வாக்கு மோசடி செய்ததாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினாலும், வொல்வோ கனரக வாகன ஒப்பந்தம் மீதான மறுவாக்கெடுப்பு 17 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவுபெற்றுள்ளதாக UAW கூறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின், டப்ளினில் வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்களால் முன்னர் நிராகரிக்கப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின் மீதான மறுவாக்கெடுப்பு 17 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவுபெற்றதாக புதன்கிழமை மாலை 8.43 மணிக்கு ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கம் (UAW) அறிவித்தது. அறிவிப்புக்கு 30 நிமிடங்களுக்குள், UAW தொழிலாளர்களிடம் மறியல் நிறுத்தப்பட்டதாகவும் வேலைநிறுத்தம் 'இப்போதே' முடிவடைவதாகவும் கூறியது.

லோக்கலின் கருத்துப்படி, ஒப்பந்தத்தின் பொதுவான பகுதிக்கு வாக்களிக்கப்பட்ட மொத்தம் 2,369 வாக்குகளில், 1,193 பேர் “ஆம்” என்றும் 1,176 பேர் “இல்லை” என்றும் வாக்களித்தனர், இது 50.3 சதவீதம் மட்டுமே. இதேபோல, மணிநேர தொழிலாளர்களுக்கான ஒப்பந்த பிரிவிற்கு கிடைத்த வாக்குகளும் 1,130 க்கு 1,147 என சரிபாதி விகிதத்திற்கு சற்று அதிகமாக பதிவானதாக UAW கூறுகிறது. மேலும், ஊழியர்களுக்கான ஒப்பந்தப் பிரிவு 54 “வேண்டாம்” வாக்குகள் மற்றும் 40 “ஆம்” வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது.

ஜூன் 26, 2020 அன்று வேர்ஜீனியாவின் டப்ளினில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் (புகைப்படம்: UAW லோக்கல் 2069 முகநூல் பதிவு)

தொழிலாளர்கள் உடனடியாக சமூக ஊடகத்தில் பரவலான கோபத்தையும் வெறுப்பையும் காட்டி பதிலிறுத்தனர். UAW வாக்கு மோசடி செய்ததாக பலரும் குற்றம்சாட்டி முடிவு முறையானதல்ல என சவால்விடுத்தனர், மேலும் ஏனையோர் மறுஎண்ணிக்கைக்கு அல்லது மறுவாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தனர். “மீண்டும் வாக்களியுங்கள்! விரைவில் அழைக்கப்படுவீர்கள்!” என்று ஒரு பிரபல கருத்து தெரிவித்தது. “தேவையான வாக்குகளை மாற்றுவதற்காக முடிவுகளை தாமதித்து வெளியிட அவர்களுக்கு போதுமான நேரம் இருந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது,” என்றும் “திருத்தப்பட வேண்டியுள்ளது” என்றும் மற்றொரு பதிவு தெரிவித்தது.

ஒரு வொல்வோ தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசுகையில், “ஒரு லாரி 'ஆம்' வாக்குகள் நிறைந்த பெட்டியுடன் அங்கே இருந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆரம்பத்திலிருந்தே, UAW உம் வொல்வோவும் இந்த தந்திரமான ஒப்பந்தத்தை எங்கள் மீது திணிக்க எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தவரை பாடுபட்டு கொண்டிருக்கின்றன” என்று பலரது குற்றங்களை வெளிப்படுத்தினார்.

தொழிலாளர்களின் தேர்தல் மோசடி என்ற சந்தேகத்தை UAW போதுமான அளவு நியாயப்படுத்தியுள்ளது. உறுதிப்படுத்தல் அறிவிப்பு கூட, வாக்கெடுப்பு முடிவடைந்து மூன்று மணிநேரங்களுக்கு மேலான நேரத்திற்கு பின்னரே வெளி வந்தது, அதாவது பெரும்பான்மை நிராகரிப்பில் சென்று முடிவடைந்த முன்னைய மூன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்ததை விட இப்போது அதிக தாமதமானது. இந்த முறை, லோக்கல் 2069 இன் தலைவர் மாட் ப்ளாண்டினோவும் மற்றும் ஏனைய உள்ளூர் உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகளும் இதை எப்படி தொடர வேண்டும் என்பது குறித்து UAW இன் தவறாக பெயரிடப்பட்ட “ஒற்றுமை இல்லம்” எனும் தலைமையகத்துடன் நிச்சயமாக ஆலோசித்திருப்பார்கள்.

