முன்னோக்கு

ட்ரம்ப் தனது சொந்த ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக்’ கொள்கைக்கு பலியாகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 வைரஸ் பரிசோதனையில் நோய் அவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளிக்கிழமை மாலை வால்டர் ரீட் மருத்துவ மையத்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். வெள்ளை மாளிகை வெளியிட்ட மிகக் குறைந்தளவு தகவல்களின்படி, அவருக்கு அன்று சோதனை மருந்துகளின் கலவை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து குறைந்தளவிலான காய்ச்சல் இருந்தமை அவரை மருத்துவமனைக்கு அனுப்பும் முடிவிற்கான முக்கிய காரணியாக இருந்தது.

ட்ரம்ப்பிற்கு கோவிட்-19 தொற்றியது அமெரிக்க மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளிடையே எந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான அறிகுறியே இல்லை. அன்புக்குரியவர்களை இழந்த அல்லது தாங்களே பலவீனப்படுத்தும் நோயிலிருந்து தப்பித்த உழைக்கும் மக்களிடையே, ட்ரம்ப் தனது நியாயமான தண்டனையையே பெறுகிறார் என்ற ஒரு சக்திவாய்ந்த உணர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வைரஸைக் குறைத்து மதிப்பிடுவதிலும், முககவசங்களின் பயன்பாட்டை இழிவுபடுத்துவதிலும் அவரது பங்கைக் கருத்தில் கொண்டால், அவர் கவனக்குறைவாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட ஒரு தீவைத்தவரைப் போன்றவராவார்.

கொரோனா வைரஸ் நோய் ட்ரம்ப்பிற்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டமையானது அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் சதித்திட்டத்திற்கு தலைமை தாங்க ட்ரம்ப் அணிதிரட்ட முயன்ற பாசிச சக்திகளுக்கு, இது தற்காலிகமாகவேனும் அவர்களது திட்டங்களை குழப்பியுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், தொற்றுநோயை எதிர்கொண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்குமான கொள்கையின் குற்றவியல் பொறுப்பற்ற தன்மையை இது நிரூபித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்படும் உண்மையான ஆபத்துக்களை மறுக்கமுடியாத விபரணம் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி, வெள்ளை மாளிகையில் மறைந்திருந்து, உதவியாளர்கள் மற்றும் இரகசிய சேவை முகவர்களின் இராணுவத்தால் சூழப்பட்டு, சிறந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் அணுகுதல் இருந்தபோதும் கோவிட்-19 இலிருந்து பாதுகாக்க முடியாது என்றால், வாகனத்துறை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் தொழிலாளர்கள் அல்லது வகுப்பறைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கொடிய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று எவ்வாறு கருதப்பட முடியும்?

ட்ரம்பின் நோயறிதல் அமசனின் அதன் அமெரிக்க ஊழியர்களில் 20,000 பேர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிவித்தலுடன் ஒன்றுகூடி வருகின்றது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸின் செல்வமானது, அனைத்து முதலாளித்துவ செல்வந்தர்களையும் போலவே, அதீத சுரண்டலுக்குட்பட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் அழிப்பதன் மூலமே குவிந்துள்ளது.

வால்டர் ரீட்டில் ஜனாதிபதிக்கான பங்களாவில் தங்கியிருந்து பகட்டான சிகிச்சை பெறும் ட்ரம்ப், அவர் தொடர்ந்தும் தனது பதவி அதிகாரங்களை கொண்டிருப்பதோடு ஒருதொகை மருத்துவப் பணியாளர்களால் கவனிக்கப்படுகின்றார். இது ட்ரம்ப் நிர்வாகத்தின் புறக்கணிப்பு, அலட்சியம் மற்றும் திறமையின்மை ஆகியவற்றால் அவர்களது துன்பம் அதிகரித்துள்ள மில்லியன் கணக்கான கோவிட்-19 நோயாளிகள் பெறும் சிகிச்சைக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒரு படுக்கை கிடைக்கும்வரை ட்ரம்ப் அவசர அறையில் மணிக்கணக்கில் காத்திருக்கவில்லை. தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளுக்கு பதிலாக குப்பை பைகள் அணிந்த செவிலியர்கள் அவரை கவனித்துக் கொள்ள மாட்டார்கள். அவரது நிலைமை மோசமடையுமானால் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் பிற சிறப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு பஞ்சமில்லை. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு மத்திய ஆட்சியால் நீட்டிக்கப்பட்ட வேலையின்மை சலுகைகள் வெட்டப்பட்டு ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவருக்கு ஒன்றுக்குமே குறைவிருக்காது.

