"நாங்கள் விளையாடவில்லை என்பதை தலைமை நிறைவேற்று அதிகாரிகளுக்குக் காட்ட நாம் அனைவரும் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்"

UAW இரகசிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முயற்சிப்பதால், வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுடனான ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அதிகரித்து வரும் அழைப்புக்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்வதேச அளவிலான ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கம் (UAW), UAW லோக்கல் 2069 மற்றும் வட அமெரிக்க வொல்வோ கனரக வாகன உற்பத்தி ஆலை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள வொல்வோவின் நியூ ரிவர் வலி (NRV) ஆலையில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் கருத்துப்படி, பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டது. UAW அழுத்தம் கொடுத்த நிறுவன சார்பு ஒப்பந்தங்கள் இரண்டை தீர்மானகரமாக நிராகரித்து வாக்களித்ததன் பின்னர், ஜூன் 7 முதல் இந்த கனரக வாகன உற்பத்தி ஆலையில் அண்ணளவாக 3,000 தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திங்கட்கிழமை இரவு, லோக்கல் 2069 தலைவர் மாட் ப்ளாண்டினோ வேலைநிறுத்த தலைவர்களிடம், “நிறுவனம், [UAW] சர்வதேச கனரக வாகனத் துறையையும் மற்றும் உள்ளூர் பேரம் பேசும் குழுவையும் சந்தித்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் அவர்களுடன் நாளை முதல் தொடங்கும் விவாதங்கள் இருக்கும்” என்று தெரிவித்தார். இருப்பினும், செவ்வாய்க்கிழமைக்குள், உள்ளூர் அல்லது சர்வதேச UAW, மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை, மேலும் வொல்வோவின் ஊடக செய்தித் தொடர்பாளருக்கு உலக சோசலிச வலைத் தளம் விடுத்திருந்த அழைப்புக்களுக்கு திரும்ப பதில் எதுவும் இல்லை.

வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள் (ஆதாரம்: UAW லோக்கல் 2069)

UAW இன் சூழ்ச்சிகள் ஒரு இழிந்த உத்தி போன்றது என தொழிலாளர்கள் கண்டித்தனர். “UAW எங்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இந்த பூனை-எலி விளையாட்டை வெறுமனே நடத்திக் கொண்டிருக்கிறது,” என்று ஒரு தொழிலாளி WSWS க்கு தெரிவித்தார். “இது நான்சி பெலோசியும் ட்ரம்பும் தோன்றும் ஒரு நாடக அரங்கம் போல உள்ளது. அதாவது, இது அல்லது அது என்று அவர்கள் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் இறுதியில், எங்களுக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள், மேலும் இதை பெரும்பாலான தொழிலாளர்கள் அறிவார்கள். நாங்கள் இந்த போராட்டத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.

UAW செயலாளர் பொருளாளர் ரே கரி, மற்றும் பிராந்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பரிந்துரைத்த கடைசி திட்டத்தை ஜூன் 6 அன்று 90 சதவீத தொழிலாளர்கள் வாக்களித்து நிராகரித்தனர். இந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு வெறும் 2 சதவீத ஊதிய உயர்வை வழங்கும், அதாவது நுகர்வோர் பொருட்களின் விலைகள் விரைந்து அதிகரிக்கையில், உண்மையான ஊதியங்கள் கணிசமாக குறைக்கப்படும் என்பதாகும். இது, வெறுக்கத்தக்க இரண்டு அடுக்கு ஊதியம் மற்றும் சலுகை முறையை அப்படியே தொடரும், மருத்துவ செலவினங்களை சக்திக்கு மீறிய வகையில் கூர்மையாக அதிகரிக்கும், ஓய்வூதியதாரர் சலுகைகளை வெட்டும், மேலும் எட்டு மணி நேரத்திற்கு மேலான கூடுதல் வேலை நேரத்திற்கு அதிகப்படியான ஊதியம் எதையும் வழங்காமல் 10 மணிநேர வேலை நாளை உருவாக்கும்.

வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (Volvo Workers Rank-and-File Committee-VWRFC) செவ்வாய்க்கிழமை, UAW தலைவர் ரோரி கேம்பிள், கரி, மற்றும் UAW லோக்கல் 2069 தலைவர் மாட் ப்ளாண்டினோ ஆகியோருக்கான ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது. இந்த அறிக்கை, UAW நிறுவனத்திற்கு என்ன முன்மொழிகிறது, 790 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியிலிருந்து ஒரு வாரத்திற்கு வெறும் 275 டாலர் சொற்ப வேலைநிறுத்த ஊதியத்தை ஏன் வழங்குகிறது, மேலும் வேலைநிறுத்தத்தை வென்றெடுக்க UAW உம் AFL-CIO உம் முறையே அவர்களது 400,000 மற்றும் 12.5 மில்லியன் உறுப்பினர்களை அணிதிரட்ட என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பன பற்றி தெரிந்து கொள்ளக் கோருகிறது.

போலி சவப்பெட்டி (ஆதாரம்: வொல்வோ தொழிலாளர்கள்)

இது, அமெரிக்காவின் அனைத்து வொல்வோ நடவடிக்கைகளையும் நிறுத்துவதில் தொடங்கி, கணிசமான ஊதியம் மற்றும் நன்மை ஆதாயங்கள், மற்றும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க UAW உறுப்பினர்களை அணிதிரட்டுவது வரையிலான தொழிலாளர்களின் கோரிக்கைகளை விவரிக்கிறது. மேலும் இந்த அறிக்கை, “அத்தகைய சண்டையை மேற்கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்றால், வெளியேறுங்கள். சாமானிய தொழிலாளர்கள் குழு, தேவையான போராட்டத்தை முன்னெடுக்க தயாராகவுள்ள அதற்கென சொந்தமான பேரம் பேசும் மற்றும் வேலைநிறுத்தக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்” என்று கூறி முடிவடைகிறது.

இந்த பகிரங்க கடிதம் பரவலாக பரப்பப்பட்டு, மறியல் எல்லையில் தொழிலாளர்களால் உற்சாகத்துடன் பெறப்பட்டது. “அவர்கள் கடிதத்தை படித்ததாகவும், குறிப்பாக UAW டெட்ராய்டில் அவர்களது தலைமையகத்தை புதுப்பிக்க 6.2 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது பற்றி அவர்கள் கோபமடைந்ததாகவும்,” ஒரு வொல்வோ தொழிலாளி WSWS க்கு தெரிவித்தார். மேலும், “UAW என்பது ஒரு திருட்டுக் கும்பலே தவிர வேறில்லை என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். கருங்காலிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்காக வொல்வோ நுழைவாயிலில் ஒரு பைன் சவப்பெட்டியை தொழிலாளர்கள் வைத்தனர். அஞ்சலில் கிடைத்த பகிரங்க கடிதத்தை அவர்கள் படித்தபோது, அதை மாட் [ப்ளாண்டினோ] மற்றும் எஞ்சியோர் படிக்க UAW முகப்புக் கூடத்திற்கு முன்பாக வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்!”

மேலும் மற்றொரு வேலைநிறுத்தக்காரர், “வேலைநிறுத்தம் அனைத்தையும் பற்றியது என்று UAW கூறுகிறது, ஆனால் எந்த விபரங்களையும் அவர்கள் கொடுக்கவில்லை. உண்மையான ஊதிய உயர்வுகள் எதுவும் இல்லாமல் நாங்கள் எங்கள் வேலைகளுக்கு அடிமைகளாக இருப்போம். இங்குள்ள நிறைய பேருக்கு பணவீக்கம் பற்றி பயிற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு வாழ்க்கைச் செலவை சரிக்கட்டும் நிதி [cost of living adjustment-COLA] தேவை என்று அவர்கள் கூறுகின்றனர். முன்னர் இது ஒரு பெரிய விடயமல்ல, ஆனால் இப்போது எரிவாயு மற்றும் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வரும் நிலையில் இது முக்கியமாகிறது” என்று கூறினார்.

அலென்டவுன், பென்சில்வேனியா மற்றும் ஹேகர்ஸ்டவுன், மேரிலாந்த் பகுதிகளின் மாக்-வொல்வோ ஆலைகளில் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தத்திற்கு பரவலான ஆதரவு உள்ளது. நியூ ரிவர் வலி ஆலை பென்சில்வேனியாவின் மகுங்கி நகரில் ஒருங்கிணைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு வர்ணம் பூசுகிறது, மேலும் ஹேகர்ஸ்டவுனிலிருந்து கிடைக்கும் எந்திரங்களையும் பரிமாற்றங்களையும் பயன்படுத்துகிறது. இரண்டு ஆலைகளும் இந்த வாரம் தற்காலிக வேலைமுடக்கத்தை எதிர்கொண்டன.

“வொல்வோ எங்களது ஆலையில் உற்பத்தியை பெரிதும் அதிகரிக்க விரும்பியது, ஏனென்றால் மாக் நிறுவனத்திற்கு நிறைய வாகனங்கள் தேவைப்பட்டது,” என்று ஒரு வேலைநிறுத்த தொழிலாளி கூறினார். “ஆனால் எங்களது வேலைநிறுத்தம் மற்றும் மைக்ரோசிப் விவகாரத்தினால், மகுங்கி ஆலையில் பற்றாக்குறை ஏற்பட்டு அங்கும் வேலைமுடங்கியுள்ளது. அவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, மறியல் எல்லையைத் தாக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

நியூ ரிவர் வலி ஆலையில் நடக்கும் முற்றுகைகள் (ஆதாரம்: லோக்கல் 2069)

இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் மத்தியிலான பரந்த இயக்கத்தைத் தூண்டக்கூடும் என்ற பயத்தில் UAW வொல்வோ வேலைநிறுத்தம் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்துள்ளது. சர்வதேச UAW அதன் வலைத் தளத்திலோ அல்லது முகநூல் பக்கத்திலோ நடந்து கொண்டிருக்கும் வெளிநடப்புகள் பற்றி ஒரு வார்த்தை கூட பதிவிடவில்லை. இதேபோல, அலென்டவுன், பென்சில்வேனியா மற்றும் ஹேகர்ஸ்டவுன், மேரிலாந்த் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாக்-வொல்வோ தொழிலாளர்களை உள்ளடக்கிய UAW லோக்கல் 677 மற்றும் லோக்கல் 171 இன் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் கூட, NRV ஆலை வேலைநிறுத்தம் பற்றி எதையும் வெளியிடவில்லை.

தேசிய மற்றும் வேர்ஜீனிய AFL-CIO உம் அதன் வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடக வெளியீடுகளில் இதுபற்றி எதையும் வெளியிடாமல் மவுனம் சாதிக்கின்றன. ஆகவே, ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம், ஐக்கிய எஃகுத் தொழிலாளர்கள் சங்கம், மற்றும் மாசசூசெட்ஸ் செவிலியர்கள் சங்கம் ஆகியவை தற்போது Warrior Met Coal, ATI, ExxonMobil மற்றும் வொர்செஸ்டரில் உள்ள Saint Vincent மருத்துவமனை ஆகியவற்றின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தனிமைப்படுத்தி வருகின்றன.

AFL-CIO இன் அடுத்த சாத்தியமுள்ள தலைவராக பதவி உயர்வு பெறுபவரான, விமான உதவியாளர்கள் சங்கத்தின் (Association of Flight Attendants-CWA) தலைவரும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்ட்கள் (Democratic Socialists of America - DSA) அமைப்பின் அங்கத்தினருமான சாரா நெல்சனும், வொர்செஸ்டர் செவிலியர்கள் அவர்களது வேலைநிறுத்தத்தின் 100 வது நாளை நெருங்கும் நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த பேரணியில் வொல்வோ வேலைநிறுத்தம் பற்றி எதுவும் கூறவில்லை.

வேலைநிறுத்தம் பற்றி பெரும்பாலும் உலக சோசலிச வலைத் தளம் மூலம் அறிந்துகொண்ட தொழிலாளர்கள் மத்தியில், வொல்வோ தொழிலாளர்களுக்கு பரவலான ஆதரவு இருப்பதுடன், ஒரு பொதுவான போராட்டத்தில் இணைவதற்கான உறுதியும் உள்ளது.

வொல்வோ தொழிலாளர்களின் பகிரங்க கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, புறநகர் டெட்ராய்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் வாரன் கனரக வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பணிபுரியும் ஒரு இளம் தொழிலாளியான ராப் என்பவர், “அவர்களது கடிதம் மிகத் தெளிவானது, இது அனைத்து வாகனத் தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு வரைபடமாக இருக்க வேண்டும். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உண்மையிலேயே தொழிலாள வர்க்கத்தின் வளமைக்கு தேவையானவற்றுக்கு இணையாக உள்ளன. அனைத்து வாகனத் தொழிலாளர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதுடன், மறியலில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவ தங்கள் சக்திக்கு ஏற்ற அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

கோவிட்-19 ஆலைகள் எங்கும் பரவிக் கொண்டிருந்தபோது, மார்ச் 2020 இல் UAW ஐ மீறி தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நடவடிக்கைகளைப் பற்றி குறிப்பிடுகையில், ராப், “திடீர் வேலைநிறுத்தம் என்பது ஒரு பெரிய விடயமாக இருந்தது! வாகனத் தொழிலாளர்களின் ஒற்றுமை என்ன செய்ய முடியும் என்பதை சரியாக எடுத்துக் காட்டியது. வொல்வோ மற்றும் டெட்ராய்ட் வாகன நிறுவனங்கள் என நம் அனைவருக்குமான முதல் தடையாக UAW தான் உள்ளது” என்று கூறினார்.

