பொலிவியாவில் பன்சர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 50 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 21 1971 அன்று, பொலிவியன் தளபதி ஹூகோ பன்சர் சூவாரெஸ், முதலாளித்துவ தேசியவாத இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் குவான் கோஸே தோரெஸுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தைத் தொடங்கினார். பன்சர் ஆட்சி குறுகிய காலத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை தடைசெய்து, பல்கலைக்கழகங்களை மூடி மற்றும் தொழிலாளர்களை பாரிய வறுமையில் தள்ளுகையில், அது பொலிவியாவின் பாரிய இயற்கை வளங்களான வெள்ளீயம், எண்ணைய், எரிவாயு ஆகியவற்றை சுரண்டுதல் மூலம் வெளிநாட்டு மூலதனத்திற்கும் பாரம்பரிய தன்னலக்குழுவிற்கும் இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இந்த நிகழ்வை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான மூலோபாய அனுபவமாக புரிந்து கொண்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளராக இருந்த டிம் வொல்ஃபோர்த்தால் பொலிவியாவில் பன்சரின் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு ஒன்பது நாட்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட தோல்வியின் கசப்பான பாடங்கள் என்பதில் குறிப்பிட்டபடி: “இந்த பாடங்களை உள்ளூர்த்துக்கொள்வதிலிருந்து நேரத்தை இழக்கக்கூடாது. பொலிவியாவில் நடந்தவை பெரு, சிலி மற்றும் ஆர்ஜென்டினாவில் கூட விரைவில் பின்தொடரலாம். முதலாளித்துவத்தின் நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளதுடன் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்க இயக்கம் மிகவும் உறுதியாக உள்ளது. இங்கு தலைமையின் நெருக்கடி மிகவும் கூர்மையாக முன்வைக்கப்படுகிறது”.

பொலிவியன் 1971 ஆட்சிக் கவிழ்ப்பின் படிப்பினைகளை எடுக்க தவறியதும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தீர்ப்பதில் தோல்வி பற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள் சிலி (1973), உருகுவே (1974), பெரு (1975) மற்றும் ஆர்ஜென்டினாவில் (1976) நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகளால் சோகமான முறையில் உறுதி செய்யப்பட்டது.

1976 அளவில், ஆர்ஜென்டினா, சிலி, உருகுவே, பராகுவே, பொலிவியா, பிரேசில் மற்றும் பெரு உள்ளிட்ட தென் அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இராணுவ ஆட்சிக்குழுக்களால் ஆளப்பட்டதுடன், அவற்றில் பல பாசிச சக்திகளால் ஆதரிக்கப்பட்டன. சோசலிச மற்றும் இடதுசாரி தொழிலாளர்களை இல்லாதொழிக்கவும், கடத்தவும் படுகொலை செய்யவும் அவர்கள் இழிவான Operation Condor நடவடிக்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் நாடுகடத்தப்பட்டனர்.

பொலிவியா மற்றும் தென் அமெரிக்க கண்டம் முழுவதுமான நிகழ்வுகள், எந்த வகையிலும் தவிர்க்க முடியாதவை அல்ல. மாறாக, துரோக தேசியவாத மற்றும் ஸ்ராலினிச தலைமைகளால் திட்டமிட்டு நிராயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய எழுச்சிகளை அவர்கள் தொடர்ந்து தோற்கடித்ததால் உருவானவையாகும். ஆனால் தொழிலாள வர்க்கம் புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தீர்ப்பதை தடுத்து அதன் தோல்விக்கு வழிவகுத்த மிக முக்கியமான காரணி, இந்த நிகழ்வுகள் கட்டவிழ்ந்துவருகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை விட்டு வெளியேறிய பிரெஞ்சு சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) உட்பட பப்லோவாத திருத்தல்வாதிகள் வகித்த பங்கு ஆகும்.

1952 புரட்சி முதல் 1971 ஆட்சிக்கவிழ்ப்பு சதிவரை

1971 இன் பொலிவிய ஆட்சிக் கவிழ்ப்பு, 1952 புரட்சியைத் தொடர்ந்து இயற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ தேசியவாத சீர்திருத்தங்கள் காலாவதியாகிவிட்டதை எடுத்துக்காட்டியது. அப்புரட்சியானது தொழிலாள வர்க்கம், குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய அரசியலில் மிகவும் தீர்க்கமான சமூக சக்தியாக வெடித்ததை கண்டது.

குட்டி முதலாளித்துவ தேசிய புரட்சிகர இயக்கம் (Mouvement national révolutionnaire - MNR) ஆயுதமேந்திய தொழிலாளர்களின் ஆதரவுடன் அதிகாரத்தை எடுத்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் பொலிவிய முதலாளித்துவத்தை எதிர்கொள்ளும் வரலாற்று முட்டுச்சந்தை அது அம்பலப்படுத்தியது. இவ்வியக்கம் மிகப்பெரிய வெள்ளீய சுரங்க உரிமையாளர்களை அபகரித்து, நில சீர்திருத்தத்தை தொடங்கி, கல்வியறிவு மற்றும் ஆரம்பகால கல்வியை விரிவாக்க முயன்றதுடன் மற்றும் முதன்முறையாக அனைவருக்குமான வாக்குரிமையை நிறுவியது.

MNR உம் 1952 புரட்சியும், 1932-1936 சாக்கோ போரின் தோல்விக்குப் பின்னர் உருவானவையாகும். இதில் பொலிவியா அதனிலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்றும் பலவீனமான பராகுவேயிடம் நதித்திட்டு வழியாக கடலுக்கான தனது கடைசி தன்னாட்சி அணுகலை இழந்தது. பராகுவேயிடம் அடைந்த இராணுவ அவமானம், பொலிவியா மீதான பழைய தன்னலக்குழுவின் ஆதிக்கத்திற்கு சாவு மணி அடித்தது. மேலும் இறுதியில் MNR இல் அணிதிரண்டிருந்த சிறிய நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின் சீர்திருத்தவாத இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது.

சோசலிசத்தை வெளிப்படையாக நிராகரித்ததை அடிப்படையாகக் கொண்ட MNR இனால் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ-தேசியவாத சீர்திருத்தங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நல்ல உறவுகளை அனுமதித்தன. இது போருக்குப் பிந்தைய விரைவான பொருளாதார விரிவாக்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு நிதிரீதியாக உதவியது.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டபடி, அது நடுத்தர வர்க்கத்தின் சமூக சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்காது, MNR இன் 1951 தேர்தல் வெற்றி மற்றும் MNR இன் நிறுவனர் வக்கீல் விக்டர் பாஸ் எஸ்டென்சோரோ ஜனாதிபதியானதை உறுதி செய்வதை இராணுவம் தூக்கியெறிவதை தடுக்க கிளர்ந்தெழுந்த ஆயுதமேந்திய தொழிலாளர்களின் தலையீட்டின் மூலம் MNR இறுதியாக அதிகாரத்தை அடைந்தது.

