ட்ரொட்ஸ்கியின் ஐரோப்பாவும் அமெரிக்காவும்: ஜேர்மனியில் பதிப்பிக்கப்பட்ட அரிய கட்டுரைகளின் புதிய பதிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியில் உள்ள மார்க்சிச பதிப்பகமான arbiterpresse Verlag ஐரோப்பாவும் அமெரிக்காவும் என்னும் நூலின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது; இது 1920 களில் லியோன் ட்ரொட்ஸ்கியின் உரைகள், கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இந்த முக்கிய படைப்பிற்கு ஒரு புதிய முன்னுரையை நாம் கீழே வெளியிட்டுள்ளோம்.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள உரைகளும் கட்டுரைகளும் 1920களில் லியோன் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பெற்றவை. உலக நிலைமை பற்றிய மதிப்பீடு, சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கு இதையொட்டிய பணிகள் என்ற இரு விடயங்கள் பற்றி அவை விவாதிக்கின்றன.

இப்பிரச்சினைகள் பற்றி ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறை சமூக ஜனநாயகவாதிகள் மார்க்சிச முறையை (முற்றிலும் அவர்கள் அதைத் கைவிடுவதற்கு முன்பு) மாற்றியதில் இருந்து முற்றிலும் மாறாக உள்ளது; சமூக ஜனநாயகவாதிகளின் அணுகுமுறைதான் பின்னர் ஸ்ராலினிசவாதிகளால் மார்க்சிசத்தின் உருக்குலைக்கப்பட்ட வடிவத்தில் ஏற்கப்பட்டிருந்தது. அத்தகைய சிந்தனை வடிவமைப்பில், முதலாளித்துவம் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சி நிகழ்வுப்போக்கில் உள்ளது என்றும், இதனால் தொழிலாளர்கள் இயக்கத்தில் இயல்பாகவே ஒரு வளர்ச்சி ஏற்பட்டு இறுதியில் வெற்றி கிட்டப்படும் என்றும் கருதப்பட்டது. எனவே கட்சியின் பணி ஏதும் செய்யாமல் காத்திருத்தல், அல்லது -இந்த வழிமுறையின் “இடது” கூறுபாடாக இடைவிடா, ஆனால் இலக்கற்ற செயற்பாடுகள் தேவை என்பதாகும்.

ஒரு மார்க்சிசவாதி என்னும் முறையில், ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடு பொருளாதார நிகழ்வுகள்தான் சமூக, மற்றும் அரசியல் வளர்ச்சியை இறுதியாக நிர்ணயிக்கின்றன என்று இருந்தது. ஆனால் அது இறுதியாகத்தான். மக்கள்தான் தங்கள் வரலாற்றை நிர்ணயிக்கின்றனர், அதுவும் மிக முழுநனவுடனாகும். வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதார நிகழ்வுப்போக்கின் எந்திரரீதியான மறுஉற்பத்தி அல்ல. அது வர்க்கங்கள், கட்சிகள் மற்றும் தனிநபர்களால் முக்கியமான திருப்புமுனைக்காலங்களில் முக்கிய பங்கு வகிக்கப்பட்டுப் போராட்டத்திற்குள்ளாகிறது.

மேலும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் போக்கும் நேர்கோடாகவே செல்வதும் இல்லை. அது பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது; அரசியல் தந்திரோபாயங்களுக்கு உறுதியான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திடீர்த் திருப்ப நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் வகையில் குணாதிசயப்படுத்தப்படுகின்றது. இக்காரணத்தை ஒட்டித்தான் ஒரு மார்க்சிச கட்சி வெறுமே நிகழ்வுகளை எதிர்கொள்ளுவது மட்டும் என்று இல்லமால், நிகழ்வுகளைக் முன்கூட்டியே கணிக்க முடிகிறது, அவசியமானால் தலைமையை வழங்க முடிகிறது.

வழமையாக ஒரு விதிபோல் இருபதாம் நூற்றாண்டு பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படும்போது, இக்கூறுபாடு பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதோடு -புறக்கணிக்கவும்படுகிறது. ஆயிரமாண்டின் (millennium) முடிவில் வெளியிடப்பட்ட பரிசீலனைக் கருத்துக்களும் கட்டுரைகளும் இரு உலகப் போர்கள், ஸ்ராலினிசம் மற்றும் பாசிசம் போன்ற பெரும் பேரழிவுகள் பற்றி முக்கியமாக விவாதிக்கின்றன -இவை ஒரு புதிய நூற்றாண்டில் மீண்டும் ஏற்படாது என்னும் நம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இல்லை. இதற்கு மாறாக எத்தகைய திருப்பு முனைகளில் வரலாறு எத்தகைய ஒரு புதிய பாதையில் சென்றிருக்கக்கூடும் என்பது பற்றி போதிய கவனம் செலுத்தப்படவில்லை. ஆயினும் இது திருப்பு முனைகள் பற்றிய ஆய்வுதான்; எத்தகைய மாற்றீடுகள் வந்திருக்கலாம் என்பது பற்றி; இவை நமக்கு வரலாற்றின் படிப்பினைகளைப் பற்றி கற்பதற்கு உதவுகின்றன.

1920 கள் பொதுவாக இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம், மற்றும் பின்னர் ஒரு புறத்தில் புரட்சிகர எழுச்சிகள், மற்றொரு புறம் பாசிசம், இரண்டாம் உலகப் போர் ஆகியவை ஏற்றம் பெறுவதற்கு நடுவே உள்ள காலம் என்று ஒப்புமையில் அமைதியான காலம் என்று கருதப்படுகின்றன. ஆனால் இக்காலகட்டத்தை ஒருவர் அகநிலை காரணியின் அதாவது தொழிலாள வர்க்கத்தின் தலைமை மற்றும் அரசியல் நோக்குநிலை குறித்து ஒருவர் கருதுவாரானால் அது 1920களில் நிகழ்ந்த போக்குகள்தான் பேரழிவுகளை ஏற்படுத்துவதில் முக்கியமாக இருந்தன, ஒருவேளை அவை தவிர்க்கப்பட முடியாதவை என்றாலும் அநேகமாக அப்படித்தான் நடந்திருக்கும் என்று கூறக்கூடிய அளவிற்குக் கருத்து தோன்றியிருக்கும்.

