மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பாலஸ்தீன-அமெரிக்க ஆர்வலரான நெர்தீன் கிஸ்வானிக்கு (Nerdeen Kiswani) எதிரான படுகொலைச் சதியானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும். நியூ ஜெர்சியின் ஹோபோகனைச் சேர்ந்த 26 வயதான அலெக்சாண்டர் ஹெய்ப்லர் (Alexander Heifler) என்பவர், கிஸ்வானியைக் கொல்லும் நோக்கத்தில் அவரது வீட்டின் மீது தீக்குண்டு வீசத் திட்டமிட்டிருந்ததை கடந்த வாரம் FBI மற்றும் நியூ யோர்க் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.
2024 இல் தொடங்கப்பட்ட சகோதரத்துவ யூத தற்காப்பு கழகம் 613 என்ற சீயோனிச அமைப்போடு தொடர்புடைய அலெக்சாண்டர் ஹெய்ப்லரின் இந்த அமைப்பானது, பாசிச யூத தற்காப்பு கழகத்திலிருந்து (JDL) உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சதியில் அம்பலமாகியிருப்பது ஒரு தனிநபரின் குற்றவியல் சதி மட்டுமல்ல. இது ஆளும் வர்க்கத்தால் மேலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு திட்டவட்டமான அரசியல் சூழலின் விளைபொருளாகும். இதில் தீவிர வலதுசாரி சீயோனிச அமைப்புகளும், அரசின் பிரிவுகளும் மற்றும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளும் இணைந்து இனப்படுகொலைக்கான எதிர்ப்பைக் குற்றமாக்கவும், சீயோனிச எதிர்ப்பு என்பது யூத எதிர்ப்பு என்பதற்குச் சமமானது எனச் சித்தரிக்கவும், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கும், அணிதிரள்பவர்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டிவிடவும் உழைத்துள்ளன.
ஒரு அமெரிக்கக் குடிமகளான நெர்தீன் கிஸ்வானி, தனது வாழ்நாள் முழுவதையும் அமெரிக்காவிலேயே கழித்தவர் ஆவர். அவர் நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்ட எமது வாழ்நாள் காலத்தில் (Within Our Lifetime) என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், அதை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முன்னணியில் உள்ளது. கடந்த திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய கிஸ்வானி, போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான பரந்த எதிர்ப்பை மௌனமாக்குவதையே இந்தத் தாக்குதல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்: “இனப்படுகொலை எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு மற்றும் சுதந்திரத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டாளர்களை அவர்கள் ஒடுக்க முயல்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
சீயோனிச அமைப்புகளால் கிஸ்வானிக்கு எதிராக விடுக்கப்பட்ட பல மாத கால மிரட்டல்கள், பின்தொடர்தல்கள், தனிப்பட்ட தகவல்களை கசியவிடுதல் மற்றும் தூண்டுதல்களைத் தொடர்ந்து இந்தச் சதி அரங்கேறியுள்ளது. கிஸ்வானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான எரிக் லீ செய்தியாளர் சந்திப்பில் விளக்கியது போல், இந்தத் தாக்குதலானது “இந்த நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் நோக்கில், தனது எதிரிகளைக் கொல்லவும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட நாடாளுமன்ற துணை இராணுவப் படைகளை வளர்த்தெடுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் மூலோபாயத்தின் திட்டமிட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட விளைபொருளாகும்.”
