நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க தேசிய ஆசிரியரும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினருமான பாரி கிரே ஜூலை 24, 2019 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான உடைவில் இருந்து பெற்ற அரசியல், தத்துவார்த்த தேட்டங்கள்

தேசிய சந்தர்ப்பவாத தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தலைமைக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மை பெற்ற வெற்றியானது, உலகக் கட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத அடித்தளங்களை மறுஉறுதி செய்து வலுப்படுத்தியது. தொழிலாளர் இயக்கத்திற்குள் இருந்த ஏகாதிபத்திய சார்பான ஒரு முக்கிய எதிர்ப்புரட்சிகர முகமை என புரிந்து கொள்ளப்பட்டிருந்த ஸ்ராலினிசத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பு என்ற நான்காம் அகிலத்தின் வரலாற்று நிலைப்பாட்டை அது உறுதியாக பற்றிக்கொண்டதோடு, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச தத்துவத்திற்கு எதிராய் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தையும் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தையும் அது பாதுகாத்தது.

1982க்கும் 1986க்கும் இடையிலான போராட்டமானது சர்வதேச அளவில் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி ஆழமடைந்து சென்று கொண்டிருந்த ஒரு பின்புலத்தில் கட்டவிழ்ந்தது. 1981 டிசம்பரில் போலந்தில் இராணுவத்தளபதி ஜருஸெல்ஸ்கி இராணுவச் சட்டத்தை அறிவித்ததும் மற்றும் சொலிடாரிட்டி (Solidarity) இயக்கம் ஒடுக்கப்பட்டதும், அதே மாதத்தில் SWP தலைவரான ஜாக் பார்ன்ஸ் நிரந்தரப் புரட்சியை பகிரங்கமாக மறுதலித்து, “முதலாளித்துவம்-இல்லாத பாதை” என்ற ஸ்ராலினிச முன்னோக்கினை முன்னெடுத்ததும் இதற்கு முன்பாக நிகழ்ந்திருந்தன.

ஸ்ராலினிசத்தின் நெருக்கடி மற்றும் WRP இன் பொறிவைக் காட்டும் அட்டவணை

1964 முதல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு எந்திரத்திற்கு தலைமையில் இருந்து வந்திருந்த லியோனிட் பிரெஷ்னேவ் 1982 அன்று நவம்பர் 10 அன்று, அதாவது 1982 அக்டோபர்-நவம்பரில், வேர்க்கர்ஸ் லீக், மார்க்சிச மெய்யியல் மற்றும் WRP இன் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் WRP உடனான அதன் கருத்துபேதங்களை சுருக்கமாக எடுத்துரைத்த ஆவணத்தின் இறுதிப் பகுதி வெளியானதற்கு மூன்று நாட்களுக்குப் பின், உயிரிழந்தார். பிரெஷ்னேவ் இன் இடத்தில் KGP இன் தலைவராக இருந்த யூரி ஆண்ட்ரோபோவ் அமர்த்தப்பட்டிருந்தார்.

வேர்க்கர்ஸ் லீக் WRP இன் பப்லோவாத நிலைப்பாட்டுக்கான அதன் எதிர்ப்பை சுருங்கக் கூறி, அனைத்துலகக் குழுவிடம் ஒரு மேலதிக ஆவணத்தை முன்வைத்த 1984 பிப்ரவரி மாதத்தில் ஆண்ட்ரோபோவ் மரணமடைந்தார். அவரிடத்திற்கு கான்ஸ்டாண்டின் செர்னென்கோ வந்தார்.

WRP க்குள் நெருக்கடியை தீவிரப்படுத்திய வருடம் நீண்ட ஐக்கிய இராச்சிய சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் முடிந்த ஏழு நாட்களின் பின்னர் மற்றும் காரியாளர்கள் மீதான ஹீலியின் இழிநடத்தை குறித்து ஐலீன் ஜென்னிங்ஸ் இடம் இருந்து கடிதம் வருவதற்கு நான்கு மாதங்களுக்கும் குறைந்த காலத்தில் செர்னென்கோ 1985 மார்ச்சில் மரணமடைந்தார். உடனடியாக செர்னென்கோவின் இடத்தில் மிக்கையில் கோர்பச்சேவ் பதவியிலிருத்தப்பட்டார்.

ஜெர்ரி ஹீலி

அனைத்துலகக் குழுவில் இருந்து WRP நீக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகாகவே, மைக்கல் பண்டா ட்ரொட்ஸ்கியைக் கண்டனம் செய்ததோடு ஸ்ராலினை ஒரு “பாட்டாளி வர்க்க போனபார்ட்” என்று புகழ்ந்தார், அதேவேளையில் ஹீலி உருவாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி சோவியத் ஒன்றியத்தில் அரசியல் புரட்சியின் தலைவராக கோர்பச்சேவை பிரகடனம் செய்தது.

உடைவைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்திற்குள், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு, சீனாவில் தியனென்மென் சதுக்க நிகழ்வுகள் மற்றும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவை தொடர்ந்து வந்தன.

பிரிட்டிஷ் பிரிவானது, 1953 முதல் 1970களின் மத்திவரையான காலத்தில் எந்த பப்லோவாத நிலைப்பாடுகளுக்கு எதிராக அது போராடி வந்திருந்ததோ அதே நிலைப்பாடுகளை தழுவிக்கொள்கின்ற நிலையுடன், உலக ஏகாதிபத்தியம் மற்றும் அதன் எதிர்ப்புரட்சிகர முகமைகள் கொடுத்த தீவிரமான அழுத்தத்திற்கு பதிலிறுப்பாக, அழுகிக்கொண்டிருந்த ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கவும் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு நனவான ட்ரொட்ஸ்கிசவாத எதிர்ப்பு அபிவிருத்தியடையாமல் தடுக்கவும் முனைந்து கொண்டிருந்தது.

ஆனால் அதற்கு எதிரானதொரு பதிலிறுப்பும் அங்கே இருந்தது. மிக நனவான மட்டத்தில், உலக முதலாளித்துவத்தின் பெருகிச் செல்லும் நெருக்கடியில் இருந்த புரட்சிகர சாத்தியப்பாட்டின் ஒரு வெளிப்பாடாக அது இருந்தது என்றபோதிலும் அது தன்னெழுச்சியாக எழுந்ததில்லை. ரிம் வொல்ஃபோர்த் விலகியபோது, முந்தைய ஆண்டுகளில் பப்லோவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டம், அதன் ஊடாக, நான்காம் அகிலத்தின் மூலங்கள் மற்றும் போராட்டத்தின் படிப்பினைகள் அனைத்தையும் உட்கிரகிக்கவும் அது குறித்த புரிதலை ஆழப்படுத்தவும் முனைவதன் மூலமாக வேர்க்கர்ஸ் லீக் பதிலிறுப்பு செய்ததில் இருந்து பெற்ற அரசியல் மற்றும் தத்துவார்த்த தேட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அது போராடப்பட வேண்டியிருந்தது.

குறைந்தபட்சம் 1976 முதலாகவேனும், பல ஆண்டுகளுக்கு, அனைத்துலகக் குழுவிற்குள்ளாக இரண்டு வெவ்வேறு திசையிலான போக்குகள் முதிர்ச்சியடைந்து வந்தன: அதாவது வேர்க்கர்ஸ் லீக்கினால் மிக நனவான முறையில் எடுத்துரைக்கப்பட்ட புரட்சிகர சர்வதேசியவாத, ட்ரொட்ஸ்கிசப் போக்கு, மற்றும் WRP ஐ மையமாகக் கொண்டிருந்த அதிகரித்துவந்த தேசிய-சந்தர்ப்பவாதப் போக்கு என்பவையே அவையாகும்.

நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை பாதுகாத்து நின்றமையும் அதன் சர்வதேசியவாத அடித்தளங்களை ஆழப்படுத்தியமையும், WRP உடனான உடைவில் இருந்து மீண்டுவந்த அனைத்துலகக் குழுவை, ஸ்ராலினிசத்தின் கட்டவிழும் நெருக்கடியை பகுப்பாய்வு செய்வதற்கும், ஸ்ராலினிச ஆட்சி இருந்த நாடுகளில் முதலாளித்துவ மீட்சியை எதிர்த்து தொழிலாள வர்க்கத்திற்கு உலக சோசலிசப் புரட்சியின் பாகமாய் அரசியல் புரட்சிக்கான வேலைத்திட்டமாக ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்குமான ஒரு ஆற்றல்மிக்க இடத்தில் அமர்த்தியது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட அடித்தளங்கள்

லியோன் ட்ரொட்ஸ்கி

கோர்பச்சேவின் ஆட்சி மற்றும் அதன் கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) மற்றும் பெரஸ்த்ரோய்க்கா (புனர்நிர்மாணம்) ஆகிய கொள்கைகளை பகுப்பாய்வு செய்கையில், அனைத்துலகக் குழு, லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான அவரது போராட்டத்தின் பாதையில், சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் குறித்து அபிவிருத்தி செய்திருந்த விஞ்ஞானபூர்வமான மார்க்சிசப் பகுப்பாய்வின் மீது தன்னை அடித்தளமாக கொண்டிருந்ததது. இந்த அறிவானது, மிக நனவான மட்டத்தில், சோவியத் தொழிலாள வர்க்கம் ஒட்டுண்ணி மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் உலக சோசலிசப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள் சோசலிசக் கட்டுமானத்தின் பாதைக்கு மீண்டும் திரும்புவதற்கும் மேற்கொண்ட புரட்சிகர உந்துதலுக்கு உருவடிவம் கொடுத்தது.

அனைத்துலகக் குழுவின் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவினர் உள்ளிட, கோர்பச்சேவின் முதலாளித்துவ மீட்சி வேலைத்திட்டத்திற்கு தங்களை தகவமைத்துக் கொண்ட திருத்தல்வாதத்தின் அனைத்து வகையினரது தோற்றப்பாட்டுவாத (impressionist) பதிலிறுப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பு இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் “அரசியல் புரட்சி”யின் தலைவராக கோர்பச்சேவை பிரகடனம் செய்வதற்கு ஹீலி விரைந்து முன்னேறியதை விடவும், அவரது “நடைமுறையினூடாக பயின்றுகொள்ளல்” என்பதாக சொல்லப்பட்டதன் மார்க்சிச-விரோத மற்றும் சந்தர்ப்பவாத உள்ளடக்கத்தை வேறெதுவும் கூடுதல் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்க முடியாது.

நான்காம் அகிலத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில் காரியாளர்களை பயிற்றுவிப்பது என்ற கருத்தாக்கம், WRP இன் சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் திடப்படுத்தப்பட்டது. 1982 இலையுதிர் மற்றும் குளிர்கால சமயத்தில் எழுதப்பட்ட டேவிட் நோர்த்தின் லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் இல் இது சுருக்கமாக கூறப்பட்டிருக்கிறது:

கட்சியில் இணையும் அனைவரும் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி வெளிப்பாடு காண்கின்ற புரட்சிகரக் கோட்பாடுகளுக்கு நனவுடன் கீழ்ப்படிந்து நடக்கும்படி செய்வதே காரியாளர் பயிற்சியின் உண்மையான இருதயத்தானமாக இருப்பதாகும். ‘வரலாற்றுத் தொடர்ச்சி’ என்று கூறும்போது நாம் கருதுவது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், திருத்தல்வாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிற எதிரிகளுக்கும் எதிராய் நமது சர்வதேச இயக்கத்தால் நடத்தப்பட்டு வரும் அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டத்தின் உடைவற்ற சங்கிலி தொடர்ச்சியை ஆகும்...

இந்த வரலாற்றை முழுமையாகவும் கூட்டாகவும் உட்கிரகித்துக் கொள்ள முனையாத ஒரு தலைமை தொழிலாள வர்க்கத்திற்கான அதன் புரட்சிகரக் கடமைகளைப் போதுமான அளவில் நிறைவேற்ற முடியாது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அபிவிருத்தி குறித்த ஒரு உண்மையான அறிவு இல்லாமல், இயங்கியல் சடவாதம் பற்றிய குறிப்புகள் வெறுங்கூடுகளாய் இருப்பது மட்டுமல்ல; இத்தகைய வெற்றுக் குறிப்புகள் இயங்கியல் வழிமுறையின் ஒரு உண்மையான திரிப்புக்கே பாதை திறக்கின்றன. தத்துவத்தின் மூலவேர்கள் தங்கியிருப்பது சிந்தனையில் அல்ல, மாறாக புற உலகில் ஆகும். இவ்வாறாக, ட்ரொட்ஸ்கிசத்தின் அபிவிருத்தியானது, வர்க்கப் போராட்டத்தின் புதிய அனுபவங்களை, நமது இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுரீதியாக-தேற்றம் செய்த அறிவுடன் பொருத்திக் காண்பதன் மூலமாக முன்செல்கிறது. [1]

இந்த விரிவுரையின் எல்லைகளுக்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் திறனாய்வு செய்வதென்பது சாத்தியமில்லாதது. ஆயினும் சில மையமான பிரச்சினைகள் ஸ்தாபிக்கப்பட்டாக வேண்டும்.

ரஷ்ய தொழிலாள வர்க்கம், பரந்த விவசாய வெகுஜனங்களின் ஆதரவுடன், முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசி விட்டு, தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது சோவியத்துகள் மூலமாக அதிகாரத்தை தனது சொந்தக் கரங்களில் எடுத்தது, ஒரு தொழிலாளர்’ அரசை ஸ்தாபித்த 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சியின் விளைபொருளாய் சோவியத் ஒன்றியம் உருவாகியது. ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் வெற்றியானது உலக சோசலிசப் புரட்சியின் முதல் வெற்றியாக இருந்தது, போல்ஷிவிக்குகளின் தலைமையின் கீழ் புரட்சியை வழிநடத்திய மூலோபாயமும் தந்திரோபாயமும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆகவே தான் போல்ஷிவிக்குகள், லெனினின் தலைமையின் கீழ், ஜாரை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தை, தேசியவாதத்தின் பக்கம் சாய்ந்து ஏகாதிபத்திய உலகப் போரை ஆதரிக்கச் சென்றுவிட்டிருந்த இரண்டாம் அகிலத்திற்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்துடனும் 1919 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு புதிய மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்துடனும் பிணைத்தனர்.

1917 பிப்ரவரியில் ஜார் ஆட்சி தூக்கிவீசப்பட்டு அப்போது சோவியத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்த மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களினால் (Socialist Revolutionaries) உருவாக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக, லெனின் போல்ஷிவிக் கட்சியை ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் நிலைப்பாட்டில் மறுஒழுங்கமைத்தார். ஏகாதிபத்தியப் போர் வெடிப்பு மற்றும் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பு ஆகியவற்றின் மீதான அவரது பகுப்பாய்வு, மற்றும் போரானது உலக சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லத்தக்க முகப்பாக இருந்தது என்ற அவரது முடிவு ஆகியவற்றின் மூலம் இது தயாரிக்கப்பட்டிருந்தது.

லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கை, அனைத்து முக்கிய விடயங்களிலும், நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை ஏற்றிருந்தது: அதாவது ரஷ்யாவிலான ஜனநாயகப் புரட்சியானது தொழிலாள வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு சோசலிசப் புரட்சியின் வடிவத்தை மட்டுமே எடுக்க முடியும். மேலும் தொழிலாளர் அரசானது புரட்சியை மேற்கின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்குப் போராடுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ எதிர்தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் சோசலிசத்தை ஸ்தாபிக்கவும் முடியும்.

1923 இல் ட்ரொட்ஸ்கி, அரசு மற்றும் கட்சியில் எழுந்து கொண்டிருந்த அதிகாரத்துவத்திற்கு —அவற்றின் தலைமைப் பிரதிநிதியாக ஸ்ராலின் ஆனார்— எதிரான போராட்டத்தை, அதிகாரத்துவவாதத்திற்கு எதிரானதொரு போராட்டமாகத் தொடக்கினார். அதிகாரத்துவ போக்குகளின் துரித வளர்ச்சியானது, எல்லாவற்றையும் விட, 1917 ஐ தொடர்ந்து வந்த ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, பல்கேரியா மற்றும் பிறவெங்கிலுமான ஐரோப்பியப் புரட்சியின் தோல்விகள் மற்றும் அதனைத் தொடர்ந்து முதலாவது தொழிலாளர்’ அரசானது ஏகாதிபத்திய சுற்றிவளைப்பின் கீழ் தொடர்ந்து தனிமைப்பட நேர்ந்தமை ஆகியவற்றின் விளைவாக இருந்தது என்பதை அவர் விளக்கினார். இதனுடன் மிகப்பெருமளவில் ஒரு விவசாயம் சார்ந்த நாடாக இருந்த ரஷ்யா, ஜாரிசத்தில் இருந்து பாரம்பரியமாக வழங்கப்பட்ட பின்தங்கிய நிலை மற்றும், ஏழு ஆண்டு காலப் போர் மற்றும் உள்நாட்டுப் போரினால் விளைந்த மனித, பொருளாதார படுபயங்கர சேதங்கள் ஆகியவையும் சேர்ந்து தொழிலாளர்களுக்கு சாதகமற்றதும் குட்டி-முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ சமூக சக்திகளுக்கு சாதகமானதுமான நிலைமைகளை உருவாக்கின.

தொழிலாளர் அரசின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத அடித்தளங்களை வலுப்படுத்துவதன் மூலமும், சோவியத்துகளிலும் கட்சியிலும் தொழிலாளர் ஜனநாயகம் கழுத்து நெரிக்கப்படுவதை எதிர்ப்பதன் மூலமும், அத்துடன் பாட்டாளி வர்க்க சக்திகளை வலுப்படுத்தி புதிய பொருளாதாரக் கொள்கையினது நிர்ப்பந்தமான பின்வாங்கலின் கீழ் வளர்ச்சி கண்ட வசதியான விவசாயி மற்றும் பாதி-முதலாளித்துவ கூறுகளின் செல்வாக்கினை பலவீனப்படுத்தவும் திட்டமிட்ட தொழிற்துறைமயமாக்கத்தின் ஒரு வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதன் மூலமும் இந்தப் போக்குகளை எதிர்ப்பதற்காக ட்ரொட்ஸ்கி இடது எதிர்ப்பாளர்கள் அணியை உருவாக்கினார். வரம்புபட்ட முதலாளித்துவ உறவுகளை அனுமதிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலானதொரு விரிசலைத் தடுக்க முடியும், இந்த அத்தியாவசியமான பின்வாங்கலானது மேற்கில் தொழிலாள வர்க்கம் வெற்றிகாண்கிற வரையில் சோவியத் ஒன்றியம் தாக்குப்பிடித்து நிற்க வழிதரும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டுதான், மேற்கூறிய புதிய பொருளாதாரக் கொள்கை என்பதை 1921 இல் லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஏற்றனர்.

1924 இன் பிற்பகுதியில், ஸ்ராலின் புக்காரினின் ஆதரவுடன், “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் “தத்துவ”த்தை பிரகடனம் செய்தபோது ஒரு அடிப்படையான திருப்புமுனைப் புள்ளி நிகழ்ந்தேறியிருந்தது. போல்ஷிவிக் வேலைத்திட்டத்தில் இருந்தான இந்த முழுமையான விலகலானது, கட்சி மற்றும் அரசு எந்திரத்திற்குள்ளாக, வெளிப்புறத்தில் இருந்து ஏகாதிபத்திய அழுத்தத்தையும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக நாட்டுப்புறங்கள் மற்றும் நகரங்களில் குட்டி-முதலாளித்துவ சக்திகளின் அழுத்தத்தையும் பிரதிபலித்த ஒரு தேசியவாத பிற்போக்குத்தனத்தினை வெளிப்படுத்திக்காட்டியது. இது, அதிகாரத்துவமானது ஒரு தனித்துவமான மற்றும் சலுகைமிக்க சமூக அடுக்காக, பாரிய தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான தனது சொந்த நலன்கள் குறித்து மிக நனவானதாக ஆகிக் கொண்டிருந்ததை காட்டியது.

