சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part 4

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 4

By the the Socialist Equality Party (Sri Lanka)
29 March 2012

Use this version to print | Send feedback

9. இந்தியப் பிரிவினை

9-1. இந்தியாவில், யுத்தத்தின் பின்னர் உடனடியாகத் தோன்றிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை கருவறுப்பதிலும் மற்றும் தெற்காசியா பூராவும் முதலாளித்துவ ஆட்சியை மீள ஸ்தாபிப்பதிலும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கொடுத்த ஆதரவுடன் காங்கிரஸ் மையமான பாத்திரத்தை ஆற்றியது. காங்கிரஸ் தலைமையானது, புதுப்பிக்கப்பட்ட இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம் தமது கட்டுப்பாட்டிலிருந்து நழுவி விடும் என மிரட்சியுற்றும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிகண்டுவரும் போராட்ட அலையாலும் மற்றும் மன்னராட்சி நிலவிய மாநிலங்களில் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த அமைதியின்மையினாலும் கவலை கொண்டும், இந்தியப் பேரரசின் மீதான தனது பிடி தளர்ந்து போயுள்ளதை ஏற்கனவே புரிந்துகொண்டிருந்த பிரிட்டனுடன் சாத்தியமானளவு விரைவில் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றது. அவ்வாறு செய்ததன் மூலம், காங்கிரஸ் தனது சொந்த வேலைத்திட்டத்தின் பிரதான அம்சங்களையே கைவிட்டது என்பதுடன் பிரிட்டனுடன் மட்டுமன்றி, முஸ்லிம் லீக் மற்றும் இந்து மஹாசபை போன்ற இனவாத கட்சிகளுடனும், காலனித்துவ அரசுக்கு பழமைவாத அடித்தளத்தை அமைத்தளித்த ஜமீன்தார்கள் மற்றும் மன்னர்களுடனும் ஒரு உடன்படிக்கைக்கு சென்றது.

9-2. இந்தியாவில் முஸ்லிம் நிலவுடமையாளர்களது நலன்களையும் முதலாளித்துவவாதிகளது நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்த முஸ்லிம் லீக், 1940ல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளடங்கிய ஒரு தனி பாகிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்தது. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய ஆட்சியின் பிரதான கருவியாக வகுப்புவாத பிரிவுகளை பயன்படுத்தியதன் காரணத்தால் முஸ்லீம் உயரடுக்கினை ஒரு தனியான அரசியல் சக்தியாக ஒழுங்கமைத்து வளர்த்தெடுத்திருந்தது. அந்த முஸ்லிம் உயரடுக்கு ஒரு ஐக்கியப்பட்ட இந்திய அரசுக்குள் தாம் ஓரங்கட்டப்படுவதையிட்டும் மற்றும் சமூக அமைதியின்மை வளர்ச்சியடைவதையிட்டும் அச்சமடைந்தது. தனியான முஸ்லிம் அரசுக்கான முஸ்லீம் உயரடுக்கின் கோரிக்கையானது, யுத்தத்துக்குப்-பின் தெற்காசியா மறு ஒழுங்கமைப்புக்கு உட்படும் என்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில் அந்த மறுஒழுங்கமைப்பின் போது அரசியல் அதிகாரத்தில் தனக்கு கணிசமான பங்கினைக் கோருவதற்கும் அத்துடன் நாளுக்கு நாள் அமைதியின்மை பெருகி வந்த பரந்த மக்களை திசைதிருப்பி பிளவுபடுத்திப் பராமரிக்கும் பொருட்டு வகுப்புவாதத்தைக் கிளறுவதற்கும் அது பயன்படுத்திய வழிமுறையாக இருந்தது. இந்து மன்னர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் வர்த்தகர்கள் மத்தியில் காலூன்றியிருந்த இந்து மகாசபை, பிரிட்டன் உடனான தனது ஒத்துழைப்பை, முஸ்லிம் “மேலாதிக்கத்தை” எதிர்க்கும் வழிமுறையாக இனவாத அடிப்படையில் நியாயப்படுத்தியது. காங்கிரஸ் முஸ்லிகளை “திருப்திப்படுத்துவதாக” கூறி அதற்கு எதிராக அணிதிரண்ட இந்து மகாசபையினர், முஸ்லிம்கள் “இந்து தேசிய இனத்தில்” இருந்து வேறுபட்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு முழுக் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் அவர்களது பொது சமூகத் தேவைகளைச் சூழ அணிதிரட்டுவதை நோக்கித் திரும்புவது மட்டுமே இனவாதத்துக்கு எதிராக அரசியல் ரீதியில் போராடுவதற்கான ஒரே வழிமுறையாக இருந்தது. ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவத்தினது அடிப்படை நலன்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற அத்தகைய ஒரு மூலோபாயத்துக்கு இயல்பிலேயே பகைமைகொண்ட காங்கிரஸ், மேலும் மேலும் வகுப்புவாத்திற்கு அடிபணிந்த அதேவேளை, வகுப்புவாதப் பிரிவினையை வெகுஜனங்கள் பூரணமாக எதிர்த்த சமூகப் போராட்டங்களை கட்டுப்படுத்தி நசுக்கியது. 1945-46 தேர்தல்களில், வங்காளத்திலும் ஏனைய இடங்களிலும் இந்து மகாசபையுடன் தேர்தல் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள விரைந்த காங்கிரஸ், இந்து மகாசபை உறுப்பினர்களை தமது உறுப்பினர்களாக வரவேற்றது.

