கோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து "கடினமான உழைப்பை" கோருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொறிஸ் ஜோன்சன் அரசாங்கத்தின் ஆணவம் மற்றும் முட்டாள்தனத்தின் ஒரு நடவடிக்கையாக, இளவரசர் சார்லஸை தனது "பிரிட்டனுக்கான தேர்வு" பிரச்சாரத்திற்கு தெரிவுசெய்தது.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விடுமுறையெடுத்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்றோரை பருவகால பழங்கள் பறிப்பதற்கும் விவசாய தொழிலாளர்களாக பதிவு செய்யுமாறு ஒரு முழுச்சோம்பேறியும் மில்லியனருமான நில உடமையாளர் கூறிய கருத்தின் தாக்கத்தை கவனத்திற்கெடுத்து கொள்ளமுடியாத அளவிற்கு, இங்கிலாந்து மக்களின் உணர்வுகளிலிருந்து கன்சர்வேடிவ்கள் மிகவும் அந்நியப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று, இளவரசர் சார்ல்ஸ் ஒரு வீடியோ அழைப்புவிட வெளிக்கொண்டுவரப்பட்டார். தனக்குச் சொந்தமான 53,000 ஏக்கர் ஸ்காட்டிஷ் தோட்டமான Birkhall இல் காய்கறித் தோட்டத்தின் பின்னணியில் பேசிய சார்ல்ஸ், “உணவு மந்திரத்தால் விழையாது; இது எங்கள் குறிப்பிடத்தக்க விவசாயிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறது" என்றார்.

"புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டனுக்கான தேர்வு பிரச்சாரத்தில் இருந்து மீண்டும்" இரண்டாம் உலகப் போரின் பெரும் இயக்கமான நாட்டின் இராணுவம் என்பதை “கண்டுபிடிப்பதை நோக்கி அவர் விரைவாக நகர்ந்தார்”.

இளவரசர் சார்ல்ஸ் மற்றவர்களை "கடின உழைப்பு" செய்ய அழைக்கிறார்

அவர் விளக்கினார்: “எதிர்வரும் மாதங்களில், அறுவடையை கொண்டுவர பல ஆயிரக்கணக்கான மக்கள் தேவைப்படுவார்கள். இது கடினமான உழைப்பாக இருக்கும். ஆனால் வளர்ந்து வரும் பயிர்கள் வீணாகப் போவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அது மிகவும் முக்கியமானது”.

இந்த அரச வாரிசுக்கு வருமானத்தை வழங்குவதற்காக 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அவரது பரந்த Duchy of Cornwall தனியார் பண்ணையில் பணியாற்றியவர்களால் செய்யப்பட்ட ஒரே கடினமான உழைப்புத்தான் சார்ல்ஸ் அறிந்த ஒன்றாகும். Duchy இன் மொத்த பரப்பளவு 126,000 ஏக்கர் 23 மாவட்டங்களில் பரவியுள்ளது. 2016 ஆம் ஆண்டில், இதன் மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாகும், கடந்த ஆண்டு சார்ல்ஸ் பண்ணையிலிருந்து 21.6 மில்லியன் பவுண்டுகள் வருமானத்தைப் பெற்றார்.

பணிபுரிய வெட்க்கப்படும் இளவரசரின் பசப்புவார்த்தைகள், தவிர்க்க முடியாத மறுதாக்கத்தை தூண்டியது. பின்வரும் சமூக ஊடக கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன:

• இளவரசர் சார்ல்ஸ் ஒரு கையை தனது சட்டைப் பையில் வைத்தபடி “கடின உழைப்பு” செய்யச் சொல்கிறார்.

• எனக்குத் தெரிந்தவரை, இளவரசர் சார்லஸ் ‘கடின உழைப்பு’ குறித்த அதிகாரமற்றவர்”

• ‘இளவரசர் சார்ல்ஸையும்’, ‘கடின உழைப்பையும்’ ஒரு வசனத்தில் பார்ப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

• ஒரு அரண்மனையில் வசிக்கும் 71 வயது மனிதர், தனது பற்பசையை பிதுக்கி கொடுப்பதற்கு ஒரு ஊழியரை வைத்திருக்கிறார். அவருக்கு ஒருபோதும் எந்தவொரு வேலையுமில்லை. எங்களுக்கு கடுமையான வேலை பற்றி பிரசங்கம் செய்கிறார்.

• இந்த ஒட்டுண்ணி இளவரசருக்கு கடினமான உழைப்பு பற்றி என்ன தெரியும். அவரது ஆடம்பரமான வாழ்க்கையில் ஒரு நாள் கூட உழைத்தது கிடையாது.

• ரொபேஸ்பியரை மறுபுனருத்தானம் செய்ய மிகவும் தாமதமாகிவிட்டது!

• பிரிட்டனுக்கான தேர்வா? உண்மையாகவா? இது 21 ஆம் நூற்றாண்டு, இது 1940 கள் அல்ல. யாரோ ஒருவர் "Dig for Victory" இனை பார்த்துவிட்டு, அரசாங்கத்தின் வெறுப்பான கொள்கைகளுக்கு வெளிநாட்டவரை மூடுதிரையாக்குவதை ஒரு சிறந்த காரணம் என கருதியிருக்கலாம். "Dig for Victory" பிரச்சாரத்தில் இரண்டாம் உலகப் போரின்போது மக்களை தமது உணவுகளை பயிரிடுமாறு கோரப்பட்டது.

பிந்தைய கருத்து, பிரிட்டனின் அறுவடை வயல்களில் அழுகக்கூடும் என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறது. மூன்று தசாப்தங்களில் கூடிய பகுதி அறுவடையானது, முக்கியமாக பல்லாயிரக்கணக்கான கிழக்கு ஐரோப்பிய குடியேறியவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்று அல்லது இரண்டு பருவங்களுக்கு வழக்கமாக மே முதல் வீடு திரும்புவதற்கு முன்பு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியம் அவர்களின் வறிய சொந்த நாடுகளை விட கணிசமாக அதிகமாக உள்ளது.

பிரெக்ஸிட்டுடன் தொடர்புடைய குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் தற்போதைய தொற்றுநோயுடன் ஒன்றுசேர்ந்து இந்த பணியாளர்களில் பெரும்பாலோர் இனி கிடைக்கப்போவதில்லை. டோரிகள் நீண்டகாலமாக மலிவான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த தொழிலாளர்களை கொண்டு மாற்ற விரும்பினர். ஏழ்மையில் வாழும் அவர்கள் சிறிய தொகைக்கு முதுகைமுறிக்கும் வேலையை செய்யவேண்டியிருக்கும். 2016 ஆம் ஆண்டில், அப்போதைய சுற்றுச்சூழல் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சம் பின்வருமாறு அறிவித்தார், “பிரிட்டிஷ் மக்களை கொண்டு அந்த வேலைகளை செய்யவிக்க எம்மால் முடியும்… உணவு உற்பத்தியில் ஒரு தொழில் என்ற கருத்து எதிர்காலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்”.

இந்த கனவை நனவாக்க தொற்றுநோய் முறையாக கையிலெடுக்கப்பட்டது. ஒரு பழ பண்ணை வைத்திருக்கும் சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் ஈயூஸ்டஸால் தொடங்கப்பட்ட பிரிட்டனுக்கான தேர்வு வலைத் தளத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம், “தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஒன்றிணைத்து, ஒவ்வொருவரும் அனுபவிக்கக்கூடிய சிறந்த தரமான பிரிட்டிஷ் பழங்களையும் மரக்கறிகளையும் இங்கிலாந்து தொடர்ந்து வழங்க முடியும் என்பதை உறுதிசெய்வதாகும். தேசத்திற்கு உணவளிக்க பிரிட்டனுக்கான தேர்வுக்கு உதவுங்கள்!” "உழைக்க விருப்பமாக இருப்பவர்கள் ஒரு கையை கொடுக்க விரும்புகிறார்கள், தங்கள் பங்கை வகிக்க விரும்புகிறார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என்று ஈயூஸ்டஸ் கூறினார்.

பிரச்சாரம் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது. ஒரு கார்டியன் அறிக்கையின்படி, தேசிய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டாம் பிராட்ஷா, பிரிட்டனுக்கான தேர்வு மீதான ஆர்வத்தின் அளவு “மிகப்பெரியது” என்றும், தனித்தனி பயனர்களிடமிருந்து 100,000 க்கும் அதிகமான அணுகல்களைப் பெற்றதாகவும் கூறினார். நெருக்கடியின் உதவியால் ஏப்ரல் முதல் பண்ணைகளில் 25-30 சதவிகிதம் பறிப்பவர்கள் ஏற்கனவே பிரிட்டிஷ்காரராக இருந்தார்கள். அந்த எண்ணிக்கை வழக்கமாக 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று அவர் மதிப்பிட்டார்.

ஆனால் 20,000 முதல் 40,000 தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இந்த வலைத் தள தேடல்களில் பல தொடரப்படாது என்பதை அனுபவம் காட்டுகிறது. அனைத்து விண்ணப்பங்களிலும் கிட்டத்தட்ட பாதியளவிலான 50,000 பேர் Alliance of Ethical Labour வழங்குநரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வமைப்பு பண்ணைகளுக்கான முக்கிய ஒப்பந்த விநியோகஸ்தர்களில் ஒன்றாகும். ஆனால் இவர்களில், 6,000 பேர் மட்டுமே ஒரு வேலைக்கான தேர்விற்கான வீடியோ நேர்காணலில் தேர்வுசெய்யப்பட்டனர். 1,000 பேர் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். ஒரு ஒப்பந்தத்தை 112 பேர் மட்டுமே ஒப்புக்கொண்டனர்.

போதுமான தொழிலாளர்கள் ஒரு வேலையை எடுக்க ஒப்புக் கொண்டாலும், பலர் சில நாட்களுக்குப் பின்னர் அல்லது விரைவில் வெளியேறுவார்கள் என்பது தொடர்பாக ஒரு கேள்விக்குறி உள்ளது என்று தொழில் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். பிரிட்டிஷ் விவசாயிகள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் வார்ட் கார்டியனிடம், “நாங்கள் சரி அல்லது அநேகமாக சரி,” என்று கூறினார், ஆனால் “மீதமுள்ள பருவகாலத்தில் ஒரு பதட்டம் இருக்கிறது. நாங்கள் படிப்படியாக அடைப்பிலிருந்து வெளியே வரும்போது, பண்ணைகளில் வேலை செய்யும் சிலர் தங்கள் முன்னைய வேலைகளுக்கு திரும்புவார்கள்” என்றார்.

சிறிது ஆச்சரியம். பிரிட்டனினுக்கான தேர்வு தொடர்பான கேள்விகளுக்கான பதிலில் “குறிப்பிட்ட வேலைப் பங்கைப் பொறுத்து ஊதியம் மாறுபடும். ஆனால் மணிநேர ஊதியம், தேசிய வாழ்க்கை ஊதியம் அல்லது தேசிய குறைந்தபட்ச ஊதியத்தால் ஆதரிக்கப்படுகிறது [18-20 வயதுக்கு 6.45£ மற்றும் 21–24 வயதுக்கு 8.20£] மற்றும் பல வேலைகள் ஒரு உற்பத்தி போனஸையும் கொண்டுள்ளன”. பெரும்பான்மையானவர்கள் “ஒரு மணி நேரத்திற்கு 9.00£ முதல் 11.00£ வரை” பெறுவார்கள். தேவைப்படும் உற்பத்தித்திறன் "சில ஊழியர்களுக்கு அடையக்கூடியது" என்பதால் வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே "ஒரு மணி நேரத்திற்கு 14£ வரை சம்பாதிக்க முடியும்".

இந்த பரிதாபத்திற்காக, தொழிலாளர்கள் "காலையில் வேலையிலிருந்து முதல் பிற்பகல் வரை செயல்படும் பண்ணைகளுடன் நீண்ட நேரம் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ... பொதியாக்கல் பெரும்பாலும் மாறிமாறி தொடர்ச்சியாக (shifts) செய்யப்படுகிறது. மேலும் நாளின் பிற்பகுதி வரை தொடரலாம்" - இது நள்ளிரவு வரை என்று விவசாயிகள் விளக்கினர்.

ஆரம்ப தொடக்க நேரங்கள் பெரும்பாலும் அதிகாலை 5:30 மணி மற்றும் தொலைதூர கிராமப்புற இடங்கள் காரணமாக, தொழிலாளர்கள் வழக்கமாக பண்ணை வழங்கும் தங்குமிடங்களில் தங்குவர். பிரிட்டனுக்கான தேர்வு, பண்ணைகள் பொதுவாக “நிரந்தர துயிலும் வாகனங்கள் (caravan) பாணியிலான தங்குமிடங்களை கொண்டு ஒரு வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் தூங்குகின்றனர். தங்குமிடத்திற்கான கட்டணம் "வாரத்திற்கு அதிகபட்சமாக 57.40£" ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் 300£ க்கும் குறைவாக சம்பாதிப்பவரும் இருக்கலாம்.

ஒரு தொற்றுநோய்க்கு நடுவில், இந்த வாழ்க்கை நிலைமைகள் தெளிவாக ஆபத்தானவை. “ஒரு கரவனில் வாழும்போது சமூக விலகல் எவ்வாறு செயல்படுகிறது?” என்ற கேள்விக்கு அதன் பதிலில், "குழுவின் ஒரு உறுப்பினர் கோவிட்-19 ஆல் நோய்வாய்ப்பட்டால், குழுவில் உள்ள மற்றவர்கள் ஏனைய எந்த வீட்டினரும் செய்வது போலவே சுய-தனிமைப்படுத்தப்பட வேண்டும்." என அந்த பதிலளிக்கும் இணைய தளம் கூறுகின்றது.

இந்தத் திட்டம் கிட்டத்தட்ட முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், இன்று பண்ணைகளில் இந்த வேலையை நாட்டிற்கான மகளிர் இராணுவத்துடன் ஒப்பிடும் அரசாங்கத்தின் ஒரு சரமாரியான பிரச்சாரம் நடைபெறுகின்றது. இந்த ஒப்புமை ஜோன்சன் அரசாங்கம் தயாராகி வரும் வர்க்கப் போரின் எதிர்கால திசையின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். "நாட்டு பெண்கள்" ஆரம்பத்தில் போரின்போது தன்னார்வத் தொழிலாளர்களாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் 80,000 தொழிலாளர்கள் கொண்ட ஒரு பரந்த இராணுவத்தின் ஒரு பகுதியாக கட்டாயத் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நீண்ட நேரம் உடல் ரீதியாக கோரும் வேலையைச் செய்வதுடன், அவர்கள் பெரும்பாலும் இராணுவக் குடியிருப்புகளில் (Barrack) வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிகழ்வுகள், ஒரு சமூகம் புரட்சிக்கு எவ்வளவிற்கு கனிந்திருக்கின்றது என்பதைக் குறிக்கும் அடையாளங்களாக உள்ளன. விவசாயிகளுக்கு ரொட்டி இல்லை என்று கூறப்பட்டதற்கு பிரெஞ்சு மகாராணி மரி அந்துவானெட் இன் பதில், “அவர்கள் கேக் சாப்பிடட்டும்” என்பது நினைவுக்கு வருகிறது. ஒரு செயலற்ற அரசாங்கத்தின் சார்பாக அதனுடன் இணைந்துபயணிக்கும் ஒரு இளவரசர், "கடினமான உழைப்பில்" ஈடுபட வேண்டும் என்று கீழ்த்தரமாக கட்டளையிடுவது அவ்வாறான இன்னொரு நிகழ்வாகின்றது.

Loading