“தனியொரு நாட்டில் சோசலிசம்” இன் பிற்போக்குத்தன உள்ளடக்கம் தொடர்பில், ட்ரொட்ஸ்கி 1930 இல் எழுதினார்:

மார்க்சிசம் தனது தொடக்கப் புள்ளியை தேசிய பாகங்களின் ஒரு கூட்டாக அல்லாமல் மாறாக சர்வதேச உழைப்புப் பிரிவினை மற்றும் உலகச் சந்தையால் உருவாக்கப்பட்டிருக்கின்றதும், நமது சகாப்தத்தில் உலகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றதுமான ஒரு பலம்வாய்ந்த மற்றும் சுயாதீனமான யதார்த்தமான உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகள் வெகுகாலத்திற்கு முன்பே தேசிய எல்லைகளைக் கடந்து வளர்ந்து விட்டன. ஏகாதிபத்தியப் போர் (1914-1918) இந்த உண்மையின் ஒரு வெளிப்பாடாகவே இருந்தது. உற்பத்தியின் தொழில்நுட்ப விடயத்தில், சோசலிச சமூகமானது முதலாளித்துவத்தை விடவும் ஒரு உயரிய கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்தாக வேண்டும். தேசியரீதியாக தனிமைப்பட்ட ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்ப நோக்கம் கொள்வதென்பது, அது கடந்து செல்கிற அத்தனை வெற்றிகளைத் தாண்டியும், முதலாளித்துவத்தை விடவும் உற்பத்தி சக்திகளை பின்னோக்கி இழுப்பதாகவே அர்த்தமளிப்பதாகும். (அழுத்தம் மூலத்தில் உள்ளது) [2]

“தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் சித்தாந்தத்துடன், ஸ்ராலின் மற்றும் அந்த சமயத்தில் காமனேவ், சினோவியேவ் உட்பட அதிகாரத்துவத்தில் இருந்த அவரது கூட்டாளிகளின் தலைமையில், ட்ரொட்ஸ்கியின் மீதும் மற்றும் நிரந்தரப் புரட்சியின் மீதும் ஒரு நச்சுத்தனமான தாக்குதல் கைகோர்த்தது. “ட்ரொட்ஸ்கிசம்” என்று பின்னர் அறியப்பட்டதானது விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படை முன்னோக்கின் மீதான ஒரு தேசியவாத மறுதலிப்புக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் ஒரு மார்க்சிச மற்றும் சர்வதேசியவாத ரீதியான பாதுகாத்தலுக்காக உருவானதாகும்.

அடிப்படையில் சர்வதேச அளவிலான சோசலிசப் புரட்சியின் செல்தகைமையினது ஒரு மறுப்பாக இருந்த, “தனியொரு நாட்டில் சோசலிசம்”, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை குட்டி-முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு தவிர்க்கவியலாமல் கீழ்ப்படியச் செய்த உலக ஏகாதிபத்தியத்திற்கான ஒரு தகவமைவாக இருந்தது. மூன்றாம் அகிலம் மற்றும் அதன் பிரிவுகளை, உலகெங்கிலும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான கருவிகளாக இருந்ததில் இருந்து, சோவியத் ஒன்றியத்திற்குள் வலுவாக காலூன்றிக் கொண்டிருந்த அதிகாரத்துவத்தின் வெளியுறவுக் கொள்கையினது துணையுறுப்புகளாக உருமாற்றுவதே அதன் தர்க்கமாய் இருந்தது. கம்யூனிச அகிலத்தை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும், காலனித்துவ நாடுகளில் தேசிய முதலாளித்துவத் தலைமைகளுக்கும் கீழ்ப்படியச் செய்வது என்பதே இதன் அர்த்தமாக இருந்தது.

இந்த வேலைத்திட்டத்தின் நாசகரமான விளைவுகள் வெகுவிரைவில் வெளிப்பட்டன, 1926 பொது வேலைநிறுத்தத்தில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டமை வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட பங்களிப்பு செய்தது, 1925-27 புரட்சியில் சீனத் தொழிலாள வர்க்கம் தோல்விகாணச் செய்யப்பட்டது. கிரெம்ளின் உத்தரவின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி “நான்கு வர்க்கக் கூட்டு” எனும் மென்ஷிவிக் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை சியாங் கேய்-ஷேக்கின் முதலாளித்துவ தேசியவாத கோமின்டாங் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்து கொண்டதன் காரணத்தால், அந்த பாரிய புரட்சி இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்கள் அணியும் இந்த நிலைப்பாட்டை தீர்மானமாக எதிர்த்தனர், அதன் தவிர்க்கவியலாத, பேரழிவுகரமான பின்விளைவு குறித்து எச்சரித்தனர்.

இந்த சர்வதேச தோல்விகள் சோவியத் ஒன்றியத்தை மேலும் அதிகமாக தனிமைப்படுத்தி ஆட்சியின் உள்முக முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தின. அரசு திட்டமிடலின் அடிப்படையில் மிகத் துரிதமான தொழிற்துறைமயமாக்கம் எனும் இடது எதிர்ப்பாளர்களது கொள்கைக்கு எதிரான விதத்தில், ஸ்ராலின் மற்றும் புக்காரினால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்த வசதியான விவசாயிகளான, குலாக்குகள் நகரங்களை பட்டினி போட அச்சுறுத்திய ஒரு தானிய மறுப்புப் போராட்டத்தை நடத்தினர். ஸ்ராலின், 1928 தொடங்கி, “மூன்றாம் காலகட்ட” அதி-இடது சாகசக் கொள்கைகளுக்கு முரட்டுத்தனமாகத் திரும்பினார். உள்நாட்டில் இது விவசாயத்தை வன்முறையாகவும் பலவந்தமாகவும் கூட்டுற்பத்திமயமாக்குவதை மையமாகக் கொண்டிருந்தது, அதிகாரத்துவரீதியாக செயல்முறைப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை சோவியத் விவசாயத்தின் மீது விளைவித்த சேதத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் அதன்பின் ஒருபோதும் மீளவே முடியவில்லை.

பிரிட்டன் மற்றும் சீனாவிலான தோல்விகள் ஸ்ராலினின் தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத நோக்குநிலை மீதான இடது எதிர்ப்பாளர்களின் (Left Opposition) விமர்சனங்கள் சரியென்பதை நிரூபித்தன. என்றபோதும், இந்த நிகழ்வுகள் புறநிலையாக சோவியத் ஒன்றியத்துக்குள் இடது எதிர்ப்பாளர்கள் அணியின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தின, அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தின, ஏனென்றால் அவை சோவியத் தொழிலாள வர்க்கத்தின் ஊக்கம்குன்றியநிலை மற்றும் செயல்குன்றியநிலை, மற்றும் சோசலிசப் புரட்சியை ரஷ்யாவின் எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தை நோக்கிய ஐயுறவுவாதம் இவற்றுக்கு வலுக்கூட்டின. இவ்வாறாக, அவை, சமூகத்தில் இருந்த வலது-சாரி தேசியவாத சக்திகள், அரசு மற்றும் கட்சி எந்திரத்திற்கு சாதகமான விதத்தில், தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நிலையை மேலதிகமாக பலவீனப்படுத்தின.

இந்தத் தோல்விகளின் தாக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஸ்ராலின் ட்ரொட்ஸ்கியையும் இடது எதிர்ப்பாளர்களையும் 1927 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றினார். ட்ரொட்ஸ்கி தொலைதூரத்தில் இருந்த அல்மா அட்டாவிற்கு 1928 இல் நாடுகடத்தப்பட்டு, பின்னர் 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

வெளியுறவுக் கொள்கையில், ஸ்ராலினிச ஆட்சியானது, எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவங்கள் மற்றும் கட்சிகளை நோக்கிய தனது வலது-மத்தியவாத தகவமைவை, மில்லியன் கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களின் விசுவாசத்தை அப்போதும் தன்வசம் கொண்டிருந்த ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) “சமூக பாசிஸ்டுகள்” என்றும் ஹிட்லரின் நாஜிக்களது “இரட்டைப்பிறவி” என்றும் முத்திரை குத்தி, சமூக ஜனநாயகத்தை நோக்கிய ஒரு அதி-இடது குறுங்குழுவாத அணுகுமுறையை கொண்டு பிரதியீடு செய்தது. இந்த அதி-தீவிரவாத திரைமறைப்பின் பின்னால், இந்த கொள்கையானது, பாசிசத்தின் எழுச்சிக்கு ஒரு விரக்தியான மற்றும் விதிவசவாத பதிலிறுப்பையும், அத்துடன் தொழிலாளர்களின் கண்களின் முன்பாக சமூக ஜனநாயகவாதிகளை அம்பலப்படுத்துவதற்கும் SPD இன் ஆதரவாளர்களை பழமைவாத அதிகாரத்துவத்தில் இருந்து முறிப்பதற்குமான ஒரு உண்மையான போராட்டத்தை நிராகரிப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

சோசலிசப் புரட்சிக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கின்ற அதேவேளையில், நடைமுறையில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைமையின் கோழைத்தனத்தையும் துரோகத்தையும் அம்பலப்படுத்தும் விதமாக, நாஜி அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் முழு வலுவையும் அணிதிரட்டுவதற்கு, சமூக ஜனநாயகக் கட்சி உடன் ஒரு ஐக்கிய முன்னணி (united front) உருவாக்குவதற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பை கம்யூனிச அகிலமும் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசத் தலைமைகளும் நிராகரித்தன. இந்த மாபெரும் காட்டிக்கொடுப்பானது தொழிலாள வர்க்கத்தை ஸ்தம்பிதமடைய செய்ததுடன் ஒரு துப்பாக்கிக் குண்டும் கூட சுடப்படாமல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பெருந்துயரை உருவாக்கியது.

மார்க்சும் ஏங்கெல்சும் பிறந்த மண்ணில், உலகின் முதல் வெகுஜன சோசலிஸ்ட் கட்சியின் தாயகத்தில் பாசிசம் வெற்றி பெற்றமையானது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் திவால்நிலையை எடுத்துக்காட்டியது. இந்த பெருநாசத்தை உண்டுபண்ணிய கொள்கைகளை கம்யூனிச அகிலம் வழிமொழிந்தமையும், மூன்றாம் அகிலத்தின் ஒரேயொரு பிரிவும் கூட ஜேர்மன் தோல்வி குறித்த ஒரு கலந்துரையாடலை கோரத் தவறியமையும், ஒரு புரட்சிகரக் கட்சியாக இருப்பதில் இருந்து மூன்றாம் அகிலம் மரணித்து விட்டது, அது இனி சீர்திருத்தப்பட முடியாது என்பதை விளங்கப்படுத்தியது. சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக உலக முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கருவியாக அது ஆகியிருந்தது.

1933 வரையில், இடது எதிர்ப்பாளர்கள் அணியானது, உத்தியோகபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்ததுடன் மற்றும் அரசியல்ரீதியாக தடைசெய்யப்பட்டதாக இருந்தது என்றபோதிலும் கூட, அது தன்னை கட்சியினுள்ளும் மற்றும் மூன்றாம் அகிலத்திற்குள்ளும் ஒரு கன்னையாகவே கருதி வந்திருந்தது. கட்சியின் சாமானியக் காரியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டி, அதிகாரத்துவத்தை தலைமையில் இருந்து அகற்றுவது, கட்சி மற்றும் அகிலத்தை சீர்திருத்துவது, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு அவர்களை திரும்பச் செய்வது, மற்றும் தொழிலாளர் அரசிற்குள்ளாக தொழிலாளர் ஜனநாயகத்தை மீட்சி செய்வது என்ற ஒரு கொள்கைக்காக அது போராடியது.

இப்போது ட்ரொட்ஸ்கி ஒரு புதிய, நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசியமான போராட்டத்தைத் தொடக்கினார்.

ஜேர்மனியில் பேரழிவு இழைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, ஸ்ராலின் “மூன்றாவது காலகட்ட”த்தின் அதி-இடது கொள்கைகளைக் கைவிட்டு, “மக்கள் முன்னணி” (popular front) எனும் வர்க்க ஒத்துழைப்புவாத மற்றும் பகிரங்கமான எதிர்ப்புரட்சிகரக் கொள்கையை தழுவினார். மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளை சமரசம் செய்கின்றதும் சோவியத் ஒன்றியத்திற்கான நாஜி அச்சுறுத்தலுக்கு எதிராய் ஒரு பொதுவான முன்னணியைக் கட்டியெழுப்புகிறதுமான ஒரு முயற்சியில் கம்யூனிச அகிலமானது, 1935 இல், “போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான மக்கள் முன்னணி” எனும் ஒரு கொள்கையை அறிவித்தது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தை “ஜனநாயக” முதலாளித்துவ வர்க்கமாக சொல்லப்பட்ட ஒன்றுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றதும், அத்துடன் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை கைகழுவுகின்றதுமான இந்த வேலைத்திட்டமானது, அடுத்தடுத்து பல நாடுகளில், குறிப்பாக ஸ்பெயின் மற்றும் பிரான்சில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு குழிபறித்து, பாசிசம் பரவுவதையும் ஒரு இரண்டாவது ஏகாதிபத்திய உலகப் போர் வெடிப்பதையும் உறுதிசெய்தது.

சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக, ஸ்ராலின் 1936 இல் இருந்து மாஸ்கோ களையெடுப்பு விசாரணைகளை தொடக்கினார், இது பயங்கரத்தின் ஆட்சியின் மையப்பாகமாக ஆகியது. அக்டோபர் புரட்சியின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமான தலைமையும், அத்துடன் நாட்டிற்குள் இருந்த உண்மையான சோசலிசக் கூறுகள் அனைத்தும், அவர்களுடன் சேர்ந்து சோசலிச புத்திஜீவிகள் மற்றும் கலை சமூகமும், அத்துடன் பல புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் அழித்தொழிக்கப்பட்டனர். பெரும்பகுதி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு சோவியத் ஒன்றியத்தைக் கண்டு அவை அஞ்ச ஏதுமில்லை என்று உறுதியூட்டுவதற்காக, நூறாயிரக்கணக்கிலான கம்யூனிஸ்ட்டுக்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கொலைசெய்யப்பட்டனர்.

ட்ரொட்ஸ்கி கூறியவாறாக, நான்காம் அகிலத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையில் ஒரு “இரத்த ஆறு” பிரித்து நின்றது.

1987 மார்ச்சில், சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? கோர்பச்சேவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும் என்ற அறிக்கையில், ICFI எழுதியது:

“தனியொரு நாட்டில் சோசலிசம்” ஆனது இப்போது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துவத்தின் இராஜதந்திரத்திற்கு கீழ்ப்படியச் செய்யும் ஒரு நனவான எதிர்ப்புரட்சிகரக் கொள்கையாக ஆனது. உலக முதலாளித்துவ வர்க்கத்தின் “ஜனநாயக” பிரிவுகளுடனான கூட்டணிகளுக்கு ஆதரவாய் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெளிப்பட நிராகரித்த மக்கள் முன்னணி எனும் ஸ்ராலினிசக் கொள்கையில் இது அதன் பூர்த்தியடைந்த வெளிப்பாட்டைக் கண்டது. மக்கள் முன்னணிவாதமானது வரலாற்றில் மாபெரும் எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்டுக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் ஒன்றிணைந்து முன்சென்றது. [3]

காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கான விஞ்ஞானபூர்வ, மார்க்சிச அடிப்படையை அவரது மகத்தான படைப்பான காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் அமைத்துத் தந்தார். ட்ரொட்ஸ்கியின் இந்நூலின் 1991 பதிப்பிற்கான அறிமுகத்தில் டேவிட் நோர்த் இவ்வாறு எழுதினார்: “உலக வரலாற்றின் முதல் சோசலிசப் புரட்சியின் விளைபொருளாக இருந்தவொரு அரசின் பரிணாமவளர்ச்சியின் கீழமைந்திருந்த உள்முக முரண்பாடுகளை வெளிக்கொணர்வதே காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் நோக்கமாக இருந்தது.”

ஒரு தொழிலாளர் அரசு, அதிலும் ஏகாதிபத்திய சுற்றிவளைப்பில் இருந்த ஒரு பொருளாதாரரீதியாக பின்தங்கியதொரு நாட்டிலான தொழிலாளர் அரசு, என்ற வரலாற்றில் முன்கண்டிராத ஒரு பெருநிகழ்வின் மீதான பகுப்பாய்வுக்கு இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை பிரயோகித்ததில், மார்க்சிச பகுப்பாய்வின் ஒரு உன்னதப் படைப்பாக அது நிமிர்ந்து நிற்கிறது. முதலாளித்துவ சோவியத்தியல்களில் மேலாதிக்கம் செலுத்திய தோற்றப்பாட்டுவாத மற்றும் சர்ச்சைக்குரிய வருணனைகளுக்கு எதிரானதாய் அது இருந்தது. 1991 டிசம்பரில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கரங்களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில், அதன் பகுப்பாய்வும் பரிந்துரை ஆய்வும், எதிர்மறையான விதத்தில் என்றபோதிலும், முழுமையாக ஊர்ஜிதம்பெற்றன.

உலக சோசலிசப் புரட்சி வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக சோவியத் ஒன்றியம் என்ற கருத்தாக்கம், மற்றும் சோவியத் சமூகம் மற்றும் அரசியலின் தன்மை உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் இருந்து பிரித்தெடுத்து பரிசீலிக்கப்பட முடியாது என்ற உண்மை ஆகியவைதான் ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வின் வழிநடத்தும் இழையாக இருந்தன.

ட்ரொட்ஸ்கி தனது பகுப்பாய்வை, தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறை மற்றும் பொருளாதாரத் திட்டமிடலின் அடிப்படையில் “என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது” என்று சுருக்கமாக எடுத்துரைப்பதுடன் ஆரம்பிக்கிறார். அந்த விபரங்கள் மலைப்பூட்டுபவையாக இருக்கின்றன என்பதுடன், ஒரு குறுகிய காலகட்டத்தில் அதிலும் மிகவும் சாதகமற்ற சர்வதேச நிலைமைகளிலும் கூட, சோவியத் ஒன்றியத்தில் பொருளாதார வாழ்க்கை எத்தனை பிரம்மாண்டமாக உருமாற்றம் கண்டிருந்தது என்பதை விளங்கப்படுத்துகின்றன. வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஆறு ஆண்டுகளின் பின்னர், அமெரிக்காவில் தொழிற்துறை உற்பத்தி 25 சதவீதம் சரிவு கண்டிருந்த வேளையில், சோவியத் ஒன்றியத்தில் அது 250 சதவீதம் வரை அதிகரித்திருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். கனரகத் தொழிற்துறையானது 1925க்கும் 1935க்கும் இடையில் உற்பத்தியை 10 மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்திருந்தது.

