SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்

கோவிட்-19 தொற்றுநோயும் சோசலிசத்திற்கான போராட்டமும்

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற சோசலிஸ்ட் சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது தேசிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநாடு பற்றிய முழு அறிக்கையையும் ஏனைய தீர்மானங்களையும் இங்கே படிக்கலாம்.

1. கோவிட்-19 தொற்றுநோய் அதன் மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளதுடன், அது குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதுள்ளது. கடந்த நவம்பரில் அதிக தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு தோன்றியதில் இருந்து, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முற்படுவதற்குப் பதிலாக, சீனாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசாங்கங்களும் அனைத்து நோய்த்தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டன. இதுவே அமெரிக்காவில் பைடென் நிர்வாகத்தால் வழிநடத்தப்பட்ட கொள்கையாகும். 2020 ஆம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னோடியாக உருவாக்கப்பட்ட, வைரஸை வேண்டுமென்றே கட்டுப்படுத்தாமல் பரவ அனுமதிக்கும் கொலைகார 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டினதும் கொள்கையாக மாறியுள்ளது.

2. ஓமிக்ரோன் BA.5 துணை மாறுபாடு இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஓமிக்ரோன் BA.1 இன் எழுச்சியின் போது கடந்த குளிர்காலத்தில் எட்டப்பட்ட அனைத்து நேர உச்சநிலைகளுக்கு அண்மித்து அல்லது அதற்கு கூடுதலான உண்மையான பரிமாற்ற விகிதங்களில் உள்ளது. பில்லியன் கணக்கான மக்கள் BA.5 நோயால் தொற்றுக்குள்ளாகி மீண்டும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். போர்த்துக்கல், கிரீஸ், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில், கோவிட்-19 இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. ஒரு வருடத்திற்கும் மேலாக, உலக சோசலிச வலைத் தளம் பாரிய தொற்று கொள்கை, இவ் வைரஸுக்கு பில்லியன் கணக்கான தொற்றாளர்களை வழங்குகிறது என எச்சரித்துள்ளது. இது இது மாற்றமடைமந்து மிகவும் ஆபத்தான விகாரங்களாக உருவாகலாம். ஓமிக்ரோன் மற்றும் அதன் அனைத்து துணை வகைகளின் பரிணாமம் இந்த எச்சரிக்கையின் சரியான தன்மையை உறுதிப்படுத்துகிறது. BA.5 உலகளவில் ஆதிக்கம் செலுத்திய சில நாட்களுக்குள், விஞ்ஞானிகள் புதிய ஓமிக்ரோன் துணை வகையான BA.2.75 பல நாடுகளுக்கு வேகமாக பரவியதாக எச்சரிக்கை எழுப்பத் தொடங்கினர்.

3. கடந்த இரண்டரை ஆண்டுகளின் சோகமான அனுபவம், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரானதும் சோசலிசத்திற்குமான போராட்டத்தில் தங்கியுள்ளதுடன் அதிலிருந்து பிரிக்க முடியாதது என்பதை நிரூபித்துள்ளது. இதற்கு விஞ்ஞான அடிப்படையிலான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவது மற்றும் இந்த பாரிய சமூக குற்றத்திற்கு காரணமான சக்திகள் பற்றிய அரசியல்-வரலாற்று புரிதல் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியும் (அமெரிக்கா) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன், சமூக சமத்துவத்துக்காகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், உலகளாவிய நோய் ஒழிப்புக்கான போராட்டம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் மத்தியகூறுகளில் ஒன்றாகும்.

இரண்டு வருட பாரிய நோய்த்தொற்றின் விளைவுகள்

4. கோவிட்-19 தொற்றுநோய் என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நுண்ணுயிரி தொடர்பான விஞ்ஞானம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தபோது ஏற்பட்ட 1918 இன் சளிக்காய்ச்சல் (influenza) தொற்றுநோய்க்குப் பின்னரான மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியாகும். ஜூலை 2022 நடுப்பகுதியில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உத்தியோகபூர்வ இறப்பின் எண்ணிக்கை அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமாகவும், உலகளவில் கிட்டத்தட்ட 6.4 மில்லியனாகவும் இருந்தது. அதிகப்படியான இறப்புகள் பற்றிய மதிப்பீடுகள், தொற்றுநோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமாகவும், சர்வதேச அளவில் 21.5 மில்லியனாகவும் உள்ளன என்கிறது. இரண்டரை ஆண்டுகளில், தொற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் முதலாம் உலகப் போரின் நான்கு ஆண்டுகளில் (1914-1918) இறந்த 20 மில்லியன் இராணுவ மற்றும் பொதுமக்கள் இறப்புகளை எட்டியுள்ளன.

