முன்னோக்கு

நேட்டோவின் பால்டிக் முற்றுகை ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஒரு புதிய முன்னணியைத் திறக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, நேட்டோவின் பால்டிக் உறுப்பினரான லித்துவேனியா, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பயனுள்ள முற்றுகையை விதித்தது, ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதிக்கும் கலினின்கிராட் ரஷ்யாவிற்கும் இடையே எஃகு மற்றும் நிலக்கரி உட்பட பல பொருட்களை கொண்டு செல்வதைத் தடுக்கிறது.

பாரம்பரியமாக, தடையை விதிப்பது ஒரு போர் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த பொறுப்பற்ற ஆத்திரமூட்டலின் மூலம், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவை ஒரு நேட்டோ நாட்டிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்குத் தூண்ட முயல்கின்றன, இது நேட்டோ சாசனத்தின் பிரிவு V இன் அழைப்பிற்கு வழிவகுப்பதுடன் ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும்.

உக்ரேனில் தொடர்ச்சியான இராணுவ பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய சக்திகள் வடக்கில் போரில் ஒரு புதிய முன்னணியைத் திறக்க முயல்கின்றன.

ரஷ்யாவை முற்றுகையிடும் முடிவு மற்ற நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான ஆலோசனையில் எடுக்கப்பட்டதாக லித்துவேனிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 'லித்துவேனியா எதுவும் செய்யவில்லை, ஐரோப்பியத் தடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன' என்று லித்துவேனிய வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் கூறினார்.

முற்றுகைக்கு பதிலளித்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அப்பட்டமாக எச்சரித்தது, “கலினின்கிராட் பகுதிக்கும் மற்ற ரஷ்ய கூட்டமைப்புக்கும் லித்துவேனியா வழியாக சரக்கு போக்குவரத்து எதிர்காலத்தில் முழுமையாக மீட்டெடுக்கப்படாவிட்டால், அதன் தேசிய நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ரஷ்யாவுக்கு உரிமை உள்ளது.'

ஒரு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் கடுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக இயக்கத்திற்கு பயந்து, பொறுப்பற்ற முறையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் ஒரு போரை தீவிரப்படுத்துகின்றன.

ஒரு நேட்டோ உறுப்பு நாடு, ரஷ்யாவிற்கு எதிராக முற்றுகையை சுமத்துவது, ஐரோப்பிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் தொடர்ச்சியான மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு சில நாட்களுக்குப் பின்னர் வந்துள்ளது.

பிரிட்டனின் பாதுகாப்புப் படைத் தலைவர் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் இராணுவத்திற்கு அனுப்பிய உள் செய்தியில், 'எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து போரிடக்கூடிய மற்றும் போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்கும் திறன் கொண்ட இராணுவத்தை உருவாக்குவது இப்போது தீவிரமான அவசியம்' என்று கூறினார். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் பற்றிய சிலிர்க்க வைக்கும் குறிப்பில், 'ஐரோப்பாவில் மீண்டும் ஒருமுறை போரிட இராணுவத்தை தயார்படுத்த வேண்டிய தலைமுறை நாங்கள்' என்று முடித்தார்.

ஜேர்மன் செய்தித்தாள் Bild am Sonntag இடம் பேசுகையில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் கூறினார்: 'நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தக்கூடாது... அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்பதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.'

சனிக்கிழமையன்று டைம்ஸ் ஆஃப் லண்டனில் எழுதுகையில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் நேட்டோவை 'ஜனாதிபதி செலென்ஸ்கி வகுத்துள்ள விதிமுறைகளின்படி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்', அதாவது டொன்பாஸ் மற்றும் ரஷ்யா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதும் கிரிமியாவை மீட்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மற்றொரு இரத்தத்தை உறைய வைக்கும் அச்சுறுத்தலில், ஜேர்மன் விமானப்படையின் தலைவர் இங்கோ கெர்ஹார்ட்ஸ் (Ingo Gerhartz), ஜேர்மனி அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என அறிவித்தார்: 'அணுவாயுதத் தடுப்பைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் அரசியல் விருப்பமும் இரண்டும் எங்களுக்குத் தேவை'.

ஏற்கனவே, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உக்ரேனிய துருப்புக்கள் இறந்து கொண்டிருக்கின்றன. UK மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகளுடன் 'உடன் சேர்ந்து' போரிடுவது மற்றும் இந்த மோதல் 'ஆண்டுகள்' நீடிப்பது என்றால் என்ன?

ஐரோப்பிய அதிகாரிகள், நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான இறப்புகளுடன், ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவும் போரைப் பற்றி விவரிக்கின்றனர். ஐரோப்பா முழுவதும் பாரிய கொலைக்களமாக மாற்றப்பட உள்ளது.

புதிய தலைமுறை ஐரோப்பிய இளைஞர்கள் மொத்தமாக அகழிகளில் இறக்க அனுப்பப்பட வேண்டும் என்று முடிவு செய்தது யார்? முதலாம் உலகப் போர் மீண்டும் நடக்க வேண்டுமா என பொதுமக்களிடம் கேட்டது யார்?

இந்த அறிக்கைகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்று கூறுவதை பொய்யாக்குகின்றன. இந்தக் கூற்று, ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கு 'சாத்தியமில்லை' என்ற பிரகடனத்துடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான மக்களைக் கொல்ல அச்சுறுத்தும் ஒரு போருக்கு அரசாங்கங்கள் அவர்களை இழுக்கும் போது மக்களை தூக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

போரை மேலும் தூண்டிவிடுவதற்கான சமீபத்திய பாசாங்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரி ஜோசப் பொரெல், உக்ரேன் தானியங்களை ஏற்றுமதி செய்வதை தடுத்ததாக ரஷ்யா மீது போர்க்குற்றங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். தானிய ஏற்றுமதியின் 'முற்றுகையை' முறியடிப்பது, கருங்கடலில் நேட்டோவிற்கும் ரஷ்ய போர்க்கப்பல்களுக்கும் இடையே கடற்படைப் போரைத் தூண்டுவதற்கு, அட்மிரல் ஜேம்ஸ் ஜி. ஸ்டாவ்ரிடிஸ் என்பவரால் முதலில் முன்மொழியப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காகச் செயல்படுகிறது.

கலினின்கிராட் பால்டிக் பகுதி 1525 முதல் 1945 வரை போலந்து, பிரஷ்யன் மற்றும் ஜேர்மன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இது சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. கலினின்கிராட் மட்டுமே ரஷ்ய பால்டிக் கடல் துறைமுகமாகும், இது ஆண்டு முழுவதும் பனிக்கட்டி இல்லாதது, மேலும் இது பால்டிக் கடலில் ரஷ்யாவின் கடற்படையின் பராமரிப்பிற்கு முக்கியமானது. போலந்து இராணுவத்தின் நிலப் படைகளின் முன்னாள் தளபதி உட்பட போலந்து அதிகாரிகள், கலினின்கிராட் போலந்தின் ஒரு பகுதி என கூறுகின்றனர்.

பால்டிக் அரசுகளான லாட்வியா, லித்துவேனியா மற்றும் எஸ்தோனியாவில், சக்திவாய்ந்த வலதுசாரி இயக்கங்கள் மேலாதிக்க அரசாங்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளன. லித்துவேனிய வெளியுறவு மந்திரி லாண்ட்ஸ்பெர்கிஸ், தீவிர வலதுசாரி சஜூடிஸ் இயக்கத்தை (Sąjudis movement) நிறுவி, சோசலிசத்தின் அனைத்து சின்னங்களையும் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்ட வைட்டாஸ் லாண்ட்ஸ்பெர்கிஸின் பேரன் ஆவார்.

எஸ்தோனியாவின் சமீபத்திய அமைச்சரவையில் பழமைவாத பாசிச எஸ்தோனிய மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது, அதன் உள்துறை அமைச்சர் வெள்ளை மேலாதிக்க சைகையை செய்து தன்னை பலமுறை புகைப்படம் எடுத்தார். லாத்வியாவின் தற்போதைய அரசாங்கம் அதன் பொருளாதார, கலாச்சார மற்றும் விவசாய அமைச்சர்களை பாசிச மற்றும் வெறித்தனமான ரஷ்ய-விரோத தேசியக் கூட்டணியில் இருந்து எடுத்துள்ளது.

தீவிர வலதுசாரிகளின் மேலாதிக்கம் கொண்ட இந்த அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற அரசுகளுக்கு, ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்கு ஏகாதிபத்திய சக்திகளால் முழுச் சுதந்திரமும் அரசியல் ஆதரவும் வழங்கப்படுகிறது.

நேட்டோ சக்திகளின் நடவடிக்கைகள், ஒரு அதிர்ச்சியூட்டும் அளவு பொறுப்பற்ற தன்மையைப் பற்றி பேசுகின்றன, இது உக்ரேன் அனுபவித்த இராணுவ பின்னடைவுகளால் மட்டும் விளக்கப்பட முடியாது.

அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கின்றன, அதற்கு அவர்களிடம் தீர்வு இல்லை. உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோய், அதன் மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியின் அரசாங்கங்கள் நெருக்கடி மற்றும் உறுதியற்ற தன்மையில் உள்ளன. உலகம் முழுவதும், வாழ்க்கைச் செலவு கட்டுப்பாட்டை மீறி உயர்ந்து செல்கிறது.

பணவீக்க நெருக்கடியின் விலையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்காக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் வேலையின்மையை அதிகரிக்க முயல்கின்றன, இதனால் அனைத்து நிதி சொத்துக்களையும் கலைக்கத் தூண்டுகிறது. பெரும் மந்தநிலைக்குப் பின்னர் முன்னோடியில்லாத நடவடிக்கைகளாகும்.

பணவீக்க நெருக்கடி தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தள்ளுகிறது, நேற்று தொடங்கிய பிரிட்டிஷ் இரயில் வேலைநிறுத்தத்தில் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ஆளும் வர்க்கங்கள் கவனத்தை வெளிப்புறமாக திசைதிருப்பும் ஒரு வழிமுறையாகப் போரை பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கான ஒரு சாக்குப்போக்காகவும் போர் முயற்சிகளைப் பயன்படுத்துகின்றன.

புட்டின் அரசாங்கத்தின் பதில் முற்றிலும் திவாலானது. ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் சில தீர்வுகளைச் செய்து, உலகளாவிய அதிகாரத்தை இன்னும் சமத்துவமாக பகிர அனுமதிக்கலாம் என புட்டின் நம்புகிறார். ரஷ்யாவின் 'மேற்கத்திய பங்காளிகள்' மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம், போருக்கு ஓரளவு தீர்வு காண முடியும் என்பது அவரது நம்பிக்கை.

ஆனால் உக்ரேனில் போரின் வெடிப்புக்கு வழிவகுத்த உலகளாவிய நெருக்கடிக்கு அமைதியான தீர்வு இருக்க முடியாது. ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யாவையும் சீனாவையும் அடிபணியச் செய்யவும், துண்டாடவும் உறுதியாக உள்ளன. நாகரீகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடிய தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். உக்ரேன் மீதான படையெடுப்பு போன்ற, புட்டினின் எந்தவொரு இராணுவ விரிவாக்கமும் ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் விளையாடும் இரத்தக்களரியை மட்டுமே உருவாக்க முடியும்.

தற்போதைய நெருக்கடிக்கு இராணுவ தீர்வு எதுவும் இல்லை, இது இறுதியில் தேசிய-அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது. போர் என்பது முதலாளித்துவ சமூகம் முழுவதையும் பற்றிக்கொண்டிருக்கும் நெருக்கடியின் மிக முன்னேறிய வெளிப்பாடாகும்.

இந்த பேரழிவில் இருந்து விடுபட ஒரு வழி இருக்குமானால், அது தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலமே இருக்கும். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் நுழையும் போது, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முயல வேண்டும். கோவிட்-19 தொற்றுநோயைப் போலவே, ஏற்கனவே வெடித்துள்ள மூன்றாம் உலகப் போரும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீட்டின் மூலம் மட்டுமே முடிவுக்கு வர முடியும்.

Loading