பேச்சுவார்த்தை என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக குற்றவியல் போரைத் தொடங்க ட்ரம்ப் தயார் நிலையில் உள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அரபிக்கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பலும், அமெரிக்க விமானப்படையின் பB-52எச் ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (B-52H Stratofortress) போர் விமானமும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. [AP Photo/Mass Communication Specialist 1st Class Brian M. Wilbur]

இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல் தாக்குதல் அணிகள் மற்றும் ஏராளமான F-35, F-22, F-16 போர் விமானங்களின் தலைமையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ வலிமையைத் திரட்டியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் ஈரானுக்கு எதிராக ஒரு குற்றவியல் போரைத் தொடுக்கத் தயாராக உள்ளது.

இத்தகைய போர், ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈரான் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் விரைவாகத் தீக்கிரையாக்கும். ஈரான் மீது பல மாதங்கள் நீடிக்கக்கூடிய குண்டுவீச்சுத் தாக்குதலுக்குத் தாங்கள் தயாராகி வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பென்டகன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகளில் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஜூன் மாதம் ஈரானின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய 12 நாள் தூண்டப்படாத போரை விடப் பெரியதாக இருக்கும். அந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.

ட்ரம்ப் ஒரு உடனடித் தாக்குதல் குறித்த தனது அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் சர்வாதிகாரியாகத் துடிக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தையாளர்களான அவரது வணிகக் கூட்டாளி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் வியாழக்கிழமை ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இங்கு சொல்லப்படுபவை பேச்சுவார்த்தைகள் அல்ல, இவை ஒரு மோசடி. இவை ஒரு மாஃபியா கும்பலின் மிரட்டலைப் போலவே இருக்கின்றன. அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், இவை இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் அதன் ஆரம்பக் கட்டங்களிலும் ஐரோப்பா முழுவதும் ஹிட்லர் நடத்திய ஆக்கிரமிப்புகளின் போது அவர் விடுத்த இறுதி எச்சரிக்கைகளைப் போலவே உள்ளன.

அமெரிக்கா முன்வைத்த தொடர்ச்சியான பல விரிவான கோரிக்கைகளுக்கு ஈரான் பணியவில்லை என்றால், —வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான இது, ஏற்கனவே பல ஆண்டுகளாகப் போர் நடவடிக்கைகளுக்கு இணையான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது— 2003 ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய இராணுவ வலிமையால் அது உடனடித் தாக்குதலுக்கு உள்ளாகும் என அச்சுறுத்தப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, கிரெட் (Crete) தீவில் நிறுத்தப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS ஜெரால்ட் போர்க் கப்பலை, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு அருகில் செல்லுமாறு கடந்த திங்கள்கிழமை பென்டகன் உத்தரவிட்டது. ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை எதிர்பார்த்து இஸ்ரேலியப் படைகள் பல வாரங்களாகவே உயர்மட்ட தயார் நிலையில் உள்ளன. இந்த தாக்குதலில் இணைவதற்கு வாஷிங்டனின் அனுமதியை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஓமான் வெளியுறவு மந்திரி இடைத் தரகராகச் செயல்பட, ஈரானிய மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் தனித்தனி அறைகளில் அமர்ந்து வியாழக்கிழமையன்று முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் மரியானோ கிரோஸியும் சிறிது நேரம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த ஆரம்பக் கட்ட அமர்வுக்குப் பிறகு, இரு தரப்பினரும் தத்தமது அரசாங்கங்களுடன் கலந்தாலோசிப்பதற்காக நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டனர். இரண்டாவது குறுகிய அமர்வைத் தொடர்ந்து, “நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும், இரு தரப்பினரும் “ஒரு உடன்படிக்கையின் கூறுகள் குறித்து தீவிரமான பரிசீலனையில்” இறங்கியுள்ளதாகவும் அராக்சி கூறினார்.

சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்புகளில், ஈரானிய அதிகாரிகள் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் ஆகியவற்றுடன் மட்டும் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டால், இரு தரப்புக்கும் “வெற்றியளிக்கக்கூடிய” ஒரு ஒப்பந்தம் எட்டக்கூடிய தூரத்தில்தான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

வாஷிங்டனுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்குப் பாரிய பொருளாதாரச் சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது. இதில் எண்ணெய், எரிவாயு மற்றும் முக்கியமான கனிமத் திட்டங்களை உருவாக்குவதற்கான உரிமைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதும் அடங்கும். பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், இவை முதலீட்டு வாய்ப்புகளின் “பெரிய புதையல்” என்று குறிப்பிட்டார். வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முன்மொழிவுகளைத் தெஹ்ரான் அதிகாரப்பூர்வமாக முன்வைத்ததா என்பது தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் முடிவில், ஓமன் வெளியுறவு மந்திரி பத்ர் அல்புசைதி, அடுத்த வாரம் முதலில் நிபுணர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடல்களுடனும், பின்னர் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுடனும் இவை மீண்டும் தொடரும் என்று கூறினார்.

