மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் 30-வது நாளான திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது கோரிக்கைகளுக்குப் அடிபணியவில்லை என்றால், அந்த நாட்டின் அனைத்து எரிசக்தி உற்பத்தி நிலையங்களையும் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும் அழித்துவிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார். மேலும், “ஏதேனும் ஒரு காரணத்திற்காக விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானில் உள்ள அவர்களின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய்க் கிணறுகள் மற்றும் கார்க் தீவு (அநேகமாக அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும்!) ஆகியவற்றை வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழிப்பதன் மூலம், ஈரானில் எங்களது ‘அழகான தங்குதலை’ முடிவுக்குக் கொண்டு வருவோம்,” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகத் தளத்தில் எழுதியுள்ளார்.
ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அழிப்பது என்பது அந்த நாட்டின் நாகரீகமான வாழ்வின் அடிப்படையையே வேரோடு பிடுங்கி எறிந்து விடுவதாகும். இது நீர் சுத்திகரிப்பு, மருத்துவமனைகள் மற்றும் உணவு குளிரூட்டல் வசதிகளை முற்றிலும் துண்டித்துவிடும். மேலும், அதன் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அழிப்பது, நவீன வரலாற்றிலேயே மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஈரானில் ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்தியுள்ள தண்ணீர் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும்.
ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் ஒரு போர்க் குற்றமாகும். இது, போர்க் குற்றங்கள் நிறைந்த ஒரு போரின் சமீபத்திய நடவடிக்கையாகும். 1977-ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையின் கூடுதல் நெறிமுறை I-இன் 54-வது பிரிவு இவ்வாறு கூறுகிறது: “உணவுப் பொருட்கள், உணவு உற்பத்திக்கான விவசாயப் நிலங்கள், பயிர்கள், கால்நடைகள், குடிநீர் கட்டமைப்புகள் போன்ற பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத பொருட்களைத் தாக்குவது, அழிப்பது, அகற்றுவது அல்லது பயனற்றதாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது...”
ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் கூட்டுத் தண்டனை என்பதற்குச் சமமானவை — இது போர் விதிகளில் உள்ள மிகப் பழமையான தடைகளில் ஒன்றாகும். இது 90 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டிற்குப் பயன்படுத்தப்படும் காஸா முன்மாதிரியாகும்: அதாவது, மனித உயிர்வாழ்வைத் தக்கவைக்கத் தேவையான உள்கட்டமைப்புகளைத் திட்டமிட்டு அழிப்பதாகும்.
ட்ரம்ப் ஆட்சியின் இந்தக் குற்றத்தன்மை மிகவும் நிர்வாணமாக இருப்பதால், ஊடகங்கள் கூட இதைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. என்.பி.சி செய்தியாளர் காரெட் ஹேக், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட்டிடம், ஜனாதிபதி ஏன் “ஒரு போர்க் குற்றத்திற்குச் சமமான அச்சுறுத்தலை விடுக்கிறார்” என்று கேட்டபோது, அவர் அதனை மறுக்கவில்லை. மாறாக அவர், அமெரிக்க ஆயுதப் படைகள் “அவர்களது கற்பனைக்கும் எட்டாத திறன்களைக் கொண்டுள்ளன, அவற்றைப் பயன்படுத்த ஜனாதிபதி அஞ்சமாட்டார்” என்று பதிலளித்தார்.
நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று “ட்ரம்ப் ஒரு போர்க் குற்றத்தைச் செய்யப் போவதாக அச்சுறுத்துகிறாரா?” என்ற தலைப்பில் ஒரு கருத்துக் கட்டுரையை வெளியிட்டது. ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் “நிச்சயமாக ஒரு போர்க் குற்றத்திற்குச் சமமானதாக இருக்கும். நவீன மோதல்களை நிர்வகிக்கும் சட்டங்களின் மையக் கோட்பாடுகளில் ஒன்று, இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்களை இலக்கு வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்பதாகும் என்று அது ஒப்புக்கொண்டது.
இது உண்மைதான். ஆனால் முழுப் போருமே குற்றமானது மற்றும் சட்டவிரோதமானது. நூரம்பேர்க் நீதிமன்றம், ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதை “உச்சக்கட்ட சர்வதேசக் குற்றம்” என்று வரையறுத்தது. இந்தப் போர் “மற்ற போர்க்குற்றங்களிலிருந்து வேறுபடுவது என்னவென்றால், அது தனக்குள்ளேயே ஒட்டுமொத்தத் தீமைகளையும் உள்ளடக்கியுள்ளது” என்பதாகும். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் என்பது துல்லியமாக இதுதான்.
ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைத்துவத்தை — உச்ச தலைவர் அலி கொமேனி முதல் டசின் கணக்கான மூத்த அதிகாரிகள் வரை — திட்டமிட்டுப் படுகொலை செய்வது, நிர்வாக ஆணை 12333-ன் கீழான படுகொலைத் தடையையும், துரோகம் மற்றும் வஞ்சகக் கொலையைத் தடைசெய்யும் ஆயுத மோதல் சட்டங்களையும் மீறுகிறது. மினாப்பில் ஒரு பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். குண்டுவீச்சில் 61,000 வீடுகள் மற்றும் 500 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன; 6,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் — இவை ஒவ்வொன்றும் இந்தப் போரைத் தொடங்கிய அந்த முதன்மைக் குற்றத்திலிருந்தே உருவாகின்றன.
பெருகிய முறையில், வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் இனப்படுகொலை சார்ந்த சொல்லாடல்களுக்குப் பின்னால் ஒரு தர்க்கம் உள்ளது. ஈரானியத் தலைவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அதன் அரசாங்கத்தைக் கவிழ்க்க நம்பியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், தனது நோக்கங்களை அடையத் தவறிவிட்டது. இப்போது அமெரிக்கா போரில் தனது ஈடுபாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் அல்லது ஒரு பேரழிவுகரமான தோல்வியை எதிர்கொள்ள வேண்டும். ட்ரம்ப் இதை ஒரு “உல்லாசப் பயணம்” என்று அழைத்தார், மேலும் இது சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறினார். ஒரு மாதம் கழித்து, ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் — ஆனால், ஈரானின் அரசாங்கம் அப்படியே உள்ளது, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கிறது மற்றும் எண்ணெய் விலைகள் 59 சதவீதம் உயர்ந்துள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம் காஸா முன்மாதிரியை நோக்கித் திரும்புகிறது — இது போரின் ஒரு முறையாக ஒரு சமூகத்தையே முழுமையாக அழிப்பதாகும். காஸாவில், இஸ்ரேல் 72,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது, 2.3 மில்லியன் மக்கள் தொகையினரையும் முழுமையாக இடம்பெயரச் செய்துள்ளது, ஒவ்வொரு மருத்துவமனையையும், பல்கலைக்கழகத்தையும் அழித்துள்ளது மற்றும் அந்தப் பகுதியை இடிபாடுகளாக மாற்றியுள்ளது. ட்ரம்ப், காஸாவை விட 40 மடங்கு பெரிய ஒரு நாட்டின் மீது இதே போன்ற முறைகளைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துகிறார்.
மத்திய கிழக்கிற்கு அமெரிக்கத் துருப்புக்கள் பெருமளவில் குவிக்கப்படுகின்றன. 82-வது வான்வழிப் படைப்பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாராசூட் படையினர்கள் அப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இரண்டு கடற்படைப் படையணிகள் பாரசீக வளைகுடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பென்டகன் “பல வார கால” தரைவழித் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாகவும், மேலும் 10,000ம் துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய எல்லைக்குள் ஆழமாக அமைந்துள்ள நிலத்தடி வசதிகளிலிருந்து சுமார் 1,000 பவுண்டுகள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவதற்கு ட்ரம்ப் ஒரு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுகிறது. இது அதிகாரத்தில் இருக்கும் ஒரு குற்றவியல் பாதாள உலகம் போன்றதாகும். இது, உலகளாவிய அளவில் குண்டர் கும்பலின் மொழியில் பேசுகிறது. கடந்த ஞாயிறன்று, ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸிடம் பேசுகையில், ஈரானின் “எண்ணெயைக் கைப்பற்றுவதே” தனது விருப்பம் என்று கூறினார். ஒரு வல்லரசு மற்றொரு நாட்டை ஆக்கிரமித்து, அழித்து, பின்னர் அந்த நாட்டின் வளங்களுக்கு உரிமை கோர முடியும் என்ற காலனித்துவக் கொள்கையை அவர் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
90 மில்லியன் மக்கள் தொகை, பெரிய இராணுவம், கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நாடான ஈரானின் மீதான தரைவழி ஆக்கிரமிப்பு, எளிதான வெற்றியைத் தந்துவிடாது. ஆக்கிரமிப்பு முடங்கும் போது, உயிரிழப்புகள் அதிகரிக்கும் போது, அரசியல் நெருக்கடி முற்றியிருக்கும் போது, ட்ரம்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
வெள்ளை மாளிகை அதிகாரிகள் அடிக்கடி சொல்வது போல, “எதுவும் மேசையிலிருந்து அகற்றப்படவில்லை”. ஐக்கிய நாடுகள் சபையில் தேசபக்தி பார்வை சங்கத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய முகமது சஃபா, இந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தார். அமெரிக்கா “ஈரானில் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்குத் தயாராகி வருகிறது” என்று அவர் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பகத்தன்மையை இந்தப் போரின் மீது பணயம் வைத்துள்ளது. இதில் ஏற்படும் ஒரு தோல்வி, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக அதிகாரத்தைச் செலுத்தும் அமெரிக்காவின் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். இதுவே, இரு கட்சிகளின் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்) மத்திய மூலோபாய கவலையாகும். ஈரான் மீது “நெருப்பையும் ஆவேசத்தையும்” ஏவிவிடுவேன் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல், உண்மையில் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒருநாள் போராட்டமாக சுமார் 8 மில்லியன் மக்கள் அணிவகுத்துச் சென்ற அதே வார இறுதியில் தான் ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் வெளிவந்தது. அறுபத்தி இரண்டு சதவீத அமெரிக்கர்கள் ஈரானுக்குத் தரைப்படையை அனுப்புவதை “கடுமையாக எதிர்க்கின்றனர்”. அமெரிக்க வரலாற்றில் எந்தப் போரும் அதன் தொடக்கத்திலேயே இவ்வளவு பெரிய மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததில்லை.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே ஓராண்டுக்கும் மேலாக மத்திய கிழக்கில் போரை நடத்திக் கொண்டிருந்த ஜனநாயகக் கட்சி, போருக்கு எதிரான மக்களின் பெரும் எதிர்ப்பைத் திசைதிருப்பவும், வீரியமற்றதாக்கவும் முயல்கிறது.
