சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  6

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 6

By the the Socialist Equality Party (Sri Lanka)
31 March 2012

Use this version to print | Send feedback

13. பகிரங்க கடிதத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் பதிலிறுப்பு

13-1. பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதில் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் (SWP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் (ICFI) ஆதரவளிக்க லங்கா சமசமாஜக் கட்சி மறுத்தமை, அதன் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்ததோடு அதன் அரசியல் சீரழிவை பெருமளவில் துரிதப்படுத்தியது. பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு நோக்குநிலை மீது விமர்சனப் பார்வை கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமை அதேவேளை தேசிய சீர்திருத்தவாதக் கொள்கைகளை (இது பாராளுமன்றவாதத்தினதும் தொழிற்சங்கவாதத்தினதும் (Syndicalism) கூட்டிணைவாய் இருந்தது) தான் ஏற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலளித்த, அடித்தளத்திலிருந்த கலைப்புவாத நோக்குநிலைக்கு உறுதியான அனுதாபத்தைக் காட்டியது. பாராளுமன்றம், தொழிற்சங்கம் ஆகிய இரண்டுமே ஒரு புரட்சிகரக் கட்சி தனது முன்னோக்கிற்காகப் போராடுவதற்குப் பயன்படுத்தக் கடமையிருக்கும் குரோதமான களங்களாகும், ஆனால் இந்த இரண்டுமே தொழிலாள வர்க்கத்துக்குள் உள்ள சீர்திருத்தவாத பிரமைகளை ஏற்றுக் கொள்ளும்படி கட்சியின் மீது பலமான அழுத்தங்களை தவிர்க்கவியலாமல் கொண்டுவந்து சேர்க்கின்றன. லங்கா சமசமாஜக் கட்சித்  தலைவர்கள், இன்னமும் வார்த்தையளவில் ட்ரொட்ஸ்கித்தை தழுவிக்கொண்டிருந்த போதும், மேலும் மேலும் தமது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் தமது தொழிற்சங்கங்களின் அளவு என்ற விதத்திலேயே தமது வெற்றிகளை அளவிட முயன்றனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதை விட, பாராளுமன்ற கூட்டையும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கோரிக்கைகள் சூழ நடத்தும் வேலை நிறுத்தங்களையுமே சோசலிசத்துக்கான பாதையாகக் கருதினர்.

13-2. லங்கா சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத நோக்குநிலையின் விளைவுகள், தீவில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு பெரும் நெருக்கடியாய் அமைந்த 1953 ஆகஸ்ட் நிகழ்வுகளில் ஏற்கனவே வெளிக் காட்டப்பட்டிருந்தன. 1952 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுதியான வெற்றியை பெற்றது. ஐக்கியப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி ஆசனங்களை இழந்ததோடு, 1951ல் S.W.R.D.பண்டாரநாயக்கா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஆரவாரமின்றி முதலாவதாக காட்சிக்கு வந்தது. எவ்வாறெனினும், ஒரு ஆண்டுக்குள், கொரிய யுத்தத்தின் முடிவினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் தூண்டிவிடப்பட்ட, தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஒரு அரை-கிளர்ச்சி இயக்கத்தின் தாக்கத்தின் கீழ், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அநேகமாக பொறிவுக்குச் சென்றது. விலைவாசி அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன், லங்கா சமசமாஜக் கட்சி ஆகஸ்ட் 12 அன்று ஒரு நாள் ஹர்த்தாலுக்கு – பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் - அழைப்பு விடுத்தது. இதற்கு மக்களின் பதிலிறுப்பு லங்கா சமசமாஜக் கட்சி  உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. வேலை நிறுத்தத்தால் கொழும்பு ஸ்தம்பித்ததோடு தெற்கு மற்றும் மேற்கின் கிராமப் புறங்கள் வரை ஆர்ப்பாட்டங்கள் பரவின. பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரின் வன்முறையை எதிர்த்து நின்று, வீதிகளை அடைத்ததுடன் ரயில் பாதைகளையும் கழற்றினர். பீதியடைந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் யுத்தக் கப்பலொன்றில் கூடியது, அது அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி, இராணுவத்தை வீதிக்கழைத்து, கட்சி அலுவலகங்களையும் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் அச்சகங்களையும் மூடி சீல்வைத்ததோடு ஊரடங்குச் சட்டத்தையும் அமுல் செய்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு அதிகமாகத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களின் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