9-3. யுத்தத்துக்குப் பிந்திய ஏகாதிபத்திய-எதிர்ப்பு எழுச்சியானது ஆரம்பத்தில், இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தை கொடூரமாக நசுக்கியதையும் இந்திய தேசிய இராணுவத்தின் (.என்..) தலைவர்களை விசாரணை செய்வதையும் எதிர்க்கும் வடிவத்திலேயே தோன்றியது. ஒரு போர்க்குணமிக்க காங்கிரஸ் தலைவரான சுபாஸ் சந்திர போஸ், காந்தியை எதிர்த்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட முயற்சித்த போதிலும், அவர் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பாமல், ஒரு எதிர் ஏகாதிபத்திய சக்தியின் பக்கமே திரும்பினார். ஜப்பானிய இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு (INA) தலைமையேற்கவும் ஜப்பானியத் தலைமையின் கீழ் பிரிட்டிஷாருக்கு எதிராகச் சண்டையிடுவதற்கும் அவர் உடன்பட்டார். அவர்களது குறிக்கோள்கள் பிழையாக வழிநடத்தப்பட்ட போதிலும், இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்கள் பரந்தளவில் வீரர்களாகவும் தேசாபிமானிகளாகவும் கருதப்பட்டதோடு, அவர்களுக்கு பொதுமன்னிப்பு காட்டுமாறு அழைப்பு விடுத்து இந்தியா பூராவும் வெடித்தெழுந்த போராட்டங்கள் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களையும் ஐக்கியப்படுத்தின. 1945 நவம்பரிலும் மற்றும் மீண்டும் 1946 பெப்பிரவரியிலும் கல்கத்தாவில், இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணைகளுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அமைப்புக்களுடன் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி நெருக்கமாகத் தலையிட்டது. கட்டுப்பாடின்மைக்கும் மற்றும் ஒழுங்கின்மைக்கும் எதிரான போராட்டம் என்ற பெயரில் கூட்டங்களை கலைத்து விடுவதில் காங்கிரசுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்த்துக்கொண்ட அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் வன்முறையால் நசுக்கப்பட்டன.

9-4. 1946 பெப்பிரவரியில், பம்பாயிலும் கராச்சியிலும் இந்தியக் கடற்படை பகுதியினர் சம்பளம் மற்றும் வேலைநிலைமைகள் தொடர்பாக கிளர்ச்சி செய்த அதே வேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய், இந்தோனேஷியாவில் இருந்து பிரிட்டிஷ் இந்திய துருப்புக்களை திருப்பி அழை மற்றும் “இந்தியாவில் இருந்து வெளியேறு” போன்றவை உட்பட ஒரு வரிசையான தீவிர அரசியல் கோரிக்கைகளை எழுப்பினர். அவர்களது நடவடிக்கை, ஏனைய இந்திய இராணுவப் படைப்பிரிவுகளின் ஒத்துழைப்பையும் கிளர்ச்சியையும் காட்சிக்குக் கொண்டுவந்ததோடு, இறுதியில் பம்பாயில் பெரும் தொழிலாளர் நடவடிக்கைகளுக்கும் வீதி மோதல்களுக்கும் தூண்டுதலளித்தது. அந்த எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காக படைகளைப் பயன்படுத்துவதற்கு காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டனுக்கு ஆதரவளித்தன. குறிப்பாக காந்தி கடற்படை (Royal Indian Navy) கிளர்ச்சியாளர்களை கண்டனம் செய்வதிலும் மற்றும் அவர்களது போராட்டத்தின் பண்பாக இருந்த மதப்பாகுபாடு கடந்த ஐக்கியத்தின் பொருட்டும் கடும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார். “மந்தைக் கும்பலின்” வெற்றியைக் காண்பதை விட “தீயில் எரிந்து சாகவே விரும்புவேன்” எனக் கூறிய காந்தி, “வன்முறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களுக்கு இடையிலான ஏற்படக்கூடிய ஒருமைப்பாடு தூய்மையற்றது,” எனப் பிரகடனம் செய்தார். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்களுக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கும் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்த அதேவேளை, ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி “பெருந்திரள் வெறி” என அதைக் கண்டனம் செய்ததுடன் கிளர்ச்சிக்கு பரந்த ஆதரவு கிடைப்பதை தடுக்க முயற்சித்தது. காங்கிரஸ் வெகுஜன இயக்கங்களுக்கு கடிவாளமிட்ட ஏனைய ஒவ்வொரு சமயத்திலும் போலவே, இக்கிளர்ச்சியின் தோல்வியை அடுத்தும் வகுப்புவாதம் தலைநீட்டியது. 1946 ஆகஸ்ட்டில் தனது “பாகிஸ்தான்” கோரிக்கைக்கு ஆதரவாக “நேரடி நடவடிக்கைக்கு” முஸ்லிம் லீக் விடுத்த ஒரு அழைப்பு, கல்கத்தாவில் இந்துக்களுடனான வன்முறை மோதல்களில் முடிவடைந்தது. இதில் 6,000 பேர் உயிரிழந்ததோடு அதற்குப் பதிலடியாக முஸ்லிம்கள் மீதான இந்து இனவாத அட்டூழியங்களும் தூண்டிவிடப்பட்டன.

9-5. யுத்தத்துக்குப் பிந்திய எழுச்சிகள் ஒரு தொழிற்சங்க நடவடிக்கைகளின் அலையையும் தூண்டிவிட்டன. இவற்றில் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உக்கிரமாக தலையீடு செய்ததோடு கணிசமானளவு ஆதரவையும் பெற்றிருந்தது. 1946 ஜூனிலும் மற்றும் மீண்டும் 1947 மார்ச்-ஜூனிலும், மெட்ராஸ் லேபர் யூனியனின் (எம்.எல்.யூ.) தலைமையை வென்ற போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி, இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான, சென்னையில் இருக்கும் பக்கிங்ஹாம் அன்ட் கர்னாட்டிக் (பி அன்ட் சி) நெசவாலைகளில் பெரும் வேலைநிறுத்தங்களுக்கு தலைமை வகித்தது. 1947 வேலைநிறுத்தம் ஒரு கடுமையான மூன்று மாதகால போராட்டமாகும். இதன்போது பாரிய பேரணிகளும், 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறிய வர்த்தகர்களும் பங்கெடுத்த வேலைநிறுத்தங்களும் நடந்தன. ஜூனில், தொழிற்சங்கம் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் நிதிகள் அபகரிக்கப்பட்டு, தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், பி அன்ட் சி ஆலைகளை திறக்க அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்விகண்டது. முடிவில் மெட்ராஸ் லேபர் யூனியன் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்ட போதிலும், முக்கியமான சலுகைகளை வழங்க நிர்வாகத்தை தள்ளியிருந்தது.

9-6 போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி வகுப்புவாத அரசியலுக்கும் தனி முஸ்லிம் பாகிஸ்தானுக்கான கோரிக்கைக்கும் எதிராக ஒரு கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்தது. 1944ல் நடந்த போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மாநாட்டின் தீர்மானமொன்று பிரகடனம் செய்ததாவது: “இந்த கோஷமானது அரசியல்ரீதியில் பிற்போக்கானதும் தத்துவார்த்தரீதியில் பிழையானதுமாகும். முஸ்லிம் வெகுஜனங்களின் வளர்ச்சியடைந்துவரும் அதிருப்தியை, அவர்களின் உண்மையான எதிரியான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்நாட்டு பங்காளிகளுக்கு எதிராய் செலுத்தப்படுவதில் இருந்து திசைதிருப்பி இந்துக்களுக்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற நோக்குடன் வகுப்புவாத உணர்வுகளுக்கு அழைப்புவிடும் முயற்சியை உள்ளடக்கியிருக்கின்றது என்னும் வகையில் இது அரசியல்ரீதியில் பிற்போக்கானதாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் ஒரு தேசிய இனம், அவர்கள் இந்து என்கிற தேசிய இன மக்களால் ஒடுக்கப்படுகின்றனர் (இதுவும் அதே அளவுக்கு பிழையானது) என்கிற தாக்குப்பிடிக்கவியலாத ஒரு கருத்தில் இருந்து இது தோன்றுவதால் தத்துவார்த்தரீதியாகவும் போலியானது. பொது வரலாற்று பாரம்பரியம், மொழி, கலாச்சாரம், அல்லது இனம், அல்லது புவியியல்ரீதியான மற்றும் பொருளாதார காரணிகளைப் பொறுத்தளவில் எடுத்துக்கொண்டாலும், ஒரு தனித்துவமான முஸ்லிம் தேசிய இனமொன்று எழுவதற்கான அடிப்படை எதுவும் கிடையாது. மதம் மட்டுமே (அதனைச் சூழ அமைகின்ற எந்தவொரு கலாச்சார பொதுக் கூறையும் சேர்த்து)  அவர்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரே காரணியாகும். அனைத்து வரலாற்று அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், ஒரு தேசிய நனவினை அடக்கிய எந்தவொரு உணர்ச்சியையும் உருவாக்க இந்த ஒரு காரணி மட்டுமே போதுமானதல்ல என்பது தெள்ளத்தெளிவான விடயமாகும். [17]

9-7. எவ்வாறெனினும், பிரிட்டன் மற்றும் அதன் மன்னர்கள் மற்றும் நிலப்பிரபு பங்காளிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு துரிதமாக காங்கிரஸ் நகர்ந்தது. காங்கிரஸ் தலைமை தனக்கு ஆதரவு திரட்டிக்கொள்வதற்காக இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்துடனான அதன் தொடர்பை சுரண்டிக்கொண்ட அதே வேளையில், காந்தியும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டதை அடுத்தும் யுத்தத்துக்குப் பிந்திய சமூகப் போராட்டங்கள் வளர்ச்சியடைந்ததாலும் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம் தீவிரமய திருப்பத்தை எடுத்ததானது, காங்கிரஸ் தலைமையை,

பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால் விடுகின்றதான எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் தலைமை வகிக்க விரும்பாத நிலைக்கும் முதலாளித்துவ ஆட்சியை சாத்தியமானளவு விரைவில் ஸ்திரப்படுத்தும் பொருட்டு காலனித்துவ அரசில்  பங்குபெறுவதற்கும் தீர்மானம் கொண்டதாக ஆக்கியது. இதன் விளைவாக, முழுமையான சுதந்திரத்துக்கான தமது கோரிக்கையை கைவிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பிரிட்டனுடனான பிணைப்பு தொடர்ந்தும் அப்படியே இருக்க, ஒரு டொமினியன் அந்தஸ்தை (Dominion status) ஏற்றுக்கொண்டனர். அவர்கள் முழுமையான சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புச் சபைக்கான தமது கோரிக்கையையும் கைவிட்டதோடு மன்னர்களதும் நிலப்பிரப்புக்களதும் ஆட்சியை தீவிரமாக சவால்செய்வதை தவிர்க்க முயன்றனர். மிகவும் அடிப்படையாய், ஐக்கியப்பட்ட மற்றும் மதச்சார்பற்ற இந்தியா என்ற தனது வேலைத்திட்டத்தையும் கைவிட்ட காங்கிரஸ், துணைக்கண்டத்தை வகுப்புவாத முறையில் பிரிப்பதை ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தியது. வங்காளத்தையும் பஞ்சாப்பையும் முழுமையாக பாகிஸ்தானுக்குள் உள்ளடக்குமாறு முஸ்லிம் லீக் நெருக்கிய அதேவேளை, காங்கிரஸ் இந்த இரு மாகாணங்களையும் வகுப்புவாத ரீதியில் பிரிப்பதற்கு பரிந்துரைத்ததுடன், இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும் ஜன சங்கத்தின் (பின்னர் அது பாரதீய ஜனதா கட்சி [பி.ஜே.பீ.]) எதிர்கால ஸ்தாபகருமான எஸ்.பீ. முகர்ஜீ உள்ளிட்ட, மோசமான வகுப்புவாத சக்திகளுடன் சேர்ந்து செயற்படுவதையிட்டு எந்தவித மனக்கிலேசமும் கொள்ளவில்லை. பஞ்சாப்பிலும் மற்றும் வங்காளத்திலும் முஸ்லிம் “மேலாதிக்கத்திடம்” இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் “பாதுகாப்பதற்கான” காங்கிரசின் பிரச்சாரம், 1947 பிரிவினையின் போது இடம்பெற்ற வகுப்புவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதில் ஒரு பிரதான காரணியாக இருந்தது. இதில் இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 12-14 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

9-8. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவியும் ஊக்குவிப்பும் கொடுத்தது. முதலில் காங்கிரஸ் வடிவத்திலும், பின்னர், பிரிட்டன் ஆட்சியின் கடைசி வருடங்களில் வகுப்புவாதத்தின் எழுச்சிக்கும், மேலும் முஸ்லிம் லீக்குக்கும் அடிபணிந்ததன் மூலம் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை இந்திய முதலாளித்துவத்துக்கு கீழ்ப்படியச் செய்தது. பாகிஸ்தான் சுலோகத்தை முஸ்லிம் சுயநிர்ணய உரிமையின் நியாயமான வெளிப்பாடாக அறிவித்து அதற்கு அரசியல் நியாயத்தன்மையை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் முஸ்லிம் லீக்குக்கு ஒரு சமூகத் தளத்தைக் கட்டியெழுப்புகின்ற வகையில் தன் உறுப்பினர்களை லீக்குக்குள் அனுப்பியது. 1945 மற்றும் 1947க்கு இடையில் காங்கிரசும் முஸ்லிம்லீக்கும் வகுப்புவாத தீயிற்கு எண்ணெய் வார்த்த நிலையில், அந்தப் போட்டி முதலாளித்துவ கட்சிகள் ஒன்றுபட்டு தேசியப் புரட்சிக்கு தலைமை கொடுக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரயோசனமற்ற அழைப்புகளை விடுத்தது.

9-9. இந்தப் பிரிவினை முதலாளித்துவ இந்தியா மற்றும் முதலாளித்துவ பாகிஸ்தான் அவதாரங்களை “விடுதலை” மற்றும் “சுதந்திரம்” என்று வரையறுத்தது,  வரையறுக்கின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பிறப்புடன் சேர்ந்தே நடைபெற்ற இனப்படுகொலைகள், ஜனநாயகப் புரட்சி கருக்கலைக்கப்பட்டதன் மிகவும் இரத்தக்களரி மிக்க உடனடி வெளிப்படையான பின்விளைவு மட்டுமேயாகும். இந்த புதிய அரசுகள் ஜமீன்தார்களின், மன்னர்களின் மற்றும் பெரும் வர்த்தகர்களின் சொத்துக்களைப் பாதுகாத்தன; முதலாளித்துவ அபிவிருத்திக்கு வழிவகை செய்கின்ற நோக்கத்துடன் கையளவேயான அற்ப, துண்டு துண்டான சீர்திருத்தங்களில் அநேகமானவற்றை ஏற்றுக்கொண்டன; பிரிட்டன் காலனித்துவ அரசின் பிரதான ஸ்தாபகங்களையும் சட்டங்களையும் தொடர்ந்தும் வைத்துக் கொண்டன. ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னும், வெகுஜனங்களின் உடனடி ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அதற்கு மாறாக நிலவுடமை, சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஏனைய நிலப்பிரபுத்துவ எச்சங்கள் முதலாளித்துவ சுரண்டலுடன் மேலும் மேலும் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், அந்தப் பிரச்சனைகள் மேலும் ஆபத்தான முறையில் வளர்ச்சி கண்டுள்ளன.

9-10. இந்தப் பிரிவினை “வகுப்புவாதப் பிரச்சினைகளை” தீர்ப்பதற்கெல்லாம் தூரத்தில், தெற்காசியாவின் அரச கட்டமைப்பினுள் வகுப்புவாதப் பிளவுகளை புனிதப்படுத்தியதன் மூலம் அதை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்துத்துவ கருத்தியல்வாதியான வி.டி. சவார்கரின் விசுவாசி ஒருவரால் 1948 ஜனவரியில் காந்தி கொலைசெய்யப்பட்ட பின்னர், கல்கத்தாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா விளக்கியதாவது: “பிரிவினையின் துன்பமானது குறிப்பாக அதனை வடிவமைத்தவர்களது பிரகடனப்படுத்தப்பட்ட குறிக்கோளில் இருந்து ஊற்றெடுக்கின்றது. ஒருபுறம் இந்தியாவின் உயிருள்ள சரீரத்தை துண்டுபோட்டமை இன்னொருபுறம் இரு உயிருள்ள “தேசிய இனங்களை” (பஞ்சாப் மற்றும் வங்காள மக்கள்) துண்டுபோட்டமை, ஒருபக்கத்தில் வகுப்புவாதப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும் மறுபக்கத்தில் சுதந்திரத்துக்கான பாதையை திறப்பதற்கான வழிமுறையாகவும் முன்வைக்கப்படுகின்றது. இரு கூற்றுக்களுமே போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிவினையானது ஒரு அம்சத்தில் வெகுஜனங்களை ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்துகின்ற சங்கிலியை மீண்டும் பிணைப்பதற்கான ஒரு வழிமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது... இன்னொரு அம்சத்தில், மக்கள் கிளர்ச்சியை உள்முகமான வகுப்புவாத உணர்வுகளுக்குள் திருப்பிவிடும் ஒரே வழிமுறையாக பரஸ்பர யுத்தச் சிந்தனைக்குள் இரு நாடுகளையும் வசப்படுத்தும் வழிமுறையாக அது நிரூபிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இன்னமும் வராமல் இருக்கலாம் (அது காஷ்மீர் மற்றும் ஜனாகாத்தில் ஏற்கனவே வந்துவிட்டிருக்காத பட்சத்தில்). ஆனால், உள்நாட்டு அமைதியின்மை அழிவுகரமான முறையில் வெளித்தோன்றியுள்ளது.”

9-11. டி சில்வாவின் எச்சரிக்கைகள் தீர்க்கதரிசனம் போல் நிரூபணமாயின. இந்தப் பிரிவினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிற்போக்கு பூகோள-அரசியல் போராட்டங்களை வளர்ச்சியடையச் செய்துள்ளது. இது மூன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தங்களையும் எண்ணிலடங்கா யுத்த நெருக்கடிகளையும் முக்கிய பொருளாதார வளங்களின் அழிவையும் விளைவாக்கியதோடு, இன்று அணுவாயுத மோதல் ஆபத்தைக் கொண்டு தெற்காசிய மக்களை அச்சுறுத்துகின்றது. 1947-48 இல் நடந்த முதலாவது இந்திய-பாக்கிஸ்தான் யுத்தம், பிளவுபட்ட ஒரு காஷ்மீரை உருவாக்கியது. இது காஷ்மீர் மக்களை இரக்கமின்றி பிளவுபடுத்தியுள்ளதோடு, வகுப்புவாத ரீதியில் பிரிக்கப்பட்ட துணைக்கண்டத்தின் கட்டமைப்பினுள் எளிதில் கையாளமுடியாத ஒரு அரசியல் பிரச்சினையாகவும் நிரூபணமாகியுள்ளது. எண்ணற்ற சமூகப் பதட்டங்களில் எதையும் தீர்க்க இலாயக்கற்ற இரு நாடுகளையும் சேர்ந்த ஆளும் தட்டுக்கள், உள்நாட்டில் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக வகுப்புவாத வார்த்தைஜாலங்களை நாடுவதை வழமையாகக் கொண்டுள்ளன. நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட பகுத்தறிவுடனான பொருளாதார அபிவிருத்தியை கிட்டவிடாமல் செய்வதன் மூலமும், அமெரிக்காவும் மற்ற பெரும் சக்திகளும் ஒரு நாட்டின் ஆளும் உயரடுக்கினை  இன்னொரு நாட்டின் ஆளும் உயரடுக்கிற்கு எதிராய் நிறுத்தி விளையாடுவதற்கு வசதியளிக்கின்ற ஒரு அரசியல் இயங்குமுறையை வழங்கியிருப்பதன் மூலமும் பிரிவினையானது தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு வழிவகை செய்திருக்கிறது. இன்று உலகில் வறியவர்கள் அதிகளவில் குவிந்துகிடக்கும் பகுதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியில் மிகக்குறைந்த ஒருங்கிணைவைக் கொண்ட பகுதியாகவும் தெற்காசியா உள்ளது.

10. இலங்கையில் உத்தியோகபூர்வ சுதந்திரம்

10-1. இலங்கைக்கு சுய-அரசாங்கத்தை அனுமதிக்க பிரிட்டன் எடுத்த முடிவு, இலங்கை தேசிய காங்கிரஸ் (சி.என்.சி.) முன்னெடுத்த எந்தவொரு வெகுஜனப் பிரச்சாரத்தினதும் விளைபொருள் அல்ல. இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய மையமாக அமைந்துள்ளதனால், இந்தத் தீவானது இரண்டாம் உலகப் போரின் போது நேசநாடுகளின் தென் கிழக்காசியக் கட்டளையகத்துக்கு தலைமையகமாக மாறியது. அமைச்சர்கள் சபையின் தலைவராக இருந்த டி.எஸ். சேனாநாயக்க, இலங்கை தேசிய காங்கிரஸ் யுத்தத்துக்கு வழங்கிய முழு ஆதரவைப் பயன்படுத்தி யுத்தத்துக்குப் பிந்திய சுய-அரசாங்கத்துக்காக மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசினார். சேனாநாயக்கவும் அவரது கூட்டாளிகளும் மேலாட்சிக்குட்பட்ட நிலைக்கு அதிகமாய் தமது பார்வையை செலுத்தவே இல்லை. அதாவது, தீவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கொள்கைகளை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை தொடர்ந்தும் இலண்டனே தீர்மானிக்கும் வகையில், பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாக இருப்பதே இந்த மேலாட்சிக்குட்பட்ட நிலையாகும். எந்தவொரு தீர்விலும் சிங்கள தட்டுக்களின் அரசியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதே பேச்சுவார்த்தைகளில் சேனாநாயக்கவின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அவர் வெளிநாட்டுக் கொள்கையை முழுவதுமாக பிரிட்டனே கட்டுப்படுத்துவதை எதிர்க்காத போதிலும், தீவின் தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்காக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கையே பொறுப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 1944ல் இலண்டன் ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்காக சோல்பரி ஆணைக்குழுவை ஸ்தாபித்த போது, அதன் பிரதிநிதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதை சேனாநாயக்க எதிர்த்தார். சோல்பரி ஆணைக்குழு மட்டுப்படுத்தப்பட்ட சுய-அரசாங்கத்தை சிபாரிசு செய்த போதிலும் டொமினியன் அந்தஸ்தையும் கூட வழங்கத் தாமதித்ததற்குப் பின்னர், சேனாநாயக்கவும் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்களும் 1945 செப்டெம்பரில் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வாக்களித்தனர்.

10-2. இலங்கையில், போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமே யுத்தத்தை எதிர்த்து சுதந்திரத்துக்காகப் பிரச்சாரம் செய்ததால், அவர்கள் சிறையில் இருந்து கணிசமானளவு மரியாதையுடன் வெளியேவந்தனர். ஆயினும், யுத்தத்தின் போது பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும் வரைந்த சந்தர்ப்பவாத நோக்குநிலை, விரைவில் கட்சிக்குள் ஒரு வெளிப்படையான பிளவாக வெளிவந்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பிராந்திய குழுவின் அதிகாரத்தை இலங்கையில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும், யுத்தத்துக்கு முன்னர் பயன்படுத்திய லங்கா சமசமாஜக் கட்சி என்ற பெயரை பயன்படுத்தி தமது சொந்தக் கட்சியை ஸ்தாபித்தனர். 1941ல் லங்கா சமசமாஜக் கட்சி வரைந்த இலங்கைக்கான வேலைத்திட்டத்தை அந்தக் கட்சி மீண்டும் எடுத்துக்கொண்டதோடு, 1942ல் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் அது எடுத்த தீர்மானங்களையும் சகல ஆவணங்களையும் மறுத்து ஒதுக்கியது. குணவர்த்தனாவும் பெரேராவும், லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஓடுகாலிகளுக்கும் கதவுகளைத் திறந்துவிட்டதோடு பல்வேறு முதலாளித்துவ அமைப்புக்களுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளவும் முயற்சித்தனர். லங்கா சமசமாஜக் கட்சி தன்னை “நான்காம் அகிலத்திற்காக” என்பதாய் அறிவித்துக்கொண்ட போதும், அதனுடன் இணைப்பைப் பெறுவதற்கு அது முயற்சிக்கவில்லை. லங்கா சமசமாஜக் கட்சியின் தேசியவாத நோக்குநிலை, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து அடிப்படையில் பிரிவதையும் யுத்தத்துக்கு முந்திய சமசமாஜவாதத்தின் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு மீண்டும் திரும்புவதையும் குறித்து நின்றது. “இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி: ஒரு குறுங்குழுவாத மரண முடிவு” என்ற தலைப்பில் பிலிப் குணவர்த்தனா 1947ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒட்டுமொத்த போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி வேலைத்திட்டமும் ட்ரொட்ஸ்கிசமும் ஒரு தோல்விகண்ட வீரசாகசமே தவிர வேறொன்றுமல்ல எனத் தான் கருதுவதை தெளிவுபடுத்திவிட்டார்.

10-3. பிலிப் குணவர்த்தனாவையும் என்.எம். பெரேராவையும் வெளியேற்ற, இந்தியாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மத்திய குழு எடுத்த தீர்மானமொன்று, “இந்தப் பிளவு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக, குட்டிமுதலாளித்துவ சக்திகளின் அழுத்தத்தின் கீழ் அபிவிருத்தியடைந்த, பாட்டாளி வர்க்கம் சாராத ஒரு போக்கின் தெளிவான வெளிப்பாடாகும்.... அமைப்பு மட்டத்தில் தெளிவாகக் காணக்கூடியதாய் இருக்கும் இன்றைய வேறுபாடுகள் அரசியல் மட்டத்தில் அபிவிருத்தி காணும் காலவிதியைக் கொண்டுள்ளன,” என்று முடிக்கப்பட்டிருந்தது. 1946ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரீட்சார்த்தமான மறுஐக்கியம் துரிதமாக நொருங்கி அரசியல் வேறுபாடுகளின் அடிப்படைப் பண்பை கோடிட்டுக் காட்டின.

10-4. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியும் (இலங்கை பகுதி) லங்கா சமசமாஜக் கட்சியும், யுத்தத்தின் பின்னர் தோன்றிய போர்க்குணமிக்க வேலை நிறுத்த இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தமை, தொழிற்சங்க இயந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வேலை நிறுத்தங்களை தகர்க்கும் அமைப்பாக தனது நிலையைப் பயன்படுத்திக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கைக் கீழறுத்தது. வங்கி எழுத்தர்களின் வேலை நிறுத்தத்துடன் 1946 ஆகஸ்ட்டில் வெடித்த ஒரு பொது வேலை நிறுத்தம், அடுத்த இரண்டு மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மத்தியிலும் பரவி, பிரிட்டனின் ஆளுனரை சில பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் முன்வைத்தனர். தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை கடுமையாக எதிர்த்த இலங்கை தேசிய காங்கிரஸ் அமைச்சர்கள், 1946 உடன்பாடுகளின் நெறிமுறைகளை மீறி, 1947 மே-ஜூன் மாதங்களில் இரண்டாவது பொது வேலை நிறுத்தத்தை தூண்டினர். இந்த வேலை நிறுத்தம் வன்முறையான அடக்குமுறையை சந்தித்தது. ஆயிரக்கணக்கான அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வேட்டையாடப்பட்டு, தமது வேலைகளை இழந்தனர். வேலைநிறுத்தத்தின் கடைசி நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய அரசாங்கம், பொலிசாருக்கு பரந்த அதிகாரங்களை கொடுத்தது.

10-5. இந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி, 1947 ஜூனில், இந்தியா மற்றும் பர்மா வரிசையில் இலங்கைக்கும் முழு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. ஒரு வரலாற்றாசிரியர் எழுதியது போல்: “சேனாநாயக்கவும் [இலங்கை தேசிய காங்கிரஸ்] மிதவாதிகளும், ஏனைய விமர்சகர்களுக்கும் மேலாக, இடதுசாரி சக்திகளின் அதிகரித்துவரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்; டொமினியன் அந்தஸ்தை உடனடியாக வழங்குவதென்பது இப்போது அவர்களது அரசியல் உயிர்வாழ்க்கையை உறுதிசெய்கின்ற ஒரு வழியாக அவசரத் தேவையாக உள்ளது என்பது பற்றி பிரிட்டன் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான புரிந்துணர்வு இருந்தது.[18] 1947 பிற்பகுதியில் நடந்த அரச சபை தேர்தலில், இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் ஏனைய முதலாளித்துவ அமைப்புக்களில் இருந்து சேனாநாயக்கவால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), பரவலான வெற்றி பெற்று ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மற்றும் ல....யும் கணிசமான எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்றன.

10-6. ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) அரசியல்வாதியான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையின் கீழ், ஆளும் பாராளுமன்ற கூட்டணியொன்றை அமைக்க லங்கா சமசமாஜக் கட்சி சூழ்ச்சிகளை வகுத்ததில், சிங்கள முதலாளித்துவத்துக்கான அதன் சந்தர்ப்பவாத அடிபணிவு உடனடியாக அம்பலத்துக்கு வந்தது. வெளிப்படையாகவே இன மற்றும் மத அடிப்படையில் சிங்கள பெரும்பான்மையினரை ஐக்கியப்படுத்துவதற்காக 1919ல் அமைக்கப்பட்ட சிங்கள மகா சபைக்கு பண்டாரநாயக்கவே தலைவராக இருந்தார். கொல்வின் ஆர். டி சில்வா, 1939ல், சிங்கள மகா சபையானது “ஒரு ஆபத்தான பிற்போக்குச் சபையாகும்”, அது “காவிநிற பாசிசத்தின் ஒரு உள்ளூர் வடிவத்தை” எடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது, என எச்சரித்தார்.[19] பண்டாரநாயக்கவின் கீழான ஒரு ஆளும் கூட்டணிக்கு ஆதரவளிக்க லங்கா சமசமாஜக் கட்சி எடுத்த முயற்சிகள், சிங்கள ஜனரஞ்சகவாதத்தை யூ.என்.பீ.க்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக சித்தரித்துக் காட்டும் ஒரு ஆபத்தான பாதையை நோக்கிய முதல் அடியெடுப்பாக இருந்தது. இந்த பிற்போக்கு பாசாங்கில் பங்குபெற போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மறுத்ததை அடுத்து லங்கா சமசமாஜக் கட்சியின் சூழ்ச்சித்திட்டங்கள் பொறிந்து போயின.

10-7. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் வர்க்க நிலைநோக்கில் இருந்த அடிப்படை வேறுபாடுகள், 1948 பெப்பிரவரி 4 அன்று பிரிட்டன் கையளித்த “சுதந்திரம்” சம்பந்தமான விடயத்தில் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைய தினம், “சுதந்திரம் உண்மையானதா போலியானதா” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சக்திவாய்ந்த அறிக்கையொன்றில், போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, இலங்கை மக்களுக்கு “சுதந்திர”க் கொண்டாட்டங்கள் பற்றி மகிழ்ச்சியுறுவதற்கு ஒன்றும் இல்லை, என அறிவித்தார். “அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள புதிய நிலை, “சுதந்திரம்” அல்ல. மாறாக, உண்மையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இலங்கை அடிமைகளின் சங்கிலிகளை மறுவடிவமைப்பு செய்வதாகும். பிரிட்டன் ஏகாதிபத்தியம் அந்த ஆட்சியை செலுத்துவதற்கான வழிமுறையின் தொடர்ச்சியே இதுவாகும்... இலங்கையின் ‘அந்தஸ்தில்’ ‘மாற்றம் எதுவும் இல்லை’ என மூடர்கள் மட்டுமே வாதிட முடியும். மாற்றமொன்று இருக்கின்றது. ஆனால், அந்த மாற்றத்தின் சாரம், இலங்கை காலனித்துவ நிலையில் இருந்து சுதந்திரமான நிலைக்குச் சென்றதைக் குறிக்கவில்லை. மாறாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை நேரடியாக ஆளும் வழிமுறையில் இருந்து, மறைமுகமாக ஆளும் வழிமுறைக்கு மாறிச் சென்றுள்ளதையே குறிக்கிறது.”[20] போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அரச சபையில் அரசாங்கத்தின் சுதந்திரம் சம்பந்தமான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்லாமல், உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களுக்கு எதிராக, மத்திய கொழும்பில் காலிமுகத் திடலில், சுமார் 50,000 பேர் பங்குபெற்ற பெரிய கூட்டமொன்றையும் ஏற்பாடு செய்தது. இதற்கு நேர்மாறான விதத்தில், “சுதந்திரமானது” ஒரு மட்டுப்படுத்தப்பட்ட முன்நகர்வு எனப் பிரகடனம் செய்த லங்கா சமசமாஜக் கட்சி, பாராளுமன்றத்தில் வாக்களிப்பைப் புறக்கணித்தது. போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பேரணியில் பங்குபெற மறுத்த லங்கா சமசமாஜக் கட்சி, அந்தப் பேரணி “பகட்டான போல்ஷவிக்குகள்” நடத்தும் “பகட்டுக்காட்சி, அதிதீவிர-இடதுசாரியம் மற்றும் சாகச நடவடிக்கை” எனக் கண்டனம் செய்தது.

10-8. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இலங்கை முதலாளித்துவத்துக்கும் இடையில் ஏற்பட்ட “சுதந்திர” ஏற்பாட்டின் ஜனநாயக-விரோதப் பண்பு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கைகளில் வெளிப்படையானது. ஐக்கிய தேசியக் கட்சி இலட்சக்கணக்கில் இருந்த தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான பிரஜா உரிமையை பறிக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது. இந்த ஜனநாயக விரோதச் சட்டத்தை போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி சமரசமற்று எதிர்த்தது. கொல்வின் ஆர். டி சில்வா 1948 ஆகஸ்டில் ஆற்றிய உரையில், “அரசு தேசத்திற்கு சமமானதாகவும் தேசம் இனத்திற்கு சமமானதாகவும் இருக்கவேண்டும்” எனக் கருதுவது, “ஒரு காலங்கடந்த கருத்தும் தகர்த்தெறியப்பட்ட மெய்யியலும் ஆகும்” எனத் தெரிவித்தார். “நிச்சயமாக பாசிசத்தின் கீழேயே, தேசம் இனத்துக்கு சமமானதாக இருக்கும் என்பதோடு அரசை வடிவமைப்பதில் இனம் ஆதிக்கம்செலுத்தும் காரணியாகவும் இருக்கும். இந்தப் பிரச்சினையை இந்த அரசாங்கம் முதலாளித்துவ வர்க்க கோணத்தில் அணுகுமானால், நான்காம் அகிலத்தினராகிய நாம், அதாவது எமது கட்சி, இந்தப் பிரச்சினையை தொழிலாள வர்க்கத்தின் கோணத்தில் இருந்து அணுகுவோம். அதாவது, நாம் இனப் பிரச்சினையில் இருந்து சுயாதீனமாக மற்றும் இனப் பிரச்சினையை விடவும் மேலானதாக வர்க்க கோணத்தில் இருந்து அணுகுவோம். மனிதனுக்கு மனிதன் இன வம்சாவளியின் அடிப்படையிலான பிளவுகளை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நாம் தயாரில்லை. ஒரு தொழிலாளி முதலும் முக்கியமுமாக ஒரு தொழிலாளியே என நாம் கூறுகின்றோம்,” என அவர் மேலும் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்த தமிழ் முதலாளித்துவத் தட்டுக்கள், அந்த மசோதாவுக்கு வாக்களித்ததன் மூலம், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக, தமது வர்க்க ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர். தமிழ் காங்கிரஸில் ஒரு சிறு குழு, இந்த சட்டத்தை எதிர்த்து, அதில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை அமைத்தது.

10-9. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில், யுத்தத்துக்குப் பிந்திய சுதந்திர ஏற்பாடுகளின் பண்பைப் பற்றி போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி செய்த தொலைநோக்கான ஆய்வுகள் காலத்திற்குத் தாக்குப் பிடித்து நின்றுள்ளன. மேலாதிக்கம் செய்யும் ஏகாதிபத்திய சக்தி என்ற பிரிட்டனின் நிலையை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டதும் மற்றும் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் இருந்தமையானது சூழ்ச்சித் திட்டங்களுக்கு இடமளித்திருந்ததுமான அதேநேரத்தில், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் புதிதாக “சுதந்திரமடைந்த” முதலாளித்துவ அரசுகள், ஏகாதிபத்தியத்துக்கும் மற்றும் அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதார செயல்திட்டத்துக்கும் அடிபணிந்தவையாக தொடர்ந்தும் இருந்தன. இந்தியாவில் நேரு, இந்தோனேஷியாவின் சுகார்ணோ, எகிப்தில் நாசர் மற்றும் தான்சானியாவில் நைராரே போன்ற தலைவர்களால் தங்களை “ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக” அல்லது “சோசலிஸ்டுகளாக” காட்டிக்கொள்ள முடிவதென்பது முதலாவதாக சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து கிடைத்ததான விமர்சனமற்ற ஆதரவையும் அத்துடன் இரண்டாவதாக தேசியப் பொருளாதார ஒழுங்குக் கொள்கைகளையும் (இறக்குமதியை உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு பிரதியீடு செய்வது, வரம்புபட்ட தேசியமயமாக்கல்கள் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல்கள் போன்றவை) சார்ந்ததாய் இருந்தது. சுதந்திரம் குறித்த மாயத்தோற்றமானது, யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதார வளர்ச்சியின் முடிவுடனும் மற்றும் தேசிய சீர்திருத்தக் கொள்கைகளை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு முறையின் பொறிவுடனும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியா மற்றும் இலங்கையைப் போல், நாட்டுக்கு நாடு, தேசிய முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது. முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களின் பொருளாதார நலன்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டி, முன்னதாக இருந்த இன-மொழி மற்றும் கலாச்சார உறவுகளை வெட்டி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எல்லைக் கோடுகள் இன்னமும் நிலவுகின்றன. புதிய அரசுகளுக்குள், ஆளும் தட்டுக்கள், ஒரு இனக்குழு, பழங்குடிக் குழு அல்லது மதக் குழு எஞ்சியிருப்பவர்களின் மீது ஜனநாயக விரோதமாக மேலாதிக்கம் செய்வதன் மீது தான் பரவலாய் தங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன.

[17] [www.marxists.org]

.[18] [A History of Sri Lanka (இலங்கையின் வரலாறு) கே.எம். டி சில்வா, பக்கம் 460]

[19] [Britain, World War 2 and the Sama Samajists (பிரிட்டனும் இரண்டாம் உலக யுத்தமும் சமசமாஜிஸ்டுகளும்) இளம் சோசலிஸ்டுகள் வெளியீடு, பக்கம் 63]

[20] [Blows against the Empire, பக்கம் 127]