முன்னோக்கு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் நிதியத் தன்னலக்குழுவின் செல்வத்தை பறிமுதல் செய்வதற்கான எடுத்துக்காட்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் மாதமானது பெருந்தொற்று நோய் பரவுவதில் உச்சத்தை தொட்டுள்ளது. உலகளவில் பதினேழு மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதோடு, இந்த மாதத்தில் 272,000 க்கும் அதிகமானோர் வைரஸால் இறந்துள்ளனர். இது முதலாம் உலகப் போரின் கொடிய சமரில் அதாவது ஐந்து மாதமே Somme என்ற இடத்தில் நடைபெற்ற சமரில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கைக்கு சமமானதாகும்.

பில்லியன் கணக்கான மக்கள் துன்பங்களுக்கும் மற்றும் நோய்க்கும் ஒரு குளிர்காலத்திற்குத் தயாராகி வரும் நிலையில், உலக பங்குச் சந்தைகள் 33 ஆண்டுகளில் தங்களுடைய சிறந்த மாதத்தைக் கொண்டாடுகின்றன, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி நவம்பர் மாதத்தில் முதல் முறையாக 30,000 புள்ளிகளை எட்டியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மரணங்கள் குவிந்து வரும் நிலையில், ஆளும் வர்க்கமானது ஒரு முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை தொழிலாள வர்க்கத்திலிருந்து செல்வந்தர்களுக்கு மாற்றுவதற்கு பெருந்தொற்று நோயை சாதகமாக்கி திட்டமிட்டுக் கொண்டுள்ளது.

இலாப நோக்கற்ற குழந்தைகள் பாதுகாப்பு (Save the Children) அமைப்பின் சமீபத்திய ஆய்வின்படி, உலகெங்கிலுமுள்ள 75 சதவிகித குடும்பங்கள் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் இருந்து வருவாய் இழப்பை அறிவித்துள்ளனர். இந்த சதவீதங்களை உலக மக்கள் தொகைக்கு விரிவாக்கும் போது, அதாவது 5.25 பில்லியன் மக்கள் ஜனவரி மாதம் இருந்ததை விட நவம்பரில் கணிசமான அளவிற்கு வறியவர்களாக உள்ளனர். இவர்களில் 1.05 பில்லியன் மக்கள் தங்களுடைய வருமானத்தில் 100 சதவிகிதத்தை இழந்தனர், 1.7 பில்லியன் மக்கள் தங்களுடைய வருமானத்தில் 75 சதவிகிதத்தை இழந்தனர், மேலும் 1.7 பில்லியன் மக்கள் தங்களுடைய வருமானத்தில் 56 முதல் 75 சதவிகிதம் வரை இழந்துள்ளனர்.

அரசாங்க உதவி பெற்றுக்கொள்ளாத உலக மக்கள் தொகையின் அளவு அறிவிப்பு (Credit: Save the Children)

அதே ஆய்வானது 3.7 பில்லியன் மக்கள், அல்லது பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்ட 70 சதவிகிதம் பதிலளித்தவர்கள், எந்த அரசாங்க உதவியையும் பெறவில்லை என்று அறிவித்தது.

இந்த புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக அவலநிலையின் அளவு கிட்டத்தட்ட ஆழமாக புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பிடும்போது சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதைக் குறைத்துள்ளதாகக் கூறியுள்ளனர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு —புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருந்தால், 4.3 பில்லியன் மக்களுக்கு சமம்— தங்களுடைய குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

25 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தொலைதூரக் கற்றலுக்கான கற்றல் உபகரணங்கள் இல்லை என்று கூறுகின்றனர் — அதாவது ஒரு பாடப் புத்தகம் அல்லது வாசிப்பு புத்தகம் கூட இல்லை. 10 மில்லியன் ஏழை குழந்தைகள் பெருந்தொற்று நோய் முடிந்துவிடும் போது பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள், ஏனெனில் நீண்ட கால வறுமை அவர்களை படிப்பதற்குப் பதிலாக வேலை செய்ய கட்டாயப்படுத்தும் என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பானது "வழக்கமான" முறையில் மதிப்பிடுகிறது. மிக இளவயதில் கர்ப்பம் தரித்தல் மற்றும் குடும்ப வன்முறை விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.

"பணக்கார" நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் எந்த வகையிலும் பேரழிவிலிருந்து விடுபடவில்லை. அமெரிக்க தொழிலாளர் துறை (US Labor Department) தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் இருந்ததை விட இப்போது அதிக ஊதியம் பெறும் வேலைகள் உள்ளன, அதே நேரத்தில் 25 சதவிகிதம் குறைவான வேலைகள் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலருக்கு கீழ் பெறுகின்ற வேலைகள் உள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் மொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன.

