"எங்களுடைய காலத்தின் பிரச்சினைகள் அனைத்தும் உலகப் பிரச்சினைகளாக இருக்கின்றன."

அமெரிக்காவிலுள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலையும் சோசலிசத்திற்கான போராட்டமும் என்பது குறித்த கேள்விகளுக்கு டேவிட் நோர்த் பதிலளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஏப்ரல் 8 அன்று, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் WSU கிளை ஏற்பாடு செய்திருந்த ஒரு பொது நிகழ்வில், மிச்சிகன், டெட்ராய்டிலுள்ள வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பொது நிகழ்வில், காஸா இனப்படுகொலை குறித்த கேள்விகளுக்கு டேவிட் நோர்த் பதிலளித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு தலைவராக இருக்கும் நோர்த் வழங்கிய விரிவான, வரலாற்றுரீதியில் அடித்தளமிட்ட பதில்கள், காஸாவில் இனப்படுகொலையையும் மூன்றாம் உலகப் போருக்குள் இறங்குவதையும் நிறுத்த விரும்பும் அனைவராலும் கற்கப்பட வேண்டும்.

கூட்டத்தின் நான்கு முக்கிய கேள்வி-பதில் கருத்துப் பரிமாற்றங்களின் வீடியோக்களை கீழே காணலாம்.

ஏப்ரல் 8, 2024 அன்று மிச்சிகன், டெட்ராய்டில் உள்ள வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் ட்ரொட்ஸ்கிச தலைவரும் எழுத்தாளருமான டேவிட் நோர்த் பங்குபற்றிய காஸா இனப்படுகொலையை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்த மூன்று மாணவர்கள் குழுவில் அமர்ந்திருக்கின்றனர்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் இயக்கமே சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் இயக்கம் என்பதை விளக்கிய IYSSE இன் WSU கிளையின் தலைவரான ஆதாம் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மனி, ரஷ்யா, உக்ரேன், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை உட்பட சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புக்கு சகோதர அமைப்புகள் உள்ளன என்பதை அவர் குறிப்பிட்டார்.

“போர், இனப்படுகொலை, வறுமை, சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்ற அச்சுறுத்தல் மற்றும் பெருந்தொற்று நோய்களின் அச்சுறுத்தல் உட்பட மனிதகுலம் முகங்கொடுக்கும் சமூக நெருக்கடியானது, நாம் வாழும் பொருளாதார அமைப்புமுறையான முதலாளித்துவத்தால் ஏற்படுகிறது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று ஆதாம் நிறைவு செய்தார். வளாகத்திலேயே சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு ஒரு சோசலிசத் தீர்வுக்காக போராட டெட்ராய்ட் வாகனத் தொழிற்சாலைகளுக்கு செல்வதிற்கு மன்றத்தில் இணையுமாறும் அவர் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான இவான் பிளேக் விவாதத்தை நெறிப்படுத்தினார். கோவிட் -19 இன் தொடர்ச்சியான பரவல் குறித்து எச்சரித்து கூட்டத்தைத் தொடங்கிய அவர், முகக்கவசம் அணிந்ததற்காக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பங்குபற்றிய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முன்கூட்டியே பரிசோதித்ததாகவும், பார்வையாளர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக தொலைதூர புற ஊதா விளக்குகள் (far-UV lamps) மற்றும் HEPA வடிகட்டிகளை சோசலிச சமத்துவக் கட்சி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் நெடிய வரலாற்றை தெளிவுபடுத்திய பிளேக், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அரை நூற்றாண்டு காலமாக நோர்த் வகித்த பாத்திரத்தை மேற்கோளிட்டார். இன்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் எரியும் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யும் நோர்த்தின் எட்டுப் புத்தகங்களை பிளேக் சுருக்கமாக திறனாய்வு செய்தார். முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முனையும் இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இன்றியமையாத ரஷ்ய புரட்சியின் இணை-தலைவரின் வாழ்க்கை, அரசியல் வேலை மற்றும் முக்கியத்துவம் மீது கவனம் குவிக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நோர்த்தின் மிக சமீபத்திய தொகுதிக்கு அவர் சிறப்புக் கவனம் செலுத்தினார்.

