முன்னோக்கு

காஷ்மீர் மீதான புது டெல்லியின் தாக்குதலும், வகுப்புவாத பிற்போக்குத்தனம், ஏகாதிபத்தியம், மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அணுஆயுதமேந்திய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஏழு தசாப்தகால இராணுவ மூலோபாய போட்டியின் மையத்தில் இருந்த இந்திய கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பகுதியான ஜம்மு-காஷ்மீரின் ஒரு பாதி தன்னாட்சி சிறப்பு அந்தஸ்தை, இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் கடந்த திங்களன்று சட்டவிரோதமாக நீக்கியது.

புது டெல்லி ஜம்மு-காஷ்மீரை இருகூறாக பிரித்து, இதுவரையில் இந்தியாவின் ஒரே முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலமாக இருந்த அதன் அந்தஸ்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக குறைத்து, பெரிதும் அதிகாரங்களைச் சுருக்கியது. ஜம்மு-காஷ்மீரின் "தேர்ந்தெடுக்கப்படும்" சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் வெறும் சோடனைகளாக குறைக்கப்பட்டு, இனி அது மத்திய அரசின் பொறுப்பாண்மையின் கீழ் இருக்கும்.

இந்த மாற்றங்கள், பிரதம மந்திரி நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷா, இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் இந்தியாவின் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளது உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடத்தப்பட்ட ஓர் அரசியலமைப்பு சதியின் மூலமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதேபோல் ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களுக்கு, முன்னெச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை. காஷ்மீர் மக்கள் திங்கட்கிழமை கண்விழிக்கும் போது தான், அரசாங்கம் ஒரு, நிர்வாக அதிகார ஆணை மூலமாக அரசியலமைப்பிலிருந்து ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டது என்பதையும் இந்தியா வசமிருக்கும் காஷ்மீர் முன்நிகழ்ந்திராத ஒரு முற்றுகை நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அறிந்து கொண்டனர்.

வாரயிறுதி வாக்கில், இணையம், கேபிள் தொலைக்காட்சி, செல்போன் மற்றும் தரைவழி தொலைபேசி சேவை என அனைத்தும் ஜம்மு-காஷ்மீரில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. பத்தாயிரக் கணக்கான சிப்பாய்களும் துணை இராணுவப்படையினரும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்துவதையும், நான்கு நபர்களுக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுப்பதையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரை இந்திய ஒன்றியத்திற்குள் "முழுமையாக ஒருங்கிணைத்து" கொண்டமை இந்திய அரசின் இராணுவக் காலடியின் கீழ் தொடங்கியது, அல்லது வேறுவிதமாக கூறுவதானால், சென்னையை மையமாக் கொண்ட இந்து நாளிதழ் குறிப்பிட்டவாறு, அப்பிராந்தியம் "அந்நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு" உள்ளது.

இந்திய மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் இந்திய பாதுகாப்பு படைகள்

பிஜேபி அரசியலமைப்பு சதி, ஒன்றுக்கு மேற்பட்ட பிற்போக்குத்தனமான நோக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் உள்ளடங்குவன:

• 1989 இக்குப் பின்னர் இருந்து ஜம்மு-காஷ்மீரை அதிர வைத்துள்ள பாகிஸ்தான் ஆதரவிலான இந்திய-விரோத கிளர்ச்சியை, புது டெல்லி எடுக்கும் முடிவுகளின்படி விரைவாக குரூரமான முடிவுக்குக் கொண்டு வருவது.

• பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டுக்கும் எதிராக இந்தியாவின் கரங்களை மூலோபாயரீதியிலும் இராணுவரீதியிலும் பலப்படுத்துவது.

• இந்து வலதை அணித்திரட்டுவதற்காகவும் மற்றும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பிளவுபடுத்துவதற்காகவும் இந்து வகுப்புவாதம் மற்றும் போர்வெறி கொண்ட தேசியவாதத்தை கிளறிவிடுவது மற்றும் காஷ்மீரை அடிபணியச் செய்வது என்பது இந்து வலதின் நீண்டகால ஒருமித்த கூக்குரலாக இருந்துள்ளது.

