முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான இனப்படுகொலை மிரட்டலைத் தொடர்ந்து ட்ரம்ப் 2 வார கால "போர்நிறுத்தத்தை" அறிவித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என்று அச்சுறுத்திய பத்து மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மாலை ட்ரூத் சமூக வலைத் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஹார்முஸ் நீரிணையை “முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க” ஈரான் ஒப்புக்கொண்டால், “ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்போவதாக” அவர் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா “ஏற்கனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிச் சென்றுவிட்டது” என்றும், அமெரிக்காவும் ஈரானும் “ஒரு உறுதியான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையில்” இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

”எம்மால் குழந்தைப் பராமரிப்பு மையங்களைக் கூட கவனித்துக் கொள்ள முடியவில்லை... நாம் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று ட்ரம்ப், ஏப்ரல் 1, 2026 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் கூறியுள்ளார். [Photo: The White House]

ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகளின்படி, சீனாவின் கடைசி நேர தலையீட்டிற்குப் பிறகு, பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட “போர்நிறுத்தத்தை” ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கொமேனி இறுதி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி எழுதப்படும் வரை, இந்த உடன்படிக்கையின் அடிப்படை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை மாலை, ஈரான் விவகாரம் தொடர்பாக CNN நிறுவனத்தைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப், “CNN உலகச் செய்தி வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒரு மோசடியானது என்பது CNN-க்கு நன்றாகத் தெரியும்” என்று பதிவிட்டதோடு, அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அச்சுறுத்தினார். “ஈரான் வெற்றியை அறிவித்துள்ளது; 10 அம்சத் திட்டத்தை ஏற்குமாறு அமெரிக்காவை அது கட்டாயப்படுத்தியதாகக் கூறுகிறது” என்ற தலைப்பில் CNN வெளியிட்ட செய்தி தொடர்பாகவே அவர் இவ்வாறு பதிவிட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், கடைசி நேரத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், ட்ரம்ப் பின்வாங்குவதாகவே கருதப்படும். அவரது அச்சுறுத்தல்கள் ஈரானை அச்சுறுத்தத் தவறியபோதிலும், அவை அவரது அரசாங்கத்திற்குள் நிலவும் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

93 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் நாகரிகத்தையே பூண்டோடு அழிப்பதாக ட்ரம்ப் விடுத்த மிரட்டலும் —இதுவே ஒரு போர்க்குற்றமாகும்— மற்றும் ஒட்டுமொத்தப் போரும் வரலாற்று ரீதியான ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இந்த அறிக்கைகள் அமெரிக்க அரசாங்கத்தை ஒரு குற்றவியல் பாதாள உலகத்தினால் தலைமை தாங்கப்படும் ஒரு சட்டவிரோத ஆட்சி என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. இது, அமெரிக்கா முழுவதும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒழுக்கநெறி அதிகாரம் என்று சொல்லப்பட்டவற்றில் எஞ்சியிருந்த எதுவும் நிரந்தரமாகவும் ஈடுசெய்ய முடியாத அளவிற்கும் சிதைந்து போய்விட்டது, இது அமெரிக்க சமூகத்தில் மிக நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் படுகொலைகள் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்தப் போரைத் தீர்மானித்துவிடலாம் என்று கருதி ஒரு போரைத் தொடங்கின. ஆனால், ஈரானிய மக்களிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பின் அளவை அவர்கள் மோசமாகத் தவறாகக் கணித்துவிட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது தீர்க்க முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. போரைத் தீவிரப்படுத்துவது என்பது, வெற்றிபெற முடியாத ஒரு போரில் அதன் குற்றவியல் தன்மையை மேலும் ஆழமாக்குவதோடு, உள்நாட்டில் வெடிப்புமிக்க விளைவுகளையும் ஏற்படுத்தியே தீரும். பின்வாங்குவது என்பது சர்வதேச அளவில் ஒரு தோல்வியாகக் கருதப்படும், மேலும் இது அமெரிக்காவிற்குள் அரசியல் நிலைமையை இன்னும் சீர்குலைக்கும்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சம்பவங்கள், இந்த நெருக்கடி எவ்வளவு அசாதாரணமானதாக மாறியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இராணுவத்திற்குள், ட்ரம்பின் உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்தவர்கள், உலகளவில் போர்க்குற்றங்களாக அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஆயுதப்படைகளே இறுதியில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவர்களுக்குள் வளர்ந்து வந்தது.

இந்த யதார்த்தம் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளிருந்தே வரும் அறிக்கைகளில் வெளிப்பாட்டைக் கண்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ் (ஜனநாயகக் கட்சி-கலிபோர்னியா) “ஜனாதிபதி இப்போதே இனப்படுகொலை மிரட்டலை விடுத்துள்ளார்” என்று எழுதியதுடன், மத்தியிலுள்ள கூட்டாட்சியினதும் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மீறும் எந்தவொரு உத்தரவுகளையும் புறக்கணிக்குமாறு கூட்டுப் படைத் தளபதிகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் “பதவி நீக்கம் உட்பட அனைத்து வழிகளும்” பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கலிபோர்னியாவைச் சேர்ந்த மற்றொரு பிரதிநிதிகள் சபை உறுப்பினரான டெட் லியூ, இராணுவத் தலைமையிடம் நேரடியாகப் விளித்துப் பேசுகையில், இராணுவ நீதிச் சீருடைச் சட்டமும், கூட்டாட்சிச் சட்டமும் போர்க்குற்றங்களைத் தடை செய்கின்றன என்று வலியுறுத்தினார்.

இத்தகைய அறிக்கைகள் வெளிவருவதே இந்த நெருக்கடியின் அளவைக் காட்டும் ஒரு குறியீடாகும். அதே சமயம், அவை “எதிர்க்கட்சியின்” முடக்கநிலையையும் வஞ்சகத்தையும் அம்பலப்படுத்துகின்றன. காஸாவில் இனப்படுகொலையை ஆதரித்த, ஈரானுக்கு எதிரான போருக்கு வழியமைத்துக் கொடுத்த, இராணுவ எந்திரத்திற்கு நிதியளித்த மற்றும் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் முன்னெடுக்க மறுத்த அதே ஜனநாயகக் கட்சியினர் தான், இப்போது உடனடி போர்க்குற்றங்கள் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கின்றனர், ஆனால், அவற்றைத் தடுக்க எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் முன்மொழியவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைமை வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், “டொனால்ட் ட்ரம்ப் முற்றிலும் மனநிலை தவறியவர்” என்றும், “டொனால்ட் ட்ரம்ப் எமது நாட்டை மூன்றாம் உலகப் போரில் தள்ளுவதற்கு முன்னதாக, பிரதிநிதிகள் சபை உடனடியாக மீண்டும் கூடி, மத்திய கிழக்கில் இந்த பொறுப்பற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர வாக்களிக்க வேண்டும்” என்றும் அறிவித்தது.

ஒரு வாரத்திற்கு முன்புதான், ட்ரம்பிற்கு எதிரான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் தெருக்களில் இறங்கினர். பங்கேற்றவர்களிடையே ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு மேலோங்கிய உணர்வாக இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சி ஏற்பாட்டாளர்கள் ஈரானுக்கு எதிரான போர் குறித்த எந்தவொரு தீவிரமான குறிப்பையும், அல்லது “மூன்றாம் உலகப் போர்” பற்றிய எச்சரிக்கைகளை விடுப்பதையும் திட்டமிட்டுத் தவிர்த்தனர்.

இப்போது, உலகம் ஒரு உலகப் போரின் விளிம்பில் இருப்பதாகவும், அது தவிர்க்க முடியாமல் அணு ஆயுதப் பயன்பாட்டிற்கு இட்டுச் செல்லும் என்றும் ஜனநாயகக் கட்சியினர் எழுதுகின்றனர். எவ்வாறாயினும், அவர்களின் வேண்டுகோள் மக்களை நோக்கியது அல்ல, மாறாக குடியரசுக் கட்சியை நோக்கியிருக்கிறது. “பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் தங்கள் கட்சி விசுவாசத்தை விட தேசபக்தி கடமைக்கு முன்னுரிமை அளித்து, இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினருடன் இணைய வேண்டிய நேரம் இது” என்று அந்த அறிக்கை முடிவடைந்தது.

செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் இதர செனட் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “கோடிக்கணக்கான பொதுமக்கள் சார்ந்திருக்கும் மின்சாரம், நீர் அல்லது அடிப்படை உள்கட்டமைப்பை வேண்டுமென்றே அழிப்பது... ஒரு போர்க்குற்றமாகும்” என்று ஒப்புக் கொண்டார். ஆனால், அதிலுள்ள முக்கிய வரி ஒரு கோரிக்கையாகவே உள்ளது: “ஜனாதிபதி இந்த மிரட்டலைச் செயல்படுத்தக் கூடாது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐந்து வாரகால சட்டவிரோதப் போருக்குப் பிறகு, ஒரு பெரும் இனப்படுகொலை மிரட்டலுக்கு செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் அளிக்கும் பதில் என்னவென்றால், அதைச் செய்ய வேண்டாம் என்று ட்ரம்பிற்கு பணிவுடன் கோரிக்கை விடுப்பதுதான்.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் விவேகத்திற்கும், குடியரசுக் கட்சியினரின் “தேசபக்திக்கும்” வேண்டுகோள் விடுக்கின்றனர். அதே சமயம் மக்களிடையே நிலவும் மிகப்பெரிய எதிர்ப்பைத் திரட்ட அவர்கள் மறுக்கின்றனர். ஏனெனில், அத்தகைய அணிதிரட்டல் அவர்கள் ட்ரம்பை விட அதிகமாக அஞ்சும் பல பிரச்சனைகளை உடனடியாக எழுப்பிவிடும்.

மேலும், பைடென் ஆட்சியில் தொடங்கப்பட்ட காஸா இனப்படுகொலையிலிருந்து உருவான ஈரானுக்கு எதிரான போரையும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அடிப்படை நோக்கத்தையும் ஜனநாயகக் கட்சியினர் ஆதரிக்கின்றனர். அன்றைய நாளின் தொடக்கத்தில் ட்ரம்பின் மிரட்டல்கள் “மிகவும் தார்மீக ரீதியாக தவறானவை” மற்றும் “தீயவை” என்று கூறிய ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி, போர்நிறுத்த விதிமுறைகள் குறித்த அறிக்கைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை இவ்வாறு பதிலளித்தார்: “ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது, இது ஈரானுக்கு வரலாறு காணாத வெற்றி,” என்று மர்பி எழுதினார். “இந்தத் திறமையின்மையின் அளவு திகைப்பூட்டுவதாகவும் இதயத்தை உடைப்பதாகவும் உள்ளது” என்று மேலும் தெரிவித்தார்.

ஆளும் வர்க்கம் வெளியுறவுக் கொள்கையில் ஒரு தீர்க்க முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது என்றால், அது உள்நாட்டுக் கொள்கையிலும் அதற்கு இணையான ஒரு தீர்க்க முடியாத சிக்கலை எதிர்கொள்கிறது. உலகளாவிய போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சியை முன்னெடுப்பதற்காக ட்ரம்ப் என்ற உருவத்தில் அது அரசியல் பாதாள உலகத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது—இந்தக் கொள்கைகளைச் சட்டபூர்வமான அல்லது ஜனநாயக முறைகள் மூலம் செயல்படுத்த முடியாது. ஆனால், அவற்றைத் திணிக்கும் முயற்சியானது, ஆளும் வர்க்கம் மிகவும் அஞ்சும் சமூக சக்திகளையே வெடிக்கச் செய்து, அமெரிக்காவிற்குள் வெடிக்கும் வர்க்க மோதல்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் கீழிருந்து எழும் இத்தகைய இயக்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாத வகையில் எதிர்க்கின்றன. ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை மட்டுமல்ல, முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளத்தையே அச்சுறுத்துகிறது. ஆனால், ஆளும் வர்க்கத்தின் பதில் பின்வாங்குவதாக இருக்காது, மாறாக போரைத் தீவிரப்படுத்துவதாகவும், உள்நாட்டு ஒடுக்குமுறையைக் கடுமையாக்குவதாகவும் அமையும்.

உடனடி முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும், இந்தப் போர் அரசியல் ஸ்தாபனத்தால் கட்டுப்படுத்த முடியாத மற்றும் அதிலிருந்து தப்பிக்க முடியாத விளைவுகளை உருவாக்கி வருகிறது. பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அரசியல் அமைப்பு முறையின் சாதாரண வழிமுறைகள் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது.

ஒரு சமூக மற்றும் அரசியல் சக்தியாக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடே தீர்மானகரமான விஷயமாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இரண்டு வார கால போர்நிறுத்தம் நீடித்தால், அது தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடியின் காலகட்டமாக இருக்கும். இந்தப் போர் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதற்கு இந்தக் காலகட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

இந்தப் போராட்டம், முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலில் இருந்து பிரிக்க முடியாதது. ஆளும் வர்க்கம் மனிதகுலத்தைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் மூலம் இதற்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.

Loading