முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியினர் "ஒற்றுமை" மற்றும் "குணப்படுத்துதல்" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பதவியேற்பு தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக இராணுவ புலனாய்வு அமைப்புகளும் குடியரசுக் கட்சியும் பொதுமக்களிடமிருந்து முக்கியமான தகவல்களைத் மறைத்து வைத்துள்ள நிலையில், தீவிர வலதுசாரி பாசிச வன்முறை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசு அமைப்பினுள் ஒரு தீவிர உறுதியற்ற தன்மையும், மோதலும் உள்ளது. நேற்று பிற்பகல், கூட்டுப் படைத் தலைவர்கள் இராணுவத்தின் நிலைப்பாடு பைடென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதாகும் எனக் குறிப்பிட்டு முழு இராணுவத்திற்குமான அறிக்கையை வெளியிட்டனர். அமெரிக்க வரலாற்றில் முன்னோடி இல்லாமல் இருக்கும் இந்த குறிப்பிடத்தக்க அறிக்கை, இராணுவ தலைமை அதன் சொந்த சக்திகளை கட்டுப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

இராணுவத்தின் உறுப்பினர்கள் "அரசியலமைப்பை ஆதரிக்க வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும்" என்று அவ்வறிக்கை கூறுகிறது. அரசியலமைப்பு செயல்முறையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் நமது மரபுகளுக்கும், மதிப்புகள் மற்றும் உறுதிமொழிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டது”. கடந்த ஆண்டு, ஒரு இராணுவ ஆய்வில், இராணுவ உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆயுதப்படைகளுக்குள் பாசிச நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்டதாக தெரிவித்தது.

2021, ஜனவரி 10, ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டனில், காங்கிரஸை சுற்றியுள்ள ஊடுருவல் எதிர்ப்பு தடுப்புகளுக்கு உள்ளே தேசிய காவல்படையின் உறுப்பினர்கள் நிற்கிறார்கள்.(AP Photo/Alan Fram)

கொலராடோ ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் அங்கத்தவர ஜேசன் குரோ இராணுவ செயலாளர் ரியான் மெக்கார்த்தி உடன் பதவியேற்பு வைபவத்திற்காக வார இறுதியில் வாஷிங்டன் டி.சிக்கு அனுப்பப்பட்ட 20,000 தேசிய காவல்படை வீரர்களின் விசுவாசம் குறித்து பேசினார் என Politico தெரிவித்தது. இது உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவில்லாதவர்களை ஈடுபடுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும். எவ்வாறாயினும், பல்வேறு மாநில தலைநகரங்களில் ட்ரம்ப் சார்பு ஆர்ப்பாட்டங்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், நாடு முழுவதும் நிலைநிறுத்தப்படவுள்ள அனைத்து பிரிவுகளையும் கண்காணிக்க முடியாது என்பதாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் அமைச்சரவை 25 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், அதே போல் ஜனவரி 20 அன்று பதவியேற்புக்கு இடையூறு விளைவிக்கும் பட்சத்தில் பாரிய வன்முறைகளைச் செய்வதற்கான ஒரு வலதுசாரி சதி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு அவர்களுக்கு விளக்கமளித்ததாக காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.

காங்கிரஸின் ஜனநாயகக் கட்சிக்காரர் கோனார் லாம்ப் CNNஇடம் பின்வருமாறு கூறினார்:

காங்கிரஸை சுற்றிவளைத்து மற்றும் எந்தவொரு ஜனநாயகக் கட்சியினரும் உள்ளே செல்வதைத் தடுக்க அவர்கள் 4,000 ஆயுதமேந்திய "தேசபக்தர்களை" பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நீங்கள் எப்போது சுடுவது மற்றும் எப்போது சுடக்கூடாது என்பது தொடர்பாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த விதிகளை வெளியிட்டுள்ளனர். எனவே இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு, இது ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது.

ஒரு Huffington Post அறிக்கையின்படி, பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்பாளர்களிடம் "காங்கிரஸின் ஒவ்வொரு உறுப்பினரையும் பதவியேற்புக்கு முன் ஒரு உலோக கண்டுபிடிப்பு கருவியூடாக செல்ல வைக்க மெட்டல் வைக்க வேண்டும்" என்று அழைப்புவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஒரு காங்கிரஸ்காரர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம், இது "கண்களை அகலவிரிக்கும் உணர்வை" தூண்டியது என்றும்" கிளர்ச்சியாளர்களுடன் கூட்டுறவு கொண்ட இந்த உறுப்பினர்கள் அனைவரும் தமது துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல விரும்புவர்", இது பைடனினதும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களினதும் உயிருக்கு ஆபத்தை முன்வைக்கின்றது என பாதுகாப்பு அதிகாரிகள் உணர்வதாக தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், FBI மற்றும் நீதித்துறை நேற்று பிற்பகல் ஒரு தற்காப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தியது. இதில் அதிகாரிகள் ஜனவரி 6 ஆம் தேதி முன்னர் தெரிந்திருந்த தகவலைகளை குறைத்துக்காட்டி, இது பொதுமக்களின் "தவறான புரிதல்களின்" விளைவு என்று கூறினர். முன்னணி FBI மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதில் கீழ்நிலை துணை அதிகாரிகளையே கலந்துகொள்ள விட்டுவிட்டனர். கடந்த புதன்கிழமை கலவரத்திற்கு பின்னர் FBI இயக்குனர் கிறிஸ்தோபர் வேரே பகிரங்கமாக ஒரு இடத்திலும் தோன்றவில்லை.