5. தொற்றுநோய்களின் போது தடுக்கக்கூடியதாக இருந்த மில்லியன் கணக்கான இறப்புகளின் பாரிய சோகத்திற்கு அப்பால், இது ஒரு 'பாரிய செயலிழந்த நிகழ்வு' ஆகும். இதன் நீண்டகால தாக்கங்களை முழுமையாக அளவிட முடியாது. கோவிட்-19 நோயாளிகளில் சுமார் 10-30 சதவீதம் பேர் நெடுங்கோவிட் நோய்க்கு உட்படுகின்றார்கள் என பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிப்பதுடன் இன்னும் பரவலான அறிகுறிகளை ஏற்படுத்தும். மிகவும் பொதுவான சிலவான, தீவிர சோர்வு, அறிவாற்றல் செயலிழப்பு, நாள்பட்ட வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத் திணறல் மற்றும் அதிகரித்த இதய துடிப்பு, இவை அனைத்தும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

6. நெடுங்கோவிட் உருவாகும் வாய்ப்புகள் ஒவ்வொரு மறுதொற்றின் போதும் கூடுவதுடன், தடுப்பூசி மூலம் சிறிதளவே குறைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில், அமெரிக்க அரசாங்கம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க வயது முதிர்ந்தவகள் நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டது. இது ஒவ்வொரு புதிய அலை தொற்றுகள் மற்றும் மறுநோய்களின் எண்ணிக்கையுடன் தொடர்ந்து உயரும். உலகளவில் இது விரிவுபடுத்தப்பட்டால், உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சாத்தியமான சிகிச்சை எதுவும் இன்னும் இல்லை.

7. மாரடைப்பு, பக்கவாதம், பலவிதமான நரம்பியல் கோளாறுகள், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், நோயெதிர்ப்பு சக்தி சீர்குலைவு மற்றும் பிற வாழ்க்கையை மாற்றும் அல்லது ஆபத்தான பின்விளைவுகள் போன்றவற்றின் அதிக ஆபத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்புபட்டுள்ளது. பாரிய இறப்பு மற்றும் பலவீனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கங்கள் போன்றவற்றால் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் ஆயுட்காலம் குறைந்துள்ளது. உலகளவில், ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைந்துள்ளது. இது இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னரான முதல் உலகளாவிய சரிவாகும். எசேக்கியேல் இமானுவல் போன்ற இனச்சுத்தப்படுத்துவோரால் (eugenicists) நீண்டகாலமாக பரிந்துரைக்கப்பட்ட இந்த பாரிய சமூகப் பின்னடைவு, ஓய்வூதியக் கடமைகள் மற்றும் பிற சமூக நலச் செலவினங்களைக் குறைப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவினரால் ஒரு நேர்மறையான நன்மையாகக் கருதப்படுகிறது.

உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வு

8. தொற்றுநோய் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தினதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் ஆய்வின் சாதனை, ஈடிணையற்றதும் மார்க்சிச இயக்கத்தின் வெற்றியுமாகும். இவை ஜனவரி 2020 முதல், பெருகிவரும் உலகளாவிய பேரழிவு குறித்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து எச்சரித்து, உலகளவில் SARS-CoV-2 ஐ ஒழிப்பதற்கான கொள்கைகளுக்காக 5,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆரம்பத்திலிருந்தே, நான்காம் அகிலத்தின் அனைத்துக்குழு தொற்றுநோய் ஒரு மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல, முதன்மையாக பரந்த முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து எழும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி என்று வலியுறுத்தியது. தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பு ஏற்கனவே இருக்கும் சமூக நிலைமைகளால் தீர்மானிக்கப்படும். அமெரிக்காவில், பல தசாப்தங்களாக முடிவடையாத போர், நிதிய ஒட்டுண்ணித்தனம், தொழிற்துறை அழிப்பு, தொழிற்சங்கங்களின் கூட்டுழைப்புவாதச் சீரழிவு, ஜனநாயக உரிமைகளை அழித்தல் மற்றும் 2020 இல் இருந்து டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகியதிலிருந்து உள்ளடங்கியிருந்த தீவிர வலதுசாரி அரசியலை வளர்ப்பது ஆகியவை தொடக்கத்தில் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன.