அவர் எழுதினார்:

தொழிற்துறையில் பிரமாண்டமான சாதனை, விவசாயத்தில் மிகப்பெருமளவில் நம்பிக்கையளிக்கும் தொடக்கங்கள், பழைய தொழிற்துறை நகரங்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் புதியவற்றின் கட்டுமானம், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு துரித வளர்ச்சி, கலாச்சார மட்டத்திலும் மற்றும் கலாச்சாரத் தேவைகளிலும் ஒரு அதிகரிப்பு இவையெல்லாம், பழைய உலகின் தீர்க்கதரிசிகள் மனித நாகரிகத்தின் கல்லறையைக் காண விரும்பிய அதே அக்டோபர் புரட்சியின் விளைபயன்களே ஆகும். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களுடன் இனியும் நாம் சண்டையிட எதுவும் இல்லை. சோசலிசம் வெற்றிக்கான அதன் உரிமையை, மூலதனம் என்ற நூலின் பக்கங்களில் அல்ல, பூமியின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பைக் கொண்டதொரு பொருளாதாரக் களத்தில், இயங்கியல் மொழியில் அல்ல, இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் இவற்றின் மொழியில் எடுத்துக்காட்டியுள்ளது. உள்முகச் சிக்கல்கள், வெளியிலிருந்தான தாக்குதல்கள் மற்றும் தலைமையின் தவறுகள் இவற்றின் விளைவாக சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுற நேருமாயின் கூட —இது நடக்காதென்று உறுதியாக நம்புவோம்— பின்தங்கியதொரு நாடு முழுக்கவும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் காரணத்தால் வரலாற்றில் உதாரணம் காட்டமுடியாத வெற்றிகளை இருபது ஆண்டுகளுக்கும் குறைவானதொரு காலத்தில் சாதித்திருக்கிறது என்ற அழிக்கவியலாத உண்மை வருங்காலத்திற்கான ஒரு நம்பிக்கையூட்டும் உறுதிமொழியாக எஞ்சியிருக்கும். [4]

ஆயினும் இந்த சாதனைகள், ட்ரொட்ஸ்கி பின்னர் விளக்குவதைப் போல, உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கருதப்பட முடியாது. மிகவும் குறைந்த ஒரு தரத்திலான ஆரம்ப புள்ளியிலிருந்து உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலில் இருந்தான வெற்றிகளையும் தாண்டி, சோவியத் ஒன்றியம் அப்போதும், பொருட்களின் தரத்தில், தொழில்நுட்பத்தில், எல்லாவற்றுக்கும் மேல், உழைப்பின் உற்பத்தித் திறனில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியிருந்தது.

மேலும், உலகச் சந்தையில் இருந்தும் சர்வதேச உழைப்புப் பிரிவினையில் இருந்தும் அது துண்டிக்கப்பட்டதாய் தொடர்ந்து இருக்கும்வரை, சோவியத் பொருளாதாரம் எத்தனை வளர்ச்சியடைந்ததாகவும், சிக்கலானதாகவும் ஆகின்றதோ, அந்தளவிற்கு அதன் உள்முக முரண்பாடுகள் கூர்மையடைந்தன. அல்லது, வேறு வழியில் சொல்வதானால், சோசலிசப் புரட்சியை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கான தேவை மிகவும் அவசியமனதாக இருந்தது. ஆனால், சோவியத் ஒன்றியத்திற்கு வெளியில் சோசலிசப் புரட்சிகள் வெற்றிபெறுமானால் அது சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக தனது ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தை ஊக்குவிக்கும் என்று புரிந்து வைத்திருந்த அதிகாரத்துவம், இதனை தனது முழுப் பலம் கொண்டு எதிர்த்தது.

சோவியத் பொருளாதாரத்தின் சாதனைகள், தேசியப் பொருளாதார தன்னிறைவு எனும் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தை ஊர்ஜிதம் செய்வதற்கெல்லாம் வெகுதூரத்தில், அவை அந்த தேசியவாத முன்னோக்கின் திவால்நிலையை முன்னெப்போதினும் மேலும் வெளிப்படையாக சுட்டிக்காட்டின.

சோவியத் ஆட்சியின் இயல்பு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சமூக குணாம்சம் மற்றும் அரசியல் பாத்திரம், மற்றும் உலக சோசலிசப் புரட்சியுடன் அவற்றுக்கிருந்த தொடர்பு ஆகியவை குறித்து காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி இல் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட அடிப்படை கருத்தாக்கங்களையும், அந்த பகுப்பாய்வில் இருந்து பிறந்த, ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டதும் நான்காம் அகிலத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான, கொள்கைகளையும் திறனாய்வு செய்வது முக்கியமானதாகும்.

ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தை, ஒரு ”உருக்குலைந்த தொழிலாளர் அரசு” ஆக, சர்வதேச அளவிலும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளுமான வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே முடிவு தீர்மானிக்கப்படவிருந்த நிலை கொண்ட, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்குமான இடைமருவல் கட்டத்தில் இருந்ததாக குணாம்சப்படுத்தினார். அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளும் கொடுங்கோன்மை வேட்டையாடல்களும் அக்டோபர் புரட்சியின் அடிப்படை தேட்டங்கள் தூக்கியெறியப்படுவதையும், முதலாளித்துவத்தின் ஒரு புதிய வடிவத்தின், அல்லது “அதிகாரத்துவ கூட்டுற்பத்திவாதம்” போன்ற வார்த்தைகளால் மேலோட்டமாக வரையறை செய்யப்பட்ட மற்ற சில புதிய சமூக உருவாக்கத்தின் உதயத்தைக் குறித்ததாக முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை அவர் நிராகரித்தார்.

ஆளும் அதிகாரத்துவம், ஒரு வர்க்கமாக அல்ல, ஒரு சாதியாக இருந்தது என்று அவர் வலியுறுத்தினார். அது தொழிலாளர் அரசின் மீது ஒட்டுண்ணி வளர்ச்சியாக இருந்தது, அதன் மூலங்கள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளில் அமைந்திருந்தன, ஜாரிச ஆட்சியில் இருந்து பெற்றிருந்த பின்தங்கிய பொருளாதார நிலைமைகளால் அவை சிக்கலாக்கப்பட்டிருந்தன. அது தனது சலுகைகளுக்கும் ஆட்சிக்கும் அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததே அன்றி, முதலாளித்துவ, அல்லது உற்பத்தி உறவுகளின் ஏதோவொரு வரலாற்றுப் புதுவடிவத்தின் சொத்துறவுகளை அல்ல. அது முழுக்க முழுக்க எதிர்ப்புரட்சிகரமானதாகவும் சீர்திருத்தப்பட முடியாததாகவும் இருந்ததுதான், என்றபோதும் அது, தனது சொந்த நலன்களின் பேரிலும் எதிர்ப்புரட்சிகர வழிமுறைகளின் மூலமும், அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை இன்னும் பாதுகாக்க முனைந்தது.

இறுதியில் அது சாத்தியமற்றுப் போனது. சோவியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் புரட்சியால் தூக்கிவீசப்படாது போகுமானால், முதலாளித்துவ உலக சந்தை மற்றும் இராணுவரீதியான, அல்லது பொருளாதாரரீதியான அல்லது இரண்டின் கலவையான ஏகாதிபத்தியத் தலையீட்டின் அழுத்தமானது தொழிலாளர் அரசு அகற்றப்படுவதற்கும் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதற்கும் இட்டுச் செல்லும். எதிர்ப்புரட்சியின் இந்த இறுதி நடவடிக்கையில், இந்த அதிகாரத்துவமே ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கும். முதலாளித்துவ சொத்துடைமையில் நங்கூரம் பாய்ச்சுவதன் மூலம் தனது ஒட்டுண்ணி நலன்களை இன்னும் உறுதியுடன் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதாவது அரசு சொத்துக்களில் வெறும் உறிஞ்சிவாழும் அட்டைப்பூச்சிகளாக இருப்பதைக் காட்டிலும், மூலதனத்தின் உரிமையாளர்களாவதன் மூலமாக, உலக ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக தன்னை கூட்டுச் சேர்த்துக் கொள்ளும். ட்ரொட்ஸ்கி ஆலோசனையளித்த ஸ்ராலினிசத்திற்கு எதிரான புரட்சி “அரசியல்ரீதியான”தே தவிர “சமூகரீதியானது” அல்ல, ஏனென்றால் சொத்துறவு முறையை அது மாற்றவிருக்கவில்லை. ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்துவத்தை அகற்றுவதன் மூலமாக நிலவும் சொத்துறவுகளை அது பாதுகாக்கவிருந்தது. அது அரசைத் தூக்கிவீசி ஒரு புதிய வர்க்க ஆட்சியை ஸ்தாபிப்பதைக் காட்டிலும், தொழிலாளர் அரசுக்கு தொழிலாளர் ஜனநாயகத்தை புதுப்பிக்கவும் மீட்டெடுக்கவும் இருந்தது.

சோவியத் தொழிலாள வர்க்கமானது, நான்காம் அகிலத்தின் ஒரு கட்சியின் தலைமையின் கீழ், அதிகாரத்துவத்தை சரீரரீதியாக வெளியேற்றி, சோவியத்துக்களில் இருந்து அதனைக் களையெடுத்து, சோவியத் ஜனநாயகத்தை மீள்ஸ்தாபிக்க, திட்டமிட்ட பொருளாதாரத்தின் மீதான அத்தனை அதிகாரத்துவ உருத்திருப்புக்கள் மற்றும் துஷ்பிரயோகங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவும் சோவியத் ஒன்றியத்தை உலக சோசலிசப் புரட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு மீண்டும் திருப்பவேண்டியது அவசியமாகும்.

அரசியல் புரட்சியின் கிளர்ச்சிகரமான மற்றும் அமைதியற்ற தன்மை குறித்து ட்ரொட்ஸ்கி ஒருபோதும் சொல்லத் தயங்கியதில்லை. ஆரம்பத்து பப்லோவாதிகள், மற்றும் பின்னாளில் WRP இன் தலைமையில் பப்லோவாதிகளாக மாறியவர்கள் ஆகியோரிடம் இருந்து மாறுபட்டு தனித்த விதத்தில், ஆளும் சாதியின் “சுய-சீர்திருத்த” சாத்தியத்தை அவர் நிராகரித்தார். “இந்த நெருக்கடிக்கு அமைதியான முடிவு எதுவும் இல்லை” என்று அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி இல் எழுதினார். “எந்த சாத்தானும் தனது கொடுநகங்களை தானே முன்வந்து வெட்டிக் கொள்வதில்லை. சோவியத் அதிகாரத்துவம் ஒரு சண்டை இல்லாமல் தனது நிலைகளை விட்டுக்கொடுக்காது. இந்த அபிவிருத்தி வெளிப்படையாக புரட்சியின் பாதைக்கு இட்டுச்செல்கிறது.”

இந்த அரசியல் புரட்சிக்காகப் போராடிய நான்காம் அகிலம், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை நிபந்தனையற்று பாதுகாத்தது. உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, அக்டோபர் புரட்சியின் அடிப்படை தேட்டங்களைப் பாதுகாக்க இது அத்தியாவசியமானதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தை நான்காம் அகிலம் பாதுகாத்தமையானது, அதிகாரத்துவத்திற்கு எதனையும் விட்டுக்கொடுப்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான அதன் சமரசமற்ற போராட்டத்தின் ஒரு இன்றியமையாத அம்சமாக இருந்தது. எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவம் தொழிலாளர் அரசை அழிப்பதை மேற்பார்வை செய்வதன் மூலமாக ஏகாதிபத்தியத்திற்கு அதன் சேவைகளை முழுமை செய்வதை தடுப்பதற்கு நான்காம் அகிலம் அதன் சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்யும். சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தமையானது அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதற்கான அரசியல் புரட்சி வேலைத்திட்டத்துடன் பிரிக்கவியலாது பிணைக்கப்பட்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்தில் அரசியல் புரட்சி நடப்பதற்கும் உலக சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவை சுருங்கக் கூறுகையில், ட்ரொட்ஸ்கி 1939 செப்டம்பரில் பின்வருமாறு எழுதினார்:

நம்மைப் பொறுத்தவரை சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பானது உலகப் புரட்சிக்கான தயாரிப்புடன் ஒன்றுகலந்ததாகும். புரட்சியின் நலன்களுடன் முரண்படாத வழிமுறைகள் மட்டுமே இதில் அனுமதிக்கத்தக்கவை. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக்கும் உலக சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவு, ஒரு தந்திரோபாயப் பணிக்கும் ஒரு மூலோபாயப் பணிக்கும் இடையிலான உறவைப் போன்றதாகும். ஒரு தந்திரோபாயம் ஒரு மூலோபாய இலக்கிற்கு கீழ்ப்படியச் செய்யப்படுகிறது என்பதோடு எந்த விதத்திலும், அது பிந்தையதிற்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது...

சோவியத் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதான பிரச்சினையானது நமக்கு சோவியத் ஒன்றியத்தில் உற்பத்தி சாதனங்கள் அரசுடைமையாக இருப்பதை பாதுகாக்கிற பிரச்சினைக்கு கீழ்ப்படிந்ததாகும்; சோவியத் ஒன்றியத்தில் உற்பத்தி சாதனங்களில் அரசுடைமையைப் பாதுகாப்பது குறித்த பிரச்சினை, நமக்கு உலக பாட்டாளி வர்க்கப் புரட்சி எனும் பிரச்சினைக்கு கீழ்ப்படிந்ததாகும் என்ற உண்மையில் இருந்து ஒருகணமும் கூட நம் பார்வையை விலக்கி விடக் கூடாது. [5]

ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியம் குறித்த அவரது பகுப்பாய்விற்கும் அந்த பகுப்பாய்வில் பிறந்த நடவடிக்கை செயல்திட்டத்திற்கும் ஆட்சியின் வரலாற்று மூலங்கள் மற்றும் அதன் சமூக-பொருளாதார அடித்தளங்களில் வேரூன்றியிருந்த அதன் அடிப்படை முரண்பாடுகள் குறித்த ஒரு இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதப் பகுப்பாய்வை தனக்கு அடிப்படையாகக் கொண்டார். காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி இல் “தொழிலாளர்’ அரசின் இருவிதமான தன்மை” என்று தலைப்பிடப்பட்டதொரு அத்தியாயத்தில் அவர், அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்டு தொழிலாளர் அரசினால் பாதுகாக்கப்பட்ட சொத்து வடிவங்கள், உற்பத்தி சாதனங்கள் சமூக உடைமையாக இருப்பதைக் கொண்டிருந்தன என்ற அதேநேரத்தில், பொருளாதாரத்தின் சடப்பொருள்ரீதியான பின்தங்கியநிலையானது, சோவியத் ஒன்றியம், அதன் சொந்த வளங்களின் அடிப்படையில், பற்றாக்குறையையும் ஆகவே சமத்துவமின்மையையும் வெல்வதை சாத்தியமற்றதாக்கியது. அதன் விளைவாக, விநியோக நடைமுறைகள், ஒரு முதலாளித்துவ மதிப்பு அளவீட்டுமுறையின் (ஊதியங்கள்) அடிப்படையிலானதாக, முதலாளித்துவத்தினதாகவே தொடர்ந்தும் இருந்தன என்று விளக்கினார்.

அவர் எழுதினார்:

சமூகத்தின் சோசலிசமய உருமாற்றப் பணியை ஏற்றுக் கொண்டிருக்கும் அரசானது, எந்த மட்டத்திற்கு, சமத்துவமின்மையை, அதாவது ஒரு சிறுபான்மையினருக்கான சடப்பொருள் முன்னுரிமைகளை, பலவந்த வழிமுறைகளின் மூலமாக, பாதுகாக்கத் தள்ளப்படுகிறதோ, அந்த மட்டத்திற்கு, ஒரு முதலாளித்துவ வர்க்கம் இல்லாதபோதும் கூட, அது ஒரு “முதலாளித்துவ” அரசாகத் தான் தொடர்கிறது. இந்த வார்த்தைகள் பாராட்டுமல்ல பழியுமல்ல; அவை விடயங்களை அவற்றின் உண்மையான பெயர்களில் அழைக்கிறது, அவ்வளவே...

அரசானது நேரடியாகவும் வெகு ஆரம்பத்தில் இருந்தேயும் ஒரு இரட்டைத் தன்மையை எடுத்துக்கொண்டிருக்கிறது: உற்பத்திச் சாதனங்களில் சமூக உடைமைத்துவத்தை அது பாதுகாக்கிற மட்டத்திற்கு சோசலிச தன்மையுடையது; வாழ்க்கைப் பொருட்கள் விநியோகம் ஒரு முதலாளித்துவ மதிப்பு அளவீட்டை, மற்றும் அதனைச் சூழ்ந்த பின்விளைவுகள் அனைத்தையும் கொண்டிருக்கிற மட்டத்திற்கு அது முதலாளித்துவ தன்மையுடையது. இப்படியான ஒன்றுக்கொன்று முரண்பட்டதொரு குணாதிசயப்படுத்தலானது வறட்டுவாதிகளையும் கல்வியறிஞர்களையும் மிரட்சியடையச் செய்யலாம்; நாம் அவர்களுக்கு நமது அனுதாபங்களை மட்டுமே வழங்க முடியும். [6]

மேலும் அவர், அதிகாரத்துவத்தை “சமத்துவமின்மையின் காவல்காரன்” என்றும் அழைக்கிறார், எழுதுகிறார்:

நுகர்வுப் பொருட்கள் விடயத்தில் சமூகத்தின் வறுமையும், அதனால் மற்றவர்களுக்கு எதிராக ஒருவர் முண்டியடிக்க நேர்வதும் தான் அதிகாரத்துவ ஆட்சிக்கான அடிப்படையாக இருக்கிறது. ஒரு கடையில் போதுமான அளவுக்கு பொருட்கள் இருக்கும்போது, வாங்குபவர்கள் அவர்கள் விரும்பிய நேரத்தில் வந்து வாங்கிக் கொள்ள முடியும். பொருட்கள் கொஞ்சமாக இருக்கும்போது, வாங்குபவர்கள் வரிசையில் நிற்க வேண்டி வருகிறது. அந்த வரிசைகள் வெகுநீளமாய் இருக்கும்போது, வரிசைஒழுங்கைப் பராமரிக்க அங்கே ஒரு போலிஸ்காரரை நியமிக்க அவசியமாகிறது. இதுவே சோவியத் அதிகாரத்துவத்தின் அதிகாரத்திற்கான தொடக்கப் புள்ளியாகும். யாருக்கு எது கிடைக்க வேண்டும் யார் காத்திருக்க வேண்டும் என்பதை அது ‘அறிந்திருக்கிறது’….

சோவியத் தேர்மிடோர் என்பதன் சமூக அர்த்தம் இப்போது நம் முன்பாக வடிவம் பெறத் தொடங்குகிறது. வெகுஜனங்களின் வறுமையும் கலாச்சாரப் பின்தங்கிய நிலைமையினாலும் கையில் ஒரு மிகப்பெரும் தடியுடனான ஆட்சியாளரின் ஒரு தீய வடிவத்தில் மீண்டும் அவதாரம் எடுத்திருக்க செய்தது. [7]

உலக சோசலிசப் புரட்சியில் ஏற்பட்ட தாமதங்களும் அதனையடுத்து உண்டான சோவியத் ஒன்றிய தனிமைப்படலுமே, ஒரு சர்வாதிபத்திய அதிகாரத்துவத்தின் வடிவத்தில் தொழிலாளர் அரசு சீரழிவு கண்டதற்கான அடிப்படைக் காரணமாய் இருந்தது. இந்த இக்கட்டான நிலையானது, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சிகரக் கொள்கைகளால் வலுப்பெற்றது, மேலும் சிக்கலாகியது.

இந்த தனிமைப்படலை முடிவுக்குக் கொண்டுவந்து தொழிலாளர் அரசின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அங்கே இரண்டே வழிகளே இருந்தன: ஒன்று, அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட சொத்துறவுகளை அகற்றிவிட்டு எதிர்ப்புரட்சிகர வழிமுறைகளின் மூலமாக சோவியத் ஒன்றியத்தை உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள் ஒன்றிணைப்பது; இல்லையேல் நான்காம் அகிலம் போராடி வந்திருக்கும் பாதையான தொழிலாள வர்க்கத்தின் மூலமாக அதிகாரத்துவம் தூக்கிவீசப்பட்டு, சோவியத் ஜனநாயகம் மீட்சி செய்யப்படுவது மற்றும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு திரும்புவது.

