மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து அமைதியாக போராடிய போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொலிஸிற்கு உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டிய வழக்குகளைத் திங்கட்கிழமை ஒரு பெடரல் நீதிபதி தள்ளுபடி செய்தார். அந்த போராட்டக்காரர்கள் ஜூன் 1, 2020 இல் லாஃபாயெட் சதுக்கத்தில் வன்முறையாக தாக்கப்பட்டனர்.
அமெரிக்க மக்கள் உரிமைகள் சங்கம், கறுப்பின மக்கள் வாழ்வும் மதிப்புடையதே அமைப்பு (Black Lives Matter) மற்றும் ஏனைய அமைப்புகள் பதிவு செய்த அந்த வழக்குகள், ட்ரம்பும், முன்னாள் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், பொலிஸ் மற்றும் பெடரல் முகமைகளில் உள்ள ஏனையவர்களும் போராட்டக்காரர்களின் முதல் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை மீறியதாக வாதிட்டன. செயின்ட் ஜோனின் எபிஸ்கோபல் தேவாலய வாசல் வழியாக ட்ரம்ப் ஒரு புகைப்பட நிகழ்வுக்குச் செல்வதற்காக, இரவு 7 மணி ஊரடங்குக்கு முன்னதாக வாஷிங்டன் டி.சி. லாஃபாயெட் சதுக்கத்தில் இருந்து போராட்டக்காரர்களைக் கலைக்க ட்ரம்ப் நிர்வாகம் சதி செய்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டிடனர்.
அந்த விவகாரம் அவசியமற்றதென வாதிட்டு, பைடென் நிர்வாகமும் முன்னாள் ட்ரம்ப் அதிகாரிளுடன் தரப்பெடுத்தது.
கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி டப்னெ பிரெட்ரிக் அவரது 51 பக்க தீர்ப்பில் வாதிகளின் வாதங்களைத் தள்ளுபடி செய்தார். பிரதிவாதிகளால் ஒரு சதி திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதை ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டும் உண்மையான பதிவுகளோ அல்லது எழுதப்பட்ட அறிக்கைகளோ இல்லாமல், அமைதியான அந்த எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பொலிஸ் அரசு தாக்குதல் நியாயப்படுத்தப்பட்டால் நீதிமன்ற தீர்ப்பு "மிகவும் ஊகமாக" இருக்கும் என்றவர் எழுதினார். பார் மற்றும் ட்ரம்ப் போன்ற பெடரல் அதிகாரிகள் எந்த மக்கள்நல வழக்குகளிலிருந்தும் விதிவிலக்கானவர்கள் என்றும் பிரெட்ரிக் தீர்ப்பளித்தார்.
வாதிகளின் வாதங்களில் இருந்த "ஊக" தன்மை குறித்து தீர்ப்பளிக்கையில், பிரெட்ரிக் எழுதினார்: "இந்த ஆரம்ப கட்டத்தில், உள்ளது உள்ளவாறே ஓர் உண்மையான பதிவு இல்லாமல், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் புகார்களின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும். இரு தரப்பினரும் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பே, லாஃபாயெட் சதுக்கம் ஜூன் 1 இல் ஏன் கலைக்கப்பட்டது என்பதன் மீதோ அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் நியாயமானவையா என்பதன் மீதோ நீதிமன்றம் எந்த முடிவுகளையும் எடுப்பது காலத்திற்கு முந்தி முதிர்ச்சியற்றதாக இருக்கும்,” என்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறை ஏற்படலாம் என்பது உட்பட, பொலிஸ் ஏன் லாஃபாயெட் சதுக்கத்தைக் கலைத்தது என்பதற்கு "வெளிப்படையான மாற்று விளக்கம்[கள்] உள்ளன" என்று பிரெட்ரிக் கூறினார். இதனால், அந்த வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்புக்கு விடையிறுப்பாக, கொலம்பியா மாவட்ட ACLU இன் சட்ட இயக்குனர் ஸ்காட் மைக்கேல்மென் கூறினார்: "பெடரல் அதிகாரிகள் தேசிய பாதுகாப்பைக் காப்பாற்றுவதற்காக செயல்பட்டார்கள் என்று கூறும் வரையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கர பலத்தைப் பிரயோகிப்பது உட்பட, பெடரல் அரசாங்கம் வன்முறையைப் பிரயோகிப்பதற்கு இன்றைய தீர்ப்பு அடிப்படையில் பச்சைக் கொடி காட்டுகிறது,” என்றார்.