இப்பின்னணியில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைப் போக்கே மிகவும் முக்கியமானது ஆகும். அந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் அவர் சோவியத் அரசாங்கத்தின் தலைமையிலும் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையிலும் இருந்தார். இவருடைய அரசியல் அதிகாரம் லெனினுக்கு அடுத்தபடியாகத்தான் இருந்தது. தசாப்தத்தின் முடிவில் அவர் தொலைவில் இருந்த ஒரு சிறிய துருக்கியத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தார். எழுச்சிபெற்று வந்த அதிகாரத்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ராலினிசப் பிரிவு ட்ரொட்ஸ்கியை நாடுகடத்திய தன்மை, உலகக் கம்யூனிச இயக்கத்தில் இருந்து மார்க்சிசத்தை வெளியேற்றியதற்கு ஒப்பாகும் எனக்கூறலாம்.

சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியில் இந்நிகழ்வு ஆழ்ந்தவிளைவுகளை ஏற்படுத்தியது என்பது அதிகம் மறுக்கப்படவில்லை -குறைந்தபட்சம் தீவிர வரலாற்றாளர்களைப் பொறுத்த வரையிலேனும். இடது எதிர்ப்பு நசுக்கப்பட்டது 1937ல் அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது. ஒரு தலைமுறையைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிசவாதிகள் உயிரோடு அழிக்கப்பட்டது, மற்றும் மாஸ்கோ போலி விசாரணைகளை ஒட்டி முக்கிய புத்திஜீவிகள் அழிக்கப்பட்டதும் நிகழ்ந்தன. அந்தக் கட்டத்தில் இருந்து ஸ்ராலினின் வாரிசுகள் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தை கலைப்பது ஒரு நேர்கோடான பாதையில் சென்றது. ஆனால் அதிக கவனம் செலுத்தப்படாதவை, இடது எதிர்ப்பு நசுக்கப்பட்டது எத்தகைய விளைவுகளை சர்வதேச தொழிலாளர் இயக்கம் மற்றும் உலக அரசியலில் 1930கள், 1940களில் ஏற்படுத்தின என்பதுதான். கம்யூனிச அகிலத்தில் ஸ்ராலினுடையது என்று இல்லாமல் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்குகள் மேலாதிக்கம் செலுத்தியிருந்தால் வரலாறு நிச்சயமாக வேறு போக்கைத்தான் கொண்டிருக்கும்.

இன்றும் கூட முக்கியமான தலைப்பில் ஒரு பிரச்சினையாக இருக்கும் இதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு, ட்ரொட்ஸ்கி தன்னுடைய பல படைப்புக்களில் அளித்துள்ள மூலோபாயக் கருத்தாய்வுகளின் பொருளுரைகளை ஆராய்வது இன்றியமையாததாகும். இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகளைத் தவிர, அவற்றுள் மிக முக்கியமானவற்றை குறிப்பிட வேண்டும் என்றால், நிரந்தர புரட்சி, லெனினிற்கு பின் மூன்றாம் அகிலம், ஜேர்மனிய பாசிசம் மற்றும் ஸ்பெயின் உள்நாட்டுப் போர் பற்றிய ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணமான இடைமருவு வேலைத்திட்டம் ஆகியவை உள்ளன.

இத்தொகுப்பில் உள்ள பல படைப்புக்களில் ட்ரொட்ஸ்கி 1920களின் ஆரம்பங்களில் இருந்த உலக நிலை பற்றி ஆராய்கிறார். அவ்வாறு செய்கையில் அவர் ஐரோப்பிய முட்டுச் சந்தில் இருந்து முதலாளித்துவம் தப்பி வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என்ற பிரச்சினை பற்றியும் முக்கியத்துவம் காட்டுகிறார். அவருடைய விடை ஓர் உறுதியான “இல்லை” என்பதுதான்.

முதலில் அது உருவாக காரணமாக இருந்த எந்தப் பிரச்சினைகளையும் முதலாம் உலகப் போர் தீர்க்கவில்லை. நவீன உற்பத்தி சக்திகளுக்கு தேசிய எல்லைகள் பெரும் தடுப்புக்களாக மாறிவிட்டன. பழைய கண்டத்தினுடைய முதலாளித்துவத்தின் மிக முன்னேற்றமான, உந்துசக்திவாய்ந்த வடிவமைப்பைக் கொண்ட ஜேர்மனிய முதலாளித்துவம் பிரிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவை மறு சீரமைக்கும் முயற்சியில் பரிதாபகரமாக தோல்வி அடைந்துள்ளது. பிரிட்டனும் பிரான்ஸும் போரில் வெற்றி பெற்ற நாடுகளாக வெளிப்பட்டன, ஆனால் முற்றிலும் வறிய நிலையில் உள்ள வெற்றி பெற்ற நாடுகள் என்ற முறையில். உலகப் பொருளாதாரத்தில் உறுதியாக வெற்றி பெற்று, மேலாதிக்கம் செலுத்தும் சக்தியாக வெளிப்பட்டது அமெரிக்காதான். உலகப் பொருளாதாரத்தின் மையம் பழைய கண்டத்தில் இருந்து புதிய கண்டத்திற்கு மாறிவிட்டது.

உலக நிலைமையைப் பற்றி மதிப்பீடு செய்கையில், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவில் இருந்து தொடங்கினார். ஏற்கனவே 1921 கோடையில் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் பேரவையில் அவர் ஆற்றிய உரை அறிக்கையில் (“The World Situation”) இவ்விடயம் மையமாக இருந்தது. 1924 மற்றும் 1926 ல் இவர் ஆற்றிய இரு உரைகளில் (Europe and America) மீண்டும் அது பற்றிப் பேசினார். தேசிய எல்லைகள் என்ற வலைப்பின்னலில் இறுக்கமாகப் பிடிபட்டு, அமெரிக்காவால் பொருளாதாரரீதியாக மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு சரிவில் இருந்தும் நெருக்கடியில் இருந்தும் மீள்வதற்கு கண்காணக்கூடிய தூரத்தில் வழியில்லை என்பதுதான் அவருடைய முடிவு.