ட்ரொட்ஸ்கி இந்த பகுப்பாய்வை இடைமருவல் வேலைத்திட்டத்தில் சுருக்கமாகவும் அற்புதமாகவும் இவ்வாறு எடுத்துரைத்தார்:

சோவியத் ஒன்றியம் அக்டோபர் புரட்சியில் இருந்து ஒரு தொழிலாளர்’ அரசாக எழுந்தது. சோசலிச அபிவிருத்திக்கான ஒரு அத்தியாவசிய முன்நிபந்தனையாக இருந்த, உற்பத்தி சாதனங்களது அரசுடைமையானது, உற்பத்தி சாதனங்களின் ஒரு துரிதமான வளர்ச்சியின் சாத்தியத்தை திறந்து விட்டது. ஆனால் அதேநேரத்தில் தொழிலாளர் அரசு எந்திரமானது ஒரு முழுமையான சீரழிவுக்குள் சென்றது: தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஆயுதமாக இருந்ததில் இருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு குழிபறிப்பதற்கான ஒரு ஆயுதமாக அது உருமாற்றப்பட்டது. பின்தங்கிய மற்றும் தனிமைப்பட்ட தொழிலாளர் அரசின் அதிகாரத்துவமயமாக்கமும், அதிகாரத்துவம் ஒரு சர்வ-சக்திவாய்ந்த சலுகைகொண்ட சாதியாக உருமாற்றப்பட்டதும் தத்துவார்த்தரீதியில் மட்டுமல்லாது இம்முறை நடைமுறைரீதியாகவும் தனியொரு நாட்டில் சோசலிசம் எனும் தத்துவத்தின் மிக உறுதியான நிராகரிப்பை உள்ளடக்கியிருக்கின்றது.

இவ்வாறாக சோவியத் ஒன்றியம் படுபயங்கர முரண்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்றது. ஆயினும் அது இப்போதும் ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாகவே இருக்கின்றது. இதுவே சமூக கண்டறிதலாகும். அரசியல் முன்கூறலானது: இது நடக்காவிடில் அது என்கிற மாற்று குணநலனைக் கொண்டிருக்கிறது. ஒன்று, அதிகாரத்துவம், தொழிலாளர் அரசில் முன்னெப்போதையும் விட அதிகமாக உலக முதலாளித்துவத்தின் அங்கமாகி, புதிய சொத்து வடிவங்களைத் தூக்கிவீசி விட்டு நாட்டை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் மூழ்கடிக்கும்; இல்லையேல் தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை காலில் போட்டு நசுக்கிவிட்டு சோசலிசத்திற்குப் பாதைதிறக்கும் என்ற ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையை கொண்டுள்ளது. [8]

ஸ்ராலினிசம் குறித்த நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வின் மீதான திருத்தல்வாதத் தாக்குதல்: அரசு முதலாளித்துவமும் பப்லோவாதமும்

சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தன்மை குறித்த பிரச்சினை, 1938 செப்டம்பரில் ஸ்தாபிக்கப்பட்ட நாள் தொடங்கி நான்காம் அகிலத்திற்குள்ளாக இருந்து வந்த சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களின் மையத்தானத்தில் இருந்து வந்திருக்கிறது. 1939 ஆகஸ்டு 23 அன்று ஸ்ராலின்—ஹிட்லர் உடன்படிக்கை கையெழுத்தானதும், மற்றும் அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடித்தமையும், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் மீதான முதல் பெரும் திருத்தல்வாதத் தாக்குதல் தொடுக்கப்படுகின்ற சமயமாக ஆனது. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள், மாக்ஸ் சாக்ட்மன் மற்றும் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் தலைமையில் இருந்த ஒரு குட்டி-முதலாளித்துவக் கன்னை, இந்த நிகழ்வுகள் சோவியத் ஒன்றியத்தின் “ஏகாதிபத்திய” தன்மையை விளங்கப்படுத்தியதாக அறிவித்ததோடு, நான்காம் அகிலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க அது விடுத்த அறைகூவலை கைவிட வேண்டும் என்றும் கோரியது.

இவர்கள் காட்டிய இந்த எதிர்ப்பானது போரில் நுழைவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளின் நிலைப்பாட்டில் இந்த தீவிரப்பட்ட நடுத்தர வர்க்கத்தினருக்குள்ளாக நிகழ்ந்த வலதுநோக்கிய நகர்வை பிரதிபலித்தது. ஹிட்லருடனான ஸ்ராலினின் ஒப்பந்தம் அதிகாரத்துவத்தின் நெருக்கடியையும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு அது காட்டிய முற்றுமுழுதான அலட்சியத்தையும் வெளிப்படுத்தியதே அன்றி, சோவியத் ஒன்றியத்தின் சமூக அடித்தளங்களிலான ஒரு மாற்றத்தையும் அது குறிக்கவில்லை. பேர்ன்ஹாமும் சாக்ட்மனும், அவர்களுடன் தீவிரப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் பெருந்தொகுதியினரும், ஸ்பெயினில் GPU முதலாளித்துவ “மக்கள் முன்னணி” அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டு புரட்சியாளர்களை படுகொலை செய்து கொண்டும் தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டும், அதன் மூலமாக பிராங்கோவின் வெற்றிக்கு இட்டுச் சென்று கொண்டும் இருந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாத்தனர். மாஸ்கோ களையெடுப்பு விசாரணைகளின் போது 1917 புரட்சியின் தலைமையையும் நூறாயிரக்கணக்கிலான சோசலிஸ்டுகளையும் ஸ்ராலின் கொன்றொழித்துக் கொண்டிருந்த போதும் கூட அவர்கள் இதையே தான் செய்தனர். ஆனால் அதிகாரத்துவம் தனது நோக்குநிலையை “ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து பாசிச ஏகாதிபத்தியவாதிகளை நோக்கி சிடுமூஞ்சித்தனமாக மாற்றிக் கொண்டு விட்டபோது, அவர்கள் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க மறுத்தனர்.

அதிகாரத்துவம் தன்னை ஒரு புதிய “அதிகாரத்துவ கூட்டுற்பத்தி” (“bureaucratic collectivist”) ஆளும் வர்க்கமாக மாற்றிக்கொண்டு விட்டிருந்தது என்று கூறுவதானது ஒரு ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்திற்கும் சோசலிசப் புரட்சிக்கான எந்த சாத்தியத்தையும் கைதுறப்பதற்கு நிகரானதாகும் என்று ட்ரொட்ஸ்கி, சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளான (SWP) 1939-40 கன்னை மோதலின் சமயத்தில், விளக்கினார். அதிகாரத்துவம் ஒரு புதிய ஆளும் வர்க்கத்திற்கு உருவடிவம் கொடுத்திருந்தால், அது உற்பத்தி சக்திகளது வரலாற்றுரீதியான அவசியமான அபிவிருத்தியை சுமந்துசெல்லும் ஒரு வாகனமாக இருந்திருக்க வேண்டும் என்றே அர்த்தமளிக்கும். ஆக, ஒரு புதிய மற்றும் உயர்ந்த, சோசலிச உற்பத்தி முறையின் வரலாற்றுவழியான மற்றும் புரட்சிகர வாகனமாக தொழிலாள வர்க்கம் இருக்கவில்லை என்றே அர்த்தமாகும். சோசலிசப் புரட்சி வரலாற்றுத் திட்டநிரலில் இருக்கவில்லை என்றாகும். மேலும் ஏகாதிபத்தியம் என்பது, போர்கள், புரட்சிகள் மற்றும் உலக சோசலிச உருமாற்றத்திற்கான சகாப்தம் என்ற அந்த கருத்தாக்கம் தவறானது, ஆகவே அது கைவிடப்படப்பட வேண்டும் என்று அர்த்தப்படுகின்றது.

முழுமையான ஐயுறவுவாதம் மற்றும் அரசியல் விரக்தியின் ஒரு வசனமாக இருந்த அது, ஸ்ராலினிச-விரோத வடிவத்தை அது கொண்டிருந்தாலும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமான ஒரு சரணாகதியையே குறித்ததாக இருந்தது.

1940களின் பிற்பகுதியில் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரது தலைமையின் கீழ் எழுந்த, பப்லோவாத கலைப்புவாதமானது, அரசு முதலாளித்துவத்தினை (state capitalism) தலைகீழாக்கி வைத்த ஒரு வடிவத்தை எடுத்த ஒரு மோசமான குட்டி-முதலாளித்துவப் போக்காக இருந்தது. ஸ்ராலினிசத்தை எதிர்ப்புரட்சிகரமானதாக குணாம்சப்படுத்துவதை அது நிராகரித்து, மாறாக அதற்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வழங்கி, தொழிலாள வர்க்கத்தின் தனித்துவமான மற்றும் ஒரேயொரு புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின் வரலாற்று அவசியத்தை மறுத்தது. ஸ்ராலினிச ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கான ஒரு அரசியல் புரட்சிக்கு நான்காம் அகிலம் விடுத்த அழைப்பை மறுதலித்த அது, அதற்குப் பதிலாக, ஒருபக்கம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தும் மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திடம் இருந்துமான அழுத்தத்தின் கீழ் அதிகாரத்துவத்திற்குள்ளாக இருக்கும் ஒரு “முற்போக்கு” கன்னையானது ஆட்சியை “ஸ்ராலினிசத்தை அகற்றி” அதனை புரட்சிகரப் பாதைக்கு திரும்பச் செய்யும் என்பதாகக் கூறியது.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பது என்பது, அரசு முதலாளித்துவத்திற்கும் பப்லோவாதத்திற்கும் இடையில் பொதுவானதாக இருந்தது. நான்காம் அகிலம் தன்னை ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் காலனித்துவ நாடுகளில் இருந்த முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்குள் கலைத்துக் கொள்ள வேண்டும் என்று பப்லோவாதிகள் கோரினர்.

1989 ஜூலை-டிசம்பர், நான்காம் அகிலம் இதழின் தலையங்கத்தில் ICFI எழுதியவாறாக:

இறுதி ஆய்வில், பப்லோவாத சந்தர்ப்பவாதமானது சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் ஸ்ராலினிஸ்டுகளின் தற்காலிகமான மேலாதிக்கத்திற்கு சரணடைவதை பிரதிநிதித்துவம் செய்தது. 1951 இல் பப்லோவும் மண்டேலும் “புறநிலை சமூக யதார்த்தமானது அடிப்படையாக முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகம் என்பவற்றையே உள்ளடக்கியிருக்கின்றது” என்று படுபயங்கர பிரகடனத்தை செய்ததில் இந்த சரணாகதி அதன் மிகத் துல்லிய தத்துவார்த்த வெளிப்பாட்டைக் கண்டது. இந்த விதத்தில், பப்லோவாத சந்தர்ப்பவாதிகள் ஸ்ராலினிசத்திற்கு ஒரு பரந்த வரலாற்று பொறுப்பினை கையளித்தனர், அதன்மூலமாக பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் அதன் உண்மையான மார்க்சிச முன்னணிப் படையான, நான்காம் அகிலத்தின் சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்தனர். [9]

1953 நவம்பரில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு SWP ஆல் விடுக்கப்பட்ட “பகிரங்க கடித”த்துடன் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் பிறந்ததாகும். ஆயினும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, முதலில் 1963 இல் பப்லோவாதிகளுடன் SWP மறுஇணைவு காண்பதற்கு எதிராகவும், அதன்பின் சர்வதேச கம்யூனிச அமைப்பு (OCI — Organisation Communiste Internationaliste) இன் மத்தியவாதத்திற்கு எதிராகவும், இறுதியாக 1985-86 உடைவில் உச்சமடைந்த WRP தேசிய சந்தர்ப்பவாதத்தின் வழியாக பப்லோவாதத்திற்கு சரணடைவதற்கு எதிராகவும் தொடர்ந்து நடைபெற்றது. அந்த அரசியல் போராட்டம் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக குட்டி-முதலாளித்துவ சக்திகளை மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெற்றி கண்டதைக் குறித்துநின்றது.

இது முதலில் பொருளாதார எழுச்சியின், அதன்பின் அரசியல் பிற்போக்குத்தனம் ஆட்சி செய்ததன், மற்றும் தொழிலாளர் இயக்கம் எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவங்களால் மேலாதிக்கம் செய்யப்பட்ட பொதுவாக சாதகமற்ற நிலைமைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போராட்டங்களின் மூலமாகவே ட்ரொட்ஸ்கிசம் மற்றும் மார்க்சிசத்தின் தொடர்ச்சி பராமரிக்கப்பட்டது.

WRP ஸ்ராலினிசத்திற்கு தகவமைத்துக் கொள்கிறது

WRP, பப்லோவாதத்திற்கு சரிந்தமையானது அது ஸ்ராலினிசத்துடன் அதிகரித்த திட்டவட்டமான தகவமைவை ஏற்படுத்திக் கொண்டதுடன் அத்தியாவசிய சம்பந்தம் கொண்டிருந்தது. 1980-81 இல் போலந்தின் சொலிடாரிட்டி (Solidarity) இயக்கத்தின் வடிவில் ஸ்ராலினிசத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சி எழுந்திருந்தமைக்கு அது கவனம் செலுத்தவில்லை என்பதுடன், அந்த எழுச்சியில் எந்த சுயாதீனமான ட்ரொட்ஸ்கிச தலையீட்டையும் ICFI இல் அதற்கிருந்த பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்து விட்டிருந்தது. இதன்மூலம் அது, அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதற்கான தொழிலாளர் இயக்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தை தலைசீவுவதற்கும், அதனை சீர்திருத்தங்களுக்காக ஆட்சிக்கு அழுத்தமளிக்கும் ஒரு கொள்கைக்குள்ளாக வழிமாற்றி விடுவதற்கும் வேலை செய்து கொண்டிருந்த சொலிடாரிட்டி இயக்கத்தின் இடது-சீர்திருத்தவாதக் கன்னைகளை ஊக்குவிப்பதற்கு பப்லோவாதிகளுக்கு களத்தை திறந்துவிட்டிருந்தது.

போலந்தில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளது செய்திகளைச் சேகரிக்க போலந்துக்கு ஒரு செய்தியாளரை அனுப்ப எந்த முயற்சியும் செய்யாத News Line, அதேவேளையில், 1980 இல் கோடை ஒலிம்பிக்ஸ் செய்திகளுக்காக மாஸ்கோவுக்கு தனது விளையாட்டுப் பிரிவு ஆசிரியரை அனுப்பியது, அங்கு அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் இனிய வரவேற்பு கிட்டியது.

IC பிரிவுகளின் முதுகுக்குப் பின்னால் WRP சோவியத் அதிகாரிகளுடன் பிரசுர உடன்பாடுகளுக்குள் நுழைந்தது. 1982 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் Bulletin பத்திரிகையில் பிரசுரித்திருந்த சோவியத் பொருளாதாரத்தின் நெருக்கடி மீதான ஒரு நீண்ட பகுப்பாய்வை பிரசுரிக்க News Line மறுத்தது. முன்னதாக, அது, சோவியத் உருக்குத்துறை நிலைமைகளைப் புகழ்ந்து வெளியான ஒரு Novosti செய்திக் குறிப்பை, எந்த விமர்சனபூர்வ கருத்துரையும் இல்லாமல், மறுபிரசுரம் செய்திருந்தது.

1983 இல், ஸ்ராலினிச செய்தித்தாளான Morning Star யார் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது தொடர்பாக பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்த ஒரு கன்னை மோதலில், அந்த செய்தித்தாளின் பிரசுர அங்கத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி விட்டிருந்த ஒரு எதிர்க்கன்னைக்கு எதிராக யூரோ-ஸ்ராலினிச கட்சியை ஆதரித்து WRP தலையீடு செய்தது. கட்சி எந்திரத்திற்கு ஆதரவாகவும், அதன் எதிர்ப்புரட்சிகர செய்தித்தாளின் கட்டுப்பாட்டை எவ்வாறு மீட்பது என்பதில் அதற்கு ஆலோசனையளித்துமான பதாகைத் தலைப்புகளையும் ஆசிரியகருத்துக்களையும் News Line பிரசுரித்தது.

ஸ்ராலினிச செய்தித்தாளான Morning Star “இனியும் பெரிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியினதும் மற்றும் அதன் காங்கிரசின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ்” இல்லாதுபோய்விட்டது என்ற உண்மையைச் சொல்லி புலம்பி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு WRP இன் அரசியல் கமிட்டியிடம் இருந்தான “பகிரங்க கடிதம்” ஒன்றை 1983 ஜூன் 24 தேதியிட்ட News Line தாங்கியிருந்தது.

1984-85 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்’ வேலைநிறுத்தத்தின் போது சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய சங்கத்தின் தலைவரான ஆர்தர் ஸ்கார்கில்

WRP இன் ”பகிரங்க கடிதம்”, “செய்தித்தாளின் கட்டுப்பாட்டை கட்சித் தலைமை இழப்பதானது... கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஒரு மறுதலிப்பை மட்டும் குறிக்கவில்லை, மாறாக, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் தலைமை கொடுக்கப்பட்ட மகத்தான 1917 ரஷ்யப் புரட்சி மற்றும் வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமை ஆகியவற்றின் மாபெரும் தேட்டங்களை பாதுகாப்பது என்ற, கட்சி எந்த வரலாற்று அடித்தளங்களின் மீது உருவாக்கப்பட்டிருந்ததோ, அந்த வரலாற்று அடித்தளங்களின் மீதான மறுதலிப்பாகவும் இருந்தது” என்னும் திகைப்பூட்டும் வசனத்தையும் கூறியிருந்தது. [10]

1984-85 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில், WRP தொழிற் கட்சித் தலைமையிடமும் சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய சங்கத்தின் தலைவரும் இளம் கம்யூனிஸ்ட் கழக தேசிய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஆர்தர் ஸ்கார்கிலிடமும் சரணடைந்தது. பழைமைவாத தாட்சர் அரசாங்கத்திடம் முழுமையாக சரணடைவதன் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை ஸ்கார்கில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இரண்டு வாரங்களுக்குக் குறைந்த காலத்திற்கு முன்பாக, WRP வெளியிட்ட மத்திய குழு அறிக்கை ஒன்று அறிவித்தது: “வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் ஆர்தர் ஸ்கார்கில் மற்றும் NUM நிர்வாகிகளின் பின்னால் உறுதியுடன் நிற்க தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழு அறைகூவல் விடுக்கிறது.”

காட்டிக்கொடுப்புக்கு சுமார் ஆறு வாரங்களின் பின்னர், ஹீலி, ஸ்கார்கிலுக்கு ஒரு கடிதம் எழுதினார் (இது பின்னால் 1985 இல் ICFI இன் சர்வதேச கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலமாக வெளிக்கொணரப்பட்டது), ”அன்புள்ள ஆர்தர்” என்று தொடங்கிய அந்தக் கடிதத்தின் பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

எங்களது கட்சி நடைமுறையின் அங்கங்களாய் இருக்கும் அத்தனை வளங்களும் தொழில்நுட்ப வசதிகளும் NUM மற்றும் அதன் தலைவராக உங்களது தேவைகளுக்கு சேவை செய்ய தயாராக உள்ளன. தேவைப்பட்டால், சங்கம் விரும்புகிற எதனையும், எங்களது வளங்களுக்கு உட்பட்டு, எதனையும் பிரதிபலனாக எதிர்பார்க்காமல், நாங்கள் அச்சிடுவோம் வெளியிடுவோம்.[11]

இவ்வாறாக, ஸ்ராலினிச கைக்கூலியும் மாஸ்கோ விசாரணைகளுக்கான வக்காலத்துவாதியுமான மொன்டி ஜோன்ஸ்டன் உடன், 1985 நவம்பர் 26 இல் நண்பர்கள் அரங்கக் கூட்டத்தில் சுலோட்டர் செய்த இழிபுகழ்பெற்ற கைகுலுக்கல், திடீரென்று முளைத்ததைப் போன்று நடந்து விடவில்லை. பல ஆண்டுகளாக அபிவிருத்தி கண்டு வந்திருந்த ஸ்ராலினிசத்தை நோக்கிய சந்தர்ப்பவாத சரணாகதியின் ஒரு பகிரங்க எடுத்துக்காட்டாகவே அது இருந்தது.