9. மார்ச் 2020 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துக்குழு முதலில் தொற்றுநோயை ஒரு 'தூண்டுதல் நிகழ்வு' என்று வகைப்படுத்தியது. இது முதலாம் உலகப் போர் மற்றும் பின்னர் ரஷ்யப் புரட்சியின் வெடிப்பை தூண்டிய ஆஸ்திரிய பேராயர் பிரான்ஸ் பேர்டினாண்டின் படுகொலைக்கு ஒத்ததாகும். படுகொலையைப் போலவே, தொற்றுநோய் உலக முதலாளித்துவத்தின் ஏற்கனவே மிகவும் முன்னேறிய நிலையிலுள்ள நெருக்கடியை ஆழமாக மோசமாக்கி போர் மற்றும் புரட்சி ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும் செயல்முறைகளை துரிதப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் வெடித்ததுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களின் வளர்ச்சியுடன், இத்தூண்டுதல் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

10. 2020 சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) காங்கிரஸின் தீர்மானம், ஜூலை 2020 வரை தொற்றுநோயின் தொடக்க மாதங்களை கவனமாக ஆவணப்படுத்துகிறது, அந்த நேரத்தில் CARES சட்டம் பிணை எடுப்பு நிறைவேற்றப்பட்டது மற்றும் மிருகத்தனமான வேலைக்கு திரும்பும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பூட்டுதல்கள் நீக்கப்பட்டன. தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே ஒரு முன்னறிவிப்பில், தொற்றுநோயைத் தடுக்க எந்த மாய மருந்தும் இருக்காது என்பதை நாங்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தினோம்:

'தொற்றுநோய் கட்டுக்குள் வரும் வரை எவ்வளவு காலம் ஆகும்?' இதுதான் கோடிக்கணக்கான மக்கள் கேட்கும் கேள்வியாகும். வழக்கமான பதில் என்னவென்றால், பயனுள்ள தடுப்பூசி உருவாக்கப்படும் வரை தொற்றுநோய் தொடரும். இந்த அபாயகரமான பதில், கோவிட்-19 நெருக்கடி கிட்டத்தட்ட ஒரு மருத்துவப் பிரச்சனை என்ற அனுமானத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் சமூக மற்றும் அரசியல் பரிமாணங்கள் இங்கு கருத்திலெடுக்கப்படவில்லை. முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அவசியமாக இருந்ததுபோல், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க உணர்வுமிக்க தலையீடு, நோயிற்கான ஒரு பயனுள்ள சமூக பொறுப்புள்ள நிலைமைகளை உருவாக்குவதற்கு அவசியம். எதிர்காலத்தில் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டாலும், அது நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்குமா என்பது உத்தரவாதமளிக்கப்படவில்லை என்றாலும், அதன் விநியோகம் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கும், பெரிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பூகோள மூலோபாய மோதல்களுக்கும் உட்பட்டதாக இருக்கும். மேலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை ஒரு முடிவுக்கு கொண்டு வராது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போலவே, தொற்றுநோய் ஆழமான வடுக்களை விட்டுச்செல்லும் மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். அது வெடிப்பதற்கு முன்பு இருந்த மோசமான நிலைமைகள் திரும்ப வரப்போவதில்லை. தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி உருவாகும். வர்க்கப் போராட்டத்தின் வீச்சும் தீவிரமும் அதிகரிக்குமே தவிர, குறையாது.

11. அந்தத் தீர்மானத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, ஜூலை-செப்டம்பர் 2020 இல் ட்ரம்ப் நிர்வாகத்தின் படுகொலைமிக்க, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு வெடித்தது. நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் வெடித்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உதவியுடன், கல்வியாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இதர பிரிவுகள், தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க உலகளவில் முன்வந்தனர்.