சில மேற்கத்திய ஊடக அறிக்கைகள்கூட இது நடக்குமா என்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன. மேலும், இரண்டாவது அமர்வு மிகக்குறுகிய காலம் மட்டுமே நீடித்ததும், பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கத் தரப்பினரும் எதையும் கூற மறுத்ததும் ஒரு “அபாயகரமான முன்னறிவிப்பு” என்று அவை குறிப்பிட்டன.

பிப்ரவரி 6 முதல் நடைபெற்ற மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றிய விவகாரத்தில் இரு தரப்பினரும் பலமுறை மோதிக்கொண்டனர். மருத்துவ நோக்கங்களுக்காக குறைந்த அளவிலான யுரேனியத்தைச் செறிவூட்டும் வகையில், ஈரான் குறைந்தபட்சம் ஒரு பெயரளவு சிவில் அணுசக்தித் திட்டத்தையாவது வைத்திருக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டதாக ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்ட ஒரு நாடாக, ஒரு சிவில் அணுசக்தித் திட்டத்தை வைத்திருப்பதற்கான தனது இறையாண்மை உரிமையை ஈரான் உறுதிப்படுத்துகிறது. ஆனால், விட்கோஃப் இதை அடியோடு மறுத்துள்ளார். ஈரானின் முழுமையான சிவில் அணுசக்தித் திட்டமும் அகற்றப்பட வேண்டும் என்றும், தெஹ்ரான் எக்காலத்திலும் எந்தவொரு சிவில் அணுசக்தித் திட்டத்தையும் கொண்டிருக்கத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அணுசக்தி விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தாலும், அமெரிக்காவின் மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, “பொருளாதாரத் தடை நீக்கம்” என்பது தற்போது வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான பணத்தை விடுவிப்பதோடு மட்டுமே மட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கைகளில், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் மத்திய கிழக்கின் பிற “எதிர்ப்பு அச்சின்” உறுப்பினர்களுக்கு ஈரான் வழங்கும் ஆதரவை நிறுத்துவது மற்றும் அதன் நடுத்தர தூர ஏவுகணைத் திறன்களைக் கைவிடுவது ஆகியவை அடங்கும்.

“ஏவுகணைகள் குறித்து எங்களிடமோ அல்லது வேறு யாருடமோ பேசுவதற்கு ஈரான் மறுக்கிறது. இது ஒரு பெரிய சிக்கல்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ புதன்கிழமை அறிவித்தார்.

வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரானின் ஷியா மதகுரு தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சி ஏற்குமானால், அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முன்னால் ஈரான் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும். இஸ்லாமியக் குடியரசின் தலைமையிலோ அல்லது அதன் முன்னணி நிறுவனங்களிலோ யார் நீடித்தாலும் சரி, இத்தகைய நிபந்தனைகளைத் திணிப்பது என்பது நடைமுறையில் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட “ஆட்சி மாற்றத்திற்கு” சமமானதாகும்.

ட்ரம்ப், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது நாட்டின் நிலை குறித்த உரையில், போருக்கான ஒரு காரணத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஈரான் குறித்து அடுக்கடுக்கான பொய்களை ட்ரம்ப் கட்டவிழ்த்துவிட்டார். குறிப்பாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் சிவில் பயன்பாட்டிற்கானது என்று கூற ஈரான் மறுத்துவிட்டது என்றும், விரைவில் “அமெரிக்காவை சென்றடையக்கூடிய” ஏவுகணைகளை உருவாக்க அது உழைத்து வருகிறது என்ற பொய்களும் இதில் அடங்கும்.

ஆனால், இவை அனைத்தும் யதார்த்தத்தைத் தலைகீழாக மாற்றுகின்றன.