1952 புரட்சியில் விக்டர் பாஸ் எஸ்டென்சோரோவை சுமந்த ஆயுதமேந்திய சுரங்கத் தொழிலாளர்கள்

1971 இல், உலக நிலைமை பெரிதும் மாறியது. 1964 அளவில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் சுரங்க நடவடிக்கைகளை அதிக இலாபகரமானதாகவும், சர்வதேச நாணய நிதியம் ஒரு 'ஸ்திரப்படுத்தல்' திட்டத்தை உருவாக்க அழைப்புவிடப்பட்டபோது, பொலிவியாவின் அரச நிலக்கரி நிறுவனத்தில் (Comibol) தொழிற்சங்கங்களில் தலையீட்டை அகற்றவும் கோரியது. MNR இன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எஸ்டென்சோரோவை அவரது துணைத் தலைவர் ஜெனரல் ரெனே பேரியன்டோஸ் தூக்கி எறிந்து, 1970 இல் தளபதி தோரெஸ் பதவிக்கு வரும்வரையில் ஒரு தொடர் ஆட்சிக்கவிழ்ப்புகளைத் தூண்டிவிட்டார்.

போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஏற்றத்திற்கான முக்கிய பொருளாதார அடித்தளமான சர்வதேச அளவில் டாலர்-தங்க மாற்றீட்டுக்கு உத்தரவாதம் அளிப்பதை வாஷிங்டன் நிறுத்திவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் அறிவித்த மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 18, 1971 அன்று பன்சரின் சதித் திட்டம் தொடங்கப்பட்டது. 'நிக்சனின் அதிர்ச்சிக்கு' பின்னால் இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் பொருளாதார மேலாதிக்கத்தின் அரிப்பு, அமெரிக்க முதலீடு மற்றும் உதவியைச் சார்ந்து இருந்த தென் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் வலுவிழப்பிற்கு பின்னாலும் இருந்தது.

ஜனவரி 28, 1973 நியூ யோர்க் டைம்ஸ் பொலிவியாவின் பொருளாதாரம் பற்றிய அறிக்கை, 'பொலிவியாவின் தைரியமான மதிப்பிறக்கம்' 1952 புரட்சிக்குப் பின்னர் தொழிலாளர்கள் பெற்ற எந்த வெற்றிகளையும் பின்வாங்குவதில் பன்சர் ஆட்சியின் தாக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியது. செய்தித்தாள் பின்வருமாறு கூறியது:

'அரசாங்க-எதிர்ப்பு சக்திகள் சீர்குலைந்த நிலையில், ஜனாதிபதி பன்சர் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அடிபணிந்து, பொலிவியானோவை கடந்த அக்டோபர் 27 இறுதியில் டாலருக்கு எதிராக 12 முதல் 20 வரை மதிப்பிறக்கம் செய்தது. இது 14 ஆண்டுகளில் பொலிவியாவின் முதல் பணமதிப்பிறக்கமாகும். நீண்டகாலத்திற்கு பிந்திய இந்த பணமதிப்பிறக்கம் 20 ஆண்டுகளில் எந்த அரசியல் நிகழ்வும் தாக்காத அளவிற்கு சராசரி பொலிவிய மக்களை பாதித்தது.

முந்தைய அபகரிப்புகள் பற்றிய ஆட்சியின் அணுகுமுறைக்கு டைம்ஸ் கவனத்தை ஈர்த்தது: 'முன்பு தேசியமயமாக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் பிற சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு ஈடுசெய்ய பொலிவியாவின் சமீபத்திய கடன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.' பின்தங்கிய நாடுகளில் சோசலிசத்திற்கான முக்கிய வாகனமாக கெரில்லாயிசத்தை ஊக்குவிப்பவர்களை விட இது மிகவும் கடுமையான மதிப்பீட்டில் முடிவடைந்தது: 'பாதி தொழிலாளர் வேலையற்று இருந்ததுடன் மற்றும் பணியிலுள்ளவர்கள் மாதத்திற்கு 25 முதல் 35 டாலர்கள் வரை சம்பாதிப்பதுடனான வாழ்க்கை செலவின் அதிகரிப்பு கெரில்லாக்களை விட அரசாங்கத்திற்கு மிகவும் ஆபத்தானதாக இருந்தது”.

தோரெஸுக்கு எதிரான பன்சரின் சதி நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தது. வலதுசாரி இராணுவ சதிகாரர்களுக்கு எதிராக ஒரு தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சீர்திருத்த அரசாங்கத்திற்கு உறுதியளித்த ஒரு சதித்திட்டத்திற்கு பத்து மாதங்களுக்கு முன்பு தோரெஸ் தானே அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்காக, தோரெஸ் மக்கள் சட்டமன்றத்தை அமைத்தார். அதன் 240 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கங்களால் நியமிக்கப்பட்டனர். பாசிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகள் முதல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரெஞ்சு OCI வரையிலான ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிகள் அனைவரும் மக்கள் சட்டமன்றத்தை சோவியத் வகையிலான அமைப்பு என வரையறுக்க ஆவலாக இருந்தனர்.

மக்கள் சட்டசபைக்கான தோரெஸின் அழைப்புகளை, பாசிசவாதிகள் பலவீனத்தின் அறிகுறியாகக் கண்டனர் மற்றும் அவர் விரைவில் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் எனக் கணக்கிட்டனர். முன்னாள் ஜனாதிபதி பாஸ் எஸ்டென்சோரோ தலைமையிலான பாசிச பாலாஞ்ச் சோசலிஸ்டா பொலிவியானா (Falange Socialista Boliviana - FSB) மற்றும் MNR இன் வலதுசாரி ஆதரவுடன் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலம் இதை முன்கூட்டியே கையிலெடுத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

மறுபுறம், திருத்தல்வாதிகளுக்கோ மக்கள் சட்டசபை மீதான 'சோவியத் தன்மை' பற்றிய விவாதம் வேறு அரசியல் தேவையைக் கொண்டிருந்தது. சட்டசபையின் மீதான ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க ஆதிக்கம் தொடர்பாகவும், குறிப்பாக சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவர் குவான் லெச்சீன் தொடர்பான விவாதத்தை மறைக்கவும் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில், 'மழுங்கிய ஆயுதங்கள்' மூலம் புரட்சியை லெச்சீன் அல்லது தோரெஸால் நடத்த முடியும் என்ற பப்லோவாத அறிக்கையை ஆதரிப்பதற்கு இது உதவியது. இவ்வாறு, இருவரும் தயாரித்த காட்டிக்கொடுப்புகளை பொலிவியாவில் ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்திற்கு உரிமை கொண்டாடும் அமைப்பான கியேர்மோ லோரா தலைமையிலான தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (Partido Obrero Revolucionario - POR) அம்பலப்படுத்தவில்லை,

1971இல் நிர்வாக தலைநகர் லா பாஸ் இல் நடந்த சண்டையில் காயமடைந்த தொழிலாளி

பொலிவியாவில் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் கோட்டையான சாண்டா குரூஸ் நகரில் இருந்து பான்சர் தனது தாக்குதலைத் தொடங்கினார். அவர் லா பாஸ் மற்றும் பொலிவியாவின் எஞ்சிய பகுதிகளை மூன்றே நாட்களில் கைப்பற்றிக்கொண்டார், லா பாஸின் தொழிலாளர்கள் வீரம்மிக்கவர்களாக இருந்துபோதும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதமேந்திய எதிர்ப்பை மட்டுமே சந்தித்தார்.