“பிறரால் அடையப்பட முடியாத அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கம் இயல்பாக முதலாளித்துவ ஐரோப்பாவின் பொருளாதார ஏற்றம், புத்துயிர்ப்பு பெறுதல் ஆகியவற்றின் வாய்ப்பை ஒதுக்கிவிட்டது” என்று அவர் ஐரோப்பாவும் அமெரிக்காவும் நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார். “முந்தைய காலங்களில் ஐரோப்பிய முதலாளித்துவம் உலகின் பிற்பட்ட பகுதிகளில் ஒரு புரட்சிகர தாக்கத்தை கொண்டிருந்ததது போல், இப்பொழுது அமெரிக்க முதலாளித்துவம் மிகவும் கனிந்துவிட்ட ஐரோப்பாவை புரட்சிகரமாக்குகின்றது. கீழ்க்கண்டவற்றைத் தவிர ஐரோப்பாவிற்கு பொருளாதார முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கு வேறு வழி இல்லை: தொழிலாள வர்க்கப் புரட்சி, அரசாங்க சுங்கத் தடைகளை அகற்றுதல், ஐரோப்பிய சோவியத் அரசுகளின் ஒன்றியத்தை தோற்றுவித்தல், மற்றும் சோவியத் ஒன்றியத்துடனும் விடுதலை பெற்றுள்ள ஆசிய மக்களிடமும் கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ளுதல்.”

1921ம் ஆண்டின்போதே சோசலிசப் புரட்சியின் வெற்றி எப்படியும் விதிப்படி நடைபெற்று நடைமுறைக்கு வந்துவிடும் என்ற முன்கருத்தைப் பற்றிய மதிப்பீட்டின் விளக்கம் பற்றி ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் 1917ல் முனைப்புக் கொண்டிருந்து அரசியல் அதிகாரத்தைத் தைரியமாக வெற்றி பெற்று எடுத்துக் கொண்டது. ஆனால், மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியில், ரஷ்யத் தொழிலாளர்களைப் பின்பற்ற வேண்டும் என்று எடுக்கப்பட்ட முதல் முயற்சிகள் தோல்வியடைந்தன. முதலாளித்துவத்தின் ஆதரவிற்குச் செல்லுதல் என்னும் சமூக ஜனநாயகவாதிகளின் திடீர் முடிவு தொழிலாளர் இயக்கத்தைச் சீர்குலைத்துவிட்டது. புதிதாக வெளிப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் புதியவை, இந்நிலையை மாற்றுவதற்கு போதிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை, அதையொட்டி பல தோல்விகளைத் தழுவின. இதன் விளளைவாக 1920ன் தொடக்கங்களில் ஒரு இடைமருவு காலத்திற்கு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரப்பாடுகள் நிகழ்ந்தன.

* * *

எனவே கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் பேரவையின் முக்கியக் கருத்து அகிலத்தற்கு ஒரு புதிய நிலைநோக்கு தேவை என்று இருந்தது. பல பிரதிநிதிகளிடையே தோல்விகள் பற்றிய பிரதிபலிப்பு இடது தீவிரவாத நிலைப்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட ஏமாற்றமும் பொறுமையின்மையும்தான். இந்தக் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க வகையில் ஜேர்மன் பிரதிநிதிகள் குழுவிடம் பரந்திருந்தது; அந்நாட்டில் மார்ச் 1921ல் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) நன்கு தயாரிப்பற்ற எழுச்சியை மேற்கோண்டு பெரும் இழப்புக்களைப் பெற்றிருந்தது. சில பிரதிநிதிகள் “தாக்கும் மூலோபாயம்” என்று அழைக்கப்பட்ட கருத்தை முன்வைத்தனர்; இதின்படி எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் கட்சி தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாக்குதலுக்கு அழைப்பு விடப்பட்டது.

இப்பொருளற்ற நிலைப்பாடு ட்ரொட்ஸ்கி மற்றும் லெனினால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது; “இடதுசாரி கம்யூனிசம்-ஒரு இளம்பருவக் கோளாறு” என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தை இது பற்றி எழுதினர். மூலோபாயம் மற்றும் தந்திரோபாயப் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை பற்றி பிரதிநிதிகளை நம்ப வைக்கும் அனைத்து முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். பேரவையின் முக்கிய படிப்பினைகளில் ஒன்று, ஒருவர் அதிகாரத்தை வெற்றி பெறுவதற்கு முன்னதாக மக்களை வெற்றி கொள்ள வேண்டும், மற்றும் “போராட்டத்தில் ஈடுபடுதல் மட்டும் போதாது. அதில் வெற்றியும் அடைய வேண்டும். அதைச் செய்வதற்கு புரட்சிகர மூலோபாயக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும்.”

இதன் பின் மூன்றாம் பேரவையின் முடிவுகளை ட்ரொட்ஸ்கி “புரட்சிகர மூலோபாயக் கூடம்” என்னும் தன் கட்டுரையில் சுருக்கிக் கூறினார். ஒரு எந்திரரீதியிலான மற்றும் மார்க்சிசம் விதிப்படி நடக்கும் என்னும் விளக்கத்திற்கு எதிராக அவர் மீண்டும் எச்சரித்தார். சமூக மாற்றம் என்பது, “சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் என்று நிகழ்வது போல் இயல்பாக ஏற்பட்டுவிடுவதில்லை.” இதற்கு முன்னிபந்தனை ஒரு புதிய வர்க்கத்தின் எழுச்சியாகும்; “அந்த வர்க்கம் தேவையான முழு நனவுடனும், ஒழுங்கமைப்பு முறை மற்றும் அதிகாரத்தைக் கொண்டு புதிய சமூக உறவுகளுக்கான பாதையை அமைக்கும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.”

அதே நேரத்தில் ட்ரொட்ஸ்கி நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள சமூகம் அதன் தற்போதைய நிலையில் பல காலம் நீடித்திருக்கமுடியும் என்ற சாத்தியப்பாட்டை வெளிப்படையாக ஒதுக்கித்தள்ளினார். பூர்ஷ்வா ஜனநாயக முறைக்கான உறுதியான அஸ்திவாரத்தை தோற்றுவிக்க முற்பட்ட சமூக ஜனநாயகவாதிகளின் முயற்சிகள் ஆரம்பத்தில் இருந்தே தோல்வியைத்தான் தழுவும். அதற்கு ஒரே மாற்றீடுகள் சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்தான்: “ஒரே இடத்தில் மனிதகுலம் நிலைத்து நிற்பதில்லை … ஒரு முன்னேற்றகரமான வளர்ச்சி கடினம் என்றால், சமூகம் சரிந்து பின்னோக்கிச் செல்லும்; சமூகத்தை உயர்த்திச் செல்லும் திறன் கொண்ட வர்க்கம் ஏதும் இல்லை என்றால், சமூகம் சிநைந்துவிடுவதோடு மட்டுமல்லாது காட்டுமிராண்டித்தனத்திற்கான பாதையை அகலமாகத் திறந்துவிடும்.”