இந்த நிகழ்வின் குறுகிய கால அரசியல் விளைவுகள் மிகவும் கணிக்க முடியாதவை. இது 74 வயதிலும் மற்றும் உடல்ரீதியாக பருமனான ட்ரம்ப் விரைவாக மீண்டுவர முடியுமா அல்லது இல்லையா என்பதையே பெருமளவில் பொறுத்துள்ளது. ட்ரம்பின் தொற்று லேசானதா அல்லது கடுமையானதா என்பதை அறிய பல நாட்கள் எடுக்கும். ட்ரம்பின் வயது, எடை மற்றும் பாலினத்தை கொண்ட நோயாளிகளுக்கு இறப்பு விகிதம் 3 இலிருந்து 11 சதவீதம் வரை உள்ளது.

ட்ரம்ப் மருத்துவமனையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டால், அன்றாட அரசியல் அதிகாரத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் ஒப்படைப்பது குறித்த கேள்வி எழுப்பப்படும். மிகவும் கடுமையான நோயானால், குறிப்பாக ட்ரம்பிற்கு செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்பட்டால், அமெரிக்க அரசியலமைப்பில் 25 வது திருத்தத்தை செயல்படுத்துவதற்கான கேள்வியை எழுப்புகிறது. இது ஜனாதிபதியின் இடத்தை பெரும்பான்மை அமைச்சரவை அங்கத்தவர்களின் ஆதரவுடன் துணை ஜனாதிபதி எடுக்க அனுமதிக்கிறது.

வெள்ளை மாளிகை வெளியிடும் எந்த தகவலையும் நம்பத்தக்கது என எடுக்க முடியாது. ட்ரம்ப் எவ்வளவு காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், அவர் எவ்வளவு காலம் தொற்றுக்குட்பட்டுள்ளார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது, மற்றும் வெள்ளை மாளிகை, காங்கிரஸ் மற்றும் பிரச்சார பேரணிகளுக்கு அவர் சென்ற பயணங்களில் எத்தனை பேருக்கு அவர் தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது பற்றிய கேள்விகள் உள்ளன. கிளீவ்லாண்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடனுடன் விவாதத்தின் போது அவர் தொற்றுக்குள்ளாகி இருந்திருக்கலாம். பைடென் மற்றும் அவரது துணை வேட்பாளரான கமலா ஹாரிஸ் பின்னர் நோய்த் தொற்று அவர்களுக்கு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நோயறிதலால் நிர்வாக மற்றும் சட்டமன்ற கிளைகளின் அன்றாட நடவடிக்கைகள் கணிசமாக பாதிக்கப்படும். தெரியாத எண்ணிக்கையிலான வெள்ளை மாளிகை உதவியாளர்கள் ஹோப் ஹிக்ஸ் மற்றும் கெல்லியன்னே கான்வே மற்றும் ட்ரம்பின் மனைவி மெலனியா உள்ளிட்டவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்திற்கு ஆமி கோனி பாரெட்டை நியமிப்பதாக அறிவித்த வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த குடியரசுக் கட்சி செனட்டர்கள் மைக் லீ மற்றும் செனட்டர் தாம் டில்லிஸ் ஆகியோருக்கும் நோய்த் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மறுதேர்தல் பிரச்சாரம் ஜனாதிபதி அல்லது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது நேரடியாக கலந்துகொள்ளாத இணையவழி நிகழ்வுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால விவாதங்களில் பங்கேற்பதற்கான ட்ரம்ப்பின் இயலுமை கேள்விக்குறியாக உள்ளது. அடுத்தது அக்டோபர் 15 ஆம் தேதி புளோரிடாவின் மியாமியில் நடைபெறுகிறது. ட்ரம்பின் நோய் மோசமடைந்துவிட்டால், அவரை குடியரசுக் கட்சி வேட்பாளரிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகள் இருக்கலாம். இது நவம்பர் வாக்குப்பதிவில் அல்லது தேர்தல் பிரதிநிதிகள் டிசம்பர் 14 ஆம் தேதி மாநில தலைநகரங்களில் சந்திக்கும்போது நிகழலாம்.