பொலிவிய தொழிலாள வர்க்கத்தை தொழிலாளர் புரட்சிகரக் கட்சி காட்டிக் கொடுத்ததும் பப்லோவாதமும்

தொழிலாளர் புரட்சிகர கட்சியின் (Partido Obrero Revolucionario - POR) தலைவராக, கியேர்மோ லோரா, தோரெஸ் ஆட்சிக்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதில் ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஆதரவளித்தார், ஒரு மக்கள் சட்டமன்ற தீர்மானத்தை பாதுகாத்து பின்வருமாறு ஆதரவளித்தார்:

தற்போதைய நிகழ்ச்சிப்போக்கானது முரண்பாடுமிக்கது: அரசாங்கம் ஒருபுறம் சில ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை அதே வேளையில், மறுபுறம் அது தேசிய மற்றும் மக்கள் நலன்களுக்கு முரணான ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பாட்டாளி வர்க்கம் நமது மக்களின் விடுதலைக்கு சாதகமான அனைத்தையும் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து போராடுகிறது. இது தேசிய விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான பாதைக்கான ஒரு உண்மையான புரட்சிக்கு இட்டுச்செல்ல புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை திணிக்க போராடுகிறது. இதுதான் தொழிலாள வர்க்கத்தின் இறுதி இலக்குகளை மறக்காமல் தற்போதைய நிகழ்ச்சிப்போக்கில் எங்கள் தந்திரோபாயமாக உள்ளது.

அத்தகைய தீர்மானம் மார்க்சிசத்தை முற்றிலுமாக நிராகரித்து, பொலிவியாவின் தரகு முதலாளித்துவத்தினிடமும் மற்றும் அதன் இராணுவத்திடமும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் பணியை ஒப்படைத்தது, சோசலிசத்திற்கான அனைத்துப் போராட்டங்களையும் முற்றிலுமாக கைவிடுவதை குறிப்பிடத் தேவையே இல்லை.

இந்த தீர்மானத்தை ஸ்ராலினிச பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) முன்வைத்தது. அது 'முதலாளித்துவ' மற்றும் 'சோசலிச' புரட்சி பற்றிய அதே மோசடியான இரண்டு-கட்ட தத்துவத்தை மீண்டும் உருவாக்கியது. முதலாவது புரட்சியானது காலனித்துவ நாடுகளில் பலவீனமான 'தேசிய முதலாளித்துவத்தினால்' தலைமைதாங்கப்படும் என்றது. இந்த ஸ்ராலினிச கொள்கை ஏற்கனவே பல நாடுகளில் தொழிலாளர்களுக்கு தோல்விக்கு பின் தோல்விக்கு வழிவகுத்திருந்தது.

இருப்பினும், நான்காம் அகிலம் நிறுவப்பட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்ராலினிஸ்டுகளின் காலடியில் மட்டுமே குற்றத்தை வைக்க முடியவில்லை. பொலிவியன் நிகழ்வு இதை குறிப்பாக கடுமையான விதத்தில் நிரூபித்தது.

1946 இல் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் நான்காவது காங்கிரஸில் பிரபல்யமான 'புலகாயோ ஆய்வறிக்கையை' அதன் தலைமை வரைந்து அதற்கு ஆதரவைத் திரட்டியதிலிருந்து, லோரா தலைமையிலான தொழிலாளர் புரட்சிகர கட்சி ஏற்கனவே பொலிவியன் அரசியலில் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அந்த அறிக்கை, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் நிலைப்பாட்டில், பொலிவியாவில் முதலாளித்துவ-ஜனநாயகப் பணிகள் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று அறிவித்தது. இது 1970 இல் தோரெஸ், ஆட்சிக்கு அரசியல் ஆதரவை வழங்கி, மக்கள் சட்டமன்றத்தில் தொழிலாளர் புரட்சிகர கட்சியால் ஆதரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு நேரடி முரண்பாடாக இருந்தது.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1935 இல் சர்வதேச இடது எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக ஆர்ஜென்டின புலம்பெயர்ந்தோர்களின் பணிகள் மூலம் பொலிவியாவில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டது. அதே சமயம் ஸ்ராலினிஸ்டுகள் தங்களை 1940 இல் புரட்சிகர இடது கட்சி (PIR) உடன் ஒருங்கிணைத்தனர். பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சி (PCB) 1950 இல் புரட்சிகர இடது கட்சி (PIR) உறுப்பினர்களால் மட்டுமே நிறுவப்பட்டது. மேலும் 1959 வரை அதன் முதல் மாநாட்டை நடத்த முடியாது இருந்தது.

1971 தோல்வியில் தனது தீர்க்கமான பங்கை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத லோரா, பன்சரின் ஆட்சி கவிழ்ப்புக்கு சில நாட்களுக்குப் பின்னர், பன்சர் தலைமையிலான இராணுவத்தின் தீவிர வலதுசாரி பிரிவுகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தோரெஸ் ஆட்சி, தொழிலாளர்களை ஆயுதம் ஏந்தச் செய்யும் என தொழிலாளர் புரட்சிகரக் கட்சி நம்பியிருந்ததை ஒப்புக்கொண்டார். மக்கள் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்சிச எதிர்ப்பு தீர்மானத்திற்கு தனது கட்சியின் ஆதரவை லோரா உறுதிப்படுத்தினார். பொலிவியன் நிகழ்வுகள் பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆய்வு கோடிட்டுக் காட்டப்பட்டு புல்லட்டின் பத்திரிகையில் வெளியிடப்பட்டதற்கான பதிலில் லோரா பின்வருமாறு எழுதினார்:

1970 அக்டோபர் இல் தொழிலாள வர்க்கம் ஆயுதங்கள் இல்லாமல் அரசியல் காட்சியை ஒரு சாதாரணமான வெகுஜனமாக ஆக்கிரமித்துக்கொண்டது. குண்டரிசத்தை தோற்கடிக்க, அரசியல்மயமாக்கப்பட்ட தொழிலாளியின் கைகளில் துப்பாக்கியை கொடுப்பது இன்றியமையாதது என்பது அப்போது தெளிவாக புரிந்துகொண்டது. இந்த நேரத்தில் மார்க்சிஸ்டுகளான நாங்கள் உட்பட எல்லோரும் ஆயுதங்கள் ஆளும் இராணுவக் குழுவினால் வழங்கப்படும் என்று நினைத்தார்கள். இது மக்கள் மீது தங்கியிருப்பதன் மூலமும், அவர்களுக்கு போதுமான சுடும்சக்தியை வழங்குவதன் மூலமும் மட்டும் அவர்கள் குறைந்தபட்சம் வலதுசாரி குண்டரிசத்தை நடுநிலையாக்க முடியும் என்று கருதினார்கள். இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. சோசலிசத்திற்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிகுறிகளைக் காட்டும் மற்றும் இராணுவத்தை ஒரு நிறுவனமாக அணிதிரட்டுவதை கடுமையான ஆபத்திற்கு உட்படுத்திய மக்களை ஆயுதமாக்குவதற்கு முன்பு, தோரெஸ் தனது சக தளபதிகளிடம் சரணடைய விரும்பினார் என்பதை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த அரசியல் ஒப்புதல் வாக்குமூலம் எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு அது ஒரு திருத்தத்தை செய்ய வேண்டும். லோரா 'கற்பனை' செய்ததுபோல் தோரெஸ் செயல்படுவார் என்று எந்த உண்மையான மார்க்சிசவாதியும் நம்பியிருக்க மாட்டார். ஒரு இடது முதலாளித்துவப் பிரிவு தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சியின் ஆபத்தை விட பிற்போக்கின் வெற்றியையே விரும்புகிறது என்பது மார்க்சிசத்தின் அரிச்சுவடி, இது 1848 புரட்சிகள் வரை நீண்டுசெல்கிறது.

தொழிலாளர் இயக்கத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்ட POR ஐ மரபுவழி மார்க்சிசத்தின் பாதுகாவலனாக்கிய புலாக்காயோவின் ஆய்வறிக்கைக்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர் லோராவின் மோசமான சரணாகதிக்கு என்ன காரணம்?

இந்த இரண்டு வரலாற்று தருணங்களுக்கிடையில், நான்காம் அகிலம் அதன் சொந்த அணிகளிலிருந்தே ஒரு பெரிய தாக்குதலைச் சந்தித்தது. இது ஸ்ராலினிச மற்றும் தேசியவாத கட்சிகளுள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைத்துவிட முயன்றதற்கு எதிராக மார்க்சிசத்தை பாதுகாக்க, மிஷேல் பப்லோ தலைமையிலான பிரிவுடனான 1953 இல் பிளவுக்கு இட்டுச்செல்ல வழிவகுத்தது.

1953ல் பிரெஞ்சுப் பிரிவிற்கு எதிரான பாப்லோவின் அதிகாரத்துவ மிரட்டல் பிளவை ஏற்படுத்துவதற்கு முன்பே, பப்லோவாத நிகழ்ச்சி நிரலை முழுமையாகச் செயல்படுத்தியவர்களில் பொலிவியன் தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (POR) முதலாவதாக இருந்தது. 1952 புரட்சியின் போது புலகாயோவின் ஆய்வறிக்கையை தொழிலாளர் புரட்சிகரக் கட்சி முற்றிலுமாக கைவிட்டது. ஆயுதமேந்திய தொழிலாளர்கள் தெருக்களைக் கட்டுப்படுத்தும் நிலைமைகளின் கீழ், சுரங்கத் தொழிலாளர் தலைவர் லெச்சீன் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பொலிவிய தொழிலாளர் கூட்டமைப்பின் (COB) ஏனைய அங்கத்தவர்களை பாஸ் எஸ்டென்சோரோவின் முதலாளித்துவ அரசாங்கத்தை இடதுபுறம் தள்ளுவதற்காக அமைச்சரவையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் புரட்சிகரக் கட்சி கோரியது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில், பப்லோவாதிகள் அத்தகைய முயற்சிகளை தங்கள் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு சென்றனர். அவர்களின் குறிக்கோள் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜோசப் ஹான்சனால் முன்வைக்கப்பட்ட, அதாவது நனவான பாட்டாளி வர்க்க மார்க்சிச தலைமை இல்லாமல் புரட்சியை 'மழுங்கிய ஆயுதங்கள்' மூலம் மேற்கொள்ள முடியும் என்ற சூத்திரமாகும். இதில் முழுமுதலாக அடங்கியிருந்வர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது ஆர்ஜென்டினா இணை சிந்தனையாளர் ஏர்னஸ்டோ 'சே' குவேரா போனற முதன்மையான குட்டி முதலாளித்துவ கெரில்லா தலைவர்கள் ஆவர். 'சே' குவேரா கியூபாவின் புரட்சியை தனது நாட்டில் திரும்பவும் உருவாக்குவதற்கான பேரழிவுகரமான முயற்சியின் போது, 1967 இல் சிஐஏ மற்றும் அமெரிக்க பயிற்சி பெற்ற பொலிவிய இராணுவத்தால் அவர் கொல்லப்பட்டார்.

கியேர்மோ லோரா, 1952ல் பாஸ் எஸ்டென்சோரோ (Paz Estenssoro) வுக்கான தனது ஆதரவில் இருந்தும் மற்றும் பப்லோவாத அரசியலுக்கான ஆதரவிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார். இருப்பினும், அதே நேரத்தில், பப்லோவாதிகளுக்கு எதிரான அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை அவர் உறுதியாக எதிர்த்தார். அவர் பொலிவியாவில் தேசியப் பணிகளின் சுமை, சர்வதேச விவாதங்களுக்கு நேரத்தை அனுமதிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறினார்.

இந்த தேசியவாத அணுகுமுறையின் மையத்தில் இருந்தது சந்தர்ப்பவாத அரசியலாகும். இது லோராவின் POR ஆனது பொலிவிய தொழிலாள வர்க்கத்தை ஜெனரல் தோரெஸின் ஆட்சிக்கு அடிபணியச் செய்யும் ஒரு மக்கள் முன்னணி அரசியலை தழுவிக்கொள்ள வழிவகுத்தது. உலக சோசலிசப் புரட்சிக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான போராட்டம் மற்றும் திருத்தல்வாத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான ஒரு சர்வதேச புரட்சிகர முன்னோக்குக்கு வெளியே தேசிய முதலாளித்துவ அழுத்தங்களை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை. பொலிவியாவில் தேசியக் கடமைகள் என்ற பெயரில் இவை அனைத்தையும் லோரா நிராகரித்தார். அதன் மூலம் தன்னையும் தொழிலாளர் புரட்சிகரக் கட்சியையும் பப்லோவாத அரசியலுக்கு அடிபணியச் செய்தார்.

