ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

44. 1953 ஆம் ஆண்டில் நான்காம் அகிலத்தினுள் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியை எதிர்த்துப் போராட அனைத்துலகக் குழு அமைக்கப்பட்ட பொழுது, ''பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசத்தின்'' (Orthodox Trotskyism) வேலைத்திட்டத்திற்கு எதிரான திருத்தல்வாதத் தாக்குதல்களை எதிர்த்து சர்வதேச வேலைத்திட்டம் ஒன்றைத் தொடுக்கும்படி கனனுடைய பகிரங்கக் கடிதம் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. அது மார்க்சிசத்திற்கும், பப்லோவாதத்திற்கும் இடையிலான பிளவு சமரசத்திற்கு சாத்தியமில்லாத அளவு ஆழமானது என்று வலியுறுத்தியது. பப்லோவாதிகளின் சந்தர்ப்பவாதத் தத்துவங்களும், அரசியலும் நான்காம் அகிலத்தினுள் வெற்றி ஈட்டுமாயின் சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தினுள் ட்ரொட்ஸ்கிசம் ஒரு இயக்கபூர்வமான புரட்சிகர சக்தியாக இருப்பது கலைத்து அழிக்கப்படும் என்று கனன் எச்சரிக்கை செய்தார்.

45. ஆனால் சில வருடங்களினுள் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைமை பப்லோவாதத்திற்கெதிரான போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, 1953ம் ஆண்டில் பிளவிற்கு வழிகோலிய வேலைத்திட்டப் பிரச்சினை சம்பந்தமாக எந்தவித கலந்துரையாடலும் இன்றி, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மீண்டும் இணைவது பற்றி வலியுறுத்த ஆரம்பித்தது. இந்த கோட்பாடற்ற ரீதியில் மீண்டும் இணைவதற்கான யோசனை -இது கோட்பாடற்றது ஏனென்றால், அது திட்டவட்டமாக 1953ல் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்கள் தலைதூக்காது நசுக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது- அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் பகுதிகளினாலும் சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள் உள்ள ஒரு சிறுபான்மையினராலும் எதிர்க்கப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு எதிராக ஜூன் 1963ல் மீண்டும் மறு இணைப்பு செய்யப்பட்டது.

46. அனைத்துலகக் குழு அமைத்து 35 வருடங்களுக்குப் பின்னும், சோசலிசத் தொழிலாளர் கட்சி பப்லோவாதத்துடனான மறு இணைப்பின் கால்நூற்றாண்டுக்குப் பின்னரும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் அடிப்படை ரீதியான வேலைத்திட்ட விளைபயன்களைப் பற்றி, ஒரு முழுமையான கணக்கெடுப்பு ஒன்றை வகுக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் சந்தர்ப்பவாதத்தின் தன்மைக்கேற்ப, பப்லோவாதம் ட்ரொட்ஸ்கிசத்துடனான அதன் வேறுபாடுகளை ஒரு ஒழுங்காக எடுத்துக்கூற ஒருபொழுதும் முற்படவில்லை. ஆனால் அதன் திருத்தல்களின் ஒட்டுமொத்தம், குறிப்பாக ட்ரொட்ஸ்கிசத்தினதும், பொதுவாக மார்க்சிசத்தினதும் அடிப்படைக் கோட்பாடுகள் அத்தனையும் முற்றுமுழுதாக நிராகரிப்பதை பிரதிநிதித்துவம் செய்கின்றது. பப்லோவாதிகள் நான்காம் அகிலம் அமைக்கப்பட்டதன் அரசியல் அத்திவாரங்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளார்கள். அதாவது அவர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வரலாற்று ரீதியானதும், சமூக ரீதியானதுமான செயற்பாடு பற்றி ட்ரொட்ஸ்கியின் ஆய்வையும் அவரது நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் நிராகரித்துள்ளார்கள். இன்று பப்லோவாத தத்துவங்களை தீர்க்கமான வரலாற்று அனுபவங்களின் வெளிச்சத்தில் கணிப்பிடுவது சாத்தியமாக இருக்கிறது.