Washington Postகட்டுரை நேற்று காங்கிரஸின் முன் பாசிசவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கும் திட்டங்களால் ஏற்படும் அசாதாரண ஆபத்தை FBI முன்கூட்டியே அறிந்திருந்தது, ஆனால் செயல்பட மறுத்துவிட்டது எனத்தெரிவித்தது. “காங்கிரஸின் முன் ‘போர்’ குறித்து FBI அறிக்கை எச்சரித்தது” என்ற தலையங்கத்துடனான கட்டுரையில், வன்முறையைத் தூண்டுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்ற அதன் முகவாண்மையான Norfolk இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கு முரணாக, வேர்ஜீனியா அலுவலகத்தின் ஒரு அறிக்கை, “வன்முறைக்கான பிரத்தியேக அழைப்புகள்” குறித்து எச்சரித்ததை பற்றி எழுதியது.

தீவிர வலதுசாரி கும்பல் காங்கிரஸ் அறைகளுக்குள் நுழைகையில், அதிலிருந்து 13 கட்டிட தொகுதிகளுக்கு அப்பால் நிலைகொண்டிருந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 50 ஆயுதமேந்திய படையினர் அதற்கு எதிராக ஈடுபடுத்தப்படவில்லை என்று NBC News நேற்று செய்தி வெளியிட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் தற்காலிக இயக்குநர் சாட் வொல்வ் முன்எச்சரிக்கையின்றி திங்களன்று இராஜினாமா செய்தார். ஒப்பீட்டளவில் அறியப்படாத மத்திய உள்நாட்டு மேலாண்மை அமைப்பின் நிர்வாகியான பீட் கெய்னரை அந்தத் துறையின் பொறுப்பாளராக விட்டுவிட்டார்.

நேற்று, டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களாக மட்டுமே கருதக்கூடிய கருத்துக்களை தெரிவித்தார். டெக்சாஸில் ஒரு பேரணிக்கு புறப்படுவதற்கு முன்னர் வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், புதன்கிழமை தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கான உரையை "முற்றிலும் பொருத்தமானது" என்று கூறி, புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள பதவிவிலக்கல் குற்றச்சாட்டு தொடர்பான வாக்கெடுப்பு "நம் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தையும் பெரும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது" என்று எச்சரித்தார். தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குண்டர் தலைவன் உரையாற்றுவதைப் போல, "நான் எந்த வன்முறையையும் விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

டெக்சாஸில், இராணுவமயமாக்கப்பட்ட அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைச் சுவரிலிருந்து சில அடி தூரத்தில் இராணுவ மறைப்பு வலைகளால் மூடப்பட்ட ஒரு மேடையிலிருந்து ட்ரம்ப் பேசினார். அவர்: "25 வது திருத்தத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டு வாக்கெடுப்பு எனக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் ஜோ பைடென் மற்றும் பைடென் நிர்வாகத்தை வேட்டையாட மீண்டும் வரும். நீங்கள் விரும்புவதை பற்றி கவனமாக இருங்கள்" என்று கூறினார்.

அதே சமயம், பதவியேற்பு தினத்திற்குப் பின்னர் பதவியில் இல்லாவிட்டால் தனது நிலைமை மீது கவனத்தில்கொண்டு ட்ரம்ப், மற்ற குடியரசுக் கட்சியினரின் அழைப்புகளான “சமாதானப்படுத்துதலை” எதிரொலித்தார். அவரை குற்றஞ்சாட்டும் காங்கிரசின் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார், "இப்போது நம் தேசம் சமாதானப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.

இந்த "சமாதானப்படுத்துதல்" மற்றும் "சமாதானம் மற்றும் அமைதி" பற்றிய அழைப்பு பைடென் தலைமையிலான ஜனநாயகக் கட்சி அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு இணையானதாக உள்ளது. ஜனவரி 6 நிகழ்வுகள் குறித்து எந்தவொரு விசாரணையையும் குறிப்பதன் மூலம் எந்தவொரு பதவிவிலக்கல் குற்றச்சாட்டு விசாரணையையும் கூர்மைப்படுத்த வேண்டாம் என்று பைடென் காங்கிரஸைக் கேட்டுக் கொண்டார். எனவே அவரது நிர்வாகத்தால் தேசிய பாதுகாப்பு அமைச்சரவை பதவிகளை நிரப்ப முடியும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை சரியான பாதையில் கொண்டு செல்லமுடியும் என்கிறார்.