தோரெஸுக்கு ஆதரவான இந்த தீர்மானம், முதலாளித்துவ இராணுவத்தையே நம்பி, 'மழுங்கிய ஆயுதங்களுடன்' ஒரு புரட்சியை மிகத் தீவிர வடிவத்திற்கு வழிநடத்தும் யோசனையை அளித்தது. அதே நேரத்தில், இந்தக் கொள்கை ஸ்ராலினிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டு மற்றும் சால்வடோர் அலெண்டே அரசாங்கத்தின் கீழ் அண்டை நாடான சிலியில் பப்லோவாதிகளால் ஆதரிக்கப்பட்டது. அங்கு பிரான்சிற்கான சிலி தூதுவர் கவிஞர் பப்லோ நெருடா, ஸ்ராலினிஸ்டுகளின் ஏமாற்றுத்தனத்தையும் பாசிசத்தின் அபாயங்களை நிராகரிப்பதையும் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார், 'எங்கள் இராணுவத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதை விரும்புகிறோம். அது சீருடையில் உள்ள மக்களாகும்' என்றார்.

சிலி இராணுவம், பொலிவியாவின் இராணுவம் கண்டறிந்த பாதையை பின்பற்றி, தோரெஸைப் போலவே செயல்பட்ட சோசலிஸ்ட் கட்சி தலைவர் சால்வடோர் அலெண்டே க்குப் பின்னர் ஜெனரல் அகுஸ்டோ பினோசே உடன் இணைந்து, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு புரட்சிகர சவாலை முன்னெடுப்பதை தடுப்பதை இராணுவத்திடம் கையளித்தது.

சிலி நாட்டின் ஜெனரல் அகஸ்டோ பினோசெட், பொலிவிய சர்வாதிகாரி ஹ்யூகோ பன்சருடன்

லோரா, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கவும் மற்றும் பன்ஸரால் தூக்கிவீசப்படுவதை தடுக்வும் தோரெஸை மட்டும் நம்பியிருக்காது, அலெண்டே மற்றும் தோரெஸின் பெருவியன் நண்பரான தேசியவாதி குவான் வெலாஸ்கோ அல்வராடோவையும், தாம் பன்சர் பிரிவினால் தாக்கப்பட்டால் பொலிவிய அரசாங்கத்தை பாதுகாக்க வருவார் என நம்பினார் என்பதையும் கட்டாயம் இங்கு குறிப்பிடவேண்டும். ஆனால் அவர்கள் யாரும் லோராவால் 'முன்கணிக்கப்பட்டது' போல் செயல்படவில்லை என்பதை கூறத்தேவையில்லை.

தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிராக சிலி முதலாளித்துவத்தைப் பாதுகாக்க ஜெனரல் பினோசே மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக, அலெண்டே தனது உயிரைக் கொடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 இல் வலதுசாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பெர்முடெஸால் வெலாஸ்கோ தூக்கியெறியப்பட்டார்.

பொலிவிய சோகத்திற்குப் பின், வெறும் ஐந்தாண்டு கால இடைவெளியில் தென் அமெரிக்காவில் நாட்டிற்கு பின் நாடாக மீண்டும் நிகழ அனுமதித்ததில் ஒரு முக்கிய அம்சம், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் லோராவின் POR இன் பங்கை மறைத்த பொலிவியாவிற்கு வெளியே உள்ள 'ட்ரொட்ஸ்கிஸ்டுகள்' எனக் கூறப்பட்ட ஒருதொடர் அமைப்புகளாகும். லோராவின் கொள்கைகளுடன் ஒத்துழைத்த பின்னர், அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கம் பன்சரின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதை தடுக்க முயன்றனர்.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல, அனைத்துலகக் குழு உடனடியாக பொலிவிய நிகழ்வுகளின் சர்வதேச முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. பொலிவிய அறிக்கை: தோல்வியின் கசப்பான படிப்பினைகள் என்பதில் சோசலிச தொழிலாளர் கட்சி(SWP) இன் அமெரிக்க பப்லோவாதிகள் வகித்த முக்கிய பங்கை அது சுட்டிக்காட்டியது. SWP லோராவை தங்களில் ஒருவராக அங்கீகரித்து, மக்கள் சட்டமன்றத்தின் தொடக்கத்திலிருந்தே அவரது கொள்கைகளை ஆதரித்தனர்.

1969 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவில் கெரில்லா தலைவர் மரியோ சான்டுச்சோ மற்றும் பெரோனிச ஆதரவாளரான நெஹுவேல் மோரேனோவுக்கு இடையே பிளவு ஏற்பட்ட பின்னர், SWP ஆனது கெரில்லாவாதத்தினை பப்லோவாதம் ஊக்குவித்ததன் மீது ஒரு சந்தர்ப்பவாத விமர்சனத்தில் ஈடுபட்டது. பொலிவியா பற்றிய கேள்வியில், தொழிலாள வர்க்கத்தை தோரெஸ் ஆட்சிக்கு அடிபணியச்செய்வதற்கு POR மற்றும் பொலிவிய ஸ்ராலினிஸ்டுகளின் மக்கள் முன்னணிக் கொள்கையை ஊக்குவிப்பதன் மூலம் நிரந்தரப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கைத் தாக்குவதற்கு அது ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்தது.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, பொலிவியா தொடர்பாக SWP இன் பத்திரிகையான Intercontinental Press பின்வருமாறு கூறியது: 'தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தங்களை ஆயுதபாணியாக்கி, தொழிற்சங்கங்கள் வெளிப்படையாக தோரெஸ் ஆட்சிக்கு விமர்சன ஆதரவை வழங்கின. இந்த 'ஆதரவு' 'கயிறு தூக்கிலிடப்பட்ட மனிதனைத் தாங்குவது போல' என்ற லெனினின் வரையறைக்கு முற்றிலும் பொருந்துகிறது எனக் குறிப்பிட்டது. 1920 களில் தொழிற் கட்சியுடனான உறவில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்கான அவரது வழிகாட்டுதல் பற்றிய லெனின் இவ்வாறான ஆதரவு பற்றி குறிப்பிட்டதை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்வதாகும். இதன் அர்த்தம், முதலாளித்துவ தோரெஸின் சர்வாதிகாரத்திற்கான சரணடைதல் கொள்கைகளுக்கு முன்னால் POR இற்கு 'மரபுவழி' முகத்தை வழங்குவதாகும்.

புல்லட்டின் வெளியிட்ட கட்டுரை, முதலாளித்துவ தோரெஸ் ஆட்சிக்கும் பிரிட்டனில் உள்ள பாரிய தொழிலாள வர்க்க தொழிற் கட்சிக்கும் இடையே உள்ள அபத்தமான ஒப்புமையை அம்பலப்படுத்தியதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வோடு பப்லோவாதிகளின் தீவிர கலைப்புவாத முன்னோக்கை வேறுபடுத்திக் காட்டியது. இலத்தீன் அமெரிக்காவில் இப்போது ட்ரொஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியம் மிகவும் பெரியளவில் உள்ளது. அடிப்படையானது என்னவென்றால், இப்போது காலனித்துவ மக்களின் போராட்டம் முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைந்துபோகிறது. இந்தப் போராட்டம் இப்போது குறிப்பாக நிக்சனின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்தொடர்ந்து சக்திவாய்ந்த அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தையும் இணைத்துக் கொண்டுள்ளது”.

