்களைப் போலவே, தற்போதிருக்கும் சமூக அமைப்பை காப்பாற்ற முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பால் வரவேற்கப்படும் இந்த இராணுவத்தால் சிறிதும் இரக்கமில்லாமல் காரியங்கள் நடத்தப்படும் என்பதை எடுத்துக்காட்டும்.

எகிப்திய முதலாளித்துவ அரசு நெருக்கடியில் உள்ளது. ஆனால் அது சேதமடையாமல் இருப்பதுடன், அதன் கட்டுப்பாட்டை முழுமையாக மீண்டும் பெற வேலை செய்து கொண்டிருக்கிறது. பரந்த மக்கள் இயக்கம் மேலும் அவசியமான ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு வடிவங்களையும், அரசியல் தலைமையையும் அபிவிருத்தி செய்யவேண்யுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இராணுவத்தில் தங்கியிருக்கும் முபாரக் ஆட்சி, இந்த மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளை பயன்படுத்திக் கொள்ள காண்கிறது. அரசாங்கம், இராணுவ இயந்திரம் மற்றும் பழைய ஆட்சியில் தற்போது இடம் கோரிவரும் 'எதிர்தரப்பு' சக்திகளிலிருந்தும் சுயாதீனப்பட்ட மக்கள் அதிகார மையங்களை (popular centres of power) உருவாக்குவது தான், தொழிலாள வர்க்கத்தின் முன்நிற்கும் முக்கிய பணியாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, 1905 மற்றும் 1917க்கு இடையில் ரஷ்யாவில் கட்டவிழ்ந்த அந்த இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த புரட்சிகர போராட்டத்தின் அனுபவங்களுக்குள் எகிப்திய தொழிலாளர்கள் கவனத்தைத் திருப்ப அழைப்புவிடுக்கிறது. 1905இல், சோவியத்துக்கள் என்றழைக்கப்படும் தொழிலாளர் சபைகள், ஜாரிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் பாகங்களாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் ரஷ்யாவின் தொழில்துறை பிராந்தியங்கள் முழுவதிலும் திடீரென ஒன்றுதிரண்டது. 1917இல் தொழிலாளர்களையும், விவசாயிகளின் மத்தியிலிருந்த போர்குணமிக்க சிப்பாய்களையும் ஐக்கியப்படுத்தி, சோவியத்துக்கள் மீண்டும் எழுந்தன. சோவியத்துக்கள் புரட்சிகர போராட்டத்தின் அடித்தளமாக ஆனது; அவை முதலாளித்துவ அரசாங்கத்தைத் தூக்கியெறிந்தன.

இது, எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

Loading