New York Times நேற்று, "தனது உயர் தேசிய பாதுகாப்பு வேட்பாளர்களை அடுத்த புதன்கிழமை பதவியேற்பு நாளில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விரைவாக உறுதிப்படுத்த செனட் குடியரசுக் கட்சியினர் அவருக்கு உதவுவார்கள் என இடைக்கால குழு நம்புகிறது." என செய்தி வெளியிட்டது.

பதவியேற்கவுள்ள பைடெனின் தகவல்தொடர்பு செயலாளர் ஜென் சாகியுடன் நேற்று ஒரு நேர்காணலை மேற்கோள் காட்டி, Washington Post பின்வரும் செய்தியை வெளியிட்டது: “பைடென் மற்றும் அவரது ஆலோசகர்கள் நாட்டின் போராட்ட நரம்புகள் இறுதியில் அமைதியாகிவிடும் என்ற அவரது நம்பிக்கையை உறுதியாகக் கொண்டுள்ளனர். அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறுகையில், கடந்த வாரம் காங்கிரஸ் கட்டிடம் மீதான தாக்குதலுக்குப் பின்னரும் பெரும்பான்மையான காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றது பற்றி அவர் கவலையற்று இருந்ததாக தெரிவித்தனர்.

பைடெனுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான ஹிலாரி ரோசனின் கருத்துக்களை Washington Post மேற்கோளிட்டு, பைடென் தனது நிர்வாகத்தில் உள்ள வேலைகளுக்கு அவரது "சமாதானப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் அதிகாரிகளை நியமிக்கிறார்" என்று குறிப்பிடுட்டது.

ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் உள்ள எந்தவொரு பரந்த விசாரணையையும் பைடென் தொடர்ந்து எதிர்த்தார். தேர்தல் திருடப்பட்டது என்ற பொய்யை நியாயப்படுத்தியதன் மூலம் ட்ரம்பிற்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கிய உயர் குடியரசுக் கட்சியினர் உட்பட இதில் அடங்குவர். கடந்த வாரம், அவர் ஒரு "வலுவான" குடியரசுக் கட்சியின் தேவை பற்றி வலியுறுத்தியதுடன், ட்ரம்பின் ஆதரவாளர்களான செனட்டர்கள் டெட் குரூஸ் மற்றும் ஜோஷ் ஹவ்லி ஆகியோரின் இராஜிநாமாவைக் கூட பைடென் குறிப்பாக நிராகரித்தார்.

இந்த அறிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் மோதிக்கொள்ளும் பிரிவுகள் ஒரு சமரசத்தை உருவாக்கத் தயாராகி வருகின்றன என்பதற்கான எச்சரிக்கையாகும். இது தீவிர வலதுசாரிகளை அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் கட்டமைப்பினுள் மேலும் ஒருங்கிணைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்ய அணிதிரட்டிய சக்திகள் பெருநிறுவன உற்பத்தி மற்றும் இலாபத்திற்காக கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்த ஆளும் வர்க்கத்திற்குள் சக்திவாய்ந்த சக்திகளால் ஊக்குவிக்கப்பட்டன. இந்த "வேலைக்குத் திரும்பு" இயக்கம் இரு கட்சிகளினது ஆதரவை கொண்டிருக்கின்றது.

ஒரு உடன்பாடு செய்யப்பட்டால், அது பெருநிறுவன அரசியல்-ஊடக ஸ்தாபகத்தால் ஒருமனதாகப் பாராட்டப்படும். இதன் நோக்கம் பதிவுசெய்யப்பட்ட பெருநிறுவன இலாபங்களை தக்கவைத்துக்கொள்வதும், தொற்றுநோய்களுக்கு மத்தியில் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதும் ஆகும். இந்த செயல்முறையின் இலக்காக இருக்கும் தொழிலாள வர்க்கமே என்பதை இந்த அடிப்படை நிகழ்ச்சிப்போக்கு காட்டுகிறது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு இல்லாத நிலையில், அத்தகைய உடன்பாடு இன்னும் பெரிய குற்றங்களுக்கு மட்டுமே தயாரிப்பு செய்ய முடியும். அதன் ஜனவரி 12 அறிக்கையில், “ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகு! ”என்று சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எழுதியது:

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் அல்லது நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களிலும் உள்ள அரசாங்க கட்டிடங்கள் மற்றும் பிற மூலோபாய தளங்களை கைப்பற்ற அரசியல் குற்றவாளிகளான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் செனட் மற்றும் காங்கிரஸில் உள்ள அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகளால் தூண்டப்பட்ட தீவிர வலதுசாரி கும்பல்களின் முயற்சிகளுக்கு தொழிலாள வர்க்கம் ஒரு பொது வேலைநிறுத்தத்துடன் பதிலளிக்க வேண்டும்.

நிகழ்வுகள் இந்த அழைப்பின் அவசரத்தை உறுதிப்படுத்தியுள்ளன. தொழிலாளர்களின் சுயாதீன தலையீடு ஜனவரி 6, 2021 ஆட்சிமாற்ற சதியின் அனைத்து அம்சங்கள் தொடர்பான முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கான கோரிக்கை மற்றும் பாசிச வன்முறையைத் தொடர்ந்து தூண்டுதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading