ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

சோவியத் யூனியன் இன்று

59. அதிகாரத்துவ சுயசீர்திருத்தத்தின் நீண்ட நிகழ்வுப்போக்கில் புதிய மற்றும் உச்சக்கட்டத்திற்கு அப்பால், பெரஸ்துரோய்கா மற்றும் கிளாஸ்நோஸ்த் அந்த வகையான முட்டாள்களின் கையிலுள்ள பித்தளையைத் தங்கமென ஆர்வத்துடன் உலகெங்கிலும் உள்ள சந்தர்ப்பவாதிகளால் தழுவிக் கொள்ளப்படுகிறது. சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் சோவியத் யூனியனுக்குள்ளேயே அக்டோபர் புரட்சி வெற்றிகளை தாக்கும் வண்ணம், ஏகாதிபத்தியத்துடனான அதிகாரத்துவத்தின் கூட்டை பண்பியல் ரீதியாக ஆழப்படுத்துவதை இது பிரதிநிதித்துவம் செய்கிறது. அதிகாரத்துவ ஜாதி, தனது ஆட்சிக்கான உறுதியான சமூக அடித்தளங்களை நிர்மாணிப்பதற்கான அதாவது அதனையே ஒரு உண்மையான ஆளும் வர்க்கமாக உருமாற்றிக்கொள்ளும் முயற்சிகள் கோர்பச்சேவினால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளிலும், அவை மிகவும் உறுதியானதாகவும் மற்றும் நனவாகவும் வெளிப்படுகிறது.

60. ஸ்ராலினிசம் நீண்டகாலத்துக்கு முன்பே உலகப் புரட்சி வேலைத்திட்டத்தை நிராகரித்து விட்டது. ஆனால் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் பொருட்டு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் சோவியத் யூனியன் பெயரளவில் இனங்காட்டிக் கொள்வதைப் பேணுவது அவசியமெனக் கண்டது, சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்துடன் நெருக்கமான உறவுகளைப் பெறவேண்டி, கோர்பச்சேவ் அக்டோபர் மரபுகளுடனான இந்த பெயரளவிலான தொடர்பினையும் கூட நிராகரித்து விட்டார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் (C.P.S.U.) 27வது காங்கிரஸ், சமாதான சகவாழ்வு ஒரு ''திட்டவட்டமான வர்க்கப் போராட்டம்'' என்ற நீண்ட காலக் கோரிக்கையையும் உத்தியோகபூர்வமாக நிராகரித்ததோடு, யுத்தத்தின் வெடிப்பிலிருந்து எழும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர எழுச்சிகள் தொடர்பான குறிப்புக்களையும் அதனுடைய வேலைத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. ஜூலை 1988ல் வெளிவிவகாரக் கொள்கை நிபுணர்கள் மாநாட்டில், ''பகைமையுடைய இரு அமைப்புக்களுக்கிடையிலான போராட்டம் இந்த சகாப்தத்தின் ஒரு தீர்மானிக்கும் போக்கை இனிக் கொண்டிருக்காது'' என்று சோவியத் வெளிவிவகார அமைச்சர் எட்வேட் செவர்நட்சே கூறினார். மற்றும் சுற்றுப்புறச் சூழல் கேடுகள், வறுமை, போரின் பிரச்சனைகள் ஆகியவை முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டத்துடன் சம்பந்தமில்லாததுடன் அதற்கும் மேலான முக்கியத்துவம் உடையதாகி விட்டன என்றும் அவர் வலியுறுத்தினார்.

61. கோர்பச்சேவ் தனது ''பெரஸ்துரோய்கா'' என்ற நூலில் ''வர்க்க நலன்களுக்கு மேலாக அனைத்து மனித இனத்தினதும் பொது நலன்களுக்கு முன்னுரிமை'' என்பதில் தனது நம்பிக்கையை உலகுக்கு பிரகடனம் செய்கிறார். இந்த சொற்றொடர், கோர்பச்சேவின் கொள்கைகளை வழிநடத்தும் முழுமையான முதலாளித்துவ வர்க்கக் கண்ணோட்டத்தினை அம்பலமாக்குகின்றது. தம்மேல் தொழிலாள வர்க்கத்தினால் திணிக்கப்பட்ட வரையறைகளில் இருந்து முழுமையாய் விடுபடுவதற்கான அதிகாரத்துவத்தின் தவிப்பினை இது காட்டுகின்றது. ''வர்க்க நலன்களை'' வெறுமனே பிரதிநிதித்துவம் செய்யும் அரச சொத்துக்களைப் பேணுவதற்கு எதிராக கோர்பச்சேவ் ''அனைத்து மனித இனத்தினதும்'' நலனின் பேரில் தனிச்சொத்துடமைக்கும் தனிப்பட்ட சொத்துத் திரட்சிக்கும் எதிரான சட்டங்களை நீக்கிவிட வாதிட்டு வருகின்றார்.

62. தசாப்தங்களாக அதிகாரத்துவம் பறித்தெடுத்த அரசியல் அதிகாரம் அதன் சலுகைகளுக்கு அரணாக சேவை செய்தது. அதிகாரத்துவ அபகரிப்பாளர்கள், இன்று உண்மையான சோவியத் ஜனநாயகத்தை யதார்த்தமாக்கும் பொருட்டு அந்த அதிகாரங்களைக் கைவிட்டு விட்டு வருகின்றார்கள் என தாத்பரியமாக (Seriously) நம்புவதானது மார்க்சிசத்தையே அடியோடு நிராகரித்து விடுவதாகும். அதிகாரத்துவ பெருக்கமும் அதன் எதேச்சாதிகாரமும், 1917 அக்டோபரின் பின்னர் நிலைநாட்டப்பட்ட உற்பத்திச் சாதனங்களில், சமூக சொத்துடமைக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொழிற்துறைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை முதலாளித்துவ முறையில் விநியோகம் செய்வதற்கும் இடையேயான குரோதத்துடன் பிணைந்துள்ளது. அதிகாரத்துவ எதேச்சாதிகாரத்தினை சமாதான வழியில் இல்லாதொழிப்பது என்பது, இந்தக் குரோதம் தீர்க்கப்பட்டுவிட்டதைக் குறிக்கும். அதாவது உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது, அத்தகைய ஒரு உச்சகட்டத்தை அடைவதன் மூலம் சமத்துவமின்மை தாண்டப்பட்டு, முதலாளித்துவ விநியோகத்தை அமுல் செய்வதற்காக, அரச நிர்ப்பந்தத்தினைப் பயன்படுத்துவதற்கு எவ்விதமான புறநிலை அடிப்படையும் இனி இல்லை என்பதாகும். உண்மையில் அதுதான் நிலைமையாயின், ஸ்ராலின் - புகாரின் கோட்பாடான 'தனிநாட்டில் சோசலிசம்' நிரூபிக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

63. ஆனால் முதலாளித்துவ விநியோக முறைகளை வென்றதற்கு வெகு தூரத்துக்கு அப்பால், சோவியத்தின் சீர்திருத்தம் இன்னும் பெருமளவு சமூக சமத்துவமின்மையை வேண்டி நிற்பதாய் கோர்பச்சேவ் தலைமை வலியுறுத்துகிறது. 1917ம் ஆண்டின் சோசலிச மரபிற்கு சோவியத் பாட்டாளி வர்க்கம் காட்டும் ஆழ்ந்த விசுவாசம், சமத்துவப் போக்குகளைச் சாடும் கோர்பச்சேவின் சித்தப் பிரமையான அதிகமான கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. 1988 பெப்ரவரி 18 ல் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முன் 'புரட்சிகர பெரஸ்துரோய்கா' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கோர்பச்சேவ் ''இன்று எவரும் அரசின் 'தருமத்தில்' தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது'' என எச்சரித்தார். மற்றும் தனியார் செல்வத்தின் பெருக்கம் சம்பந்தமாக தொழிலாளர்களின் எதிர்ப்பின் மீது கோபாவேசத்தை வெளியிடும் கோர்பச்சேவ், ''மட்டுப்படுத்தும் போக்குகளை ஒழித்துக் கட்டுவதான பிரச்சனைகளில் நாம் உண்மையான மனப்பூர்வத்துடன் இறங்கவேண்டும். இது பெரிதும் முக்கியமான சமூக, பொருளாதார மற்றும் தத்துவார்த்த விவகாரமாகும். அனைத்து நோக்கங்களுக்கும், இலக்குகளுக்கும் மட்டப்படுத்தும் போக்கானது, பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி மக்களின் நல்லொழுக்கங்களிலும் மற்றும் அவர்களின் சிந்தனை, நடவடிக்கை பற்றிய முழு வழிமுறைகளிலும் ஒரு அழிவுகரமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது'' என்று கூறுகிறார். (சோவியத் செய்தியிலிருந்து மறு பிரசுரிப்பு 1988 மார்ச் 31)

64. ''பெரஸ்துரோய்காவின்'' சமூக பொருளாதார உள்ளடக்கத்தை ஆராயாமல், கோர்பச்சேவின் 'கிளாஸ்நோஸ்த்தின்' உண்மையான முக்கியத்துவத்தை தீர்க்கமாக மதிப்பிட்டுவிட முடியாது. ஹீலி போன்ற மார்க்சிசத்தின் ஓடுகாலிகள், அவர்களுக்குள் இத்தகைய ''சிறிய விபரங்களைப் பற்றி சட்டை செய்வதாய் இல்லை. ஆனால் கோர்பச்சேவ் ''அரசியல் புரட்சியை'' முன்னெடுத்துச் செல்வதாக ஹீலி வாதிடும் வேளை, விரும்பிய முடிவு காணத்தக்கவாறு சாதுரியமாக நிர்வகிக்கும் கோர்பச்சேவின், அதிகாரத்துவ ''ஜனநாயகமயமாக்கலின்'' பிரதான இலக்கு தொழிலாள வர்க்கத்தின் பிரதானமான சோசலிச வெற்றிகளின் மேல் தீர்க்கமான தாக்குதலுக்காக அதிகாரத்துவத்தின் அதிகூடிய சலுகை கொண்ட பிரிவினருக்குள்ளும், அறிவுஜீவிகள் மற்றும் பெரிய அளவிலான சிறு தொழில் அதிபர்கள் ஆகியோருக்குள்ளும் ஆதரவினைத் திரட்டுவதற்கே ஆகும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. கோர்பச்சேவின் முக்கிய பொருளாதார ஆலோசகர்களுள் ஒருவரான டட்டியானா சாஸ்லாவ்ஸ்கையா, திட்டமிடல் அடிப்படைக் கொள்கைகள், மற்றும் தொழிலாள வர்க்கம் சம்பந்தமான தனது வெறுப்பினை மூடிமறைக்க சிறிதளவே முயற்சிப்பவராவார். அவர் சோவியத் பொருளாதாரத்தை பரவலாக்குதல் மற்றும் தேசியமயமாக்கலை ஒழித்தல் ஆகியவற்றிலிருந்து ஆதாயமடையக்கூடிய சமூகக் குழுக்களைக் கொண்ட நீண்ட பட்டியலை தயார் செய்துள்ளார். அப்பெண்மணி எழுதியிருப்பதாவது, ''உற்பத்தி உறவுகளில் முன்னேற்றம் காண்பதில் வெற்றிகரமான நல்ல சிந்தனைமிக்க சமூக மூலோபாயம் இருப்பது அவசியம். ஒரு புறத்தில் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதில் மற்றும் நிர்வாக வழிமுறைகளை மாற்றி அமைக்கவும் தொடர்பான உண்மையான அக்கறை கொண்ட குழுக்களை உள்ளீர்க்கவும், மறுபுறத்தில் சிக்கலான பிரச்சினைகளில் முடிவெடுப்பதைத் தடைசெய்யும் குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்கவும் இலாயக்கானதாக இருக்கவேண்டும்'' என்கிறார்.

65. சோவியத் விவாதங்களில் ''பொருளாதாரத் துரிதமாக்கல்'' என்ற பதத்துக்கு ஒரு திட்டமான அர்த்தம் உண்டு; அதிகரித்த கூலி வேறுபாடுகளை ஊக்குவிப்பது மற்றும் வேலையின்மையை சட்டரீதியாக்கல், கடுமையான நிர்வாக முறைகளைப் பயன்படுத்துதலின் மூலம் ''தொழில் ஒழுங்குகள்'' ஊடாகவும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை இலக்காகக் கொண்ட நிர்வாக முறைகளையே அது அர்த்தப்படுத்துகிறது. கோர்பச்சேவின் காதாக இருக்கும் மற்றொரு முக்கியமான சோவியத் பொருளாதார நிபுணரான வசிலிசெலியுனின் எழுதியதாவது; ''(மேற்கில்) அவர்கள் வேலையின்மையைக் கொண்டிருக்கின்றனர். சொல்லின் முழு அர்த்தம் மேலதிக மக்கள் இருக்கின்றனர் ஆனால் மற்றொருபுறம் வேலைசெய்ய வேண்டியவர்களிடமிருந்து கடின உழைப்பு கறந்தெடுக்கப்படுகிறது. நாம் வேலையின்மையை மறந்துபோயிருக்கிறோம், ஆனால் குறித்த காலத்தில் அரைப்பகுதி பலத்தில் நாம் வேலை செய்வது நல்லதா? ''சோவியத் யூனியனில் இடம்பெறும் விவாதங்களை கவனமாக ஆராய்ந்த அமெரிக்க முதலாளித்துவ அறிஞர் ஒருவர் ''தீவிரவாத சீர்திருத்தவாதிகளில் ஒருவரான லியோனிட் அல்பாக்கின் கருத்துக்கள் பரந்த அளவில் சோவியத் பிரசுரங்களில் வெளியிடப்படுவதை கவனித்து அண்மையில் கருத்துத் தெரிவித்ததாவது ''நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய இரண்டும் ருசியின்மையைக் கொண்டிருந்தது அல்லது கொண்டிருக்கிறது. சோசலிசமே, இன்னும் நன்கு மனிதாபிமான மிக்க ஒழுக்க வடிவங்கள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவில்லை'' என்கிறார். (ஹேவட், சோவியத் பொருளாதாரத்தின் சீர்திருத்தம், வாஷிங்டன் 1988, பக்கம் 293- 294)

66. ஹேவட்டின்படி, ''வேலையின்மைக்குப் புறத்தே, கலந்துரையாடலுக்கு உள்ளாகியிருக்கும் முக்கிய பிரச்சினைகள், திவால் நிலைமை, வருமானத்தில் சமத்துவமின்மை மற்றும் -மிகவும் நெருக்கமான தொடர்புடைய விஷயமான- சோசலிச நாட்டில் தனியார் பொருளாதார நடவடிக்கைகளுக்கான உரிய பங்குபற்றியதாகும். உண்மையில் கோர்பச்சேவின் கொள்கைகள், திட்டமிட்ட பொருளாதாரத்தை ஒழித்தல், அரசு தொழிற்துறையின் பெரும்பகுதியை அழித்தல் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏகபோகத்தை ஒழித்தல் ஆகியவற்றுக்கான, சட்டரீதியான அடித்தளங்களை நிறுவியுள்ளது. அதேசமயம் சோவியத் யூனியனுள்ளே, உற்பத்திசக்திகளில் தனியார் உடைமையும், பரந்த அளவில் கூலி உழைப்பை மறு நிர்மானம் செய்வதும் அதிகாரத்துவத்தால் கொண்டுவரப்படுகின்றன.

67. 1988 மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டுறவுகள் சம்பந்தமான வரைவுச் சட்டம் முதலாளித்துவம் மீண்டும் தோன்றுவதற்கான தீர்க்கமான நிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ''கூட்டுறவுகள்'' எனப்படும் பதம் தனியார் கார்ப்பரேஷன்களுக்கான ஒர் நாசூக்கான பதமாகும். மற்றும் அவற்றின் தோற்றங்கள் பொருளாதாரத்தின் எல்லாத்துறைகளிலும் மிகத் தெளிவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு உடமையாளரின் ''சொத்து நலன்களைப்'' பேணுவதாக வரைவுச் சட்டம் மீண்டும் மீண்டும் வாக்குறுதி அளித்து ''அது மீறக்கூடாதது'' என்றும் அது அரச சொத்துடன் ஒரே சம்மதிப்பில் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.'' ஒரு கூட்டுறவு ''சொந்த கட்டிடங்களை, அமைப்புக்களை, இயந்திரங்களை, உபகரணங்களை, போக்குவரத்து வசதிகளை உற்பத்தி மற்றும் குறிப்பு எழுதப்பட்ட, உயிருள்ள கையிருப்புக்களை, பூர்த்தியான உற்பத்திப் பொருட்கள், நாணய வளங்கள் மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் சொத்து போன்றவற்றை சொந்தமாக வைத்திருக்கலாம்,'' என்று வரைவுச் சட்டம் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கூட்டுறவை அமைப்பதற்கு ''அரசாங்கத்திடமிருந்தோ பொருளாதார அல்லது ஏனைய அதிகாரப் பிரிவினரிடமிருந்தோ ஒரு விசேடப் பத்திரமும் தேவையில்லை.'' என்கிறது.

68. கூட்டுறவுகள், தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்தும் உரிமையை, இச்சட்டம் தருகின்றது. ஏனைய முதலாளித்துவ நாட்டிலுள்ளதைப் போல, கூட்டுறவுகள் ''தொழிலாளியுடன் ஒப்பந்தம் செய்யலாம், சம்பளம் பரஸ்பர உடன்பாட்டிற்கு உட்பட்டது. வேலைநாள், காலம், மற்றும் வழக்கமான வேலைமுறைகள், வழக்கமான மற்றும் மேலதிக ஓய்வுநாள் ஏனைய நிலைமைகள், கூட்டுறவின் உள்- மனை விதிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.'' அரச தொழில் துறையின் பெரும்பகுதிகளை வேண்டுமென்றே திவாலடையச் செய்வதன் மூலமாக, இப்படியான சோவியத் கூட்டுறவுகளில், அவர்களது உழைப்பை விற்க நிர்ப்பந்திக்கப் படும்படியாக, ஒரு பிரமாண்டமான அளவில் வேலையில்லாத தொழிலாளர்களின் அளிப்பினை (supply) உண்டுபண்ண அதிகாரத்துவம் திட்டமிடுகிறது. இந்த சட்டம் பிரகடனப்படுத்துகிறது; ''இழப்புகள் தீர்க்கமுடியாமை, தேவை (Demned) இல்லாமை போன்றவற்றால் மூடப்பட்ட சிறிய, நடுத்தர செய்பொருள் ஆலைகள், விவசாயம், கட்டிடம் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களின் அடிப்படையில் அரசு ஏஜென்சிகள், கூட்டுறவுகளை அமைக்கலாம்... அவை இழந்தவர்களின் சொத்தை இயங்குகின்ற அல்லது திட்டமிடப்பட்ட கூட்டுறவுகளுக்கு மாற்றலாம்.'' அரச தொழில் துறைகளின் போஷாக்கு மிக்க பகுதிகளை, கூட்டுறவுகளாக மாற்றுவதன் மூலம் தமது தனிப்பட்ட (அல்லது அவர்களது உறவினர்களின் அதிர்ஷ்டங்களை அடையும் சந்தர்ப்பத்தை உணர்ந்துகொள்ளும் அதிகாரத்துவத்தினர், இந்த சட்டத்தைச் சாதகமாக்கி, முன்பு மீளமுடியாத சொத்தாக இருந்தனவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள் என்பதை முன்கூட்டியே பார்ப்பது கடினமானதல்ல.

69. உலக முதலாளித்துவத்துடன் கூட்டுறவுகள், தொடர்பு கொள்வதை அனுமதிக்கும் வரைவுச் சட்டம் பிரகடனப்படுத்துகிறது. ''பெரும் கூட்டுறவுகளும் சர்வதேசரீதியாக போட்டியான அவர்களது கூட்டுக்களும், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களை அவர்களாகவே நடத்துவதற்கு அனுமதிக்கப்படலாம்.; கூட்டுறவுகளும் அதன் கூட்டுக்களும் வெளிநாட்டுச் செலவாணியைப் பயன்படுத்தி, உற்பத்தி, வர்த்தகம், சமூக சௌகரியங்கள் போன்றவற்றை வளர்ச்சியடையச் செய்ய பண்டங்களையும், சேவைகளையும் இறக்குமதி செய்யலாம்'' மேலும் அது கூறுகிறது, ''கூட்டுறவுகளும் அவற்றின் கூட்டுக்களும் அவர்களுடைய வெளிநாட்டு பங்குதாரருடன் ஒன்றாக இணைந்து, கூட்டு நிறுவனங்களை சிறப்பாக்குவது பற்றியும் தேவை, விலைகள் மற்றும் ஏனைய சந்தைக் காரணிகளிலிருந்து ஆரம்பித்து உற்பத்தியின் அளவையும், வகையையும் தீர்மானிக்க வேண்டும். கூட்டு நிறுவனங்கள் இந்த நாட்டிலாவது அல்லது வேறு எங்காவது அமைக்கப்படலாம்..... சோவியத் கூட்டுறவுக்கும், அவற்றின் கூட்டுக்களும் சர்வதேச கூட்டுறவு அமைப்புக்களின் நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்' இறுதியாக அந்தச் சட்டம் பின்வருமாறு கூறுகிறது; ''சோவியத் யூனியனின் பொருளாதார அமைப்பு, கூட்டுறவுகளில் பிரஜைகள், ஒன்றுபடும் அவர்களது அரசியலமைப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தி சாதனங்கள் மீதான கூட்டுறவுகளின் உடமையையும் சட்டபூர்வமான சொத்துக்களை அங்கீகரிக்க வேண்டும். மற்றும் கூட்டுறவுகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.''

70. சோவியத் யூனியனுக்குள் நடக்கும் மாற்றங்கள், முதலாளித்துவம் மீண்டும் கொண்டுவரப் படுவதற்கான சாத்தியமான வடிவங்கள் பற்றி விவாதிக்கையில் ட்ரொட்ஸ்கி வலியுறுத்திய அதே காட்சிகளை மிக சக்திவாய்ந்த முறையில் உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் முதல் பலவீனமான கூட்டுப் பண்ணைகளில் பலமான விவசாயிகளின் வளர்ச்சிக்கான நிலைமைகளையும் மற்றும் பலமான கூட்டுப் பண்ணைகளில் பலமான விவசாயிகளின் வளர்ச்சிக்கான நிலைமைகளையும் மற்றும் பலமான கூட்டுப் பண்ணைகள் முதலாளித்துவ வகையான உற்பத்தியாளர் கூட்டுறவுகளாக- விவசாய சேகரிப்பு கம்பனிகளாக உருவாக்குவது அவசியமானதாக வரும். தொழில்துறையைப் பொறுத்த அளவில் தேசியமயமாக்கப்பட்ட நிலையை நீக்குவது இலகுரக தொழிற்துறையுடனும் (Light Industry) உணவை உற்பத்தி செய்யும் தொழிற்துறையுடனும் ஆரம்பிக்கும் இடைமருவு காலத்திற்குத் திட்டமிடும் கோட்பாடானாது, அரச அதிகாரத்திற்கும் தனியார் கூட்டுறவுகளுக்கும்- சோவியத்தின் தலைமை தாங்கும் தொழிற்துறை மத்தியில், உருவாகக் கூடிய சாத்தியமுள்ள முதலாளிகளுக்கும்- இடையில் ஒரு தொடர்ச்சியான சமரசமாக மாற்றப்படும்.'' (லியோன் ட்ரொட்ஸ்கி காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி. நியூயோர்க் பப்ளிகேஷன்ஸ், 1973, பக்கம் 253.)

71. 'கிளாஸ்நோஸ்து'' சோவியத் ஜனநாயகத்தின் ஒரு உண்மையான புதுப்பித்தலை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இன்னும் சரியாகக் கூறப்போனால், இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல், சமூக அந்தஸ்தினை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் அதிகாரத்துவத்தினுள்ளும், சோவியத் சமூகத்தினுள்ளும், முழுமையாக முதலாளித்துவ போக்குகளைப் பலப்படுத்தும் திசையில் திருப்பப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரு முதலாளித்துவ பாணியிலான பாராளுமன்றத்தையும், போனபாட்டிச மாதிரியிலான ஜனாதிபதியையும் கொண்ட ஒரு புதிய அரசாங்க அமைப்பினை நிறுவ எடுக்கப்பட்டுள்ள தீர்மானமாகும். 1917 அக்டோபரில் நிர்மாணிக்கப்பட்ட சோவியத் அரசிற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பினை மேலும் சீர்குலைப்பதே இந்த ''சீர்திருத்தத்தின்'' அடிப்படை நோக்கம் ஆகும். இந்தச் சீர்திருத்தங்கள் ''பெரஸ்துரோய்காவை'' அமுல் செய்ய எந்த அளவிற்கு இன்றியமையாதது என கோர்பச்சேவ் பிரகடனப்படுத்தி இருக்கிறாரோ, அந்த அளவு மறுக்கமுடியாதபடி அதிகாரத்துவத்தின் சலுகை மிக்க பகுதிகளினால் பின்பற்றப்படும் நடைமுறை இலக்கு, சஸ்லவாஸ்கையா வலியுறுத்துவது போன்று, முதலாளித்துவ உறவுகளும், தனிச்சொத்துடமையும் வளர்ச்சி காண்பதற்கு தடையாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் குறுக்கீடுகளைத் தடுப்பதற்கேயாகும். மேலும் தமது ஏகபோக அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள அதிகாரத்துவத்தால் உருவாக்கப்பட்ட, பயங்கரவாத செயல்முறை முழுவதும் அப்படியே தொடப்படாது இருக்கிறது. கே.ஜி.பி. யின் அதிகாரங்கள் குறைந்துபோகவில்லை. அத்துடன் எண்ணற்ற பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்களின் கொலைக்குப் பொறுப்பானவர்கள் எவரும் இன்னமும் இனங்காட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. மற்றும் நகோர்னா - கரபாக் சம்பவங்கள், தமது சொந்த நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க சோவியத் வெகுஜனங்கள் எடுக்கும் எந்வொரு முயற்சியும் ஈவிரக்கமற்ற முறையில் தண்டிக்கப்படும் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டுகின்றன.

72. தனிச்சொத்துடமையை திரும்பக் கொண்டுவர சட்டரீதியான கட்டமைப்பை உண்டுபண்ணவும், உண்மையில் முதலாளித்துவத்தை மறு அறிமுகம் செய்யவும் மற்றும் சோவியத் பாட்டாளி வர்க்கத்தை கூலி அடிமைகளாக மாற்றுவதற்கும் அதிகாரத்துவத்துக்கு இவை போதுமானவை அல்ல. அதனுடைய இலக்குகளை யதார்த்தமாக்குதல் நிர்வாக நடவடிக்கைகளை காட்டிலும் மேலானதை வேண்டி நிற்கிறது. அதிகாரத்துவம், சோவியத் தொழிலாள வர்க்கத்தின் ஆழமான எதிர்ப்பினை இரத்தம் தோய்ந்த எதிர்ப்புரட்சி வழிமுறைகளின் மூலம் கட்டாயமாக நசுக்கியாக வேண்டும். கோர்பச்சேவின் கொள்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு பற்றிய பரவலான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உற்பத்திச் சாதனங்களில் தனிச்சொத்துடமையை மீண்டும் அறிமுகம் செய்வதை, சோவியத் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் எதிர்பார்க்கிறார்கள், என்பதற்கான கண்புலனாகக் கூடிய அறிகுறிகள் இல்லை என்பதை முதலாளித்துவ பார்வையாளர்கள் கூட அங்கீகரிக்கும் வண்ணம் தள்ளப்பட்டிருக்கின்றனர். தனியார் வர்த்தகத்தை அங்கீகரிக்கும் 1987 மே 1- ன் சட்ட சீர்திருத்தம் சம்பந்தமாக சார்பு ரீதியில் சிறிய அளவே பொதுமக்கள் அக்கறை கொண்டதை ''வெளிவிவகாரத்துறை'' அச்சம் நிறைந்த அதிர்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. மாஸ்கோ, லெனின்கிராட் எங்குமாக சில டசின் பேர் மட்டுமே தனியார் டாக்சிகளை ஓட்டுவதற்கான லைசென்சுகளைப் பெற்றுக் கொண்டனர். வெளிவிவகாரத்துறை இதைப்பற்றி, ''சோவியத் யூனியனில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் பால் குறைந்த தன்னியல்பான இயக்கமே இருக்கிறது''. (பாகம் 66, எண்.3) எனக் கவலையுடன் உறுதிப்படுத்துகிறது.

73. தனது எதிர்ப்புரட்சிகர பெரஸ்துரோய்காவை அமுல்செய்ய முயலுகையில், ஸ்ராலினிசம் ஆதாரமாய் தங்கியிருந்த அனைத்து பொருளாதார அடிப்படைகளும்- அதாவது தனியொரு நாட்டில் சோசலிசம் நிர்மாணிக்கப்பட முடியும் என்பது அடியோடு தகர்ந்துபோய் விட்டதை, கோர்பச்சேவ் ஒப்புக்கொள்வதை தொக்கி நிற்கிறது. உண்மையில் சோவியத் பொருளாதாரத்தின் நிஜ நெருக்கடியானது, உலகச் சந்தையின் வளங்களில் இருந்தும் சர்வதேச உழைப்புப் பகுப்பிலிருந்தும் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டதிலேயே வேரூன்றியுள்ளது. இந்த நெருக்கடியைக் கையாளுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. கோர்பச்சேவினால் பிரேரிக்கப்பட்ட வழியானது, அரச தொழிற்துறையை நிர்மூலமாக்குதல், திட்டமிடல் கொள்கைகளை நிராகரித்தல், வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகத்தை கைவிடல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. அதாவது சோவியத் யூனியனை உலக ஏகாதிபத்திய அமைப்பினுள் மறு இணைப்புச் செய்வதாகும். இந்த எதிர்ப்புரட்சிகரத் தீர்வுக்கு பதிலீடானது உலகப் பொருளாதாரத்தின் மீதுள்ள ஏகாதிபத்தியத்ததின் ஆளுமையை அழிப்பதை வேண்டி நிற்கிறது. திட்டமிட்ட பொருளாதாரத்தினை ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆசிய முதலாளித்துவக் கோட்டைகளுக்கு சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர எதிர்த் தாக்குதலினூடாக விஸ்தரிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

74. இந்த பதிலீடுகளது இணக்கம் காணமுடியாத குரோதம் நிறைந்த பண்பானது, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று உந்துதல்களுக்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முன் நோக்குகளுக்கும் இடையே ஆழமாய் வேர்விட்டுள்ள சமூக முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. அக்டோபர் புரட்சியின் அடிப்படையான தேட்டங்கள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்கள், அதிகாரத்துவத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்திற்கான களத்தினை தயார் செய்கின்றது. அண்மையில் போலந்திலும் யூகோஸ்லாவியாவிலும் இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் சோவியத் யூனியனில் வந்துகொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படும் ஒரு மங்கல் வெளிச்சம் மட்டுமே. சோவியத் யூனியனில் போல்ஷிவிசத்தை அதன் இன்றைய வடிவான ட்ரொட்ஸ்கிசத்தில் புதுப்பிப்பதற்கான புறநிலைமைகள் இன்று ஏற்பட்டுள்ளன.

75. அனைத்துலகக் குழுவானது, அதிகாரத்துவத்திற்குள் உள்ள நெருக்கடிகளால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களை, மற்றும் கிளாஸ்நோஸ்தினால் வழங்கப்பட்டவை தற்காலிகமானவையாக இருப்பினும் அவை உள்ளடங்களாக- சோவியத் பாட்டாளி வர்க்கத்தினரிடையே புரட்சிகர பணிகளை வளர்த்தெடுக்க- அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அந்தப்பணி எப்போதும் ஸ்ராலினிசத்துக்கு எதிரான நீண்ட போராட்டத்தினை வரலாற்றுப் படிப்பினைகளின் அடிப்படையில் மார்க்சிச நனவினை வளர்ச்சிபெறச் செய்யும் விதத்தில் வழிநடத்தப்பட வேண்டும். பழம் போல்ஷிவிக்குகளின் புனருத்தாரணமும் மற்றும் மாஸ்கோ வழக்குகளின் நிராகரிப்பும் சோவியத் அதிகாரத்துவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான நான்காம் அகிலத்தின் கோட்பாட்டு ரீதியான நோக்கினையோ அல்லது கோர்பச்சேவ் பிரிவினர்பால் கொண்ட எமது மதிப்பீட்டையோ மாற்றிவிடவில்லை. எந்த விதத்திலும் இப் புனருத்தாரணத்திற்கான ''நற்சான்று'' சோசலிசத்திற்கான ஸ்ராலினின் ''பங்களிப்பை அக்டோபர் புரட்சியின் எழுபதாவது ஆண்டு விழாவில் இன்னமும் புகழ்ந்து கொண்டிருக்கும் கோர்பச்சேவுக்கு அல்லாமல், அதிகாரத்துவத்திற்குள் உள்ள நெருக்கடிகளுக்கு அடிப்படையாக இருக்கும், திட்டமிட்ட பொருளாதாரத்தை ஓயாமல் பேணுதலையும், கம்யூனிச இலக்கினை அடைய சளைக்காத அர்ப்பணிப்பையும் கொண்டுள்ள சோவியத் தொழிலாள வர்க்கத்துக்குப் போய் சேர்கிறது. அதிகாரத்துவத்தின் உள்ளேயான சகல பிரிவுகளிலிருந்து சோவியத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தைக் காக்கவும், அரசியல் புரட்சியின் பதாகையை வழங்குதலும் உள்ளடங்களாக போராடுவதே அனைத்துலகக் குழுவின் முதல் பொறுப்பாகும்.

76. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் ஆளப்படும் எல்லா நாடுகளிலும் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த தேட்டங்களின் மிச்சசொச்சங்களின் உயிர்வாழ்வு, இப்போராட்டத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் சீனா, வியட்னாம் மற்றும் லாவோஸிலும் அதிகாரத்துவங்கள், தங்களது தேசிய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பினுள் ஒருங்கிணைப்பதில், சோவியத் யூனியனைக் காட்டிலும் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுப்போக்கு சீனாவில் மிகவும் முன்னேறியுள்ளது. பொதுநலப் பார்வைக்காக மாவோவின் சடலம் இன்னமும் கெடாது பேணப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது பாரம்பரியத்தின் அழுகல் நாற்றமோ உச்ச மட்டத்தை எட்டியுள்ளது. அவரின் வாரிசுகள் திட்டமிட்ட பொருளாதாரத்தில் எஞ்சியிருந்த அனைத்தையும் அழிக்கத் தொடங்கிவிட்டனர். 1949ன் பின்னர் கூட்டுப்பண்ணை முறைக்குள் கொண்டுவரப்பட்ட எல்லா நிலங்களும் தனியார் சொத்துடைமைக்கு திருப்பப்பட்டுள்ளது. அத்துடன் ''செல்வந்தராவது மகத்துவமானது'' என்ற அரசாங்க ஊக்குவிப்பின் கீழ், நாட்டுப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புற மையங்களில் முதலாளித்துவ நிறுவனங்கள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடியோடு அகற்றப்பட்டுள்ளதோடு, ஒரு காலத்தில் அரசுடைமைத் தொழிற்துறையாக இருந்தனவற்றின் பெரும்பாகம் வெளிநாட்டு தேசிய முதலாளிக்கு ஏலத்தில் விடப்பட்டிருக்கின்றது. 1000க்கும் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் தனியார் தொழிற்சாலைகள் பல அங்கே உண்டு. 1988 ஜூனில் வெளியிடப்பட்ட புதிய விதிகள் முதலாளித்துவ நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தக்கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை பற்றிய சகல வரையறைகளையும் அகற்றியுள்ளது.

77. உலக ஏகாதிபத்தியத்தின் இந்த சீன ஸ்ராலினிச ஏஜெண்டுகள் சிறப்புப் பொருளாதார வலயங்களை (SEZ) ஸ்தாபித்துள்ளனர். அவர்கள் இவற்றினை, தொழிலாள வர்க்கத்தின் மீதான கட்டில்லாத சுரண்டலுக்காக வரவேற்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில், தாய்வான் மூலதனத்தின் வேகமாக விரிவடையும் பாத்திரம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். 1987-ல் ஹாங்காங்கை ஒரு இடமாற்றப் புள்ளியாகக் கொண்ட தாய்வானுக்கும், சீனாவுக்கும் இடையிலான மறைமுக வர்த்தகம் 58% வளர்ச்சியினால் 1. 5 பில்லியன் டாலர் ஆகியுள்ளது. நாட்டின் உற்பத்தியில் ஏற்கனவே 80க்கும் அதிகமான தாய்வான் நாட்டுக் கம்பனிகள் முதலீடு செய்துள்ளதோடு, 200- க்கும் அதிகமானவை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

78. முதலாளித்துவத்திற்கான நல்வரவுக்கான பாய்விரிப்பானது மார்க்சிசத்தின் மீதான எல்லாவித முழு அளவிலான தாக்குதலுடனும் இணைந்துள்ளது. இந்த அதிகாரத்துவம் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட 150- வது ஆண்டு நிறைவு விழாவினை, அதன் தவறெனப்படுபவற்றை கண்டிப்பதற்கான சந்தர்ப்பமாக்கிக் கொண்டது. ''முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து சோசலிசம் வந்துகொண்டிருக்கிறது என மார்க்சும், எங்கெல்சும் தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டது தவறு, ஏனெனில் இது உண்மை நிகழ்வுகள் மூலம் ஊர்ஜிதமாகவில்லை'' என்று ஒரு முன்னணி பத்திரிகை சமீபத்தில் ஆட்சேபித்தது. இன்னும் முக்கியமான மற்றுமோர் அறிக்கை, ஸ்ராலினிஸ்டுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கைகளின் உண்மைத் தன்மையை அம்பலமாக்குகிறது. ஒரு முன்னணி ''தத்துவவாதி கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் ''சுரண்டலை அனுமதிக்கிறது. ஆனால் சோசலிச சுரண்டலை'' என்றார்.

79. ''இந்த சோசலிச சுரண்டலின்'' அர்த்தத்தை சீன ஸ்ராலினிச பத்திரிகையில் வெளியான ஒரு உண்மையின் மூலம் அறியலாம்; தனிப்பட்ட முதலாளித்துவ வேலை கொள்வோருக்காக (employes) வேலை செய்யும் பொருட்டு 30 லட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர். வேலை கொள்வோர் ''குழந்தை உழைப்பை பயன்படுத்தி செல்வந்தர்'' ஆவதை பத்திரிகை ஒப்புக்கொள்கிறது. குழந்தை உழைப்பின் வளர்ச்சியானது, தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஒர் உண்மையான வெளிப்பாடாகும். தொழிலாளர்கள் தமது ஊதியத்தில் துண்டுதுண்டான அதிகரிப்பினை மட்டும் பெற்றிருக்கும் வேளையில், பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. 1988-ன் முதல் காலாண்டுப் பகுதிகளின் அத்தியாவசியமற்ற உணவுப்பொருட்களின் விலை 24.7% ஆகவும் காய்கறிகள் விலை 48% ஆகவும் அதிகரித்துள்ளது.

80. பல தசாப்தங்களாக பப்லோவாதிகள் மாவோயிசத்தை ட்ரொட்ஸ்கிசத்துக்கான ஒரு பதிலீடு எனப் புகழ்ந்தனர். 1952க்கு முன்பே பப்லோ, மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் பின்பு மாவோயிஸ்டுகளால் சிறையில் தள்ளப்பட்டிருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மேல்முறையீடுகளைப் பிரசுரிக்கவும் மறுத்துவிட்டார். ஸ்ராலினிசம், முதலாளித்துவ தேசியவாதம், விவசாய தீவிரவாதம் ஆகியவற்றில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட மாவோவின் கலவைக்கு எதிராக, உண்மையான ஒரு பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைப் பாதுகாக்கும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் எதிர்ப்புப் போக்கினால், பப்லோவாதிகள் ஆத்திரமுற்று அந்த உறுதியான மார்க்சிஸ்டுகளை ''புரட்சியின் அகதிகள்'' எனப் பகிரங்கமாகக் கண்டித்தனர். 1954-ல் இலங்கை பப்லோவாதிகள் சீன வெளிநாட்டு அமைச்சர் சூ- என்-லாயை சந்தித்த பொழுது இந்த சிறைவைக்கப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுக்களைப் பற்றிய பிரச்சினையை எழுப்ப மீண்டும் மறுத்தனர். மாவோயிசத்துக்கு அடிபணிந்த பப்லோவாதிகளின் வரலாற்றுத் தாக்கங்கள் இன்று ''மாபெரும் மாலுமியின்'' கொள்கையினால் முழுமனே அம்பலமாகியுள்ளது. முதலாளித்துவத்தை மீண்டும் வெறியுடன் அறிமுகம் செய்து வைக்கும் சீன ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கைகள், நாட்டினைப் பொருளாதார அழிவினுள் தள்ளி வருவதோடு, தவிர்க்கமுடியாத வகையில் பாட்டாளி வர்க்கத்தின் பிரமாண்டமான எழுச்சிக்கு கட்டாயம் இட்டுச் செல்லும். அடுத்த புரட்சிகர எழுச்சியின்போது, நாட்டில் அதிகாரத்துவத்தினை ஒழித்துக்கட்டவும், ஸ்ராலினிசத்தால் முகாமிடப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தை வெற்றிகொள்ளவுமான பிரமாண்டமான போராட்டத்தில், ஏழை விவசாயிகளின் தலைமையை வகிப்பது சீனத் தொழிலாள வர்க்கமாகவே இருக்கும்.