12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தக் கணிப்பு ஒரு கொடூரமான யதார்த்தமாயிற்று; அப்பொழுதுதான் நாஜிக்கள் ஜேர்மனியில் அதிகாரத்தை கைப்பற்றினர். அந்த நேரத்தில் மூன்றாம் அகிலத்தின் பேரவையின் படிப்பினைகள் நீண்டகாலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டிருந்தன. ட்ரொட்ஸ்கி எதுவுமற்ற ஒரு மனிதராக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இடது தீவிரவாதம் ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த அகிலத்தில் 1928ல் இருந்து வர்க்கப் போராட்டத்தின் மூன்றாம் காலம் என்று அழைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த இழிந்த புத்துயிர்ப்பு வடிவைத்தான் பெற்றிருந்தது. அதிகாரத்துவத்தின் சமூக நெருக்கடி பற்றிய பீதி நிறைந்த விளைவில் இருந்து தோன்றிய இந்நிலைப்பாட்டின்படி, சோவியத் ஒன்றியத்தற்குள்ளேயே அதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி ஆழமடைந்துள்ளதுடன், அதிகாரத்திற்கான போராட்டம் உலகின் அனைத்து நாடுகளிலும் உடனடிச் செயற்பட்டியலில் இருந்தது என விளக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் புரட்சிகர வார்த்தையாடல்களால் தம்மையை போதையில் ஏற்றிக்கொண்ட நிலையில், எழுச்சி பெற்று வந்த பாசிச அச்சுறுத்தல் பற்றி முற்றிலும் குருட்டுத்தனத்தைக் கொண்டிருந்தன. சமூக ஜனநாயகத் தொழிலாளர்கள் மீது செல்வாக்கை செலுத்த முற்பட்ட ஒவ்வொரு தந்திரோபாய முயற்சியும் எதிர்-புரட்சி நடவடிக்கை, “ட்ரொட்ஸ்கிசம்” என்று கருதப்பட்டது. ஜேர்மனியில், சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) பாசிஸ்டுக்களுக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு என்பதின் பொருள் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் (KPD) இருந்து விலக்கி வைக்கப்படல் என்று ஆயிற்று. சமூக ஜனநாயகவாதிகள் “சமூக பாசிஸ்ட்டுக்கள்” என்று வரையறுக்கப்பட்டு, நாஜிகளின் இரட்டை பிறவிகள் என்றும் கூறப்பட்டனர். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலினால் தொழிலாளர் இயக்கம் சிதறி முடக்கம் கண்டதுதான் அதிகாரத்திற்கு ஹிட்லரின் ஏற்றத்திற்கு வழிவகுத்தது.

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இந்ந “நிலைப்பாட்டை” முன்வைத்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏர்ன்ஸ் தால்மான், ஸ்ராலினின் விசுவாசமான முகவர் ஆவார். ஏற்கனவே 1921 இல் மூன்றாம் அகிலத்தின் காங்கிரசில் ஜேர்மனியப் பிரதிநிதிக் குழுவில் ஒருவராக இருந்தபோது ட்ரொட்ஸ்கியை எதிர்த்தவர். அக்காலத்திய படிப்பினைகள் நன்கு உணரப்பட்டிருந்தால், ஜேர்மனியில் நிகழவுகளின் போக்கு முற்றிலும் வேறுவிதமாகத்தான் இருந்திருக்கும்.

* * *

1920 களின் தொழிலாளர்கள் இயக்கத்தில் ட்ரொட்ஸ்கி தன் கவனத்தை சந்தர்ப்பவாதப் பிரச்சினை குறித்தும் செலுத்தினார். 19ம் நூற்றாண்டின் முக்கிய ஏகாதிபத்திய சக்தியான பிரிட்டன் மற்றும் 20ம் நூற்றாண்டின் தலையாய ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் சந்தர்ப்பவாத தொழிலாள வர்க்க தலைவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. இந்த இரு நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களின் மகத்தான செல்வம் அவற்றை தொழிலாள வர்க்கத்தின் உயர்மட்டத்தினருக்கு கையூட்டு (இலஞ்சம்) கொடுக்க உதவியது.

மரபுகள் இறுக்கமானவை; எனவே நாடு நீண்ட காலப் பொருளாதாரச் சரிவில் இருந்தபோதும் கூட சந்தர்ப்பவாதம் அதன் இறுக்கமான பிடியை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இயக்கத்தின்மீது தக்க வைத்துக் கொண்டது. 1925ல் எழுதிய பிரிட்டன் எங்கே செல்கிறது? என்னும் தன் நூலில் ட்ரொட்ஸ்கி பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் பற்றி ஒரு மிகச் சிறந்த சித்திரத்தைக் கொடுத்து அவர்களுடைய அரசியலுக்கும் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்விற்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு பற்றி ஆராய்கிறார். அவருடைய பகுப்பாய்வின் சாராம்சம் இந்த வேறுபாடு ஒரு உறுதியான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமைப்பதின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும் என்பதாகும். “இதைக் கடப்பதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. அவ்வாறு உண்டு என்று நம்பி அதைப் பிரகடனப்படுத்துபவர்கள் இங்கிலாந்து நாட்டுத் தொழிலாளர்களை ஏமாற்றும் விதத்தில்தான் முடிவைக் காண்பர்” என எழுதியிருந்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வு பற்றிய ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு மிகச் சரியென ஆயிற்று. மே 1926ல், பிரிட்டஷ் சமுதாயத்தை ஒரு பொது வேலை நிறுத்தம் அஸ்திவாரங்களிலேயே அதிர்வைக் கொடுத்தது. “பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு ஆகும்; அது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் திவால்தன்மையை பிரிட்டஷ் நாடு அல்லது பிரிட்டிஷ் பண்பாட்டின் திவால்தன்மை தொடக்கமாக மாறிவிட அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்காது, உண்மையில் அனுமதிக்கவும் செய்யாது.” பிரிட்டன் எங்கே செல்கிறது என்னும் நூலின் இரண்டாம் பதிப்புடைய முன்னுரையில் ட்ரொட்ஸ்கி கூறியது: “ஆனால் இந்த விடையிறுப்பு நிலைமையின் தர்க்கத்தின் விளைவு என்று கூறலாமே ஒழிய முழு நனவின் தர்க்கத்தினால் என்பதற்கில்லை.” ட்ரொட்ஸ்கியின் முடிவுரை, ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு “வேறு எவ்வித வர்க்கப் போராட்டத்தையும் விட ஒரு தெளிவான, உறுதியான, அதாவது புரட்சிகரத் தலைமை தேவைப்படுகிறது. ஆனால் தற்போதைய வேலைநிறுத்தத்தில் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் அத்தகைய தலைமையின் சிறு தோற்றத்தைக் கூடக் காட்டவில்லை, அப்படி ஒன்றும் அத்தகைய நிலைப்பாடு வானில் இருந்து குதித்துவிடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை, எங்கிருந்தோ முதிர்ச்சியடைந்த வகையில் தோன்றிவிடும் என எதிர்பார்ப்பதற்கும் இல்லை.”

பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அத்தகைய தலைமையை வளர்ப்பதற்கு உதவுவதற்குப் பதிலாக அகிலத்தின் தலைவர்கள் சந்தர்ப்பவாத தொழிற்சங்கத் தலைமைக்கு ஊக்கம் கொடுத்தனர். அது பின்னர் உரிய வகையில் வேலைநிறுத்தத்தை விற்றுவிட்டது. சோவியத் வணிகத் தொழிற்சங்கத் தலைவர்கள் நெருக்கமாக பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஒத்துழைத்தனர்; பிந்தையவர்கள் ஆங்கிலோ-ரஷ்ய வணிகத் தொழிற்சங்கக் குழுவில் இருந்து, ஸ்ராலின் மற்றும் புக்காரினின் கீழ் செயல்பட்டனர். இவ்விதத்தில் கம்யூனிச இயக்கத்திற்கு ஆதரவான மற்றொரு சர்வதேச நிலைமையை செல்வாக்கின்கீழ் கொண்டு வரும் மற்றொரு வாய்ப்பும் இழக்கப்பட்டது.

1925ல் அவர் எழுதிய ஐரோப்பாவும் அமெரிக்காவும் என்னும் கட்டுரையில், ட்ரொட்ஸ்கி அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள சந்தர்ப்பவாதம் பற்றி ஆராய்ந்து, புதிய கண்டத்தின் புரட்சிக்கான வாய்ப்புக்கள் பற்றியும் ஆராய்கிறார். “வலுவிழந்த ஐரோப்பா மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடியேற்றப்பகுதிகளில் உள்ள மக்களுடன் அமெரிக்காவின் மேலாதிக்க நிலை அதன் முக்கிய உயிர்நாடியாக இருப்பதுடன்,” அமெரிக்காவின் பொருளாதார வலிமை நீண்டகால அரசியல் உறுதிப்பாட்டைக் கொடுக்கும் என்று கூறி அதே நேரத்தில் அது அந்நாட்டின் இறுதித் தீமையாகிவிடும் என்றும் எச்சரித்தார். “அமெரிக்காவின் உள்நாட்டு சமச்சீர்நிலைக்கு வெளிநாடுகளில் அதன் தொடர்ந்த விரிவாக்கம் தேவைப்படுகிறது, மற்ற நாடுகளைத் தழுவும் இந்நிலை அமெரிக்க பொருளாதார முறையில் ஐரோப்பிய, ஆசிய மோதல்களையும் இணைத்துக் கொள்ளும். அச்சூழ்நிலையில் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஒரு வெற்றிகரமான புரட்சி என்பது தவிர்க்க முடியாமல் அமெரிக்காவிலும் ஒரு புரட்சிகர சகாப்தத்திற்கு வழிவகுக்கும்.”

ஐரோப்பாவை ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியில் இருந்து “காப்பாற்றியதன் மூலம்” ஸ்ராலினிசம் இறுதியில் அமெரிக்காவும் இந்த விதிக்குள்ளாது இருக்குமாறும் பார்த்துக் கொண்டது.

* * *

முடிவாக, தற்காலத்திற்கு ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகக் காண்போம் (ஒரு முன்னுரையின் வரையறைக்கும் அப்பால்தான் இப்பொருள் பற்றிய விரிவான கருத்தாய்வு செல்லும் என்பது உண்மையே). 1920 களில் ட்ரொட்ஸ்கி ஐரோப்பா, அமெரிக்காவிற்கு இடையே உள்ள உறவை உலக நிலைமை பற்றி மதிப்பீடு செய்வதற்கு ஒரு ஆரம்பக்கட்டமாக கொண்டார். ஆனால் இன்றும் கூட இந்த அணுகுமுறை உண்மையானதாக உள்ளதா?

1945க்கும் 1990க்கும் இடையே அப்பிரச்சினைக்கு முக்கியமான விடையாக இல்லை என்றுதான் வந்திருக்கும். அட்லான்டிக் கடந்த உறவுகள் ஒரு வகையான பூசல்கள் இல்லாமல் எப்பொழுதும் இருத்ததில்லை என்பனது உண்மையானாலும், ஐரோப்பாவில் அமெரிக்காவின் தலையாய நிலை என்பது தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது இல்லை. இது வார்சோ ஒப்பந்தம் கலைக்கப்பட்டதில் இருந்து மாறியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்தைக் கடக்க வேண்டும் என்ற அழைப்புக்கள் பெருகிய முறையில் வலுவடைந்து வருகின்றன; அதுதான் ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் முக்கிய பணி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பொதுவாக அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் இராஜதந்திர நெறியில் இது பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் உயர்கல்விக் கூடங்களிலும் சிறப்புப்பதிப்புக்களில் வரும் ஆழ்ந்த கட்டுரைகளிலும், எந்த வெளியுறவுக் கொள்கைத் தடைகளும் அற்ற நிலையில், வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறுவதில் எத்தயக்கமும் இருந்தது இல்லை.

இதற்குத் தக்க உதாரணம் “ஐரோப்பியச் சிந்தனைக்கான ஜேர்மனிய ஏடு” என்ப்படும் Merkur இதழின் சமீபத்திய சிறப்புப் பதிப்பில் குறிப்பிடத்தக்க வகையில் “ஐரோப்பாவா, அமெரிக்காவா? மேற்குலகின் வருங்காலம் எது?” என்று தலையங்கமிடப்பட்டிருந்தது.