கோர்பச்சேவ் மற்றும் பெரஸ்த்ரோய்கா பற்றிய அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு

1986 பிப்ரவரியில் WRP உடனான உடைவு முழுமையடைந்து வெறும் சுமார் 13 மாதங்கள் பின்னால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட 1987 மார்ச் 23 தேதியிட்ட ஒரு அறிக்கை, கோர்பச்சேவின் மிகவும் புகழப்பட்ட சோவியத் ஒன்றியத்துக்குள் வெளிப்படைத்தன்மை (glasnost) மற்றும் புனர்நிர்மாணம் (perestroika) வேலைத்திட்டத்தின் மீதான அதன் மார்க்சிசப் பகுப்பாய்வையும் கோட்பாடான புரட்சிகர ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டையும் முன்வைத்தது. அது முதலாளித்துவ மீட்சியை நோக்கிய கோர்பச்சேவின் முனைவின் ஓரளவுக்கு ஆரம்ப கட்ட சமயமாகவே இருந்தபோதும் கூட, அதிகாரத்துவத்தின் தொழிலாள-வர்க்க விரோத, குட்டி-முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ-ஆதரவு நோக்குநிலையை இந்தப் பகுப்பாய்வு ஏற்கனவே எடுத்துக்காட்டி விட்டிருந்தது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் சட்டரீதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட இட்டுச்சென்ற சங்கிலித்தொடரான நிகழ்வுகளின் மூலம் இது துரிதமாக ஊர்ஜிதம் பெற்றது.

சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? கோர்பச்சேவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும் என்ற அறிக்கை, அனைத்துலகக் குழுவின் கோட்பாடான நிலைப்பாட்டை முன்வைத்து இவ்வாறு தொடங்கியது:

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தையும் அக்டோபர் புரட்சியின் தேட்டங்களையும் நான்காம் அகிலம் நிபந்தனையின்றி பாதுகாக்கிறது. மிக்கையில் கோர்பச்சேவால் தலைமை கொடுக்கப்படும் எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதற்கான அரசியல் புரட்சியின் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருக்கின்ற உலக சோசலிசப் புரட்சியின் மூலமாகவே இந்தப் பாதுகாப்பு சாத்தியமாகும் என்பதை அது தெளிவான குரலில் தெரிவிக்கிறது.

முதலாளித்துவ பொதுக் கருத்தினால் போற்றப்படுகின்ற, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய ஒவ்வொரு திருத்தல்வாத ஓடுகாலியாலும் கொண்டாடப்படுகின்ற, கோர்பச்சேவின் இப்போதைய கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) வேலைத்திட்டமானது, இந்த வரலாற்று முன்னோக்கினை இம்மியளவும் மாற்றி விடவில்லை.

கோர்பச்சேவ், சோவியத் தொழிலாளர்களையும் ஜாரிசத்தை தூக்கிவீசி அவர்கள் கண்ட வெற்றிகளையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப்பறித்த அதிகாரத்துவ சாதியையே பிரதிநிதித்துவம் செய்கிறார். அவர் 1917 இல் புரட்சிக்குத் தலைமை கொடுத்த லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் வாரிசு அல்ல, மாறாக அதற்குக் கல்லறை தோண்டிய ஸ்ராலினின் வாரிசு ஆவார். தான் வாழ்நாள் முழுக்க சேவை செய்து வந்திருக்கும் இந்த அதிகாரத்துவத்தின் விளைபொருளாகவே அவர் இருக்கிறார். தொழிலாள வர்க்கத்தின் மீதான குட்டி-முதலாளித்துவ வெறுப்பால் முழுமையாக நிரம்பியதால் வெகுஜனங்களில் இருந்து தனிமைப்பட்டே அதன் மட்டங்களில் இருந்து அவர் பதவிக்கு உயர்ந்து வந்தவராவார்.

பல்வேறு திருத்தல்வாதப் போக்குகளும், முதலாளித்துவ ஊடக பிரச்சாரத்திற்கான தூதுவர்களாய் செயல்பட்டு கோர்பச்சேவின் தேசிய கொள்கைகளின் தாக்கத்தினால், ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஸ்ராலினிசம் மீதான விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வை நிராகரித்து, அதிகாரத்துவம் சுயமாக தன்னை சீர்திருத்திக் கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக ஊகிக்கின்றனர்.

முதலாளித்துவ பொதுக்கருத்து குறித்த இந்த கூற்றுகளை நான்காம் அகிலம் முற்றிலும் நிராகரிக்கிறது, திருத்தல்வாதிகளது மார்க்சிச-விரோத வழிமுறைக்கு நேரெதிரான விதத்தில் அது தனது சொந்த பகுப்பாய்வை அபிவிருத்தி செய்கிறது. அது கோர்பச்சேவின் “வசீகரத்தில்” இருந்தோ அல்லது நெருக்கடியில் சிக்கியிருக்கும் அதிகாரத்துவ ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கத்துடனான அவரது ஏதேனும் ஒரு தேசிய நடவடிக்கையில் இருந்தோ தொடங்குவதில்லை. சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் மற்றும் உலக சோசலிசப் புரட்சி ஆகியவை தான் எங்களது தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இந்த சர்வதேச முன்னோக்கில் இருந்தும் சோவியத் அரசின் மூலங்கள் மற்றும் அபிவிருத்தி மற்றும் அடுத்து வந்த அதன் அதிகாரத்துவ சீரழிவு ஆகியவற்றின் கோணத்தில் இருந்தும் மட்டுமே கோர்பச்சேவையும் சோவியத் ஒன்றியத்தையும் புரிந்து கொள்ள முடியும். [12]

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மூலங்கள், அதன் அடிப்படையான தேசியவாத அடித்தளம், மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஏகாதிபத்தியத்தின் முக்கிய முகமையாக அதன் பரிணாமவளர்ச்சி ஆகியவற்றை திறனாய்வு செய்த பின்னர், இந்த அறிக்கை கோர்பச்சேவின் “சீர்திருத்த” வேலைத்திட்டத்தின் அடித்தளத்திலுள்ள நெருக்கடியைத் திறனாய்வு செய்தது.

அரசியல்ரீதியாக, கோர்பச்சேவின் “சீர்திருத்தங்கள்”, போலந்திலான நிகழ்வுகளில் அதிகாரத்துவம் மிகத் தெளிவாக உணர முடிந்திருந்த அரசியல் புரட்சி அச்சுறுத்தலுக்கான அதிகாரத்துவத்தின் எதிர்வினைக்கு உருவடிவம் கொடுத்திருந்தன, என்று அது விளக்கியது. இறுகிப் போய்விட்டிருந்த அதிகாரத்துவ சாதிக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகிய நிலைக்கு முகம்கொடுத்த நிலையில், கோர்பச்சேவ், கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) மூலம் குறிக்கப்பட்டவாறாக அரசு ஒடுக்குமுறையை வரம்புபட்ட அளவுக்கு தளர்த்திய வடிவத்தில், ஒட்டுமொத்தமாக சோவியத் பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்துவத்தைப் பாதுகாக்கின்ற நிலைப்பாட்டில் இருந்தபடி அதிகாரத்துவத்தின் மோசமான பேராசைகளுக்கு எதிராக நகர்ந்தார்.

என்றாலும், அந்த அறிக்கை விளக்கியது:

சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கத்திற்கும் சரி சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கும் சரி, கோர்பச்சேவின் சீர்திருத்தக் கொள்கையாக கூறப்படும் ஒன்று ஒரு அபாய உணர்வு தரக்கூடிய அச்சுறுத்தலைக் குறிக்கிறது. அது அக்டோபர் புரட்சியின் வரலாற்று வெற்றிகளுக்கு அபாயத்தை உருவாக்குகின்றது, அத்துடன் உலகளவில் ஏகாதிபத்தியத்துடன் அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர கூட்டுவேலையை ஆழப்படுத்துவதுடன் பிணைந்திருக்கிறது. [13]

பொருளாதாரரீதியாக, தேசிய பொருளாதாரத் தன்னிறைவு என்ற பிற்போக்குத்தனமான கட்டமைப்பு சோவியத் பொருளாதாரத்தை ஒரு தீர்க்க முடியாத நெருக்கடிக்குள் இட்டுச் சென்றிருந்தது. சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக, அக்டோபர் புரட்சியில் இருந்தான 70 ஆண்டுகளில் உற்பத்தி சாதனங்களின் தேசியமயமாக்கம் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவற்றின் மூலமாக இது சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் கண்ட தீவிர வளர்ச்சியானது சமத்துவமின்மை, சிறப்புரிமை அல்லது அதிகாரத்துவவாதத்தை குறைத்திருக்கவில்லை.

உழைப்பின் உற்பத்தித் திறன், இன்னும் மிக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மட்டங்களுக்குப் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. அந்த மட்டங்களை விஞ்சினால் மட்டுமே சோசலிசத்திற்கு உத்தரவாதம் கிட்டும், ஆனால் அது, ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியவாறாக, “முதலாளித்துவத்தின் முந்தைய ஒட்டுமொத்த அபிவிருத்தியாலும் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய உழைப்புப் பிரிவினையின் அடித்தளத்தின் மீது”, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம், மட்டுமே, சாதிக்கப்பட முடியும்.

1987 ஜனவரியில் மத்திய குழுவுக்கு வழங்கிய ஒரு உரையில், கோர்பச்சேவ் பெருகும் பொருளாதார நெருக்கடியை கோடுவரைந்து காட்டியிருந்தார். 1970களின் மத்தி தொடங்கி வளர்ச்சி விகிதங்கள் கூர்மையாக வீழ்ச்சி கண்டிருந்தன, ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளில் அநேகமானவை எட்டப்பட்டிருக்கவில்லை, அத்துடன் கணினி மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிகள் தொடர்பான முன்னேறிய தொழில்நுட்ப அபிவிருத்திகளின் விடயத்தில் சோவியத் ஒன்றியம் மேற்கைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி விட்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்திற்குள் உற்பத்தி சக்திகள் எத்தனை அதிகமாக வளர்ச்சி கண்டனவோ, அத்தனை அதிகமாக சோவியத் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை சார்ந்ததாக ஆகியது. 1970க்கும் 1984க்கும் இடையில் சோவியத் ஏற்றுமதி இறக்குமதி ஆறு —மற்றும் ஏழு— மடங்கு வளர்ச்சி கண்டிருந்தது. உயர்-தொழில்நுட்ப இறக்குமதிகளைக் கொள்முதல் செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு செலாவணியைப் பெறுவதற்கு, எரிபொருள் ஏற்றுமதியை நம்பியிருக்கும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டிருந்தது என்ற உண்மையின் மூலம் அதன் தொடர்ந்த பொருளாதார பின்தங்கியநிலை வெளிப்படுத்தப்பட்டதாய் இருந்த நிலையில், உலக எண்ணெய் விலைகளிலான ஒரு வீழ்ச்சி ஒரு நாசகரமான விளைவை அதன் பொருளாதாரத்தில் உண்டுபண்ணியது.

சோவியத் ஒன்றியத்திற்கு வெளியில் சோசலிசத்தை நீட்சி செய்வதில், தனது சொந்த ஆட்சிக்கு ஒரு உயிர் அச்சுறுத்தல் அபிவிருத்தியடையக் கூடிய சாத்தியத்தைக் கொண்டு, அதற்குக் குரோதம் காட்டியதில் கோர்பச்சேவின் கீழிருந்த ஸ்ராலினிச ஆட்சி அவருக்கு முன்பிருந்தவர்களின் ஆட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததாய் இருக்கவில்லை. அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியவாறாக:

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் அபிவிருத்தியும் அதன் பரிணாமவளர்ச்சியில் இருந்து எழக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை உலக அரங்கிற்கு நீட்சி செய்வதுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. தொழில்நுட்ப பற்றாக்குறையும் தொழிற்துறைக்கும் விவசாயத் துறைக்கும் இடையில் தொடர்கின்ற முரண்பாடுகளும் உலக சந்தைக்கான அணுகலின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும். சோவியத் ஒன்றியம் அந்த சந்தையில் ஒன்றிணைவதற்கு இரண்டே பாதைகள் மட்டுமே —கோர்பச்சேவ் முதலாளித்துவ மீட்சிக்கு கொண்டு செல்கின்ற பாதை இல்லையேல் உலக சோசலிசப் புரட்சியின் பாதை— இருக்கின்றன. (அழுத்தம் சேர்க்கப்பட்டது) [14]

எந்த புறநிலையான அவதானிப்பாளருக்கும், கோர்பச்சேவின் கொள்கைகளது தொழிலாள-வர்க்க விரோத அச்சினை அவரது சொந்த வார்த்தைகளில் கண்டுபிடிப்பதில் அதிகம் சிரமம் இருந்திருக்காது. உதாரணமாக, மத்திய குழுவுக்கு அவர் அளித்த உரையின் போது அவர், “வேலைக்கேற்ப விநியோகம்” தான் “சோசலிசத்தின் மிக முக்கியமான கோட்பாடு” ஆக இருந்ததாக கூறிக் கொண்டார்.

“அவரவர் இயலுமைகளுக்கு ஏற்ப உழைப்பு, அவரவர் தேவைகளுக்கு ஏற்ப விநியோகம்” என்பதே சோசலிசத்தின் கோட்பாடு என்று உரைக்கும் மார்க்சிசத்தின் மீதான ஒரு முழுமையான பொய்மைப்படுத்தலாக இது இருந்தது. சோசலிசத்தால் முடிவிற்கு கொண்டுவரப்படுகின்ற மற்றும் வெற்றிகொள்கின்ற, முதலாளித்துவ விநியோக நிர்ணயத்தையே, கோர்பச்சேவ், சோசலிசத்திற்கான அடிப்படையாக ஆக்கி விட்டார்!

அவரது உரையின் இன்னொரு பகுதியில் அவர் “ஒட்டுண்ணித்தன”த்தை கண்டனம் செய்தார். ஆனால் அவர் ஒட்டுண்ணித்தனம் என்று அடையாளம் காணுவது அதிகாரத்துவத்தின் ஊழல் மற்றும் கொள்ளையை அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தினையாகும். “ஒட்டுண்ணித்தன மனோநிலைகள் வலுவாக வளர்ந்தன, ஊதிய சமப்படுத்தல் மனோநிலை காலூன்றத் தொடங்கியது. அவை அனைத்தும் மேம்பட்ட விதத்தில் வேலைசெய்ய இயன்ற மற்றும் விரும்பிய தொழிலாளர்களைப் பாதித்த வேளையில், சோம்பேறிகளுக்கு வாழ்க்கையை எளிதாக்கியது.”

பெரஸ்த்ரோய்க்கா (புனர்நிர்மாணம்) என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்ட, கோர்பச்சேவின் ஆரம்பகட்ட பொருளாதார நடவடிக்கைகளைத் திறனாய்வு செய்த பின்னர், அனைத்துலகக் குழுவின் அறிக்கை பிரகடனப்படுத்தியது:

கோர்பச்சேவின் ‘சீர்திருத்தங்களது’ சாரம் இப்போது வெளிவருகிறது. சோவியத் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு அஞ்சி, அதிகாரத்துவம் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு அது தானே உருவாக்கிய முட்டுக்கட்டைகளை கடந்துவருவதற்கு இப்போது முயற்சி செய்கிறது.

முதலாளித்துவ விநியோக நிர்ணயங்களை விரிவுபடுத்துவது, வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசு ஏகபோகத்தை பலவீனப்படுத்துவது, தனிப்பட்ட நிறுவனங்கள் மூலம் பணம் மூலதனமாக மாற்றப்படுவதற்கு பாதை திறப்பது ஆகியவற்றின் மூலம் அதிகாரத்துவம் தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவ வர்க்கத்தின் முகவராக செயலாற்றுகிறது, முதலாளித்துவ மீட்சிக்குப் பாதை திறக்கிறது.

அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்வது, தணிக்கையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்துவது, அதிகாரத்துவ அத்துமீறல்கள் மீதான விமர்சனம் ஆகிய கோர்பச்சேவின் “ஜனநாயக” நடவடிக்கைகள் எந்த விதத்திலும் சோவியத் ஜனநாயகத்தை மீட்சி செய்வதை நோக்கிய ஒரு நடவடிக்கையைக் கொண்டதாய் இல்லை. அவை சோவியத் அதிகாரத்துவத்திற்கு சோவியத் புத்திஜீவித் தட்டு மற்றும் மேலாண்மை நிர்வாகிகள் மத்தியில் ஒரு சமூக அடித்தளத்தை வென்றெடுக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கின்றன. [15]

தணிக்கை மற்றும் ஒடுக்குமுறையின் இலேசான தளர்வு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பொதுவாக ஒரு இடது-சாரி பதிலிறுப்பை தூண்டியது. சோவியத் ஒன்றியத்தின் மற்றும் ரஷ்யப் புரட்சியின் வரலாற்றில், குறிப்பாக, ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும் பாசிச முகவராகவும் அவதூறு செய்யப்பட்டு அதன்பின் வரலாற்று மற்றும் அரசியல் உரையாடல்களில் இருந்து பல தசாப்தங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டிருந்த, ட்ரொட்ஸ்கியின் பாத்திரத்தில், ஆர்வத்தின் ஒரு எழுச்சி உண்டானது. நாம் மேலும் விவாதிக்கவிருப்பதில் காணவிருப்பதைப் போல, இந்த அபிவிருத்தியை செயலூக்கத்துடன் ஊக்குவிக்க ICFI விழைந்தது, அரசியல் செயலூக்கம்பெற்ற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை வழங்கும் விதத்தில் அது தலையீடு செய்தது.

புக்காரின், காமனேவ், சினோவியேவ், ராடெக் மற்றும் பியாடகோவ் உள்ளிட ஸ்ராலினால் கட்டம் கட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட டஜன்கணக்கான கட்சித் தலைவர்களுக்கு கோர்பச்சேவ் ஆட்சி மறுநிவாரணம் அளித்த அதேவேளை, ட்ரொட்ஸ்கிக்கு மறுநிவாரணமளிக்க அது மறுத்தது. 1987 இல் கோர்பச்சேவ், ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள் “லெனின் நிலைப்பாடு மீதான முழுமையான தாக்குதலாகவே அடிப்படையில்” இருந்தன என்று அறிவித்தார்.

முதலாளித்துவ சந்தை உறவுகளை அறிமுகம் செய்வதன் மூலம், அதிகாரத்துவத்தின் சமூக நலன்களைக் காப்பாற்றுவதற்கு கோர்பச்சேவ் செய்த முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தில் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை தூண்டின. ஒரு சில நாள் இடைவெளியிலேயே, 1989 ஜூலையில், நூறாயிரக்கணக்கான சோவியத் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் சைபீரியாவில் இருந்து ஊரல் வழியாக உக்ரேன் வரை அலையெனத் திரண்டது.

கோர்பச்சேவுக்கு விளம்பரமளித்து அவரது சீர்திருத்தங்களின் முற்போக்கான மற்றும் ஜனநாயக உள்ளடக்கமாகச் சொல்லப்பட்டனவற்றுக்கு உறுதியளிப்பதற்கு WRP ஓடுகாலிகள் உள்ளிட்ட திருத்தல்வாதிகளின் தலையீடும் அதேயளவுக்கு மிகத் தீர்மானமானதாய் இருந்தது. ஏர்னெஸ்ட் மண்டேல் 1989 இல் Verso ஆல் வெளியிடப்பட்ட பெரஸ்த்ரோய்க்காவை தாண்டி (Beyond Perestroika) என்ற அவரது புத்தகத்தில் எழுதினார்: “சோவியத்தின் உழைக்கும் மக்கள் மற்றும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கோணத்தில் இருந்து பார்ப்பீர்களானால், கோர்பச்சேவ் தான் சோவியத் ஒன்றியத்திற்கான இன்றைய மிகச் சிறந்த தீர்வாக இருப்பார்.”

தாரிக் அலி, மேலிருந்து புரட்சி (Revolution From Above) என்ற அவரது 1988 புத்தகத்தை போரிஸ் யெல்ட்சினுக்கு அர்ப்பணித்து எழுதினார்: “வெற்றிபெறுமானால், உலகளவில் சோசலிஸ்டுகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் ஒரு மிகப் பிரம்மாண்டமான நன்மையைக் குறிப்பதாக அமையக் கூடியதொரு வேலைத்திட்டத்தை கொண்டிருக்கின்ற, சோவியத் உயரடுக்கிற்குள்ளான ஒரு முற்போக்கான மற்றும் சீர்திருத்தவாத நீரோட்டத்தை கோர்பச்சேவ் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்று இந்த மேலிருந்து புரட்சி வாதிடுகிறது. கோர்பச்சேவின் நடவடிக்கைகளது வீச்சானது, சொல்லப் போனால், 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் முயற்சிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது.”

