சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைகளை நியூ யோர்க் டைம்ஸ் யூத இனப்படுகொலையுடன் ஒப்பிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

New York Times headquarters, 2019 (Photo: Ajay Suresh/Wikipedia) [Photo by Ajay Suresh / CC BY 2.0]

சீனா அதன் பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்திற்காக உலகில் தனித்து நிற்கிறது. அது ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாக, மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சீனாவில் ஏப்ரல் 17, 2020 இல் இருந்து கோவிட்-19 ஆல் ஒரே ஒருவர் கூட இறக்கவில்லை. அதே தேதியில் இருந்து அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் 800,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் இறப்பு எண்ணிக்கையை —உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பேர் இறந்திருப்பதாக காட்டுகின்ற நிலையில்— முற்றிலும் தடுத்து இருக்கலாம் என்பதையே சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை எடுத்துக் காட்டுகிறது.

பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள், முக்கியமாக வாஷிங்டன், ஏற்றிருந்த கொள்கை, சமூகப் படுகொலைகளில் ஒன்றாக உள்ளது, பெருந்தொற்று பரவலைத் தடுக்க அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள் உற்பத்தியின் இலாபத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் மக்களிடையே இந்த நோயைப் பரவ அனுமதித்தது. இந்த பெருந்தொற்று பரவவும் உருமாறவும் அனுமதிக்கப்பட்டதால், டெல்டா மற்றும் ஓமிக்ரோன் போன்ற புதிய வகை வைரஸ்கள் உருவெடுப்பதற்கும் பாரிய இறப்புக்கும் இந்த கொள்கையே நேரடியாக பொறுப்பாகிறது.

பொது சுகாதாரத்திற்கான ஒரு முன்மாதிரியாக கருதுவதற்குப் பதிலாக, சீனா, நீடித்த மற்றும் கொடிய, பைத்தியக்காரத்தனமாகவும் கூட, தாக்குதல்களின் ஒருங்குவிப்பில் வைக்கப்பட்டுள்ளது. உயிர்களைக் காப்பாற்றிய நடவடிக்கைகளை, சீன மக்களின் உரிமைகள் மற்றும் உயிர்களை ஏதோவிதத்தில் ஏதேச்சதிகார முறையில் அரக்கத்தனமாக நசுக்கியதாக மேற்கத்திய ஊடகங்கள் மாற்றுகின்றன.

ஜனவரி 13 இல் நியூ யோர்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை, சீனாவுக்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் இதுவரை பிரசுரிக்கப்பட்ட மிகவும் கீழ்தரமானவைகளில் ஒன்றாக இருந்தது. “மில்லியன் கணக்கானோரின் படை, என்ன விலை கொடுத்தாவது, சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அமுலாக்குகிறது,” என்ற தலைப்பில் இணைய பதிப்பில் முதலில் பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரை, சீனாவின் சுகாதார கவனிப்பு பணியாளர்கள் நாஜிக்களைப் போல செயல்படுவதாக குறிப்பிட்டதுடன், சீனாவின் பொது சுகாதார நடவடிக்கைகளை அது யூத இனப்படுகொலையுடன் ஒப்பிட்டது.

“புதிய புது உலகம்' என்ற தொடர் கட்டுரை எழுதும் ஹாங்காங்கில் உள்ள நியூ யோர்க் டைம்ஸ் செய்தியாளர் லி யுவான் அக்கட்டுரையை எழுதியிருந்தார். ஜியான் நகரில் தொடர்ந்து கொண்டிருக்கும் சமூக அடைப்பின் மீது ஒருமுனைப்பட்டு லி எழுதுகையில், “அதிகாரிகளைப் பொறுத்த வரையில், வைரஸ் கட்டுப்பாடே முதலில் வருகிறது. மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் மரியாதை எல்லாம் பின்னர் தான்.”

இது அதன் அளவில் மூச்சடைக்க வைக்கும் ஒரு பொய்யாகும். அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பைடென் நிர்வாகத்திற்கும் 'மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் கண்ணியம்' என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது? வைரஸைக் கட்டுப்படுத்த மறுத்ததன் மூலம், அவர்கள் தொழிலாள வர்க்கத்தைப் பாரிய இறப்புகளுடன் வாழ நிர்பந்திக்கிறார்கள். கோவிட் இறப்புகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மைல்கலை நெருங்கி வருகிறது. அங்கே அமெரிக்க சமூக வாழ்வில் யதார்த்தத்திற்கு முரணான ஒரு பேரழிவுகரமான கூறுபாடு உள்ளது. துக்கப்படுவதற்கும் முடியாமல் ஆகி வருகிறது. ஊடங்களில் இப்போது இறந்தவர்களின் பெயர்களோ முகங்களோ காட்டப்படுவதில்லை, வெறும் எண்ணிக்கை தான், அனேகமாக விரைவில் அந்த எண்ணிக்கையையும் காட்டாமல் போகலாம்.

வாஷிங்டன் ஏற்றுக் கொண்ட மற்றும் உலகளவில் பின்தொடரப்பட்ட இந்த சமூகப் படுகொலை கொள்கையால், இந்த பெருந்தொற்று சீனாவைச் சுற்றி வளைத்துள்ளது. உலகெங்கிலும் இந்த பெருந்தொற்று பரவி இருப்பதால் புதிய நோயாளிகளும் வகைகளும் சீனாவுக்குள் நுழைவதால், இந்த வைரஸை அகற்றும் பிரமாண்டமான சாதனையை அது அதன் எல்லை நகரங்களில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்தாக வேண்டும்.

வடமேற்கு சீன நகரமான ஜியான், ஏப்ரல் 2020 க்குப் பின்னர் சீனாவில் மிகத் தீவிரமாக கோவிட்-19 வெடித்ததைக் கட்டுப்படுத்தி அகற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கைகளைத் தான் டைம்ஸ் எதேச்சதிகாரமானதாக சுட்டிக் காட்டியது.

இந்நகரில் வசிக்கும் பதிமூன்று மில்லியன் பேர் கடுமையான சமூக அடைப்பில் நிறுத்தப்பட்டனர், அந்நகரம் எங்கிலும் பாரிய பரிசோதனை மற்றும் நோயின் தடம் அறிதல் மேற்கொள்ளப்பட்டது, நோய்தொற்று ஏற்பட்டவர்களும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சமூக பொது முடக்கம் என்பது அன்றாட வாழ்வைப் பாரியளவில் தொந்தரவூட்டும் என்பதுடன், நிஜமான தியாகங்களும் தேவைப்படுகின்றன, ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒரு பொதுவான நோக்கத்திற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்: அதாவது, இந்த பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்காக. கடந்த டிசம்பர் இறுதியில் ஜியானில் சமூக அடைப்பு தொடங்கியதில் இருந்து, ஒரு சில நாட்களுக்குள், அந்த ஒட்டுமொத்த நகரிலும் பாரியளவில் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஏனைய அடிப்படை அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கும் ஏற்பாடுகளுக்காக 45,000 க்கும் அதிகமானவர்கள் தன்னார்வத்துடன் செயல்பட்டனர்.

ஆனால் இந்த வைரஸின் கண்டறியப்படா பரவல் இருப்பதாலும், தொடர்பற்ற நோயாளிகளின் எண்ணிக்கை பரவி இருப்பதாலும் இதைக் கண்டறிவது மிகப்பெரும் சிரமமாக உள்ளது. ஜனவரி ஆரம்பத்தில் கடைசி தொடர்பற்ற நோய்தொற்று கண்டறியப்பட்டது. ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 180 புதிய நோயாளிகள் என்ற நிலையில் இருந்து, நேற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக குறைந்தது.

இந்த வைரஸ் அகற்றப்பட்டவுடன், ஜியான் பகுதி பகுதியாக விரைவில் மீண்டும் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இந்த வெடிப்பின் போக்கில், 2,000 க்கும் அதிகமான நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். யாரும் இறக்கவில்லை.

இந்த பொது முடக்கத்தின் போது அங்கே துஷ்பிரயோகங்களும் பல துயரங்களும் இருந்துள்ளன. உணவுப் பற்றாக்குறையானது வினியோக முறையைப் பாதித்தது, ஒரு சிலரின் விஷயங்களில் கடுமையான பட்டினிக்கு இட்டுச் சென்றது. நோய்தொற்று இல்லையென கோவிட்-19 பரிசோதனையைக் காட்டாததற்காக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால் அவரது குழந்தை கலைந்தது. “மிதமான அபாய' மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டதால் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிறக்கவிருந்த குழந்தையின் இறப்பு மற்றும் மாரடைப்பால் ஒருவர் இறந்த இந்த துயரகரமான ஜியான் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான தேசிய விவாதமாக உள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஒப்பிட முடியாதளவுக்கு எண்ணற்ற துயரங்கள் நடக்கின்றன, மருத்துவமனை காத்திருப்போர் அறைகளில் குவிந்திருப்போரின் இறப்புகள், பிரசவச் சிகிச்சை மறுக்கப்பட்ட தாய்மார்களின் பிறக்கவிருக்கும் குழந்தைகள் கலைவது ஆகியவை நடக்கின்றன. இவை அறிவிக்கப்படுவதில்லை. டைம்ஸ் சீனா மீதான அதன் தார்மீக சீற்றத்திற்காக இவை அனைத்தையும் காப்பாற்றுகிறது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை ஒடுக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற கொள்கையாக முன்வைக்கவே டைம்ஸ் இத்தகைய சம்பவங்களை பற்றிக்கொண்டது. அங்கே 'பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைப் பிடிவாதமாக பின்பற்றும் ஈவிரக்கமற்றத்தன்மை' இருப்பதாகவும், தொழிலாளர்கள் எதேச்சதிகாரத்தின் இந்த உத்வேகத்துடன் இணைந்து, மருத்துவத் துறையின் சாதாரணத் தொழிலாளர்கள் ஒடுக்குமுறை முகவர்களாக ஆகிவிட்டனர் என்று லி எழுதினார். “சமூகத் தொழிலாளர்களின் ஒரு பரந்த படை,” “முனைப்புடன் இந்த கொள்கையை நடத்துகிறது' என்று எழுதிய அப்பெண்மணி, இந்த நிகழ்ச்சிப்போக்கில் அவர்கள் 'எதேச்சதிகார கொள்கைக்கு உதவியாளர்களாக' ஆகிவிட்டனர் என்றார்.

இத்தகைய வரிகளில் ஒவ்வொன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவையாற்றுவதற்காக அணிதிரண்டுள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் சுயதிருப்தி கொண்ட அறநெறியில் மூழ்கி உள்ளன. N95 ரக முகக்கவசங்கள் அணிந்ததால் ஏறக்குறைய நிரந்தரமாக அதன் தழும்புகளைத் தாங்கி தூக்கமின்றி சிகிச்சை அளித்து வரும் இந்த சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்கள், லி ஐ பொறுத்த வரையில், எதேச்சதிகாரத்தின் முகவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்டவர்களின் வாழ்வுக்கோ அல்லது கண்ணியத்திற்கோ மதிப்பளிக்காத ஒரு கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்களாம். இத்தகைய வாதங்களுக்கு பின்னால் ஒரு நீண்ட இனவாத வரலாறு உண்டு. இது தான் 'மஞ்சள் அபாயத்தின்' (yellow peril) பண்டைய புராணமாக இருந்தது, அதாவது சீனாவும் 'கீழை நாடுகளும்' மேற்கத்திய உலகுக்கு ஓர் இனரீதியான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக பத்தொன்பதாம் நூற்றாண்டு ஏகாதிபத்தியத்தின் பொய் இருந்தது.

ஆனால் டைம்ஸ் அத்துடன் நின்றுவிடவில்லை. லி சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை யூத இனப்படுகொலையுடன் ஒப்பிடுகிறார். அவர் மெய்யியல்வாதி ஹன்னா ஆரென்ட் (Hannah Arendt) இன் 'கொடுமையின் சாதாரணத்தன்மை' (banality of evil) என்ற வார்த்தையை மேற்கோளிடுகிறார், இந்த வார்த்தையை ஆரென்ட் ஒரு முன்னணி நாஜியான அடோல்ஃப் ஐஷ்மனை விவரிக்க பயன்படுத்தினார். ஐஷ்மனிடம் ஆரென்ட், விமர்சனப்பூர்வ சிந்தனையற்ற, அதிகாரத்துவ மனநிலை கொண்ட, என்ன கூறப்பட்டதோ அதை அப்படியே செய்யும் ஒரு மனிதரைப் பார்த்தார். உண்மையில் ஆரென்ட்டின் அரைகுறை-உளவியல் விளக்கத்தை விட இன்னும் மிகப் பெரியளவில் சிக்கலான வரலாற்று மற்றும் சமூக காரணிகளால் ஐஷ்மனின் நோக்கங்கள் உந்தப்பட்டிருந்தன. மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றவாளிகளில் ஒருவரை விவரிக்க பயன்படுத்தப்பட்ட ஆர்ன்டிட் இன் வார்த்தையை டைம்ஸூம் ஏற்கிறது, பின்னர் ஜியானின் சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்களுக்கு அதைப் பயன்படுத்துகிறது.

இது நேரெதிரானது என்பதற்கும் அப்பாற்பட்டது. ஜியானின் சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்கள், மருத்துவ மற்றும் செவிலிய பணியாளர்கள் பலர் மக்களின் தேவைகளுக்காக பொது அடைப்பின் சிரமங்களுக்காக வீட்டுக்குச் செல்வதையே விட்டு அவர்கள் பதவிகளில் இருந்தனர். ஓர் எதேச்சதிகார ஆட்சியைத் திணிக்கும் உத்தரவுகளைச் சர்வசாதாரணமாக பின்பற்றியதாக, டைம்ஸ் அவர்களை நாஜிக்களுடன் ஒப்பிடுகிறது.

கட்டுரையின் படங்கள், ஒரு கணக்கிடப்பட்ட பாணியில், இந்த கருத்தைத் தான் அடிக்கோடிட்டுக் காட்டியது. “படை' என்ற தலைப்பு வார்த்தையுடன் ஒரு கட்டுரையில், முகம் மறைத்த சுகாதார கவனிப்பு தொழிலாளர்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசையாக நிற்பதைக் காட்டியது. அச்சுறுத்துவதற்கான வாயுவைக் காட்டுவதைப் போல தொழிலாளர்கள் கிருமிநாசினி குப்பிகளில் இருந்து அதை தெளிப்பதைப் போல காட்டப்படுகிறது,

பூஜ்ஜிய-கோவிட் எதேச்சதிகாரத்தைக் குறிப்பிட அந்நாட்டில், புத்திஜீவிகளால் ஆரென்டிட் பரவலாக மேற்கோளிடப்பட்டு வருவதாக வாதிட்டு, லி சீனர்களின் கருத்துக்கு 'கொடுமையின் சாதாரணத்தன்மை' என்ற வார்த்தையை அர்ப்பணிக்க முயல்கிறார். அப்பெண்மணி இதற்காக சீன சமூக ஊடக தளமான வெய்போவில் @IwillNotResistIt என்ற பயனரின் ஒரு பதிவை ஆதாரமாக மேற்கோளிடுகிறார். ட்வீட்டரை விட வெய்போ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அது ஒவ்வொரு மாதமும் அரை பில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு பயனரைக் கொண்டுள்ளது. லி மனம் போன போக்கில் 87 பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு பயனரின் மேற்கோளைக் கைக்குக் கிடைத்த ஒன்றாக எடுத்து உள்ளடக்கத்திற்குப் பொருந்தாத விதத்தில் அதைப் பயன்படுத்தி இருந்தார்.

தோராயமாக மொழிபெயர்க்கப்பட்ட பின்வரும் வாசகத்தில் @IwillNotResistIt என்ற பயனர் 'கொடுமையின் சாதாரணத்தன்மை' குறித்த அந்த வரியைக் கையாண்டிருந்தார்: “கடந்த காணொளியில் இந்த பகுதிசார் தொற்றுநோயை தடுக்கும் இடங்களில் உள்ள பணியாளர்கள் உட்பட எல்லா முன்களப் பணியாளர்களும் நிஜமாகவே கடினமாக உழைத்து வருகிறார்கள், அவர்கள் மீது பழி போடக் கூடாது. நாள் முழுக்க பாதுகாப்பு உடைகளும் N95 ரக முகக்கவசங்களும் அணியும் மூச்சுமுட்டும் உணர்வை யோசித்து பாருங்கள், வேலையைக் குறித்து சொல்ல வேண்டியதே இல்லை.”

இவை இரக்க உணர்வுக்கு அழைப்பு விடுத்து, ஜியான் தோல்விகள் மீதான விமர்சனமாக, சீன சமூக ஊடகத்தில் நடந்த மிகப் பெரும் விவாதத்தின் பாகமாக எழுதப்பட்டிருந்தன. அவை பூஜ்ஜிய-கோவிட்டை முடிவுக்குக் கொண்டு வரும் கோரிக்கைக்காக எழுதப்பட்டவை இல்லை, மாறாக அதை முறையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்துவதற்காக எழுதப்பட்டவையாகும்.

சீன அரசாங்கம் எதேச்சதிகாரமானது தான், ஆனால் அது சர்வாதிபத்திய சர்வாதிகாரம் அல்ல. அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைத் திரும்பப் பெற ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் சர்வதேச மூலதனத்திடமிருந்து வரும் ஆழ்ந்த அழுத்தங்களின் கீழ், அது சீனத் தொழிலாள வர்க்கத்தின் ஓர் அளப்பரிய முட்டுக்கட்டையை எதிர்கொள்கிறது, ஏனென்றால் தங்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக அங்கே பாரிய மக்கள் ஆதரவு உள்ளது.

பிறக்கவிருந்த குழந்தையின் இறப்பு மற்றும் மாரடைப்பால் ஒருவர் இறந்த இந்த துயரகரமான ஜியான் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான தேசிய விவாதமாக உள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஒப்பிட முடியாதளவுக்கு எண்ணற்ற துயரங்கள் நடக்கின்றன, மருத்துவமனை காத்திருப்போர் அறைகளில் குவிந்திருப்போரிடையே இறப்புகள், பிரசவச் சிகிச்சை மறுக்கப்பட்ட தாய்மார்களின் பிறக்கவிருந்த குழந்தைகள் கலைவது ஆகியவை நடக்கின்றன. இவை வெளியில் அறிவிக்கப்படுவதில்லை. டைம்ஸ், சீனா மீதான அதன் தார்மீக சீற்றத்திற்காக இவை அனைத்தையும் காப்பாற்றுகிறது.

வரலாற்றுரீதியில் கொடூரமாக அவதூறாக நாஜிக்களுடன் ஒப்பிடுவது, சீனப் பொதுக் கருத்துக்களில் இருந்து அல்ல, முற்றிலும் நியூ யோர்க் டைம்ஸில் இருந்து தொடங்குகிறது.

பொது சுகாதார நடவடிக்கைகளை நாஜிக்களுடனும் யூத இனப்படுகொலையுடனும் ஒப்பிடுவது புதிதல்ல. இது, கட்டாயத் தடுப்பூசி, முகக்கவசங்கள் அணிதல் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிவலது மற்றும் பாசிசவாதிகளால் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. இத்தகைய சமூக சக்திகளுடன் தான் டைம்ஸ் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்கிறது.

அதே நாளில் டைம்ஸ் சீனா மீதான அதன் அவதூறான தாக்குதலை வெளியிட்டது, அவதூறு-எதிர்ப்பு லீக் ஓர் அறிக்கை வெளியிட்டது, “பொது சுகாதாரத்திற்கான அவசியங்களை நாஜி ஜேர்மனியின் உத்திகளோடு ஒப்பிடுவது ஒருபோதும் பொருத்தமானதில்லை. நாங்கள் இதை பலமுறை கூறியிருப்பதைப் போல, யூத இனப்படுகொலையை இவ்விதத்தில் குறைத்துக் காட்டுவது ஆழ்ந்த அத்துமீறல் மற்றும் தீங்கு ஏற்படுத்தக்கூடியது.” அவர்கள் நியூ யோர்க் டைம்ஸை மேற்கோளிட்டு எழுதவில்லை, மாறாக கட்டாய தடுப்பூசி செலுத்தலை நாஜி ஜேர்மனியுடன் ஒப்பிடும் பாசிசவாத காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினரை மேற்கோளிட்டு கூறியிருந்தனர்.

சீனாவைக் குறித்த நியூ யோர்க் டைம்ஸின் பிதற்றல்களில், ஏறக்குறைய பைத்தியக்காரத்தன அளவுக்கு விரக்தி உள்ளது. அது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மற்றும் குறிப்பாக பைடென் வெள்ளை மாளிகையின் விரக்தியை வெளிப்படுகிறது. இது, கடந்தாண்டு மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளதுடன், லி இன் சொந்த கட்டுரைகளிலும் வெளிப்பாட்டைக் காண்கிறது.

பைடென் பதவியேற்பற்கு சில நாட்களுக்கு முன்னர், ஜனவரி 4, 2021 இல், லி டைம்ஸில் ஒரு கட்டுரை எழுதினார், அதில் அப்பெண்மணி சீனாவில் வாழ்வைப் பின்வருமாறு குணாம்சப்படுத்தினார், “இன்னமும் பல நாடுகள் கோவிட்-19 ஆல் சீரழிந்து வருகையில், இந்த பெருந்தொற்று உருவான சீனா, உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக ஆகியுள்ளது. … அந்நாடு 2020 முழுவதிலும் 100,000 க்கும் குறைவான நோய்தொற்றுக்களை அறிவித்தது. அமெரிக்காவோ நவம்பர் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் அதை விட அதிகமான நோயாளிகளை அறிவித்துள்ளது.”

லி தொடர்ந்து குறிப்பிட்டார், “சீனா, பெருந்தொற்றுக்கு முந்தைய உலகின் 'வழமை' எப்படி இருக்கும் என்பதற்கு ஒத்திருக்கிறது. தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளன. உணவகங்கள் நிரம்பி உள்ளன. ஆடம்பர பிராண்ட் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் நிற்கின்றன. வியாபாரங்கள் பேசவும் அல்லது இந்த புத்தாண்டைக் கொண்டாடவும், மக்கள் Zoom அழைப்புகளுக்குப் பதிலாக, நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள்.”

ஓராண்டுக்குப் பின்னர், சீனாவின் கோவிட் இறப்பு எண்ணிக்கையில் ஒரு மனித உயிர் கூட அதிகரிக்கவில்லை, மாறாக லி 'கொடுமையின் சாதாரணத்தன்மை' குறித்தும் எதேச்சதிகாரம் குறித்தும் பேசுகிறார். அப்பெணிமணி முதலாளியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு செல்லவேண்டிய பாதைக்கான உத்தரவுகளைப் பெற்றுள்ளார். இது சீனாவின் வளர்ச்சி சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அமெரிக்காவின் நெருக்கடி சம்பந்தப்பட்டது, இங்கே ஆளும் வர்க்கம் மனித உயிர்கள் மீதான முழு அவமதிப்பை எடுத்துக்காட்டி உள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால் அதேயளவுக்கு பங்குச் சந்தையும் உயரும், அதைக் குறித்து தான் அதற்கு அக்கறை.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் வெற்றி, சீனா மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்ற உண்மை, பாரிய இறப்புக்கு ஒரு மாற்றீடு இருப்பதை தொழிலாள வர்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகிறது. ஆளும் உயரடுக்கால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுதான், சீனாவில் மட்டுமே இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விஞ்ஞானபூர்வ பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிரான அவர்களின் விஷமத்தனமான அவதூறை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

Loading