Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் சீரழிவு

19-1. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி பாலசூரியாவுக்கும் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர் ஹீலிக்கும் இடையிலான உடன்பாடின்மைகள், ஒரு பரந்த சர்வதேச நிகழ்வுப்போக்கின் அறிகுறியாக இருந்தது. அமெரிக்காவில் தொழிலாளர் கழகம், 1971 செப்டெம்பரில் ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச தொழிலாளர் கழகம் (புன்ட் சோசலிஸ்ட் ஆர்பைட்டர்) மற்றும் 1972 நவம்பரில் ஆஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச தொழிலாளர் கழகம் போன்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பகுதிகள், 1950கள் மற்றும் 1961-63ல் நடந்த பிளவுகளின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டன. ஆயினும், அதே சமயம், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் முன்னதாய் 1950களிலும் 1960களின் முற்பகுதியிலும் அது பாதுகாத்துப் போராடிய கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்றுகொண்டிருந்தது.

19-2. 1966ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது மாநாட்டை அடுத்து அதன் பிரெஞ்சுப் பகுதியான கம்யூனிச சர்வதேச அமைப்பு (Organisation Communiste Internationale -OCI) – அச்சமயம் பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கழகத்துக்கு ஆதரவளித்து வந்தநிலையில்- நான்காம் அகிலத்தை “மீள்கட்டுமானம் செய்ய” வேண்டிய தேவையை மீண்டும் எழுப்பத் தொடங்கியது. இந்த வாசகத்துக்குப் பின்னால், பப்லோவாதத்துக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டங்களின் அடிப்படை முக்கியத்துவத்தை மறுத்த மத்தியவாத அமைப்புகளுக்கு, பிரான்சின் கம்யூனிச சர்வதேச அமைப்பு அடிபணிவது வெளிச்சத்துக்கு வந்தது. இதன் போக்கை சோசலிச தொழிலாளர் கழகம் எதிர்த்த போதிலும், அதே வர்க்க அழுத்தங்களுக்கு அது கீழ்படிந்தது. “நான்காம் அகிலத்தின் பிரச்சினைகள்” என்ற தனது 1966 ஆவணத்தில், பிரிட்டனில் ஒரு பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்புவதே சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரதான கடமை, அது உலகம் பூராவும் உள்ள ஏனைய நாடுகளில் உள்ள புரட்சியாளர்களை உற்சாகப்படுத்தி அவ்வாறே செயற்படத் “தூண்டும்” என ஜெரி ஹீலி வாதிட்டார். இந்த தேசியவாத நிலைப்பாடு நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமான சர்வதேசியவாதத்தில் இருந்து, அதாவது சகல வடிவிலுமான தேசிய சந்தர்ப்பவாதங்களுக்கு எதிரான ஒரு உலகக் கட்சியின் சர்வதேசியப் போராட்டத்தின் பாகமாக மட்டுமே தேசியப் பகுதிகளை கட்டியெழுப்ப முடியும் என்பதில் இருந்து, கணிசமாக பின்வாங்குவதைக் குறித்தது:

19-3. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் தூர விலகியமை, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்க அது எடுத்த நடவடிக்கைகள் பலவீனமடைய வழிவகுத்தது. பின்னர் டேவிட் நோர்த் எழுதியவாறு: “1960களின் பிற்பகுதியில் வியட்னாம், சீனா மற்றும் பொதுவில் பின்தங்கிய நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் பற்றிய [மைக்] பண்டாவின் கட்டுரைகள், நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் இரு மையக் கொள்கைகளை நிராகரித்தது: (1) பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஊடாக மட்டுமே பூர்த்தி செய்யப்பட முடியும், மற்றும் (2) சர்வதேசத் தொழிலாள வர்க்கம் உலகம் பூராவும் முதலாளித்துவத்தை தூக்கி வீசாமல், சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றது. பண்டாவின் எழுத்துக்கள், காலனித்துவ முதலாளித்துவத்துக்கு ஒரு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஸ்ராலினிச இரண்டு-கட்டப் புரட்சி தத்துவத்தை ஏற்றுக்கொள்கிற பண்பைப் பெற்றது.”[45]

19-4. 1967 ஜனவரியில் நியூஸ் லெட்டரில் எழுதும் போது, உயர்ந்த பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி எனச் சொல்லப்படுவதற்கு மாவோ விடுத்த அழைப்பை விமர்சனமின்றி பாராட்டிய பண்டா தெரிவித்ததாவது: “செம்படைகளின் ஆதரவுடன் மாவோவின் தலைமை இந்தக் குழுவுக்கு எதிராக ‘சரிநிகர் தத்துவம்’ என்ற பதாகையின் கீழ் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொத்துடமையாளர்களுக்கு எதிராகவும், எதேச்சதிகார சக்திகளுக்கு எதிராகவும் மற்றும் சீனாவில் ஜனநாயகத்துக்காக; விமர்சிப்பதற்கான உரிமை மற்றும் விமர்சனங்களின் படி செயற்படுவதற்கான உரிமை; மக்கள் உண்மையில் தமது கொள்கைகள் தொடர்பாக என்ன நினைக்கின்றார்கள் என்பதை நீதிபதிகளுக்கும், பொலிசுக்கும் மற்றும் அமைச்சர்களுக்கும் சொல்லுவதற்கான உரிமை என்பவற்றுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தமது பாதையை மேம்படுத்தாவிட்டால் அவர்களைத் தூக்கிவீசுவதற்கான உரிமையையும் பாதுகாப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.[46] 1966ல் மாவோ கலாச்சாரப் புரட்சியை முன்னெடுத்ததற்கும், சரிநிகர் தத்துவத்துக்கும் அல்லது அவ்விடயத்தில், கலாச்சாரத்துக்கும் அல்லது தொழிலாள வர்க்கத்துக்கும் கூட எந்தத் தொடர்பும் கிடையாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் கன்னை போராட்டத்தின் பாகமாக, தனது விவசாய ஜனரஞ்சகவாதத்தின் அடிப்படையில் செம்படையை அவர் அணிதிரட்டியிருந்தார். தொழிலாளர்கள் ஈடுபாடுகொண்ட உடனேயே, மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஷங்ஹாயில் ஒரு கிளர்ச்சி எழுச்சி வெளித்தோன்றிய போது, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையிட்டு எப்போதும் அச்சமுற்றவரான மாவோ, எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இராணுவத்தின் பக்கம் துரிதமாகத் திரும்பினார்.

19-5. “வியட்னாம் புரட்சியும் நான்காம் அகிலமும்” என்ற தலைப்பில் 1968ல் நான்காம் அகிலம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில், ஹோ சி மின் வியட்னாமில் முன்னெடுத்திருந்த “நீண்டகால மக்கள் யுத்தத்தை” பண்டா புகழ்ந்து பேசியதோடு, “இன்று ‘கெரில்லாப் போராட்டத்தின்’ முதன்மையான நிபுணர்” என மாவோவையும் பாராட்டினார். பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்துக்கு எழுதிய இலங்கையின் விரோதய குழு, இவ்வாறு மாவோவாதத்தை புகழ்வது, ஆசியா பூராவும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தவறாக மட்டுமே வழிநடத்தும் எனச் சுட்டிக்காட்டியிருந்தது. நான்காம் அகிலம் சஞ்சிகையின் அடுத்த வெளியீடு, ஒரு சிறிய குறிப்பை வெளியிட்டிருந்தது. அது அந்த ஆசிரியர் தலையங்கம் மைக் பண்டாவின் “தனிப்பட்ட கருத்து” என அறிவித்திருந்த போதிலும், அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் வைக்கவில்லை. பண்டாவின் மாவோ-சார்பு நிலைப்பாடு அவ்வண்ணமே இருக்க அனுமதித்த சோசலிச தொழிலாளர் கழகத்தின் போக்கு, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராக 1961-63 காலத்தில் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை கொள்கை ரீதியில் பாதுகாத்ததில் இருந்து கவலைக்கிடமாக பின்வாங்குவதையும் காஸ்ட்ரோ, மாவோ மற்றும் ஹோ சி மின்னின் “ஆயுதப் போராட்டங்களை” பப்லோவாதிகள் மேன்மைபடுத்துவதை ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது.

19-6. நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் இருந்து பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் தூர விலகியமை, பின்தங்கிய முதலாளித்துவ நாடு ஒன்றில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேற்கொண்ட அரசியல் வேலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் சம்பந்தமாக 1971ல் சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு இடையில் கூர்மையான வேறுபாடுகள் தோன்றின. பங்களாதேஷ் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவளிப்பது என்ற பெயரில், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவத்தின் தலையீட்டுக்கு “விமர்சன ரீதியான ஆதரவு” கொடுத்து சோசலிச தொழிலாளர் கழகம் அனைத்துலகக் குழுவின் பெயரில் அறிக்கையொன்றை வெளியிட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதற்கு நேர் மாறாக, “தொழிலாள வர்க்கத்தின் பணி, யுத்தம் நடத்தும் முதலாளித்துவத்தின் ஏதாவதொரு பிரிவுக்கு ஆதரவு கொடுப்பதல்ல, மாறாக, வர்க்க எதிரியின் முகாமிலான ஒவ்வொரு மோதலையும் சுதந்திர சோசலிசக் குடியரசுகளை அமைக்கும் முன்னோக்குடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பயன்படுத்திக் கொள்வதாகும். சுதந்திர சோசலிசக் குடியரசுகளை அமைப்பதன் மூலம் மட்டுமே, துணைக்கண்டத்தில் உள்ள மில்லியன் கணக்கான உழைப்பாளிகளின் சமூக மற்றும் தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியும்” எனப் பகிரங்கமாக பிரகடனம் செய்திருந்தது.[47]

19-7. இன்னமும் அரச ஒடுக்குமுறை நிலைமையின் கீழ் வேலை செய்துகொண்டிருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்திய இராணுவத் தலையீட்டுக்கு எதிரான அதனது அறிக்கையை வெளியிட்டு ஒரு வாரத்தின் பின்னரே, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் “விமர்சனபூர்வமான ஆதரவை” வழங்கி அறிக்கை விட்டிருந்ததைப் பற்றி அறிந்துகொண்டது. உடனடியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் கிளீவ் சுலோட்டருக்கு எழுதிய கடிதத்தில் பாலசூரியா தெரிவித்ததாவது: “இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தை எதிர்க்காமல், வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் சோசலிச அடித்தளங்களில் இந்தியாவை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதும் சாத்தியமற்றது. இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தானுக்குள்ளும் யுத்தத்தை எதிர்க்காமல், இந்திய துணைக்கண்டத்தில் பல மக்களின் சுய-நிர்ணய உரிமையைக் காக்கக்கூடிய ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச இந்தியாவைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தானது.”[48] இந்திய இராணுவத் தலையீட்டுக்கான நோக்கம், நிச்சயமாக கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை ஐக்கியப்படுத்துவதற்கான புரட்சிகர போரட்டத்தை நசுக்குவதும், 1947-48ல் ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்கு அரச அமைப்பு முறையைப் பாதுகாப்பதுமே ஆகும், என பாலசூரியா சுட்டிக்காட்டினார்

19-8. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டுக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான எதிர்ப்பை தெரிவித்த பாலசூரியா, அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதோடு குறிப்பிட்ட பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் சொந்த அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறது என விளக்கிய அவர் எழுதியதாவது: “அனைத்துலகக் குழுவின் அறிக்கையை பாதுகாப்பது கடினமானது என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. இருந்தபோதிலும் அகிலத்துக்குள்ளான அரசியல் தெளிவு தான் எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் கொண்டதாகும், ஏனென்றால் அகிலத்தைக் கட்டியெழுப்பப் போராடாமல் ஒரு தேசியப் பகுதியை கட்டியெழுப்புவது சாத்தியமற்றது.”.[49] ஆயினும், ஒரு சர்வதேசக் கலந்துரையாடலை தொடங்குவதற்கு மாறாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எழுதிய கடிதத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளுக்கு பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் விநியோகிக்காததோடு அது மேலும் மேலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தனிமைப்படுத்தத் தொடங்கியது.

19-9. இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தை சூழவுள்ள அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சோசலிச தொழிலாளர் கழகம் மறுத்தமை, ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்தில் இருந்து பரந்தளவில் தூரவிலகுவதன் பாகமாக இருந்தது. 1971 நவம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மற்றைய ஒரே பகுதியாக இருந்த பிரான்சின் கம்யூனிச சர்வதேச அமைப்பு உடன் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் பிளவை அறிவித்தது. கம்யூனிச சர்வதேச அமைப்பு மற்றும் அதன் அரசியலை மத்தியவாதம் என சோசலிச தொழிலாளர் கழகம் குணாம்சப்படுத்தியது சரியானதாக இருந்த அதேவேளை, கீழமைந்திருந்த அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்த சோசலிச தொழிலாளர் கழகம் எந்தவொரு முயற்சியும் எடுக்காததோடு, அதற்குப் பதிலாக, அந்தப் பிளவு “மார்க்சிச தத்துவம்” சம்பந்தமாக ஏற்பட்டது என வலியுறுத்தியது. பின்னர் டேவிட் நோர்த் எழுதியதாவது: “1971 இலையுதிர் காலத்தில் பிரான்சின் கம்யூனிச சர்வதேச அமைப்புடனான திடீர் பிளவு, ‘பிரிட்டனில் புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்பியதன் அனுபவம், வேலைத் திட்டம் மற்றும் கொள்கை சம்பந்தமான பிரச்சினைகளை விட கருத்தியல்வாத வழியிலான சிந்தனைக்கு எதிரான மிகவும் ஆழமான மற்றும் கடுமையான போராட்டம் அவசியம்’ என்பதை வெளிப்படுத்தியது, என வாதிடுவதற்கு [கிளீவ்] சுலோட்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.... வேலைத்திட்டத்தின் ஊடாகவே மார்க்சிசத் தத்துவம் அதன் வெளிப்பாட்டைக் காண்கின்றது, அந்த வேலைத்திட்டமே புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புகிறது என ட்ரொட்ஸ்கி எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சுலோட்டரோ, வேலைத்திட்டத்துக்கு எதிராக தத்துவத்தை மேலே நிறுத்தி, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தினால் உருவாக்கப்பட்ட கட்சிகளின் பெறுமதி மற்றும் அதன் தாக்குப்பிடிப்பு நிலை இரண்டையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.”[50]

19-10. 1973 நவம்பரில் சோசலிச தொழிலாளர் கழகம், தொழிலாளர் புரட்சிக் கட்சியாக (WRP) மாற்றம் செய்யப்பட்டதில் அதன் அரசியல் பின்னடைவு வெளிப்படுத்தப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் எந்தவொரு கலந்துரையாடலோ அல்லது அவசியமான எந்த வேலைத்திட்ட தெளிவுமோ இல்லாமல், பிரிட்டனில் அபிவிருத்தியடைந்து வந்த டோரி-எதிர்ப்பு இயக்கத்தை நோக்கி நோக்குநிலை பெற்ற ஒரு தேசியத் தந்திரோபாயத்தின் அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. அதனையடுத்து பிரிட்டனில் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அடிபணிந்தமை, அது நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முழுமையாக கைவிட்டு ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை காட்டிக்கொடுத்ததுடன் கைகோர்த்து நடந்தது.


[45]

www.wsws.org தமிழ்/நூலகம்/நாம் காக்கும் மரபியம் (The Heritage We Defend, p. 423.)

[46]

அதே நூல், பக்கம் 425

[47]

Fourth International, Volume 14, No. 1, March 1987, p. 37.

[48]

அதே சஞ்சிகை, பக்கம் 42.

[49]

அதே சஞ்சிகை, பக்கம் 43.

[50]

ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும், டேவிட் நோர்த், www.wsws.org, தமிழ், நூலகம்