படுகொலை செய்ய முயன்றவர் தன்னிச்சையாகச் செயல்படவில்லை. குழு அரட்டைகள், பாதுகாப்பான மறைவிடம் மற்றும் நிதி ஆதாரங்களுக்கான அணுகல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தயாரிப்புகள் அங்கு இருந்தன. கிஸ்வானி மீதான இந்தத் தாக்குதல் முயற்சி, பாசிச மற்றும் சீயோனிச வலதுசாரிகளால் பல ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட துன்புறுத்தல்களைத் தொடர்ந்து வந்துள்ளது. ஜனவரி 1, 2026 அன்று, அதிகாரப்பூர்வ ஜே.டி.எல் 613 எக்ஸ் (X) கணக்கு, கிஸ்வானி மற்றும் அவரது கைக்குழந்தைக்கு எதிராக வெளிப்படையான கொலை மிரட்டலை விடுத்தது: “நீயும் உன் குழந்தையும் அருவருப்பான மற்றும் கீழ்த்தரமான குப்பைகள், நீங்கள் இருவரும் அமெரிக்காவில் இருக்கக்கூடாது... நெர்தீன், ஒரு நாள் நாம் சந்திப்போம், நாங்கள் எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் பிரச்சாரத்திற்காக தற்போது கிஸ்வானியால் வழக்குத் தொடரப்பட்டுள்ள பீத்தார் (Betar) என்ற சீயோனிச அமைப்பு, அவரை ஒரு பயங்கரவாதி என்று பகிரங்கமாக அவதூறு செய்ததுடன், அவரை ஒடுக்குவதற்குத் தூண்டி, அவரது உரிமைகளைப் பறிப்பதில் அரசின் நேரடி ஒத்துழைப்பையும் நாடியுள்ளது. திங்கள்கிழமை செய்தியாளர் கூட்டத்தில், பீத்தார் அமைப்பு கிஸ்வானியின் குடியுரிமையை ரத்து செய்யுமாறு ட்ரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியதோடு, அவரது வழக்கை விவாதிக்க வாஷிங்டனில் ட்ரம்ப் நிர்வாகத்தைச் சந்தித்ததையும் கிஸ்வானியின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
பிப்ரவரியில், கிஸ்வானி, 1871 ஆம் ஆண்டின் கூ கிளக்ஸ் கிளான் அமலாக்கச் சட்டத்தின் (Ku Klux Klan Enforcement Act) கீழ், பீத்தார் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக, மத்திய அரசில் ஒரு சிவில் உரிமை வழக்கைத் தாக்கல் செய்தார். அந்தப் புகாரானது, “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்... எந்தவொரு நபருக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ சட்டத்தின் கீழ் கிடைக்கும் சமமான பாதுகாப்பையோ, அல்லது சட்டத்தின் கீழ் உள்ள சமமான சலுகைகள் மற்றும் விலக்குகளையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பறிக்கும் நோக்கில் சதி செய்தால்”, அரசு சாரா நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அந்தச் சட்டத்தின் தனிப்பட்ட உரிமையைப் பயன்படுத்துகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் என்பது, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் பிரச்சாரங்களுக்குத் தீர்வைத் தேடுவது மட்டுமல்லாமல், அந்தப் பிரச்சாரத்தை அது உண்மையாகவே என்னவாக இருக்கிறதோ அதைக் கொண்டு அடையாளப்படுத்துவதாகும்: அதாவது அரசியல் எதிரிகளைப் பயமுறுத்துவதற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குமான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியே அது என்பதாகும்.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட 14 மற்றும் 15-வது அரசியலமைப்புத் திருத்தங்களில் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் சமத்துவப் பாதுகாப்பு உத்தரவாதங்களை நிலைநிறுத்துவதற்காக, 1870 மற்றும் 1871-க்கு இடையில் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட மூன்று அமலாக்கச் சட்டங்களில் கு கிளக்ஸ் கிளான் (KKK) சட்டமும் ஒன்றாகும். புதிதாக விடுவிக்கப்பட்ட கறுப்பின அமெரிக்கர்களின் உரிமைகளை வன்முறை மூலம் மீறுவதை நோக்கமாகக் கொண்ட KKK மற்றும் பிற சட்டத்திற்குப் புறம்பான பயங்கரவாத அமைப்புகளின் வன்முறைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
KKK அமைப்பின் செயல்பாடுகள், அமெரிக்காவில் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட வன்முறைகளோடு தொடர்புடையவை—குறிப்பாக, நிறுவனங்களின் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற “ஆயுதக் குழுக்கள்” முதல், பின்கெர்டன்ஸ் போன்ற தனியார் துப்பறியும் படைகள் மற்றும் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் கும்பல்கள் வரை இவை நீடித்தன. இத்தகைய முறைகள் இப்போது இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியப் போரின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியின் ஆழத்தையும், ஜனநாயக நெறிமுறைகளிலிருந்து அது வேகமாக விலகிச் செல்வதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் பெரும் அதிருப்தியைச் சந்தித்து வரும் சூழலிலும், அதன் போர்களுக்குப் பரவலான எதிர்ப்பு நிலவும் நிலையிலும், ஆளும் வர்க்கம் மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்க அரசு சாரா மற்றும் துணை இராணுவத்தின் வன்முறைகளை அதிகளவில் நம்பியிருக்கிறது. ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது அணிதிரட்டப்பட்ட ஓத் கீப்பர்ஸ் (Oath Keepers), பிரவுட் பாய்ஸ் (Proud Boys) மற்றும் III பேர்சென்டர்ஸ் (இதில் உண்மையான யூத எதிர்ப்பு உணர்வு பரவியுள்ளது) முதல், அமெரிக்க நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முகமூடி அணிந்த குடியேற்றப் படை கெஸ்டாபோ (Gestapo நாஜிக்களின் கொடூரமான இரகசிய பொலிஸ் படை) மற்றும் இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்வலர்களை இலக்கு வைக்கும் சீயோனிச குண்டர்கள் வரை—முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைக்க அரசு வன்முறை மற்றும் பாசிச துணைப் படைகளை வளர்த்தெடுத்து வருகிறது.
