கியூபா மீது ட்ரம்ப் போர் தொடுக்கத் தயாராகும் வேளையில், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று மதிப்பீடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இது இரண்டு பாகங்களைக் கொண்ட தொடரின் முதல் பாகமாகும்.

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு, அவரது ஆட்சி தூக்கியெறியப்பட்டு ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கைக்கு பகிரங்கமாகத் தயாராகி வருகிறது. வெனிசுவேலா மீதான நடவடிக்கையில், கராகஸ் நகரில் அமெரிக்க சிறப்புப் படைகள் 32 கியூபப் பாதுகாப்புப் படையினரையும், ஏராளமான வெனிசுவேலா நாட்டினரையும் படுகொலை செய்தன. இந்த அச்சுறுத்தல்கள், 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் இலத்தீன் அமெரிக்காவை இரத்தத்தில் மூழ்கடித்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் பாசிச இராணுவ சர்வாதிகாரங்களின் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதோடு, அந்தத் தீவின் மீது மீண்டும் ஒருமுறை காலனித்துவ மேலாதிக்கத்தை திணிப்பதற்கான உந்துதலையும் பிரதிபலிக்கின்றன.

கியூபா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் போர்த் திட்டங்களுக்கும் எதிராக அவசரமாக அணிதிரள வேண்டும். ஆனால், கியூபாவின் தலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்வதற்கு இது நேரமல்ல என்று வக்காலத்து வாங்குபவர்களை எதிர்கொள்ளும்போது —இப்போது காரகாசின் கட்டுப்பாட்டை சி:ஐ:ஏ மற்றும் பென்டகனிடம் ஒப்படைத்து வரும் வெனிசுவேலாவின் சாவோயிஸ்டுக்கள் அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் கூறியதைப் போலவே—ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு பயனுள்ள எதிர்ப்புக்கும், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று அனுபவத்தை முழுமையாக மதிப்பீடு செய்வது அவசியமாகிறது: அதாவது, கியூபாவில் அதன் தாக்கத்தை மட்டுமல்ல, அமெரிக்க கண்டம் முழுவதும் அது ஆற்றிய பங்கையும் இதில் ஆராய வேண்டும்.

இது ஒரு அருவமான தத்துவார்த்த பயிற்சி அல்ல. இது ஒரு அரசியல் அவசியமாகும். ஏனென்றால் இன்று கியூபாவின் அவலநிலை குறித்து கவலைப்படுகின்ற அதேவேளையில், அதன் பாதுகாப்பிற்கான எந்தவொரு உண்மையான வேலைத்திட்டத்தையும் முன்வைக்காத அனைத்து அரசியல் சக்திகளும் —பிரேசிலின் லுலா, மெக்சிகோவின் ஷெயின்பாம், வெனிசுவேலாவின் சாவோயிஸ்டுக்கள், ஸ்டாலினிசக் கட்சிகள் மற்றும் பப்லோயிசப் போக்குகள்— இந்த பேரழிவை உருவாக்கிய அரசியலின் விளைபொருட்களாகவும் அதன் தொடர்ச்சியாளர்களாகவும் இருக்கின்றன.