இந்தப் பணம் "மறைந்துவிடவில்லை", பெரும் செல்வந்தர்களின் வங்கிக் கணக்குகளில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

இரு கட்சி CARES சட்டமானது சராசரியாக 1.6 மில்லியன் டாலர்களை 43,000 செல்வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்றியுள்ளது. அவர்களுடைய வருமானம் ஏற்கனவே 1 மில்லியனுக்கும் மேலாக இருந்தது — இது தேவைப்படாத இவர்களுக்கு மொத்தமாக 135 பில்லியன் டாலர்களை கையளித்திருக்கிறது.

நிதி ஊக்கம் 2009 ஆண்டு மற்றும் 2020 ஆண்டு (Credit: World Economic Forum)

பிரதான ஏகாதிபத்திய நாடுகள் இந்த ஆண்டு வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் ஆதரவு கொடுக்க மொத்தம் 10 டிரில்லியன் டாலர்கள் நிதி ஊக்கத்தை அளித்தன. ஏற்கனவே 2008-2009 ஆண்டில் வங்கி பிணையெடுப்புகளின் அளவை விட இது மிகப் பெரிய அளவில் இருந்தது. அமெரிக்காவில், இந்த ஆண்டு பெருநிறுவன பிணையெடுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 12 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது, இது 2009 பிணையெடுப்பை விட இரு மடங்காகும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் குறைவாகும். ஜப்பான், ஜேர்மனி, ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்சில் அரசாங்கங்கள் இதேபோல் இருமடங்காக்கியது, மும்மடங்காக்கியது அல்லது பிணையெடுப்பின் அளவை நான்கு மடங்கும் ஆக்கியது.

இதனால் செல்வந்தர்களை வெறுப்பூட்டுமளவிற்கு இன்னும் அதிகமாக செல்வந்தர்களாக்கியுள்ளது. Inequality.org வெளியிட்ட ஒரு நவம்பர் அறிக்கையின்படி, "மார்ச் 18 திகதிக்கும் அதாவது COVID-19 பெருந்தொற்று தொடக்கத்தில் கொந்தளிப்பான தொடக்கத்திற்கும், அக்டோபர் 13 திகதிக்கும் இடையே 644 அமெரிக்க பில்லியனர்களின் மொத்த சொத்தின் மதிப்பு 2.95 டிரில்லியன் டாலர்களிலிருந்து 3.88 டிரில்லியன் டாலர்களுக்கு அதிகரித்தது, இது ஒரு 31.6 சதவீத உயர்வாகும்."

10 பெரும் செல்வந்தர்களின் செல்வம் இக் காலகட்டத்தில் 141 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது, அல்லது ஒவ்வொரு நிமிடமும் 46,850 டாலர்கள் அதிகரித்துள்ளது!

உலக தொழிலாள வர்க்கத்திற்கு உணவு, முழு வருமானம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் புத்தகங்களை வழங்க “பணம் இல்லை” என்ற கூற்றுகள் வலதிலிருந்து இடது என்று அழைக்கப்படும் முதலாளித்துவ அரசியல்வாதிகளினால் ஒவ்வொரு மொழியிலும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மனிதர்களால் அறியப்பட்ட மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோக முறைகளைப் பயன்படுத்தி அமசன் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களால் இத்தகைய வெறுப்பூட்டுமளவிலான செல்வம் உருவாக்கப்படுகின்ற முதலாளித்துவத்தில் உள்ளார்ந்த ஒரு வெளிப்படையான முரண்பாடாக இது இருக்கிறது.

அதிகாரம் மற்றும் திறன் அடிப்படையில் பெரும்பாலான அரசாங்கங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகடந்த நிறுவனங்கள், மனித புத்திக் கூர்மையின் உச்சம், உறுதிப்பாடு மற்றும் புதுமை ஆகியவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டுள்ளன, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகால விஞ்ஞானரீதியான மற்றும் சமூக வளர்ச்சியின் விளைவாகும்.

இந்தக் கண்டுபிடிப்புகள், இலாபத்திற்காக சுரண்டுவதற்கு பதிலாக உயிர்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்பட்டால், அவை கொரோனா வைரஸ் நெருக்கடியின் திறவுகோல்களை கொண்டுள்ளன!