ஒரு கட்டுரையில் சர்வதேச உறவுகளில் சிறப்புப் பேராசிரியரும் Hessian Peace and Conflict Reseasrch Foundtion உறுப்பினருமான Ernst-OttoCzempiel அமெரிக்கா “மேலாதிக்கத் தலைமையை விரிவாக்க உறுதிபடுத்தும் போக்கை அமெரிக்கா கொண்டுள்ளது என்று” குற்றம் சாட்டியுள்ளார். “1990 வரை இந்நிலை மேற்குடன் நின்றிருந்தது இப்பொழுது உலகளவில் சென்றுள்ளது.” ஐரோப்பியர்களுடைய விருப்பம் “நேட்டோ சீர்திருத்தப்பட வேண்டும் என்பதாகும்; அதில் அவர்களும் தலைமையில் பங்கு பெற வேண்டும் என்னும் கோரிக்கை” இகழ்வுடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உலக அரசியலின் தொடர்ந்த வளர்ச்சி “நலம் பயக்கும் மேலாதிக்கம்” என்னும் அடைமொழியை இப்பொழுது நியாயப்படுத்துவதில்லை; “பனிப்போரின் நீண்ட ஆண்டுகளில் அந்த அடைமொழி சரியாகவே அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டிருந்தது.” மாறாக 1990ன் நடப்பகுதிகளில் இருந்து கையாளும் மூலோபாயம் “மேலாதிக்கக் கருத்தாய்வை உலகம் முழுவதும் அதிகாரம் செலுத்தும் சக்தி” என்று மாற்றுவதாக உள்ளது” என்று அவர் எழுதியுள்ளார். (Merkur, issue 9/10, Sept./Oct. 2000, pp. 905-06).

இத்தகைய விழைவுகள் அடுத்த உலகப் போருக்கான இயந்திரத்தை முடுக்கிவிடக்கூடும்; அதில் பெரும் சக்திகளுக்கு இடையே போர் என்னும் வாய்ப்பு அகற்றப்பட்டுவிட முடியாது: தங்களை உலக ஒழுங்கைக் காப்பவர்கள் என்று பிரகடனம் செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் போட்டிகளையும் கொண்டுவருவர்.” என்று Czempiel எச்சரிக்கிறார். அமெரிக்க நிலைப்பாட்டிற்கு ஒரு பின் எதிர்ப்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த ஐரோப்பியப் பாதுகாப்பு அடையாளத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார். “ஒரு சுயாதீன ஐரோப்பிய உடனடி தாக்கும் படையைக் கட்டமைப்பதற்கான ஒரே நோக்கம் கூட்டு நாடுகளுக்கு இடையே அதிகாரத்தை மறுபங்கீடு செய்வதுதான். அமெரிக்கா சமஅந்தஸ்தைக் கொடுக்கப் போவதில்லை என்பதால், ஐரோப்பா இப்பிரச்சினையை விரைவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.” (ibid., pp.901, 910)

மற்றொரு சிறப்பு அரசியல் பேராசிரியர், Werner Link இதே போன்ற கருத்துக்களை ஏட்டின் அதே பதிப்பில் முன்வைத்துள்ளார். “ஐரோப்பா பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுக் கொள்கைகளில் தானே தோன்றுவித்துக் கொண்ட தன்னாட்சியற்ற தன்மையில் இருந்து விலக வேண்டும்” என்று Link குரல் கொடுத்துள்ளார்; மேலும் Czempiel கூறுவது போல் கொசோவோ போர்தான் ஐரோப்பிய அமெரிக்க உறவுகளில் முக்கியமான திருப்புமுனை என்றும் கருதுகிறார். இப்போர் “ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உலகின் முக்கிய சக்தியின்மீது தாங்கள் கொண்டுள்ள நம்பகத் தன்மையை நிரூபித்து, தங்கள் சொந்த ஆயுதமேந்திய இராஜதந்திர நெறி (“armed diplomacy”) அற்ற தன்மையையும் அப்பட்டமாக புலப்படுத்தி நிருபித்தது.” (ibid., p.923)

ஐரோப்பிய நலன்கள் பால் சார்பு கொண்டுள்ள இக்குறைகளை ஆராய்ந்தால், பொருளாதார வளர்ச்சியின் கீழ் அமெரிக்காவின் “உலகத்தின் மீதான அதிகாரத்திற்கு உரிமை” என்பதில், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் சரிந்துள்ளது என்பது நன்கு புலனாகும்.

ட்ரொட்ஸ்கியின் கருத்துப்படி, 1920 களில் அமெரிக்காதான் “மனிதகுலம் தப்பிப் பிழைப்பதற்குத் தேவையான பொருட்களில் மூன்றில் ஒன்றில் இருந்து இரண்டு பங்கு வரை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.” கார்த்துறை உற்பத்தியில் 80%க்கும் மேல், எண்ணெய் உற்பத்தியில் 70%க்கும் மேல், வார்ப்பு இரும்பு உற்பத்தியில் 60% க்கும் மேல், எஃகு உற்பத்தியில் 60%க்கும் மேல் என அந்நேரத்தில் அமெரிக்காவில் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உண்மையில் அமெரிக்காதான் வெற்றி பெற்று எழுந்தது என்ற நிலையில், அத்தகைய போக்கு தொடர்ந்தது. உலக உற்பத்தியில் பெரும் பகுதியும், உலகின் தங்க இருப்புக்களின் பெரும்பகுதியும் அமெரிக்காவில் குவிந்திருந்தன.

ஆனால் அதற்குப் பின் நிலைமை மாறிவிட்டது. பொருளாதாரரீதியாக ஐரோப்பா அமெரிக்காவிற்குச் சமமாக வந்துவிட்டது; மேலும் புதிய சக்தி வாய்ந்த போட்டி நாடுகள் உலகின் மற்ற பகுதிகளில் வந்துள்ளன; குறிப்பாக கிழக்கு ஆசியாவில். 1924ல் அமெரிக்காவின் தேசிய வருமானம் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகியவற்றின் இணைப்பைப் போல் இரண்டரை மடங்கு அதிகம் இருந்தது. அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்பொழுது அமெரிக்காவை விடக் கணிசமாக உயர்ந்துவிட்டது. முழுமையாக ஒரு பொருளாதார அலகாக அதிகரித்தளவில் செயற்பட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆராய்ந்தால், ஐரோப்பா ஏற்கனவே உற்பத்தித் துறையில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது எனலாம். 1995ம் ஆண்டு உலகின் மொத்த உற்பத்தித் தொகுப்பில் 30% ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமும், அமெரிக்காவினால் 27% என்றும்தான் இருந்தன.