சமீபத்திய அச்சுறுத்தல்கள்

கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீவிரமான அழுத்தங்கள், வாஷிங்டனின் நோக்கங்கள் குறித்து எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமளிக்காத அளவிற்கு இரக்கமற்ற முறையில் தொடர்கின்றன. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, கியூபாவை மீண்டும் “பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள்” பட்டியலில் சேர்த்தார். இது நிதி, வணிகம் மற்றும் உதவித் திட்டங்கள் ஆகியவற்றில் கடுமையான அபராதங்களையும் தடைகளையும் ஏற்படுத்தியது. வெனிசுவேலாவில் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப்: “கியூபா வீழ்வதற்குத் தயாராக உள்ளது” என்று அறிவித்தார். ஜனவரி மாத இறுதியில், அவர் கியூபாவை “ஒரு தேசிய அவசரநிலை” என்று அறிவித்ததோடு, தீவுக்கு எரிபொருள் விநியோகம் செய்தால் எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார். மே 1 அன்று, ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவின் பொருளாதாரத்துடன் வணிகம் செய்யும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக தடைகளை விதித்தது — தற்போதுள்ள எரிபொருள் தடையுடன் இணைந்துள்ள இந்த நடவடிக்கை, அந்தத் தீவை முன்னெப்போதும் இல்லாத ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முற்றுகையின் நடைமுறை முடிவுகள் இனப்படுகொலைக்கு இணையானவை ஆகும். கியூபாவின் மின்சார வாரியத்தின்படி, ஒரே ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பலின் வருகை, மின்தடையால் பாதிக்கப்பட்ட கியூபா பகுதியின் அளவை தற்காலிகமாக 60 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க உதவியது. ஆனால், இந்த நிவாரணம் ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடித்தது. மே மாதத்தில், அந்தத் தீவு தனது வரலாற்றிலேயே மிக மோசமான மின்தடை அளவைப் பதிவு செய்தது. மே 6 முதல் மே 18 வரை, ஹவானா நகரம் தொடர்ந்து 24 மணி நேர மின்தடையை எதிர்கொண்டது. குளிர்சாதனப் பெட்டிகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன, உணவுகள் வீணாகின்றன, அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் குழந்தை இறப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.

மே 21 அன்று, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க் கப்பலும் மூன்று பாதுகாப்பு போர்க் கப்பல்களும் கரீபியன் கடலுக்குள் நுழைந்தன. சிஐஏ-வுடன் தொடர்புடைய ஆத்திரமூட்டுபவர்களால் இயக்கப்பட்ட இரண்டு விமானங்கள் 1996 இல் சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக, இப்போது 94 வயதாகும் முன்னாள் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ மீது நீதித்துறை மோசடியான கொலைக் குற்றச்சாட்டுகளை அறிவித்த மறுநாளே அவற்றின் வருகை நிகழ்ந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள், மதுரோவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அதே வகையான நடவடிக்கையை மீண்டும் செய்வதற்கான ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாகும்: அதாவது ஒரு தலைவரின் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவது, பின்னர் அதையே கடத்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைக்கான சட்டப்பூர்வ மூடுதிரையாகப் பயன்படுத்துவதாகும்.

கியூபாவின் துணை வெளியுறவு அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ, தனது நாடு போருக்குத் தயாராகி வருவதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் “நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் அது ஏமாளித்தனமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். கியூபாவின் அதிகாரிகள் “இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பாதுகாப்பதற்கான குடும்ப வழிகாட்டி” என்ற கையேட்டை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

கியூபா மக்கள் மீது அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டுள்ள பகைமையானது, வெறும் புவிசார் மூலோபாய நோக்கங்களால் மட்டுமே தூண்டப்பட்டதல்ல, மாறாக, 1959ம் புரட்சி மற்றும் அதன் மூலம் கியூபாவின் பொருளாதாரத்தின் மீதிருந்த அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாடு மற்றும் மாஃபியாக்களின் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றின் இழப்பு குறித்த திட்டமிட்ட பழிவாங்கும் உணர்ச்சியாலும் தூண்டப்பட்டதாகும். இந்த வெறுப்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, கோவிட்-19 பெருந்தொற்றின் போது கியூபாவிற்கு ஆக்ஸிஜன் விற்க மறுத்ததை நினைவு கூர்ந்தாலே போதுமானது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு, அமெரிக்கத் தொழிலாளர்களின் உயிர்களைப் பலிகொடுத்து, பெருந்தொற்றைக் “கட்டுப்பாடின்றி பரவவிடும்” கொள்கையைக் கையாண்ட அதே வேளையில், மறுபுறம் “கியூபா மக்களை மூச்சுத்திணறி இறக்கவிடும்” கொள்கைக்கும் உத்தரவிட்டது. கியூபா மக்களை அழிப்பதற்கான இதே இருகட்சிகளின் (குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) அர்ப்பணிப்புதான் இன்று ட்ரம்ப் நிர்வாகத்தையும் உந்தித் தள்ளுகிறது.

கியூபாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுத்துள்ள ஆக்கிரமிப்பு, ஆட்சி மாற்றம் மற்றும் மீண்டும் காலனியாக்குதல் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்க்குமாறு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான கியூபாவிற்கான எமது ஆதரவு எவ்வித நிபந்தனையற்றதும், முழுமையானதும் ஆகும். கியூபாவின் தேசியவாதத் தலைமைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் அடிப்படையில் அல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் அவர்களின் நனவுமிக்க அணிதிரட்டலின் அடிப்படையிலேயே நாம் அந்தப் பாதுகாப்பை மேற்கொள்கிறோம்—இதன் காரணமாகவே, காஸ்ட்ரோயிசம் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடு அந்தப் பாதுகாப்புடன் இணங்கிப்போவது மட்டுமின்றி, அதற்கான ஒரு அவசியமான அடித்தளமாகவும் அமைகிறது.

கியூபா புரட்சியும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடும்

கியூபாவின் வரலாறு என்பது, அந்தத் தீவுக்கு உண்மையான தேசிய சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதில் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத தலைமைகளின் தோல்வியுற்ற வரலாறாகும். அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்ததில் இருந்தே, அதன் அருகாமையுடனும் மூலோபாய முக்கியத்துவத்துடனும் கியூபாவின் விதி பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் அமைச்சர் ஜேம்ஸ் ஜி. பிளெய்ன் 1881 இலேயே இதைப் புரிந்து கொண்டிருந்தார். அவர் பின்வருமாறு கூறினார்:

“மெக்சிகோ வளைகுடாவின் திறவுகோலாக இருக்கும் அந்த வளமான தீவு (கியூபா), ஸ்பெயினின் கைகளில் இருந்தாலும், அது அமெரிக்க வர்த்தக அமைப்பின் ஒரு பகுதியாகும்... கியூபா ஒருவேளை ஸ்பெயினின் வசமிருந்து விடுபடுமாயின், அது வேறு எந்தவொரு ஐரோப்பிய மேலாதிக்கத்தின் கீழும் செல்லாமல், நிச்சயமாக அமெரிக்காவிற்குச் சொந்தமானதாகவே மாற வேண்டும்.”

நூற்றாண்டின் தொடக்கத்தில் பனாமா கால்வாய் கட்டப்பட்டமையானது இந்த மூலோபாயக் கணக்கீட்டை மேலும் அதிகப்படுத்தியது. ஏனெனில், கியூபாவைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் இந்தக் கால்வாயை அமெரிக்க வளைகுடா கடற்கரை மற்றும் கிழக்குக் கரை ஆகிய இரண்டோடும் இணைக்கின்றன. இன்று, இதன் முக்கியத்துவம் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்திய தொழில்துறை பகுப்பாய்வு ஒன்று, “கியூபாவின் நிக்கல் மற்றும் கோபால்ட் கனிம வளங்கள், மேற்கு அரைக்கோளத்தில் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத மிக முக்கியமான கனிமச் சொத்துக்களில் ஒன்றாகும். உலகளாவிய மின்சார வாகன (EV) பேட்டரி விநியோகச் சங்கிலிக்கு, சரியாக கியூபாவிடம் என்ன இருக்கிறதோ அதுதான் தேவைப்படுகிறது” என்று முடிவு செய்யப்படுகின்றது.

கியூபாவின் மக்கள் ஸ்பெயினுக்கு எதிராக மூன்று சுதந்திரப் போர்களை நடத்தினார்கள், இதற்காக அவர்கள் கொடுத்த மனித உயிர்களின் விலை அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும். இவற்றில் கடைசிப் போரில் (1895-1898), ஸ்பெயின் 2,20,285 படையினர்களைக் களமிறக்கியதுடன், நவீன கால சித்திரவதை முகாம்களை முதன்முதலில் உருவாக்கியது. கியூபாவின் மக்கள் தொகையில் தோராயமாக 20 சதவீதம் பேர் இதில் உயிரிழந்தனர். இருப்பினும், போர் முடிந்தபோது கியூபாவிற்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை, மாறாக அமெரிக்காவின் மேலாதிக்கமே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.