மைக்கல் பண்டா WRP ஐ கைவிட்டும், 1928 முதலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டத்தைக் கண்டனம் செய்தும், ஸ்ராலினை “பாட்டாளி வர்க்க போனபார்ட்” என்று புகழ்ந்தும், அவரது இழிபுகழ் பெற்ற ICFI ஏன் இனி குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள் (27 Reasons Why the ICFI Should Be Buried Forthwith) இன் தர்க்கத்தை துரிதமாய் விளங்கப்படுத்தினார். முதலாளித்துவ மீட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளை “பரபரப்பூட்டும் கற்பனைக்கனா” (lurid fantasy) என்று தாக்கிய அவர், கோர்பச்சேவின் வேலைத்திட்டத்தை “அதிகாரத்துவ ஆட்சியின் படிப்படியான தாராளமயமாக்கம்” மற்றும் “சோவியத் ஒன்றிய தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத்திலும் மற்றும் தொழிலாள வர்க்கத்திலுமான பரந்த மற்றும் முன்கண்டிராத மாற்றங்களின் அடியொற்றி உருவாக்கப்பட்ட பொருளாதார நிர்வாகத்தின் அதிகாரப் பரவலாக்கம்” என்று புகழ்ந்து, கோர்பச்சேவ் புகழ்பாடிகளின் கோஷ்டியில் இணைந்து கொண்டார்.

ஜெர்ரி ஹீலியை பொறுத்தவரை, டோரன்ஸ் மற்றும் றெட்கிரேவ் களுடன் சேர்ந்து அவர் உருவாக்கியிருந்த எஞ்சிய WRP இன் அரசியல் குழு கூட்டம் ஒன்றில், 1986 ஆகஸ்டில் அவர், சோவியத் அதிகாரத்துவம் இனியும் தேர்மிடோரியன் இல்லை என்றும் “ஒரு இடது திருப்பம் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக நடந்து கொண்டிருந்தது” என்றும் திட்டவட்டம் செய்தார். 1986 இன் பிற்பகுதியில் டோரன்ஸ் குழுவில் இருந்து அவரும் றெட்கிரேவ் களும் முறித்துக் கொண்ட போது ஹீலியால் உருவாக்கப்பட்ட The Marxist இதழின் 1987 ஜுன்-ஜூலை பதிப்பில் இது மேற்கோளிடப்பட்டிருந்தது. அவரது வாழ்வின் இறுதி மூன்று ஆண்டுகளின் போது, கோர்பச்சேவை அரசியல் புரட்சியின் தலைவராக போற்றிப் பாராட்டியிருந்த நிலையில், அவர் சோவியத் அரசாங்கத்தின் விருந்தினராக பல முறை சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் செய்துவந்தார்.

1986 அக்டோபரில், ஹீலி குழுவின் ஒரு உறுப்பினரான, மிக் பிளேக்கி, விடுத்த ஒரு ஆவணம் இவ்வாறு பிரகடனம் செய்தது:

இந்த அரசியல் புரட்சியின் வெடிப்புடன் இணையாக சோவியத் ஒன்றியத்தில் புத்திஜீவித் தட்டின் ஒரு பிரிவின் மத்தியில் இயங்கியல் சடவாதத்தின் அபிவிருத்தி, குறிப்பாக Omelyanovsky, Oizerman மற்றும் Ilyenkov ஆகியோர் மூலமாக நடந்து வந்திருக்கிறது... இந்த அபிவிருத்தி எங்கோ வெற்றிடத்தில் நடந்துவிடவில்லை, மாறாக அதிகாரத்துவத்தின் தலைமைப் பதவிகளை இன்று ஆக்கிரமித்திருப்பதும், அதிகாரத்துவத்தை ஸ்ராலினிசமற்றதாக்கிக் கொண்டிருப்பதுமான அதன் ஒரு இடது நகர்வு கொண்ட பிரிவின் சிந்தனைக்குள் புகுந்திருக்கின்றது...

சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய அடுக்குகளில் அரசியல் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது அது தெளிவாய் புலப்படுகிறது என்பதே என் வாதம்.[16]

சுலோட்டரின் WRP ஐ பொறுத்தவரை, “கோர்பச்சேவின் கிளாஸ்னோஸ்ட் மற்றும் பெரெஸ்த்ரோய்க்கா முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமிட்ட மற்றும் நனவான நடவடிக்கையைத் தவிர வேறொன்றையும்” அனைத்துலகக் குழுவால் காண இயலவில்லை என்று சிரில் ஸ்மித், Workers Press இன் 1989 மே 13 பதிப்பில் கண்டனம் செய்தார்.

1989 மார்ச் மற்றும் மே க்கு இடையில் வேர்க்கர்ஸ் லீக்கின் புல்லட்டின் செய்தித்தாளில் வெளியான கட்டுரைகளின் ஒரு தொகுப்பான டேவிட் நோர்த்தின் பெரஸ்த்ரோய்கா Vs சோசலிசம்: ஸ்ராலினிசமும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மீட்சியும் இல் பெரெஸ்த்ரோய்கா குறித்த அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு மேம்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது. இந்த திறமிக்க மற்றும் அரசியல்ரீதியாக தாக்கம்மிக்க பகுப்பாய்வானது, கோர்பச்சேவ் ஆட்சியின் வேலைத்திட்டம் மற்றும் நடவடிக்கைகளை அரசியல் மற்றும் நீதித்துறை மேற்கட்டுமானம், சித்தாந்தம் மற்றும் கோட்பாடு, பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை துறைகளில் அதன் கண்டுபிடிப்புகளின் கோணத்தில் இருந்து பகுப்பாய்வு செய்தது.

தேர்தல் அமைப்புமுறையானது மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில் (Congress of People’s Deputies) தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாதுபோகச் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதையும், பொதுவாக, கிளாஸ்னோஸ்ட்டின் “தாராளவாத” சீர்திருத்தங்கள் தனியார் சொத்துடைமையை மீட்சி செய்வதற்கும், வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகத்தை அகற்றுவதற்கும், முதலாளித்துவ வணிக முதலாளிகளின் ஒரு சக்திவாய்ந்த அடுக்கின் வளர்ச்சிக்கும் வசதிசெய்து கொடுக்கும் நோக்கம் கொண்டிருந்தன என்பதையும் அது எடுத்துக்காட்டியது. அவை அனைத்தும் மில்லியன் கணக்கான வேலைகள் மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களிலான ஒரு கொடூரமான வீழ்ச்சி ஆகியவறை பலிகொடுத்து நடத்தப்படவிருந்தன.

இந்தத் தொடர்பினை நோர்த் இவ்வாறாக சுருங்கக் கூறினார்:

கோர்பச்சேவ் அதிகாரத்துவத்தை, அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், அதன் ஒரு பகுதியை “எதிர்த்துப் போராடுகின்ற போது”, அவர் தனது தாக்குதல்களை, அரசு மற்றும் கட்சி எந்திரத்திற்குள்ளாக தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறை மற்றும் விவசாய கூட்டுப்பண்ணைகளின் நிர்வகிப்புடன் தமது அந்தஸ்துகளும் சலுகைகளும் பிணைந்திருக்கக் காண்கிறதொரு அடுக்கிற்கு எதிராகவே இலக்குவைத்துள்ளார். இந்த வகை அதிகாரத்துவத்திற்கு-எதிரான ‘போராட்டம்’ ஆனது அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சொத்துறவுகளின் மீதான ஒரு பகிரங்க தாக்குதலுக்கு ஒரு அரசியல் மறைப்பை வழங்குகிறது. “தீவிர பெரெஸ்த்ரோய்கா”வை (புனர்நிர்மாணம்), அதாவது தடையில்லா சந்தைக் கொள்கைகளை அமல்படுத்துதல், வெளிநாட்டு வர்த்தகத்திலான ஏகபோகத்தை கலைத்தல், மற்றும் உற்பத்திச் சாதனங்களது தனியார் சொத்துடைமையை சட்டபூர்வமாக்கல் ஆகியவற்றை பின்பற்றுவதில், கோர்பச்சேவ் கன்னையானது, சோவியத் சமூகத்தின் மிக சலுகையுடைய மற்றும் அரசியல்ரீதியாக தம்மை தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய அடுக்குகள் வரை ஒரு கூட்டணியை உருவாக்க விழைந்து வந்திருக்கிறது. இவ் அடுக்கினுள் அரசு தொழிற்துறை மற்றும் கூட்டுற்பத்திப் பண்ணைகளின் மிக வளமையான பகுதிகளுக்குள்ளான நிர்வாக உயரடுக்குகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள், புத்திஜீவித்தட்டு, மற்றும் பேராசைமிக்க குட்டி-முதலாளித்துவ அடுக்கு (இதன் எண்ணிக்கை வளர்ச்சியும் வளப்படலும் ஸ்ராலினிச ஆட்சியின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது) ஆகியவை அடங்கும். [17]

மார்க்சிசத்தின் வர்க்க வரையறுப்புகள் மற்றும் ஒரு தொழிலாளர்’ அரசின் கருத்தாக்கம் ஆகியவற்றின் இடத்தில் கோர்பச்சேவ் முதலாளித்துவ கருத்தாக்கங்களை ஊக்குவிப்பதை விவாதிக்கையில், நோர்த், சோவியத் அரசு ஒரு தொழிலாளர் அரசாக இருக்கக் கூடாது, மாறாக ஒரு “மக்கள் அரசு” ஆக இருக்க வேண்டும் என்று கோர்பச்சேவ் அறிவித்த 19வது மாநாட்டிலான அவரது உரையை மேற்கோள்காட்டினார்.

1989 பிப்ரவரியில் வெளியான ஒரு கட்டுரையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தலைவர், “சோசலிசத்தின் ஒரு புதிய முகம் குறித்த கருத்தாக்கத்தை எடுத்துரைத்தல்” என்ற பேரில், நிலம் அரசுடைமையாக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும் கூட்டுற்பத்திப் பண்ணைகளை தனியார்-உடைமையான “கூட்டுற்பத்தி நிறுவனங்கள்” ஆக மாற்றுவதன் மூலமும் “உற்பத்தி சாதனங்களில் இருந்து மனிதனின் அந்நியப்படல்” வெல்லப்பட அழைப்புவிடுத்தார்.

பொருளாதாரக் கொள்கை விடயத்தில், நோர்த் குறிப்பிட்டார்: “ஏற்கனவே சட்டமாக்கப்பட்டு விட்டிருக்கும் நடவடிக்கைகள் வெளிநாட்டு வர்த்தகத்திலான ஏகபோகத்தை கிட்டத்தட்ட அழித்து விட்டிருப்பதோடு ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் சோவியத் ஒன்றியத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கூட்டுற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் நேரடியான பொருளாதார உறவுகளுக்கான ஒரு சட்ட அடிப்படையையும் ஸ்தாபித்துத் தந்திருக்கின்றன.”

நான்காம் அகிலம் சஞ்சிகையின் “லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய ஐம்பது ஆண்டுகள்” என்ற 1990 ஜனவரி-ஜூன் தலையங்கம், பின்வரும் விபரித்தது:

முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கான அதிகாரத்துவத்தின் முனைப்பில் உள்ள நனவு மற்றும் திட்டமிட்ட தன்மையின் மட்டமானது 1990 ஜூலை 1 அன்று சோவியத் ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ள ஒரு புதிய சட்டத்தின் மூலம் மிகத் தெளிவாக ஆக்கப்படுகிறது. தனியார் சொத்துக்கு எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் இருக்கும் மட்டத்திற்கான சட்டப் பாதுகாப்புகளை அது அளிக்கிறது. அந்தப் பத்தி அறிவிக்கிறது:

“சொத்துடைமைக்கான உரிமை சோவியத் ஒன்றிய சட்டத்தினால் அங்கீகரிக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது.”

"ஒரு உரிமையாளர், சட்டத்தை மீறாத வகையில் தனது சொத்தினைக் கொண்டு எதனையும் செய்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார். சட்டத்தால் தடை செய்யப்படாத எந்த வகையான பொருளாதார அல்லது வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு அவர் தனது சொத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்...”

"சொத்துக்கள் என்பது நிலம், தாது வளம், நீர், தாவரம் மற்றும் விலங்குயிர்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள், சாதனங்கள், பொருளியல் மற்றும் ஆன்மீக கலாச்சாரப் பொருட்கள், பணம், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களாக இருக்கலாம்.”

“சட்டத்தால் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய இந்த சொத்துக்களின் பொருளாதாரப் பயன்பாட்டு முடிவுகள் (விளைபொருட்கள் மற்றும் இலாபம்) இவற்றின் உரிமையாளருக்கே உரியதாகும்...” [18]

முதலாளித்துவ மீட்சிக்கும் கோர்பச்சேவின் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான உறவு குறித்து எழுதுகையில், நோர்த் பெரெஸ்த்ரோய்கா Vs சோசலிசம் இல் இவ்வாறு எழுதினார்:

கடந்த மூன்று ஆண்டுகளின் போது, உற்பத்தி சக்திகளின் தனியார் உடைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு கோர்பச்சேவ் மூலமாக தீர்மானகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் கூட்டுற்பத்தி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ வழிகளில் அபிவிருத்தி காண்பதில் அதிகாரத்துவம் முன்னெப்போதினும் பகிரங்கமாக தனது நலன்களை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறாக, அதிகாரத்துவத்தின் சொந்த சலுகைகள் இனியும் அரசுடைமை வடிவங்களுடன் பிணைந்ததாக அல்லாமல், மாறாக அவற்றுக்குக் குரோதமானவையாக இருக்கின்ற மட்டத்திற்கு, உலக ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவுகளும் அதற்கேற்ற கணிசமான மாற்றத்தைக் கண்டாக வேண்டியிருக்கிறது. சோவியத் வெளியுறவுக் கொள்கையின் பிரதான இலக்கு, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதாக இருப்பது குறைந்து, மாறாக பெரெஸ்த்ரோய்காவின் உள்நாட்டு இலக்குகளை எட்டுவதற்கு, அதாவது, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக முதலாளித்துவ சொத்துறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஏகாதிபத்திய ஆதரவை அணிதிரட்டுவதாய் அதிகமாய் ஆகிக் கொண்டிருக்கிறது. [19]

அதிகாரத்துவத்தின் வெளியுறவுக் கொள்கை கண்டுபிடிப்புகளது சாராம்சத்தை சுருக்கமாய், நோர்த் இவ்வாறு எழுதினார்:

சோவியத் கொள்கையின் ஒரு நீண்ட-கால இலக்காக சர்வதேச சோசலிசத்தை நிபந்தனையற்று மறுதலிப்பது, சோவியத் ஒன்றியத்திற்கும் உலகெங்கிலுமான ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டங்களுக்கும் இடையில் எந்த அரசியல் ஐக்கிய வெளிப்பாட்டையும் கைகழுவுவது, மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுப்பதில் ஒரு பொருத்தமான காரணியாக வர்க்கப் போராட்டத்தை வெளிப்படையாக நிராகரிப்பது ஆகியவை புதிய சோவியத் வெளியுறவுக் கொள்கையின் தனித்துவமான அம்சங்களாக இருக்கின்றன. சோவியத் வெளியுறவுக் கொள்கையிலான மாற்றங்கள் உலக முதலாளித்துவ கட்டமைப்புடன் சோவியத் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க நடைபெற்று வருகின்ற முயற்சிகளுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளன. கிரெம்ளினின் பொருளாதார இலக்குகள் சோவியத் ஒன்றியம் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் வர்க்கப் போராட்டம் மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பின் எந்த வடிவத்திற்கும் இடையில் நீடிக்கின்ற எந்தத் தொடர்பையும் திட்டவட்டமாகவும் நிபந்தனையின்றியும் கைவிட அவசியமாக்குகிறது. அந்தக் காரணத்தினால் தான் கோர்பச்சேவ் ஐக்கிய நாடுகள் சபையை தேர்ந்தெடுத்து அங்கு, சென்ற டிசம்பரில், 1917 அக்டோபர் புரட்சியும், 1789 இன் பிரெஞ்சு புரட்சியைப் போலவே, வேறொரு வரலாற்று சகாப்தத்திற்கு சொந்தமானது அது நவீன உலகத்திற்கு பொருந்தாதது என்று அறிவித்தார். [20]

புதிய வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளுக்கான உதாரணங்களில், நிக்கராகுவாவில் சான்டனிஸ்டா ஆட்சிக்கான எண்ணெய் ஏற்றுமதிகளை கோர்பச்சேவ் துண்டித்தமை, இந்தோனேசியாவில் சுகார்ட்டோவை அவர் தழுவிக் கொண்டமை, இஸ்ரேல் மற்றும் தென் ஆபிரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதற்கான அவரது நடவடிக்கைகள், மற்றும் 1990-91 இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க அவர் பச்சைக்கொடி காட்டியமை ஆகியவையும் அடங்கும்.

டேவிட் நோர்த்தின் பெரெஸ்த்ரோய்கா Vs சோசலிசம் புத்தகத்தின் அட்டை

அதிகாரத்துவத்தின் தொழிலாள வர்க்கத்தின் மீதான நோய்பீடித்த வெறுப்பு மற்றும் அப்பட்டமான கம்யூனிச-விரோதம் ஆகியவற்றுக்கு டேவிட் நோர்த் மேலதிக உதாரணங்களை வழங்கினார்:

கோர்பச்சேவின் பிரதான ஆலோசகர்களில் ஒருவரான பொருளாதார அறிஞர் Tatyana Zaslavskaya, Izvestia க்கு அளித்த ஒரு நேர்காணலில் கூறினார்: “பெரெஸ்த்ரோய்கா தொடங்கிய நிலைமை அடிப்படையில் ஒரு புரட்சிக்கு-முந்தைய சூழ்நிலையாக இருந்தது, அங்கு ‘கீழ் வர்க்கங்கள்’ நல்ல தரமான வேலையை செய்வதற்கு விருப்பமின்றி இருந்தனர் அல்லது மறுத்தனர், அதேவேளையில் மேல் அடுக்கு இனியும் அவற்றை செய்ய முடியாதிருந்தது.”

1989 இல் கோர்பசேவின் தலைமை பொருளாதார ஆலோசகரான L. I. Albalkin க்கும் Komsomolskaya Pravda இன் செய்தியாளரான Alexander Afanasyev க்கும் இடையில் நடைபெற்றதொரு கருத்துப் பரிமாற்றத்தில் ரஷ்யப் புரட்சியின் இலட்சியங்களுக்கு தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள பிணைப்பு என்ற “எந்திரத்தை” அழிப்பதில் காணும் சிரமங்கள் குறித்து Albalkin Afanasyev இடம் அனுதாபத்துடன் தெரிவித்தார், “ஒரு எந்திரத்தை இன்னொரு எந்திரத்தால் தான் எதிர்கொள்ள முடியும்.”

நோர்த் இந்த கலந்துரையாடல் குறித்து இவ்வாறு எழுதினார்:

பெரெஸ்த்ரோய்க்காவின் இரண்டு முன்னணி ஆதரவாளர்கள், காலி போத்தல்களுடன் போதையில் பிதற்றிக் கொண்டிருக்கும் இரண்டு நாட்டைவிட்டு வெளியேறிய கனவான்களைப் போல, பழைய ரஷ்ய தாயைப் பற்றியும், அது இழந்துபோன தலைமை சிற்பிகளையும், மற்றும் உடைமையாளர் உணர்வை கொண்ட மக்களைக் குறித்தும் புலம்புகின்றனர். பிரச்சினை, ரஷ்யாவின் வெகுஜனங்கள் தான் என்று, அவர்கள் முடிவுரைக்கின்றனர். அக்டோபர் புரட்சியின் இலட்சியங்கள் அவர்களது உளவியலில் ஊடுருவியிருக்கிறது. அவர்கள் முதலாளித்துவத்தின் “சமூக விளைநிலம்” மீண்டும் எழுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை.