12. பைடெனின் 2020 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம், அவர் 'விஞ்ஞானத்தைப் பின்பற்றுவார்' மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொள்கைகளை செயல்படுத்துவார் என்ற அவரது பொய்யான கூற்று ஆகும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பூட்டுதல்களை நிராகரித்து, இவ்வாறான கொள்கைகளைப் பரிந்துரைத்த டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோல்மை நீக்கினார். அத்துடன் இதுவரை தொலைதூர கற்றலில் இருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்க கூறினார். பதவியேற்ற பின்னர், இந்த கொள்கையை இரக்கமின்றி செயல்படுத்துவதற்கு ஆசிரியர் சங்கங்களுடன் பைடென் நெருக்கமாக பணியாற்றினார். மே 13, 2021 அன்று, தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் முகக்கவசங்களைக் கழற்றலாம் என்று புதிய தொற்றுநோய் தடுப்பு அமைப்பின் இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி அறிவித்தார். இது முகக்கவசங்களை அணியவேண்டும் என்ற ஆணைகளையும் நீக்குவதற்கான வெள்ளக் கதவுகளைத் திறந்து, டெல்டா மாறுபாட்டின் பேரழிவுகரமான எழுச்சிக்கு மேடை அமைத்தது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், டெல்டா நாட்டைக் தாக்கத் தொடங்கியிருக்கையில் பைடென் வைரஸிலிருந்து 'விடுதலை' பெற்றுவிட்டதாக முன்கூட்டியே அறிவித்தார். அந்த உரைக்கு பின்னர் 420,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 இனால் இறந்துள்ளனர்.

13. ஆகஸ்ட் 2021 தொற்றுநோயுக்கும் அதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்பிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறித்தது. அமெரிக்காவில் பள்ளிகள் மொத்தமாக மீண்டும் திறக்கப்பட்டது ஏற்கனவே பாரிய டெல்டா எழுச்சியை தூண்டியது. ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாவட்டங்களில், முகக்கவச ஆணைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பரிசோதனைத் திட்டங்களுடன் ஒரு தணிப்பு அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேசமயம் குடியரசுக் கட்சி தலைமையிலான மாவட்டங்கள் வைரஸைத் தடுக்காமல் பரவ அனுமதித்தன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், வைரஸ் பரிமாற்றம் பரவலாக இருந்தது.

14. ஆகஸ்ட் 20, 2021 அன்று, WSWS ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. இது தொற்றுநோய்க்கான மூன்று மூலோபாயங்களான சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை, தணிப்பு மற்றும் ஒழிப்பு-அழித்தலுக்கு இடையே உள்ள விஞ்ஞான மற்றும் அரசியல் வேறுபாடுகளை தெளிவாக விளக்கியது. இந்த அறிக்கையின் மைய முக்கியத்துவம், தணிப்பு மூலோபாயத்தின் சீர்திருத்தவாத தன்மையை தெளிவுபடுத்தி, தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புரட்சிகர மூலோபாயமான ஒழிப்பு-அழிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என இந்த பத்தியில் சுருக்கமாக குறிப்பிட்டது:

முதலாளித்துவ கொள்கைகளுக்கு சீர்திருத்தவாதத்தை போல் தணிப்பது தொற்றுநோயியல் உள்ளது. படிப்படியான மற்றும் துண்டு துண்டான சீர்திருத்தங்கள், காலப்போக்கில், இலாப அமைப்பின் தீமைகளைக் குறைக்கும் மற்றும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை சீர்திருத்தவாதிகள் வைத்திருப்பது போல, தணிப்புவாதிகள் கோவிட்-19 இறுதியில் ஜலதோஷத்தை விட தீங்கு விளைவிக்காத ஒன்றாக மாறும் என்ற மாயையை வளர்க்கிறார்கள். இது தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானத்தில் இருந்து முற்றிலும் தொடர்பு அகற்றப்பட்ட ஒரு கனவாகும்.

உண்மையில், வைரஸ் பரவும் வரை, அது மனிதகுலம் அனைவரையும் அச்சுறுத்தி புதிய, அதிக தொற்று, கொடிய மற்றும் தடுப்பூசிக்கு அடங்காத மாறுபாடுகளாக மாறிக்கொண்டே இருக்கும். இது உலக அளவில் ஒழிக்கப்படாவிட்டால், கோவிட்-19 இன் தணல் தொடர்ந்து எரிந்து, வைரஸ் புதிதாக வெடிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.

15. இந்த எச்சரிக்கை மூன்று மாதங்களுக்குப் பின்னர், மிகவும் தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி-எதிர்ப்பு ஓமிக்ரோன் மாறுபாட்டின் தோற்றத்துடன் முழுமையாக நிரூபிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ அரசியலுக்குள், 'தாராளவாத' அரசாங்கங்கள் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டதால், அனைத்து தணிப்புவாத பாசாங்குகளும் கைவிடப்பட்டன.

16. ஆகஸ்ட் 22 மற்றும் அக்டோபர் 25, 2021 அன்று, உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பும் (IWA-RFC) இரண்டு சக்திவாய்ந்த இணையவழி கருத்தரங்குகளை SARS-CoV-2 இன் உலகளாவிய ஒழிப்புக்காக போராடும் சில முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களுடன் இந்த தொற்றுநோய் தொடர்பாக நடத்தியது. இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது. இந்த காலம் முழுவதும், IWA-RFC சர்வதேச அளவில் பரந்த அளவிலான தொழிற்துறைகளில் விரிவடைந்தது மற்றும் பிரிட்டிஷ் தாயாரான லிசா டியஸால் தொடங்கப்பட்ட உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க உதவியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை விஞ்ஞானிகளிடமிருந்து பிரிக்கவும் #MeToo பிரச்சாரம் தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கும் எதிராக தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதிலிருந்து நாம் மிகவும் கொள்கைரீதியான விஞ்ஞானிகளுடன் எமது தொடர்பை மிகவும் ஆழப்படுத்தியுள்ளோம்.

17. இந்த நெருக்கடியான கட்டத்தில் தொற்றுநோய்க்கு எதிரான கட்சியின் போராட்டம், நவம்பர் 21, 2021 அன்று, ஓமிக்ரோன் மாறுபாடு பற்றிய செய்தி வெளிவருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை ஆய்வை தொடங்கியதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. WSWS அறிக்கை இந்த விசாரணை ஆய்வைப்பற்றி பின்வருமாறு அறிவித்தது:

தொற்றுநோய் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இருபத்தியோராம் நூற்றாண்டின் போக்கில் அதன் தாக்கம் இருபதாம் நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப் போர்களின் தாக்கத்தைப் போலவே மிகப் பெரியதாக இருக்கலாம். எனவே, தொற்றுநோய்களின் தோற்றம், காரணங்கள் மற்றும் விளைவுகள் ஆகியவை முழுமையாக ஆராயப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த பேரழிவு ஒரு 'கடவுளின் செயலோ' அல்லது சீன ஆய்வகத்தில் ஒரு தீய சதியின் விளைவாகவோ இல்லை. அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் தொற்றுநோய்க் கட்டுக்கதைகளில் மறைக்கப்பட்டிருக்கும் பொய்களை தீர்க்கமாக மறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

SARS-CoV-2 ஆரம்பத்தில் கண்டறியப்பட்டதில் இருந்து மில்லியன் கணக்கானவர்களின் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு காரணமான கொள்கைகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மூடிமறைப்பு, பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல்களை உடைக்க இந்த விசாரணை ஆய்வு அவசியமாகும். விசாரணையானது சமூகரீதியாக கேவலமான மற்றும் மனித வாழ்வின் மீதான குற்றவியல் அலட்சியத்திற்கான ஏராளமான ஆதாரங்களைச் சேகரித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

18. இந்த விசாரணை ஆய்வு ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பூஜ்ஜய-கோவிட் மூலோபாயம், காற்றினூடாக பரவுதல், முகக்கவச கொள்கைகள், நீண்டகால கோவிட், வைரஸ் பரவுவதில் பள்ளிகளின் பங்கு, குழந்தைகளில் கோவிட்-19 இன் தாக்கம், மற்றும் மேலும் அமெரிக்கா, கனடா, பிரேசில், இங்கிலாந்து, சுவீடன், ஜேர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குற்றவியல் கொள்கைகள் குறித்து நிபுணர்கள் இதில் சாட்சியமளித்துள்ளனர். வாகனத் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பலர் உட்பட பல்வேறு தொழில்களில் உள்ள தொழிலாளர்களை நாங்கள் நேர்காணல் செய்துள்ளோம். விசாரணை ஆழமடைந்து வருவதுடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை அது முன்வைக்கும்.

19. ஓமிக்ரோன் மாறுபாட்டிற்கு பைடென் நிர்வாகத்தின் பிரதிபலிப்பு பயங்கரமானது. அமெரிக்காவில் முன்னர் நடைமுறையில் இருந்த ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கைகளான பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள், முகக்கவச கட்டளைகள், தரவு கண்காணிப்பு மற்றும் பல பெரும்பாலும் அல்லது முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன. ஜனவரி-பிப்ரவரி 2022 இல், ஓமிக்ரோன் எழுச்சியின் போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் ஒரு டஜன் பெரிய நகரங்களில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு அலைகளை எழுப்பியதால், பைடென் நிர்வாகம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டியது. ஊடகங்களின் கவனம் முற்றிலும் போரின் பக்கம் திரும்பியதால், அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்குவதற்கான இருதரப்பு பிரச்சாரம் அதிகரித்தது. தொற்றுநோய் செயற்கையாக 'முடிவுற்றது' என்று அறிவிக்கப்பட்டு, ஜலதோஷத்தை விட இது தீங்கு விளைவிப்பதில்லை எனப்பட்டது. 1 மில்லியன் மரண மைல்கல்லை உத்தியோகபூர்வமாக கடந்து சென்றது கூட பைடெனிடமிருந்து ஒரு பேச்சு அல்லது கொள்கை முன்மொழிவை எழுப்ப முடியவில்லை. அவர் அரசாங்க கட்டிடங்களில் அரைக் கம்பத்தில் கொடிகளை பறக்கவிடுமாறு எழுத்துபூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

20. மார்ச் மாத இறுதியில் தொடங்கிய BA.2 மற்றும் BA.2.12.1 துணை வகைகளின் ஏற்கனவே உள்ள பேரழிவுகரமான எழுச்சியை ஆழமாக்கும் ஓமிக்ரோன் BA.5 இன் பரவலைத் தடுக்க வெள்ளை மாளிகையோ அல்லது எந்த மாநில அரசாங்கமும் எதுவும் செய்யாது. இந்த விடயத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் மற்றும் நிதி முற்றிலும் வறண்டுவிட்ட நிலையில், பைடென் நிர்வாகம் அதன் தடுப்பூசி மட்டும் என்ற அணுகுமுறையை மொடர்னா மற்றும் பைசரிடமிருந்து 100 மில்லியன் பைவலன்ட் தடுப்பூசிகளை வாங்குவதன் மூலம் தொடர்கிறது. இந்த தொற்றின்போது எந்த மாறுபாடு ஆதிக்கம் செலுத்தினாலும் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கும்.

21. முதலில் ட்ரம்பின் கீழும், இப்போது பைடெனின் கீழும் தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான பேரழிவுகரமான பிரதிபலிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவின் வெளிப்பாடாகும். உலகின் பணக்கார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடான அமெரிக்கா, தொற்றுநோய்க்கு பகுத்தறிவு, விஞ்ஞான முறையில் பதிலளிக்க முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் பாரிய அம்பலப்படலும் பதிலளிக்க முடியாததுமான குற்றச்சாட்டாகும். தொற்றுநோய்களின் போது, அமெரிக்காவின் பில்லியனர்கள் $1.7 டிரில்லியனுக்கு மேல் குவித்துள்ளனர். அவர்களின் கூட்டுச் செல்வத்தை 58 சதவிகிதம் அதிகரித்துள்ளனர். CARES சட்டத்தால் தொடங்கப்பட்ட பணம்-அச்சிடும் நடவடிக்கையானது, உக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் சிதைத்துக்கொண்டிருக்கும் பணவீக்க நெருக்கடியை அதிகரிப்பதற்காக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முறிவுடன் குறுக்கிடுகிறது. மார்க்ஸின் புகழ்பெற்ற கருத்து தொற்றுநோய்களின் போது புதிய அர்த்தத்தைப் பெற்றது:

ஒரு துருவத்தில் செல்வம் குவிவதும், இதனால் அதே நேரத்தில் எதிர் துருவத்தில் மூலதனத்தின் வடிவத்தில் தனது சொந்த பொருட்களை உற்பத்தி செய்யும் வர்க்கத்தின் பக்கத்தில் துன்பம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச் சீரழிவை உருவாக்குகின்றது.

22 தொற்றுநோய்க்கு ஒரே ஒரு புரட்சிகர சோசலிச பதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடமிருந்து (ICFI) வந்தது. உலகளாவிய நோய் ஒழிப்புக்கான எங்கள் நிலையான மற்றும் ஆழமான போராட்டம், மற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து எங்கள் இயக்கத்தை வேறுபடுத்துகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு போலி-இடது போக்கும் தொற்றுநோய்க்கு அவர்கள் அளித்த பதிலினால் அல்லது பதிலளிக்காததால் ஆழமாக மதிப்பிழந்து நிற்கிறது. உலக அளவில், அவர்கள் மௌனமாக உள்ளனர். பல்வேறு உலக அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் கொலைவெறி 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளுக்கு ஆதரவளித்தனர் அல்லது முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைக்கும் போது இந்த கொள்கைகளுக்கு எதிராக எப்போதாவது காட்டிக் கொண்டனர். தொற்றுநோய் பற்றிய அவர்களின் நிலைப்பாடுகள் குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் அமைப்புகளும் நோக்குநிலைகொண்ட முதலாளித்துவ அரசியலில் வலதுநோக்கிய அவர்களின் பரந்த மாற்றத்தின் வெளிப்பாடாகும்.

குரங்கம்மை, காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள்

23. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் இருந்து பாயும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான இந்த பேரழிவுகரமான பதிலில் இருந்தே, முன்னோடியில்லாத உலகளாவிய குரங்கம்மை நோய் வெடிப்புக்கு மீண்டும் எந்த பயனுள்ள பதிலையும் அளிக்கமுடியவில்லை. நோய் முடிவுறாத 70 நாடுகளில் 20,000 பேர் இதுவரை தொற்றுக்குட்பட்டுள்ளனர். ஒரு அறிவிக்கப்படாத சமாந்திரமான தொற்றுநோயாக எதிர்வரும் மாதங்களில் குரங்கம்மை பெருமளவில் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க தலையீடு இல்லாமல் செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் 1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்குகள் இருக்கும் என மாதிரிகள் காட்டுகின்றன. நோயாளிகள் நான்கு வாரங்கள் வரை தொற்றுநோயாக இருக்கலாம் மற்றும் நீண்ட காலம் தனிமையில் இருக்க வேண்டும். ஆனால் உலக முதலாளித்துவம் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் கூட பொறுத்துக்கொள்ளாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

24. 1970களில் இருந்து விஞ்ஞானிகள் எச்சரித்த காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆழமாகி வருகின்றன. காலநிலை மாற்றத்திற்கான 2022 அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பின் (IPCC) அறிக்கை, இன்றுவரை மிகவும் மோசமான காலநிலை மாற்றம் ஏற்கனவே 'பரவலான, சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரவலான தாக்கங்களையும், மக்கள், குடியேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில்' ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் 'கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெருகிய முறையில் மீளமுடியாத இழப்புகள், நிலப்பரப்பு, நன்னீர் மற்றும் கடலோர மற்றும் திறந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 3.3 முதல் 3.6 பில்லியன் மக்கள் 'காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் வாழ்கின்றனர்' என்று அறிக்கை குறிப்பிடுகிறது. 2050 ஆம் ஆண்டில், கடலோர நகரங்களின் தாழ்வான பகுதிகளில் தற்போது வசிக்கும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வார்கள். 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலக மக்கள்தொகையில் 50 முதல் 75 சதவீதம் பேர் தாங்க முடியாத வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக 'உயிர் ஆபத்தான காலநிலை நிலைமைகளை' அனுபவிக்கலாம்.

25. தொற்றுநோயைப் போலவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கங்களும், இந்த இப்போதுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள உலக அரசாங்கங்கள் மறுப்பது ஆகியவை சர்வதேச அளவில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தீவிரமயமாக்கியுள்ளன. செப்டம்பர் 2019 இல், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள 161 நாடுகளில் 5,800 க்கும் மேற்பட்ட இடங்களில் உலகளாவிய காலநிலை போராட்டத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

26. தொற்றுநோய் எழுச்சி நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை மாதிரியாக்கும் சமீபத்திய பெரிய ஆய்வு, வரவிருக்கும் தசாப்தங்களில் முன்னர் தொடர்பில் இல்லாத உயிரினங்களுக்கு இடையே சுமார் 300,000 'முதல் தொடர்புகளை' காணும் என்று கண்டறிந்துள்ளது. வைரஸ்களின் குறுக்கு-இன பரவல் 15,000 முறை நிகழ்கிறது. பாலூட்டிகளில் மட்டும் இவற்றில் 4,000 க்கும் அதிகமானவை. எத்தனை வைரஸ்கள் இறுதியில் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு திட்டமிடவில்லை, ஆனால் அது சாத்தியமானது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பு, எதிர்காலத்தில் ஆளும் வர்க்கத்தின் கொள்கையானது எந்த ஒரு தொற்றுநோயையும் பரவலடையச் செய்யும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்

தொற்றுநோய் தொடர்பான சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இன்றியமையாத பணிகள் கடந்த ஆண்டில் தெளிவாகியுள்ளன. மனிதகுலத்தின் முன் முன்வைக்கப்படும் இரண்டு மாற்று வழிகளில் ஒன்று முடிவில்லாத பாரிய தொற்று, பலவீனம் மற்றும் இறப்பு அல்லது முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கி எறிந்து SARS-CoV-2 இன் மனிதனுக்கு மனிதன் பரவுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய ஒழிப்பு கொள்கையை செயல்படுத்துதலாகும். ஒழிப்பு மூலோபாயத்திற்கு, பாரியளவிலான தடுப்பூசி, பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புத் தடமறிதல், பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற உற்பத்தியையும் தற்காலிகமாக மூடுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு முழு வருமானம் உள்ளிட்ட, சிறு வணிகங்களுக்கான ஆதரவுடன் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் கைவசமுள்ள ஆயுதக் களஞ்சியத்தில் ஒவ்வொரு கருவியையும் உலகளாவிய அளவில் பயன்படுத்த வேண்டும். பூச்சிய-கோவிட் ஒழிப்பு உத்திக்கான பரந்த ஆதரவு, வெடிப்புகளை மீண்டும் மீண்டும் அடக்குவதற்கு அதிகாரிகளை அனுமதித்துள்ள சீனாவின் அனுபவம், ஒழிப்பு (elimination) சாத்தியம் என்பதையும் அது உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் நடைமுறையில் நிரூபிக்கிறது.

28. கோவிட்-19 தொற்றுநோய், பிற தொற்று நோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான புரட்சிகர சோசலிச பதில், உலக சோசலிசத்திற்காகப் போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட முடியும். தொற்று நோய்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கங்கள் இல்லாத வாழ்க்கை என்பது, உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சமூக உரிமையாகும். எனவே, சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) பின்வரும் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்:

  • அ) உலகளாவிய ஒழிப்புக்கான போராட்டம். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்திற்கு உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கான அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது, இது சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பை (IWA-RFC) கட்டுவதன் மூலம் மட்டுமே வளர்ச்சியடையும். IWA-RFC இன் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) மத்திய நோக்கம் உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்தை பிரபலப்படுத்துவதாக இருக்க வேண்டும். கொள்கைரீதியான விஞ்ஞானிகள் மற்றும் கோவிட்-எதிர்ப்பு ஆர்வலர்களுடன் ஒத்துழைக்கும் எங்கள் தொடர்புகளையும், ஒத்துழைப்பையும் கட்சி வளர்க்க வேண்டும்.
  • ஆ) உலகளாவிய தொழிலாளர் விசாரணை ஆய்வின் விரிவாக்கம். தொற்றுநோய்களின் போது என்ன நடந்தது மற்றும் இந்த மாபெரும் சமூகக் குற்றத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தொழிலாளர்களுக்கு அரசியல்ரீதியாக கல்வி கற்பிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த பொறிமுறையாக இவ்விசாரணை உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) விசாரணையை ஆழப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொழிற்துறையிலும் உள்ள தொழிலாளர்களின் அனுபவங்களை முன்வைப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • இ) சோசலிச பொது சுகாதாரத்திற்கான போராட்டமும் மருந்து மற்றும் சுகாதாரத் தொழிற்துறைகளின் சர்வதேசமயமாக்கலும். தொற்றுநோய்களின் போது, பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் பல தசாப்தங்களாக நீடித்த தாக்குதலின் ஒரு அளவுரீதியான ஆழம் உள்ளது. சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் வளங்களின் சமமான விநியோகத்தை உறுதிசெய்ய, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருந்துத் தொழில்கள் பொது மற்றும் உலகளாவிய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். இதற்கான அணுகல், ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை ஆகியவை பூகோளமயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் இவை நவீன சமுதாயத்தில் உலகளாவிய உரிமைகளாகும். ஒரு உலக சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே மனித நடவடிக்கைகளின் மிக முக்கியமான துறைகளான பொது சுகாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்புக்களில் அபிவிருத்தி செய்ய முடியும். சோசலிசத்தின் கீழ், பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஆயுட்காலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஆழமான விரிவாக்கம் இருக்கும்.
  • ஈ) காலநிலை மாற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போராட்டம். ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், காலநிலை மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் மோசமாகி, பில்லியன் கணக்கான உயிர்கள் மற்றும் பூமியில் உயிர்வாழும் தன்மையை அச்சுறுத்தும். தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் விஞ்ஞானரீதியாக திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரமே காலநிலை மாற்றத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து மாற்றியமைக்க முடியும்.

Loading