மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், நாட்டின் வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாத ஒரு உரையை வியாழக்கிழமை மாலை நிகழ்த்தினார். தனது அனைத்து ஏமாற்றுக்கள், சுற்றிவளைப்புக்களையும் கடந்து சென்ற பைடென், உலக ஜனநாயகத்தின் தூண் என்று கூறப்படும் அமெரிக்கா அரசியலமைப்பை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றும் விளிம்பில் உள்ள ஒரு வெகுஜன பாசிச இயக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.
'இன்று குடியரசுக் கட்சியானது MAGA [Make America Great Again] குடியரசுக் கட்சியினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலாகும்' என்று பைடென் கூறினார். 'ட்ரம்ப் மற்றும் MAGA குடியரசுக் கட்சியினர்,' அவர்கள் 'நமது குடியரசின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஒரு தீவிரவாதத்தை' ஊக்குவிக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார். அவர்கள் 'அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை' மற்றும் 'மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்கவில்லை' அல்லது 'சுதந்திரமான தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.' 'அமெரிக்காவில் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்கவும், ஜனநாயகத்தையே குழிபறிக்க தேர்தல் மறுப்பாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், இப்போது செயற்படுகிறார்கள்....' ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பின் தோல்வியை அவர்கள் '2022 மற்றும் 2024 தேர்தல்களுக்கான தயாரிப்பாக' காண்கிறார்கள் என்றார்.
இதன் பொருள் என்ன என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். டொனால்ட் ட்ரம்ப் ஒரு மோசமான தனிநபராக மட்டும் செயல்படவில்லை. அமெரிக்கா ஒரு முதலாளித்துவக் கட்டுப்பாட்டில் உள்ள இரு கட்சி அமைப்புமுறை மூலம் ஆளப்படுகிறது. ட்ரம்ப், அரசு அனுமதி பெற்ற இரண்டு கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் உச்சத்தில் நிற்கிறார். இது ஏற்கனவே மிகப்பெரிய நிறுவனரீதியான அதிகாரத்தை செயற்படுத்துகிறது.
குடியரசுக் கட்சியினர் 50 மாநிலங்களில் 28 மாநிலங்களின் ஆளுநர்களையும் 30 மாநிலங்களின் சட்டமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் அமெரிக்க செனட்டில் 100 இடங்களில் 50 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களில் 211 இடங்களையும் கொண்டுள்ளனர்.
மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில், குடியரசுக் கட்சியினர் அதிக எண்ணிக்கையிலான நீதித்துறை பதவிகளைக் கொண்டுள்ளனர். இதில் பெரும்பான்மையான பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்ற இடங்களும் அடங்கும். மேலும், மிகவும் இழிவாக, குடியரசுக் கட்சியினர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்துகின்றனர்.
அரசாங்கத்தின் நீதித்துறை மற்றும் சட்டமன்ற கிளைகளில் அதன் பாரிய பிரசன்னத்திற்கு அப்பால், குடியரசுக் கட்சியினர் இராணுவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளனர். இது பாசிச எண்ணம் கொண்ட தளபதிகள் மற்றும் கீழ்நிலை பதவியில் உள்ள அதிகாரிகளால் நிறைந்துள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளும் (உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை - DHS), உள்நாட்டு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை (FBI), மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (ICE), ஆகியவை மிக நன்கு அறியப்பட்டவை மட்டுமே, ட்ரம்ப் சார்பு குடியரசுக் கட்சியினரின் நூறாயிரக்கணக்கானவர்களுடன் கூட்டாக பணியாற்றுகின்றன. நாட்டின் ஒவ்வொரு உள்ளூர் காவல் துறை வளாகத்திலும் இதேபோன்ற பாசிச தொற்று உள்ளது.
அரசு மற்றும் அதன் அரசியல் கட்சிகளின் துணை நிறுவனமான பெருநிறுவன ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகளையும் குடியரசுக் கட்சி கட்டுப்படுத்துகிறது.
அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியலின் இரட்டைத் தூண்களில் ஒன்றான குடியரசுக் கட்சி ஒரு பாசிசவாதியால் வழிநடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. இந்தக் கட்சி 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவை அவர் நிராகரித்ததை ஆமோதித்தது, மேலும் ஜனவரி 6, 2021 அன்று நடந்த வன்முறை சதி முயற்சியை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியானது அரசியலமைப்பை தூக்கியெறிவதற்கும், சர்வாதிகாரத்திற்கான விரைவான மற்றும் வன்முறையான மாற்றத்திற்கும் ஆதரவாக உள்ளது என்பதையே இது அர்த்தப்படுத்துகின்றது.