இந்த நோய்பீடித்த உரையாடல் பெரெஸ்த்ரோய்க்காவின் ‘கறுப்பு நூற்றவர்’ (‘Black Hundred’) சித்தாந்தவாதிகளுக்கு உயிரூட்டுகின்ற கடுமையான கம்யூனிச-விரோதத்தின் ஒரு உறையச்செய்யும் வார்த்தைவடிப்பாக இருக்கிறது. பெரெஸ்த்ரோய்க்காவின் எதிர்ப்புரட்சிகர இலக்குகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பாரிய அளவில் வன்முறை ஒழுங்கமைக்கப்படுவதை கோருவதற்கு நேரம் மட்டுமே முடிவாகாதிருக்கிறது என்பது அதிகாரத்துவத்திற்குள்ளாக உணரப்பட்டே இருக்கிறது என்பது இந்த உரையாடலில் பிரதிபலிக்கிறது. இரண்டு கலந்துரையாடல்தாரிகளும் உடன்படுகின்றவாறாக: ’ஒரு எந்திரத்தை இன்னொரு எந்திரத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.’ [21]

ICFI இன் பகுப்பாய்வு மற்றும் அதில் இருந்து பிறந்த அரசியல் முடிவுகளை சுருங்கக் கூறும்விதமாக நோர்த் எழுதினார்:

உலகப் பொருளாதாரத்தில் சோவியத் ஒன்றியத்தின் நிலையை பரிசீலிக்கையில், சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ உலகச் சந்தையால் அதன் மீது திணிக்கப்பட்ட பொருளாதார தனிமைப்படலை எவ்வாறு உடைக்கப் போகிறது என்பதே அத்தியாவசியமான கேள்வியாக இருக்கிறது. இரண்டே வழிமுறைகள் தான் சாத்தியம்: உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒரு புரட்சிகரக் கூட்டணியை உருவாக்குவது, இல்லையேல் உலக முதலாளித்துவத்தின் இப்போதைய பொருளாதார கட்டமைப்பிற்குள்ளாக சோவியத் ஒன்றியத்தை ஒருங்கிணைப்பது. முதலாவது வழி உலக சோசலிசப் புரட்சியின் வழியாகும்; இரண்டாமாவது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியின் வழியாகும். கோர்பசேவ் பின்பற்றிச் சென்று கொண்டிருப்பது இரண்டாவது வழியை ஆகும்...

சோவியத்தின் வெகுஜனங்களுக்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான உண்மையான மோதல் இப்போதும் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறது. அந்த மோதலானது வருகையில், சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியானது, அனைத்து இந்த அதிகாரத்துவ கும்பல்களிடம் இருந்தும் முற்றிலும் சுயாதீனப்பட்டு நிற்கின்றதும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கியாலும் நான்காம் அகிலத்தாலும் நடத்தப்பட்ட நெடிய போராட்டத்தின் படிப்பினைகளை முழுமையாக உட்கிரகித்திருக்கும் ஒரு நனவான புரட்சிகரத் தலைமை அபிவிருத்தி காண்பதில் தங்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் அனைத்துலகக் குழுவின் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் சோவியத் பிரிவினைக் கட்டியெழுப்புவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். [22]

சோவியத் ஒன்றியத்தில் அனைத்துலகக் குழுவின் தலையீடு

கோர்பச்சேவ் மற்றும் ஸ்ராலினிச நெருக்கடி குறித்த பகுப்பாய்வு, மற்றும் சோவியத் ஒன்றியத்தில் தலையீடு செய்வதற்கு எடுக்கப்பட்ட நடைமுறை நடவடிக்கைகள் ஆகியவை, உடைவில் இருந்து வெளிவந்த பின்னர், முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியிலான புதிய கட்டம் குறித்து அனைத்துலகக் குழு செய்த ஆழமான சர்வதேச பகுப்பாய்வின் மூலம் வழிநடத்தப்பட்டன. பூகோளமயமாக்கத்தின் வெகு ஆழமான தாக்கங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையில் தீவிரமடைந்த மோதல் ஆகியவை குறித்த புரிதல் இந்த பகுப்பாய்வின் மையத்தில் இருந்தது.

முதன்முதலில் அதன் 1988 சர்வதேச முன்னோக்குகள் ஆவணத்தில் எடுத்துரைக்கப்பட்ட இந்த கட்டமைப்பு நிலைமையானது, ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவானது இறுதியில் ஒட்டுமொத்தமாக தேசிய-அரசு அமைப்புமுறையின் ஆழமடைந்து சென்ற நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகவே இருந்தது என்பதையும், வெளியுலகத்திலிருந்து மூடப்பட்ட, தேசிய தன்னிறைவுத் தன்மையின் காரணத்தினால் மிகவும் பலவீனமாய் இருந்த பொருளாதாரங்களில் அது தனது ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அனைத்துலகக் குழுவிற்கு இயலுமானதாக்கியது.

இந்த புரிதலானது ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவானது, அவை தன்னளவில் தொழிலாள வர்க்கத்திற்கு தீவிரமான பின்னடைவுகளாக இருந்தபோதிலும், அவை ஒட்டுமொத்த ஏகாதிபத்திய போருக்குப் பிந்தைய ஒழுங்கு அதன் மிகப் பலவீனமான இணைப்புகளில் உடைவினை குறித்தது என்பதை அனைத்துலகக் குழு, அனைத்துலகக் குழு மட்டுமே, புரிந்து கொள்ள வழிவகுத்தது. இந்த பாரிய அபிவிருத்தியானது “வரலாற்றின் முடிவு”, “சோசலிசத்தின் மரணம்”, அல்லது “தாராளவாத முதலாளித்துவத்தின் வெற்றி” என்பவற்றுக்கு கட்டியம் கூறுவதெற்கெல்லாம் வெகுதூரத்தில், ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான பதட்டங்கள் துரிதமாகவும் வன்மையாகவும் தீவிரமடைவதற்கும் உலகப் போரை நோக்கிய ஒரு புதிய முனைப்புக்குமான ஒரு முன்நிகழ்வாக இருந்தது. புரட்சிகர சமூகக் கொந்தளிப்புகளது ஒரு புதிய காலகட்டத்திற்கும் அது கட்டியம் கூறியது.

மேலும், ஸ்ராலினிச ஆட்சிகளது பொறிவுமே கூட, தேசிய வேலைத்திட்டங்களின் அடிப்படையிலான அத்தனை தொழிலாளர் அதிகாரத்துவங்களது ஒரு பரந்த பொறிவின் பகுதியாகவே இருந்தது. தொழிலாள வர்க்கமானது, அதன் மிக அடிப்படை நலன்களை பாதுகாக்க, தனது போராட்டங்களை ஒரு சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்; அந்த முன்னோக்கிற்கு உருவடிவம் கொடுத்த ஒரேயொரு அமைப்பாக ICFI மட்டுமே இருந்தது. இதுதான் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரிய புரட்சிகர சாத்தியத்திறனுக்கும் மற்றும் அது முகம் கொடுக்கும் சவாலுக்கும் காரணமாக உள்ளது.

அனைத்துலகக் குழுவில் இருந்து WRP வெளியேற்றப்பட்டதில் வெளிப்பாட்டை கண்ட தேசிய-சந்தர்ப்பவாத WRP தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமும் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வெற்றியும் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் பெருகிய நெருக்கடிக்குள் நான்காம் அகிலம் தலையீடு செய்வதை சாத்தியமாக்கியதோடு, அதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கத்தையும் அளித்தது. இந்த நாடுகளில் தலையீடு செய்வதற்கும், முன்னேறிய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு வென்றெடுப்பதற்கும், ICFI இன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்குமான எந்த சிரத்தைமிக்க போராட்டத்தையும் முடக்குவதற்கு WRP அதன் செல்வாக்கை பயன்படுத்தி வந்திருந்தது. சர்வதேசியவாதம், உலகக் கட்சி, ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை தொடர்பில், அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மையால் நடத்தப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடு குறித்த அடிப்படைப் பிரச்சினைகள் மீதான அரசியல் தெளிவுபடுத்தல், IC இன் தலையீட்டுக்கான அடிப்படையை வழங்கியது.

சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அனைத்துலகக் குழுவின் தலையீட்டின் வரலாறு பெருந்தொகுதி கொண்டதாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் அது ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது. பல தசாப்தங்களில் முதன்முறையாக, ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டமும் கோட்பாடுகளும், மற்றும் அக்டோபர் புரட்சியின் உண்மையான பாரம்பரியமும் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டன. சோவியத் தொழிலாள வர்க்கமும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் இருந்த தொழிலாளர்களும் அக்டோபரின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துடனான அடித்தளங்களுடன் கொண்டிருந்த வரலாற்று மற்றும் அரசியல் பிணைப்புகளை மறுஸ்தாபிதம் செய்வதற்கான போராட்டமே இத்தலையீட்டின் மைய இழையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் இந்த அடிப்படையில் தான், அனைத்துலகக் குழுவானது, முன்னேறிய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு கல்வியூட்டுவதற்கும், மற்றும் ICFI இன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் விழைந்தது.

அனைத்துலகக் குழு 1989க்கும் 1992க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு மூன்றுமுறை விஜயம் செய்தது. தோழர் நோர்த் 1989 நவம்பரில் சோவியத் ஒன்றியத்தில் இரண்டு வாரங்கள் செலவிட்டார், மாஸ்கோ மற்றும் லெனின்கிராட்டுக்கு விஜயம் மேற்கொண்டார், அதன்பின் மீண்டும் 1991 அக்டோபரில் சோவியத் ஒன்றியம் சென்றபோது மாஸ்கோ மற்றும் கியேவ் இல் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தினார். தோழர் நிக் பீம்ஸ் 1990 அக்டோபரில் மாஸ்கோ, எல்வோவ் மற்றும் கியேவ் க்கு விஜயம் செய்தார்.

நெருக்கடியின் இந்த கட்டத்தில் அங்கே மாபெரும் அரசியல் மற்றும் புத்திஜீவித ஆர்ப்பரிப்பு இருந்தது; அத்துடன் ட்ரொட்ஸ்கியின் ஆளுமையில் மாபெரும் ஆர்வமும் இருந்தது. தோழர் நோர்த், 1989 நவம்பர் 13 அன்று, மாஸ்கோ வரலாற்று ஆவண காப்பக நிறுவனத்தில், அங்கிருந்த ஆசிரியர் குழு அழைப்பின் பேரில், உரையாற்றினார், அத்துடன் 1989 நவம்பர் 14 அன்று, மாஸ்கோவில் மாணவர்களது அழைப்பின் பேரில் “விஞ்ஞானபூர்வ கம்யூனிசம்” மீதான ஒரு கருத்தரங்கிலும் பங்கேற்றார். 1991 இல் சோவியத் ஒன்றியம் சென்றபோது அவர் கியேவ் இல் பேசினார். 1990 இல் கியேவ் இல் நிக் பீம்ஸ் ஒரு உரை நிகழ்த்தினார்.

1988 தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு நான்காம் அகிலத்தின் புல்லட்டின் இதழை IC ரஷ்ய மொழியில் பிரசுரித்தது. நான்காம் அகிலம் இதழின் 1990 முதல் 1992 வரையான தொகுதிகள், துரிதமான அபிவிருத்திகளை மிகக் கவனமாக மார்க்சிச பகுப்பாய்வை உள்ளடக்கி, அரசியல் புரட்சி மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை எடுத்துரைக்கின்றதாகவும் இருந்த, சோவியத் தொடர்புகளுடனான விரிவான கலந்துரையாடல்கள், அத்துடன் அறிக்கைகள், கட்டுரைகள், தர்க்கவிவாதங்கள், மற்றும் விவாத எழுத்துவடிவங்களைக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை ஸ்தாபிப்பதற்கு அவசியமான ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை இந்த வேலை அமைத்துத் தந்தது. அதன் மிக உடனடி விளைவுகளாக தோழர் விளாடிமிர் வென்றெடுக்கப்பட்டமையும் வாடிம் ரோகோவின் உடன் கூடிவேலை செய்வதற்கு முனைந்ததும் இருந்தன. ரோகோவினுடனான இந்த கூட்டுவேலையின் விளைவாக சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக இடது எதிர்ப்பாளர்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் போராட்டத்தை ஆய்வு செய்த அங்கே ஒரு மாற்றீடு இருந்ததா?’ என்ற ரோகோவினின் ஏழு-தொகுதி பெரிய மாபெரும் ஆய்வு வெளிவந்தது.

1989 நவம்பர் 13 அன்று, மாஸ்கோ வரலாற்று ஆவண காப்பக நிறுவனத்தில் “சோசலிசத்தின் வருங்காலம்: ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு” குறித்து டேவிட் நோர்த் விரிவுரை வழங்குகிறார்

1989 நவம்பர் 13 அன்று மாஸ்கோ வரலாற்று ஆவண காப்பக நிறுவனத்தில் தோழர் நோர்த் வழங்கிய விரிவுரை நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாய் இருந்தது. “சோசலிசத்தின் வருங்காலம்: ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு” என்ற தலைப்பிலான அந்த விரிவுரையை ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது ஜன அங்கத்தவர்கள் செவிடுமடுத்தனர்.

அதன்பின்னர், மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தில் ட்ரொட்ஸ்கியின் கண்ணோட்டங்களை மேலும் விளக்குவதற்காக “விஞ்ஞானபூர்வ கம்யூனிசம்” குறித்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள மாணவர்கள் நோர்த்தை கேட்டுக் கொண்டனர். அந்த கருத்தரங்கு 1989 நவம்பர் 14 அன்று நடத்தப்பட்டது.

நோர்த் அவரது உரையின் போது, ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தின் ஒரு எதிரியாக இருந்தார் என்றும் ஹிட்லரின் முகவராக இருந்தார் என்றுமான ஒரு கொடூரமான ஸ்ராலினிச பொய் மதிப்பிழந்து போயிருந்ததை வரவேற்றார், எனினும் ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினுக்கும் இடையில் கோட்பாட்டுரீதியில் எந்த வித்தியாசங்களும் இருக்கவில்லை என்றும், ட்ரொட்ஸ்கி ஜெயித்திருந்தாலும் அது சோவியத் ஒன்றியத்தின் பரிணாம வளர்ச்சியை எந்த முக்கியமான விதத்திலும் மாற்றியிருந்திருக்கப் போவதில்லை என்றுமான ஒரு புதிய பொய் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அந்த விவரிப்பின் படி, ஸ்ராலினிசமானது அக்டோபர் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருளாய் இருந்தது.

கோர்பச்சேவின் கொள்கைகளது முக்கியத்துவத்திற்கு திரும்பும் முன்னதாக, நோர்த், ஸ்ராலினுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தினது வரலாற்று மற்றும் அரசியல் அடித்தளங்களையும், உருக்குலைந்த மற்றும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளில் அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் புரட்சி எனும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தையும் விளக்கினார். சோவியத் ஒன்றியத்திலான இப்போதைய நெருக்கடியும் கோர்பச்சேவின் “சீர்திருத்த”ங்களும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் திவால்நிலையை ஏற்றுக்கொள்வதிலிருந்து வந்தவையாகும்.

அவர் கூறினார்:

இந்தப் பிரச்சினை முதன்முதலாக எழுப்பப்பட்டு அறுபத்தி-ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், தீர்மானகரமான கேள்வியாக அது இப்போதும் இருக்கின்றது. ‘தனியொரு நாட்டில் சோசலிசம்’ என்பது இப்போது முதலாளித்துவ மீட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் சமூக மட்டத்திலான ஒரு படுபயங்கர வீழ்ச்சி என்றே அர்த்தமளிக்கிறது. அதற்கான ஒரே மாற்றீடு சர்வதேச புரட்சி மட்டுமே.[23]

அடுத்த நாளில் மாஸ்கோ மாணவர்களுடன் நடந்த உயிரோட்டமான மற்றும் சமயங்களில் பரபரப்பாக நடந்த அந்த விவாதத்தில், நோர்த் சோவியத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமை அபிவிருத்தி காண்பதிலான ஒரு மையமான பிரச்சினைக்க்கு கவனம் ஈர்த்தார். அவர் பிரகடனப்படுத்தினார்:

நீங்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறீர்கள், அதனை எவரும் நிறுத்த அனுமதிக்க மாட்டீர்கள். ஆயினும் நான் ஒரு விமர்சனத்தை செய்யவியலும் என்றால் சொல்கிறேன், நீங்கள் இப்போதும் விடயங்களை மிகவும் எளிமையான தேசிய கட்டமைப்பினுள்தான் காணத் தலைப்படுகிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். அரசாங்கம் பல தசாப்தங்களுக்கு உங்கள் மீது தனிமைப்படலைத் திணித்து வந்திருக்கும் மட்டத்திற்கு இது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆயினும் அபிவிருத்திகளை ஒரு சர்வதேச கட்டமைப்பினுள் காண்பது முக்கியமாகும்; சோவியத் ஒன்றியத்துக்குள்ளான நிகழ்வுகளை வெறுமனே ஒரு சோவியத் நெருக்கடியினது பகுதியாக அல்லாமல் ஒரு உலக நெருக்கடியின் பகுதியாகப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். [24]

அதேமாதத்தின் ஆரம்பத்தில், ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு மற்றும் அவற்றின் முதலாளித்துவ மீட்சி வேலைத்திட்டத்திற்கு முட்டுக்கொடுப்பதில் பப்லோவாதத்தின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரமானது நவம்பர் 4 அன்று நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் சுருங்க வெளிப்பட்டிருந்தது. அந்த நாளில், ICFI இன் ஜேர்மன் பிரிவான அப்போது சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter) என்று அழைக்கப்பட்ட BSA, கிழக்கு பேர்லினில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தில் தலையீடு செய்தது. “SED அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவோம்! தொழிலாளர் சபைகளை அமைப்போம்!” என்று தலைப்பிட்ட மத்திய குழுவின் அறிக்கையினது ஆயிரக்கணக்கான பிரதிகளை BSA விநியோகித்தது.

அதனையடுத்து SED (கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிசக் கட்சி) ஏர்னெஸ்ட் மண்டேலுக்கு அழைப்பு விடுத்தது, அதன் இளைஞர் அமைப்பின் செய்தித்தாளான Junge Welt இல் அவரை நேர்காணல் செய்தது. மண்டேலை அந்த செய்தித்தாள் “ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் முன்னணி தத்துவாசிரியர்” என்றபேரில் முன்வைத்தது, நவம்பர் 4 அன்று BSA ஆல் விநியோகிக்கப்பட்ட அறிக்கை குறித்து அவரிடம் வெளிப்படையாகக் கேட்டது. மண்டேல் அந்த அறிக்கையை “விவேகமல்லாதது” என்றும் “வெளியில் இருந்தான குறுக்கீடு” என்றும் கூறி கண்டனம் செய்தார்.

இதனிடையே, DDR க்குள்ளாக “ஜனநாயக சோசலிஸ்டுகள்” இல் இருந்த அவரது ஆதரவாளர்கள் SED உடன் ஒரு பொது அரசாங்கம் உருவாக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.