ஈரான் நீண்டகாலமாக அணுசக்தி திட்டங்களை கைவிட்டுள்ளது என்பது மட்டுமல்லாமல், 2018 ஆம் ஆண்டில் ஐ.நா ஆதரவு பெற்ற ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவர் ட்ரம்ப் தான். அந்த ஒப்பந்தத்தின் கீழ், தெஹ்ரான் தனது அணுசக்தித் திட்டத்தின் பெரும்பகுதியைக் கலைக்கவும், இதுவரை வடிவமைக்கப்பட்டதிலேயே மிகக் கடுமையான மற்றும் ஊடுருவி ஆய்வு செய்யக்கூடிய சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பு முறைக்கு உட்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு, ஈரானின் பொருளாதாரத்தைச் சிதைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தெளிவான நோக்கத்துடன் அதன் மீது உலகளாவிய பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்தார். இந்தத் தடைகள் பைடென் நிர்வாகத்தின் கீழ் மேலும் விரிவாக்கப்பட்டன. இது ஈரானிய மக்களில் பெரும்பாலோரை கடும் வறுமையில் தள்ளிய ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தந்திரோபாய மற்றும் மூலோபாய அணு ஆயுதங்களின் மிகப்பெரிய அதிகரிப்பை உள்ளடக்கிய ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியை அமெரிக்க ஏகாதிபத்தியமே முன்னெடுத்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யாவுடனான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ட்ரம்ப் காலாவதியாக அனுமதித்தார். பெய்ஜிங்குடனான போருக்கான அதன் வான்-கடல் போர் மற்றும் பசிபிக் பெருங்கடலில் சீனாவைச் சுற்றி வளைப்பதற்கான தீவுச் சங்கிலி மூலோபாயங்களின் ஒரு பகுதியாக, சீனாவை அச்சுறுத்துவதற்காக அமெரிக்காவின் நடுத்தர தூர அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பெருமளவில் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திறனைத் தேடுகிறது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, முன்னாள் சுவீடன் பிரதமரும் நேட்டோ ஆதரவு ஐரோப்பிய வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் இணைத் தலைவருமான கார்ல் பில்ட் கூட, “இது 2003-ஆம் ஆண்டின் எதிரொலியைப் போலவே ஒலிக்கத் தொடங்கியுள்ளது” என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது — இது ஈராக்கின் “பேரழிவு ஆயுதங்கள்” தொடர்பாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் டோனி பிளேயர் கூறிய பொய்களைக் குறிப்பிடுவதாகும்.

சி.ஐ.ஏ-ஆல் நிறுவப்பட்ட ஷாவின் கொடுங்கோன்மைமிக்க மன்னராட்சி-சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்த 1979 ஈரானியப் புரட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. பல தசாப்தங்களாக பென்டகன் ஈரான் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டு வருகிறது. 2003 இலும், மீண்டும் 2007-8 இலும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தீவிரமாகப் பரிசீலித்தது. ஈராக் போரின் தோல்வி மற்றும் எகிப்து மற்றும் துனிசியாவில் ஏற்பட்ட அரபு வசந்த எழுச்சிகளுக்குப் பிறகு மத்திய கிழக்கில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயன்ற ஓபாமா, ஈரானை மிரட்டுவதற்கு அணு ஆயுதப் பிரச்சினையைப் பயன்படுத்தியபோது, “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான தற்போதைய போர் உந்துதலானது, 2023 அக்டோபருக்குப் பிந்தைய அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும். இது போர், ஆட்சி மாற்றம் மற்றும் காஸாவில் அப்பட்டமான இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாடற்ற அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு “இறுதித் தீர்வை” திணிப்பதை நோக்கமாகக் கொண்டது.

சமீப நாட்களில், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புள்ள முக்கிய ஊடகங்கள், ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க இராணுவத் திறன்கள் இருப்பதாகவும், ஈரானுடனான எந்தவொரு மோதலும் நீண்டகாலம் நீடிக்கும் என்றும், அது அமெரிக்காவிற்குப் பாரிய பின்னடைவுகளையும் உயிரிழப்புகளையும் விளைவிக்கும் என்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகள் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

தெஹ்ரான் தன் பங்கிற்கு, பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க் கப்பல்களைத் தாக்குவோம் என்று சபதம் செய்துள்ளதுடன், போர் விரைவாக இப்பகுதி முழுவதையும் விழுங்கும் என்றும் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தங்களது நாடுகளிலுள்ள தளங்களையும் வான்வெளியையும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி வருகின்றன. இது ஒருபுறம் ஈரானின் பதிலடித் தாக்குதலைத் தவிர்க்கும் நம்பிக்கையில் செய்யப்படுகிறது. ஆனால் அதே சமயம், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலும் இஸ்ரேலின் ஆதரவிலும் நடத்தப்படும் இந்தத் தூண்டப்படாத மற்றும் சட்டவிரோதத் தாக்குதலுக்குத் தாங்கள் உடந்தையாக இருப்பதைக் கண்டு, தங்கள் நாட்டு மக்களிடையே ஏற்படக்கூடிய கொந்தளிப்பைக் கண்டும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஈராக்கை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகையும், நான்கு மடங்கு பெரிய பரப்பளவும் கொண்ட ஒரு நாட்டை அடக்க முற்படும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பென்டகனின் உயர் அதிகாரிகள் சிலர் உணர்ந்திருப்பதே இந்த எச்சரிக்கைகளுக்குக் காரணமாகும். இருப்பினும், அவர்களின் உண்மையான நோக்கம், ஈரானுடன் போர் நடத்துவதற்காக பென்டகன் நீண்டகாலமாக உருவாக்கி வைத்துள்ள திட்டங்களை ட்ரம்ப் பின்பற்றுமாறு வற்புறுத்துவதாக இருக்கலாம்.