கடந்த 19 மாதங்களாக தனது குடியரசுக் கட்சியின் 'நண்பர்களை' புகழ்ந்து பேசிய பைடெனைப் பொறுத்தவரை, 'இரு-கட்சித்துவத்தின்' நற்பண்புகளைப் புகழ்ந்து, ஒரு 'வலுவான' குடியரசுக் கட்சிக்கு தனது ஆதரவையும் அறிவித்தார் என்பது உண்மை. ஆனால் இப்போது அவர் இந்த முன்னோடியில்லாத பொது எச்சரிக்கையை வழங்க தேசிய தொலைக்காட்சிக்கு செல்கிறார் மற்றும் பாசிச அபாயத்தின் அளவு பற்றி சாட்சியமளிக்கிறார். ஆனால், அமெரிக்கா இவ்வாறானதொரு நிலைக்கு எப்படி வந்தது என்பதை விளக்க ஜனாதிபதி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய குறிப்புகள் கூட அவரது உரையில் இல்லை.
அதற்கு பதிலாக, பைடென் ஒரு புனிதமான வேண்டுகோளை மட்டுமே வழங்கினார். அது சர்வாதிகாரத்தின் ஆபத்துக்கு ட்ரம்ப் வாக்காளர்களை மறைமுகமாக குற்றம் சாட்டுகிறது. அவர்கள் 'பயம்', 'பிரிவு' மற்றும் 'இருள்' ஆகியவற்றால் உந்தப்படுவதைக் காண்கிறார்கள், மேலும் 'பொய்களின் நிழலுக்கு' ஆதரவாக 'உண்மையின் ஒளியை' நிராகரித்துள்ளனர் என்று அவர் கூறினார். எப்படியோ, 'ட்ரம்பும் MAGA குடியரசுக் கட்சியினரும்' இந்த 'நிழலில்' இருந்து வெளிவந்தனர், மேலும் பைடெனின் அரைக் குழந்தை சொற்பொழிவினாலும் மற்றும் நிச்சயமாக, அடுத்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிப்பதன் மூலம் விரட்டப்படுவார்கள் என நம்புகின்றார்.
2020 ஆம் ஆண்டில், பெருமளவு உழைக்கும் மக்கள் உட்பட 74 மில்லியன் மக்கள் ஏன் தங்கள் வாக்குகளை ட்ரம்புக்கு அளித்தனர் என்பதற்கு, பைடென் எந்த நம்பகமான விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பொருளாதார நலன்கள் மற்றும் வர்க்கப் பிளவுகள் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தனது பேச்சிலிருந்து தவிர்த்து, இரு-கட்சி அமைப்பின் பெருநிறுவன-நிதி ஆதிக்கம் ஒருபுறம் இருக்க, ட்ரம்பின் முரட்டுத்தனமான வலதுசாரி 'ஸ்தாபக எதிர்ப்பு' வாய்வீச்சுக்கும் ஆளும் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை அம்பலப்படுத்த பைடென் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அமெரிக்காவில் வேரூன்றிய இரு-கட்சி அமைப்பில், தொழிலாளர்களின் பிரிவுகளும் நடுத்தர வர்க்கமும் குடியரசுக் கட்சியை ஆதரிப்பது நம்பிக்கையினால் அல்ல மாறாக நல்ல தேர்வு இல்லாததால். ட்ரம்பிற்கு ஒரு அடித்தளம் இருக்கும் அளவிற்கு, ஜனநாயகக் கட்சியினரிடம் வழங்குவதற்கு எதுவும் இல்லை என்பதாலும், குடியரசுக் கட்சியினர் உண்மையான குறைகளையும் அதிருப்தியையும் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலும் தான்.
ட்ரம்பின் கொள்கைகளின் உண்மையான பொருளாதார அடிப்படையை அம்பலப்படுத்த பைடென் தவறியது மறதி சம்பந்தப்பட்ட விஷயமல்ல. மாறாக, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல்கள் இருந்தபோதிலும், அவை இரண்டும் இறுதிப் பகுப்பாய்வில், ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் தேசிய மற்றும் உலகளாவிய நிதி-பெருநிறுவன நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரித்ததால் மட்டுமே குடியரசுக் கட்சியினரால் பரந்த ஆதரவைக் கட்டியெழுப்ப முடிந்தது. அது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாகும், இன மற்றும் பாலின அரசியலை அடிப்படையாகக் கொண்ட உயர்-நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை அதன் பின்னால் அணிதிரட்டுகிறது. பைடென் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தொற்றுநோய் உட்பட அதன் அனைத்து அத்தியாவசியங்களிலும், குடியரசுக் கட்சியினரின் அதே கொள்கையையே பின்பற்றி வருகிறார்.
பைடெனும் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியினர் என்ன செய்கிறார்கள் என்பதன் அரசியல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்து பதட்டமடைந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தை முறியடிப்பது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், வர்க்க ஆட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலைக்கப்படும், அவற்றைத் திரும்பப் பெற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஜனநாயகக் கட்சியினர் சர்வாதிகாரத்தை விட கீழிருந்தான ஒரு சமூக இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றியே அதிகம் பயப்படுகிறார்கள். மேலும், ட்ரம்புடனான மோதலில் ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய அக்கறை எப்போதும் வெளியுறவுக் கொள்கையை மையமாகக் கொண்டது. வியாழன் அன்று பைடெனின் கருத்துக்களில் குறிப்பாக இல்லாதிருந்தது ரஷ்யாவிற்கு எதிராக விரிவடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போரைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் ஆகும். இது இரண்டு காரணங்களுக்காக. முதலாவதாக, போர் மிகவும் மதிப்பிழந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்தப் போரை நடத்த 'தீவிரவாதிகளால்' 'ஆதிக்கம் செலுத்தும்' குடியரசுக் கட்சியின் உதவியை ஜனநாயகக் கட்சி நம்பியிருக்கின்றனர்.
தொழிலாளர்களை 'பரிதாபமானவர்கள்' என்று கூறி, தொழிலாளர்களை இனவெறியர்கள் என்று கண்டனம் செய்து, அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரை இழிவுபடுத்துவதன் மூலம் ஜனநாயக உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இந்த பிற்போக்குத்தனமான இயக்கவியலுக்கு ஜனநாயகக் கட்சியினர் வழி வகுத்துள்ளனர்.
சமூக சமத்துவத்திற்கான பெரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களின் தார்மீக ரீதியான கண்டனங்களுக்கு இணங்க, ஜனநாயகக் கட்சியினர் கடந்த 50 ஆண்டுகளாக சமூகநல திட்டங்களை அகற்றி, பணக்காரர்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளனர்.
ஒரு பாசிச சர்வாதிகாரத்தின் ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு ஒரு திருப்புமுனையை அடைகிறது. சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் வேரூன்றியுள்ள அடிப்படை, 1) அமெரிக்க முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தின் வீழ்ச்சி; 2) பொருளாதாரச் சுரண்டலின் தீவிரம் மற்றும் அதன் விளைவாக, சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சி; 3) தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டங்களை திட்டமிட்டு அடக்குதல்; மற்றும் 4) 30 ஆண்டுகால இடைவிடாத போர், பைடென் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா மற்றும் சீனாவுடன் நேரடி மோதலாக உருவாகியுள்ளது. மூன்றாம் உலகப் போருக்கு தயாராவதற்கு இராணுவச் செலவினங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்கள், அத்தியாவசிய சமூகத் திட்டங்களுக்கு எதையும் வழங்குவதற்கு விட்டு வைக்கவில்லை. முழுமையான போரை நோக்கிய விரிவாக்கத்திற்கு சர்வாதிகாரத்தை நோக்கிய விரிவாக்கம் தேவைப்படுகிறது.
சர்வாதிகாரத்தின் ஆபத்துக்கான பதில், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியாகும். தொழிலாள வர்க்கம் தன்மீது சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடைக்கும் அளவிற்கு மட்டுமே உண்மையான வர்க்க அணிதிரளல் முன்னுக்கு வர முடியும். இது தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெகுஜனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சோசலிச பொருளாதார மற்றும் அரசியல் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே ட்ரம்ப் இயக்கத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் அம்பலமாகும். ட்ரம்ப் ஒரு வெகுஜன அடித்தளத்தைக் கொண்டிருக்கும் அளவுக்கு, முக்கால்வாசி இல்லாவிட்டாலும், அதில் மூன்றில் இரண்டு பங்கு அவரது வார்த்தையாடல்களின் சூடேற்றும் தன்மையால் நிலைத்திருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி அவரது பலூனை வெடிக்கச் செய்யும்.
பாசிசத்தின் வளர்ச்சிக்கான தீர்வு பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஒழுக்கநெறி அல்ல, மாறாக அனைத்து வகையான முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியாகும்.