உலக வணிகத்தில் இந்த வேறுபாடு இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. 1995ல் உலக வணிகத்தின் மொத்தத்தில் 40% க்கும் மேலானவை ஐரோப்பிய உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த எண்ணிக்கையில் தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவநாடுகளின் வணிகமும் அடங்கும். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வணிகத்தை ஒதுக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒற்றைப் பெரும் நாடு போல் கருதினால், அது உலக வணிகத்தில் மொத்தத்தில் 20%ஐ கொண்டுள்ளது; அதே நேரத்தில் உலக வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 15%ம் தான்.

1920களுடன் ஒப்பிடப்படும்போது இப்புள்ளி விவரங்கள் மற்றொரு அடிப்படை மாற்றத்தை வெளிக்காட்டுகின்றன. உலக உற்பத்தியில் ஐந்தில் இரு பங்கிற்கும் மேலாக, உலக வணிகத்தில் பாதிக்கும் மேலாக இப்பொழுது அமெரிக்க, ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் இருந்து வேறுபட்டவற்றில் தொடங்குகின்றன; அவற்றுள் பெரும்பாலனவை ஜப்பான் இன்னும் பிற ஆசிய நாடுகளில் இருந்து வருகின்றன. அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கியத்துவம் இவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் குறைந்துள்ளது என்பது மட்டுமின்றி, உலகப் பொருளாதாரம் முழுவதிலுமே குறைந்துள்ளது. மேலும் முக்கிய பொருளாதார சக்திகளாக வரக்கூடிய திறன் கொண்டுள்ள புதிய நாடுகள் தோன்றியுள்ளன -அதாவது சீனா, சற்றே குறைந்த தன்மையில் இந்தியா, போன்றவை.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் மறைவு பற்றிய மற்றொரு அடையாளம் அமெரிக்காவின் பாரிய வெளிநாட்டுக் கடன் ஆகும். 1990ல் இருந்து 1996 வரை இக்கடன் $170 பில்லியனில் இருந்து $550 பில்லியன் என்று உயர்ந்தது. 1997 மற்றும் 1998ல் மற்றும் ஒரு $500 பில்லியன் இத்தொகையுடன் சேர்ந்தது; இதையொட்டி மொத்தக் கடன் இப்பொழுது $2 டிரில்லியன் என்பதை நெருங்கியுள்ளது. இது ஜேர்மனியின் மொத்த ஆண்டு உள்நாட்டுத் தேசிய உற்பத்திக்கு சமமாகும்.

இந்த உண்மை நிலைப்பாடுகள் இருக்கும்போது, அமெரிக்காவின் மிக்குயர் வல்லரசு விழைவுகள் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அடையாளம் தனியே இருக்க வேண்டும் என்னும் முயற்சிகள் பற்றிய குறைபாடுகளை எப்படிச் சரியாக மதிப்பீடு செய்வது?

ஒருபுறம், சோவியத் ஒன்றியத்தின் சரிவைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் ஒரே இராணுவ வல்லரசு அமெரிக்காதான். ஐரோப்பிய பாதுகாப்புச் செலவினங்கள் அமெரிக்காவுடையதைப் போல் மூன்றில் ஒரு பங்கு என்பது உண்மைதான். ஆனால் ஐரோப்பாவிடம் அதிகமான, வெவ்வேறு தரைப்படைச் சக்திகளும் ஏராளமான தனிப்பட்ட இராணுவங்களும் இருக்கையில், அதன் இராணுவத் திறன் என்பது அமெரிக்காவின் திறனில் பத்தில் ஒரு பங்குத்தான். மேலும் அமெரிக்கா உலக சக்தி என்னும் அந்தஸ்தை அதன் பொருளாதார சக்தியின் சரிவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இராணுவரீதியில் பெருகிய முறையில் வெளிப்படுத்தி வருகிறது.

மறுபுறத்தில், ஐரோப்பிய சக்திகளின் விடையிறுப்பு அவை அமெரிக்கத் தலைமையை கேள்வியேதுமின்றி இனி ஏற்கத்தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. தற்பொழுது இது “சம அந்தஸ்து” என்னும் கோரிக்கையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. எப்பொழுதும் ஒரு வலுவற்ற சக்தி இப்படித்தான் வலுவான சக்திக்குச் சவால் விடும். தன்னுடைய புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியுள்ளதுபோல், அமெரிக்காவும் ஒரு தீவிர உலக ஏகாதிபத்திய அரசியல் பாதையில் சமாதானம், சம உரிமைகள், ஜனநாயகம் என்று கூறிக்கொண்டுதான் நுழைந்தது. “சம அந்தஸ்து” என்பதின் இறுதி முக்கியத்துவம் இவ்விதத்தில் பொருளாதார, அரசியல் செல்வாக்குமண்டலங்கள் மறு பகிர்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையாகும். இதன் பொருள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள மோதல் வருங்காலத்தில் தீவிரமாகும் என்பதாகும்.

இப்பகுப்பாய்வு பல முறையும் உலகப் பொருளாதாரத்தின் பெருகிய ஒருங்கிணைப்பு தேசிய அரசு என்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்தி பெரும் சக்திகளுக்கு இடையே வெளிப்படையான மோதல் என்பது இயலாது என்ற வாதத்தின் மூலம் எதிர்கொள்ளப்படுகிறது. இச்சிந்தனைப் போக்கில், வணிகப் பிரச்சினைகள், பாதுகாப்புக் கொள்கைகள் பற்றிய அட்லான்டிக் இடையிலான மோதல்கள் உண்மையில் “உறவுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளன, எந்த அளவிற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முக்கியம், சிறு பிரச்சினைகளில்கூட என்பதின் அடையாளம்தான். உண்மையில் அடிப்படையில் உறவுகள் சாதகமாகத்தான் உள்ளன.” (Süddeutsche Zeitung என்னும் ஜேர்மனிய நாளேட்டில் வந்தள்ள சமீபத்திய கட்டுரை ஒன்றில் இருந்து மேற்கோள்.) இப்பகுப்பாய்வு ஒரு தவறை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி பாதுக்காக்கும் தேசிய அரசின் திறன் பூகோளமயமாக்குதலினால் குறைந்துவிட்டது என்பது உண்மையானலும், இடைத் தொடர்பு நம்பகத் தன்மை பெருகி விட்டது உண்மையானாலும், தேசிய சார்புடைய விரோதப் போக்குகள் மறைந்து விட்டன என்ற பொருளை இது தராது. மாறாக உலகப் போட்டியின் பாரிய தீவிரத்தன்மை, நிதிச்சந்தைகளில் அதையொட்டி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தனி நிறுவனங்களின் விதி ஆகியவை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வைப் பாதிக்கின்றன, அவற்றை ஒட்டி தேசியப் போட்டிகள் வியத்தகு அளவில் பெருகியுள்ளன.

