மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பெர்சிவெரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியமை மிகப் பெரும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாதனையாகும். மற்றொரு புவியின் மேற்பரப்பில் 1,025 கிலோ எடையுள்ள ஒரு வானியல் ஆய்வு சாதனத்தை மெதுவாக தரையிறக்க எட்டாண்டு காலம் உன்னதமான திட்டமிடலில் செலவிடப்பட்டிருந்தன —மூன்று கண்டங்களின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
நீண்டகாலமாக மனிதர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ள ஒரு கிரகத்தை ஆய்வு செய்துள்ள பல்வேறு தரையிறங்கு சாதனங்கள், சுற்றுவட்டப் பாதையில் சுழலும் ஆய்வுக் கோள்கள் மற்றும் விண்கலன்களில் பெர்சிவெரன்ஸ் விண்கலன் சமீபத்தியதாகும். கடந்த கால திட்டங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டியுள்ளவாறு, செவ்வாய் கிரக மேற்பரப்பு ஒரு வறண்ட, குளிர்ந்த, தரிசு நிலமாகும். தற்போது உயிர்கள் வாழ்வதற்கு அது ஏற்றதில்லை என்றாலும், அது மிகவும் பரிச்சயமானதாக உணரச் செய்கிறது. மணற்குன்றுகளும், புயல்கள், பனிப்பாறைகள், மலைகள், காய்ந்த நீரோடைகள், ஆறுகள் மற்றும் ஏரி படுகைகள் அதில் உள்ளன. அங்கே மிகவும் அற்புதமான சூரிய அஸ்தமனங்கள் கூட நிகழ்கின்றன, செவ்வாய் கிரகத்தில் காணப்படும் நீல நிற நிழல்கள் பூமியில் காணப்படும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்து அழகாக வேறுபடுகின்றன.
203 நாள் பயணத்திற்குப் பின்னர், விண்கலத்தின் ஏழு நவீன கருவிகள் தரவுகளையும் படங்களையும் ஏற்கனவே கீழே அனுப்பத் தொடங்கியுள்ளன. பெர்சிவெரன்ஸ் எடுத்த முதல் புகைப்படங்கள் அந்த விண்கலம் எவ்விதத்தில் செயல்பட வேண்டுமோ அவ்விதத்தில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் செயல்முறையின் பாகமாக உபயோகமாகி உள்ள அதேவேளையில், அதன் முன் இடது சக்கரத்தின் ஒரு படம் சிறு துவாரங்கள் கொண்ட பாறைகளை எடுத்துக்காட்டுகிறது. பூமியில், இத்தகைய அமைப்புகள் எரிமலைகளால் ஏற்படுகின்றன, அதாவது இவை செவ்வாய் கிரகத்தின் புவிசார் வரலாறு பற்றிய நுண்ணறிவை வழங்கும், அல்லது ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் படிந்த வண்டல் படிவு மூலமாக ஏற்பட்டிருக்கலாம் என்பதே இதன் அர்த்தமாகும், அதாவது இந்த செங்கிரகத்தில் ஒரு காலத்தில் இருந்த தண்ணீரால் இந்த பாறைகள் உருவாகியிருக்கலாம்.
வெறுமனே தரை இறக்கியதன் மூலமும் ஒரு மிகப்பெரும் விஷயம் கற்றுக் கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான உபாயமான, ஆனால் அந்த அன்னிய உலகை ஆய்வு செய்ய பல்வேறு கேமராக்கள், பகுப்பாய்வு செய்யும் கருவிகள் மற்றும் ஏனைய கருவிகளைக் கொண்டு செல்லக்கூடிய உபாயமான ஸ்கைரேன் (skycrane) மூலமாக, அந்த வாகனத்தை செவ்வாய் நிலப்பரப்பில் மெதுவாக தரையிறக்குவது சாத்தியம் என்பதை நாசா இரண்டாவது முறையாக நிரூபித்தது (முதலில் கியூரியாசிட்டி விண்கலம் இவ்வாறு தரை இறக்கப்பட்டிருந்தது). அந்த விண்கலத்தை அதன் தரை இறங்கும் இடத்திற்கு வழிகாட்ட பயன்படுத்தப்பட்ட அதிநவீன வழிகாட்டும் கேமராக்கள் மற்றும் மென்பொருள்களால் தன்னியக்கமாக கற்பாறைகள், சரிவுகள் மற்றும் ஜெசெரோ பள்ளத்தாக்கு குன்றிலிருந்து தெளிவாக திசைதிருப்ப கூடியதாக இருந்ததுடன், அதேவேளையில் பெர்சிவெரன்ஸ் இல் விஞ்ஞான ரீதியில் ஆர்வத்திற்குரிய மேலும் பல அம்சங்களுக்கு நெருக்கமாக இருந்தன.