இந்தத் திட்டங்கள் ஈரானின் பதிலடித் திறனை ஆரம்பத்திலேயே அழிப்பதை நோக்கமாகக் கொண்டு, மின்சாரம் மற்றும் இதர முக்கிய பொதுக் உள்கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு அழைப்பு விடுக்கின்றன. முழு அளவிலான போருக்குச் செல்வதற்கு முன்னதாக, ஈரானிடமிருந்து கூடுதல் சலுகைகளைப் பெறுவதற்காக, அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்கள் அல்லது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தலைமையகத்தைக் குறிவைத்து ஒரு “வரையறுக்கப்பட்ட” ஆரம்பத் தாக்குதலை நடத்த ட்ரம்ப் யோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

இது எப்படித் தொடங்கினாலும், ஈரான் மீதான போர் என்பது ஒரு ஆக்கிரமிப்புப் போராகவே இருக்கும். நூரம்பேர்க் விசாரணைகளில் வரையறுக்கப்பட்டபடி, இது ஒரு “உச்சக்கட்ட சர்வதேசக் குற்றம்” ஆகும். அமெரிக்க முதலாளித்துவ தன்னலக் குழுவின் சார்பாக உலகெங்கும் தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிக்கவும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தைக் கொண்டுவரவும் துடிக்கும் ஒரு குற்றவியல் ஆட்சியால் இந்தப் போர் நடத்தப்படுகிறது.

ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் இதில் கூட்டாளியாக உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பது முதல், இஸ்லாமியக் குடியரசு தனித்துவமான ஒடுக்குமுறை கொண்டது என்பது வரை, ஆட்சி மாற்றப் போருக்காக வெள்ளை மாளிகை சொல்லும் அனைத்துப் பொய்யான வாதங்களையும் அவர்கள் மீண்டும் பயன்படுத்துகின்றனர். ட்ரம்ப் அமெரிக்க மக்களுக்குப் போரின் நோக்கங்களை முறையாக “விளக்கி”, போருக்கான அரசியல் களத்தைத் தயார் செய்யவில்லை என்பது மட்டுமே ஜனநாயகக் கட்சியினரின் ஒரே குறையாக உள்ளது.

கடந்த புதன்கிழமை வெளியான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழின் தலையங்கம், ட்ரம்பை இப்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்துமாறு தூண்டி இதே கருத்தை வலியுறுத்தியது. “ட்ரம்ப் முன்கூட்டியே காங்கிரஸ் மற்றும் பொதுமக்களின் ஆதரவைக் கோரினால், ஒருவேளை போர் திட்டமிட்டபடி சரியாக நடக்காவிட்டாலும், அவருக்கு ஆதரவாக அதிக கூட்டாளிகள் இருப்பார்கள்,” என்று அது எழுதியுள்ளது.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், ஈரான் மீது வரவிருக்கும் இந்தத் தாக்குதலுக்கு எதிராக அணிதிரள வேண்டும். இது, ஈரான் மக்களுக்கும் உலகிற்கும் சொல்லொணா விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளின் பார்வையில், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதும், மத்திய கிழக்கில் —இது உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதிப் பிராந்தியமாகவும், மூன்று கண்டங்களுக்கு இடையிலான மூலோபாய மையமாகவும் விளங்குகிறது— மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதும் சீனாவிற்கு எதிரான போரை நோக்கிய ஒரு ஆரம்பக் கட்டமே ஆகும்.

“ஈரான் மீது கை வைக்காதே” என்று கோரியும், மத்திய கிழக்கிலிருந்து அனைத்து அமெரிக்க மற்றும் இதர ஏகாதிபத்தியப் படைகளை வெளியேற்றக் கோரியும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை நிறுத்தக் கோரியும், ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்கக் கோரியும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், ஏகாதிபத்தியப் போருக்கான எதிர்ப்பை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் நடத்தி வரும் வளர்ந்து வரும் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும். இது போர், சர்வாதிகாரம் மற்றும் தன்னலக்குழு ஆட்சிக்கு ஆதாரமான முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடனும் முன்னோக்குடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading