முன்னோக்கு

தொற்றுநோயும் ட்ரம்பின் சதித்திட்டங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

கடந்த மூன்று நாட்களில் மூன்று சம்பவங்கள் ட்ரம்பின் தேர்தலுக்குப் பிந்தைய சதித்திட்டங்களின் தன்மை மீதும் அவற்றை முன்னுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் சமூக மற்றும் பொருளாதார நலன்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

முதலாவதாக, தேர்தலில் ஜெயித்துவிட்டதாக ட்ரம்ப் வாதிடுவதை விவாதிப்பதற்காக, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், நவம்பர் 6 அதிகாலை பிரதான அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் அவசரக் கூட்டம் நடந்ததைக் குறித்து வெள்ளிக்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. பத்திரிகை செய்திகளின்படி, அக்கூட்டத்தில் டிஸ்னி, ஜோன்சன்&ஜோன்சன், வால்மார்ட், கோல்டன் சாஸ்ச் மற்றும் பார்ச்சூன் பட்டியலில் உள்ள ஏனைய 500 நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் 2020 நவம்பர் 14 சனிக்கிழமையன்று வாஷிங்டனில் சுதந்திர பிளாசாவில் பேரணி நடத்தினர் (AP Photo/Julio Cortez)

வாரயிறுதி வாக்கில் பைனான்சியல் டைம்ஸ் (FT) வெளியிட்ட ஒரு விபரம் குறிப்பிடுகையில், “ஜனநாயகங்கள் ஏறக்குறைய பெரும்பாலும் உள்ளிருந்து தான் தூக்கி வீசப்பட்டன என்று வணிகத் தலைவர்களுக்குக் கூறிய, யேல் பல்கலைக்கழக வரலாற்றாளரும் On Tyranny நூலின் ஆசிரியருமான திமோதி ஸ்னெடெர் வெளியிட்ட 'ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான' சாத்தியக்கூறு குறித்த ஓர் எச்சரிக்கையுடன், ஓர் இருண்ட குறிப்பின் மீது" அந்த கூட்டம் "கூட்டப்பட்டிருந்ததாக" குறிப்பிட்டது.

பதவியில் தங்கியிருப்பதற்காக தேர்தலுக்குப் பிந்தைய ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எந்தளவுக்கு தீவிரமான சாத்தியக்கூறு உள்ளது என்பது ஆளும் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதையே, காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட அக்கூட்டம் எடுத்துக்காட்டியது. பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பது ஒரு சமூக வெடிப்பின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்ற கவலையால் பல செயலதிகாரிகளும் பைடெனை ஆதரிக்க தீர்மானித்திருந்தனர். தேர்தலுக்கு ட்ரம்பின் விடையிறுப்பானது "நாட்டில் குறைவாக அல்ல மிக அதிகளவில் கூர்மையான பிளவுக்கு இட்டுச் செல்லும்" என்ற “மிகப்பெரும் கவலை நிலவுகிறது… அவர்கள் கோபமான வேலையிடங்களை விரும்பவில்லை" என்று அந்த அழைப்புக்கு ஏற்பாடு செய்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர் jeffrey Sonnenfeld குறிப்பிட்டதை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், நிதியியல் மூலதனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரதிநிதிகளில் ஒருவரும், பிளாக்ஸ்டோன் தனியார் மூலதன நிதியத்தின் ஸ்தாபகருமான ஸ்டீபன் சுவார்ஸ்மன் ட்ரம்பைப் பாதுகாத்தார். “திரு. சுவார்ஸ்மன்,” “வோல் ஸ்ட்ரீட்டில் திரு. ட்ரம்பின் மிகவும் உத்வேகமான ஆதரவாளர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியின் நன்கொடையாளர், தேர்தல் முடிவுகள் மீது சவால் விடுக்க ஜனாதிபதி அவர் உரிமைகளுக்குள் இருப்பதாக கூறியும், சட்ட நிகழ்வுபோக்கு அதன் போக்கில் இருக்கும் என்று அனுமானித்தும், [ஆட்சிக்கவிழ்ப்பு சதி] மீதான அதுபோன்ற பயங்களைத் தணிக்க முயன்றார்,” என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

இரண்டாவது சம்பவமும் வெள்ளிக்கிழமையே வந்தது, அப்போது ட்ரம்ப் தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக, கொரொனா வைரஸ் தடுப்பூசி மீதான முன்னேற்றத்தில் அவர்களின் மதிப்பைப் பெற ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிகழ்வில், பொதுவெளியில் அவரின் கருத்தை வழங்கினார்.

