நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெளிவரவிருக்கும் நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்: 1986-1995 என்ற நூலுக்கான முன்னுரையை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 1986 இல் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அபிவிருத்தி குறித்த விரிவுரைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன.

இந்த நூல் 2019 ஜூலை 21-28 காலத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய கோடைப் பள்ளியில் வழங்கப்பட்ட விரிவுரைகளைக் கொண்டதாகும். 1986 பிப்ரவரியில் பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) ஏற்பட்ட உடைவுக்குப் பிந்தைய காலத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தில் உண்டான அபிவிருத்தியை இந்த விரிவுரைகள் ஆய்வுசெய்கின்றன. இத்தொகுதியின் துணைச்சேர்க்கை பகுதியில் விரிவுரைகளில் மேற்கோளிடப்பட்ட பல இன்றியமையாத தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான உடைவு நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பெறுகின்றது. ட்ரொட்ஸ்கிச இயக்கமும் மற்றும் அதன் புரட்சிகர சர்வதேச வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியும் உயிர்பிழைப்பதும் அதில் பணயத்தில் இருந்தன.

இத்தொகுதியின் தொடக்க விரிவுரையாக இடம்பெற்றிருக்கும், SEP தலைவர் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்ட விரிவுரையானது, இந்த உடைவையும் ICFI இன் இந்நாள் கடமைகளையும், 1923 இல் சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு உருவாக்கப்பட்டது வரை சென்று ஆராய்ந்து அதனை ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் உள்ளடக்கத்தில் நிறுத்துகிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் நான்கு தனித்துவமான காலகட்டங்களை நோர்த் அடையாளப்படுத்துகிறார்.

1923 முதல் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட வரையான முதலாவது காலகட்டம், ஸ்ராலின் தலைமையினலான எதிர்ப்புரட்சிகர ஆட்சியின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி தலைமை கொடுத்திருந்த போராட்டத்தை சூழ்ந்திருந்தது. இந்த பதினைந்து ஆண்டுகள், உலக பெருமந்தநிலை, ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்திற்கு வந்தமை, ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் வெடிப்பு, சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிசத்தில் மிஞ்சியிருந்தவற்றுக்கு எதிராக ஸ்ராலின் தொடுத்த கொலைபாதக பயங்கரம், மற்றும் இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போர் நெருங்கி வந்தமை ஆகியவற்றால் குறிக்கப்பட்டன. “விசா இல்லாத கோளத்தில்” தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வாழ்ந்த ஒருவராய், ட்ரொட்ஸ்கி, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற மார்க்சிச-விரோத தத்துவத்திற்கு சமரசமற்ற எதிர்ப்பில், நான்காம் அகிலத்தின் மூலோபாய அடித்தளமாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை பாதுகாத்தார், அபிவிருத்தி செய்தார்.

1938 முதல் 1953 வரையான இரண்டாவது கட்டமானது, இரண்டாம் உலகப் போர், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ மறுஸ்திரப்படலின் முதல் ஆண்டுகள், மற்றும் பனிப் போர் வெடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இந்த பதினைந்து ஆண்டுகள் நான்காம் அகிலத்திற்குள் அதிகரித்துவந்த பிளவுகளான சோவியத் ஒன்றியத்தை ஒரு “உருக்குலைந்த தொழிலாளர் அரசு” என ட்ரொட்ஸ்கி வரையறை செய்தமை பற்றியதும் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சிக்கும் இடையிலான பனிப்போர் மோதல் அரசியல் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஒரு உலகத்தில் நான்காம் அகிலத்தின் சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரம் ஆகியவை குறித்த கருத்துவேறுபாடுகளை மையமாகக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

1940களின் பிற்பகுதியில், மிஷேல் பப்லோ மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரான ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரின் தலைமையிலான ஒரு போக்கு, சோவியத் அதிகாரத்துவத்திற்கும் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கும் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வழங்கிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தது. ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக ஒரு அரசியல் புரட்சிக்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தமைக்கு எதிரான விதத்தில், பப்லோவும் மண்டேலும், அதிகாரத்துவ சுய-சீர்திருத்தம் எனும் ஒரு நிகழ்ச்சிப்போக்கை கற்பனை செய்தனர். அதுமட்டுமல்லாமல், புத்துயிர் பெற்ற ஸ்ராலினிச அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழ், முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கிவீசுவதை முன்னெடுக்கத் தள்ளப்படும். அதிகாரத்துவம் வழிநடத்துகின்ற இந்த புரட்சிகளின் விளைவாக “ஊனமுற்ற” தொழிலாளர்’ அரசுகள் ஸ்தாபிக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் காலத்திற்கு அவை நீடித்திருந்த பின்னர், அவை உண்மையான சோசலிசமாக வளர்ச்சி பெறும் என்றனர். இந்த விசித்திரமான முன்னோக்கில், நான்காம் அகிலம் சுயாதீனமாய் ஆற்றுவதற்கு எந்த பாத்திரமும் இருக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கேற்ப நான்காம் அகிலத்தின் இருக்கும் பிரிவுகள், தங்களை அப்போதிருந்த பரந்த ஸ்ராலினிச கட்சிகளுக்குள்ளாகக் கலைத்து விட வேண்டும் என்று பப்லோவும் மண்டேலும் வலியுறுத்தினர். இந்த, அடிப்படையில் தோற்கடிப்புவாத நோக்குநிலையை அபிவிருத்தி செய்த பப்லோவும் மண்டேலும், இதைப் போன்றே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பாரிய மக்கள் ஆதரவை பெற்றிருந்த சீனாவின் மாவோயிச ஆட்சி மற்றும் பல முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களை நோக்கிய ஒரு சந்தர்ப்பவாத நோக்குநிலையை ஏற்றனர்.

நான்காம் அகிலத்திற்கு வெளியில், “புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியுடையதாக இந்த கோளத்தில் ஒன்று கூட கிடையாது” என்று ட்ரொட்ஸ்கி 1938 இல் எழுதியிருந்தார். நான்காம் அகிலமானது “முதலாளித்துவ வர்க்கத்தின் முந்தானையில் முடிந்துவைக்கப்பட்டுள்ள அரசியல் குழுக்கள் அனைத்துடனும் சமரசமற்று யுத்தம் செய்கிறது.” [லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும், இடைமருவு வேலைத்திட்டம் (நியூயோர்க்: லேபர் பப்ளிகேஷன்ஸ், 1981), ப.42]

1950களின் ஆரம்பத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் முகமைகளுக்கு ட்ரொட்ஸ்கி காட்டிய புரட்சிகர எதிர்ப்பை பப்லோ நிராகரித்தார். “நம்மை கடந்த காலத்தில் இருந்து [அதாவது, ட்ரொட்ஸ்கியிடம் இருந்து] இன்னும் தனித்துவப்படுத்திக் காட்டுவது”, அவர் எழுதினார், “இன்றைய நமது இயக்கத்தின் மேம்பட்ட தரத்தைக் காட்டுவது, மற்றும் நமது வருங்கால வெற்றிகளின் நிச்சயமான அளவுகோலைக் கொண்டிருப்பது எதுவென்றால், வெகுஜன இயக்கத்தை அது பின்வருமாறு உள்ளவாறாக பெரும்பாலும் குழம்பியதாக, பலசமயங்களில் துரோகமய, சந்தர்ப்பவாத, மத்தியவாத, அதிகாரத்துவவாத மற்றும் இன்னும் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தலைமைகளைக் கொண்டதாக விளங்கிக்கொள்வதற்கும், மதிப்பிட்டுக் கொள்வதற்கும், வளர்ந்துகொண்டுவரும் நமது திறனை புரிந்துகொள்வதற்கும், இந்த இயக்கத்தை அதன் இப்போதைய மட்டத்தில் இருந்து இன்னும் உயரிய மட்டங்களுக்கு உயர்த்துகின்ற நோக்கத்துடன் அதில் நமக்கான இடத்தைக் காண்பதற்கான நமது முயற்சிகளுமாகும்.” [டேவிட் நோர்த் எழுதிய நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு இல் மேற்கோளிடப்பட்டது (Oak Park: Mehring Books, 2018), பக். 192-93]

பப்லோ மற்றும் மண்டேலின் கலைப்புவாத முன்னோக்கு மற்றும் நடைமுறையானது நான்காம் அகிலத்தை அழிவைக் கொண்டு அச்சுறுத்தியது என்பது 1953க்குள்ளாக தெள்ளத்தெளிவாகி விட்டிருந்தது. அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பிரதான தலைவராக அப்போதும் இருந்து வந்தவருமான ஜேம்ஸ் பி.கனன், ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் பப்லோ, மண்டேல் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடம் இருந்து நிரந்தரமாக முறித்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்ற ஒரு பகிரங்கக் கடிதத்தை விடுத்தார். கனனும் பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்ட மற்றவர்களும் —பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவராய் இருந்த ஜெர்ரி ஹீலி உட்பட்டவர்கள்— நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை உருவாக்கினர். இந்த வரலாற்று உடைவானது நான்காம் அகிலத்தின் வரலாற்றின் இரண்டாம் கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

மூன்றாம் காலகட்டம், 1953 இல் பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டதுடன் ஆரம்பமாகி 1985-86 இல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) அனைத்துலகக் குழு முறித்துக் கொண்டது வரை மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நீண்டதாகும். நான்காம் அகிலத்தின் மீது ஏகாதிபத்தியமும் ஸ்ராலினிசமும் செலுத்திய சித்தாந்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான அழுத்தத்தின் அரசியல் வெளிப்பாடாய் இருந்த பப்லோவாதத்தின் தொடர்ந்துவந்த செல்வாக்குக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய நெடிய போராட்டமே இந்த முப்பத்தியிரண்டு ஆண்டு காலத்தின் மேலோங்கிய அம்சமாக இருந்தது.

பப்லோவாதமானது, இறுதி ஆய்வில், பெரும் தொழிலாளர் அதிகாரத்துவங்கள் (ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக இரண்டு வகையினதும்) மற்றும் தீவிரப்பட்ட குட்டி-முதலாளித்துவ அரசியலின் பலவண்ண வடிவங்கள் ஆகியவற்றின் கண்ணோட்டத்தைப் பிரதிபலித்த, அத்துடன் அவற்றுக்குத் தகவமைத்துக் கொண்ட ஒரு மார்க்சிச-விரோத வடிவமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் குறிப்பான மற்றும் தனித்துவமான நிலைமைகளான ஸ்ராலினிச ஆட்சிகளின் மேலெழுந்தவாரியான உறுதிபெற்ற தன்மை, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டமை, சீனாவில் மாவோயிச ஆட்சி அதிகாரத்துக்கு வந்தமை, மார்க்சிசம் போல் ஒலிக்கும் சொல்லாடல்களை அடிக்கடி கக்குவதான ஏராளமான முதலாளித்துவ தேசிய ஆட்சிகள் மற்றும் இயக்கங்கள் எழுந்தமை மற்றும் 1960களில் மாணவர் தீவிரசிந்தனைவாதத்தின் வெடிப்பு ஆகியவை நான்காம் அகிலத்திற்கு அரசியல்ரீதியாக குரோதமானதொரு சூழலை உருவாக்கின. குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி தனக்கு நோக்குநிலை அமைத்துக் கொண்ட பப்லோவாத இயக்கமானது, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அரசு முகமைகளது பகிரங்கமான மற்றும் இரகசியமான ஆதரவுடன், நான்காம் அகிலத்தின் மரபுவிலகா ட்ரொட்ஸ்கிஸ்டுகளை அரசியல்ரீதியாக தனிமைப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது.

பப்லோவாத திருத்தல்வாதத்தின் ஆதிக்கம் அனைத்துலகக் குழுவின் மீதான வெளிப்புற அமைப்புரீதியான அழுத்தத்தின் வடிவில் மட்டும் வெளிக்காட்டவில்லை. தெளிவாக கூறுவதானால் பப்லோவாதத்தின் புறநிலை சமூக அடிப்படை மற்றும் சக்திகளின் சாதகமற்ற உறவு ஆகிய அதே காரணங்களால், பப்லோவாதிகளை ஒத்த அரசியல் கருத்தாக்கங்கள் அனைத்துலகக் குழுவின் தலைமை மற்றும் காரியாளர்களது பிரிவுகளுக்குள்ளாகவும் ஆதரவாளர்களை திரட்டிக்கொள்ள முடிந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியானது, காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தமையை குட்டி-முதலாளித்துவ கெரில்லாக்களின் தலைமையில் ஒரு சோசலிசப் புரட்சி சாத்தியமானது என்பதை நிரூபணம் செய்ததாகக் கூறி, 1963 இல் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டு, பப்லோவாதிகளுடன் சேர்ந்து ஐக்கிய செயலகத்தை உருவாக்கியது. பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்தை நிராகரித்த அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரிவுகள் SWP ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தமைக்கான எதிர்ப்புக்கு தலைமைகொடுத்தன. ஜெர்ரி ஹீலி மையமான பாத்திரம் வகித்த ICFI இன் கோட்பாடான போராட்டமானது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடிகளான அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக் (1966), இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (1968) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது.

மறுஐக்கியத்தை நிராகரித்தமை என்பது, பப்லோவாதத்துடன் இறுதியாக கணக்குத் தீர்த்து விட்டதைக் குறித்திருக்கவில்லை. 1966 இல், OCI (Organisation Communiste Internationaliste) இன் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகள், நடைமுறை அரசியல்ரீதியான அர்த்ததில் பிரான்சுவா மித்திரோனின் தலைமையிலான பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) அணிசேர்வதை நோக்கிய திசையில், நான்காம் அகிலத்தின் ஒரு “மீள்கட்டுமான”த்திற்கு ஆலோசனையளித்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை நோக்கி OCI நோக்குநிலை அமைத்துக் கொண்டமையும், இலத்தீன் அமெரிக்காவில் இருந்த பல்வேறு பப்லோவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ போக்குகளுடன் முழுமையான சந்தர்ப்பவாத உறவுகளை அது வளர்த்துக் கொண்டமையும் 1972 இல் அனைத்துலகக் குழுவுக்குள்ளான ஒரு உடைவுக்கு இட்டுச் சென்றது. பிரிட்டனில் இருந்த சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) OCI மீது அரசியல் விமர்சனங்களை வைத்தது என்றபோதிலும் 1970களில் இதேபோன்ற போக்குகளை அதுவும் தெளிவாக வெளிப்படுத்தத் தொடங்கியது. 1973 நவம்பரில் SLL தொழிலாளர் புரட்சிக் கட்சியாக (WRP) உருமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நோக்குநிலை அதிகரித்தளவில் வெளிப்படுத்தப்பட்டது.

அனைத்துலகக் குழுவிற்குள்ளாக, SLL/WRP இன் தேசியவாத அரசியலுக்கான ஒரு அரசியல் எதிர்ப்பு எழுந்தது. 1971 இல், கீர்த்தி பாலசூரியவும் ICFI இன் இலங்கை பிரிவான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையும், கிழக்கு பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுத்தமைக்கு SLL அளித்த ஆதரவுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆயினும் இந்த விமர்சனங்கள், அனைத்துலகக் குழுவிற்குள்ளாக விவாதத்திற்காக சுற்றில் விட அனுமதிக்கப்படாமல், SLL தலைமையால் ஒடுக்கப்பட்டன.

WRP இன் தேசியவாத அரசியலுக்கு எதிரான அரசியல் போராட்டம்

ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து WRP விலகிச் சென்றமை மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட தத்துவார்த்த கருத்தாக்கங்கள் ஆகியவற்றின் மீதான ஒரு மிக நீடித்த மற்றும் ஆழமான விமர்சனம், வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலராக இருந்த டேவிட் நோர்த்தின் மூலம், 1982 முதல் 1985 வரையான காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

WRP இன் அரசியல் நிலைப்பாட்டின் மீதான தனது ஆரம்ப விமர்சனங்களில், நோர்த், ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து WRP பின்வாங்கியதற்கு கவனம் ஈர்த்தார். 1982 அக்டோபர்-நவம்பரில் எழுதப்பட்ட, 'ஜி. ஹீலியின் “இயங்கியல் சடவாதம் தொடர்பான ஆய்வுகள்” மீதான ஒரு விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ இல் நோர்த், ஹீலியின் அகநிலைவாத மார்க்சிச திரிப்பையும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் இருந்து WRP பின்வாங்கியதுடன் அது கொண்டிருந்த உறவையும் அம்பலப்படுத்தினார். முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கு WRP தகவமைத்துக் கொண்டதை மேற்கோளிட்டு, நோர்த் எழுதினார்:

மத்திய கிழக்கில் அனைத்துலகக் குழுவின் வேலையானது, அது ஒருபோதும் உலகின் அப்பகுதியில் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புகின்ற ஒரு தெளிவான முன்னோக்கில் வழிநடத்தப்பட்டிருக்கவில்லை என்கின்ற வேளையில், அது இப்போது அரசியல் காற்றின் திசைமாற்றங்களுக்கு இணங்கிய ஒரு தொடர் நடைமுறைவாத தகவமைப்புகளாக சீரழிந்திருக்கிறது. தேசிய விடுதலை இயக்கங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் மார்க்சிச வழிமுறைகளில் பாதுகாப்பதென்பது, பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கு விமர்சனமற்று ஆதரவு வழங்கும் சந்தர்ப்பவாத வகையில் பொருள்விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்துலகக் குழு மத்திய கிழக்கில் வேலைசெய்திருந்த ஆறுஆண்டு காலத்தில், உலகின் அப்பகுதியில் வர்க்க உறவுகளை பகுப்பாய்வு செய்திருக்கும் ஒரேயொரு அறிக்கையும் கூட இல்லை. தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியை பகுப்பாய்வு செய்திருக்கின்ற ஒரேயொரு கட்டுரையும் கூட அங்கே இல்லை. அத்தனை எண்ணங்கள் மற்றும் நோக்கங்களுக்கும், நிரந்தரப் புரட்சித் தத்துவமானது இப்போதைய சூழ்நிலையில் பொருந்தாததாகவே அணுகப்பட்டு வருகிறது. [டேவிட் நோர்த், “ஜி.ஹீலியின் ‘ஆய்வுகள்’ மீதான விமர்சனத்தின் அரசியல் சுருக்கம் (நான்காம் அகிலம், தொகுதி 13, எண்.2, இலையுதிர்காலம் 1986), பக்.23]

1984 ஜனவரி-பிப்ரவரியில், நோர்த், வரலாற்றுரீதியாக பப்லோவாதத்துடன் தொடர்புடைய நிலைப்பாடுகளுக்கு WRP தகவமைத்துக் கொண்டதன் மீதான ஒரு விரிவான பகுப்பாய்வை வழங்கினார்.

1984 ஜனவரி 23 அன்று, WRP இன் பொதுச்செயலரான மைக்கல் பண்டாவுக்கு அனுப்பிய கடிதத்தில், நோர்த் பின்வருமாறு எழுதினார்: அனைத்துலகக் குழுவானது, WRP இன் தலைமையின் கீழ், “சிறிது காலமாகவே அதன் நடைமுறையை வழிநடத்துகின்ற ஒரு தெளிவான மற்றும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்த முன்னோக்கு இல்லாமல் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்புகின்ற ஒரு முன்னோக்கைக் காட்டிலும் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடன் கூட்டணிகளை அபிவிருத்தி செய்வது தான் அனைத்துலக்குழுவின் வேலைகளது முக்கியமான அக்கறையாக பல ஆண்டுகளாய் இருந்து வருகிறது. இந்தக் கூட்டணிகளின் உள்ளடக்கமானது, அரைக்காலனித்துவ நாடுகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு முக்கியமானதான நமது சொந்த சக்திகளை அபிவிருத்தி செய்வதை நோக்கிய எந்த தெளிவான நோக்குநிலையையும் மிக மிகக் குறைவாகவே பிரதிபலித்து வந்திருக்கிறது.” [மைக் பண்டாவிற்கு டேவிட் நோர்த் எழுதிய கடிதம், (நான்காம் அகிலம், தொகுதி.13, எண்.2, இலையுதிர்காலம் 1986, பக் 35]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு 1984 பிப்ரவரி 11 அன்று வழங்கிய ஒரு அரசியல் அறிக்கையில், நோர்த் பின்வருமாறு தெரிவித்தார்: “அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியானது திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது … திருத்தல்வாதமானது நாமும் ஒரு பகுதியாக இருக்கும் வர்க்கப் போராட்டத்தின் உண்மையான அபிவிருத்தியில் சடவாத வேர்களைக் கொண்டிருக்கின்ற துல்லிய காரணத்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் புரட்சிகர முன்னணிப் படை மீதுமான அந்நிய வர்க்க சக்திகளது அழுத்தத்தை அது பிரதிபலிக்கின்ற துல்லிய காரணத்தாலும், திருத்தல்வாதத்திற்கான நமது பிரதிபலிப்பு நமது சொந்த அரசியல் வளர்ச்சியின் பகுப்பாய்வில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் காண்கிறது.

நோர்த் தொடர்ந்தார்:

இந்தக் காரணத்தினால் தான் கடந்த தசாப்தத்தின் போதான அனைத்துலகக் குழுவின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை ஆராய நேரம் வந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பப்லோவுடனான ஆரம்ப உடைவுக்குப் பிந்தைய 20க்கும் அதிகமான ஆண்டுகளில் நாம் விடாமுயற்சியுடன் போராடி வந்திருக்கும் நிலைப்பாடுகளில் இருந்து படிப்படியாக விலகிச் சென்றிருக்கிறோம் என்ற வலிமையான அபிப்ராயம் எங்களுக்கு உள்ளது. 1984 ஜனவரி 23 அன்று தோழர் பண்டாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பிலான அனைத்துலகக் குழுவின் ஒட்டுமொத்த அனுபவத்தின் மீதான ஒரு இருப்புநிலை மதிப்பீட்டை செய்வதற்கான நேரம் வந்து விட்டது என்று நான் யோசனை தெரிவித்திருந்தேன். ஒரு உலகக் கட்சியாக, நாம் தொடர்புகளை ஸ்தாபித்திருக்கக் கூடிய பல்வேறு தேசியவாத முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடனான நமது அனுபவத்தைக் குறித்து உண்மையாகவே அங்கே எந்த புறநிலையான ஆய்வும் இருக்கவில்லை என்ற காரணத்தினாலேயே அத்தகையதொரு ஒரு இருப்புநிலை மதிப்பீட்டை செய்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சியை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு பிரிவிலும் காரியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் இந்த பதிவு ஒரு தீவிர விமர்சனத்திற்குத் தகுதி கொண்டதாய் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். [டேவிட் நோர்த், “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வழங்கப்பட்ட அரசியல் அறிக்கை”, 1984 பிப்ரவரி 11, (நான்காம் அகிலம், தொகுதி. 13, எண்.2, இலையுதிர் காலம் 1986), பக் 42]

இந்த கருத்துவேறுபாடுகள் குறித்த ஒரு விவாதத்தில் ஈடுபடுவதற்கு WRP இன் தலைமை மறுத்தது என்பதுடன், வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் விமர்சனத்திற்கு இயக்கத்திலிருந்து உடைத்துக்கொள்வதாக ஒரு அச்சுறுத்தலை கொண்டு பதிலிறுத்தது. ஆயினும், அதன்பின் ஒரு ஆண்டிற்கு சற்று கூடுதலான காலத்திற்குள்ளாக, முந்தைய தசாப்தத்தின் போது ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளில் இருந்து இவ்வாறான அரசியல்ரீதியான பின்வாங்கலின் விளைபயனாக, ஒரு அமைப்புரீதியான நெருக்கடியால் WRP சூழப்பட்டிருந்தது. 1985 டிசம்பர் 16 அன்று அனைத்துலகக் குழு WRP ஐ உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதில் இந்த நெருக்கடி உச்சமடைந்திருந்தது. நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் WRP இன் உறுப்பினர் உரிமைகளை மீண்டுமளிக்க ICFI முன்வந்தது. WRP இந்த நிபந்தனையை நிராகரித்ததோடு, அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை ஏற்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மறுதலித்தது. 1986 பிப்ரவரி 6 அன்று, WRP அதன் காங்கிரசை நடத்திக் கொண்டிருந்த அரங்கில் ICFI ஆதரவு உறுப்பினர்களை —WRP உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இருந்தனர்— நுழைய விடாமல் தடுப்பதற்காக போலிசை அழைத்ததன் மூலம் அனைத்துலகக் குழுவுடனான அதன் முறிவை WRP இன் தலைமை முழுமைப்படுத்தியது. இந்த முறிவுக்கு அடுத்த ஒரு சில ஆண்டுகளில், WRP இல்லாமலே மறைந்துபோய் விட்டிருந்தது.

WRP உடனான 1985-86 உடைவானது நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மூன்றாவது காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மூன்று தசாப்த கால தீவிரமான அரசியல் போராட்டத்திற்குப் பின்னர், மரபுவழுவா ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பப்லோவாதிகளுக்கு ஒரு தீர்மானகரமான அரசியல் தோல்வியைக் கொடுத்திருந்தனர், நான்காம் அகிலத்தின் மீதான முழுமையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுக்கொண்டனர்.

ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் நான்காம் காலகட்டம்: சர்வதேச மார்க்சிச முன்னோக்கின் மீளுருவாக்கம் மற்றும் அபிவிருத்தி

இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் விரிவுரைகள் முதன்மையாக, 1986 இல் தொடங்கிய ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் நான்காம் காலகட்டத்தின் மீது கவனம் குவித்திருக்கின்றன. உடைவுக்குப் பிந்தைய காலத்தில், உலக அரசியல் சூழல் துரிதமாக மாறிவந்த நிலைமைகளின் கீழ், சிக்கலான ஒரு தொகைப் பிரச்சினைகளுக்கு ICFI முகம்கொடுத்தது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகளிலும் நெருக்கடி ஆழமடைந்து சென்று இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, சீனாவில் முதலாளித்துவ உறவுகளின் மீட்சி வேகம்பிடித்தமை மற்றும் அதனைத் தொடர்ந்து 1989 இல் நடந்த தியானென்மென் சதுக்கப் படுகொலை, முதலாளித்துவ தேசிய ஆட்சிகளின் வலதுசாரிப் பரிணாமம் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்த பிரிவினைவாத இயக்கங்களது பல்கிப்பெருகல், தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாக மற்றும் அரசு எந்திரத்துடன் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டமை, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு மற்றும் 1990-1991 இல் ஈராக் மீதான முதல் படையெடுப்பில் தொடங்கிய முடிவில்லாத போர் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சவால்களுக்கு முகம்கொடுக்க ஒரு சர்வதேச மார்க்சிச முன்னோக்கு மீள்ஸ்தாபிக்கப்படுவதும் அபிவிருத்தி செய்யப்படுவதும் அவசியமாய் இருந்தது. இந்த முன்னோக்கிற்கான அரசியல் அடித்தளம் WRP உடனான உடைவின் பாதையில் எழுந்தது.

உடைவிற்கான காரணங்கள் மற்றும் முக்கியத்துவத்தை முறைப்படி பகுப்பாய்வு செய்வதே உடைவுக்குப் பின்னர் ICFI இன் முதல் வேலையாக இருந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது: 1973-1985 [நான்காம் அகிலம், தொகுதி. 13, எண்:1, 1986 கோடை) என்ற நோர்த் மற்றும் கீர்த்தி பாலசூரியாவினால் எழுதப்பட்ட, ICFI இன் 1986 மே அறிக்கையில் இது செய்யப்பட்டிருந்தது. WRP இன் பொதுச் செயலரான மைக்கல் பண்டா ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மீது தொடுத்த பகிரங்க தாக்குதலுக்கு ICFI டேவிட் நோர்த்தின், நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு என்னும் புத்தகத்தை வெளியிட்டு பதிலிறுத்தது.

அதனைத் தொடர்ந்து, தேசியவாதத்தினை அடித்தளமாகக்கொண்ட அத்தனை அமைப்புகள் மற்றும் கட்சிகளையும் பீடித்திருந்த ஒரு ஆழமான நெருக்கடியின் ஒரு பகுதியாக WRP இன் சீரழிவுக்கு கீழமைந்திருந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள் மீதான ஒரு தத்துவார்த்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசியல் முன்னோக்கு தொடர்பாக நான்காம் அகிலத்தின் வேலைகளை புதுப்பிப்பதுதான் WRP உடனான உடைவுக்குப் பிந்தைய காலத்தில் அனைத்துலகக் குழு முகம்கொடுத்த பிரதான சவாலாக இருந்தது. 1985-86 உடைவுக்கு இட்டுச் சென்ற அரசியல் நெருக்கடியின் கீழமைந்திருந்த புறநிலை சமூகப் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதற்குரிய பக்குவத்தை அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தின் மூலமாகப் பெற்றிருந்தது. 1923 இல் ஸ்தாபகம் பெற்றது முதலாக, ட்ரொட்ஸ்கிச இயக்கமானது உலக சூழ்நிலைகளிலான முக்கிய மாற்றங்களுக்கு ஒரு கூர்மையான உணர்திறனை கொண்டிருந்ததை எடுத்துக்காட்டியது. அதன் தலைமையிலும் பொறுப்புகளுக்குள்ளுமான முக்கியமான மோதல்கள் உலக அரசியலின் மிகமுக்கியமான திருப்புமுனைப் புள்ளிகளுக்கான அல்லது அவற்றை எதிர்பார்த்தான பதிலிறுப்பில் தோன்றத் தலைப்பட்டன. விரைவில் தெளிவாக இருந்ததைப் போல, 1982க்கும் 1986க்கும் இடையில் கட்டவிழ்ந்த அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டமானது 1989 மற்றும் 1991க்கு இடையில் உலக அரசியலில் நிகழ்ந்த வெடிப்பான மாற்றங்களை முன்னெதிர்பார்த்திருந்தவையாகும்.

புதுப்பிக்கப்பட்ட தத்துவார்த்த வேலையின் புதுப்பிப்புக்கான அவசர அவசியமானது WRP இன் பல ஆண்டுகால அரசியல் சரிவு மற்றும் தகவமைப்பானது சர்வதேச முன்னோக்குகள் மீதான தொடர்ச்சியான வேலையை அது கைவிட்டதில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டு வந்திருந்தது என்ற உண்மையால் கூடிய முக்கியத்துவம் பெற்றது. யதார்த்த உலகில் தொழிலாள வர்க்கம் கண்ட தோல்விகளை வசதியாக உதாசீனம் செய்த ஒரு வெற்று சொல்லாடலாக இது இருந்த “தொழிலாள வர்க்கத்தின் தோல்வி காணா தன்மை” குறித்து வாய்ச்சவடால் பேசிய அதேநேரத்தில், WRP, உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட மிகமுக்கிய மாற்றங்களுக்கும் ஏகாதிபத்திய புவியரசியல் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் அவை ஏற்படுத்திய தாக்கங்களுக்கும் கவனத்தை குறைத்துக் கொண்டே சென்றிருந்தது. 1970களின் மத்தியில் தொடங்கிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான உலகளாவிய முதலாளித்துவ தாக்குதலின் கீழமைந்திருந்த புறநிலை உந்துதல்களை பகுப்பாய்வு செய்வதற்கோ, அல்லது இருந்த பரந்த தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு எதிராக எந்த திறம்பட்ட எதிர்ப்பையும் முன்நிறுத்த இயலாமல் போனது ஏன் என்பதை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

அனைத்துலகக் குழு 1987 ஜூலையில் ஒரு புதிய உலக முன்னோக்கினை அபிவிருத்திசெய்வதை முன்னெடுத்தது. 1987 செப்டம்பர் 1 அன்று வேர்க்கர்ஸ் லீக்கின் கோடைப் பள்ளியில் வழங்கப்பட்ட ஒரு அறிக்கையில், “ஏகாதிபத்திய சகாப்தத்திற்குள்ளாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் எடுக்கப்பட்ட புதிய பொருளாதார வடிவங்களை —அதாவது வரலாற்றில் இணைகாணமுடியாத ஒரு அளவில் உற்பத்தி சர்வதேசமயமானமை மற்றும் ஒரு பொருளின் தயாரிப்பானது ஒருங்கிணைந்த நாடுகடந்த உற்பத்தியின் விளைபொருளாக இருக்கின்றதான உண்மையான உலகளாவிய உற்பத்தியின் எழுச்சி ஆகியவை— எடுத்ததைக் குறித்து” எந்த கவனத்தையும் எடுக்க WRP தவறியமை பற்றி நோர்த் கவனத்தை ஈர்த்தார். [டேவிட் நோர்த், “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகள் மீதான அரசியல் அறிக்கை” (நான்காம் அகிலம், தொகுதி 15, எண்:1, ஜனவரி-மார்ச் 1988), பக்.69]

தற்போதுள்ள தொழிலாள வர்க்க அமைப்புகளின் உலகளாவிய நெருக்கடியின் புறநிலை மூலகாரணமாக பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு உள்ளது என்று நோர்த் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்தார்:

இந்த புதிய சூழ்நிலைக்கு முகம்கொடுக்க தொழிற்சங்கங்கள் தயாராக இருக்கவில்லை. தேசிய அளவில் மட்டுமே வர்க்கப் போராட்டத்தை அவர்களால் நடத்தக்கூடியதாக இருப்பதால் அவற்றால் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க முடியாது. உண்மையில், நாடுகடந்த அமைப்புகளது அபிவிருத்தியானது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒழுங்கமைப்பை அவசியமாக்குகிறது. தேசிய அளவில் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடத்துவது மேலும் மேலும் சாத்தியமற்றதாக சென்று கொண்டிருப்பதை அமெரிக்க, ஜப்பானிய, கொரிய அல்லது ஜேர்மன் தொழிலாளர்கள் காண்கின்றனர். முதலாளித்துவ வர்க்கம் எப்படி உற்பத்தியை ஒரு உலகளாவிய மட்டத்தில் ஒழுங்கமைக்க முற்படுகிறதோ, அதைப்போன்றே தொழிலாள வர்க்கமும் அதன் சொந்த போராட்டங்களை ஒரு உலகளாவிய மட்டத்தில் ஒழுங்கமைக்கவும், ஆகவே ஒழுங்கமைப்பின் புதிய மற்றும் கூடுதல் முன்னேறிய வடிவங்களை உருவாக்கவும் தள்ளப்படும். [அதே இதழ், பக் 73]

1988 ஜூலையில் ICFI இன் ஏழாவது முழுப்பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்”, தேசிய-அரசு அமைப்புமுறையுடன் இணைந்திருந்த சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தின் செல்தகைமையையும் கீழறுத்த, நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புபட்ட முதலாளித்துவ உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிலான மாற்றங்களது புரட்சிகர முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்கிறது. இந்த தொகுதியில் இடம்பெற்றிருக்கின்ற அந்தத் தீர்மானமானது, பின்வருமாறு தெரிவிக்கிறது:

“வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, சாரத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாக இருக்கிறது என்பது மார்க்சிசத்தின் அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாய் இருந்து வருவதாகும். ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்க்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச குணாம்சத்தை ஏற்றாக வேண்டும். … இவ்வாறாக, மூலதனத்தின் முன்கண்டிராத சர்வதேச நகர்வுத்திறனானது பல்வேறு நாடுகளது தொழிலாளர் இயக்கத்தின் தேசியவாத வேலைத்திட்டங்கள் அனைத்தையும் காலாவதியானதாகவும் பிற்போக்கானதாகவும் ஆக்கியிருக்கிறது”. [“உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்” (நான்காம் அகிலம், தொகுதி.15, எண்கள் 3-4, ஜூலை-டிசம்பர் 1988) பக். 4]

அந்தத் தீர்மானம் தொடர்ந்து கூறுகிறது:

முதலாளித்துவ உற்பத்தியின் உலகளாவிய தன்மையானது, பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் குரோதங்களை மிகப்பெருமளவில் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்திக்கும், முதலாளித்துவ சொத்துடைமையின் முழு அமைப்புமுறையும் வரலாற்றுரீதியாக வேரூன்றியிருக்கின்ற தேசிய-அரசு அமைப்புமுறைக்கும், இடையிலான சமரசப்படுத்த முடியாத முரண்பாட்டை மீண்டுமொருமுறை முன்னிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மிகச்சரியாக, எந்த முதலாளித்துவ “தந்தை நாட்டிற்கும்” எந்த விசுவாசத்திற்கும் கடமைகொண்டிராத ஒரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசத் தன்மை தான், தேசிய-அரசு அமைப்பு முறையின் நெரிக்கும் தளைகளில் இருந்து மனிதநாகரிகத்தை விடுதலை செய்யத் திறம்படைத்த ஒரேயொரு சமூக சக்தியாக அதனை ஆக்குகிறது.

இந்த அடிப்படையான காரணங்களால், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தப் போராட்டமும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை உலகளாவிய ரீதியில் அணிதிரட்டுவதை நோக்கமாய் கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயத்தை அது அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால், தொழிலாள வர்க்கத்தின் இறுதி விடுதலைக்கு தயாரிப்பு செய்வதை மட்டுமல்லாது, அதற்கான நிலைத்துநிற்கக்கூடிய முன்னேற்றங்களையும் கூட அதனால் உருவாக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் இந்த அத்தியாவசிய ஐக்கியமானது, ஒரு உண்மையான சர்வதேசிய பாட்டாளி வர்க்க, அதாவது புரட்சிகர, கட்சியைக் கட்டுவதன் மூலம் மட்டுமே சாதிக்கப்பட கூடியதாகும். பல தசாப்தகால தளர்ச்சியற்ற சித்தாந்த மற்றும் அரசியல் போராட்டத்தின் விளைபொருளான அத்தகையதொரு கட்சி ஒன்றேயொன்று தான் உள்ளது. 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டதும், இன்று அனைத்துலகக் குழுவால் தலைமை கொடுக்கப்படுகின்றதுமான நான்காம் அகிலமே அதுவாகும். [அதே இதழ்]

ட்ரொட்ஸ்கிச மறுமலர்ச்சியும் உலக சோசலிசப் புரட்சியின் தசாப்தமும்

ICFI இன் உலக முன்னோக்கானது தொடர்ந்து வந்த தசாப்தத்தின் நீண்டகால முக்கியத்துவமுடைய எழுச்சிகள் குறித்த அதன் பகுப்பாய்வு மற்றும் பதிலிறுப்புக்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. WRP இன் உடைவைத் தொடர்ந்த காலகட்டத்தின் போதான அனைத்துலகக் குழுவின் வேலைகள் மார்க்சிச இயக்கத்திற்கான ஒரு மகத்தான சாதனையாக இருந்தது என்று 2019 கோடைப் பள்ளியில் வழங்கிய தொடக்க விரிவுரையில் நோர்த் குறிப்பிட்டார்.

பப்லோவாத சந்தர்ப்பவாதம் தீர்மானகரமாக தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு தீவிர தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான அபிவிருத்திக்கான நிலைமைகளை உருவாக்கியது. தேசியவாத சந்தர்ப்பவாதிகளின் வெளியேற்றத்தால் சாத்தியமாக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவுபடுத்தல் வேலையானது ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்கு சளைக்காத ஒன்றைக் குறித்து நின்றது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள விரிவுரைகள் உடைவுக்குப் பின்னர் அனைத்துலகக் குழுவிற்குள் நடந்த விவாதங்களுக்குள் ஒரு உட்பார்வையை வழங்குகிறது. விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிவர்த்தனைகளது எழுத்துவடிவங்கள் உள்ளிட, கட்சியின் உள்முக ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்த விரிவுரைகள் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிசக் கட்சியில் அரசியல் முன்னோக்கும் வேலைத்திட்டமும் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. இந்த விரிவுரைகள் அனைத்துலகக் குழு முகம்கொடுத்த மிகச் சிக்கலான பிரச்சினைகள் மீது கவனம்குவிக்கின்றன. தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மற்றும் சுய-நிர்ணயத்திற்கான கோரிக்கை, 1985 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மிகையில் கோர்பசேவ் ஆன பின்னர் அவரால் முன்னெடுக்கப்பட்ட மீள்கட்டுமானம் (பெரஸ்த்ரோய்கா) மற்றும் வெளிப்படைத்தன்மை (கிளாஸ்னோஸ்ட்) ஆகிய பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட கொள்கைகள், மற்றும் மாவோயிசத்திற்குப் பிந்தைய சீனாவிலான வெடிப்பான நிகழ்வுகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யவும் அவற்றை நோக்கிய தனது நிலைப்பாட்டை வரையறை செய்யவும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நிர்ப்பந்தம் பெற்றது. இந்த ஒவ்வொரு விவகாரத்திலுமே, துரிதமாக மாறிவந்த புற நிலைமையால் முன்நிறுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆயத்த-நிலை பதில்கள் ஏதும் அங்கே இருக்கவில்லை.

ட்ரொட்ஸ்கிச இயக்கமானது எதில் இருந்து அது எழுந்திருந்ததோ, எது அதன் அரசியல் பரிணாமத்திற்கு உருக்கொடுத்திருந்ததோ, அந்த வரலாற்று அனுபவத்தைக் குறித்து தீவிர நனவுடன் இருக்கிறது. ஆயினும் வரலாற்றுக்கு அது அளிக்கும் மரியாதை என்பது, மேற்கோளிடத்தக்க ஒரு முன்னுதாரணத்தைக் காண்பதற்காக கடந்த காலத்தை அலசி ஆராய்வதைக் கொண்டதல்ல. இந்த வகை சம்பிரதாய முறையை ட்ரொட்ஸ்கி கடுமையாக எதிர்த்தார். அவர் எழுதினார், “மார்க்சிச விசாரணை எனும் ஆயுதமானது தொடர்ச்சியாக கூர்மைப்படுத்தப்பட வேண்டும், செயலுறுத்தப்பட வேண்டும். மிகச்சரியாக இதில் தான் அந்த பாரம்பரியம் அடங்கியிருக்கிறதே தவிர, ஒரு சம்பிரதாயமான குறிப்பை அல்லது ஒரு தற்செயலான மேற்கோளை பிரதியீடுசெய்வதால் அல்ல.” [“புதிய பாதை” இடது எதிரணியின் சவால் (1923-25), (நியூயோர்க்: பாத்ஃபைண்டர் பிரஸ், 2017), பக் 123]

அனைத்துலகக் குழுவிற்குள்ளான விவாதங்கள், சம்பவங்கள் “நிகழும் நேரத்தில்” கட்டவிழ்ந்தன என்பதையும் வாசகர் சிந்தனையில் கொண்டாக வேண்டும். “ICFIம் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்” என்ற அவரது விரிவுரையில் தோழர் பாரி கிரே 1986க்கும் 1992க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தின் அபிவிருத்தி குறித்த ICFI இன் பகுப்பாய்வை பின்தொடர்கிறார். 1987 இல் ICFI பிரசுரித்த ஒரு முக்கிய ஆவணமான, “சோவியத் ஒன்றியத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது” ஐ அவர் மேற்கோளிடுகிறார். கோர்பசேவின் சீர்திருத்தங்கள், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தால் தடுத்து நிறுத்தப்படாது போகுமானால், அது சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு இட்டுச்செல்லும் என்று அந்த ஆவணம் எச்சரித்தது. ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, இந்த பகுப்பாய்வு நிகழ்வுகளால் ஊர்ஜிதம் பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கான பதிலிறுப்பின் பதிவுகளும் இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

முன்னோக்குகள் தொடர்பான வேலையானது பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுடன் மட்டுப்படுத்திக் கொள்ளப்படவில்லை. தோழர் டேவிட் வால்ஷ் வழங்கிய விரிவுரையானது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச நனவை புதுப்பிப்பது மற்றும் அபிவிருத்தி செய்வதான சவாலுக்கு அனைத்துலகக் குழு வழங்கிய கவனத்தை ஆய்வுசெய்கிறது. இந்தப் பிரச்சினைக்கு கொடுக்கப்பட்ட கவனமானது, “தொழிலாளர்கள் முதலாளித்துவ சமூகத்தில் தமது புறநிலையான இடத்தையும் ஒரு சோசலிசப் புரட்சிக்கான சக்தியாக தமது கூட்டான பாத்திரத்தையும் உணர்ந்து கொள்ள உதவுவதற்கும் மற்றும் அவர்களை சுரண்டலுக்கான வெறும் இரையாக இருக்கும் நிலையில் இருந்து வரலாற்றைப் படைப்பவர்களாக மனிதகுலத்தை விடுதலை செய்பவர்களாக உருமாற்றுவதற்குமான நனவான நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும், கட்டப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும், உட்கிரகிக்கப்பட்டிருக்கும் மற்றும் சாதிக்கப்பட்டிருக்கும் அனைத்தும்” என்று டேவிட் வால்ஷ் வரையறை அளித்த ”சோசலிச கலாச்சாரம்” என்ற ICFI இன் கருத்தாக்கத்தில் இருந்து எழுந்ததாகும்.

இந்தத் தொகுதியில் திறனாய்வு செய்யப்படுகின்ற தத்துவார்த்த வேலையானது, 1986 முதல் 2019 வரை மூன்று தசாப்தங்கள் நெடிய, ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் நான்காவது கட்டத்தின் போதான அபிவிருத்தியை சாத்தியமாக்கியது. இந்தக் காலகட்டத்தின் போதான சாதனைகளை நோர்த் தனது தொடக்க உரையில் இவ்வாறு சுருங்க எடுத்துரைத்தார்:

இன்றியமையாத தயாரிப்பு வேலைகளாய் இருந்த பப்லோவாதிகளை வெளியேற்றுவது, உலகக் கட்சியை ஒரு சர்வதேசிய அடித்தளத்தின் மீது மீள்கட்டுமானம் செய்வது, ICFI இன் சர்வதேச மூலோபாயத்தை எடுத்துரைப்பது, நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாப்பது, அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவது, மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபிப்பது ஆகியவை நான்காவது கட்டத்தின் பிரதான சாதனைகளாய் இருந்தன. அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கு பரந்த விரிவாக்கம் காண்பதையும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாய் வளர்ச்சி அடைவதையும் இந்த சாதனைகள் சாத்தியமாக்கின. இந்தக் கட்டம் நிறைவுற்றிருக்கிறது.

இவ்வாறாக, நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான ஐந்தாம் காலகட்டம் தொடங்கியிருக்கிறது. நோர்த் விளக்கினார்:

முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட பொருளாதார பூகோளமயமாக்கலின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள் ஒரு மேலதிக பிரம்மாண்ட அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்புகளில் புரட்சி ஏற்படுத்திய புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள், இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் கூட கற்பனை செய்ய கடினமாயிருந்திருக்கக் கூடியதொரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது ஒரு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தியடையும். இந்த புறநிலை சமூகப்பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியப் போர் அரசியலுக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் வர்க்க அடிப்படையிலான மூலோபாயத்தை அது எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான புதிய கட்டத்தின் அத்தியாவசியமான வரலாற்றுக் கடமையாகும்.

2020 இன் தொடக்கத்தில், முந்தைய ஆண்டின் போது உலகெங்கும் வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களது முக்கியத்துவத்தை திறனாய்வு செய்கையில், உலக சோசலிச வலைத் தளம், ”சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது” எனும் கட்டுரையில் எழுதியது: “இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் மற்றும் உலக சோசலிசப் புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது.”

வருங்காலத்தில், புத்திசாதுர்யமான வரலாற்றாசிரியர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் எழுச்சிகள் பற்றி எழுதுகின்றபோது, 2020 களின் தொடக்கத்தில் நிலவிக் கொண்டிருந்த, விரைவில் உலகெங்கும் வியாபிக்கவிருந்த புரட்சிகரப் புயலின் “வெளிப்படையான” அறிகுறிகளைப் பட்டியலிடுவார்கள். உண்மைகளின் ஒரு விரிவான தொகுப்பு, ஆவணங்கள், வரைபடங்கள், வலைத் தள மற்றும் சமூக ஊடக பதிவுகள், மற்றும் தாங்கள் கையாளக்கூடிய மற்ற மதிப்புமிக்க டிஜிட்டல் தகவல் வடிவங்களின் மூலமாக, அறிஞர்கள், 2010 களை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கமுடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டமாக விவரிப்பார்கள். [உலக சோசலிச வலைத் தளம், ஜனவரி 3, 2020. வாசிக்க https://www.wsws.org/ta/articles/2020/01/03/dnjk-j03.html ஐ அழுத்தவும்]

இந்த முற்கணிப்பு ஊர்ஜிதப்படுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. 2020 ஆம் ஆண்டின் முதல்பாதியானது கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் தூண்டப்பட்ட உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடையும் நெருக்கடியின் மூலமாக குணாம்சப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்றை ஒரு “தூண்டிவிடும் நிகழ்வு” என குணாம்சப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலும் சரி உலகம் முழுமையிலும் சரி, பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பானது, முந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் முழுமையான பரிணாமவளர்ச்சியின் தாக்கத்திற்கு உட்பட்டதாக இருந்தது. பெருநிறுவன மற்றும் நிதி சிலவராட்சியானது, இந்த பெருந்தொற்றை முந்தைய தசாப்தங்களின் போது முதலாளித்துவத்தின் அமைப்புமுறைரீதியான நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அது பயன்படுத்தியிருந்த ஒட்டுண்ணித்தனமான கொள்கைகளை தொடர்வதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் பயன்படுத்தியிருக்கிறது.

ஒரு பெருந்தொற்றின் அபாயம் குறித்து தொற்றியல் வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாய் எச்சரித்து வந்திருக்கின்றனர். சமூக மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டமையும், சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சியும் பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை பெருந்தொற்றின் சுகாதார மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு எளிதில் இலக்காகும் நிலையில் விட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையிலான ஆளும் உயரடுக்கினர், பெருந்தொற்றை பயன்படுத்தி 2008-09 பொருளாதாரப் பொறிவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிணையெடுப்பை மிகவும் விஞ்சியதாய் இருக்கின்ற பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களது பிணையெடுப்பில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டுக்கு கையளித்திருக்கின்றனர். பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலையில் இருந்து வீசியெறியப்பட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பும் எந்த நம்பிக்கையும் இன்றி இருக்கும் வேளையில், பில்லியனர்களின் செல்வமோ உயர்ந்து செல்கிறது, பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் “வேலைக்குத் திரும்புவதை” பொறியமைவு செய்ய ஆளும் உயரடுக்கினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமூக எழுச்சிகளை உருவாக்கும். தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆளும் வர்க்கம் தமது வாழ்க்கைக்கு காட்டுகின்ற அலட்சியம் மற்றும் உதாசீனத்திற்கு வெளிப்படுத்தி வருகின்ற எதிர்ப்பானது சமத்துவமின்மை, போர், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறை ஆகியவற்றுக்கு பெருகிச் செல்லும் எதிர்ப்புடன் சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

பெருந்தொற்றானது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை தூண்டுகின்றது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் சமூக கோபத்தின் ஊற்றெடுப்பானது அதன் ஆரம்ப வெளிப்பாட்டை, மினசோட்டா, மினியபொலிஸ் இல் மே 25 அன்று ஜோர்ஜ் புளோய்ட் போலிசால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டது. போலிஸ் வன்முறைக்கான எதிர்ப்பால் ஊக்கம்பெற்று, பாரிய பல-நிற மற்றும் பல-இன ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மற்றும் ஒவ்வொரு கண்டத்திலும் நடைபெற்றன. என்றாலும், சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை தொடர்பாக பெருகிச் செல்லும் ஆவேசமே இந்த சமூக வெடிப்பின் கீழமைந்திருப்பதாகும்.

இந்த தொகுதியில் திறனாய்வு செய்யப்பட்டிருக்கின்ற தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பொறுப்புகளில் இணைகின்ற புரட்சிகர சோசலிஸ்டுகளின் புதிய தலைமுறைக்கு கல்வியூட்டுவதில் தீவிர முக்கியத்துவம் கொண்டதாய் நிரூபணமாகும்.

Loading