Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

அறிமுகம்

1-1. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International -ICFI), தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றது. காலத்துக்கு ஒவ்வாத முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி, சமுதாயத்தை சோசலிசத்தின் அடிப்படையில் மீளக் கட்டியெழுப்புவதற்காக, தொழிலாளர்களை அணிதிரட்டவும், அவர்களுக்கு கல்வியூட்டவும் மற்றும் அனைத்துலக ரீதியில் ஐக்கியப்படுத்தவும் செயற்படும் ஒரே ஒரு அரசியல் கட்சி இது மட்டுமேயாகும்.

1-2. 1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்த நிலையின் பின்னர், 2008ல் பூகோள நிதி நெருக்கடியுடன் தொடங்கிய தற்போதைய மாபெரும் பொருளாதார பொறிவின் தோற்றம், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைவதை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஒரு பக்கம் அதன் சர்வதேச எதிரிகளைக் கீழறுப்பதின் மூலமும், மறு பக்கம், தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை திணிப்பதன் மூலமும் தனது நிலையை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. இதில் முதலாவது முயற்சி, பெருமளவில் பூகோள பதட்ட நிலைமைகளையும் முரண்பாடுகளையும் மற்றும் யுத்தத்தை நோக்கிய நகர்வுகளையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கின்ற அதேவேளை, பின்னையது, வர்க்கப் போராட்டத்துக்கு எரியூட்டுவதோடு ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக் காலகட்டத்தையும் திறந்து விடுகின்றது.

1-3. பூகோள நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் இதயத்தில், அதாவது அமெரிக்காவில் மையங்கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் துரித வீழ்ச்சியும், ஆசியாவில் புதிய சக்திகளின், விசேடமாக சீனாவின் எழுச்சியும், ஏகாதிபத்திய உட் பகைமைகளை தீவிரமாக கூர்மையடையச் செய்துள்ளது. இராணுவபலத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக தனது பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எடுக்கும் ஈவிரக்கமற்ற முயற்சிகள், மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் எரிசக்தி-வளம் மிக்க பிராந்தியங்கள் மீது, ஒரு அமெரிக்க அதிகாரக் கோட்டையை ஸ்தாபித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டு, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள் உட்பட, ஒரு தொடர்ச்சியான யுத்தங்களை ஏற்கனவே தோற்றுவித்துள்ளது. இத்தகைய மோதல்கள், முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை முரண்பாடுகளில், அதாவது உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான மற்றும் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே தோன்றுகின்றன. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தால், இந்த முரண்பாட்டின் தீவிரத்தன்மை ஒரு புதிய மட்டத்துக்கு வளர்ச்சிகண்டுள்ளது.

1-4. கடந்த இரு தசாப்தங்களாக, சீனாவின் வளர்ச்சியும் மற்றும் அதைவிட கொஞ்சம் குறைந்த மட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியும், உலக அரசியலின் ஈர்ப்பு மையத்தை தீவிரமாக ஆசியாவை நோக்கி மாற்றியமைத்துள்ளது. 1990ல் உலகின் 10வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்த சீனா, 2010ல் ஜப்பானையும் முந்துமளவு வளரச்சியடைந்ததோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரமாக அமெரிக்காவுக்கு அடுத்த நிலையை எட்டியுள்ளது. சீனா அதனது வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு தேவையான பெருந்தொகையான மூலப் பொருட்களை, விசேடமாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யத் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. சீனா தனது கடற் பாதையை தக்க வைத்துக்கொள்வதற்காக, ஒரு ஆழ்கடல் கடற்படையை கட்டியெழுப்புவதானது, அதனை இந்திய பெருங்கடலில் ஜப்பான், இந்தியா மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவுடன் போட்டிக்கு கொண்டுவந்துள்ளது. இலங்கை உட்பட ஆசியாவின் ஒவ்வொரு மூலையும், ஈவிரக்கமற்ற அழிவுகரமான மோதல்களுக்கு வழிவகுக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கு இடையிலான பகைமையில் சிக்கிக்கொள்கின்றன. அட்லான்டிக் மற்றும் பசுபிக் பெருங்கடலில் குவிமையப்படுத்தப்பட்டிருந்த நடந்து முடிந்த இரு உலக யுத்தங்கள் போலன்றி, இந்த புதிய மோதல்களுக்கான பூகம்ப முனையாக இந்து சமுத்திரம் விளங்கலாம்.

1-5. ஆசியா, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைகளுக்கு மட்டுமன்றி சமூகப் புரட்சிகளுக்கும் கூட ஒரு பரந்த களமாக மாறும் தன்மையை கொண்டிருக்கிறது. பொருளாதார விரிவாக்கம் பிரமாண்டமான புதிய தொழிலாள வர்க்கப் படையை உருவாக்கிவிட்டுள்ளது. சீனா மட்டும் 400 மில்லியன் நகர்ப்புற தொழிலாளர் படையை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான சமூகப் பிளவு விரிவடைந்து வருகின்றது. உலகில் இரண்டாவதாக அதிகளவு பில்லியனர்களைக் கொண்டுள்ள சீனாவிலும், குறைந்த பட்சம் 250 மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். உலகில் மிகப் பெருமளவு வறுமை தலைவிரித்தாடும் இந்தியாவில், வெறுப்பூட்டும் வகையில் செல்வம் குவிக்கப்படுகின்றது. இத்தகைய எண்ணிலடங்கா சமூக முரண்பாடுகளை முதலாளித்துவத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாது. அரசாங்கங்கள் நெருக்கடியின் செலவுகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், 2008ல் இருந்து வாழ்க்கைத் தரம் துரிதமாக சீரழிந்து வருவதானது ஐரோப்பாவிலும், துனீசியா, எகிப்து மற்றும் மத்திய கிழக்கிலும் மில்லியன் கணக்கானவர்களை ஏற்கனவே போராட்டத்துக்குள் தள்ளியுள்ளது. இது ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களை, கௌரவமான வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடவும், அதேபோல் இராணுவவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிராகப் போராடவும் தள்ளிச் செல்லும். அத்தகைய போராட்டங்கள், திவாலான இலாப அமைப்பு முறையையும் காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறையையும் தூக்கி வீசி, உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிக்க, தொழிலாள வர்க்கம் தொடுக்கும் ஒரு பூகோள எதிர்த் தாக்குதலாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

1-6. எவ்வாறெனினும், தொழிலாள வர்க்கத்தால் தன்னியல்பாக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதே, 20ம் நூற்றாண்டின் கசப்பான படிப்பினையாகும். தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான வரலாற்று அனுபவங்கள் அனைத்தையும் உட்கிரகித்துக்கொள்வதன் அடிப்படையில், புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அதற்கு அவசியமாக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஸ்ராலினிசத்துக்கும் மற்றும் சகல வடிவிலான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிசத்துக்கான நீண்டகாலப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளின் உருவடிவாகத் திகழ்கிறது. இந்தச் செழுமையான மரபு, சோ.ச.க. (அமெரிக்க) ஏற்றுக்கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேச அடித்தளங்களில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைகளின் அடித்தளங்களும் உள்ளடங்கியுள்ளன.