மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானுக்கு எதிரான போரை பாரியளவில் விரிவுபடுத்தும் முகமாக, கடந்த திங்கட்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையை வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முற்றுகையிட்டுள்ளது. ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்த அமெரிக்கப் படைகள் மேற்கொள்ளும் இந்த முயற்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பணிந்து விரிவான சலுகைகளை வழங்க ஈரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில், தனது எரிசக்தி இறக்குமதிக்கு ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் மலிவான எண்ணெயை நம்பியிருக்கும் சீனாவின் நலன்களையும் இது குறுக்கறுக்கிறது.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புப் போர் மத்திய கிழக்கை மறுஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்பதை அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கடந்த செவ்வாயன்று தெளிவுபடுத்தினார். ஒரு நிகழ்வில் பேசிய அவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “சிறிய ஒப்பந்தங்களில்” ஆர்வம் காட்டவில்லை என்றும், மாறாக ஈரானுடன் ஒரு “பெரிய பேரத்தை” பேசுவதையே நாடுகிறார் என்றும் அறிவித்தார். இதன் மூலம், அமெரிக்கா ஈரானை “பொருளாதார ரீதியாக ஒரு சாதாரண நாடாக” நடத்தும் என்றும் தெரிவித்தார். 93 மில்லியன் மக்கள் வாழும் அந்த நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்த நிதி மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த நிலையை மாற்றி, காலச் சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ள ட்ரம்ப் மற்றும் வான்ஸ் விரும்புகிறார்கள்.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி ஏற்றுமதி இடம்பெறும் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் கையாளும் என்பதைப் போர் தொடங்கியதில் இருந்தே ட்ரம்ப் அளித்துவரும் அறிக்கைகள் நிரூபிக்கின்றன. ஈரானை குண்டு வீசி “கற்காலத்திற்கு” தள்ளுவதாக அவர் சபதம் செய்தார். மேலும் ஏப்ரல் 7 அன்று ஒரு “முழு நாகரிகத்தையே” அழித்துவிட முடியும் என்று இனப்படுகொலை மிரட்டல் விடுத்தார். ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய குண்டுவீச்சு கண்மூடித்தனமான இரத்தவெறியுடன் நடத்தப்பட்டது. போரின் முதல் நாளில் ஒரு சிறுமிகள் பாடசாலை அழிக்கப்பட்டு, 160-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதே இதற்குச் சான்று. கடந்த வார போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணைகள் மற்றும் கள ஆய்வுகள், அமெரிக்கா இராணுவ இலக்குகளையே தாக்குவதாகக் கூறியபோதும், அதைச் சுற்றியுள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிக அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த வாரம் பொக்ஸ் பிசினஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், போர்க் குற்றவாளியான ட்ரம்ப், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு ஈரான் அடிபணிய மறுத்தால், அதன் மீது மேலும் பல போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று அச்சுறுத்தினார். ஒரு மாஃபியா தலைவரைப் போலப் பேசிய ட்ரம்ப், “நான் இப்போது தாக்குதலை நிறுத்திக்கொண்டால் கூட, அந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை... ஒரே மணி நேரத்தில் அவர்களுடைய ஒவ்வொரு பாலத்தையும்... ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் எங்களால் தகர்க்க முடியும்,” என்று கூறினார்.
அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ஷாவின் ஒடுக்குமுறை சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்த 1979 புரட்சிக்காக, ஈரானிய மக்களை ஒருபோதும் மன்னிக்காத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாகவே ட்ரம்ப் பேசுகிறார். ஈரானிய “பயங்கரவாதம்” குறித்தோ அல்லது ஈரானிய மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்தோ அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. மாறாக, பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஆற்றிய விரிவுரையில் டேவிட் நோர்த், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்று உறவைச் சுருக்கமாகக் குறிப்பிட்டது போல, இது அனைத்தும் இறுதியில் “எண்ணெய், புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வர்க்க நலன்கள்” சார்ந்தது மட்டுமே.
