World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Strikes, mass demonstrations to oppose attacks on pensions

பிரான்ஸ்: வேலை நிறுத்தங்கள், ஓய்வூதியத்தின்மீதான தாக்குதல்களை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்

By Antoine Lerougetel
4 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 3ம் தேதி 10 இலட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டங்களில் பங்குகொண்டனர். ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டம் என்ற பெயரில் வேலைசெய்யவேண்டிய வாழ்க்கைக்காலத்தினை நீடிக்கும் முயற்சியையும், 30 விகிதத்திற்கும் மேலாக ஓய்வு பெறுவோரின் வருமானத்தைக் குறைக்கவும் வகைசெய்துள்ள, ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதமர் ஜோன் பியர் ரஃபரன்-னது அரசாங்கத்தின் திட்டங்களை அவர்கள் எதிர்த்தனர்.

மார்சை நகரில் வேலை நிறுத்த அழைப்பு நல்ல ஆதரவைப் பெற்றதுடன் 71சதவீதத்திற்கும் மேலான ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்றினர். தேசிய அளவில் கல்வித் துறையினது பங்கு 40 சதவீதத்திற்கு சற்றே அதிகமானது, அது மே 13 அன்று பங்குற்றிய 59 சதவீதத்தையும் விடக் குறைவானது.

பொதுத்துறைகளின் எல்லாப் பிரிவுகளிலும் வேலை நிறுத்தம் இருந்தது மற்றும் CGT தொழிற்சங்கக் கூட்டமைப்பு தனியார் துறையிலிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தாகத் தெரிவித்துள்ளது. 24 மணி நேர வேலை நிறுத்தம் CGT (பிரான்சின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பு, பாரம்பரியமாய் கம்யூனிஸ்டு கட்சியோடு தொடர்புடையது), Force Ouvriere (சோசலிஸ்ட் கட்சியோடு இணைந்தது), UNSA (Civil Service Union, சோசலிஸ்ட் கட்சியோடு இணைந்தது), FSU (பிரதன ஆசிரியர் சங்க கூட்டமைப்பு), மற்றும் 10 அமைப்புக்களடங்கிய Sud கூட்டமைப்பு, ஆகிய அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசாங்கத்தை ஆதரிக்கும் François Chérèque இனை தலைவராகக் கொண்ட CFDT யுடன் (இது சோசலிச கட்சியின் வலதுசாரிப் பிரிவோடு தொடர்புடையது) இணைக்கப்பட்ட பல தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றன. ஜூன் 4ம் தேதி பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைக்குத் திரும்பவில்லை, பிரான்சின் போக்குவரத்து மற்றும் கல்வி துறைகள் இன்னும் சீர்குலைந்த நிலைமையில்தான் உள்ளன.

ஜூன் 10ம் தேதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருக்கும் கடுமையான ஓய்வூதியக் குறைப்புக்கள், உரிமைகள் பறிப்பு, இவற்றினை எதிர்த்து தொழிற்சங்கங்கங்களால் இந்த ஆண்டு நான்காம் ஒழுங்குபடுத்தப்படும் பாரிய அணிதிரள்வே இது குறித்துநிற்கின்றது; அத்துடன் கல்வித் துறைத் தொழிற்சங்கங்களால் இந்த ஆண்டில் 10வது வேலை நிறுத்தம் நடாத்தப்படுகின்றது. போராட்டங்களை ஒரு நாள் போராட்டமாகவும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பயனற்ற முன்னோக்காகவும் மட்டுப்படுத்துவதன் மூலம் ஆண்டு முழுவதும், தொழிற்சங்கங்கள், சமூக சேவைகள்மேல் தாக்குதல் தொடுக்கும் சிராக்-ரஃபரன் திட்டத்தினை எதிர்க்கும் தொழிலாளரின் போக்கைக் கட்டுப்படுத்தும் மற்றும் தகர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆசிரியர் எண்ணிக்கை குறைப்பு, தற்காலிக வேலைமுறை, மற்றும் பாடசாலையில் 110,000 ஆசிரியரல்லாத ஊழியர்களை தேசியத் திட்டத்திலிருந்து வட்டாரத் திட்டத்திற்கு (`மையக் குவிப்பு அகற்றுதல்` அல்லது `பிராந்தியமயமாக்குதல்` என்ற பெயரில்) மாற்றுதல் இவற்றை எதிர்த்து மூன்று வாரங்கட்கும் மேலாக, பல்லாயிரக்கணக்கான கல்வித் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி தொழிற்சங்கங்கள் ஜூன் 10 அன்று மற்றொரு ஒரு நாள் போராட்டத்தை அறிவித்துள்ளன; மேலும் baccalauréat என்ற நாடு தழுவிய பள்ளி இறுதிச் சான்றிதழ், மற்றும் மேற்கல்விக்காக 18 வயதில் நடாத்தப்படும் தேர்வுகள் -500,000 மாணவர்கள் ஜூன் 12ல் தத்துவவியல் பாடத்தை எழுத உள்ளனர்- இதனை தடை செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகின்றனர்.

ஜூன் 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம் எவ்வாறு தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களிடையே விரக்தியை விதைத்துள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணமாகும். அது ஒரு குறிப்பிடத்தக்க பெரும்பாலானோர் பங்குகொண்ட ஆர்ப்பாட்டமாயினும், மே 13ல் நடந்ததை விடக் குவைான அளவிலேயே - மே 13ல் 4 மில்லியன் வேலை நிறுத்தம் செய்தோரும் 2 மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்களும் இருந்தனர்- இருந்தும் பலர் எதிர்பார்த்தபடி அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் பொது வேலை நிறுத்தத்திற்கான தொடக்கமாக அமையவில்லை.

மே 13 வேலை நிறுத்தம் காலவரையின்றி இருக்கவேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்பியிருந்தபோதிலும்கூட CGT பாரிஸ் நகரப் போக்குவரத்து (RATP) யில் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு ஊக்கம் கொடுத்தது. Force Ouvriere இன் தலைவர் மார்க் ப்ளோண்டல் (Marc Blondel), பொது வேலை நிறுத்தம் கூடாது என திரும்ப திரும்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவருடைய கருத்தின்படி வேலை நிறுத்தம் அரசியலாக்கப்பட்டுவிடும் என்பதால் அனைத்து தொழிற்சங்க எதிர்ப்புக்களும், மே 28 அமைச்சர் குழு முன் ஓய்வூதியத் திட்டம் விவாதத்துக்கு வந்த அளவிலேயே நிறுத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை தான் எதிர்ப்பதாகவும் ஆனால் ரஃபரன் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டம் Gare du Nord ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது; நகர்ந்து போவதற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருவிலேயே உட்கார்ந்துகொள்ளும் செயல்முறையைச் சிறிது நேரம் மேற்கொண்டனர். உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கையான, "பிரான்சில் தொழிலாளரின் ஓய்வூதியத்தைக் காப்பதற்கான ஓர் அரசியல் மூலோபாயம்" என்ற துண்டறிக்கைகள் வினியோகிக்கப்பட்டன. WSWS ஆதரவாளர்கள் குழு ஒன்று அணிவகுத்துச் சென்றவர்களுக்கு 5,000 பிரதிகளை வழங்கியது.

210,000 பேருக்கும் மேலாக இருந்தனர் என்ற மதிப்பீட்டில், பெரும்பாலோர் ஆசிரியர்களாக இருந்தனர்; இதைத் தவிர Renault, EDF (அரசு மின்வாரியத் துறை) ஆகியவற்றின் தொழிலாளர்களும் பெருமளவு திரண்டிருந்தனர். மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையை FSU ஆசிரியர் தொழிற்சங்கம் திரட்டிய உறுப்பினர்கள் கொண்டிருந்தனர்; ஆனால் Force Ouvriere- பிரதானமாக பொதுத் துறைகளின் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்தது, அவர்கள் நிறைந்த அளவில் காணப்பட்டனர். Lycee (உயர்நிலைப் பள்ளி), பல்கலைக்கழக மாணவர்கள் சில தொகையினர் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்ட அணியினரைத் தொடர்ந்து சில பிரிவினர், இடதுசாரி தீவிரவாத குழுக்களான Ligue Communiste Revolutionaire (Revolutionary Communist League), Lutte Ouvriere (Workers' Fight) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், பதாகைகளை உயர்த்திப் பிடித்து வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போக்கு கடுமையாக இருந்ததுடன், மே 13லிருந்து வேலை நிறுத்தத்தில் உள்ள ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவு திரண்டிருந்து பாரிஸில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சார்ந்தவர்கள் கவனம் தோய்ந்த உறுதியுடன் காணப்பட்டார்கள். ஒரு விளையாட்டுத்துறை ஆசிரியர் கூறினார்: ``நாம் தொடர்ந்து போராட வேண்டும்; ஆனால் இது ஒரு கூடுதலான வலதுசாரி அரசாங்கம், பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது; எனக்கு அதிக நம்பிக்கையில்லை.`` பல ஆசிரியர்களும் பெரிதும் களைப்புற்றுவிட்டதாகவும், ஆனால் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.

Amiensல் 8,000-பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; இதில் பாதிபேர் ஆசிரியர்கள் - இந்த வடக்குத் தொழிற்துறை நகரம் 110,000 குடிமக்களைக் கொண்டுள்ளது, ஆனால் மே 13ல் சேர்ந்த 20,000 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டத்தைவிட எண்ணிக்கை குறைந்ததாயிற்று.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களும், ஆர்ப்பாட்டக்காரர்களும் ஓய்வூதியச் சீர்திருத்தம் முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என விரும்புவதோடு, பணியிலிருப்போர் ஆட்குறைப்பு, கல்வியை மையக்குவிப்பற்றுச் செய்தல் இவற்றையும் முற்றிலும் திரும்ப்ப் பெறவேண்டுமென்று கோருகிறார்கள். ஆனால் CGTன் தலைவரான Bernard Thibault 8.00 மணிச் செய்தியில்ன்போது அரசாங்கத்திற்கு ஒத்துப்போகும் போக்கு உடைய தகவலைக் கொடுத்தார். ஓய்வூதியச் சீர்திருத்தத்தைத் திரும்பப்பெற அழைப்புவிடாததுடன் அதையொட்டிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறினார். தொழிற்சங்கத் தலைவர்களின் துரோகத்தால் தைரியமுற்ற ரஃபரன், ``திரும்பப் பெறுதல் கிடையாது, தள்ளி வைத்தல் கிடையாது, திருத்தங்களும் கிடையாது`` என அறிவித்தார்:

FSUன் பொதுச் செயலாளரான Gerard Aschieri அன்று மாலையே Agence France Presse என்னும் செய்தி ஊடகத்திடம், CGT, FO, UNSA மற்றும் அவருடைய FSU நான்கு சங்கங்களும் ``விடுமுறை வரையிலும் அதற்குப் பிறகும் உறுதியாக இருக்கப்போவதாக" அறிவித்தார்; போராட்டம் சூடு குறைந்துவிட்டது என்பதையும் அவர் மறுத்தார். மையக்குவிப்பு, மற்றும் பல்கலைக்கழக சீர்திரு:த்தம் ஒத்திவைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் - அவர் அடித்துச் சொன்னார், "நாம் கதவில் காலை வைத்துள்ளோம்; இப்போது அதனை திறப்பதற்கு உந்தித்தள்ளிவிடவேண்டும்."

மாலை 3.00 மணிக்கு 200 ரயில்வே பணியாளர்கள் AMIENS இல் உள்ள செர்னம் (SERNAM) பகுதியில் பாரிய கூட்டமொன்றை நடாத்தி வேலை நிறுத்தத்திற்கு வாக்களித்தனர்; 2 வாக்குகள்தான் எதிராகப் போடப்பட்டன. 47 சதவிகித ஊழியர்கள் வேலைநிறுத்தத்திலுள்ளதாக சங்கப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

வாக்கு முடிந்த பிறகு உலக சோசலிச வலைதளம், SNCF தேசிய இரயில் நிறுவன ஆய்வாளர் பிலிப்பேயுடன் தொடர்பு கொண்டது. அவர் கூறினார்: ``என்னைப் பொறுத்த வரையில் விரைவிலேயே நான் ஓய்வுபெற இருக்கிறேன். ஆனால் எனக்கு 3 மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே இப்பொழுது ஆசிரியர்கள். இப்பொழுது நான் அவர்களுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளேன். இதில் வெற்றியடைய ஒரு பொது வேலை நிறுத்தம் தேவையென்று நான் நினைக்கிறேன். அது அரசாங்கத்தைக் கீழே இறக்குமளவிற்று செல்வதாக இருக்கவேண்டும்.``

இந்த அரசாங்கத்தை வேறு எத்தகைய முறையில் மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு, ``இது ஒரு கடினமான கேள்வி; பார்க்கப்போனால், ஒரு இடதுசாரி அரசாங்கம்தான் ஆட்சி அமைக்கவேண்டும்; ஆனால் இடதுசாரி தன்னை சீர்திருத்திக்கொள்ள வேண்டும்`` என்றார்.

ஒரு பராமரிப்புத் தொழிலாளர்கள் குழுவினர் அப்பொழுதுதான் வேலை நிறுத்தம் தொடர வேண்டுமென்று வாக்களித்திருந்தனர். அவர்கள் WSWS உடன் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். Thierry அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தான் வேலை நிறுத்தம் செய்வதாகக் கூறினார்: அரசாங்கத்தின் கொள்கை `நீடித்து உழையுங்கள், குறைந்த ஊதியம் பெறுங்கள்` என்று அமைந்துள்ளது என்றார் அவர்.

Willy சொன்னார்: ``எங்களையெல்லாம் பிரித்துவிட வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.``

Thierry மேலும் கூறினார்: ``1995ல் இரயில்வேத் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். இப்பொழுது நாம் திரண்டு எழவில்லையென்றால், நாம் தனிமைப்பட்டபோது நம்மை அவர்கள் தாக்குவார்கள். SNCF இன் CEOவிடமிருந்து எங்களுக்கு தற்போதைக்கு எங்கள் ஓய்வூதியத் திட்டம் மாற்றப்படமாட்டாது என்ற கடிதம் வந்துள்ளது. எங்களைத் தனிமைப்படுத்திவிட்டால் எளிதில் பின்னர் எங்களைக் `கவனித்துக்கொள்ளலாம்` என்று கருதுகின்றனர். நாங்கள் யுப்பே-க்கு (அப்பொழுதைய பிரதம மந்திரி Alain Juppé,) கஷ்டகாலத்தைக் கொடுத்தோம், எனவே அவர்கள் இப்பொழுது எங்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 49 சதவீத மக்கள் Maastrich உடன்படிக்கையை எதிர்க்கின்றனர் பிரசல்ஸின்(Brussels) கொள்கை மக்களை மிகத் தாழ்ந்த அளவிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். நாங்கள் ஓய்வூதியங்கள் எங்களது ஓய்வூதியமளவிற்கு உயர்வாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம்.``

வில்லி சொன்னார்: ``ஐரோப்பா இப்பொழுது அமெரிக்காவோடு அவர்கள் போல் செய்வதிலும் அவர்களுடைய சமுதாய நிலைகளை இறக்குமதி செய்வதிலும் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கர்கள் உலகில் தங்களின் நிலையை நாட்டிக்கொள்ள ஈராக்கோடு போருக்குப் போனார்கள். ஐரோப்பா அவர்களோடு பூசல்கொள்ளத் தலைப்பட்டு அவர்களைப் போல நடக்க முற்படுகிறது.``

Thierry கூறினார்: ``என்ரொன் பேராபத்தைப் பாருங்கள். அமெரிக்காவில் ஒருவரிடத்தில் பணம் இருந்தால் மட்டுமே எல்லாம் செய்யமுடியும். இங்கு நமக்குச் சில பாதுகாப்புக்கள் உள்ளன. எந்த அளவிற்கு அவை இருக்கின்றனவோ அவற்றையாவது சண்டை பிடித்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.``

Willy சுட்டிக்காட்டினார்: ``செப்டம்பர் மாதம் அவர்கள் நோய்வாய்ப்படும்போது கிடைக்கும் சலுகைகளையும் அகற்றிவிடுவர்; சுகாதார நலன்களையும் குறைத்துவிடுவர். சிலர் தேசிய சுகாதார சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் பேசப்படுகிறது; எனவே அதைச் சிக்கனப்படுத்த உந்துதல் காட்டப்படும். பல மருந்துச் செலவுகள் செய்வதற்குப் பணம் கொடுத்தல் குறைக்கப்பட்டுவிட்டது.``

Thierry கூறினார்: ``1995ல் இருந்ததைவிடவும் கூடுதலான உறுதித் தன்மையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குத் தேவையான படிப்பினைகளைக் கற்றுவிட்டார்கள். ஜுப்பே யைவிட ரஃபரன் நன்கு பேசும் ஆற்றல் உடையவர். 95ல் இருந்ததைவிட தன் பலம் அதிகம் என்று சிராக் நினைக்கிறார்; ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றில் இவர் 82 சதவிகிதம் வாக்குப் பெற்றவர். (2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றிற்குப் பின்னர், வலதுசாரி வேட்பாளர்கள் இருவர் - சிராக், பாசிச ஜோன்மரி லூ பென்- மட்டுமே தேர்வுக்கு இருந்தனர், இன் நிலையில்; எல்லா இடதுசாரி கட்சிகளும் தொழிற்சங்கங்களும் WSWS இன் ஒரு தீவிரமான தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பினை நிராகரித்துடன் சிராக்கிற்கு வாக்குப்போட அழைப்புவிடுத்தன)

"ரயிவேத்துறை தனியார்மயமாக்கம் பிரிட்டனில் என்ன செய்துள்ளது என்பது பற்றி நாங்கள் அறிவோம்." Thierry தொடர்ந்தார்: "இங்கு அமைப்பு முறை முழுமையாகச் சரியாக இல்லை; பிரான்ஸில் ஒரு ரயில் எப்போதும் சரியான நேரத்திற்கு வரும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அங்கோ இரயில் வரும் என்பதே நிச்சயம் இல்லை."

See Also :

ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்து மில்லியன் தொழிலாளர்கள் பிரான்சில் நடத்திய பேரணி

பிரான்சில் தொழிலாளர்களின் ஓய்வுதியங்கள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராட ஒரு அரசியல் மூலோபாயம்

பிரான்ஸ்: ஓய்வூதிய உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு சர்வதேச இயக்கம் தேவை

Top of page