வாக்குப்பதிவு நடைமுறையை லோக்கல் 2069 இன் தேர்தல் குழு தலைவர் மிஸ்ஸி எட்வார்ட்ஸ் மேற்பார்வையிட்டார், புதன்கிழமை வரை “ஆம்” வாக்குகளை சேகரிக்க இவர் பிரச்சாரம் செய்தவராவார். இவர் இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே வாக்குப்பதிவின் முடிவை பொருட்படுத்தாமல் வேலைக்கு திரும்ப வேண்டுமென தொழிலாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், வாக்குப் பெட்டிகளின் சாவி கொத்து மர்மமான முறையில் தொலைந்து விட்டதாக அன்று மாலை முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு உள்ளிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. ஒப்பந்தத்தின் “பொது கருத்துரை,” மீதான மொத்த வாக்குகள் 2,369 க்கும், மணிநேர தொழிலாளர் மற்றும் ஊழியர் பிரிவுகள் பற்றிய ஒப்பந்தத்தின் கருத்துரைப்புகளுக்கு கிடைத்த ஒட்டுமொத்த வாக்குகள் 2,371 க்கும் இடையிலான முரண்பாடு குறித்து பிற தொழிலாளர்கள் முகநூலில் கேள்விகள் எழுப்பினர்.

ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முழுவதுமான UAW இன் நடவடிக்கைகள் எந்த வகையில் பார்த்தாலும் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுவதால், இந்நிலையில் முடிவாக அறிவிக்கப்பட்ட வாக்குகள் முறையானவை என்று UAW கூறுவதை நம்புவதற்கு ஏற்புடைய எந்தக் காரணம் இல்லை.

லோக்கல் 2069 மொத்த வாக்கு எண்ணிக்கைகளை அறிவித்த மாத்திரத்தில், UAW இன் சர்வதேச அமைப்பு ஒரு இழிவான நேர்மையற்ற அறிக்கையை வெளியிட்டது. அது, புதிதாக நியமிக்கப்பட்ட UAW தலைவர் ரே காரியை (Ray Curry) மேற்கோள் காட்டி, “வொல்வோ கனரக வாகன ஆலையில் ஜனநாயக நடைமுறை பின்பற்றப்பட்டது. UAW உறுப்பினர்கள் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் முழுமைக்கும் அவர்களுடன் ஒன்றுபட்டு நின்றனர், இந்த வாரம் தொடக்கத்தில் நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, இப்போது ஒட்டுமொத்த ஒப்பந்தமும் மற்றும் மணிநேர வேலைக்கான ஒப்பந்தமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன,” என்று கூறியதை மேற்கோள் காட்டியது.

உண்மையில், “ஜனநாயக நடைமுறை” குறித்த எந்தவொரு பாசாங்கையும் நிறுவனம் முற்றிலும் காலிலிட்டு நசுக்குவதற்கு UAW அசராமல் இணைந்து செயலாற்றியுள்ளது, அதேவேளை தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை வலுக்கட்டாயமாக முன்னெடுப்பதற்காக “நிறுவனத்தின் நடவடிக்கைகளை” மூடிமறைக்கிறது.

புதன்கிழமை வாக்கெடுப்பு, தொழிற்சங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் இடையிலான மூன்றாவது தற்காலிக சலுகை ஒப்பந்தத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை 60 சதவீத வித்தியாசத்தில் வாக்குகள் அளித்த பெரும்பான்மை தொழிலாளர்களின் விருப்பத்தை மீறி UAW ஆல் நடத்தப்பட்டது. 90 சதவீத வாக்குகளுடன் தொழிலாளர்கள் ஏற்கனவே நிராகரித்த இரண்டு முன்னைய UAW ஆதரவு ஒப்பந்தங்களில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டதே மூன்றாவது ஒப்பந்தமாகும்.

வொல்வோவுக்கு அதன் உற்பத்தியில் ஏற்பட்ட தடங்கலும், கொள்முதல் ஆணைகளை பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட தாமதமும் ஒரே வாரத்தில் ஒரு உச்சபட்ச நெருக்கடியை விளைவித்த நிலையிலும், மேலும் வேலைநிறுத்தத்திற்கும் மற்றும் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவிற்கும் (VWRFC) ஆதரவு பெருகி வரும் நிலையிலும், UAW உடனான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு “முட்டுக்கட்டை” ஏற்பட்டிருப்பதாக நிறுவனம் ஞாயிறன்று அறிவித்தது. மூன்றாவது ஒப்பந்தம் அது வழங்கிய “கடைசி, சிறந்த மற்றும் இறுதி சலுகை,” என்று மீண்டும் அறிவித்து, நிறுவனம் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்தை அது நடைமுறைப்படுத்தவிருப்பதை அறிவிக்கும் ஒரு அசாதாரண நடவடிக்கையை எடுத்தது.