1898-ல் தலையிட்ட அமெரிக்கா, ஸ்பானிய காலனித்துவத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து கியூபாவின் தலைவர்களை விலக்கி வைத்தது. மேலும், கியூபாவின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிடுவதற்கான வரம்பற்ற உரிமையை வாஷிங்டனுக்கு வழங்கும் பிளாட் சட்ட திருத்தத்தை கட்டாயப்படுத்தி திணித்தது. அத்துடன், குவாண்டனாமோ குடாவை நிரந்தர அமெரிக்கத் தளமாகவும் வாஷிங்டன் தன்வசப்படுத்திக் கொண்டது. கியூபாவின் உத்தியோகபூர்வ குடியரசு தினமான மே 20, 1902 என்பது, உண்மையான சுதந்திரத்தை நினைவுகூரவில்லை. மாறாக, அதன் போலித் தோற்றத்தையே நினைவுகூருகிறது: தலைநகர் ஹவானாவின் மோர்ரோ கோட்டையில் அமெரிக்காவின் கொடி இறக்கப்பட்டபோதும், கியூபாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் அடிபணியச் செய்த ஒரு அரைக்-காலனித்துவ நிலையே நீடித்தது.

இந்த வரலாற்றை உந்தித் தள்ளிய வர்க்க சக்திகள், பில் வான் ஓகன் எழுதிய “காஸ்ட்ரோயிசமும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியலும்” என்ற அடிப்படை விரிவுரையில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுப்பாய்வு, 1959 புரட்சியின் ஆழமான வேர்களை, கியூபாவின் சுதந்திரப் போராட்டத்தின் கருச்சிதைவுத் தன்மையிலும், அதன் விளைவாக அந்தத் தீவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்க மூலதனமும் அதன் உள்ளூர் ஏஜெண்டுகளும் செலுத்திய மேலாதிக்கத்திலும் தேடிக் கண்டறிந்தது.

புரட்சிக்கு முந்தைய கியூபாவின் சமூக யதார்த்தம் என்பது, ஒருபுறம் தீவிரமான செல்வக் குவிப்பும், மறுபுறம் கிராமப்புறங்களில் பரந்த வறுமையும், நகர்ப்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டமும் நிறைந்ததாக இருந்தது. அந்தத் தீவின் பொருளாதாரம்—அதன் சர்க்கரைத் தோட்டங்கள், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், இரயில் பாதைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்துறைகள்—பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அல்லது அவர்களுடன் பிணைக்கப்பட்டிருந்த உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திற்கே சொந்தமாக இருந்தது.

கியூபாவின் வணிகப் பாதாள உலகமானது, அமெரிக்க அதிகார மையத்தின் மிக உயர்மட்டத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. மாஃபியாக்களுடன் தொடர்புடைய கியூப வங்கியாளரும், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான சார்லஸ் “பெபே” ரெபோசோ, மேயர் லான்ஸ்கி போன்ற அமெரிக்கவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களால் முழுமையாக நடத்தப்பட்ட சூதாட்டப் பயணங்களுக்காக, நிக்சன் புளோரிடா செனட்டர் ஜோர்ஜ் ஸ்மேதர்ஸருடன் வழக்கமாக ஹவானாவிற்குப் பயணம் செய்தார். ரெபோசோ, எட்கார்டோ புட்டாரி மற்றும் பர்க் ஹெட்ஜஸ் உள்ளிட்ட பாட்டிஸ்டாவின் நெருங்கிய வட்டாரத்துடன் ஆழமான தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்தார். பாட்டிஸ்டாவின் கியூபா, நடைமுறையில், வாஷிங்டன் மற்றும் மியாமியில் மேற்பார்வையாளர்களைக் கொண்ட ஒரு மாஃபியா அரசாகவே இருந்தது.