பிரெட்ரிக் நடுநிலையான நடுவர் இல்லை. அப்பெண்மணி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இணை கவுன்சிலாக மூன்றாண்டுகள் பணியாற்றினார், அப்போது அவர் அமெரிக்க குடிமக்களை எதிரி போராளிகளாக சிறையிலடைக்க அரசாங்கத்திற்குத் "தெளிவான" உரிமை இருப்பதாக அந்த நிலைப்பாட்டை முன்வைத்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" கைது செய்யப்பட்டவர்களின் நிலைமைகள் "ஒரு நாட்டுக்கு எதிராக ஆயுதமெடுத்தவர்களுக்கு அந்நாடே முன்பில்லாத வகையில் சிறந்த" நிலைமைகளை வழங்கியிருப்பதாகவும் அவர் விவரித்தார். அவர் தண்டனை வழங்கும் ஆணையத்திற்கு ஒபாமாவால் நியமிக்கப்பட்டவராவார், பின்னர் ட்ரம்ப் 2017 இல் டிசி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பதவிக்கு அவரை நிறுத்தினார்.
வழக்காளிகளால் முன்வைக்கப்பட்ட "குற்றச்சாட்டுகளின்" உண்மைத்தன்மை, அந்த சம்பவத்தின் காணொளியைப் பார்த்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது. கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் பெடரல் முகவர்களும் முகாந்தரமின்றி அமைதியான போராட்டக்காரர்களை வன்முறையாக தாக்கினர் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தி அவர்கள் மீது வாயுவைப் பரவ விட்டதும் மூச்சுத் திணறி அவர்கள் தப்பியோடிய காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டன.
தன்னை "சட்ட ஒழுங்கு ஜனாதிபதியாக" பிரகடனப்படுத்தி, வாஷிங்டன் டி.சி. இல் துருப்புக்களை அணிதிரட்டி வருவதாக அறிவித்து ரோஸ் பூங்காவில் ட்ரம்ப் ஓர் உரை நிகழ்த்தி கொண்டிருந்த போது தான் லாஃபாயெட் சதுக்கத்தில் இந்த துப்புரவாக்கம் நடந்தது. அமெரிக்கா முழுவதிலுமான நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்த ட்ரம்ப் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்த அச்சுறுத்தினார். ஜோர்ஜ் ஃப்ளோய்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய போராட்டங்களை அவர் "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று அழைத்தார்.
அதாவது ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் லாஃபாயெட் பூங்காவில் போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்குச் சதி செய்தது மட்டுமல்ல, அவர்கள் அரசியலமைப்பை கவிழ்க்கவும், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவவும், அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனநாயக உரிமைகளை அகற்றவும் சதி செய்தனர்.
லாஃபாயெட் பூங்காவில் அந்நடவடிக்கை நடந்த அன்று காலை, ட்ரம்ப் ஆளுநர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினார், அதில் அவர், பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் "ஒரு இயக்கமாகும், நீங்கள் அதை நசுக்கவில்லை என்றால் அது இன்னும் மோசமாகிவிடும். நீங்கள் தான் மேலோங்கி இருக்க வேண்டும்," என்று எச்சரித்தார். அந்த அழைப்பில் ட்ரம்புடன் இணைந்து கொண்ட பர், “வீதிகள் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்,” அதற்கு "ஒரு பலமான பிரசன்னம்" அவசியம் என்று ஆளுநர்களுக்குத் தெரிவித்தார்.
வாஷிங்டன் டி.சி. இல் நடந்த அந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, சில மணி நேரங்களுக்குப் பின்னரே தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அது, அந்த நிர்வாகம் நாடு முழுவதும் என்ன செய்ய திட்டமிட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்ட நோக்கம் கொண்டிருந்தது.