கிஸ்வானிக்கு எதிரான இந்தச் சதி, கடந்த சில மாதங்களாக அரசின் உயர்மட்டத்திலிருந்தும் குடியரசுக் கட்சியிலிருந்தும் வெளிவரும் வன்முறை மற்றும் பகிரங்கமான பாசிச உரையாடல்களின் பின்னணியில் நிகழ்கிறது.
காஸா மீது அணு ஆயுதங்களை வீச வேண்டும் என்று பரிந்துரைத்த புளோரிடா பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராண்டி பைன், தான் “நாய்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே” ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் அது “கடினமான தேர்வாக இருக்காது” என்று அறிவித்தார். அலபாமா செனட்டர் டாமி டியூபர்வில் முஸ்லிம்களை “வாசலுக்குள் இருக்கும்... எதிரி” என்று குறிப்பிட்டார் மற்றும் அனைத்து “இஸ்லாமிய குடியேற்றவாசிகளுக்கும்” தடை விதிக்க அழைப்பு விடுத்தார். பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மேரி மில்லர், “அனைவரையும் நாடு கடத்துங்கள். இப்பொழுதே” என்று கோரினார். இந்த மாத தொடக்கத்தில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆண்டி ஓகிள்ஸ் “அமெரிக்க சமூகத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை” என்றும் “பல்வேறு தரப்பட்ட மக்கள் இணைந்து வாழும் பன்மைவாதம் என்பது ஒரு பொய்” என்றும் அறிவித்தார்.
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்களை இலக்கு வைப்பது என்பது, இஸ்ரேலிய அரசால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வழிமுறைகளை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்வதைக் குறிக்கிறது. JDL 613 சகோதர அமைப்பு என்பது யூத தற்காப்பு லீக்கின் அரசியல் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு புதிய சீயோனிச அமைப்பாகும். இதன் நிறுவனர் இஸ்ரேயல் யாகோப் பென் அவ்ரஹாம், JDL-இன் பாசிச நிறுவனரான மெய்ர் கஹானேவை பகிரங்கமாகப் புகழ்ந்துள்ளார். பெத்தர் மற்றும் JDL 613 போன்ற அமைப்புகள் இந்த பிற்போக்குத்தனமான பாரம்பரியத்தை பகிரங்கமாகப் பின்பற்றுகின்றன. இது எப்போதும் தீவிர தேசியவாதத்தையும் அரசியல் வன்முறைக்கான ஆதரவையும் இணைத்தே செயல்படுகிறது.
மிகவும் அடிப்படையாக, கிஸ்வானியின் உயிருக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், அமெரிக்காவிற்குள் நிலவும் சர்வாதிகார நோக்கிய திருப்பத்திலிருந்தும், எதிர்ப்பைக் குற்றமாக்கவும் அரசியல் வன்முறையை ஊக்குவிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் திட்டமிட்ட முயற்சிகளிலிருந்தும் எழுகிறது. மார்ச் 22 அன்று சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “இப்போது ஈரானின் அழிவுக்குப் பிறகு, அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி தீவிர இடதுசாரி, முற்றிலும் திறமையற்ற ஜனநாயகக் கட்சிதான்!” என்று மறைமுகமான மிரட்டலை விடுத்தார்.
இது அரசியல் எதிர்ப்பை நசுக்கப்பட வேண்டிய ஒரு எதிரியாகக் கருதத் தயாராகி வரும் ஒரு ஆட்சியின் மொழியாகும். அமெரிக்க நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் துணை இராணுவ ICE படைகளை நிலைநிறுத்துவது, பிறப்புரிமை குடியுரிமை மற்றும் பிற அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதற்கான உந்துதல் ஆகியவை ஒரு முறையான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டமிட்ட சதியின் கூறுகளாகும்.
இன்று இலக்கு வைக்கப்படுபவர் ஒரு பாலஸ்தீனிய-அமெரிக்க இனப்படுகொலை எதிர்ப்பாளர். நாளை இது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், போரை எதிர்க்கும் மாணவர்கள், நாடு கடத்தப்படுவதை எதிர்க்கும் புலம்பெயர்ந்தவர்கள், அரசின் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் அல்லது சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வோடு முரண்படும் எவராகவும் இருக்கலாம்.