13-3. அடுத்துவந்த லங்கா சமசமாஜக் கட்சியின் புனைகதைகள், 1953 ஹர்த்தாலை பயன்படுத்தி கட்சியின் புரட்சிகர பண்பை வெளிப்படுத்துவதற்காக இருந்தன. உண்மையில், அந்த வெகுஜன இயக்கத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சி தலைமையை வழங்கவில்லை. பிரச்சாரத்தை நிறைவேற்றுவதற்கு தொழிற்சாலைகள், புறநகரங்கள் மற்றும் கிராமங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை ஒழுங்கு செய்யவும் அழைப்பு விடுப்பது போன்ற, அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க அது தவறியது. மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஹர்த்தாலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்புவிடுத்ததோடு, தொடர்ந்தும் எதிர்ப்பை முன்னெடுத்தவர்களை அரச வன்முறைக்கு தனியாய் முகங்கொடுக்கவும் தள்ளினர். ஒரு நீண்ட கட்டுரையில், ஹர்த்தாலானது “தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் அடையாளத்தைக் கொண்ட” வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் என கொல்வின் ஆர். டி சில்வா தெரிவித்தார். ஆனால், “ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை இராஜினாமா செய்து புதிய பொதுத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கவே” இப்போது போராட வேண்டும் என அவர் அந்தக் கட்டுரையை முடித்தார். லங்கா சமசமாஜக் கட்சி அதன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு உதவிப் பொருளாக மட்டுமே ஹர்த்தாலை நோக்கியது. இதன் விளைவாக, வெகுஜன எதிர்ப்பு உணர்வை பண்டாரநாயக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்ததோடு, அவர் குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைத்துவமின்மையினால் குழம்பிப்போயிருந்த சிங்கள கிராமப்புற மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது பண்டாரநாயக்கா நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தபோது, லங்கா சமசமாஜக் கட்சி அதற்கு ஆதரவளித்தமையினால், பண்டாரநாயக்காவின் அரசியல் வளர்ச்சி மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. ஹர்த்தாலின் வீச்சினால் அதிர்ச்சியடைந்த, இலங்கை ஆளும் தட்டின் கணிசமான பகுதியினர், முதலாளித்துவ ஆட்சியை தூக்கிநிறுத்துவதற்கான ஒரு மாற்று வழிமுறையாக தமது ஆதரவை ஸ்ரீ..சு..க்கு வழங்கினர். பண்டாரநாயக்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தார் என்பதோடு அவரது ஸ்ரீ..சு.. ஹர்த்தாலில் பங்குபெறவும் இல்லை என்றபோதும் ஹர்த்தால் இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு அச்சாணி போன்ற நபராக பண்டாரநாயக்காவை ஆக்கிவிட்டது.

13-4. ஹர்த்தாலின் எழுச்சியுடன், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி உடனான “இடது ஐக்கியத்துக்காக” லங்கா சமசமாஜக் கட்சிக்குள் இருந்த ஈர்ப்பு உக்கிரமடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியுடன் ஒரு எதிர்த்துப் போட்டியிடாத தேர்தல் உடன்படிக்கைக்கு செல்லத் தவறியமையே கட்சியின் தோல்விக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியதும், சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் ஸ்ராலினிச அரசாங்கங்களை விமர்சிப்பதை லங்கா சமசமாஜக் கட்சி கைவிட வேண்டும் எனக் கோரியதுமான ஒரு போக்கு 1952 தேர்தலின் பின்னர் தோன்றியது. மூன்றாவது காங்கிரஸில் பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு வழியால் ஊக்குவிக்கப்பட்ட “ஐக்கிய” ஆதரவு உட்குழு, 1953 அக்டோபரில் நடந்த காங்கிரஸில், கட்சி “சோசலிச நாடுகளுடன்” “நிபந்தனையற்ற நேசத்துடன்” நடந்துகொள்ள வேண்டும் எனக் கோரி தீர்மானத் திருத்தமொன்றை முன்வைத்தது. அந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ராலினிச-சார்பு குழு அதில் இருந்து பிரிந்து, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கொண்டது

13-5. இத்தகைய சூழ்நிலையிலேயே லங்கா சமசமாஜக் கட்சி தலைமை பகிரங்க கடிதத்துக்கு பதிலிறுத்தது.னனின் கடிதத்தை லங்க சமசமாஜக் கட்சி நிராகரித்ததும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைவதற்கு மறுத்ததும் அரசியல்ரீதியாக குற்றத்தன்மை படைத்ததாய் இருந்தது ஏனென்றால் முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பப்லோவின் திருத்தல்வாதத்தின் ஸ்ராலினிச-சார்பு பண்பைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர், .தவிரவும் அது சற்று முன்னரே தனது சொந்த உறுப்பினர்கள் மத்தியில் பப்லோவாதத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்திருந்தது. ஆனால், பகிரங்க கடிதம் விநியோகிக்கப்பட்ட முறைக்கு சட்ட மரபின் படி ஆட்சேபித்த லங்கா சமசமாஜக் கட்சி, ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவும் மறுத்துவிட்டது. லெஸ்லி குணவர்த்தனாவுக்கு கடிதமெழுதிய கனன், லங்கா சமசமாஜக் கட்சி தனது கட்சிக்குள் இருந்த ஸ்ராலினிச சார்புப் போக்கை வெளியேற்றியதைக் குறிப்பிட்டு, பின்னர் மேலும் சுட்டிக்காட்டியதாவது: “சர்வதேசியவாதிகள் என்ற வகையில், ஏனைய கட்சிகளிலும், மற்றும் பொதுவாக சர்வதேசிய இயக்கத்திலும், ஸ்ராலினிச சமரசவாதத்தின் பகிரங்கமான அல்லது மூடிமறைத்த வெளிப்பாடுகளின் விடயத்தில் நாம் ஒரேவகையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கடமைப்பாடு கொண்டிருக்கிறோம்.” [29]

13-6. வெகுஜன அழுத்தத்தின் மூலம் ஸ்ராலினிசக் கட்சிகளை புரட்சிகரப் பாதைக்குள் தள்ள முடியும் என்ற பப்லோவின் கூற்றின் தொலைவீச்சுக் கொண்ட பிரதி விளைவுகளை அடையாளங் கண்டு, லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழு காலங்கடந்து 1954 ஏப்பிரலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “இந்தக் கருத்து, ஸ்ராலினிசம் சம்பந்தமாக ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடுகளை அடிப்படையில் திருத்துவதை நோக்கி செல்வது மட்டுமன்றி, ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடர்ந்தும் சுயாதீனமாக இருப்பதற்கான அனைத்து நியாயப்படுத்தல்களையும் மறுப்பதுமாகும்,” என அது பிரகடனம் செய்திருந்தது. ஆயினும் நடைமுறையில் லங்கா சமசமாஜக் கட்சி அரசியல் தெளிவுபடுத்தல்களையும் கோட்பாட்டையும் பலியிட்டு சோசலிச தொழிலாளர் கட்சியும் அனைத்துலகக் குழுவும் முகங்கொடுத்த சிரமங்களை மேலும் அதிகரித்து பப்லோவாதிகளுடனான “ஐக்கியத்தை” பேணுவதற்கு சமரசங்களையும் சூழ்ச்சிகளையும் செய்ய முனைந்தது. இறுதியில், லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் பப்லோவாதத்துக்கு அடிபணிந்தனர். 1954ல் அவர்கள் பப்லோவாதிகளின் நான்காவது காங்கிரஸில் பங்குபற்றியதோடு, அதன் மூலம் அதற்கு அங்கீகாரத்தை வழங்கி, அதன் தீர்மானங்களுக்கு சில திருத்தங்களுடன் ஆதரவளித்ததோடு, பப்லோவாத சர்வதேச செயலகத்திலேயே தொடர்ந்தும் இருந்தனர். தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தவிருந்த முற்றிலும் சந்தர்ப்பவாத உறவின் ஆரம்பமாக அது இருந்தது. லங்கா சமசமாஜக் கட்சிக்கு தேசிய அரங்கிலான தனது சீர்திருத்தவாத அரசியலுக்கு நற்சான்றிதழ் போன்று ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொள்ள முடிந்தது, அதேநேரத்தில் சர்வதேச செயலகத்திற்கோ ஆசியாவில் “ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சியை” கொண்டிருப்பதாக பெருமை பாராட்டிக்கொள்ள முடிந்தது. பப்லோவாதத்தை லங்கா சமசமாஜக் கட்சி ஆதரித்தமை, ட்ரொட்கிசத்துக்கும் மற்றும் அதன் மூலம் குறிப்பாக ஆசியாவில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரான ஒரு மோசமான தாக்குதலாக இருந்தது. லங்கா சமசமாஜக் கட்சி அல்லது அதன் ஒரு பகுதியேனும், ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், அது பெருமளவில் அனைத்துலகக் குழுவை பலப்படுத்தி, பிராந்தியம் பூராவும், குறிப்பாக இந்தியாவில் அதன் வேலைகளை முன்னேற்றியிருக்கும் என்பதுடன் மாவோவாதத்தின் பெருந்தீமையான செல்வாக்குக்கு ஒரு சக்திவாய்ந்த முறிப்பு மருந்தாகவும் செயற்பட்டிருக்கும்.

14. லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் பின்சரிவு

 14-1. லங்கா சமசமாஜக் கட்சி 1953ன் பின்னர் துரிதமாக சீரழிந்தது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பப்லோவாத சர்வதேச செயலகம் அதற்கு உதவியும் ஊக்குவிப்பும் கொடுத்தது. ஒரு தசாப்தத்துக்கு சற்று அதிகமான கால இடைவெளியில், கட்சி ட்ரொட்ஸ்கிசத்துக்கான எந்தவொரு போராட்டத்தையும் கைவிட்டு, சிங்கள இனவாதத்தை தழுவிக்கொண்டதோடு 1964ல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதன் மூலம் முதலாளித்துவ அரசினை நிர்வாகம் செய்கின்ற அரசியல் பொறுப்பையும் ஏற்று தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவு ஒவ்வொரு கட்டத்திலும் பண்டாரநாயக்காவுக்கும் ஸ்ரீ..சு.கட்சிக்கும் - அதாவது குறைந்தபட்சம் ஆரம்பக் கட்டத்திலேனும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு சாயம் பூசிக்கொண்டு சோசலிச வாய்ச்சவாடல்களை விடுத்துக்கொண்டிருந்த சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் இனவாத அரசியலுக்கு - அரசியல் ரீதியில் இணங்கிப் போவதுடன் நெருக்கமாகக் கட்டுண்டிருந்தது. ஸ்ரீ..சு.கட்சிக்கு எதிராக ஒரு உறுதியான, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை லங்கா சமசமாஜக் கட்சி எடுக்க முடியாமல் இருந்தமை, அது சமசமாஜவாதத்தின் குட்டி முதலாளித்துவ தீவிரவாத பாரம்பரியங்களுக்கு மீண்டும் திரும்பியதுடன் தொடர்புபட்டிருந்தது. அது அரசியல் ரீதியில் ஒரே இயல்புடைய கட்சியாக இனியும் இருக்கவில்லை. முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த பகுதியினர் தொடர்ந்தும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் காலூன்றி இருந்தனர் என்பது 1948ல் புதிய “சுதந்திர” அரசு என்ற மோசடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரமாண்டமான கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆயினும், என்.எம். பெரேரா தலைமையிலான கட்சியின் வலதுசாரிக் குழு, அதிகரித்துச் சென்ற தேசியவாத நோக்குநிலையைத் தீர்மானித்தது, இதற்கு முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பெரும் உருவங்களாக திகழ்ந்த கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தனா போன்றோர் எதிர்ப்புகாட்டாமல் இணங்கி விட்டிருந்தனர். இவ்வாறு என்.எம். பெரேரா ஸ்ரீ..சு.கட்சியையும் மற்றும் அதன் சிங்கள ஜனரஞ்சகவாதத்தையும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு கட்சியினுள் இருந்த எதிர்ப்பை படிப்படியாக தோற்கடித்தார்.

14-2. 1956 தேர்தலுக்கான தயாரிப்பில், பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் தாம் ஓரங்கட்டப்பட்டிருந்ததையிட்டு வெறுப்படைந்திருந்த சிறு வர்த்தகர்கள், புத்த பிக்குகள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் போன்ற சிங்கள குட்டி முதலாளித்துவ தட்டினரை அணிதிரட்டிக்கொள்ள பண்டாரநாயக்கா முயற்சித்தார். முன்னைய புத்த  மறுமலர்ச்சி இயக்கத்தின் உணர்ச்சி ததும்பும் பேச்சினை பற்றிக் கொண்ட பண்டாரநாயக்கா, சிங்களவர்கள் “ஒரு தனித்துவமிக்க இனம்”, அதற்கு நாட்டின் விவகாரங்களில் மேலாதிக்க நிலை கொடுக்கப்பட வேண்டும், என வாதிட்டார். 1955ல் ஆங்கிலத்துக்குப் பதிலாக நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தையும் தமிழையும் பதிலீடு செய்யும் தனது கொள்கையை ஸ்ரீ..சு.. கைவிட்டது. அதற்கு மாறாக அது, சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதாவது நீதிமன்றங்கள், பொதுத்துறை வேலைகள், கல்வி அமைப்பு மற்றும் சகல உத்தியோகபூர்வ விவகாரங்களிலும் சிங்களம் மட்டுமே பயன்படுத்தப்படும். புத்த மதத்துக்கு ஒரு விசேட உத்தியோகபூர்வ நிலையை வழங்குவதாகவும் பண்டாரநாயக்கா வாக்குறுதியளித்தார். அரச கொள்கைகளை வழிநடத்தும் ஒழுக்கமுறையாக சிங்கள மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முன்மொழிந்ததன் மூலம், ஸ்ரீ..சு.கட்சி தமிழ் இன மக்களையும் மற்றும் தமிழ்-பேசும் முஸ்லிம்களையும் இரண்டாந்தர பிரஜைகளாக்கியது. தனது சிங்கள ஜனரஞ்சகவாதத்தை சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வார்த்தைகளால் அலங்கரிப்பதற்காக, பண்டாரநாயக்கா 1956 தேர்தலில் பிலிப் குணவர்த்தனாவின் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியையும் தனது மக்கள் ஐக்கிய முன்னணிக்குள் (Mahajana Eksath Peramuna -MEP) கொண்டுவந்தார்.

 14.3. லங்கா சமசமாஜக் கட்சி சிங்களம் மட்டும் என்ற கொள்கையை எதிர்த்ததோடு சிங்கள இனவாதிகள் வன்முறைத் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தது. ஆயினும், லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்களின் வாதங்கள், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் இருந்து வேறுபடுவதை தெளிவாகக் காட்டின. லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை அரசுக்கான அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, சிங்களம் மட்டும் கொள்கை தேசத்தைக் கீழறுக்கும் எனவும் வாதிட்டது. அவர்களது எதிர்ப்பு தேசத்தின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்ததே அன்றி தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. 1955 அக்டோபரில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய என்.எம். பெரேரா எச்சரித்ததாவது: “நாம் நாட்டில் ஒரு நிலையான பிளவைக் கொண்டிருப்போம், நமக்கு ஒரு ஐக்கிய இலங்கை கிடைக்காது, மற்றும் நம்மை மிகவும் பின்னால் தள்ளிவிடும் ஒரு பயங்கர அளவிலான இரத்தக்களரி பெருக்கெடுக்கும், மற்றும் முடிவில், இந்த நாடு பெரும் வல்லரசுகளின் நலன்களுக்கான ஒரு காலனியாகும் அல்லது ஒரு விளையாட்டுப் பொருளாகும்.” [30] இந்த நிலைப்பாடு கோட்பாடு அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” கொள்கையைக் கொண்டிருந்த போதும், லங்கா சமசமாஜக் கட்சி தேர்தலில் “போட்டித்தவிர்ப்பு” உடன்படிக்கை ஒன்றை ஸ்ரீ..சு.கட்சியுடன் கையெழுத்திட்டது. அதன் மூலம், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடு என்ற நம்பகத்தன்மையை முதலாளித்துவ ஸ்ரீ..சு..க்கு அது கொடுத்தது. ஸ்ரீ..சு.. மாபெரும் வெற்றியைப் பெற்ற பின்னர், லங்கா சமசமாஜக் கட்சி  பண்டாரநாயக்கா அரசாங்கம் சம்பந்தமாக “பிரதியுபகாரமான ஒத்துழைப்பு” என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்ததோடு 1956 மற்றும் 1957ல், ஆண்டுக்கான அரசாங்க கொள்கையை விவரிக்கும் அரியாசன உரைக்கு (Throne Speech) வாக்களித்தது. 1957 கடைப் பகுதியில் வேலைநிறுத்தங்கள் வெடித்த பின்னரே பண்டாரநாயக்காவை விமர்சிக்கத் தொடங்கியது.

14-4. சகல பகுதிகளிலும் சிங்கள மேலாதிக்கத்தை வலியுறுத்துவதே ஸ்ரீ..சு.கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் உந்துதலாக இருந்தது. அது தமிழர்களின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டதோடு தமிழ் தட்டுக்களுடன் சமரசத்துக்காக பண்டாரநாயக்காவின் பக்கமிருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஒரு காட்டிக்கொடுப்பாகக் கருதிய சிங்கள அதிதீவிரவாதிகளின் திட்டமிட்ட எதிர்-படுகொலைகளையும் தூண்டிவிட்டது. அவரது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தேசியமயமாக்கல் நடவடிக்கைகள், அரசின் பாத்திரத்தை விரிவாக்கியதோடு அதன் மூலம் சிங்களப் பெரும்பான்மையினருக்கு தொழில் வாய்ப்புக்களையும் கொடுத்தது. இது, பொதுக் கல்வியையும் பொது சுகாதார சேவையையும் விரிவாக்கியதோடு, கட்சியின் சிங்கள கிராமப்புற வாக்காளர் மத்தியில் ஆதரவைப் பலப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருந்தது. ஆனாலும், அரசாங்கம் தொழிலாளர்களின் மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை இட்டுநிரப்ப இலாயக்கற்றிருந்தமை வேலை நிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வழிவகுத்தது. 1958ல் பொதுஜன பாகாப்புச் சட்டத்தை (Public Security Act) பலப்படுத்தி, அதையடுத்து பத்து மாதங்களுக்கு அவசரகால நிலையை அமுல்படுத்தியதில் அதன் தொழிலாள வர்க்க விரோத பண்பு வெளிப்படையானது. ஸ்ரீ..சு.கட்சிக்கு கிராமப்புறத்தில் ஒரு தளத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் சிங்கள இனவாத அரசியலை சுரண்டிக் கொண்ட பண்டாரநாயக்கா, தனது சொந்த உருவாக்கத்துக்கே பலியானார். அவர் 1959 செப்டெம்பரில் ஒரு புத்த அதிதீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்டார். அரசாங்கம் வளர்ச்சியடைந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டுப்படுத்த இலாயக்கற்றது என பீதியடைந்த, அவரது சொந்தக் கட்சிக்குள்ளிருந்த வலதுசாரிகளும் கூட இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. பிலிப் குணவர்த்தனாவை அரசாங்க அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலக்க வேண்டும் என இதே வலதுசாரி குழு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. பிலிப் குணவர்த்தனா தனது சொந்த புதிய சிங்கள இனவாதக் கட்சி உருவாக்கத்திற்காக மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.

14-5. 1960ம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி மேலும் வலது பக்கம் நகர்ந்ததை குறித்தது. மார்ச்சில் நடந்த முதல் இரு தேர்தல்களில், புரட்சிகர மார்க்சிசத்தின் எந்தவொரு வெளித்தோற்றத்தையும் காட்டாது கைவிட்ட லங்கா சமசமாஜக் கட்சி, சோசலிசத்துக்கு பாராளுமன்ற பாதையைத் தழுவிக்கொண்டது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ..சு.கட்சி முழுமையாக மதிப்பிழந்துவிட்டதாக பிரகடனம் செய்த கட்சி பாராளுமன்றத்தின் மூலமாக “ஒரு சமசமாஜவாத அரசாங்கத்துக்காக”ப் பிரச்சாரம் செய்தது. மொழிப் பிரச்சினையில் தனது முன்னைய நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வங்காட்டாத அது, சிங்களம் மற்றும் தமிழுக்கு சமநிலை வேண்டும் என அதுவே முதலில் விடுத்த அழைப்பை கைவிட்டது. மற்றும் பிரஜா உரிமை சம்பந்தமாகவும், அது இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பெயர் குறிப்பிடாமல், அந்த விவகாரம் தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனப் பிரகடனம் செய்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் பாராளுமன்ற கோணல் நடவடிக்கைகளையும் அது இனவாத அரசியலுக்கு அடிபணிந்ததையும் உத்வேகத்துடன் அங்கீகரித்த பப்லோவாத சர்வதேசச் செயலகம், அதன் தேர்தல் பிரச்சாரத்தை “அதிகாரத்துக்கான ஒரு தீர்க்கமான போராட்டம்” என விவரித்தது.

14-6. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி 1956 தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட குறைவான ஆசனங்களையே பெற்றமை, கட்சிக்குள் நெருக்கடியை தூண்டிவிட்டது. முதல் தடவையாக, கட்சி ஸ்ரீ.ல.சு.க. உடன் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு தயாராக வேண்டும் என முன்மொழிவதற்கு அந்த சந்தர்ப்பத்தை என்.எம். பெரேரா பற்றிக்கொண்டார். 1960 மே மாதம் நடந்த கட்சி மாநாட்டில் அவரது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவரது வலதுசாரிக் குழுவினர் சிறுபான்மையாக இருந்த கட்சியின் மத்திய குழுவின் வாக்கெடுப்பில் அது தோற்கடிக்கப்பட்டது. எனினும், குறுகியகாலம் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கவிழ்ந்ததோடு, 1960 ஜூலையில் நடந்த புதிய தேர்தலில், ஸ்ரீ.ல.சு.கட்சி உடன் லங்கா சமசமாஜக் கட்சி ஒரு போட்டித்தவிர்ப்பு உடன்படிக்கையை செய்துகொண்டது. பண்டாரநாயக்காவின் விதவை மனைவியின் தலைமையில் புதிய ஸ்ரீ.ல.சு.கட்சி அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டவுடன், அதன் அரியாசன உரை மற்றும் முதலாவது வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்களித்ததன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி அதன் ஒட்டு மொத்த கொள்கைகளுக்கும் ஆதரவளித்தது.

14-7. இதன் பின்னரே பப்லோவாத சர்வதேச செயலகம் அரைகுறையான விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியது. அது 1956ல் லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னைய “போட்டித்தவிர்ப்பு” உடன்படிக்கையையோ ஸ்ரீ.ல.சு.கட்சி உடனான “அனுகூலமான ஒத்துழைப்பையோ” எதிர்க்கவில்லை. 1960ல் லங்கா சமசமாஜக் கட்சி யின் சோசலிசத்துக்கான பாராளுமன்ற பாதை பற்றிய சர்வதேசச் செயலகத்தின் விமர்சனம், அது தேர்தலில் வெற்றி பெறாததைப் பற்றியதாகவும் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு “ஆழமான ஆய்வுகள்” அவசியம் என்று கூறுவதாகவுமே இருந்தது. எவ்வாறெனினும், ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைவது பற்றி என்.எம். பெரேரா யோசனை அளித்தவுடன், சர்வதேசச் செயலகமானது தனது சொந்த கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அரசியல் மூடுதிரையை வழங்கத் தொடங்கியது. “போட்டித்தவிர்ப்பு-உடன்படிக்கை”யானது “வெகுஜனங்கள் மத்தியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் குணநலன் பற்றி மாயைகளை உருவாக்கும்” ஆபத்தைக் கொண்டிருந்தது என அது காலங்கடந்து அறிவித்தது. அரியாசன உரைக்கும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கும் லங்கா சமசமாஜக் கட்சி ஆதரவளித்ததை ஆறாவது உலக மாநாடு கண்டனம் செய்தது. ஆனால், “தொழிலாள வர்க்கம் சாராத அரசாங்கத்துக்கு (அது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும் சரி முதலாளித்துவ வர்க்கமாக இருந்தாலும் சரி) விமர்சனத்துடன் ஆதரவளிப்பதை” சர்வதேசச் செயலகம் நிராகரிக்கவில்லை, மற்றும் அவ்வாறு செய்ததன் மூலம் அது லங்கா சமசமாஜக் கட்சியின் வலது பக்கமான நகர்வை அங்கீகரித்து அதன் சந்தர்ப்பவாதம் தொடர்வது நியாயப்படுத்தப்பட வழிவகை வழங்கியது.

14-8. சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிந்ததற்கும் பப்லோவாதம் ஒப்புதலளித்தது. 1956ல் ஹங்கேரிய எழுச்சியின் தோற்றத்துடன், 1957ல் எட்மன்ட் சமரக்கொடி மற்றும் கொல்வின் ஆர் டி. சில்வா உட்பட லங்கா சமசமாஜக் கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விருந்தினர்களாக மாஸ்கோவுக்கு சென்றிருந்ததோடு சோவியத் இராணுவம் ஹங்கேரியத் தொழிலாளர்களை நசுக்கியதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதே ஆண்டு, “சூ என் லாய்க்கு புகழாரம்” என்ற தலைப்பில் லங்கா சமசமாஜக் கட்சி செய்தித் தாள் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்ததோடு சீன வெளியுறவு அமைச்சரையும் அவரது சக ஸ்ராலினிஸ்டுகளையும், “சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் செய்த மிகப்பெரும் அர்ப்பணிப்புக்காக”ப் பாராட்டியது. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்றில் லங்கா சமசமாஜக் கட்சியை விமர்சித்திருந்தது. “சூ என் லாயும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை’ அல்லது அந்த வெற்றியுடன் அவர்களை முறையாக அடையாளங்காண முடியாது”, என அது தெரிவித்தது. சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை விடுவிப்பதற்கு வலுவான கோரிக்கை வைக்குமாறு அது சீனாவுக்கு செல்லவிருந்த லங்கா சமசமாஜக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் அவ்வாறு செய்ய திட்டவட்டமாக மறுத்தனர்.

15. சோசலிச தொழிலாளர் கட்சியின் மறு ஐக்கியம்

15-1. "மரபுவழி ட்ரொஸ்கிசத்திற்கும் பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் இடையிலான வேறுபாடு அரசியல்ரீதியாகவோ அமைப்புரீதியாகவோ சமரசம் செய்ய முடியாதளவிற்கு ஆழமானது" எனப் பிரகடனப்படுத்தி 1953ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஜேம்ஸ் பி. கனன் தனது பகிரங்க கடிதத்தை முடித்தார்..[31] எப்படி இருப்பினும் மிகவிரைவில் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதத்திற்கெதிரான அதனது நிலைப்பாட்டில் பலமிழக்கத் தொடங்கியது. 1957ன் ஆரம்பத்திலேயே, சர்வதேசச் செயலகத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சி. மீண்டும் இணைவதற்கான இணக்கம் தொடர்பாய் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி லெஸ்லி குணவர்த்தனா எழுதிய கடிதத்திற்கு சாதகமாக கனன் பதிலளித்தார். இந்த மாற்றம், சோசலிச தொழிலாளர் கட்சி யுத்தத்தின் பின்னைய அழுத்தத்தின் கீழ் அமெரிக்க நடுத்தர வர்க்கத் தீவிரவாதப் பிரிவினருக்கு மேலும் மேலும் அடிபணிவதாக இருந்தது.

15.2. உண்மையில், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் பப்லோவாதத்துக்கும் இடையிலான பிளவு ஆழமடைந்த போதிலும், சர்வதேசச் செயலகத்தின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டுக்கு அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி அடிபணிந்துகொண்டிருந்தது. இப்போது ஜோசப் ஹான்சன் தலைமையிலான சோசலிச தொழிலாளர் கட்சி, 1960 ஆண்டின் இறுதிப் பகுதியில், பிடல் காஸ்ட்ரோவாலும் அவரது குட்டி முதலாளித்துவ கெரில்லா இயக்கத்தினாலும் ஸ்தாபிக்கப்பட்ட கியூப அரசை ஒரு “தொழிலாளர் அரசாக” வர்ணித்துக்கொண்டிருந்தது. பண்படாத அனுபவவாதத்தின் அடிப்படையில், பெருமளவில் விவசாயப் பொருளாதாரத்தை தேசியமயமாக்கியதன் மூலம் காஸ்ட்ரோவால் கியூப அரசின் பாட்டாளி வர்க்கப் பண்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வலியுறுத்திய சோசலிச தொழிலாளர் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் கியூபா அரசு பகிரங்கமாக எதிர்ப்பதையும் அந்த அரசாங்கத்தில் தொழிலாளர் அரசுக்கான எந்தவொரு அமைப்பும் இல்லாததையும் அலட்சியம் செய்தது. மேலும், காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் யூனியனின் உதவியை நாடியதோடு அவரது ஜூலை 26 இயக்கத்தை கியூபாவின் ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைத்துகொண்டதை, புரட்சியின் நிகழ்வுப் போக்கில் காஸ்ட்ரோவாதிகள் மார்க்சிசவாதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று சோசலிச தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது. "அமெரிக்கக் கண்டத்தில் முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சி” என்றும் “இது ஒட்டுமொத்த காலனித்துவ புரட்சிகர நிகழ்வுப்போக்கினையும் ஒரு புதிய சாதனை மட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது” என்றும் இது “நிரந்தரப் புரட்சியின் சரியான தன்மைக்கு சமீபத்திய உறுதிச்சான்று” என்றும் சோசலிச தொழிலாளர் கட்சி போற்றியதானது பப்லோவாதிகளுடன் அது மறுஐக்கியம் காண்பதற்கான உரைகல் ஆகியது.

15.3. 1961 மற்றும் 1963ம் ஆண்டுகளுக்கு இடையில், சோசலிச தொழிலாளர் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக, பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் (Socialist Labour League -SLL) ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்துலகக் குழுவினுள் உறுதியான போராட்டத்தினை முன்னெடுத்தனர். “புரட்சியின் தர்க்கம் அதுவாகவே’ குட்டி முதலாளித்துவ தலைமைகளை தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் நிர்ப்பந்திக்கும் என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் வாதத்தை பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் நிராகரித்ததோடு, போல்ஷிவிக் வகை கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் ஊடாக பாட்டாளி வர்க்க தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதே, நான்காம் அகிலத்தின் பிரதான கடமை என வலியுறுத்தியது. திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டத்தினை மீளாய்வு செய்த பின்னர், 1961ல் பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் “பப்லோவாத திரிபுவாதம் ட்ரொட்ஸ்கித்தினுள் உள்ள ஒரு போக்காக கருதப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது" என்ற முடிவுக்கு வந்தது.

15-4. கியூபா தொடர்பாக அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோ மற்றும் மண்டேலின் புறநிலைவாத வழிமுறையைக் கடைப்பிடித்தது. 1962 ஜூலையில், “ட்ரொட்ஸ்கிசம் காட்டிகொடுக்கப்பட்டது: பப்லோவாத திருத்தல்வாதத்தின் அரசியல் வழிமுறையை சோசலிச தொழிலாளர் கட்சி ஏற்றுக்கொள்கிறது” என அது வெளியிட்ட ஆவணத்தில், பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு பிரகடனம் செய்ததாவது: சோசலிச தொழிலாளர் கட்சியுடனான எமது தொடர்பாடல்களில், புரட்சிகரக் கட்சிகள் இன்றி ‘நிரந்தரப் புரட்சியை உறுதிப்படுத்துவது’ பற்றி பேசுவது அபத்தமானது எனத் துணிவுடன் தெரிவித்ததன் மூலம், நாம் ஒரு பலமான எதிர் நடவடிக்கையை தூண்டிவிட்டோம். எவ்வாறாயினும், நடைமுறையில் பப்லோவாதிகளும் சோசலிச தொழிலாளர் கட்சியினரும் அல்ஜிரியாவிலும் கியூபாவிலும் உள்ள குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தலைவர்களின் முன்னால் தாம் சரண்டைந்து கிடப்பதையே காண்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பான எமது நோக்கு சோசலிச தொழிலாளர் கட்சியினுடைய நோக்குக்கு எதிராக இருப்பது வெறுமனே நிகழ்வுகளின் ஒரு வரிசையை  யாரால் நன்கு விளக்க முடிகிறது என்பதில் மட்டுமல்ல. அதைவிட இது எங்களுக்கு பின்தங்கிய நாடுகளில் ட்ரொட்ஸ்கிசத் தலைமையின் உண்மையான கொள்கை மற்றும் வேலைத்திட்டம் சம்பந்தமான பிரச்சினையாகும். ஏனைய எல்லா மார்க்சிச தத்துவத்தைப் போலவே, நிரந்தரப் புரட்சி தத்துவமும், நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டியாகும்; அதன் ஆய்வுகளின் இலக்கு, சுயாதீனமான மற்றும் தீர்க்ககரமான தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் விவசாயிகளுக்குள் உள்ள அதன் கூட்டினரையும் அவர்களது சொந்த சோவியத் அதிகாரத்துக்காக ஒழுங்கமைக்கும் தேவையை சுட்டிக் காட்டுகின்றது. ‘நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவது என்பது’ அங்கீகரிக்கப்பட்ட தேசியவாதத் தலைவர்களுக்கு மார்க்சிஸ்டுகள் அளிக்கும் பாராட்டு அல்ல, மாறாக மார்க்சிஸ்டுகள் தாமே பொறுப்பெடுத்துக் கொள்ளும் ஒரு கடமையாகும். 32]

15-5. எல்லாவற்றுக்கும் மேலாக, கியூபாவிலும் அல்ஜீரியாவிலுமான வெற்றிகள் என்பதாக சோசலி தொழிலாளர் கட்சி சொல்பவை, பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளின் வெகுஜனப் போராட்டங்களில் ஸ்ராலினிசத்தினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தினதும் ஒட்டுமொத்த வரவுசெலவு மதிப்பீட்டின் பாகமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். “கியூபா, அல்ஜீரியா இரண்டையும் பற்றி புரிந்துகொள்ள, அவற்றுடன் சேர்த்து ஈராக், ஈரான், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, பொலிவியா, இந்தோ-சீனா, மற்றும் ஏனைய பல நாடுகளின் அனுபவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வில் இருந்து, ‘இரண்டு கட்ட’த் தத்துவத்தில் இருந்து செயற்பட்ட தொழிலாள வர்க்கத் தலைவர்கள் ஆற்றிய உண்மையான பாத்திரம் வெளியில் வரும். ஸ்ராலினிசம் ‘ஒரு முற்போக்கான பாத்திரத்தை ஆற்றுவதற்கு நெருக்கப்படுவதற்கு” எல்லாம் தொலைவில் உண்மையில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் அங்கிருந்த முன்னேறிய தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்கி காட்டிக்கொடுத்ததுடன் இதன் மூலம் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்கு தற்காலிக ஸ்திரநிலையை ஸ்தாபித்துக்கொள்வதற்கு உதவியது. தற்போதைய கட்டத்தில் ஏகாதிபத்தியம் அதிகப்பட்ச நம்பிக்கை கொள்ள முடிந்திருந்ததும் அதில்தான். இந்த உள்ளடக்கத்திலேயே மற்றும் இந்த உள்ளடக்கத்தில் மட்டுமே ‘நிரந்தரப் புரட்சி தத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது’[33]

15-6. பிரெஞ்சு அரசாங்கத்துக்கும் தேசிய விடுதலை முன்னணி (FLN) தலைமைக்கும் இடையில் அல்ஜீரிய “சுதந்திரத்துக்காக” 1962ல் கையெழுத்தான எவியன் உடன்படிக்கை, (Evian agreement) “அல்ஜீரிய மக்களுக்கும், அரபிய மற்றும் காலனித்துவப் புரட்சிக்கும் ஒரு பெரும் வெற்றியாகும்” என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் கூற்றையும் சோசலிச தொழிலாளர் கழகம் எதிர்த்தது. இந்தியா மற்றும் இலங்கை தொடர்பாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தெளிவாக விரிவுபடுத்திய மதிப்பீடு போல், இத்தகைய யுத்தத்துக்குப் பிந்திய சுதந்திர உடன்படிக்கைகள் சம்பந்தமான நான்காம் அகிலத்தின் மதிப்பீட்டை, அதாவது இத்தகைய உடன்படிக்கைகளின் கீழேயே ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் பங்கினை தேசிய முதலாளித்துவம் எடுத்துக்கொண்டது,” என்பதை சோசலிச தொழிலாளர் கழகம் பாதுகாத்தது. அது விளக்கியதாவது: “அல்ஜீரிய குட்டி முதலாளித்துவம் பிரெஞ்சுக் காலனித்துவம் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு முயற்சித்த அதேவேளை, வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு மூலதனத்தின் அடிப்படை நலன்களை உத்தரவாதம் செய்யும் விசுவாசியாகவும் தொடர்ந்தும் இருந்தது. அத்தகைய ஒரு விருப்பத்தின் வெளிப்பாடாகவே எவியன் உடன்படிக்கைகளை நாம் காண்கின்றோம். தேசிய விடுதலை முன்னணி (FLN) தலைவர்கள் தமது இயல்புக்கு ஏற்றவாறு இத்தகைய விருப்பத்துக்கு உண்மையானவர்களாக இருக்கின்றனர்.”[34]

 15-7. 1953 பிளவுக்கு வழிவகுத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தாமல் இருந்த சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றும் அதுவரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சார்ந்தவையாகவும் தலைமைத்துவத்துக்காக பாரம்பரியமாக அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளை நம்பியிருந்தவையாகவும் இருந்த பல லத்தீன் அமெரிக்க குழுக்களும், 1963 ஜூனில் ரோமில் நடந்த ஏழாவது காங்கிரஸில் பப்லோவாதிகளுடன் உத்தியோகபூர்வமாக மறு ஐக்கியமடைந்தனர். நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முழுமையாக நிராகரிப்பதான வகையில், பப்லோவாத “உலக மாநாட்டின்” பிரதான தீர்மானம், கியூப புரட்சியில் இருந்து என்ன முடிவுக்கு வந்திருந்தது என்றால், “பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனம், ஒரு மழுங்கிய ஆயுதத்தைக் கொண்டே (தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு ஒரு லெனினிசக் கட்சி போராடாமல்) ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியத்தை திறந்துவிட்டுள்ளது” என முடிவடைந்தது. காஸ்ட்ரோ மற்றும் கெரில்லா “ஆயுதப் போராட்டத்தை” பப்லோவாதிகள் புகழ்ந்தமை சிலி, ஆர்ஜென்டினா, பொலிவியா மற்றும் லத்தீன் அமெரிக்கா பூராவும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து புரட்சிகர சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு சேவை செய்வதாகவும் வரலாற்றுத் தோல்விகளுக்குப் பங்களிப்பு செய்வதாகவும் அமைந்து ஒரு அழிவுகரமான முட்டுச் சந்தாக நிரூபணமாயின. இலங்கையில் “ஒரு மழுங்கிய ஆயுதத்தின்” செயற்பாடுகளை முதலாளித்துவ ஸ்ரீ..சு.கட்சிக்கு கொடையளித்திருந்த லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் மறு ஐக்கியத்தையும் புதிய ஐக்கிய செயலகம் உருவாக்கப்படுவதையும் முழுமையாக ஆதரித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, லங்கா சமசமாஜக் கட்சியை ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக சோசலிச தொழிலாளர் கட்சி புகழ்ந்தது.

[29] [மூலப்பிரதியில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; Trotskyism Versus Revisionism, பகுதி 2, பக். 89]

[30] [Blows against the Empire, பக்.169]

[31] (Trotskyism Versus Revisionism (ட்ரொட்ஸ்கிசம் எதிர் திரிபுவாதம்) பாகம்-1 .312).

[32] [Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 244]

[33] [Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 250]

[34] [Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 248]