அதே Junge Welt நேர்காணலில், மண்டேல் கோர்பச்சேவ் குறித்து இவ்வாறு கூறினார்:

“கிளாஸ்னோஸ்ட்” இன் சாதனைகளது கருவை சோவியத் தொழிலாள வர்க்கம், சோவியத் மக்கள், சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மற்றும் உலகின் அத்தனை ஜனநாயக சக்திகளுக்கான ஒரு முன்னோக்கிய பெரும் அடியாக, அதன் அத்தனை எதிரிகளுக்கும் எதிராக அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்று பார்க்காமல் விடுவோமானால் அது ஒரு அபாயகரமான அரசியல் குருட்டுத்தனமாக, தன்மயக்கமாக அல்லது வெறியாக எனக்கு தெரிகின்றது. [25]

முதலாளித்துவ மீட்சிக் கொள்கைகளுக்கும் அதிகாரத்துவத்தின் ஆட்சிக்கும் சோவியத் ஒன்றியத்தின் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தில் எழுந்த பாரிய எதிர்ப்பின் பல வெளிப்பாடுகள் அங்கே இருந்தன. ஆயினும் எந்தவிதத்திலும் நெருக்கடியின் விளைவு என்னவாக இருக்கப் போகிறது என்பது அங்கே தெளிவாக இருந்திருக்கவில்லை.

சோவியத் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், ஜூலை 1989

சோவியத் சுரங்கத் தொழிலாளர்கள் 1989 ஜூலையில் சோவியத் ஒன்றியம் எங்கிலும் வேலைநிறுத்தம் செய்தனர், கூட்டுற்பத்தி நிறுவனங்களை ஒழிப்பது மற்றும் அதிகாரத்துவத்தின் சலுகைகளுக்கு முடிவுகட்டுவது உள்ளிட அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் கோரிக்கைகளை எழுப்பினர். வேலைப் புறக்கணிப்பை ஒழுங்கமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஆதரவை அணிதிரட்டுவதற்கும் அவர்கள் வேலைநிறுத்த கமிட்டிகளை உருவாக்கினர்.

கோர்பச்சேவ் பெய்ஜிங் சென்று, ஜூன் 4 அன்று தியானென்மென் சதுக்கத்தில் தொடங்கிய மாவோயிச ஆட்சியின் இரத்தக்களரியான வெகுஜன ஒடுக்குமுறையில் உச்சம்கண்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது அலையை நேரிலேயே பார்த்து, திரும்பியிருந்த பின்னர் தான் இந்த வேலைநிறுத்தம் வெடித்திருந்தது.

போலந்து மற்றும் பிற ஸ்ராலினிச-ஆட்சி நாடுகளிலும் பாரிய விலையேற்றங்கள், தனியார்மயமாக்கம் மற்றும் வேலைநிறுத்த-தடுப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் நடந்தன.

வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழு 1989 ஜூலை 21 தேதியிட்ட Bulletin இல் வெளியான அறிக்கை, சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சியால் எழுப்பப்பட்ட அடிப்படையான வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகளை விளக்கியதுடன், அரசியல் புரட்சி மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தையும் அது முன்னெடுத்தது. அது கூறியது:

சோவியத் வேலைநிறுத்த அலையானது பரந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் ஏற்கனவே ஜாரிச எதேச்சாதிகாரத்தை முதன்முதலில் சவால் செய்த 1905 புரட்சி, ஜாரிசத்தை தூக்கிவீசிய 1917 பிப்ரவரி புரட்சி, முதலாளித்துவ ஆட்சியை தூக்கிவீசி முதலாவது தொழிலாளர் அரசை ஸ்தாபித்த 1917 அக்டோபர் புரட்சி என மூன்று புரட்சிகளை செய்திருந்த ரஷ்ய மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான புரட்சிப் பாரம்பரியங்களது மறுமலர்ச்சி என்றே அர்த்தபடுகின்றது.

போல்ஷிவிக் புரட்சி தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த புரட்சிகர சர்வதேசியவாத வேலைத்திட்டம் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்குள் மீண்டும் மறுமலர்ச்சி காண்கிறது என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது.[26]

ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாறு தொடர்பாகவும் அதன்பின் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் கட்டவிழ்ந்து கொண்டிருந்த அபிவிருத்திகள் தொடர்பாகவும் நான்காம் அகிலம் ஜனவரி-ஜூன் 1990 பதிப்பில் வெளியான கட்டுரைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அனைத்துலகக் குழுவின் தலையீட்டின் தீவிரத்தையும், அது உருவாக்கிய அரசியல் அறிவுத்திரட்டின் செல்வத்தையும் ஒருவர் உணர்ந்து கொள்ள ஏதுவாகும்:

  • லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டது முதலான ஐம்பது ஆண்டுகள்
  • கிழக்கு ஜேர்மனியிலான (GDR) நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
  • கிழக்கு ஜேர்மன் தேர்தலைத் தொடர்ந்து: தொழிலாள வர்க்கம் கூர்மையான தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கிறது
  • வரலாற்று ஆவண காப்பக நிறுவனத்திலான விரிவுரை
  • சோவியத் மாணவர்களுடன் மார்க்சிசம் குறித்த ஒரு விவாதம்
  • ஒரு சோவியத் செய்தியாளரிடம் இருந்தான எட்டு கேள்விகளுக்கு பதிலளிப்பு
  • இரண்டு சோவியத் இளைஞர்களுடனான ஒரு நேர்காணல்
  • ஒரு சோவியத் வரலாற்றாசிரியருடனான நேர்காணல்
  • ஒரு சோவியத் இளைஞருக்கு கடிதம்
  • ஏகாதிபத்தியம் அதன் பலவீனமான இணைப்பில் முறிகிறது
  • ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கும்
  • தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர சர்வதேசிய வேலைத்திட்டம் தேவை
  • ஏர்னெஸ்ட் மண்டேல் ஸ்ராலினிசத்தைப் பாதுகாக்கிறார்
  • செக்கோஸ்லாவாக்கியாவில் அடுத்து என்ன?
  • ஆண்ட்ரூ சகரோவ் (1921-1989) ஸ்ராலினிசத்தின் ஒரு தாராளவாத விமர்சகர்
  • பாக்குவில் ஸ்ராலினிச இரத்தஆறு
  • முதலாளித்துவ சொத்துடைமையை கோர்பச்சேவ் சட்டபூர்வமாக்க இருக்கிறார்
  • ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் பொறிவுக்கு முகம்கொடுக்கின்றன

சோவியத் ஒன்றியத்தில் இருந்த மாணவர்கள், தொழிலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் ICFIக்கும் இடையில் அபிவிருத்தி கண்டு வந்த விரிவான தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு மாதிரியை 1991 கோடை-இலையுதிர்கால நான்காம் அகிலம் இதழ் வழங்கியது. ஒரு சோவியத் இளைஞர், ஒரு சோவியத் கல்வியாளர், Vorkuta இன் ஒரு தொழிலாளி, கியேவ் நகரில் இருந்தான ஒரு தொழிலாளி மற்றும் கிரோவ் இல் இருந்தான ஒரு செய்தியளிப்பாளர் ஆகியோரிடம் இருந்தான கடிதங்கள் —அனைத்தும் டேவிட் நோர்த் அளித்த பதில்களுடன்— மற்றும் ஒரு சோவியத் வரலாற்றாசிரியரிடம் இருந்தான கட்டுரைப் பங்களிப்பு —அதற்கும் நோர்த்தின் ஒரு விரிவான பதில் உடன்— ஆகியவை பிரசுரிக்கப்பட்டன. கியேவ் நகரில் உள்ள கற்பிப்பதற்கான வெளிநாட்டு மொழி நிறுவனத்தில் (Pedagogical Foreign Language Institute) பீம்ஸ் வழங்கிய ஒரு விரிவுரையும் அத்தொகுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்த கருத்துப் பரிமாற்றங்களில் ஆர்வம்மிக்க மற்றும் எடுத்துக்காட்டான உள்ளடக்க செல்வத்தின் ஒரு திரட்சியே இருக்கிறது, என்றபோதும் இந்த விரிவுரையின் நோக்கங்களுக்காக, 1990 ஆகஸ்டு 14 அன்று சோவியத் இளைஞர் ஒருவரிடம் இருந்து வந்த ஒரு கடிதத்திற்கு தோழர் நோர்த் வழங்கிய ஒரு பதிலில் இருந்தான ஒரு மேற்கோளை மட்டும் நான் மேற்கோளிடுகிறேன்:

சோவியத் ஒன்றியத்தின் அளவுக்கு வேறெந்த நாட்டிலும் மார்க்சிசம் இத்தனை தாட்சண்யமற்று பொய்மைப்படுத்தப்படவும் ஒடுக்கப்படவுமில்லை. இந்தக் காரணத்திற்காகவே, தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் மகத்தான புரட்சிகர, உண்மையான போல்ஷிவிக், பாரம்பரியங்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் அரசியல் பிணைப்புகளை மீண்டும் புடம்போட்டு உருவாக்குவது சோவியத் ஒன்றியத்தில் சோசலிஸ்டுகள் முகம்கொடுக்கின்ற மாபெரும் கடமையாக இருக்கிறது. ஸ்ராலினிசம் மார்க்சிசத்தின் விளைபொருளாக வந்ததென்றும் அதிகாரத்துவத்தின் குற்றங்கள் போல்ஷ்விக் புரட்சியில் இருந்து இயல்பாகவும் தவிர்க்கவியலாமலும் எழுந்ததாகும் என்றும் கூறுவது மிகப் படுபயங்கரமான பொய்யாகும், அதற்கு எதிராக நாம் நமது அத்தனை வலிமையுடனும் போராடியாக வேண்டும்...

கடந்த 67 ஆண்டுகளில் மார்க்சிசத்தின் வரலாறு என்பது ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாறே ஆகும்! [27]

அமைப்புமுறை மீது அதிருப்தியுற்றிருந்த இளைஞர்கள் மத்தியில் ஒருசாராரை தனக்குப் பின்னால் கொண்டு வந்திருந்த, சந்தர்ப்பவாத ட்ரொட்ஸ்கிச-விரோத போரிஸ் ககார்லிட்ஸ்கியின் அரசியல் மீதான ஒரு கூர்மையான அம்பலப்படுத்தலையும் அதே கடிதம் கொண்டிருக்கிறது.

1991 அக்டோபர் 3 அன்று, கிரெம்ளின் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை உத்தியோகபூர்வமாக கலைப்பதற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவானதொரு சமயத்தில், உக்ரேன் தலைநகரான கியேவ் நகரில் இருந்த ஒரு தொழிலாளர்’ மன்றத்தில் டேவிட் நோர்த் வழங்கிய ஒரு விரிவுரை, தொழிலாள வர்க்கத்திற்கு முதலாளித்துவ மீட்சி கொண்டுவரவிருந்த பேரழிவுகரமான பின்விளைவுகள் குறித்த ஒரு துல்லியமான மற்றும் தீர்க்கதரிசனமான முன்னெச்சரிக்கையை வழங்கியது. சோவியத் ஊடகங்களில், நீண்டகால ஸ்ராலினிச கைக்கூலிகள் மற்றும் மாஸ்கோ ஆட்சியின் குற்றங்களது வக்காலத்துவாதிகளிடம் இருந்து, மேற்கில், குறிப்பாக அமெரிக்காவில், முதலாளித்துவத்தின் அற்புதங்கள் குறித்த முடிவற்ற பேச்சு இருந்து வந்ததன் மத்தியில், நோர்த் கூறினார்:

முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், வலது-சாரி ‘ஜனநாயக’ கட்சியினர், மற்றும் தேசியவாதிகள் மத்தியிலான கழிசடை பொருளாதார அறிஞர்களைப் பொறுத்தவரை, ரஷ்யாவிலும் உக்ரேனிலும் முதலாளித்துவத்திற்கு திரும்புவதன் மரணகரமான தாக்கங்களின் மட்டத்தை அவர்கள் ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்புகின்றபோதும், ரஷ்யாவும் உக்ரேனும் மற்ற “மூன்றாம் உலக” நாடுகளைப் போன்றவை அல்ல என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். ஓரளவுக்கு உண்மை தான்: அவை இரண்டுமே ஒரு பாரிய தொழிற்துறை உள்கட்டமைப்பையும் எந்த மற்ற “வளரும்” நாட்டினது வெகுஜனங்களும் அறிந்திராத மட்டத்திற்கான ஒரு சோசலிசக் கலாச்சார மட்டத்தையும் கொண்டிருக்கின்றன. ஆனால் அங்கேதான் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் குடியரசுகளது பிரத்தியேகமான சங்கடநிலையும் அமைந்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, என்றோ வருங்காலத்தில் ஏதோவொரு தெரியாத தேதியில், பாரிய வறுமையில் இருந்து ஒரு தப்பிப்பிழைப்பை வழங்கப் போவதாகச் சொல்லி நவீன தொழிற்துறை பொருளாதாரங்களை உருவாக்குவதற்கான ஒரு வழிவகையாக, முதலாளித்துவ அபிவிருத்தி அங்கே தத்துவார்த்தரீதியாக —அது நியாயப்படுத்தப்பட இயலுகின்ற மட்டத்திற்கு— “நியாயப்படுத்தப்படுகிறது”. இந்த வக்காலத்து, உண்மைகளை விடவும் பிரமைகள் மற்றும் கட்டுக்கதைகளையே தனக்கான அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மை ஒருபக்கம் இருக்க, சோவியத் ஒன்றியத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நாட்டில், ஏற்கனவே இருக்கும் உற்பத்தி சக்திகளையும் அவற்றைச் சார்ந்திருக்கின்ற சமூக-கலாச்சார நிறுவனங்களையும் பரவலாக அழிப்பதன் அடிப்படையில் மட்டுமே முதலாளித்துவ மீட்சி நடந்தேற முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சோவியத் ஒன்றியத்தை உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்புக்குள்ளாக ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஒருங்கிணைப்பதென்பது, ஒரு பின்தங்கிய தேசியப் பொருளாதாரம் மெதுவாக அபிவிருத்தி காண்பதை அல்ல, மாறாக குறைந்தபட்சம் தொழிலாள வர்க்கத்திற்கேனும், மூன்றாம் உலக நாடுகளை விடவும் முன்னேறிய நாடுகளில் நிலவுகின்ற வாழ்க்கைத் தரங்களுக்கு நெருக்கமான வாழ்க்கைத் தரங்களை காப்பாற்றி வந்திருக்கும் ஒன்று துரிதமாக அழிக்கப்படுவதையே அர்த்தமளிக்கும். [28]

ஒரு முதலாளித்துவ அடிப்படையில் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து சுதந்திரத்திற்காக அப்போது கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த உக்ரேன் உள்ளிட்ட பல்வேறு குடியரசுகளில் அதிகாரத்துவங்களுக்குள் நீண்டகாலம் இருந்தவர்கள் உள்ளிட்ட தேசியவாதிகளின் வாதங்களுக்கு எதிராக, நோர்த் விளக்கினார்:

குடியரசுகளில், புதிய “சுதந்திர” அரசுகளை உருவாக்குவதில் தான் அத்தனை பிரச்சினைகளுக்குமான தீர்வு அமைந்திருப்பதாக தேசியவாதிகள் பிரகடனம் செய்கின்றனர். கேட்க அனுமதியுங்கள், யாரிடம் இருந்து சுதந்திரம்? மாஸ்கோவில் இருந்து “சுதந்திரம்” பிரகடனம் செய்கின்ற தேசியவாதிகள் அவர்களது புதிய அரசுகளின் வருங்காலம் தொடர்பான உயிர்வாழ்விற்கான முடிவுகளை ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கரங்களில் ஒப்படைப்பதற்கு மேலாய் வேறு எதுவும் செய்ய முடியாது. கிராவ்சக் வாஷிங்டனுக்கு செல்கிறார், அங்கே ஜனாதிபதி புஷ் அவருக்கு உரையாற்ற அவர் பள்ளிச்சிறுவன் போல் பவ்யமாய் தனது இருக்கையில் அமர்ந்திருக்கிறார்...

அப்படியானால், சோவியத் ஒன்றியத்தின் உழைக்கும் மக்கள் பின்பற்றிச் செல்ல வேண்டிய பாதை என்ன? மாற்றுவழி என்ன? புரட்சிகர சர்வதேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வழி மட்டுமே ஒரே தீர்வாகும். தேசியவாதிகளின் பேரினவாத கிளர்ச்சியூட்டல் ஒரு போலித்திரையாக இருக்கும் முதலாளித்துவத்திற்குத் திரும்புவதென்பது ஒடுக்குமுறையின் ஒரு புதிய வடிவத்திற்கு மட்டுமே இட்டுச் செல்ல முடியும். சோவியத்தின் தேசியங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏகாதிபத்தியத்திடம் தலைவணங்கியபடியும் முழந்தாளிட்டும், பிச்சைகளுக்கும் சலுகைகளுக்கும் இறைஞ்சி நிற்பதைக் காட்டிலும், அத்தனை தேசியங்களையும் சேர்ந்த சோவியத் தொழிலாளர்கள், உண்மையான சோசலிச சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கோட்பாடுகளது அடிப்படையில் ஒரு புதிய உறவினை ஒன்றிணைத்து உருவாக்கி, இந்த அடிப்படையில் 1917 பாரம்பரியத்தைப் பாதுகாக்க பெறுமதியுள்ள அத்தனையையும் புரட்சிகரமாகப் பாதுகாக்க முன்வரவேண்டும். [29]

முடிவுரை

இந்த விரிவுரை சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சிக்கு எதிராக அக்டோபர் புரட்சியின் தேட்டங்களைப் பாதுகாப்பதில் ICFI ஆல் நடத்தப்பட்ட போராட்டத்தின் வரலாற்று உள்ளடக்கத்தை சுருக்கமாக கோடிட்டுக் காட்ட மட்டுமே செய்திருக்கிறது. கட்டுரைகளும், அறிக்கைகளும், விரிவுரைகளும், கருத்துப் பரிவர்த்தனைகளும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்டவை, அவை கவனமாக படிப்பதற்கு உரியவை ஆகும். WRP உடனான உடைவுக்குப் பிந்தைய காலத்தில், ICFI இன் முன்னோக்கு அபிவிருத்தி மற்றும் புரட்சிகர நடைமுறையில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக விளங்குகிறது.

இந்த அறிமுக உரையானது இதுபற்றி கற்றுக்கொள்வதற்கு வசதியானதாகவும் மற்றும் காரியாளர்களுக்கு கல்வியூட்டுவதிலும் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒரு துரித வளர்ச்சிக்கும், எதிர்வரவிருக்கும் வெடிப்பான வர்க்க யுத்தங்களுக்கும் அனைத்துலகக் குழுவை தயாரிப்பு செய்வதிலும் பங்களிப்பு செய்யும் என நான் நம்புகிறேன்.

Footnotes:

[1] Leon Trotsky and the Development of Marxism, Labor Publications, 1985, Detroit, p.5 and p. 18

[2] The Permanent Revolution, Pathfinder Press, 1969, New York, p. 146

[3] What is Happening in the USSR: Gorbachev and the Crisis of Stalinism, p. 8

[4] The Revolution Betrayed, Labor Publications, 1991, Detroit, pp.7–8

[5] In Defense of Marxism, Pathfinder Press, 1995, New York, pp. 67-68 and 73

[6] The Revolution Betrayed, p. 46

[7] Ibid., pp. 96–97

[8] The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International, Pathfinder Press, 1977, New York, pp. 184-85

[9] Fourth International, July–December 1989, p. iv

[10] News Line, June 24, 1983

[11] Letter from Gerry Healy to Arthur Scargill, April 29, 1985, How the Workers Revolutionary Party Betrayed Trotskyism, p. 108

[12] What is Happening in the USSR? Gorbachev and the Crisis of Stalinism, p. 1–2

[13] Ibid., p. 12

[14] Ibid., p. 13

[15] Ibid., p. 18

[16] Fourth International, September 1987, p.10

[17] Perestroika Versus Socialism, Labor Publications, 1989, Detroit, p. 10

[18] Fourth International, January–June 1990, p. vi

[19] Perestroika Versus Socialism, p. 49

[20] Ibid., pp. 64–65

[21] Ibid., p. 25

[22] Ibid., p. 63, p. 71)

[23] The USSR and Socialism, p.11

[24] Ibid., p. 25

[25] Fourth International, January–June 1990, p. 92

[26] Fourth International, July–December 1989, p. 18

[27] Fourth International, Summer–Fall 1991, p. 117

[28] Fourth International, Fall–Winter 1992, p. 109

[29] Ibid., p. 110

Loading