லோராவின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பதிலளித்தபோது, அத்தகைய சாத்தியக்கூறுகளின் வளர்ச்சியானது பப்லோவாதத்தை எதிர்ப்பதாகக் கூறும் சர்வதேச சக்திகளால் உருவாக்கப்பட்ட பெரும் தடைகளை எதிர்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பிரான்சின் OCI ஆகும், அதன் தலைவர் பியர் லம்பேர் முன்பு சமூக-ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச வெகுஜன கட்சிகளினுள் 'தனித்துவமான நுழைவுவாதம்' ('entrisme sui generis') என்ற பப்லோவாத நிலைப்பாட்டை எதிர்ப்பதில் பெரும் பங்கு வகித்திருந்தார்.

OCI லோராவை பாதுகாத்து அனைத்துலகக் குழுவுடன் உடைத்துக் கொள்கிறது

1971 வாக்கில், OCI ஒரு நீண்டகால மத்தியவாத திருப்பத்திற்கு உட்பட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதில் 1953 ஆம் ஆண்டு பப்லோவாதத்துடனான பிளவின் முக்கியத்துவத்தை நிராகரித்து, 'நான்காம் அகிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப' வேண்டியதன் அவசியத்தை பல ஆண்டுகளாக அது பிரகடனம் செய்து வந்தது.

பிரான்சிலேயே, அது 'இடதுகளின் ஐக்கியத்திற்கான' (unité de la gauche) கோரிக்கைகளை நோக்கி மேலும் மேலும் திரும்பியது, அதாவது 1969 முதல் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு பொதுவான தேர்தல் முன்னணியைப் பாதுகாத்தது. இந்த அமைப்புகள் தங்களின் சொந்த சந்தர்ப்பவாத கணக்கீடுகளின் அடிப்படையில் 'ஐக்கியத்தை' ஏற்றுக்கொள்ளத் தவறி, உத்தியோகபூர்வ 'இடது' நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தியபோது, OIC அவர்கள் அனைவரையும் 'பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முன்னணியை அழித்ததற்காக' வசைபாடியது.

இந்தச் சூழலில்தான் OCI 1971 ஜூலையில் எசன் (Essen) இல் நடந்த அதன் இளைஞர் பேரணியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவாக லோராவின் POR-ஐ உலகிற்கு பொய்யாக அறிமுகப்படுத்தியது. குறிப்பிடத்தக்க வகையில், OCI POR இல் இருந்து பிரதிநிதிகளை பேரணிக்கு அழைத்தது மட்டுமல்லாமல், பழைய மத்தியவாத ஸ்பானிய POUM இன் பிரதிநிதிகளையும் அழைத்தது. பிராங்கோவின் தாக்குதலை எதிர்கொண்டு, ஸ்ராலினிஸ்டுகளின் உத்தரவின் பேரில் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் சேர்ந்து தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கியதன் மூலம் ஸ்பெயினில் பாசிச வெற்றிக்கு வழி வகுத்ததில் POUM ஸ்பெயினில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

ஆட்சிக் கவிழ்ப்பின் ஒரு மாதத்திற்குப் பின்னர், செப்டம்பர் 1971 இல் பொலிவியாவில் ஏற்பட்ட தோல்விக்கான POR இன் பொறுப்பை சுட்டிக்காட்டிய அனைவரையும் அவர்களை 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் எதிரிகள், எதிர்ப் புரட்சியின் முகவர்கள் மற்றும் நனவுடனோ அல்லது நனவற்றோ நான்காம் அகிலத்தின் எதிரிகள்' என்று OCI கண்டித்தது ...”

இந்த தற்பெருமையானது தென் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பொலிவியாவின் பாடங்களை மறைக்க உதவியதுடன், அடுத்த வருடங்களின் இரத்தம் தோய்ந்த தோல்விகளுக்கு வழி வகுத்தது. இந்தப் பாடங்களை புதைத்துவைத்தமை இன்றுவரையில் திருத்தல்வாதத்தின் நோக்கத்திற்கு சேவை செய்கிறது. 1971 இல் எவரும் செய்திருக்கக் கூடிய சிறந்ததைச் செய்த கியேர்மோ லோராவை ஒரு 'மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்' ஆக முன்வைத்தது, பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் காஸ்ட்ரோவாத கெரில்லாயிசத்தினுள் கலைத்துவிடும் கொள்கையை நிராகரித்தபோதும், நான்காம் அகிலம் அழிக்கப்பட்டு 'மீள்கட்டியமைக்கவேண்டும்' என்ற அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவான நிலைப்பாடாகும். இந்த விளக்கம், இந்த அமைப்புகளின் கடந்தகால மற்றும் நிகழ்கால துரோகங்களை மறைப்பதற்காகவே என்பதை அர்த்தப்படுத்துகின்றது. அதே நேரத்தில் அனைத்து விதமான திருத்தல்வாத போக்குகளுடனும் கொள்கையற்ற கூட்டணிகளுக்கு இதன் மூலம் கதவைத் திறந்து விடுவதாகும்.

OCI ஐப் பொறுத்தவரை, லோராவை பாதுகாப்பது அதன் 'இடதுகளின் ஐக்கியம்' கொள்கைகளில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கின்றது. இதன் மூலம் OCI, முன்னாள் பிரெஞ்சு பிரதமர் லியோனல் ஜோஸ்பன் உட்பட பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் பல உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் முன்னாள் பிரேசிலிய ஜனாதிபதி லூலாவின் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தில் பல உயர் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்தது.