டேவிட் நோர்த்தின் எட்டு புத்தகங்கள். Mehring.com இல் இப்போது கிடைக்கிறது

இந்தாண்டு பிரசுரிக்கப்பட்ட நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாத கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை (  The Logic of Zionism: from Nationalist Myth to the Gaza Genocide ) என்ற நூலுக்குத் திரும்புகையில், பிளேக் கூறுகையில், “இஸ்ரேலில் பாசிசவாத நெத்தன்யாகு ஆட்சியால் நடத்தப்பட்டு வருகின்ற இன்றைய ஏகாதிபத்திய ஆதரவிலான படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சியோனிசத்தின் வரலாற்று வேர்கள் மற்றும் பிற்போக்குத்தனமான சித்தாந்த அடித்தளங்கள் குறித்த மிக முக்கியமான ஆய்வைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு தொடர் விரிவுரைகளை இந்தத் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பிளேக் தொடர்ந்தார்:

சோசலிச சர்வதேசியவாதத்துடனும் யூத தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகளின் மிக முன்னேறிய பிரிவுகளுடனும் எப்போதும் கூர்மையான மோதலில் இருந்து வந்துள்ள ஒரு தேசியவாத இயக்கமாக சியோனிசத்தின் அபிவிருத்தியை இந்த விரிவுரைகள் கண்டறிகின்றன.

கேள்விகள் மற்றும் பதில்கள்

நோர்த்தை நோக்கி கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆதாம் இடமிருந்து வந்தது, அவர் “சோசலிச இயக்கத்தில் நீங்கள் இருந்த காலத்தில் ஒரு சோசலிஸ்டின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதில் ஏதேனும் பெரிய மாற்றங்கள் வந்திருக்கிறதா?” என்று கேட்டார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நோர்த்தின் ஆழ்ந்த பதிலிறுப்பு, 1960 களின் அவரது தலைமுறை தீவிரமயப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். ஆனால், அந்தக் காலகட்டத்தையும் அதற்கு முந்தைய உலக வரலாற்றுடன் கொண்டிருந்த தொடர்பையும் அவர் வலியுறுத்தினார். 1968 மே பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் இருந்து உலகம் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், 1970ல் தான் முதன்முதலில் ட்ரொட்ஸ்கியை தான் கற்கத் தொடங்கியதை அவர் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்.

நோர்த் விவரித்தார்:

சோர்போன் பல்கலைக்கழகத்தில் பாரிசில் ஒரு மாணவர் வேலைநிறுத்தமாக தொடங்கிய ஒன்று, அபிவிருத்தி கண்டு பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொது வேலைநிறுத்தமாக தீவிரமடைந்தது. இது பிரான்ஸை மட்டும் நிலைகுலையச் செய்யவில்லை, உலகம் முழுவதையும் நிலைகுலையச் செய்தது. திடீரென்று, ஏறத்தாழ ஒரே இரவில், தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சி என்பது நாளாந்த ஒழுங்காக இருந்தது.

அந்தச் சமயத்தில் உலகெங்கிலுமான அரசியல் சூழலை விவரித்து, நோர்த் குறிப்பிடுகையில், 1968 வியட்நாமில் டெட் தாக்குதலின் ஆண்டாகவும் இருந்தது. அது போர்-எதிர்ப்பு இயக்கத்தை பாரியளவில் தீவிரப்படுத்தியதுடன், “உடனடி வெற்றி” என்ற அமெரிக்கப் பிரச்சாரத்தை பொய்கள் என்று எடுத்துக்காட்டியது என்றார். அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் மார்ச் 31 அன்று மறுதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார், ஏப்ரல் 4 அன்று, மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.

பிரான்சின் மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் “ஒரு தீர்மானகரமான சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் குறித்த மார்க்சிசத்தின் அடிப்படை கருத்தாக்கங்கள் வெறுமனே வரலாற்று விடயமல்ல, அது யதார்த்தமானது என்பதை திடீரென தெளிவுபடுத்தியது” என்று நோர்த் வலியுறுத்தினார்.

இந்த அபிவிருத்திகளோடு சேர்ந்து, லியோன் ட்ரொட்ஸ்கியிடமும் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தனக்கு இருந்தது என்று அவர் கூறினார். நோர்த், ஈசாக் டொய்ட்ஷரின் தீர்க்கதரிசி ஆயுதபாணியாக்கப்பட்டார்: ட்ரொட்ஸ்கி 1879-1921, நிராயுதபாணியான தீர்க்கதரிசி: ட்ரொட்ஸ்கி 1921-1929, மற்றும் தீர்க்கதரிசி வெளியேற்றப்பட்டார்: ட்ரொட்ஸ்கி 1929-1940 ஆகிய மூன்று தொகுப்புகளை மேற்கோளிட்டார்.

“அது ஒரு அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்த புத்தகமாக இருந்தது. ஏனென்றால் அது ஒரு ஒட்டுமொத்த புதிய தலைமுறைக்கு பல பொய்கள் மற்றும் திரிபுகளால் மூடப்பட்டிருந்தவரும், நவீன வரலாற்றில் மிகவும் அவதூறான நபருமாக காட்டப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியைத்தான் முன்வைத்தது.” இந்த முத்தொகுப்பு “ஸ்ராலினிசம் மீதான ஒரு உண்மையான மார்க்சிச விமர்சனத்தை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியது” என்று நோர்த் கூறினார்.

“1960 களில் எனது தலைமுறை ஏன் மிகவும் தீவிரமாக இருந்தது?” என்ற கேள்வியை முன்வைத்ததோடு, நோர்த் மேலும் இவ்வாறு கூறினார் :

எனது தலைமுறையின் சிந்தனையை வடிவமைத்தது எது மற்றும் வியட்நாமுக்கு நமது விடையிறுப்பின் அதீத தீவிரவாதத்தை தீர்மானித்தது எது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் இன்னும் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அது இரண்டாம் உலகப் போர். அது முதலாம் உலகப் போர் ஆகும்.

இப்போது பதிலளிப்பதைப் போலவே, அப்போதும் பதிலளிக்கப்பட வேண்டிய பெரிய வரலாற்று கேள்விகளையும் நோர்த் சுட்டிக்காட்டினார். “அந்தக் காலத்திலிருந்து என்ன மாறிவிட்டது என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக, அப்போது எங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை என்னவென்றால், சோசலிஸ்டுகள் யார்? என்று கண்டுபிடிக்க முயற்சிப்பதாக இருந்தது” என்று நோர்த் பின்வருமாறு விளக்கினார் :

தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்ட பல அமைப்புகள் இருந்தன—சோசலிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட பல கட்சிகளும் இருந்தன. நிச்சயமாக, கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட பல வகையான அமைப்புகளும் அங்கே இருந்தன.

இப்போது இன்றைய நிலைமையைப் பாருங்கள். இந்த மாபெரும் வெகுஜன இயக்கங்கள் அனைத்தும் என்ன ஆயிற்று? நான் சோசலிச இயக்கத்தில் இணைந்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்களை ‘உண்மையாக இருக்கும் சோசலிசம்’ என்று தம்மை அழைத்துக் கொண்டனர். ஆனால், இவற்றை எதிர்ப்புரட்சிகர கட்சிகள் என்று ட்ரொட்ஸ்கிச இயக்கம் கூறியது. அவை மார்க்சிச மரபின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் படுமோசமான எதிரிகள், “அவர்களின் ஒரு கல் கூட மற்றொன்றின் மீது எஞ்சாது.” ஸ்ராலின் தொழிலாள வர்க்கத்திற்கு சவக்குழி தோண்டுபவர் என்றும், தொழிலாள வர்க்கம் சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒரு அரசியல் புரட்சியை நடத்தாவிட்டால், சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ மீட்சியுடன் முடிந்துவிடும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

உண்மையான சோசலிசம் எது என்பதை ஒருவர் எவ்வாறு தீர்மானிப்பார்? ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் மிகவும் அடிப்படையானதாக இதற்கு இருந்தது. ஏனென்றால், ட்ரொட்ஸ்கி முன்வைத்தது ஒரு உலகப் புரட்சிகர கருத்தாக்கமாக இருந்தது.

நிறைவாக, நோர்த் பின்வருமாறு கூறினார்:

இங்கே நாம் என்ன மாறிவிட்டது என்பதற்கான மிக அடிப்படையான கேள்விக்கு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். உலகம் எந்த அளவுக்கு எல்லா அர்த்தத்திலும் பூகோளமயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த மாற்றமாகும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு உலக நிகழ்வாக இருக்கிறது. உற்பத்தி என்பது ஒரு பூகோளரீதியான நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது, மாற்றமானது ஒரு பூகோள அளவில் நிகழ வேண்டும். ட்ரொட்ஸ்கிசத்தின் சக்திவாய்ந்த தன்மைக்கு என்ன காரணம் என்றால், அது இதை வெளிப்படுத்துகிறது; எமது வேலைத்திட்டமானது உலகப் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்திக்கு ஒத்ததாக இருக்கிறது.

நம் காலத்தின் பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வு இல்லை. எல்லாப் பிரச்சினைகளும் உலகப் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. அதுவே மாபெரும் மாற்றமாக இருக்கிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

WSU IYSSE இன் ஒரு அங்கத்தவரும் அமசோன் தொழிலாளருமான டேவிட், பிப்ரவரி 25, 2024 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன் தீக்குளித்த ஆரோன் புஷ்னெல் குறித்த நோர்த்தின் விரிவுரைக் காணொளியைப் பார்த்ததாகக் கூறி, “காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்து போராடிய புஷ்னெல், துயரகரமாக அவரது உயிரை மாய்த்துக் கொண்டார். காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இளைஞர்கள் என்ன முற்போக்கான பாத்திரத்தை வகிக்க முடியும்?” என்று கேட்டார்,

இளைஞர்களை “சமூகத்தின் அரசியல் அளவுமானி” என்று விவரித்த நோர்த், இவ்வாறு தொடர்ந்தார்:

அவர்கள் பாசாங்குத்தனத்திற்கும், பிரகடனப்படுத்தப்படும் இலட்சியங்களுக்கும் அவர்கள் காணும் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாட்டிற்கு உணர்ச்சியற்றவர்களாக இருக்கவில்லை. அதனால் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால், இளைஞர்கள் தனியாக உலகை மாற்ற முடியாது. அவர்கள் மாற்றத்தைத் தூண்டுவதில் ஒரு வினையூக்கியாக இருக்க முடியும். ஆனால் இளைஞர்கள் தொடர்பை ஏற்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியை நோக்கி தங்கள் எதிர்ப்பை வழிநடத்தாவிட்டால், பின்னர் அடிக்கடி நடப்பதைப் போல, எதிர்ப்பு தவறாக வழிநடத்தப்படும்.

நோர்த், எவ்வாறு புஷ்னெல்லை அணுகி தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு அரசியல் இயக்கத்தை ஸ்தாபிக்க அவரை ஊக்குவித்திருப்பார் என்பதை விளக்கினார். தற்கொலை மற்றும் விரக்தியைப் பெருமைப்படுத்திய பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் போன்றவர்களின் அணுகுமுறையை நோர்த் கடுமையாக எதிர்த்தார்.

பார்வையாளர்களில் இருந்த இளைஞர்கள் மத்தியில் உரையாற்றுகையில், நோர்த் கூறினார்:

உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எங்களால் பதிலளிக்க முடியாமல் போகலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால், கடந்த நூற்றாண்டின் மாபெரும் மற்றும் பெரும்பாலும் துயரம் நிறைந்த புரட்சிகர அனுபவங்களைப் படிக்கவும் கற்றுக்கொள்ளவும் தொடங்குவதற்கு இப்போது உங்களை நாங்கள் ஊக்குவிக்க முடியுமானால், உங்களால் அதை கிரகித்துக் கொள்ள முடிந்தால், வரவிருக்கும் விஷயங்களுக்கு உங்களையும் தொழிலாள வர்க்கத்தையும் தயார் செய்து கொள்வீர்கள்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இறுதியாக, குழு உறுப்பினர்களின் கேள்வி அமண்டாவிடமிருந்து வந்தது,

சியோனிச கட்டுக்கதை குறித்து சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உங்கள் விரிவுரைகளில் ஒன்றைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் யூத மக்களை கேலிக் கூத்தாக்குவதாகவும், துரோகம் செய்வதாகவும் இருக்கிறது என்ற உங்கள் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்தை நோக்கிய அந்த கருத்துரு மற்றும் ஏனைய ட்ரொட்ஸ்கிச அணுகுமுறைகள் குறித்து உங்களால் அதிகம் பேச முடியுமா என்று நான் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

யூத மக்கள் பல நூற்றாண்டுகளாக ஆழமாக ஒடுக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை நோர்த் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

அனைத்து நிகழ்வுகளும், வெறுப்பின் நிகழ்வுகளும் கூட, ஆராயப்பட வேண்டும். வரலாற்று ரீதியாகவும், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், யூதர்கள் மீதான வெறுப்பு ஒரு புதிய பரிமாணத்தை, ஒரு புதிய தன்மையைப் பெற்றது. இது சமூகத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பிலான மாற்றங்கள், நவீன தொழில்துறை முதலாளித்துவத்தின் தோற்றம், தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி பெற்றமை மற்றும் சோசலிசத்தின் தோற்றம் ஆகியவற்றுடன் ஆழமாக தொடர்புபட்டிருந்தது. யூதர்கள் மீதான பாரம்பரிய வெறுப்பு மேலும் மேலும் சோசலிசத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “ஆளும் உயரடுக்குகள் பாரம்பரியமாக ஒரு மத விரோதமாக இருந்ததை சோசலிச இயக்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக திருப்பிவிட்டு சுரண்ட முனைந்தன” என்று குறிப்பிட்டார். மேலும், சியோனிசத்தின் தோற்றுவாய்கள் குறித்தும், “யூத இனப்படுகொலை தொழில்துறை” உட்பட இந்த சித்தாந்தத்தின் பரிணாமம் குறித்தும், அடையாள அரசியலின் பிற்போக்குத்தனமான நிலைநிறுத்தல் குறித்தும் நோர்த் விளக்கினார்.