ட்ரம்ப் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தை அப்போது பயன்படுத்தாமல் இருந்ததற்காக ஒரே காரணம், ஜனநாயக உரிமைகளை இந்தளவுக்குப் பகிரங்கமாக அகற்றுவது உரிய காலத்திற்கு முந்தையதாக இருக்கும் என்றும் மற்றும் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டும் அபாயம் இருப்பதாகவும் கவலை கொண்ட இராணுவ உயர் மட்டத்தின் ஒரு பகுதியினர் அதற்குத் தயங்கியதனால் ஆகும்.
நீதிபதி பிரெட்ரிக் தீர்ப்பில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அது பைடென் நிர்வாகத்தின் நிலைப்பாடாகும். அந்த தீர்ப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடனின் நீதித்துறை, பிரதிவாதிகள் சார்பாக, அதாவது ட்ரம்ப் சார்பாக நின்று, வழக்காளிகளின் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென வாதிட்டது. ட்ரம்ப் இப்போது பதவியில் இல்லாததால், அந்த வழக்கு விவாதத்திற்குரியதல்ல என்று நிர்வாகம் வாதிட்டது. நிர்வாக வழக்குரைஞர்களும், ஜனாதிபதியின் பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்காவிலிருந்து கூட்டத்தை அகற்றுவது நியாயமானதே என்று வாதிட்டனர், அடிப்படையில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லையென்றாலும் அது ஒவ்வொருவரின் அரசியலமைப்பு உரிமைகளை விட மேலோங்கியதே என்று வாதிடுவதாகும்.
ஊடகங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் நீதிபதியின் அந்த தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் ஒரு ஒன்பது பத்தி கட்டுரையைச் சம்பிரதாயமாக வெளியிட்டது, அதில் ட்ரம்பின் ரோஸ் கார்டன் உரை மற்றும் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்துவது உட்பட ட்ரம்ப் நடவடிக்கையின் அரசியல் சூழல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. வாஷிங்டன் போஸ்ட் இன்னும் விவரமான ஒரு பகுப்பாய்வை வெளியிட்டது அதில் ரோஸ் கார்டன் உரை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தொலைக்காட்சி செய்தி நிலையங்களைப் பொறுத்த வரை, இந்த தீர்ப்பு குறித்து செய்தியில் கூட குறிப்பிடப்படவில்லை.
ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகாலத் தாக்குதலை மூடி மறைப்பதே ட்ரம்ப் நிர்வாக காலம் நெடுகிலும் மற்றும் அதற்குப் பின்னரும் ஜனநாயகக் கட்சியினர் வகித்த பாத்திரமாக இருந்துள்ளது. "மிச்சிகனை விடுவிக்க!" என்ற ட்ரம்பின் அழைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டு, மிச்சிகன் மற்றும் வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைக் கடத்துவதற்கான பாசிசவாத சதி மற்றும் ஏனைய மாநிலங்களில் இந்த பெருந்தொற்றின் பரவல் மீதான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குதல் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
ஜனநாயக விரோத சூழ்ச்சிகள், 2020 தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதை முடக்கி அதிகார மாற்றத்தை நிறுத்த நோக்கம் கொண்ட ஜனவரி 6 பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் உச்சத்தை அடைந்தது. ஜனநாயகக் கட்சியும் மற்றும் ஊடகங்களும் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் உடந்தையாய் இருந்ததன் மீது வெளிவந்து கொண்டிருக்கும் வெளியீடுகளை ஒடுக்கி வருகின்ற அதேவேளையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி சக-சதிகாரர்களுடன் "நல்லிணக்கம்" மற்றும் "இருகட்சிகளது ஒருமனதான சம்மதத்துடன்" என்ற பெயரில் "நகர வேண்டியதன்" அவசியமே பைடெனின் நிலைப்பாடாக உள்ளது.
ஆளும் வர்க்கத்தின் இவ்விரு பிற்போக்குத்தனமான கன்னைகளும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்புக்கு எதிராக அரசு வன்முறையைப் பயன்படுத்தும் உரிமைக்காக நீதிமன்றத்தில் வாதிடுகின்ற நிலையில், லஃபாயெட் சதுக்க வழக்கில் பைடென் நிர்வாகத்தின் தலையீடு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஆளும் வர்க்கத்திற்குள் எந்த அரசியல் வட்டமும் இல்லை என்பதை கூடுதலாக உறுதிப்படுத்துகிறது.