1880 ஆண்டில், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் எழுதினார்: "தேவைக்கு மிகுதியானதாக மட்டும் இல்லாமல், ஆனால் பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, விஞ்ஞானரீதியாக, வளர்ச்சிக்கு ஒரு தடையாக உருவாகியிருப்பதும், ஒரு சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தால்... ஆகையால் தான் உற்பத்தியின் வளர்ச்சியானது உற்பத்திச் சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் அதனுடன் சேர்த்து அரசியல் ஆதிக்கத்தையும் ஒரு நிலைக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பறிமுதல் செய்வது நிறைவேற்றுப்படுவதுதான் சோசலிசத்தின் முன்நிபந்தனையாயிருக்கிறது"

ஏங்கெல்ஸ் தொடர்ந்தார்: "சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களினால், சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்குமான பாதுகாப்பைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுக்கான ஒரு வாழ்வாதார இருப்பு என்பது முழுமையாகப் போதுமானதாக பெருமளவில் மட்டுமல்லாமல், மற்றும் நாளுக்கு நாள் மேலும் முழுமையானதாகவும், ஆனால் அவர்களின் உடல் மற்றும் மன திறன்களின் அனைத்து சுதந்திரமான வளர்ச்சி மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு வாழ்வாதார இருப்பு உத்தரவாதம் அளிக்கிறது - இந்த சாத்தியம் இப்போது இருக்கிறது, முதல் முறையாக, இங்கே, ஆனால் இங்கே இருக்கிறது."

முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் கட்டுப்பாடுகளில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுவிப்பதும் மற்றும் செல்வந்தர்களின் செல்வத்தை பறிமுதல் செய்வதும், பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானதாவும் மற்றும் உடனடித் தேவையாகவும் இருக்கின்றன.

"அதி-உயர் நிகர மதிப்பு தனிநபர்கள்" (“Ultra-High Net Worth Individuals”) என்று தகுதி பெறும் சுமார் 230,000 தனிநபர்கள் உள்ளனர், அவர்களில் ஒருவருடைய சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. மொத்தத்தில், இது மக்கள் தொகையில் இந்தச் செல்வந்தர்களின் சதவீதம் .0003 ஆகும், தோராயமாக 35.5 டிரில்லியன் டாலர்களாகும். இதைத்தவிர, உலகின் 10 பெரிய பங்குச் சந்தைகளில் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 71.6 டிரில்லியன் டாலர்களை பெருநிறுவனங்கள் கொண்டிருக்கிறது.

பதுக்கி வைத்திருக்கும் இந்த மிகப் பெரிய தொகையானது இந்த கிரகத்திலுள்ள ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் ஐந்து மாதங்களுக்கு 4,000 டாலர்கள் வழங்க பயன்படுத்தப்பட வேண்டும், தடுப்பூசியானது முழு உலகிற்கும் கிடைக்கக்கூடிய அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் வரை பொது முடக்கத்தின் போது தொழிலாளர்களின் முழு வருமானத்தையும் ஈடுகட்ட போதுமானது. எந்தவொரு தொழிலாளியோ அல்லது சிறிய சொத்து உரிமையாளரோ பட்டினியால் மரணத்திற்கும் கொரோனா வைரஸால் மரணத்திற்கும் இடையில் தேர்வு செய்ய நிர்பந்திக்கப்படக்கூடாது.

செல்வந்தர்கள் பதுக்கி வைத்த வளங்களானது உடனடியாக செவிலியர்களை பணியமர்த்தவும், பயிற்சியளிக்கவும், தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவமனை இடவசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். உலகின் "பணக்கார" நாடுகளில், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, நோயாளிகள் தாழ்வாரக் கூடங்களில் இறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நகரத்தின் தெற்குப் பகுதியில் வறிய தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்யும் சிக்காகோவின் மெர்சி மருத்துவமனை, வரவிருக்கும் மாதங்களில் மூடப்படவுள்ளது என்பது முதலாளித்துவ பகுத்தறிவின்மையின் உச்சமாக உள்ளது, ஏனெனில் அது பெருந்தொற்று நோயின் மத்தியில் ஒரு இலாபத்தைப் பெற முடியாது இருந்தலால் ஆகும்.

ஒரு தடுப்பூசியின் சாத்தியமானது மேலும் அமசன், மைக்ரோசாஃப்ட் மற்றும் டெஸ்லா போன்ற பெருநிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் விநியோக வளங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலகின் அனைத்து மூலைகளிலும், மிக வறிய மற்றும் அடைய கடினமாக இருக்கும் இடங்கள் உட்பட உலகெங்கிலும் பாதுகாப்பான தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விரைவான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அவசரப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உலகப் பிரபுத்துவத்தின் செல்வத்தின் மீது முழு-நேரடித் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முதலாளித்துவ வர்க்கம் செயற்படும் கிடுக்கிப் பிடியை உடைத்து முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியத் தேவையாகவுள்ளது.

Loading