ஏற்கனவே, மொமோது தால், மஹ்மூத் கலீல், ரூமெய்சா ஓஸ்டுர்க் மற்றும் யாகூப் ஐரா விஜாந்த்ரே உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இனப்படுகொலையை எதிர்த்ததாலும், தமது பேச்சுரிமையைப் பயன்படுத்தியதாலும் தடுத்து வைக்கப்படவோ அல்லது நாடுகடத்தப்படவோ இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். DACA (சிறுவர்கள் பருவ வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட செயல்) திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் தங்கியிருக்கும் உரிமையைப் பெற்ற விஜாந்த்ரே, அரசால் இலக்கு வைக்கப்பட்ட மற்றொரு புலம்பெயர்ந்தவருக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பேசியதால், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர்களினால் கைது செய்யப்பட்டார். இது குடியேற்ற அந்தஸ்து பற்றிய பிரச்சினை அல்ல, மாறாக அரசியல் எதிர்ப்பையே குற்றமாக்குவதுதான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கிஸ்வானி மீதான இந்தத் தாக்குதல் குடியரசுக் கட்சியினரால் மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சியாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. சீயோனிசத்திற்கும் காஸா இனப்படுகொலைக்கும் எதிரான எதிர்ப்பைக் குற்றமாக்குவதற்கான அரசியல் அடித்தளம் பைடென் நிர்வாகத்தின் கீழேயே போடப்பட்டது. மாணவர்களின் பெரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பொலிஸ் ஒடுக்குமுறை, பெருமளவிலான கைதுகள், இடைநீக்கங்கள், பணிநீக்கங்கள் மற்றும் சீயோனிச எதிர்ப்பை யூத எதிர்ப்பு எனச் சமன்படுத்தும் இடைவிடாத அவதூறு பிரச்சாரங்களைச் சந்தித்தன. இவை போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்தவும், அவர்கள் மீதான அரசு வன்முறையை நியாயப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டன.
ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராகக் கீழிருந்து ஒரு இயக்கம் உருவாவதை ஜனநாயகக் கட்சி முற்றிலும் எதிர்க்கிறது. ட்ரம்ப் அரசியலமைப்புக்கு எதிராகப் போர் தொடுக்கும்போது, ஜனநாயகக் கட்சியினர் எதுவும் செய்யவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு நிதியளித்து, பாரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களுக்கு வாக்களித்தனர். அனைத்து “எதிர்ப்புகளையும்” வெறும் நடைமுறை புகார்கள் மற்றும் வெற்றுப் பேச்சுகளோடு மட்டுப்படுத்திக் கொண்டனர். நடைமுறையில், அவர்கள் இவற்றுக்கு உடந்தையாகவே செயல்படுகிறார்கள்: மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவது, எதிர்ப்பைத் தேர்தல் முட்டுச்சந்துகளை நோக்கித் திருப்புவது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்வது ஆகியவற்றை அவர்கள் செய்கிறார்கள்.
மக்களில் பெரும்பான்மையானோர் இதை எதிர்க்கின்றனர். கிஸ்வானியைப் பாதுகாக்கும் செய்தியாளர் கூட்டத்தில் அந்த எதிர்ப்பு மீண்டும் தென்பட்டது. அங்கு முஸ்லிம்களும் யூதர்களும் ஒன்றாக நின்று, சீயோனிச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்தனர். கடந்த வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களிலும் இந்த எதிர்ப்பு வெளிப்பட்டது.
போர் எதிர்ப்புப் போராட்டங்களைக் குற்றமாக்குவதற்கு வழிவகுத்த மற்றும் அதை நியாயப்படுத்திய ஜனநாயகக் கட்சியிடமோ அல்லது நீதிமன்றங்களிடமோ மட்டும் நெர்தீன் கிஸ்வானியின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட முடியாது. சதியை சட்டப்பூர்வமாக அம்பலப்படுத்துவது அவசியம், ஆனால் அத்தியாவசியமான கேள்வி அரசியலாகும்.
சர்வாதிகாரம் மற்றும் பாசிச வன்முறைக்கு எதிரான போராட்டமானது, அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கும் மற்றும் போர், பேரினவாதம் அல்லது ஒடுக்குமுறையில் எந்த நலனும் கொண்டிராத தொழிலாள வர்க்கத்திடம் வேரூன்றி இருக்க வேண்டும். பாலஸ்தீனியர்கள், புலம்பெயர்ந்தவர்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசு மற்றும் அதன் பாசிசத் துணைப் படைகளால் இலக்கு வைக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு ஆதரவாக ஒவ்வொரு மதம், தேசியம் மற்றும் இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்.
கிஸ்வானியைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரமானது, இனப்படுகொலை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் இவை இரண்டிற்கும் காரணமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். போர், பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக வழிநடத்தப்படும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மூலமே அனைவரின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.