இந்த நெருக்கடியில், நவம்பர் 3 தேர்தலை சுற்றிய ட்ரம்ப் பிரச்சாரம் ஒரு அரசியல் சதி அச்சுறுத்தலாக உள்ளது என்பதை குறைத்து காட்டுவதே ஜனநாயகக் கட்சியின் முக்கிய பங்காகும். தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த சமூக கோபத்தை வெளிப்படுத்தக்கூடிய ட்ரம்பிற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அவர்கள் மறைத்துவிட முற்படுகிறார்கள். ட்ரம்பின் நோய் குடியரசுக் கட்சியினரின் பொதுவான சரிவுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதே அவர்களின் மிகப் பெரிய அச்சம். இது நவம்பர் 3 தேர்தலில் பைடெனை வெள்ளை மாளிகையில் நிறுத்தி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினரின் பெரும்பான்மையை நிறுவிவிடும். கடந்த நான்கு ஆண்டுகளில் ட்ரம்பின் வலதுசாரிக் கொள்கைகளின் கொடூரமான விளைவுகளைச் சரிசெய்ய பைடென் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வதை தவிர்ப்பதே அவர்களின் விருப்பமாகும்.

இந்த திடீர் நிகழ்வுகளின் விளைவாக வாஷிங்டனில் ஆட்சிக்கு வந்தாலும், ஜனநாயகக் கட்சி வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏவின் கட்சியாகவே உள்ளது. செய்தி வெளிவந்த பின்னர் நான்சி பெலோசியின் முதல் ஊடகக் கருத்துக்கள், “அரசாங்கத்தின் தொடர்ச்சியை” பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்திற்கு "இயல்புநிலையை" மீட்டெடுப்பதற்கான தனது விருப்பத்தை பைடென் இடைவிடாமல் பேசுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க ஆளும் உயரடுக்கை அதற்கு பழக்கமான குழப்பமில்லாத சுய-செல்வமயமாக்கல் நிலையில் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க சமுதாயத்தின் செயல்பாடுகளை பற்றி தமது எந்தவொரு கருத்தையும் சொல்வதிலிருந்தும் உழைக்கும் மக்களின் பரந்த வெகுஜனத்தைத் தவிர்த்து விடுகிறார்கள்.

ட்ரம்ப் நோயறிதல் அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் அடிப்படைப் பாதையை மாற்றாது. ட்ரம்ப் தொற்றுநோயால் இறந்தாலும், அவர் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாசிச ஆபத்துக்கான காரணம் அல்ல, மாறாக அதற்கான வெறும் ஒரு கருவியாகும். முசோலினியை போலிருக்க விரும்புபவரை அரசியல் சமப்படுத்தலிருந்து நீக்கிவிட்டால் ஒரு தனிப்பட்ட, சர்வாதிகார இயக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியை அது சீர்குலைக்கும். ஆனால் அவசரமாக தேவைப்படும் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான அரசியல் போராட்டத்தை தொழிலாள வர்க்கம் எடுத்துக் கொள்ளாவிட்டால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும்.

அக்டோபர் 1 ஆம் தேதி எங்கள் முன்னோக்கில் WSWS எச்சரித்தது போல:

வெடிக்கும் மற்றும் புரட்சிகர வடிவத்தை எடுக்கும் வெகுஜன சமூக கோபத்தை அது எதிர்கொள்கிறது என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். ட்ரம்ப்பின் செயல்களுக்கு இதுதான் அவர்களின் வெறித்தனமான மற்றும் பொறுப்பற்ற தன்மையை அளிக்கிறது. சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைக் கண்டு பீதியடைந்த அவர், ஒவ்வொரு எதிர்ப்பிலும், ஆர்ப்பாட்டங்களின் வெளிப்பாட்டிலும் “தீவிர இடது” மற்றும் “சோசலிசத்தின்” ஆபத்தைக் காண்கிறார். வேலைநிறுத்த அலைகளில் ஏற்கனவே வெளிப்படையான தொழிலாள வர்க்க போர்க் குணத்தின் வளர்ச்சி, ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதிக்கு வன்முறையை கையிலெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று நம்ப வைத்துள்ளது.

ட்ரம்புடன் அல்லது அவர் இல்லாமல், அடிப்படை வர்க்க பிரச்சினைகள் அவ்வாறாகவே உள்ளன. மேலும் அமெரிக்க அரசியல் வாழ்க்கை கத்தி விளிம்பில் உள்ளது. பாசிச எதிர்வினை, ட்ரம்பை முன் கதவு வழியாக அடித்து நொறுக்கி சர்வாதிகாரத்தை திணிக்க முயன்றதால், பின் கதவு வழியாக தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாமல், அது ஒரு வேறு அரசியல் திட்டத்தை கண்டுபிடிக்கும். முதலாளித்துவ அமைப்பிற்கும் அதை பாதுகாக்கும் இரு கட்சிகளுக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எடுக்க வேண்டியதே மிக அவசரமான தேவையாகும்.

Loading