இது சட்டப்பூர்வ தேவை என்று தொழிலாளர்களுக்கு பொய்யாக பரிந்துரைத்தது, மூன்றாவது ஒப்பந்தத்தில் புதிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த UAW இல்லாமல், நிறுவனத்தின் வேலைநிறுத்த எதிர்ப்பு தாக்குதல் வெற்றிபெற்றிருக்காது, அதே நேரத்தில், ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும், தொழிலாளர்களின் வாக்குகளைப் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் கூறி தொழிலாளர்களிடம் குழப்பத்தையும் மனச்சோர்வையும் விதைக்க தொழிற்சங்கம் முயன்றது.

“இரண்டாவது வாக்கெடுப்பு முழுமையும் முட்டாள்தனமாக இருந்தது,” என்று மற்றொரு வொல்வோ தொழிலாளி WSWS க்கு தெரிவித்தார். மேலும், “அவர்கள் ‘முட்டுக்கட்டை’ பற்றி மக்களிடம் பொய்யாக பேசி ஏமாற்றவும், 11 சதவீத ‘வேண்டாம்’ வாக்குகளை ‘ஆம்’ வாக்குகளாக மாற்றவும் தான் இதைச் செய்தனர். எங்களது [லோக்கல்] அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும், UAW சர்வதேச அமைப்பு அனைத்திற்குமான மிகப்பெரிய குற்றவாளியாக இருந்தது” என்றும் கூறினார்.

“ஜனநாயக நடைமுறை” மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த முற்றிலும் கேவலமான UAW இன் உண்மையான நடத்தை 0.3 சதவீத வித்தியாசத்தில் 17 வாக்குகள் கிடைத்தது பற்றி இது கூறுவதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது, இந்த வாக்குகள் நிறுவனத்துடனான அதன் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த போதுமானதாம், ஆனால் அதை நிராகரிக்க நூற்றுக்கணக்கான வாக்குகளும் 60 சதவீத வித்தியாசமும் போதுமானதாக இல்லையாம்.

மோசமான நம்பிக்கையுடன் UAW நடத்திய புதன்கிழமை வாக்கெடுப்பு என்பது, நிறுவனத்தின் விதிமுறைகளை பாதுகாக்கவும் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நசுக்கவும் நோக்கம் கொண்டு குறைந்தபட்சம் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அது வகுத்த மூலோபாயத்தின் உச்சபட்சமாகும்.

எவ்வாறாயினும், நிறுவனத்துடனான அதன் ஒப்பந்தத்திற்கு தொழிலாளர் எதிர்ப்பின் அளவு மற்றும் தீவிரத்தை UAW எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தால் கவனமாக வடிவமைக்கப்பட்ட “சிறப்பம்சங்களை” விட அதிகமாக தொழிலாளர்கள் ஒருபோதும் பெறவில்லை என்றாலும், தற்போதைய ஒப்பந்தங்கள், சுகாதார செலவினங்களை கணிசமாக அதிகரிப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கான சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது, பணவீக்கத்திற்கும் குறைவாக உயர்மட்ட ஊதிய உயர்வை வழங்குவது, மற்றும் பல அடுக்கு “ஊதிய முன்னேற்றம்” என்பதை பல அடுக்கு ஊதியம் மற்றும் சலுகை முறை என மறுபெயரிடுவது ஆகியவற்றை செயல்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கான வாக்கெடுப்புக்களின் போதான தொழிலாளர்கள் எதிர்ப்பை அவ்வளவு விரைவாக வென்றுவிட முடியாது எனக் கண்ட, UAW வேலைநிறுத்தக்காரர்களை பட்டினியில் வீழ்த்தவும் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததுடன், வாரத்திற்கு வெறும் 275 டாலர் வேலைநிறுத்த ஊதியத்தை அவர்களுக்கு வழங்கி வருகிறது. UAW ஒரு ஊடக இருட்டடிப்பைத் தக்க வைத்துக் கொண்டது, அதாவது பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கம் குறித்து தொழிலாளர்களை இருளில் ஆழ்த்தியதுடன், அவர்களது வேலைநிறுத்தம் பற்றி ஏனைய வாகனத் தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை.