மேலதிக ஆய்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு வருகின்றன. கருவிகளின் முழு தொகுப்பும் வரவிருக்கும் நாட்களில் இணையத்தில் கொண்டு வரப்படும். மற்றொரு கிரகத்தில் பறக்க விடக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பறக்க விடப்படும், இது கிரக ஆய்வில் மற்றொரு முதல் முயற்சியாக இருக்கும். செவ்வாய் கிரகத்தைப் பற்றி பூமியில் ஆராய்ச்சியாளர்கள் கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கிரகத்தில் ஒரு காலத்தில் உயிர்கள் இருந்ததா இல்லையா என்ற ஆச்சரியங்களுக்கு, அவை குறிப்புகளை வழங்கும்.
பெர்சிவெரன்ஸ் விண்கலத்தின் தரையிறக்கம் மனித அறிகையை, விஞ்ஞான மற்றும் பகுத்தறிவைச் சக்தி வாய்ந்த விதத்தில் நிரூபணம் செய்துள்ளது. இது சமகாலத்தில் பகுத்தறிவின்மையை இடைவிடாது பெருமைப்படுத்துவதற்கு ஒரு பலமான கண்டனமாக இருப்பதுடன், உலகை சடரீதியில் புரிந்து கொள்வதற்கு ஒரு சக்தி வாய்ந்த நிரூபணமாக விளங்குகிறது. உண்மையில் புறநிலை இயற்கை விதிகளை மனிதர்களால் புரிந்து கொண்டு அதன் மீது செயல் முடியும்.
இந்த சாதனையின் முக்கியத்துவம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள சமூக பேரழிவுடன் முற்றிலும் முரண்படுகிறது. அந்த விண்கலம் தரை இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், டெக்சாஸில் ஒட்டுமொத்த மாநிலத்தின் மின்சார மற்றும் வெப்பமூட்டும் கட்டமைப்பைத் தகர்த்துள்ள ஒரு பனிப்புயலின் போது அங்கே 11 வயது சிறுவன் பனியில் உறைந்து இறந்து போனான்.
இன்னும் டஜன் கணக்கானவர்கள் தெருவிலும் அல்லது அவர்கள் வீடுகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள், அதேவேளையில் மில்லியன் கணக்கானவர்கள் உணவு, மின்சாரம் அல்லது தண்ணீர் இல்லாமல் விடப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளின் உபயோகங்கள் செயல்படாததால் அவற்றை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சமூக கூடங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற மின்சாரம் இல்லாத சிறிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள், இதனால் தொடர்ந்து கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் கூடுதலாக பரவ அச்சுறுத்துகிறது. உறைபனியா அல்லது தொற்றுநோயா என மக்கள் உயிரிழப்பதற்காக இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.
டெக்சாஸிலும், ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில், மற்றும் சர்வதேச அளவிலும் இந்த தொற்றுநோய் இன்னும் சீற்றமாக தான் உள்ளது. ஒவ்வொரு நாளும், 11,000 க்கும் அதிகமான ஆண்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்த வைரஸ் தொற்று உள்ளாகிறார்கள், அமெரிக்காவில் மட்டும் 2,000 க்கும் அதிகமானவர்கள் இதில் உள்ளடங்குவார்கள். ஜனவரி 2020 இல் இருந்து அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனாகி உள்ளது, உலகளவில் இது 2.4 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இந்த முரண்பாடு குறித்து மக்களுக்கு உள்ளுணர்வுரீதியாக ஒரு புரிதல் உள்ளது. “விஞ்ஞானம் மற்றும் அமெரிக்க புத்தி கூர்மையின் சக்தியால், சாத்தியமாகும் வட்டத்திற்கு வெளியே எதுவும் இல்லை” என்று பெர்சிவெரன்ஸ் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் ஒரு பேரினவாத ட்வீட் செய்திக்கு விடையிறுக்கும் விதமாக, பலர் பின்வரும் வரிகளுடன் விடையிறுத்தனர்: “ஒரு தொற்றுநோய்க்கு கூட ஒரு முடிவு இல்லை? வதை முகாம்களுக்கும் கூட ஒரு முடிவு இல்லை? காலநிலை பேரழிவுக்கும் கூட ஒரு தீர்வு இல்லை? உறைய செய்யும் குளிரால் மடிந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கு வழங்கவும் கூட உதவிகள் இல்லை?”
இன்னும் பரந்தரீதியில் கூறுவதானால், செவ்வாய் கிரகத்தில் ஒரு டன் எடையுள்ள ஒரு வாகனத்தை தரையிறக்குவதற்கும் பிற விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் முறைகளைச் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கவும், எல்லோருக்கும் போதுமான வேலைகள், கல்வி, தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக பயன்படுத்த முடியும் என்பதும், ஒவ்வொரு மனிதரின் உயிர் வாழ்வையும் அச்சுறுத்தும் உலகளாவிய பெருந்தொற்றுக்கள், காலநிலை மாற்றம் மீதான அசட்டைத்தனம் மற்றும் அணு-ஆயுத இராணுவவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மனித உயிர்களைப் பாதுகாக்கும் திறனை சமூகம் கொண்டுள்ளது என்பது தொழிலாளர்களுக்குத் தெரியும்.
பெர்சிவெரன்ஸ் விண்கலத்தை உருவாக்குவதில் கொடுக்கப்பட்ட கவனம் இந்த தொற்றுநோயைத் தடுப்பதில் கொடுக்கப்பட்டிருந்தால், இந்த கொரொனா வைரஸ் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட இந்நூற்றாண்டின் மிகப்பெரும் உலகளாவிய பொது மருத்துவ நெருக்கடியாக அல்ல, சீனாவில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற ஆனால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சோகமான வெடிப்பாக நினைவு கூரப்பட்டிருக்கும்.
ஆனால் அறிவைப் பின்பற்றி, மனிதகுலத்தின் பொதுவான முன்னேற்றத்திற்காக உந்தப்பட்ட ஒரு பொதுவான இலக்கை நோக்கிய இந்த ஒத்துழைப்பு, செவ்வாய் கிரக விண்கலத்தில் பணியாற்றியவர்களில் உள்ளடங்கி இருந்த தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் மிகவும் சிந்தனைபூர்வ புத்திஜீவித அடுக்குகளிலும் வேரூன்றி உள்ளது. இத்தகைய மனிதாபிமான சிந்தனை உலகின் ஆளும் உயரடுக்கிற்கு முற்றிலும் அந்நியமானது, அது அதன் பிற்போக்குத்தன்மை, வக்கிரத் தன்மை, அலட்சியம் மற்றும் ஒட்டுண்ணித்தன்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதற்கு பதிலாக பணக்காரர்கள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள், யுவான், யென், ரூபிள்கள் மற்றும் யூரோக்களைச் சுருட்டி தங்களைத்தாங்களே வளப்படுத்திக் கொண்டு, உலகம் முழுவதும் போர் நடத்துகிறார்கள். பெர்சிவெரன்ஸ் விண்கலத்தைக் கட்டமைத்து, அனுப்பி, செயல்படுத்த இதுவரை செலவிடப்பட்டுள்ள 2.7 பில்லியன் டாலர் என்பது கடந்தாண்டு ஒவ்வொரு வாரமும் எலொன் மஸ்க் "சம்பாதித்தத்தை" விட குறைவு தான் —இவர் டெக்சாஸ் மாநிலத்தின் நெறிமுறை தளர்வுகளில் இருந்து ஆதாயமெடுக்க அங்கே இடம்பெயர்ந்துள்ளார்— மேலும் பென்டகன் உத்தரவிட்ட சமீபத்திய அதிநவீன விமானந்தாங்கி கப்பல்களில் ஒன்றின் விலையில் ஒரு கால்வாசி தான்.
முதலாளித்துவம் தவிர்க்கமுடியாமல் அதன் உள்முரண்பாடுகளால் உந்தப்பட்டு மனிதகுலத்தைப் பாசிசம் மற்றும் போரை நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதே முரண்பாடுகள் முதலாளித்துவத்தை அகற்றுவதற்கான அடிப்படையையும் உருவாக்குகின்றன: அதாவது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றன.
இத்தகைய புறநிலை நிகழ்வுபோக்குகள் தொழிலாளர்களின் நனவில் கொண்டு வரப்பட வேண்டும், மேலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பு, ஓர் அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும், சமத்துவம் மற்றும் மனித தேவையைப் பூர்த்தி செய்யும் அடித்தளத்தில், அதாவது சோசலிச அடித்தளத்தில், சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, பகுத்தறிவார்ந்த ஒரு பொருளாதார திட்டமிடல் முறையை நிறுவுவதே அதன் நோக்கமாகும்.