• இந்த கடைசி நோக்கம் குறிப்பாக முக்கியமானதாகும். பிஜேபி வெகு சமீபத்தில் தான் ஒரு தேர்தல் வெற்றியைப் பெற்றது என்றாலும், அது ஒரு சமூக வெடி உலையின் மீது அமர்ந்துள்ளது என்பதை துல்லியமாக அது அறிந்துள்ளது. தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கின்ற போதினும் கூட, சமூகரீதியில் தீமை ஏற்படுத்தும் முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை வியத்தகு முறையில் தீவிரப்படுத்த வேண்டும் என்று பெருவணிகங்களிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்து வருவதை அது முகங்கொடுக்கிறது.

பிஜேபி இன் அரசியலமைப்பு சதி ஓர் "உயர்-அபாய சூதாட்டம்" என்பதை உணர்ந்தாலும் கூட, பாசாங்குத்தனமான நாடாளுமன்ற எதிர்கட்சிகளில் பெரும்பான்மை உட்பட இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, அதன் பின்னால் அணிதிரண்டுள்ளன.

இதுவொரு பூகோளரீதியான போக்கு. ஒவ்வொரு இடத்திலும், நெருக்கடியில் சிக்கிய மற்றும் பீதியுற்ற ஆளும் உயரடுக்குகள் எளிதில் கையாள முடியாத அரசியல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளைக் கையாள இராணுவ மோதலுக்குள்ளும் மற்றும் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளை நோக்கியும் திரும்பி வருகின்றன.

பாகிஸ்தானின் வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாத பிரதம மந்திரி இம்ரான் கான், அணுஆயுதங்களைப் பிரயோகிப்பதன் மூலமாகவும் கூட, “நாம் கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரையில் ஒரு போருக்குள்" வேகமாக இறங்கும் ஒரு இரத்தத்தை உறைய வைக்கும் சூழலைச் செவ்வாயன்று விவரித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தொழிலாள வர்க்கம், காஷ்மீரிலும், தெற்காசியா எங்கிலும் மற்றும் அதற்கு அப்பாலும் இரண்டு முதலாளித்துவ உயரடுக்குகளின் அனைத்து கன்னைகளுக்கும் மற்றும் அவர்களின் சதிகளுக்கும் எதிரான சமரசமற்ற எதிர்ப்பில், ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இந்த நெருக்கடியில் சுயாதீனமாக தலையீடு செய்ய வேண்டும்.

பிரிவினையும், முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியும்

தெற்காசியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் போர் அபாயத்தின் வளர்ச்சியானது ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு நிகழ்வுபோக்குகளின் விளைவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

முதலாவது, ஏகாதிபத்தியத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்தை வென்றெடுப்பதிலும் அல்லது நிலப்பிரபுத்துவம் மற்றும் ஜாதியத்தை இல்லாதொழிப்பது போன்ற எந்தவொரு ஏனைய அத்தியாவசிய ஜனநாயக பணியைத் தீர்ப்பதிலும் முதலாளித்துவ வர்க்க தலைமையிலான இந்திய தேசிய சுதந்திர இயக்கம் தெள்ளத்தெளிவாக தோல்வி அடைந்துவிட்டது என்பதாகும். 1947 "சுதந்திரத்தில்" முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெருவாரியான இந்து இந்தியா என்று அந்த துணைக்கண்டத்தின் இரத்தக்களரியான வகுப்புவாத பிரிவினையே இந்த தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.

இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடர்ந்து ஏகாதிபத்தியம் செல்வாக்கு செலுத்துவதற்கும், பகுத்தறிவார்ந்த பொருளாதார வளர்ச்சி செயல்குலைந்து போவதற்கும், போர் மற்றும் போர் தயாரிப்புகளுக்காக எண்ணற்ற உயிர்களும் ஆதாரவளங்களும் சூறையாடப்பட இட்டுச் செல்வதற்கும் வழிவகைகளாக சேவையாற்றி உள்ளது. இன்று அது தெற்காசிய மக்களை, உண்மையில் ஒட்டுமொத்த உலகையும், ஓர் அணுஆயுத பேரழிவுடன் அச்சுறுத்துகிறது.

இந்த நிகழ்வுபோக்குகளில் இரண்டாவது, உலக முதலாளித்துவத்தின் அமைப்புரீதியிலான நெருக்கடியாகும். இது ஒவ்வொரு தேசியத்தின் முதலாளித்துவ அணியையும் தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலைக் கடுமையாக தீவிரப்படுத்துவதற்காகப் பெரும்பாடுபட நிர்பந்தித்து வருகிறது என்பதுடன், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் முன்முகப்பில் நிற்க, இது ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலமாக உலக அரங்கில் அதன் இடத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயல்கிறது.

1919 இல் இருந்து 1947-48 வரையில் மூன்று தசாப்த காலத்திற்கு தெற்காசியாவை அதிர வைத்த மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், ஒரு தலை சிறந்த விடுதலைக்கான சாத்தியக்கூறைக் கொண்டிருந்தது. ஆனால் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையின் கீழ் அது காட்டிக்கொடுக்கப்பட்டு, கருக்கலைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய கட்சியாக இருந்தது, இது, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு நிற்பதாக வாதிட்டது. ஆனால் அதன் சொத்துக்களுக்காக நடுங்கிய காங்கிரஸ் தலைமை தெற்காசியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பொதுவான வர்க்க நலன்களுக்கான ஒரு விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களை ஐக்கியப்படுத்த விரோதமாக இருந்ததுடன், அது இயல்பாகவே திராணியற்றும் இருந்தது.

1930 களில், முக்கியமாக பிரிட்டிஷ் இந்தியாவில் ஆரம்பக்கட்ட புரட்சிகர மேலெழுச்சி வேகமெடுத்து கொண்டிருந்த 1942 மற்றும் 1947 இக்கு இடையே, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் பலம் மற்றும் சுயாதீனமான தலையீட்டால் பீதியுற்று, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு எந்திரத்தை அவர்கள் கரங்களில் பெறுவதற்காகவும் மற்றும் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காகவும் இலண்டனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள முன்பினும் அதிக ஆற்றொணா நிலையில் இருந்தனர்.

இந்தியாவை விட்டுச் சென்று கொண்டிருந்த காலனித்துவ எஜமானர்கள் மற்றும் வகுப்புவாத நிலச்சுவான்தார்கள் செல்வாக்கில் இருந்த முஸ்லீம் லீக்கிடம் முன்முயற்சியை சரணடைய செய்த பின்னர், காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு சம்மதித்தது மட்டுமல்லாமல், 1947 இன் வசந்தகால முடிவிலும் கோடையிலும் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் வகுப்புவாத பிரிவினையை வலியுறுத்துவதற்காக அது இந்து மகாசபாவின் சக்திகளுடன் இணைந்தது.

ஒரு தீர்க்கதரிசனமான பகுப்பாய்வில், இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியில் (BLPI) ஒழுங்கமைந்திருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் இத்தகைய மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு இடையே, காங்கிரஸ் கட்சி தலைமை எதை கொண்டு பிரிவினைக்கான அதன் ஆதரவை நியாயப்படுத்தியதோ அந்த இரண்டு பொய்களை, அதாவது அது "வகுப்புவாத பிரச்சினையை" தீர்க்கும் மற்றும் "சுதந்திரத்திற்குப் பாதையைத் திறந்து" விடும் என்பனவற்றை அம்பலப்படுத்தினர்.

அந்த கருத்துக்களுக்கு நேரெதிராக, BLPI எச்சரிக்கையில், அது நாடுகளுக்கு இடையே தேசிய-வகுப்புவாத போட்டியையும், “ஒவ்வொரு நாட்டிலும்" “பயங்கரமான" வகுப்புவாதத்தையும் தூண்டிவிட்டு, “ஏகாதிபத்திய அடிமை" சங்கிலியை மீண்டும் பிணைப்பதற்கான வழிவகைகளாக சேவையாற்றும் என்று எச்சரித்தனர். தெற்காசியாவின் பத்தாயிரக் கணக்கான மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான முற்போக்குப் பணியை, முதலாளித்துவ வகுப்புவாத மறுஉயிர்ப்பிப்பின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே அடையப் பெற முடியும். “முதலாளித்துவ வர்க்கம் பிற்போக்குத்தனமாக யாரைத் துண்டுதுண்டாக துண்டாடி உள்ளதோ,” அதனை “தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே முற்போக்குத்தனமாக ஐக்கியப்படுத்த முடியும்,” என்று BLPI உறுதிப்படுத்தியது.

வெளிப்படையான காயம் என்னவென்றால் இந்த பகுப்பாய்வின் சரியானத்தன்மையையும் மற்றும் பிரிவினையிலிருந்து பிறந்த இரண்டு அரசுகளின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையையும் காஷ்மீர் உறுதிப்படுத்துகிறது. 1947-48 இன் முதலாவது இந்திய-பாகிஸ்தானிய போரில் உலகின் மிகவும் பலமான காவல் எல்லைகளில் ஒன்றால் பிரிக்கப்பட்டதில் இருந்து காஷ்மீரி மக்களின் ஜனநாயக உரிமைகளை, புது டெல்லியும் இஸ்லாமாபாத்தும் இரண்டுமே, ஏழு தசாப்தங்களாக, காலால் மிதித்து நசுக்கி உள்ளன.

1989இல், ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தலில் தில்லுமுல்லு செய்தது மற்றும் அதை அலட்சியப்படுத்தியதை தொடர்ந்த வெகுஜன எதிர்ப்புகளை நசுக்கியதற்கு எதிராக வெடித்தெழுந்த கிளர்ச்சிக்கு எதிராக புது டெல்லி ஜம்மு-காஷ்மீரில் ஓர் "கொடூரமான போரை" நடத்தி உள்ளது, அதை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் காணாமல் போவது மற்றும் நீதிவிசாரணையற்ற கொலைகள் செய்வது தொடர் கதையானது. இதற்கிடையே, இந்திய ஆட்சி மீது ஜம்மு-காஷ்மீரில் நிலவிய கோபம் மற்றும் அதிருப்தியை மோசடியாக கையாளவும், வகுப்புவாத தாக்குதல்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமியவாத காஷ்மீரி பிரிவினைவாதிகளுக்குத் தளவாட உதவிகளைப் பாய்ச்சி அதன் சொந்த பிற்போக்குத்தனமான மூலோபாய நலன்களுக்காக அவற்றை அணித்திரட்டிக் கொள்ளவும் இஸ்லாமாபாத், முயன்றுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர், பாகிஸ்தான் விரைவிலேயே சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பனிப்போர் மோதலில் அமெரிக்க ஏகாதிபத்திய சேவகராக சேவையாற்ற கையெழுத்திட்டது. அந்நாட்டின் உயிர்வாழ்வில் ஏறத்தாழ பாதி காலம், அமெரிக்கா-உதவிய இராணுவ சர்வாதிகாரங்களால் அது ஆட்சி செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள் வறுமையிலும், அவலநிலையிலும் மற்றும் அறியாமையிலும் இருந்த போதினும் கூட, போருக்குப் பிந்தைய செழுமைக்காலம் மற்றும் சோவியத் வழங்கிய ஆதரவினை சாதகமாக பயன்படுத்தி இந்திய முதலாளித்துவம், அரசு-தலைமையிலான முதலாளித்துவ அபிவிருத்தி திட்டத்தை பின்பற்றியது, அதனை எரிச்சலூட்டும் விதமாக "காங்கிரஸ் சோசலிசம்" என்று கூறியது, அதேபோல, அது உலக அரங்கில் "ஏகாதிபத்திய-எதிர்ப்பு" அணிசேரா இயக்கத்தின் தலைவனாக காட்டிக் கொண்டது.

எவ்வாறாயினும், அதன் பாகிஸ்தானிய போட்டியாளரைப் போலவே, இந்திய முதலாளித்துவ வர்க்கமும் அதிகரித்து வந்த சமூக எதிர்ப்பைத் திசைதிருப்புவதற்காக ஜாதிய மற்றும் வகுப்புவாத வேற்றுமைகளைத் தூண்டிவிடும் பிரிட்டிஷ் காலனிய சூழ்ச்சியையே பின்பற்றியது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு கடமைப்பாடுகளில் பெயரளவுக்கு மதசார்பின்மை பொதியப்பட்டிருந்த போதினும், காங்கிரஸ் கட்சி அதிகமாக இந்து-சாயலுடன் தான் இந்திய தேசியவாதத்தை ஊக்குவித்தது. 1984 சீக்கிய-விரோத படுகொலைகளைத் தூண்டிவிடுவதில் காங்கிரஸ் கட்சி தலைமை கொடுத்தது மற்றும் 1992 இல் பாப்ரி மஸ்ஜித் இடித்தல் உட்பட வகுப்புவாத அட்டூழியங்களை அது கண்டுங்காணாது போல் இருந்தது.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்குத்தனத்தைத் தழுவுகிறது

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்டமைக்கபட்டமை மற்றும் பூகோளமயமாக்கல் ஆகியவை அதன் அரசு-தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சி மூலோபாயத்தின் கால்களை வாரிவிட்ட போது, இந்திய முதலாளித்துவ வர்க்கம் வேகவேகமாக அதன் சோசலிச, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும், அதற்காக, மதசார்பின்மை பாசாங்குத்தனங்களை ஓரங்கட்டியது. காங்கிரஸ் கட்சி முன்முகப்பில் நிற்க, இந்தியாவை உலக மூலதனத்திற்கான ஒரு மலிவுழைப்பு தளமாக மாற்றும் அடிப்படையில் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும் அடிப்படையில், அது ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய பங்காண்மையை உருவாக்க அது ஆக்ரோசமாக திரும்பியது.

1991 இக்குப் பிந்தைய இந்திய "வளர்ச்சி" இன் பலாபலன்கள், கொத்தடிமை கூடங்கள் மூலமாகவும் மற்றும் பொது சொத்துக்களின் மலிவுவிலை விற்பனையிலிருந்தும் இலாபங்களை விழுங்கியுள்ள ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சமூக சமத்துவமின்மை மற்றும் மனிதர்களின் அவலநிலையானது உலகின் மிகவும் உச்சபட்சகளில் உள்ளடங்குகின்றன.

இருப்பினும் முதலாளித்துவ வர்க்கம் ஆழமாக கவலையுடனும், அதிருப்தியிலும் உள்ளது. உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பு மற்றும் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல் நிலைமைகளின் கீழ், சீனாவுக்குப் போட்டியாக ஒரு உற்பத்தி-சங்கிலி மையமாக எழுவதற்கும் மற்றும் வல்லரசு அந்தஸ்தை முன்வைப்பதற்கும் இந்தியாவுக்கான "வாய்ப்பு ஜன்னல்" வேகமாக மூடப்பட்டு வருவதைக் குறித்து அது அஞ்சுகிறது.

நவதாராளவாத சீர்திருத்தங்களைத் தீவிரப்படுத்தவும் மற்றும் உலக அரங்கில் அதன் நலன்களை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதற்காகவே, பெருநிறுவன இந்தியா, மோடியை அரவணைத்து அவரின் வலதுசாரி பிஜேபி ஐ அந்நாட்டின் முதல்நிலை அரசியல் சக்தியாக முன்னுக்கு நகர்த்தி உள்ளது.

உலக புவிசார் அரசியலில் ஒரு பிரதான சக்தியாக விளங்க வேண்டுமானால் மற்றும் இந்திய முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியமான எண்ணெய் மற்றும் ஏனைய ஆதாரவளங்கள் மீது அதன் பங்கு உரிமைகோரல்களைக் கோர வேண்டுமானால், தன்னை அது தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்க சக்தியாக மாற்ற வேண்டியுள்ளது என்ற கணக்கீட்டின் அடிப்படையில், மோடி அரசாங்கம் பாகிஸ்தான் உடனான "விளையாட்டு விதிகளை" மாற்ற தீர்மானகரமாக உள்ளது. பாகிஸ்தானுடன் மோதலைக் கிளறிவிடுவதன் மூலமாக, உள்நாட்டில் அதிகரித்து வரும் வர்க்க போராட்ட நிலைமைகளின் கீழ் அது சமூக பதட்டங்களைத் திசைதிருப்புவதற்கும் முயல்கிறது.

அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய அரசாங்கங்களால் ஜோடிக்கப்பட்ட இந்திய-அமெரிக்க "பூகோளரீதியான மூலோபாய பங்காண்மை" ஐ மேற்கொண்டு கட்டமைத்து, மோடி அரசாங்கம் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் பைத்தியக்காரத்தனமான முனைவுக்கு சடரீதியிலான உதவிகள் மற்றும் ஊக்கங்களை வழங்கி, சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு கண்கூடான முன்னிலை அரசாக இந்தியாவை மாற்றி உள்ளது.

இதற்கிடையே இஸ்லாமாபாத் உடனான வாஷிங்டனின் பாரம்பரிய உறவுகள் வியத்தகு முறையில் கீழிறங்கி இருப்பது, பாகிஸ்தானுக்கு எதிரான புது டெல்லியின் பொறுப்பற்ற நடவடிக்கையில் அதற்கு தைரியம் கொடுத்துள்ளது.

இதனால் இந்திய-அமெரிக்க கூட்டணியின் அச்சுறுத்தல், அதன் பங்கிற்கு, சீனா மற்றும் பாகிஸ்தானை அவற்றின் நீண்டகால இராணுவ-மூலோபாய உறவுகளைப் பலப்படுத்துவதற்கு உந்தியுள்ளது.

போர் மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் மோதலுடன் இந்திய-பாகிஸ்தான் மற்றும் சீன-இந்திய மோதல்கள் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைவது தெற்காசிய மற்றும் உலக மக்களுக்கு பெரும் அபாயங்களை முன்நிறுத்துகிறது. மேலும் அது மொத்த மூன்று மோதல்களுக்கும் மேலதிக வெடிப்புத்தன்மையை அதிகரித்துள்ளதுடன், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் புவிசார்மூலோபாய முக்கியத்துவத்தையும் கூட்டியள்ளது.

சீனாவின் தன்னாட்சி திபெத் மற்றும் ஜின்ஜியாங் பிரதேசங்களைக் காஷ்மீர் எல்லையாக கொண்டுள்ளது, மற்றும் சீன பாகிஸ்தான் பொருளாதார பாதை பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் வழியாக செல்கிறது, இதை பெய்ஜிங் ஒரு போர் அல்லது போர் நெருக்கடியில் சீனாவின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்கான வாஷிங்டனின் திட்டங்களைத் தோற்கடிப்பதற்கான ஒரு வழிவகையான முக்கியத்துவத்துடன் பார்க்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில், இந்தியா மூர்க்கமாக வலதை நோக்கி திரும்பியதை மட்டும் வெளிப்படுத்தவில்லை. இந்தியாவிலும் தெற்காசியாவிலும் தொழிலாள வர்க்கத்தின் அளவும் சமூக சக்தியும் பரந்தளவில் விரிவடைந்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, உலகளாவிய அளவில், அங்கே முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக அதிகரித்தளவில் சுய-நனவுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியும் அதிகரித்து வருகிறது.

இந்த சக்தி தான் வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான மாற்றுமருந்தாகும். புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தின் பிற்போக்குத்தனமான முதலாளித்துவ உயரடுக்குகளை எதிர்ப்பதில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் துணைக்கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்கள் வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். முதன்முதலில் லியோன் ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தின் அடிப்படையில், அவர்கள் ஐக்கிய தெற்காசிய சோசலிச அரசுகளுக்காக போராடும் சக்திகளுடன் இணைய வேண்டும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முயல வேண்டும்.

ஒடுக்கப்படும் உழைப்பாளர்கள் அனைவர் உடனான கூட்டணியில் தொழிலாளர்களின் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும், அதன் மூலம் மட்டுமே தெற்காசியாவின் பல பத்தாயிரக் கணக்கான மக்களை உண்மையிலேயே சம அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட முடியும், வகுப்புவாதம் மற்றும் ஜாதியம் ஒழிக்கப்பட முடியும், மற்றும் வேலைகள், கண்ணியமான வருமானம் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு, ஸ்ராலினிசத்தின் பல்வேறு மாவோயிச வகையறாக்கள் உட்பட ஸ்ராலினிசத்தின் மீது ஓர் அரசியல் போர் அவசியப்படுகிறது, இவை தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தைத் தேசியவாதத்துடனும், ஒன்று மாற்றி ஒன்றாக முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கான கன்னை என்று கூறப்படுபவை பின்னாலும் கட்டிப்போட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லீம் லீக்கிற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மரபைப் பாதுகாக்கின்றன.

தசாப்தங்களாக, சிபிஐ மற்றும் அதன் மிகப்பெரிய வழிதோன்றலான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) முதலாளித்துவ ஸ்தாபகத்தின் உள்ளார்ந்த பாகமாக செயல்பட்டுள்ளன. அவை வலதுசாரி அரசாங்கங்களின் வெற்றிக்கு முட்டுக்கொடுத்தன, அவற்றில் பெரும்பாலானவை 1991 மற்றும் 2008 இக்கு இடையே காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆனவையாகும், இவை நவதாராளவாத சீர்திருத்தங்களையும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளையும் முன்னெடுத்தன; இவை இந்தியாவின் இராணுவ கட்டமைப்பை ஆதரிக்கின்றன, இப்போது இது உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கால் எரியூட்டப்பட்டு வருகிறது; இவை செப்டம்பர் 2016 இலும் மற்றும் இந்த கடந்த பெப்ரவரியிலும் பாகிஸ்தான் மீதான மோடியின் இராணுவ தாக்குதல்களை ஆமோதிக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தைக் காங்கிரஸ் கட்சி மற்றும் ஏனைய முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடனும் மற்றும் இந்திய முதலாளித்துவ அரசின் அழுகிப்போன "ஜனநாயக" அமைப்புகளுடனும் பிணைத்து வைக்கும் அவற்றின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமாக, மே மாதம் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவை விடையிறுத்து வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தை சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் அரசியல்ரீதியில் ஓர் சுயாதீனமான சக்தியாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே பிற்போக்குத்தனம் மற்றும் போரை வெற்றிகரமாக எதிர்க்க முடியும் என்பதையே, இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாக நீண்டகால நடந்து வந்துள்ள மாபெரும் சமூக போராட்டங்கள் அனைத்தும், எடுத்துக்காட்டி உள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள WSWS வாசகர்கள் அனைவரும், அவரவர்களின் நாடுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பிரிவுகளைக் கட்டமைக்க செயல்படுவதன் மூலமாக சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading