பெரும் தொற்றுநோய்களின் போது பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக இந்திய வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாகனத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களினால், ஃபோர்டு போன்ற நாடுகடந்த இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டன. இந்தியா முழுவதும் சுனாமி போல பரவி வரும் கொரோனா வைரஸால் டஜன் கணக்கான தொழிலாளர்கள் இறந்துவிட்டனர், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வாகன நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக தங்கள் சொந்த மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிரைப் பணயம் வைக்கும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள், அதனால் இந்த நிறுவனங்கள், இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் கூட்டாக மேற்கொள்ளும் கொலைகார முயற்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

இந்த பெரும்தொற்றுநோய் இந்தியாவில் மோசமான முறையில் கையாளப்படுவது குறித்த மக்களின் கோபத்தின் காரணமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கம் கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஸ்ராலினிச நட்பு கட்சிகளின் நெருங்கிய பங்காளியாக இருக்கும் திமுக, அனைத்து முக்கிய தொழில்துறை வளாகங்களும் முழு சக்தியுடன் தொடர்ந்து செயல்பட பச்சை விளக்கு காண்பித்தார். இந்த கூலிக்கு மாரடிக்கும் முடிவு, பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் அவரது இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவற்றுடன் அவர்கள் இணைந்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது மனித உயிர்களுக்கு மேலாக இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்து, பெரும் தொற்றுநோய் காலம் முழுவதும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பின்பற்றுகிறது.

நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இந்திய பங்காளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இலாபத்தை பிரித்தெடுப்பதற்கு இருக்கும் எந்தவொரு தடையையும் நீக்க தற்போதைய வரம்புக்குட்பட்ட ஊரடங்கை கூட நீக்கும் நோக்கத்துடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 1 ம் தேதி ஒரு காணொளி செய்தியை வெளியிட்டார், அதில் இழிந்த முறையில் இவ்வாறு அறிவித்தார்: “எங்களால் ஊரடங்கை நீட்டிக்க முடியாது, விரைவில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது."

(டொயோட்டா ஆட்டோ ஆலைக்குள் வேலை செய்யும் ஆட்டோ தொழிலாளர்கள் (Credit: Wikimedia Commons) [Photo by Bertel Schmitt / CC BY-SA 3.0]

மறுபுறம், தொழிற் துறைகள் விஞ்ஞானபூர்வமாக ஊரடங்கு கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொழிலாள வர்க்கம், கோருகின்றது. COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது குறித்து ஆர்ப்பாட்டங்கள், வெளிநடப்புகள் மற்றும் வேலைநிறுத்த அச்சுறுத்தல்களுக்கு பின்னர்தான் கடந்த மாதம் ஹூண்டாய் மற்றும் ரெனால்ட்-நிசான் ஆகியவற்றில் உற்பத்தி நிறுத்தப்பட்டது, பல நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இதைப் பின்பற்றினர்.

ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மே 27 அன்று கிட்டத்தட்ட 950 தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி மதிய உணவை புறக்கணித்தனர். அதை தொடர்ந்து நிறுவனம் மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. ஃபோர்டு இந்தியா தொழிலாளர்கள் பெரும் தொற்றுநோய் காலத்தில் தாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்வதால், தங்களை முன்கள கோவிட்-19 போராளிகளாக நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், COVID-19 காரணமாக அவர்கள் இறந்தால், தங்கள் குடும்பங்களுக்கு 5 மில்லியன் ரூபாய் ($US68,357) இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஃபோர்டு தொழிலாளர்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தொழிலாளர்களின் முழு மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், COVID-19 ஊரடங்கு காலத்தில் ஆலை மூடப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். சென்னை, தமிழ்நாடு ஃபோர்டு ஆலையில் 230 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், குறைந்தது இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதற்கு எதிராக தொழிலாளர் மத்தியில் அமைதியின்மையை எதிர்கொண்ட ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிக்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் மே 28 முதல் மூன்று நாள் உற்பத்தி நிறுத்தம் அறிவித்தது. ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (ULF), உடன் இணைந்திருக்கும் இந்த ஆலையில் உள்ள தொழிற்சங்கம், நிறுவனத்திற்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டையும் மற்றும் கோவிட்-19 காலத்தில் சில தொழில்துறைகளை இயங்க அனுமதிக்கும் தமிழக அரசாங்கத்தின் உத்தரவு குறித்தும் தலையீட்டையும் கோரியுள்ளது.

இது தொழிலாளர்களின் எதிர்ப்பை, தொழில்துறை நடவடிக்கைகளை தயார் செய்வதன் மூலமும் அதை தொடங்குவதிலிருந்தும் திசைதிருப்பும் ஒரு முயற்சியாகும். கடந்த வாரம், அதே நீதிமன்றம் ரெனால்ட்-நிசானில் ஒரு மாவோயிஸ்ட் தலைமையிலான தொழிற்சங்கம் கொண்டு வந்த இதுபோன்ற தீர்மானத்தை நிராகரித்தது, "தொழிலாளர்களின் ஆரோக்கியம் மிக முக்கியமானதாக இருக்கும் அதேசமயம், தொழில்கள் குறைந்துவிட்டால் அவர்களுக்கு வேலை செய்வதற்கு இடமில்லாமல் போய்விடும்" என்று அறிவித்தது.

புல்லட் மற்றும் பிற மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஐஷர் மோட்டார்ஸ், மே 27 முதல் மூன்று நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. கோவிட் -19 காரணமாக பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்து தொழிலாளர் அமைதியின்மை காரணமாக, ஜப்பானிய இரு சக்கர வாகன நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் முன்பே முடிவு செய்து மே 15 முதல் மே 31 வரை அதன் இரண்டு ஆலைகளையும் மூடியது. மற்றொரு இருசக்கர வாகன உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்ட், மே 27 முதல், திருவோட்டியூர், வல்லம் வடகல் மற்றும் ஓரகடம் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் மூன்று நாட்களுக்கு நடவடிக்கைகளை நிறுத்தியது. மே 13 முதல் 16 வரை நாடு முழுவதும் COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி நிறுவனம் தனது ஆலைகளை மூடியிருந்தது.

வளர்ந்து வரும் தொழிலாளர் கோபம், உதிரிப்பாகங்கள் விநியோகம் பற்றிய பிரச்சினைகள் மற்றும் COVID-19 இறப்புகள் காரணமாக இந்தியா முழுவதும் ஆலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் தான் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை மூடல்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் மூடப்பட்ட முக்கிய இந்திய வாகன ஆலைகளில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு அருகிலுள்ள அதன் பிடாடி ஆலை, எம்.ஜி மோட்டார் இந்தியாவின் ஹாலோல் ஆலை; மற்றும் மகாராஷ்டிராவில், சக்கான், நாசிக் மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மகிந்திரா ஆலைகள் உள்ளிட்டவை அடங்கும்.

வாகன மற்றும் பிற தொழில்துறைகளில் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள், தமிழ் நாட்டின் திமுக அரசாங்கம் மற்றும் அதன் அதிமுக முன்னோடி உட்பட இந்தியா முழுவதும் மோடி அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்த கொலைகார சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம் கொள்கைகளின் விளைவாகும். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து COVID-19 பாதிப்புகள் அதிவேகமாக உயர்ந்ததால், வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க ஒரு ஊரடங்கை செயல்படுத்த மோடி மறுத்துவிட்டார், ஏப்ரல் 20 ஆம் தேதி தேசத்திற்கு ஒரு மதிப்பற்ற உரையில் இவ்வாறு அறிவித்தார், "நாட்டை ஊரடங்கிலிருந்து காப்பாற்றுவேன்", கொடிய வைரசில் இருந்தல்ல. பூகோளரீதியாக இணைக்கப்பட்ட வாகன மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் தொழில்துறைகள் செயல்பட அனுமதிக்கும், மாநில அரசாங்கங்கள் அதே வேளையில் பகுதி ஊரடங்குகளை செயல்படுத்தியுள்ளன. இது அதிகமாக தொழிலாளர்களின் மீது தொற்று மற்றும் இறப்புகளுக்கு வழி வகுத்தது.

தற்போதைய ஊரடங்கிற்கு "ஒரு முற்றுப்புள்ளி” கோரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கள், அவரது அரசாங்கத்தின் மற்றும் முழு இந்திய ஆளும் உயரடுக்கின் ஒரே அக்கறை, முதலீட்டாளர்களின் இலாபத்தை பாதுகாப்பதே தவிர, கோவிட்-19 பெரும் தொற்று நோய் பேரழிவுகளிலிருந்து தொழிலாளர்களின் உயிர்களையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதில்லை என்பதை நிரூபிக்கிறது. இந்த சுயநல வர்க்க நலன்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசியல் வண்ணங்களின் வணிக சார்பு அரசாங்கங்களின் கொள்கையை தீர்மானிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 127,000 புதிய கோவிட்-19 பதிவுகளையும் 2,795 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. தொழில்துறைகள் செயல்பட வேண்டும் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மேலும் பேரழிவிற்கு வழிவகுக்கும். தமிழ் நாட்டில் 26,513 புதிய கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் 490 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், தென்மேற்கு மாநிலமான கர்நாடகாவில் 14,304 புதிய பாதிப்புகளும் 464 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மற்ற முக்கிய இந்திய நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன: சென்னையில் 2,467, கொல்கத்தாவில் 1,032, மும்பையில் 831 மற்றும் டெல்லியில் 623 முறையே பதிவாகியுள்ளன.

இந்தியாவின் இரட்டை ஸ்ராலினிச கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் ஆகியவை தொற்றுநோய்களின் போது தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் துன்பங்களுக்கு அரசியல்ரீதியாக பொறுப்பாளிகளாவார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் அவர்கள் ஒரு திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் இணைந்தனர், அக்கூட்டணி பெருவணிக காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கியது. வலதுசாரி திமுக திட்டத்தை "தொழிலாளர் நட்பு" மற்றும் "சமூக நீதியின்" ஆதரவாளராகவும் காண்பிக்க ஸ்ராலினிச கட்சிகள் உதவியது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இந்த வசந்த காலத்தின் கொடிய எழுச்சிக்கு மத்தியில் கூட தொழில்துறைகளை செயல்பட அனுமதிக்கும் திமுக அரசாங்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் இப்போது ஆதரிக்கின்றனர்.

மோடி அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் உயிர்களையும் அவர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களிலிருந்து அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக முறித்துக்கொள்வது அவசியமாகும். தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த, சுயாதீனமான சாமானிய குழுக்கள் தேவை. பூகோள பெரும் தொற்றுநோய் மற்றும் ஆளும் உயரடுக்கின் கொலைகாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சாமான்ய நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்காக (International Workers Alliance of Rank-and-File Committees (IWA-RFC). அழைப்பு விடுத்துள்ளது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஒரு பூகோள அளவிலான உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும், அந்த அமைப்பு வைரஸைக் கட்டுப்படுத்த திராணியற்றது என்பதை நிரூபித்துள்ளது, ஏனென்றால் அனைத்து சமூக பொருளாதார வாழ்க்கையும் முதலீட்டாளர் இலாபத்தை பிழிந்தெடுப்பதற்கு கீழ்ப்படிந்ததாக உள்ளது. இது கார்ப்பரேட் மற்றும் நிதி உயரடுக்கின் கொள்ளையடிக்கும் இலாப நலன்களுக்கு மேலாக உழைக்கும் மக்களின் உயிர் மற்றும் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பூகோள அளவிலான சோசலிசக் கொள்கைகளுக்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாகும்.

Loading