வான் ஓகன் ஆவணப்படுத்தியுள்ளபடி, இக்காலகட்டத்தில் கியூப தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட அரசியல் முடக்கம் என்பது, திட்டமிட்ட நாசவேலையின் விளைவாக ஏற்பட்டதாகும். அதற்கு முந்தைய புரட்சிகர எழுச்சிகளை பாட்டிஸ்டாவிற்குப் பின்னால் திருப்பிவிட்டதற்கும், அவரது அரசாங்கத்தில் இணைந்தது உள்ளிட்ட செயல்களுக்கும், கியூபாவின் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PSP) நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். ஜெரார்டோ மச்சாடோ சர்வாதிகாரத்தை வீழ்த்திய 1933-ஆம் ஆண்டின் பொது வேலைநிறுத்தமும் புரட்சியும், தொழிலாளர்கள் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி சோவியத்துகளை அமைத்ததன் மூலம் ஒரு உண்மையான புரட்சிகர சூழலை உருவாக்கியது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள், அந்த நேரத்தில் தன்னை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகக் காட்டிக்கொண்ட பாட்டிஸ்டாவிற்கு இந்த இயக்கத்தைக் கீழ்ப்படியச் செய்தனர். தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கப்பட்டதன் விளைவாக, கியூபாவின் ஜனநாயகக் கடமைகள் நிறைவேற்றப்படவில்லை; மாறாக, ஒரு புதிய முதலாளித்துவ சர்வாதிகாரியின் கீழ் அவை தள்ளிப்போடப்பட்டன.

கியூபாவில் 1959ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது, பாட்டிஸ்டாவின் வீழ்ச்சிக்கு சியரா மேஸ்ட்ரா பகுதியில் இருந்த கொரில்லா குழுக்கள் முதன்மைக் காரணியாக இருக்கவில்லை. மாறாக, நகரங்களில் வெடித்த மாபெரும் வேலைநிறுத்த இயக்கமே அவரது ஆட்சியை முடக்கி, அதைத் தொடர முடியாதபடி செய்தது. பாட்டிஸ்டாவின் அதிகாரம் சரிந்ததாலும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போட்டியிடக்கூடிய ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமை இல்லாததாலும் ஏற்பட்ட ஓர் அரசியல் வெற்றிடத்திற்குள்ளேயே பிடெல் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம் காலடி எடுத்து வைத்தது.

இது ஒரு மிக முக்கியமான புள்ளியாகும்: காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தின் வெற்றி என்பது, கொரில்லாப் போர்முறைதான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை என்பதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, புரட்சிகரத் தலைமை இல்லாத நிலையில், தொடர்ச்சியான முதலாளித்துவச் சுரண்டலைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அரசைப் பொறுப்பேற்றுக்கொள்வதை மட்டுமே தொழிலாள வர்க்கம் காண நேரிடும் என்பதற்கான ஒரு நிரூபணமாக அது அமைந்தது.

1966-ல் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் காஸ்ட்ரோ உரையாற்றுகையில், அவர் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்தார்.

ஐசன்ஹோவர் நிர்வாகமும், அதைத் தொடர்ந்து கென்னடி நிர்வாகமும், ஹவானாவில் தங்களது பொம்மை ஆட்சியை அகற்றியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டன. மேலும், மக்களால் கோரப்பட்ட மிகக்குறைந்த அளவிலான விவசாய சீர்திருத்தங்களையும் பிற நடவடிக்கைகளையும் கூட ஏற்றுக்கொள்ள மறுத்தன. அதற்குப் பதிலாக, அவர்கள் கியூபாவின் சர்க்கரை இறக்குமதியை நிறுத்தி, கிட்டத்தட்ட முழுமையான அமெரிக்க வர்த்தகத் தடையை விதித்தனர். இந்தச் செயல்முறையிலிருந்து உருவான காஸ்ட்ரோ அரசாங்கம், பொருளாதாரத் தேவையின் காரணமாக, அமெரிக்காவிற்குச் சொந்தமான தோட்டங்கள், பொதுப் பயன்பாடுகள், இரயில் பாதைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்துறைகளை முழுமையாகத் தேசியமயமாக்குவதன் மூலம் இதற்குப் பதிலடி கொடுத்தது.

