இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வட இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த வியாழன் இரவு இரண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் -கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கஜன் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன்- பொலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு பொது ஹர்த்தாலை நேற்று அனுஷ்டித்தனர்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தனியார் வர்த்தகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டதுடன் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உட்பட தீவின் வட மாவட்டங்கள் முழுவதிலும் வேலைக்குச் செல்லவில்லை.
திங்கள் காலை, 1,000 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சிங்களம் மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாகாண சபை அலுவலகத்தில் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் பொலிஸ் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அக்டோபர் 20 அன்று, பவுண்ராஜ் சுலக்ஸனும் நடராஜா கஜனும், ஒரு சமூக விழாவில் பங்கேற்ற பிறகு ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பட்டி சந்தி சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரால் 11.30 மணியளவில் சுட்டுக் கொல்ல்லப்பட்டனர்.
நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் போன போது மோட்டார் சைக்கிள் ஒரு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனதாக ஆரம்பத்தில் கூறிய பொலிஸ் தங்கள் பொறுப்பை மூடிமறைக்க முயற்சித்தது. மாணவர்கள் சம்பவ நேரத்தில் குடிபோதையில் இருந்தார்கள் என்று கூட போலீஸ் கூறியது.
எனினும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, சுலக்ஷன் உடலில் தோட்டாக்கள் இருந்தன என்றும் அவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கி இறந்தார் என்றும் கூறியது. அவரது மோட்டார் சைக்கில் சுவரில் மோதியபோது ஏற்பட்ட காயத்தால் கஜன் கொல்லப்பட்டார். சட்ட வைத்திய அதிகாரி, இரண்டு மாணவர்களும் மது உட்கொண்டிருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
நேற்றைய ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அழைப்பு விடுத்திருந்தன. அதற்கு பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் ஆதரவளித்திருந்தன. மாணவர்களின் மரணம் தொடர்பாக தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் சீற்றத்தை திசை திருப்பும் முயற்சியில் இந்த அமைப்புக்கள் முடிந்தளவு முயற்சித்திருந்தன.
நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன், போலீஸ் நடவடிக்கையை 'கண்டனம்' செய்ததோடு 'பாரபட்சமற்ற விசாரணை' நடத்தி மாணவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்கள் 'தண்டிக்கப்படுவதை' உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். சம்பந்தன் தான் உடனடியாக இலங்கை ஜனாதிபதி சிறிசேனவை தொடர்புகொண்டதையிட்டு பெருமை பேசிய பின்னர், 'ஆரம்ப நடவடிக்கை எடுத்து சம்பந்தமாக,' அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஒரு சரியான நீதவான் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக அறிவித்து, இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் தமிழ் இளைஞர்கள் 'இந்த சோக சூழ்நிலையில்' பொறுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை இந்த அமைப்புக்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் வெடிக்கக் கூடும் என, எல்லா தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் பீதியடைந்துள்ளதை இது குறிக்கின்றது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தின் முடிவின் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் பயங்கரமான சமூக நிலைமைகளையும் இராணுவ ஆக்கிரமிப்பையும் ஏறத்தாழ ஒரு இராணுவ ஆட்சியை எதிர்கொள்கின்றனர். குற்றங்களை நசுக்குதல் என்ற போலிக் கதைகளின் கீழ், குடியிருப்பாளர்களை மிரட்டுவதற்கு பொலிஸ் ஒடுக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தெற்கில், தோட்ட தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மற்றும் கல்வி தனியார்மயத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றவாறு அரசாங்கம் தொழிலாளர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தை பாதுகாப்பதிலும் 'நல்ல ஆட்சி' என்ற அதன் போலிக் கதையை பாராட்டுவதிலும் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக ஒரு சில பலிகடாக்களை கண்டுபிடித்து பின்னர் பிரச்சனையை மூடிமறைக்கும் அதன் போலியான 'விசாரணையை' முன்னிலைப்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளது.
இலங்கை ஜனாதிபதியாக சிறிசேனவை நியமித்த, வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை முழுமையாக ஆதரித்த தமிழ் கட்சிகள், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை. இலங்கையின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை அவர்கள் ஆதரிப்பது தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான கூட்டு சுரண்டல் மூலம் கிடைக்கும் பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கே ஆகும்.
யாழ்ப்பாணம் ஆசிரியர்கள் சங்கம் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டு, 'பாரபட்சமற்ற விசாரணை' என்ற கூட்டமைப்பின் வேண்டுகோளை எதிரொலித்துள்ளதுடன் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக 'சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுக்கு' அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர் சங்கத் தலைவர்கள், ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல, மாறாக போலீசுக்கு எதிரானது என்று அறிவித்தது. 'எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்ப்பது பயனற்றது. இது பொலிசின் வேலை.' அவர்கள் மாணவர்களின் படுகொலைகளை கண்டனம் செய்து சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்த்தனர். சோ.ச.க. முறைப்படியாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து வந்துள்ளதோடு, புலிகளுக்கு எதிரான கொழும்பின் தசாப்த கால நீண்ட இனவாத யுத்தத்தையும் எதிர்த்து வந்துள்ளது.
இரண்டு யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டமை ஒரு தவறு அல்லது சில போலீஸ் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. மாறாக, யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளின் தொடர்ச்சி ஆகும், மற்றும் அவை இப்போது அதிகளவில் இலங்கை முழுவதும் தொழிலாளர்களுக்கும் வறியவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் மரணம் மீதான பாரிய கோபத்தை எதிர்கொள்ளும் வகையில், யாழ்ப்பாணம் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இடைநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதோடு நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சிறிசேன, மாணவர்களின் பெற்றோர்களுக்கு இழப்பீடு வழங்க வாக்குறுதி அளித்துள்ளார்.
நேற்றைய எதிர்ப்பில் பங்குபற்றிய பலர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசினர்.
'நாங்கள் முழுமையாக இந்த ஹர்த்தாலை ஆதரிக்கிறோம். எங்கள் பிள்ளைகள் எவ்வளவு காலத்துக்கு கொலை செய்யப்படப் போகிறார்கள். இந்தக் கொலைக்கு நீதி வேண்டும்,' என்று ஒருவர் கூறினார். 'போலீஸ் மட்டுமே இந்தக் கொலைக்குப் பொறுப்பு என நான் தான் நினைக்கவில்லை. இந்த ஒரு பிரச்சாரம், மற்றும் அந்த சூழலை அரசாங்கம் உருவாக்காமல் இது நடக்க முடியாது.
'இந்த அரசாங்கம் 'நல்லாட்சியை' நடத்துகிறது என்ற கூறுபவர்கள் கூட இதற்குப் பொறுப்பு. தனது சொந்த நலன்களை பாதுகாப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அது போராடாமல் அமைதியாக ஆதரவு கொடுக்கிறது. சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பு.'
2015 மே மாதம் வித்யா சிவலோகநாதன் என்ற பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பரந்த எதிர்ப்புக்கள் வெடித்து மோதல்கள் நடந்ததை குறிப்பிடப்பிட்ட ஒரு ஹோட்டல் தொழிலாளி, 'நான் வித்யா கொலைக்கு எதிரான போராட்டத்தை சும்மா நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். போலீஸ் என்னை தாக்கி இரண்டு வாரங்களுக்கு சிறையில் போட்டது. நான் இறுதியாக 200,000 ரூபாய்களுக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டேன். ஆனால் வழக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பு எங்களை காட்டிக் கொடுத்தது, எம்முடைய உரிமைகளை அது பாதுகாக்க வரவில்லை,' என்றார்.
ஒரு பல்கலைக்கழக மாணவன் குறிப்பிட்டதாவது: 'பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இன்னும் இந்த நாட்டில் நிலவுவதால் பொலிஸ் மற்றும் இராணுவம் அதிகாரங்களை கொண்டுள்ளதாலேயே மக்களுக்கு எதிராக வன்முறை தொடர்கிறது. போர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது, ஆனால் இராணுவம் இன்னமும் வட மாகாணத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களையும் மாணவர்களையும் ஒடுக்குகிறது. இராணுவம் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.'