1971 புரட்சியில் அரசியல் கைதிகளை சுற்றி வளைக்கும் படையினர்

OCI உடன் பிளவு ஏற்பட்ட போதிலும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் பொலிவியன் நிகழ்வுகளின் முக்கியத்துவம் ஒன்றரை தசாப்தங்களுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் (WRP) இடையில் பிளவு ஏற்பட்டபோது முற்றாக ஆராயப்பட்டு, அது இயக்கத்தின் தலைமையில் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை மீண்டும் நிறுவியது. 1985 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது என்பதில் குறிப்பிட்டுள்ளபடி:

பொலிவிய நிகழ்வுகளால் உடைவு நேரடியாகத் தூண்டப்பட்டாலும், சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) [WRPக்கு முந்தைய பிரிட்டிஷ் பிரிவு] விரைவில் அவை அனைத்தும் இரண்டாம்தர முக்கியத்துவம் வாய்ந்தவை என்று விரைவில் வலியுறுத்தியது. மேலும் இயங்கியல் சடவாதம் பற்றிய தீர்மானத்தினை எசனில் OCI எதிர்த்தபோதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் ஏற்கனவே உடைவு நடந்ததுவிட்டது என்றது. இது ஒரு போலி வாதமாகும். லோராவுக்கு OCI அரசியல் பாதுகாப்பினை வழங்கிய பொலிவியாவில் நடந்த நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்காவின் பாட்டாளி வர்க்கத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. ட்ரொட்ஸ்கி சீனா, ஜேர்மனி மற்றும் ஸ்பெயினில் நடந்த நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்ததைப் போல, தற்போதைய காலகட்டத்தில் மத்தியவாதத்தின் எதிர்-புரட்சிகர தாக்கங்களை அம்பலப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த அனுபவத்தை மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். லோராவும் OCI உம் பிழை என அறிவிப்பது மட்டும் போதாது. மார்க்சிசத்தின் நிலைப்பாட்டிலிருந்தும் மற்றும் சர்வதேச சோசலிசப் புரட்சிக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது. இந்த நிகழ்வு சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய அனுபவத்தின் மட்டத்தினை உயர்த்துவதாக இருக்கும். பொலிவிய பாட்டாளி வர்க்கம் நான்காம் அகிலத்துடன் நீண்டகால தொடர்பைக் கொண்டிருப்பதால் இது மிகவும் அவசியமானது.

போலி இடதுகள் இன்னும் லோராவை பாதுகாக்கின்றனர்

நஹுவேல் மோரேனோ (Nahuel Moreno) வின் அரசியல் வாரிசுகள், ஆர்ஜென்டினாவில் முதலாளித்துவ-தேசியவாத பெரோனிச இயக்கத்தின் ஒப்புதலுடன் கெரிலாயிசத்தினுள் தம்மை கலைக்க பல தசாப்தங்களாக முயற்சித்து, பின்னர் OCI உடன் கூட்டணிக்கு முயற்சித்தவர்கள் இன்றுவரை லோராவை மார்க்சிசத்தின் உறுதியான பாதுகாவலன் என்று விவரிக்கிறார். 2009 இல் லோராவின் மரணம் குறித்து La Izquierda Diario வில் எட்வார்டோ மோலினா எழுதிய ஒரு இரங்கல் செய்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 'அவரது கடைசி நாட்கள் வரை, கியேர்மோ லோரா முதலாளித்துவ ஆட்சியின் மீதான விட்டுக்கொடுக்காத தன்மையையும் மற்றும் முதலாளித்துவத்துடன் வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிரான தனது போர்க்குணமிக்க உறுதிப்பாட்டையும் மற்றும் மார்க்சிசம், தொழிலாளர் புரட்சி மற்றும் சோசலிசத்தின் பதாகைகளை பாதுகாத்ததுடன், முதலாளித்துவ கட்சிகளில் சேர அல்லது MAS (Movimiento al Socialismo) இன் ஜனரஞ்சகத்தை நிராகரிப்பதை கைவிட்ட பல இடதுசாரிகள் மற்றும் முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதிகளைப் போன்றவரல்ல”.

லம்பேரின் முன்னாள் இலத்தீன் அமெரிக்க அரசியல் பங்காளிகள், ஆர்ஜென்டினா ஜோர்க் அல்டாமிராவால் பல தசாப்தங்களாக வழிநடத்தப்பட்டனர். 1971 பொலிவிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் சமகால அரசியல் இருப்புநிலைக் குறிப்பு பரவலாக அறியப்பட்ட படைப்பான வரலாற்றாசிரியர் ஒஸ்வால்டோ கோஜியோலா இன் 'ஆர்ஜென்டினா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு' என்பதில் காணக்கூடியதாக உள்ளது. கோஜியோலா Altamira’s Política Obrera அமைப்பின் உறுப்பினரும் மற்றும் கல்வியாளர்களின் வட்டாரங்களில் இலத்தீன் அமெரிக்க மார்க்சிசம் பற்றிய முக்கிய வரலாற்றாசிரியராகக் கருதப்படுகிறார்.

அவரது 'வரலாறு' 2006 இல் வெளியிடப்பட்டது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, பன்சர் சதியின் உச்சத்தின் போதல்லாது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் லோரா நாடுகடத்தப்பட்டதிலிருந்து, POR இனை MNR இன் “ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகர முன்னணி” (FRA) மற்றும் தோரெஸ் உடனும் ஸ்ராலினிஸ்டுகளுடனும் இணைந்து கொள்ள POR ஐ வழிநடாத்தினார்.

1971 பொலிவிய நிகழ்வுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது அத்தியாயத்தில், அவர் OCI இன் அறிக்கையின் தர்க்கத்தை மீண்டும் கூறுகிறார். மேலும் POR பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் 'அவை மக்கள் எப்போதும் அதிகாரத்தை கையிலெடுக்க விரும்புகின்றார்கள் என்ற ஊகத்தை அடித்தளமாக கொண்டிருந்தனர் என்பதால் அவர்களின் விமர்சனங்கள் பிரயோசனமற்றவை” என்று நிராகரித்தார்.

சுருக்கமாக, பொலிவியன் நிலைமை நம்பிக்கையற்றது, மற்றும் லோரா உட்பட ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளின் அரசியல் தலைமைகள் ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் வெகுஜனங்கள் 'அதிகாரத்தை எடுக்க விரும்பவில்லை'.

கோஜியோலா பின்னர் அனைத்துலகக் குழுவுடனான OCI இன் பிளவுக்கான தனது ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினார். இது, லோரா மற்றும் பிரான்ஸ் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து வகையான முதலாளித்துவ அரசியல் சக்திகளுடனான கூட்டணியை 'நான்காம் அகிலத்தை மீள்கட்டியமைக்கவேண்டும்” என்ற மூடுதிரையின் கீழ் வலுப்படுத்தியது. அவர் எழுதுகிறார்: 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புனைகதைகளின் தொகுப்பு வெடித்ததே என்பது இங்கு புதுமையானதாகும்'.

அவர் தொடர்கிறார்: 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளான நெருக்கடியானது ஒரு புதிய சர்வதேச மறுகுழுவமைப்பிற்கு வழிவகுத்துள்ளது. Política Obrera (1969 முதல் POR உடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அதுவரை சர்வதேச தொடர்பு இல்லாமலிருந்த) மற்றும் ஆர்.நபுரி (முன்னாள் Praxis) தலைமையிலான காஸ்ட்ரோவாத புரட்சிகர முன்னணிப்படையிலிருந்து (Castroite Revolutionary Vanguard) பிரிந்த பெருவிய புரட்சிகர மார்க்சிஸ்ட் தொழிலாளர் கட்சி (POMR), பாரிஸில் நடைபெறும் OCI ஏற்பாடு செய்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.”