உதவிக்காகச் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவத்தை நோக்கித் திரும்பிய காஸ்ட்ரோ, எழுத்தறிவு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் உண்மையான சமூக நன்மைகளைப் பெற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். இந்தச் சாதனைகள் உண்மையானவைதான், ஆனால் அவை, வர்க்கத் தன்மையில் அடிப்படையில் முதலாளித்துவமாகவே இருந்த ஒரு அரசு எந்திரத்திற்குள்ளும், மாஸ்கோவின் எதிர்-புரட்சிகர வெளியுறவுக் கொள்கைக்கு கியூபா முழுமையாக அரசியல் ரீதியாக அடிபணிந்திருந்த சூழ்நிலைகளின் கீழும் அடையப்பட்டன.

கியூபாவின் பொருளாதாரம், கட்டமைப்பு ரீதியாக வெளிநாட்டு ஆதரவைச் சார்ந்து இருந்தமையானது, காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை நம்பியிருப்பதன் மூலம் தொழிலாளர்களால் இந்த காலகட்டத்தின் எஞ்சிய சமூக நன்மைகளைப் பாதுகாக்க முடியாது என்பதையும், எப்போதும் பாதுகாக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தியது. கியூபாவின் முதலாளித்துவ தேசியவாதத் தலைமை, தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் ஒரு ஆதரவாளரையே நாடியிருந்தது. பனிப்போரின் போது, அந்த ஆதரவாளராகச் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, அது வெனிசுவேலாவாகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட மற்றும் குறுகிய கால அளவில் மெக்சிகோவாகவும் இருந்தது.

கியூபாவின் இராணுவம் மற்றும் கட்சித் தலைமையின் ஒட்டுமொத்த உயர் அடுக்கினரும், சுற்றுலா வருவாய்க்கான சலுகை பெற்ற அணுகல் மற்றும் ஐரோப்பிய, கனேடிய மூலதனத்துடனான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் தங்களை வளம் கொழிக்கச் செய்து கொண்டனர். கடந்த தசாப்தத்தில், சுற்றுலா மற்றும் ஹோட்டல்களுக்கான செலவினங்கள் மற்ற அனைத்து முதலீட்டு முன்னுரிமைகளையும் விட அதிகமாக இருந்தன. 2024 ஆம் ஆண்டில், கியூப அரசு தனது மொத்த முதலீடுகளில் 37.4 சதவீதத்தை சொகுசு விடுதிகளை கட்டுவதில் குவித்தது. இந்தத் தொகை கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த செலவை விட பதினொரு மடங்கு அதிகமாகும்.

இது ஒரு அரசின் தர்க்கரீதியான பொருளாதார வெளிப்பாடாகும். கியூபாவின் ஆளும் தட்டு, அனைத்து தேசியவாத வாய்வீச்சுக்களுக்கும் மத்தியிலும், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி உலகளாவிய முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்குப் பதிலாக, அதனுடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மூலதன முதலீட்டை ஈர்ப்பதற்கு மலிவான உழைப்பு மற்றும் இயற்கை வளங்களின் வடிவத்தில் போட்டித்தன்மை வாய்ந்த செலவினங்கள் தேவையாக இருக்கின்றன.

தற்போதைய பேரழிவு இந்த யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி டயஸ்-கனெல், சமீபத்தில் பிரேக் த்ரூ நியூஸ் ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், கியூபாவின் சுதந்திரப் போர்கள் மற்றும் 1933 புரட்சியிலிருந்து கிடைத்த படிப்பினைகளைப் பற்றிப் பேசுகையில், முந்தைய இயக்கங்கள் சுதந்திரத்தைப் பெறத் தவறியதற்கான அடிப்படைக் காரணம் “தேசிய ஒற்றுமையின்மை” —— அதாவது கியூபர்களிடையே ஒற்றுமை இல்லாததே காரணம் என்று அவர் முடிவு செய்கிறார். 1959 புரட்சி வெற்றி பெற்றது, ஏனெனில் அது “புரட்சிகர கியூபக் கட்சி பற்றிய அதே மார்ட்டிசக் கருத்தாக்கத்துடன் [கியூபாவில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்த தேசியவாதத் தலைவர் ஜோஸ் மார்ட்டியிடமிருந்து உருவானது] முக்கிய அரசியல் சக்திகளை ஒரே கட்சியில் ஒன்றிணைத்தது”, அதன் மூலம் “இக்கட்டான சூழ்நிலைகளைத் தாங்கி, பொருளாதாரத் தடையை முறியடித்து, அனைத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளையும் வெல்ல முடிந்தது” என்று அவர் வாதிடுகிறார்.

உண்மைநிலை இதற்கு நேர்மாறானதாகும். கியூபாவின் சுதந்திரப் போர்கள் மற்றும் புரட்சிகர எழுச்சிகளின் தோல்வியானது, கியூபர்களிடையே கியூபர்களாக இருந்த ஒற்றுமையின்மையின் விளைவாக ஏற்படவில்லை. மாறாக அது, ஏகாதிபத்திய யுகத்தில், கியூப தேசத்தின் ஜனநாயகக் கடமைகளுக்கும் ——தேசிய சுயநிர்ணயம், நிலச் சீர்திருத்தம், அதன் வளங்கள் மீதான இறையாண்மை—— ஒவ்வொரு தேசியவாத இயக்கத்தையும் வழிநடத்திய முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்க நலன்களுக்கும் இடையே இருந்த அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்க அனைத்து தேசியவாத வேலைத் திட்டங்களாலும் இயலாமல் போனதன் விளைவே ஆகும்.

ஒரு தேசியவாதப் பதாகையின் கீழ் ஒற்றுமையை அடைவதன் மூலம் அந்த முரண்பாட்டைக் கடந்துவிட முடியாது. சர்வதேச சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசை அழித்து, தன் சொந்தப் பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இதனைத் தீர்க்க முடியும் —சரியாக இதைத்தான், 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியின் வெற்றிகரமான வியூகத்திற்கு வழிகாட்டிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு துல்லியமாக நிறுவுகிறது.

1905 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ரஷ்யப் புரட்சிகள், முதலாம் உலகப் போர் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பரந்த உலகளாவிய முன்னேற்றங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு, ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட மூன்று ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், முதலாளித்துவ வர்க்கமானது மிகவும் பலவீனமானதாகவும், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் மிகவும் பிணைக்கப்பட்டதாகவும், ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியைக் கண்டு மிகவும் அஞ்சுவதாகவும் இருக்கிறது. இதனால் அவர்களால் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பாரம்பரியக் கடமைகளை நிறைவு செய்ய முடியாது. தனக்குப் பின்னால் விவசாயிகளையும் கிராமப்புற ஏழைகளையும் வழிநடத்தும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இக்கடமைகளை நிறைவேற்ற முடியும்.

இரண்டாவதாக, ஜனநாயகப் புரட்சியானது முதலாளித்துவ “கட்டத்தோடு” நின்றுவிட முடியாது—அது தடையின்றி சோசலிச நடவடிக்கைகளை நோக்கி, அதாவது மூலதனத்தைப் பறிமுதல் செய்வதை நோக்கிச் செல்ல வேண்டும். மூன்றாவதாக, மிக முக்கியமாக, சோசலிசப் புரட்சியை ஒரு நாட்டில் மட்டும் முழுமையடையச் செய்ய முடியாது. அது சர்வதேச அளவில் விரிவடைய வேண்டும், இல்லையெனில் அது கழுத்து நெரிக்கப்படும்—ஸ்டாலினிச தேசியவாத அதிகாரத்துவத்தின் ஆதிக்கம் மற்றும் சீரழிவின் கீழ் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதியால் இது இறுதியில் நிரூபிக்கப்பட்டது.

பொருளாதாரத் தடையையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் கியூபா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது என்ற டயஸ்-கானெலின் கூற்றை தற்போதைய சமூகப் பேரழிவு பொய்யாக்குகிறது. மின்வெட்டுகள், சுகாதார அமைப்பின் வீழ்ச்சி மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கியூபர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது ஆகியவை இந்த பேரழிவுத் தோல்விக்கு சாட்சியமளிக்கின்றன. சோவியத் மானியங்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட முழுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, கியூபர்கள் மூன்றில் ஒரு பங்கு குறைவான கலோரிகளுடன் உயிர்வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட 1990-களின் சிறப்பு காலகட்டத்துடன் தற்போதைய நெருக்கடியைச் சாதகமாக ஒப்பிட்டு, இந்நெருக்கடியைக் குறைத்துக் காட்ட டயஸ்-கானெல் முயல்கிறார். ஆனால், கியூபாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று கியூபர்கள் வெளியேறி வருகிறார்கள் என்ற உண்மை அவரது இந்தக் கூற்றைப் பொய்யாக்குகிறது.

கியூபா புரட்சியானது, நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்மறையான வழியில் மூலோபாய ரீதியாக உறுதிப்படுத்துகிறது. வெகுஜன அணிதிரட்டல் நிபந்தனைகளின் கீழ், ஒரு குட்டி-முதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிக தீவிரமான தேசியமயமாக்கல்கள் கூட, ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற்கான ஜனநாயகக் கடமையைத் தீர்க்கக்கூட இலாயக்கற்று இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தலே தங்களது தோல்விக்குக் காரணம் என்று காஸ்ட்ரோயிசத்தின் ஆதரவாளர்கள் வாதிடலாம், ஆனால் அந்த வாதம் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் அவசியம் என்ற கருத்தையே மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று, கியூபாவின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை ஹவானாவில் உள்ள சி.ஐ.ஏ இயக்குநருடன் காஸ்ட்ரோ குடும்பத்தின் உள்வட்டம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், புலம்பெயர்ந்த முதலாளித்துவ முதலீட்டாளர்களை மீண்டும் தீவிற்கு அழைப்பதன் மூலமும், அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலமும், “இரு நாடுகளின் பாதுகாப்பை” மேம்படுத்த அமெரிக்க உளவு அமைப்புகளுடன் ஒத்துழைக்க ஆர்வம் காட்டுவதன் மூலமும், அந்த தேசியவாத மூலோபாயத்தின் திவால்நிலை முற்றிலும் முழுமையடைந்துள்ளது.

கியூபத் தலைமையின் முதலாளித்துவ வர்க்கத் தன்மையே, அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஆளும் வர்க்கத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அவர்களை கிளர்ந்தெழுமாறு உண்மையான அழைப்பை விடுப்பதில் இருந்து அதைத் தடுக்கிறது. அமெரிக்காவில் கீழிருந்து எழும் இத்தகையதொரு இயக்கம், கியூபாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ மற்றும் இராணுவ மேல்தட்டு வர்க்கத்தினரின் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, அங்கிருக்கும் தொழிலாளர்களின் இயக்கத்தை நிச்சயமாகத் தூண்டும். காஸ்ட்ரோவின் தலைமை வாஷிங்கடனைக் கண்டு அஞ்சுவதை விட தனது சொந்த தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அதிகம் அஞ்சுகிறது. இதனால்தான், சர்வதேச வர்க்க ஒற்றுமையின் பெயரால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்குப் பதிலாக, கியூபாவிற்கு எதிரான சி.ஐ.ஏ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் பயங்கரவாதச் சதிகளுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய, மியாமிக்கு நாடுகடத்தப்பட்ட “குசானோ” முதலாளித்துவ வர்க்கத்தினரை அது சாத்தியமான முதலீட்டாளர்களாக ஈர்க்க முயல்கிறது.

தொடரும்.

Loading