“வொல்வோ தொழிலாளர்கள் அனைவருக்குமாக போராடுகிறார்கள்,” என்று இந்தியானாவில் உள்ள ஒரு ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளி WSWS இடம் தெரிவித்தார். மேலும், “எங்களுக்கும் அதே பிரச்சினைகள் உள்ளன. நமது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, வேலை நிலைமைகள், வேலை நேர அட்டவணைகள், சலுகைகள் மற்றும் ஊதியம் குறித்து நாம் அனைவருமே துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறோம்” என்றும் கூறினார்.

“வாக்களித்து அவர்களது ஒப்பந்தத்தை நிராகரித்தமை, ஒற்றுமையின் அளவை கூறுகிறது. என்ன முன்வைக்கப்பட்டதோ அதனோடு ஒத்துப்போக அவர்கள் தயாராக இல்லை. கடந்த மாதம் இரண்டு வார கால வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்து நிறைய வாகனங்களின் உற்பத்திக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டது குறித்து தொழிற்சங்கம் கவனம் செலுத்தாததை நிரூபித்துள்ளது. அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்.”

வேலைநிறுத்த ஊதியம் பற்றி “ஏளனமாக” குறிப்பிடுகையில், அவர், “275 டாலர் என்பது ஒரு மாதத்திற்கான எரிவாயு கட்டணத்தைச் செலுத்த மட்டுமே பயன்படும். மக்களிடம் நிறைய விலைப் பட்டியல்கள் உள்ளன. நாம் சாப்பிட வேண்டும், அடமானங்கள், வாகன காப்பீடு, மற்றும் நாம் செலுத்த வேண்டிய பிற செலவினங்களை செலுத்த நாம் தான் பொறுப்பாளிகளாக உள்ளோம். அவர்கள் வொல்வோ தொழிலாளர்களை பட்டினியில் வீழ்த்த முயற்சிக்கிறார்கள், முடிந்தவரை ஆகக் குறைந்த பணத்தையும் சலுகைகளையும் வழங்கி, அவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் அவசியம், அப்போதுதான் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். நாம் இங்கே விளையாடவில்லை என்பதை தலைமை நிறைவேற்று அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

வொல்வோ வேலைநிறுத்தக்காரர்களை ஆதரிக்கும் வாரன் கனரக வாகனத் தொழிலாளி (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

34 ஆண்டுகளாக சர்வதேச சகோதரத்துவ மின் தொழிலாளர்கள் (International Brotherhood of Electrical Workers-IBEW) சங்கத்தில் அங்கத்தினராகவுள்ள வாரன் கனரக வாகன ஆலையின் ஒரு மின் தொழிலாளி, வேலைநிறுத்தம் பற்றி மிச்சிகனில் உள்ள தொழிலாளர்களுக்கு UAW தெரிவிக்காதது பற்றி ஆவர் ஆச்சரியப்படவில்லை என்றார். “அவர்கள் மொத்தமாக மூடி மறைக்கிறார்கள். IBEW இல் பல ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஊதிய உயர்வு பெற நாங்கள் முயற்சிக்கும்போது, அது எங்கள் காப்பீட்டிலிருந்து கிடைப்பதாக உள்ளது, எனவே எங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காது. இது எங்களது சட்டைப் பைகளுக்கு வந்து சேராது. அவர்கள் வாஷிங்டன் டி.சி. மற்றும் AFL-CIO ஐ பணத்தால் நிரப்புகின்றனர். அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்” என்றும் கூறினார்.

“UAW ஐ பொறுத்தும் இதுதான் நடக்கிறது. எனவே, வொல்வோ தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும், போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள்.”

UAW வுக்கு விடுக்கப்பட்ட வொல்வோ தொழிலாளர்களின் பகிரங்க கடிதத்தை அனைத்து தொழிலாளர்களும் படித்து, அதனை மேலும் பகிர வேண்டும் என உலக சோசலிச வலைத் தளம் கேட்டுக் கொள்கிறது. தொழிலாளர்கள், volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி VWRFC ஐ தொடர்பு கொள்ளலாம்.

Loading