கடந்த வியாழக்கிழமை போர் குறித்த விளக்கக் கூட்டத்தில், பாசிச யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் அமெரிக்க இராணுவம் “மீண்டும் தயார் நிலையில்” இருப்பதாக எச்சரித்தார். மேலும், கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி டான் கெய்ன் கூறுகையில், இராணுவம் “அடுத்த கணமே” மீண்டும் போரைத் தொடங்க முடியும் என்று அறிவித்தார். ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியதில் இருந்து 13 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட கெய்ன், அன்றைய தினத்தின் பிற்பகுதியில் அந்த எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகின் நான்காவது பெரிய எண்ணெய் இருப்புகளையும், இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்புகளையும் கொண்டுள்ள ஈரான், தனது எண்ணெய்ப் பொருட்களில் 80 முதல் 90 சதவீதத்தைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. 2018-ல் ஈரானுடனான ஐநா ஆதரவு அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்து, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்ததால், கடந்த சில ஆண்டுகளாக சீனா மலிவு விலையில் ஈரானிய எண்ணெயைப் பெற்றுப் பயனடைந்தது. 2021-ல், சீனா ஈரானுடன் 25 ஆண்டுகால மூலோபாயக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் சீனப் பொருளாதாரத்திற்கு 400 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய்க்குப் பதிலாக, ஈரானிய உள்கட்டமைப்பில் பெரும் முதலீடுகள் செய்வதும் அடங்கும். தனது பொருளாதாரத் தடைகளால் சாதிக்க முடியாததை மூர்க்கத்தனமான இராணுவ பலத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று வாஷிங்டன் இப்போது நம்புகிறது. ஆனால், இந்த ஆக்கிரமிப்புப் போரின் முதல் ஆறு வாரங்கள், உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தால் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால வீழ்ச்சியின் தாக்கத்தை முறியடிக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளன.
போருக்கு முன்னதாக, சீனா ஈரானிடமிருந்து ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பேரல் எண்ணெயையும், ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திலிருந்தும் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பேரல்களுக்கு மேலாகவும் பெற்று வந்தது. அமெரிக்காவின் இந்த முற்றுகையானது இதர வளைகுடா நாடுகளில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை நேரடியாகத் தடுக்கவில்லை என்றாலும், இப்பிராந்தியத்தின் உற்பத்தி போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவியளவில் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்துவதற்கான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. சீனாவினால் தனது 5 மாத காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குதான் எண்ணெய் இருப்பு உள்ளதாகக் கூறப்பட்டாலும், விநியோகத்தில் ஏற்படும் நீண்டகாலக் குறைப்பு ஏற்கனவே பலவீனமாக உள்ள அதன் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும். அத்தோடு, இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த எச்சரிக்கை, பெய்ஜிங்கில் உள்ள ஸ்டாலினிச ஆட்சி தனது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க நம்பியிருக்கும் சீன ஏற்றுமதிகளுக்கான சந்தை சுருங்குவதைக் குறிக்கிறது.
மத்திய கிழக்கு போரின் விளைவாக சீனாவிற்கு ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறையை மாஸ்கோவினால் ஈடுகட்ட முடியும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தபோது தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கூற்று மிகவும் சந்தேகத்திற்குரியது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான குழாய் இணைப்புகள் ஏற்கனவே முழு கொள்ளளவில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை கணிசமாக அதிகரிக்கத் தேவையான சீனாவுக்குச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ரஷ்யாவிடம் இல்லை. ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி இழப்பை முழுமையாகவும், மற்ற வளைகுடா நாடுகளின் விநியோகக் குறைவை ஓரளவிற்கும் ஈடுகட்ட வேண்டுமானால், ரஷ்யா சீனாவிற்கான தனது தற்போதைய ஏற்றுமதியை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சியின் காலத்திற்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத வகையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் குற்றத்தன்மையை எதிர்கொண்டுள்ள பெய்ஜிங், அனைத்து நாடுகளின் நலன்களும் மதிக்கப்படும் ஒரு நிலையான “பலமுனை உலகத்தை” உருவாக்கும் வாய்ப்பை முன்வைத்து அமெரிக்காவின் முற்றுகைக்கு பதிலளித்துள்ளது. சின்ஹுவாவின் அறிக்கையின்படி, பெய்ஜிங்கும் மாஸ்கோவும் “பல்முனை ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும், அதன் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், ஐநா-வின் அதிகாரத்தையும் ஆற்றலையும் மீட்டெடுக்க கைகோர்க்க வேண்டும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கட்டமைப்பிற்குள் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும், மேலும் சர்வதேச ஒழுங்கை மிகவும் நீதியான மற்றும் நியாயமான திசையில் மேம்படுத்த வேண்டும்” என்று ஷி ஜின்பிங் லாவ்ரோவிடம் கூறியுள்ளார்.
சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் “அமைதியான சகவாழ்வு” கொள்கையின் இந்த நவீன வடிவம், 20-ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட இன்று உலக முதலாளித்துவத்தின் யதார்த்தத்தில் மிகக் குறைந்த அடிப்படையையே கொண்டுள்ளது. அன்று ரஷ்ய முதலாளித்துவத்தை ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்குள் ஒருங்கிணைக்கும் ஒரு தோல்வியுற்ற முயற்சியில், இதே கொள்கைதான் ஸ்டாலினிஸ்டுகள் சோவியத் யூனியனைக் கலைப்பதற்கு வழிவகுத்தது. ஒரு சர்வாதிகாரியாகத் துடிக்கும் ட்ரம்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது துரிதமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், தனது உலகளாவிய மேலாதிக்க நிலையைத் தக்கவைக்க, ஒரு மூன்றாவது உலகப் போரை நடத்த முழுமையாக உறுதிபூண்டுள்ளது. ஈரானிய நாகரிகத்தையே அழிப்பதாக ட்ரம்ப் விடுக்கும் இரத்தத்தை உறைய வைக்கும் மிரட்டல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இழப்பில் “பல்முனைத்தன்மை” என்ற பதாகையின் கீழ், சீன மற்றும் ரஷ்ய செல்வாக்கு விரிவடைவதை ஒருபோதும் அமைதியாக ஏற்காது என்பதற்குச் சான்றாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள், சீனாவின் எழுச்சியைத் தடுப்பதே அவரது இறுதி இலக்கு என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளன. சீனாவிற்கு எண்ணெய் வழங்கும் முக்கிய நாடான வெனிசுவேலாவின் ஜனாதிபதியைக் கைது செய்து, அங்கு ஒரு அமெரிக்க பொம்மை ஆட்சியை நிறுவி, அந்நாட்டின் எரிசக்தி இருப்புகளை அமெரிக்க மூலதனத்திற்குத் திறந்துவிடுவதற்காக அவர் அங்கு ஒரு இராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். ஈரானுக்கு எதிராக இதேபோன்ற எளிதான முறையில் ஒரு நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்று நம்பி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பேரழிவு தரும் தவறான கணக்கீட்டைச் செய்தது. இருப்பினும், மத்திய கிழக்கு முழுவதும் சீனாவின் பொருளாதார உறவுகளைச் சீர்குலைக்கும் இலக்கை அது தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இந்த மோதல் போராகத் தொடர்ந்தாலும் சரி, அல்லது ஈரானுடன் ஒரு “பெரிய பேரம்பேசலாக” மாறினாலும் சரி, முதலாளித்துவத்தின் கீழ் தீர்க்க முடியாத இந்த மோதலின் தர்க்க ரீதியான விளைவு என்பது அணு ஆயுதம் ஏந்திய வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலாகவே இருக்கும். டேவிட் நோர்த் தனது பேர்லின் விரிவுரையில் குறிப்பிட்டது போல:
இதற்கு ஒப்பாக நாம் கருத வேண்டிய வரலாற்று நிகழ்வு 1991-ஆம் ஆண்டின் வளைகுடாப் போரோ அல்லது 2003-ஆம் ஆண்டின் ஈராக் மீதான ஆக்கிரமிப்போ அல்ல. மாறாக, 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும். முதலாம் உலகப் போர், பால்கன் பகுதியில் ஒரு பிராந்திய மோதலாகத் தொடங்கி, கூட்டணிகளின் தர்க்கம், ஏகாதிபத்தியப் போட்டிகள் மற்றும் தவறான கணக்கீடுகள் ஆகியவற்றின் மூலமாக விரிவடைந்து, நான்கு பேரரசுகளை அழித்து 20 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு உலகளாவிய பேரழிவாக மாறியது.
இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, முதலாளித்துவ இலாப முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து சோசலிசத்தை நிறுவுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான தங்களது போராட்டங்களை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் இணைய வேண்டும்.
ஏனெனில், அங்குள்ள தொழிலாளர்கள் முடிவில்லாத போர்களுக்கும் நிதிய தன்னலக்குழுக்களின் செழுமைக்கும் பணம் செலுத்துவதற்காகத் தங்களின் வாழ்க்கைத்தரத்தின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்கின்றனர். அதேபோல் சீனா மற்றும் ரஷ்ய தொழிலாளர்களுடனும் அவர்கள் இணைய வேண்டும். நெருக்கடி நிறைந்த முதலாளித்துவத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயற்சிக்கும் அந்த இரு முதலாளித்துவ-மீட்புவாத ஆட்சிகளின் முயற்சிகளோடு இந்தத் தொழிலாளர்களின் நலன்கள் முரண்படுகின்றன. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத்தளமும் (WSWS) போராடும் வேலைத்திட்டமாகும்.