“மன்னர்கள் வேண்டாம்” பேரணிகளில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் போரைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தனர் அல்லது அதனை ஒரு கடந்துபோகும் சொல்லாகச் சுருக்கினர். பொஸ்டனில், செனட்டர் எலிசபெத் வாரன் “ஈரான்” என்ற சொல்லையே குறிப்பிடவில்லை. “இன்று மன்னர்கள் வேண்டாம், நவம்பரில் நாங்கள் வாக்களிப்போம்.” என்று அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பின் (AFT) தலைவர் ராண்டி வெயின்கார்டன் கூறினார். மினசோட்டா அட்டர்னி ஜெனரல் கீத் எலிசன், “போர்களைத் தொடங்காதவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூட்டத்தினரிடம் கூறினார்.
எலிசன் பங்கேற்பாளர்களை ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறு கூறினார். ஆனால் பைடென் நிர்வாகம் தொடர்பான அனுபவமும், அதற்கு முந்தைய ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின் ஆட்சியும், இது ஒரு முற்றிலும் திவாலான முன்னோக்கு என்பதைக் காட்டுகின்றன. பைடென் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தூண்டினார். பின்னர் போரை பெருமளவில் தீவிரப்படுத்தினார். ஈரானுக்கு எதிரான போருக்கு ஒரு முன்னுரையாக ஆரம்பத்திலிருந்தே திட்டமிடப்பட்டிருந்த காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர் ஆயுதங்களை வழங்கினார்.
வருகின்ற நவம்பரில் ஜனநாயகக் கட்சியினரை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நெருக்கடி தீர்க்கப்படும் என்ற கூற்று ஒரு மோசடியாகும். அப்படியென்றால், இப்போதிலிருந்து அதுவரை என்ன நடக்கும்? இந்த கவனக்குவிப்பின் உண்மையான முக்கியத்துவம் கால அவகாசத்தை வாங்குவதே ஆகும்: ஜனநாயகக் கட்சியினர் அடிப்படையில் ஆதரிக்கும் போரைத் தொடர்வதற்கு ட்ரம்பிற்குத் தேவையான மாதங்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ட்ரம்ப் வெறும் ஒரு தனிப்பட்ட பைத்தியக்காரராகப் பேசவோ செயல்படவோ இல்லை. அவர் ஒரு முதலாளித்துவ தன்னலக் குழுவின் அரசியல் உருவமாக இருக்கிறார்: ஜனநாயகக் கட்டுப்பாடுகளை முறித்துக் கொண்டு, தனது செல்வம் மற்றும் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் போரையும், உள்நாட்டில் ஒடுக்குமுறையையும் கையாளும் ஒரு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியே அவர்.
போர்வெறி கொண்ட ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் இந்தப் போர் முடிவுக்கு வரப்போவதில்லை. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மூலமே இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகும். ஏற்கனவே, வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள பாரிய உயர்வால் போரானது உழைக்கும் மக்களுக்கு ஒரு பேரழிவாக அமைந்துள்ளது. போர் நீடிக்க நீடிக்க, போருக்கான செலவுகளை ஈடுகட்ட சமூகத் திட்டங்களை வெட்டிக்குறைக்கும் கோரிக்கைகளுடன் சேர்த்து, அதன் பாதிப்புகளும் தீவிரமடையும். ட்ரம்ப் 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பணம் எங்கிருந்து வரும்? மருத்துவக் காப்பீடு, மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட சமூக திட்டங்கள் போர் இயந்திரத்திற்குத் தீனி போடுவதற்காக அழிக்கப்படும்.
இந்தப் போரை நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். எட்டு மில்லியன் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினர், ஆனால், அந்த எதிர்ப்பு ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தால் அது நசுக்கப்படும். போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் தேவைப்படுகிறது. இது ஒவ்வொரு பணி இடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டு, தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து இணைக்கப்பட வேண்டும். மேலும், போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தைக் கொண்டு இது ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.