“தேசியவாதத்தின் திவால்நிலையை எடுத்துக்காட்ட வேண்டும் என்றால், அது சியோனிசத் திட்டமாகும்” என்று நோர்த் பார்வையாளர்களிடம் கூறினார்.

வரலாறு அதைக் காட்டுகிறது, அவர் தொடர்ந்தார்:

சியோனிசம் ஒரு தேசிய ஏகாதிபத்திய திட்டமாக கட்டமைக்கப்பட்டது. ஆனால் அது ஆரம்பத்திலிருந்தே தவறானது. இப்போது தேசியவாதத்தின் கொடூரமான விளைவுகள், தேசிய-அரசு அமைப்புமுறையைப் பாதுகாப்பது, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு கோட்பாடாக தேசியத்தை செயற்கையாக கட்டியெழுப்புவது ஆகியவை வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன.”

ஒரு இயக்கமாக சியோனிசம் அடிப்படையில் ஏற்கனவே மதிப்பிழந்து கொண்டிருந்த அல்லது சமூக பொருளாதார அபிவிருத்தியின் உண்மையான நிகழ்ச்சிப்போக்கால் முந்திச் செல்லப்பட்ட ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டது. தேசியவாதம் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக உருவெடுத்ததென்பது, 17 ஆம் நூற்றாண்டிலிருந்து, 18 ஆம் நூற்றாண்டு, நிச்சயமாக 19 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பெரிய தேசிய அரசுகள் வலுப்பெறும் காலகட்டம் மேலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளானது.

“1847-48 ஆண்டுகளில், மார்க்ஸ் ஏற்கனவே இதை வரையறுக்கிறார். தொழிலாள வர்க்கத்திற்கு நாடு இல்லை. தொழிலாள வர்க்கமானது ஒரு சர்வதேச சக்தியாக இருக்கிறது, வரலாற்று அபிவிருத்தியின் அடுத்த கட்டம் தேசிய அரசுகளை பலப்படுத்துவதாக இருக்காது. மாறாக, ஒரு சோசலிச இயக்கத்தில் மனிதகுலத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அது உலக சோசலிசத்தின் வளர்ச்சியில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டிருந்தது.

பகிரங்க விவாதத்தின் போது, பார்வையாளர்கள் பலர், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் குறித்து கேள்விகளை எழுப்பினர், சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பதானது டொனால்ட்

ட்ரம்புக்கு கதவைத் திறந்துவிடாதா அல்லது அவர்களின் வாக்குகளை “வீணடிக்கிறதா” என்று கேட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நோர்த், இதற்கு விடையிறுப்பாக, “குறைந்த தீமை” எனும் அரசியலைக் கண்டனம் செய்தார்.

“பைடெனுக்கு வாக்களிக்குமாறு நீங்கள் தொழிலாளர்களிடம் கூறும்போது, அதன் விளைவுகளுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். எனவே, தேர்தலுக்கு அடுத்த நாள், அல்லது அதற்கு மத்தியில், பைடென் உக்ரேனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துகிறார் அல்லது அதிக குண்டுகளை அனுப்புகிறார் அல்லது ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்தால், அதை மேற்பார்வையிடுவது (அல்லது கட்டுப்படுத்துவதற்கு) யார் அல்லது என்ன பொறுப்பு? சரி, அதற்கு நீங்கள் தான் பொறுப்பாக இருக்கிறீர்கள். அந்த நிகழ்விற்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்ய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

நிறைவாக நோர்த் பின்வருமாறு தெரிவித்தார் :

தேர்தல் வரும்போது, நாங்கள் எங்கள் கொள்கைகளை கைவிடுவதில்லை. தேர்தலின் போது எமது அரசியல் என்பது தேர்தலுக்கு முன்னரான எமது அரசியலுடன் ஒத்துப்போகிறது. நாம் கோட்பாடுகளின், வரலாற்று கருத்தாக்கங்களது கட்சியே அன்றி, நடைமுறைவாத குறுகிய-கால விளைவுகளுக்கான கட்சியல்ல... எனவே, எங்களுக்கு தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அரசியல் கல்வியின் முற்றிலும் இன்றியமையாத பணியை நிறைவேற்றுவதற்கு நாம் அதைப் பயன்படுத்துகிறோம். அதுதான் எங்களுடைய வழிமுறையாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கி கூறியதைப் போல, தொழிலாளர்கள் எதைக் பாதுகாக்க வேண்டும், எதைத் தூக்கியெறிய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குக் கல்வியூட்டுவதாகும்.

Loading