POR மற்றும் அதன் கூட்டாளிகளின் புரட்சிகர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தீர்க்கமான காரணி 'கற்பனையாக' அனைத்துலகக் குழுவால் திணிக்கப்பட்ட தளைகள் என்று அவரது வாசகர்கள் நம்ப வேண்டும் என்று கோஜியோலா விரும்புகிறார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னரும் அடுத்த தசாப்தங்களிலும் POR ஆல் உருவாக்கப்பட்ட கூட்டணிகளை அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. கட்சி, இராணுவத்திற்கு அடிபணியும் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தியதுடன், ஆயுதப் படைகளின் இளைய அதிகாரிகளுக்கு அழைப்புவிடுவதற்கு மேலும் தன்னை வழிநடத்தியது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து பெறப்பட்ட 'சுதந்திரத்தின்' விளைவுகளை நல்ல காரணத்திற்காக கோஜியோலா தனது வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை. கோஜியோலாவின் சொந்த Política Obrera மற்றும் OCI முன்பு கண்டனம் செய்த ஒவ்வொரு திருத்தல்வாதத்தின் ஒவ்வொரு போக்கினருடனும், அவர்களின் கண்முன்னே வெடித்த தற்காலிக சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு முயற்சிப்பதே அந்த 'சுதந்திரம்' ஆகும்.

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியிலும் பிரேசிலிய தொழிலாளர் கட்சியிலும் தங்களை மேலும் இணைத்துக் கொள்வதற்கு முன்பு, அதன் தலைவர்களை CIA இன் முகவர்கள் என OCI குற்றம்சாட்டி, Política Obrera மற்றும் POR உடனான கூட்டணியை விட்டு வெளியேறியிருந்தது.

Política Obrera மற்றும் OCI இரண்டும் பின்னர் தனித்தனியாக, அவர்களின் முந்தைய ஆர்ஜென்டினா பரமஎதிரியான நஹுவல் மோரேனோவுடன் 'ஐக்கியத்ததை' ஏற்படுத்த முயற்சித்தன. லோரா மற்றும் பப்லோவாதிகளால் பயன்படுத்தப்பட்ட அதே சாக்குப்போக்குகளின் கீழ், அதாவது 'தேசிய' பணிகள் மற்றும் வரலாறு பற்றிய கொள்கை ரீதியான விவாதங்களைத் தடுக்கிறது, மேலும் இவை 'உண்மையான' இயக்கத்தின் வழியில் நிற்கக்கூடாது என்பதன் வழியில் அந்த கூட்டணிகள் தவறாமல் உருவாக்கப்பட்டன. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், கோஜியோலா இன் Política Obrera ஆனது OCI உடனான அதன் செயலிழந்த கூட்டணிக்கு பிரதியீடாக 2018 இல் ரஷ்யாவின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (OKP) ஸ்ராலினிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்தது.

இலத்தீன் அமெரிக்காவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டமையுங்கள்!

பொலிவியாவில் நடந்த பன்சர் சதி, இலத்தீன் அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தால் கண்டம் முழுவதும் நிகழ்த்தவுள்ள எதிர்ப் புரட்சிகர தாக்குதலுக்குக்கான முதல் தொடக்கமாகும்.

இந்த தாக்குதலை தோற்கடிக்க கண்டம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் இயலாமைக்கான பொறுப்பு, தொழிலாளர்களை, இயல்பாகவே சோசலிசத்திற்கு விரோதமானதும் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள தகமை அற்றதுமான ஏதோ ஒரு குட்டி முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிமைப்படுத்தி வைத்ததிலேயே தங்கியுள்ளது.

உலக முதலாளித்துவம் மட்டுமல்ல, சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள் மற்றும் தேசியவாத இயக்கங்களின் ஆழ்ந்த நெருக்கடியின் ஒரு காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் பிரிவுகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட அடித்தளங்களையே இந்த சக்திகள் நிராகரித்தன. சர்வதேச அளவில் அந்த நெருக்கடி, நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும், ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கிச மதிப்பீட்டையும் முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது.

பன்சர் சதியின் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்பு 1930 களுக்குப் பிறகு காணத மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது, இது 1970களின் எழுச்சிகளை வெகுவாக மூடிமறைக்கிறது. சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, ஒரு எழுச்சிமிக்க தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டு, ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் வேகமாக வலதுசாரி பக்கம் நோக்கி திரும்புகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'சோசலிசத்திற்கான புதிய பாதை' என பப்லோவாதிகளால் முன்வைக்கப்பட்டதும் மற்றும் 'இருபத்தியோராம் நூற்றாண்டின் சோசலிசத்தை' பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆட்சியாகவும் முன்வைக்கப்பட்ட ஈவோ மோராலெஸ் (Evo Morales) இன் மற்றொரு திவாலான முதலாளித்துவ-தேசியவாத அரசாங்கமும் 1971 இல் பன்சரை ஆதரித்த அதே பாசிச குழுவின் ஆதரவுடன் சாண்டா குரூஸில் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதி மூலம் தூக்கி எறியப்பட்டது.

சிலி மற்றும் கொலம்பியாவில், அமெரிக்க பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படையினர் எவ்வித தண்டனையும் பெறாமல் வெகுஜன எழுச்சிகளை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கடத்தி கொலை செய்தனர். அண்டை நாடான பிரேசிலில், பாசிச ஜனாதிபதி போல்சனாரோ, ஜனவரி 6 இல் 2020 தேர்தல்களை கவிழ்க்க முயன்ற அமெரிக்க பாசிஸ்டுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஒரு சர்வாதிகாரத்திற்கான ஆளும் வர்க்க தயாரிப்புகளை முன்னெடுத்து வருகிறார். உள்ள ஆளும் வர்க்கங்கள் பெரும் வர்க்கப் போர்களுக்குத் தயாராகும் வகையில் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்புகின்றன.

தொழிலாளர்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது பப்லோவாத கலைப்புவாதிகளை தோற்கடிப்பதில் வெற்றிபெற்ற மற்றும் அவர்கள் ஊக்குவித்த திவாலான ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ-தேசியவாத ஆட்சிகள் அனைத்தையும் கடந்து வந்து விட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைப்பதைக் குறிக்கிறது.

ஆர்ஜென்டினாவில் தொழிலாளர் கட்சி ஸ்ராலினிசத்துடன் கூட்டு சேர்ந்து நான்காம் அகிலத்தை “மீள ஸ்தாபிப்பதற்கு” முயல்கிறது

ஆர்ஜென்டினாவின் தொழிலாளர் கட்சி ரஷ்ய நவ-பாசிசத்துடன் உறவுகள் கொண்ட ஸ்ராலினிசத்துடனான கூட்டு பற்றிய கேள்விகளை அறியமுடியாதபடி மறைத்து வைக்கிறது

Loading