இந்த தொற்றுநோய் முற்றிலுமாக கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதுடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான எந்தவொரு முறைமைகளையும் அவர் எதிர்ப்பதாக கூறிய அவர் கருத்துக்களிலேயே ட்ரம்ப் ஒருமுனைப்பட்டிருந்தார். “இந்த நிர்வாகம் சமூக அடைப்புக்குச் செல்லாது,” என்றார். ஜனவரி 20 இக்குப் பின்னர் யார் பதவியில் இருப்பார்கள் என்பதற்கு "காலம் பதில் சொல்லும்,” என்று கூறிய ட்ரம்ப், “ஆனால் என்னால் பதில் சொல்ல முடியும், இந்த நிர்வாகம் ஒரு சமூக அடைப்புக்குச் செல்லாது… குணப்படுத்தல் என்பது பிரச்சனையை விடவும் மோசமாக … இருந்துவிடக் கூடாது,” என்றார்.

இந்த நிலைப்பாட்டை அவர் நேரடியாக பங்குச் சந்தைகளின் அதிகரிப்புடன் இணைத்தார். “பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் ஏறக்குறைய 400 புள்ளிகள் அதிகரித்திருப்பதை நான் பார்க்கிறேன், அது இதற்கு முந்தைய வரம்புகளை முறிக்க தயாராக உள்ளது,” என்றார்.

தேசியளவிலான அடைப்பும் தொழிலாளர்களுக்கான பொருளாதார உதவிகளும் வைரஸைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடும் என்று முன்னணி தொற்றுநோய் நிபுணரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடெனின் ஆலோசகருமான டாக்டர் மைக்கெல் ஓஸ்டர்ஹோல்ம் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அறிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ட்ரம்பின் கருத்துக்கள் வந்திருந்தன. இத்தகைய அறிக்கைகள் புதன் மற்றும் வியாழக்கிழமை சந்தைகளின் சரிவுக்கு இட்டுச் சென்றிருந்தன, அதைப் பின்தொடர்ந்து வேகவேகமாக பைடென் தேர்தல் குழுவிடம் இருந்து தேசியளவில் எந்த அடைப்பையும் அது எதிர்ப்பதாக உத்தரவாதங்கள் வந்தன.

மரண எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு முன்னால், "வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" நடவடிக்கையை மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுத்தும் நபர் நான் தான் என்பதை ட்ரம்ப் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குத் தெரிவிக்கிறார்.

மூன்றாவது சம்பவம் சனிக்கிழமை நடந்தது, அப்போது ட்ரம்ப் கூட்டாளி ரோஜர் ஸ்டோன் மற்றும் ட்ரம்பின் பாசிசவாத முன்னாள் தலைமை ஆலோசகர் ஸ்டீபன் பானன் உடன் தொடர்புபட்ட ஒரு நடவடிக்கையான "தேர்தல் திருட்டை நிறுத்து" பதாகையின் கீழ் பாசிசவாத குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட வாஷிங்டன் டிசி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ட்ரம்ப் கூட்டத்திற்கு நடுவே ஊர்ந்து போய் வீரவணக்கம் செலுத்தினார்.

செப்டம்பர் ஜனாதிபதி விவாதத்தின் போது "ஆதரவாக நில்லுங்கள் பக்கவாட்டில் நில்லுங்கள்" என்று ட்ரம்ப் கூறியிருந்த Oath Keepers, Proud Boys போன்ற, பாசிசவாதி அலெக்ஸ் ஜோன்ஸ் உடன் சேர்ந்து Three Percenters போன்ற துணை இராணுவக் குழுக்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்களில் உள்ளடங்கி இருந்தன. வேர்ஜினியாவின் சார்லட்வில்லில் 2017 “வலதை நோக்கி ஒன்றுபடுங்கள்" பேரணி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான நவ-நாஜி ஆண்ட்ரூ அன்ங்லின் அந்த பேரணியை "மாபெரும் வெற்றி" என்பதாக பாராட்டினார். பகிரங்க யூத-எதிர்ப்புவாதியான Nick Fuentes, பாசிசவாத QAnon அமைப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சி சார்பாக காங்கிரஸ் சபைக்குத் தேர்வாகி உள்ள Marjorie Taylor Greene ஆகியோரும் அப்பேரணியில் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டம், ஒரு அதிவலது பாசிசவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான ட்ரம்ப் முயற்சிகளில் தீவிரப்பாடு இருப்பதை குறிக்கிறது. பொலிஸ் மற்றும் அரசு எந்திரத்திற்குள் உள்ள பாசிசவாத அடுக்குகளுடன் சேர்ந்து, இதுபோன்ற சக்திகள் தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஆளும் வர்க்கத்தின் மனிதபடுகொலை நடவடிக்கைகளை திணிப்பதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு அதிகரிப்பதை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த நிகழ்வை ஆமோதித்ததன் மூலமாக ஜனாதிபதி பகிரங்கமாக தன்னை பாசிசவாத சக்திகளுடன் அடையாளப்படுத்தி உள்ளார் என்ற உண்மை மீது ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டு எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை.

ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது: அடுத்த 65 நாட்களுக்கு அமெரிக்காவின் நிர்வாக பதவியின் தலைமையில் ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக தங்கியுள்ளார், அரசியல் நிலைமை வெவ்வேறு திசைகளில் நகரக்கூடும். ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், சட்டப்படி தேர்தல் செல்தகை இழந்துவிட்டதாகவும் அவரே உரிமை கொண்ட ஜனாதிபதி என்றும் வாதிடுவதற்காக "முதுகில் குத்தப்பட்டதாக" கூறும் சொல்லாடலை அவர் உருவாக்கி வருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக ஜனநாயகக் கட்சியினர் மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் மற்றும் அடியிலிருந்து எதிர்ப்பை உருவாக்கும் எந்தவொன்றையும் எதிர்க்கின்றனர். அவர்கள் ட்ரம்பின் நடவடிக்கைகளை வெறுமனே தனிப்பட்ட "உணர்ச்சிப் பிரவாகம்" என்றும், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சியில் எஞ்சி இருப்பதை மாற்றுவதற்கான தீவிர பேராபத்தான அச்சுறுத்தல் அல்ல என்றும் சித்தரிக்கிறார்கள். இதைவிட, ஓஸ்டர்ஹோல்மின் கருத்துக்களை வேகவேகமாக தட்டிக்கழிப்பதே எடுத்துக்காட்டுவதைப் போல, அவர்கள் இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றனர்.

இந்த தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பதன் மீதான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் அவர் பாசிசவாத வன்முறையைத் தூண்டுவதன் மீதோ அல்லது தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் முயற்சி மீதோ ஒருமுனைப்பட்டிருக்கவில்லை மாறாக ட்ரம்ப் "தேசிய பாதுகாப்பை" —அதாவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை—பலவீனப்படுத்துகிறார் என்ற புகார்கள் மீது ஒருமுனைப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் பிரதான பிரசுரமான நியூ யோர்க் டைம்ஸ் கடந்த வாரங்களில் இந்த கருத்துரு மீது தொடர்ச்சியான பல கருத்துக்கள் மற்றும் தலையங்கங்களைப் பிரசுரித்துள்ளது. நவம்பர் 11 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில், டைம்ஸ் தேர்தல்கள் மீதான "திரு. ட்ரம்பின் தந்திரம் மீது திருப்தி அடைவதற்காக" குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தது. அது "தேசிய பாதுகாப்புக்கு தீவிர பாதிப்புகளைக் கொண்டுள்ளதாக" எச்சரித்தது. ட்ரம்பின் "அளவு மீறிய நடவடிக்கைகள் அமெரிக்காவின் வெளிநாட்டு எதிரிகள் சுரண்டிக் கொள்ள ஓர் அருமையான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது,” என்று டைம்ஸ் நிறைவு செய்தது.

அவர் வன்முறை தூண்டல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகையில், ஜனநாயகக் கட்சியினரோ குடியரசுக் கட்சியில் அவருக்கு உதவுபவர்களுடன் நல்லிணக்கத்துடன் இருக்க முறையிட்டு வருகின்றனர். Politico பத்திரிகை செய்தியின்படி, “பென்டகனைக் கைமாற்றிக் கொடுப்பதில் உதவவும் மற்றும்" “ஒரு திறமையான இருகட்சி ஆதரவு பாதுகாப்பு துறை தலைமை குழுவைக் கட்டமைக்க" “சாத்தியமானால் புதிய நிர்வாகத்தில் சேவையாற்றவும்" ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டீஸை பைடென் அணுகி வருகிறார்.

“இந்த பிரச்சாரத்தின் கடுமையான வாய்சவடாலை நம் பின்னால் நிறுத்திக் கொள்வதும்" “நமது போட்டியாளர்களை எதிரிகளாக கையாள்வதை நிறுத்துவதும்" அவசியம் என்ற பைடெனின் ஆரம்ப அறிக்கைகள் மீது கவனம் செலுத்துமாறு, பத்து நாட்களுக்கு முன்னர், தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அழைப்பு விடுத்தது. பைடெனின் கருத்துக்கள், “வரவிருக்கும் வாரங்களில் அரசியல் மோதலை ஜனநாயகக் கட்சியினர் எவ்வாறு அணுகுவார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. ட்ரம்ப் சூழ்ச்சிகள் மீதான பாரிய மக்கள் எதிர்ப்பை முடக்க அனைத்தும் செய்யப்படும். ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பு வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக எழுவதை ஜனநாயகக் கட்சியினர் தடுக்க விரும்புகிறார்கள்,” என்பதை நாம் விளங்கப்படுத்தினோம்.

இப்போது இது தான் நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் உயரடுக்குகளின் சூழ்ச்சிகளைத் தோற்கடிக்க முடியும், ஆனால் இதற்கு தொழிலாளர்கள் சுயாதீனமான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். ட்ரம்புக்கு எதிரான ஓர் உண்மையான போராட்டத்தை ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான எதிர்ப்பில் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.

பாசிசவாத சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டமும் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கைக்கு எதிரான போராட்டமும், ஒட்டுமொத்த நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களுக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு போராட்டமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு, அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கரங்களில் கைப்பற்றி, சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும்.

Loading