எந்த அளவிற்கு இப்பூசல்கள் தீவிரமாக இருந்தன என்பது டாலருடன் ஒப்பிடும்போது யூரோவின் சரிவு நாணய மாற்றுவிகிதத்தில் ஏற்பட்டது என்பதில் இருந்து காணப்பட முடியும்; இச்சரிவு இப்பொழுது பல மாதங்களாகத் தொடர்கிறது. இந்தப் போக்கு பற்றி நிதிய வல்லுனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்; ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஐரோப்பியப் பொருளாதாரம் “அடிப்படையில் சீரிய முறையில் உள்ளது” என்பதை வலியுறுத்துவதில் சலிப்பும் காட்டவில்லை. இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்கா சர்வதேச மூலதன வரத்தைத் தொடர்ந்து உள்வாங்கியமை இணையற்ற சமூக துருவப்படுத்தலுடன் டாலருக்கு ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. கட்டுப்பாடுகளை அகற்றியதின் விளைவு, மூதலனத்திற்கு அதிக ஆதாயத்திற்கு உறுதி அளிப்பது, மூலதனத்திற்கு அமெரிக்காவை அதிக ஈர்ப்பு உடையதாகச் செய்துள்ளது; இதன் காரணம் கடந்த ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் உயர்மட்டங்களில் உள்ள ஒரு சிறிய சிறுபான்மையினருக்குத்தான் ஆதரவு என்று காட்டுவதுடன், அதே நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையை பெருகிய முறையில் பொறுத்துக் கொள்ள முடியாமலும் கடினமாகவும் ஆக்கியுள்ளது.

இதனால் ஐரோப்பா இம்முறையை பின்பற்றினால்தான் அமெரிக்காவுடன் போட்டியிடமுடியும்; அதே போல் அதன் வாழ்க்கைத் தரத்தையும் சமூகநலச் செலவுகளையும் குறைக்க வேண்டும். ஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்பதானது முற்றிலும் இந்த அடிப்படையைத்தான் தளமாகக் கொண்டுள்ளது. உலகப் போட்டியில் தன் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஐரோப்பியப் பெருவணிகம் ஐரோப்பிய ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் என்று கருதுகிறது. ஆனால் அது பயன்படுத்தும் முறைகள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை மட்டுமின்றி மத்தியதர வர்க்கத்தின் பெரும் பகுதிகளையும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையைத்தான் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா தன் முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் சர்வதேச மூலதன வரத்து நின்று போவது தவிர்க்க முடியாமல் கடுமையான மந்த நிலைக்கு வழிவகுக்கும்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெருகிவரும் மோதல் இவ்விதத்தில் இரு கண்டங்களிலும் சமூக துருவப்படுத்தல் நிலைப்பாடுகளை இடைவிடாமல் தீவிரப்படுத்தியுள்ளது. 1920களைப் போல் இல்லாமல், இப்பொழுது அமெரிக்கா ஐரோப்பாவை புரட்சிகரமாக ஆக்கும் தன்மை உடையது அல்ல. இதன் எதிர்கருத்தும் உண்மையே. “கீழிருந்து வரும்” முனைப்பு ஒன்றுதான் இந்த பொருளாதாரப் போர் என்னும் தீய வட்டம் மற்றும் சமூகநலத் தகர்ப்புக்கள் அழிக்கப்படுவதை முறியடிக்க முடியும். மேலும் 1920 களில் இருந்ததைப் போல், இதில் முக்கிய கூறுபாடாக உள்ளது அகநிலைக் காரணியாகும்.

இன்றைய சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொருத்தப்படும்போது, ட்ரொட்ஸ்கியின் சொல்லான “சந்தர்ப்பவாதம்” என்பது இடக்கரடக்கல் போல் தோன்றும். இவர்கள் முற்றிலும் பெருவணிகத்தின் பிரிவுகளில் இணைந்துவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சியினர் அரசாங்க அதிகாரத்தை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 90 களின் நடுவில் பெற்றபோது, சமூகநலத் தகர்ப்பு மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் அகற்றப்படல் என்பவை முந்தைய பழைமைவாத அரசாங்கங்களின் காலத்தைவிட விரைவாகச் செயல்படுத்தப்பட்டன. இக்கட்சிகளுக்கும் மக்களின் பெரும்பாலானவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி இதையொட்டி அதிகமாகிவிட்டது. பல தசாப்தங்கள் ஸ்ராலினிசமும் -சமூக ஜனநாயகமும் தொழிலாளர்கள் இயக்கத்தின்மீது கொண்டிருந்த கட்டுப்பாடு ஆழ்ந்த நெருக்கடியைத்தான் கொடுத்துள்ளன. ஆனால் இது இப்படியே நீடிக்க வேண்டும் என்பதில்லை. சமூகத்தின் கீழ் மட்டத்தில் குவிந்துவரும் பாரிய சமூக மோதல்கள் வெகுஜனத்தின் முழு நனவில் விரைவான மாறுதல்களுக்கான நிலைமைகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் இம்மாற்றங்கள் இயல்பாக ஏற்பட்டு விடாது. அவற்றிற்கு ஸ்ராலினிசத்தால் மூச்சுத் திணறடிக்கப்பட்ட ஒரு சர்வதேச, சோசலிச மரபுகளின் புத்துயிர்ப்பு தேவைப்படுகிறது. இன்றைய தொடர்பு அதிகமாகியுள்ள சமூகம் இதற்கான புதிய வாய்ப்புக்களை ஏற்டுத்தியுள்ளது. இதற்கு முன்னால் ஒரு பொழுதும் உலகத் தொழிலாள வர்க்கம் இவ்வளவு நெருக்கமான இடைத்தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவில் இது மற்றொரு கூறுபாடு ஆகும். ஒரு கண்டத்தில் தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முன்னோக்கிய அடியும் மற்றய கண்டத்திலும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

Loading