இறுதி பகுப்பாய்வில், பல மாதங்களாக பெரும் துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்திய வொல்வோ வேலைநிறுத்தக்காரர்கள், நிறுவனத்தால் தோற்கடிக்கப்படவில்லை; மாறாக UAW ஆல் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர். மீண்டும் வேலைக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது பணியிட சர்வாதிகார நிபந்தனைகளை விதிக்கவும், மிகப் பெரிய போர்க்குணத்தைக் காட்டிய தொழிலாளர்களை களையெடுக்கவும் முனைவதற்கு நிறுவனமும் UAW உம் தற்போது தீர்மானித்துள்ளது நிச்சயமாக நடக்கக்கூடும்.

ஒப்பந்தத்தின் பெருநிறுவன சார்பு தன்மையையும் மற்றும் அதனை பாதுகாப்பதில் வொல்வோவுக்கு இருக்கும் திருப்தியையும் குறிக்கும் வகையில், நியூ ரிவர் வலி ஆலையின் பொது மேலாளர் ஃபிராங்கி மார்ச்சண்ட், இந்த ஒப்பந்தம் “ஆலையின் நீண்டகால வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் நிறுவனம் பாதுகாக்க” அனுமதிக்கும் என்று அசோசியேட்டட் பிரஸ் புதன்கிழமை தெரிவித்ததை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

திட்டமிடப்பட்ட மிருகத்தனமாக துரிதப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும், “இப்போது நமது கவனம் முழுவதும் முடிந்தளவு விரைவாக வாடிக்கையாளர்களுக்கு கனரக வாகனங்களை உற்பத்தி செய்து வழங்குவதிலும், மேலும் ஊழியர்களுடனான நமது உறவுகளை வலுப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்” என்றார்.

எவ்வாறாயினும், வொல்வோவின் போராட்டம் முடிவதற்கும் வெகு தொலைவில் உள்ளது. இது ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு மிக முக்கியமான படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, இந்த ஆண்டு அலபாமாவில் உள்ள வோரியர் மெட் நிலக்கரிச் சுரங்கம், கனடாவில் பெரியளவில் செயல்படும் வேல் சுரங்கம், மேலும் மிக சமீபத்தில் கான்சாஸின் டொபேக்காவில் உள்ள ப்ரிட்டோ-லே ஆலை மற்றும் இன்னும் பல நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக ஏராளமான ஒப்பந்த நிராகரிப்புக்கள் நிகழ்ந்த நிலையில், புதிய சலுகைகளை அமல்படுத்துவதற்கும் கணிசமான ஊதிய உயர்வுகளைக் கோரும் தொழிலாளர்களின் முயற்சிகளை தடுப்பதற்கும் பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க உதவியாளர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இந்த வேலைநிறுத்தம் உருவெடுத்தது.

இரண்டாவதாக, UAW இன் துரோகப் பங்கு, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் போலி-இடதுகளின் அரசியல் போக்குகள் அனைத்திற்கும் மறுக்க முடியாத நிராகரிப்பு ஆகும். நிறுவனத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான தனது முயற்சிகளில், பெருநிறுவனத்தின் எடுபிடிகளாகவும், தொழிலாளர்கள் நலன்களுக்கு விரோதமாகவும் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளின் பங்கை UAW மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

மூன்றாவதாக, சமீபத்திய தொழில்துறை தொழிலாளர் போராட்டங்களில் இது தனித்துவமானது, வொல்வோவின் எதிர்ப்பு வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (Volvo Workers Rank-and-File Committee - VWRFC) உருவாக்குவதன் மூலம் மிகவும் நனவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை எடுத்துள்ளது. குழுவின் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் நியூ ரிவர் வலி ஆலைத் தொழிலாளர்களின் உறுதிப்பாட்டிற்காகவும் மற்றும் அபிலாஷைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளன. இவர்கள் இந்த ஆலையிலுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, அமெரிக்காவிலுள்ள மாக் கனரக வானக ஆலை மற்றும் பிற வாகன ஆலைகளின் தொழிலாளர்களுக்கும், மேலும் அதற்கு அப்பால் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வொல்வோ தொழிலாளர்களுக்கும் மற்றும் சர்வதேச அளவிலான ஏனைய தொழிலாளர்களுக்கும் ஊக்கமளித்துள்ளனர்.

ஏற்கனவே உருவாகி வரும் மற்றும் இன்னும் வரவிருக்கும் போராட்டங்களை வழிநடத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும், வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை (VWRFC) உருவாக்கி, உலகளவில் தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவது முன்னெப்போதையும் விட மிக அவசரமானதாக உள்ளது.

வொல்வோ தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (VWRFC), volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Loading