மூன்றாம் உலகப் போருக்கான வரைபடத்தை வெள்ளை மாளிகை வரைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுடனான அமெரிக்க மோதல் அணுசக்தி 'பேரழிவை' தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி ஜோ பைடென் எச்சரித்த ஒரு வாரத்திற்குள், வெள்ளை மாளிகை இராணுவ வன்முறை மூலம் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை 'வெற்றிகொள்வதற்கு' உறுதியளிக்கும் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது.

இந்த ஆவணம் அமெரிக்க இராணுவத்தை விரிவுபடுத்தவும், பொருளாதார வாழ்க்கையை போரை உருவாக்கத்துடன் 'ஒருங்கிணைக்கவும்' மற்றும் 'தீர்மானமான தசாப்தம்' என்று அழைக்கப்படும் '21 ஆம் நூற்றாண்டிற்கான போட்டியில் வெற்றி பெறவும்' உறுதியளித்தது.

பாசிச சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்ப்பால் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை அனைத்து அடிப்படைகளிலும் விடயங்களிலும் தழுவி, பைடெனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்கா ரஷ்யாவுடனும், எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவுடனும் உயிர்வாழ்விற்கான மோதலில் சிக்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

கூட்டு படை தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி (இடது) ஜனாதிபதி ஜோ பைடெனுடன் (AP Photo/Steve Ruark) [AP Photo/Steve Ruark]

ஆவணத்திற்கான பைடெனின் தனிப்பட்ட முன்னுரை பின்வருமாறு கூறுகிறது: 'நாங்கள் ஒரு தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இருக்கிறோம், அது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் முக்கியமாக இருக்கும். ... பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான புவிசார் அரசியல் போட்டிக்கான விதிமுறைகள் அமைக்கப்படுகின்றன.'

இந்த ஆரம்பக் கருத்துக்கள், உலகம் 'புதிய உலக ஒழுங்கின்' விடியலில் உள்ளது என்றும், 'நாம் அதை வழிநடத்த வேண்டும்' என்ற மார்ச் மாத பைடெனின் பிரகடனத்தை எதிரொலிக்கிறது.

ட்ரம்பின் 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தைப் போலவே பைடெனின் மூலோபாயம் வன்முறையான தேசியவாதமாகவும், அமெரிக்கா மனிதகுலம் அல்லது அதன் கூட்டாளிகளின் நலன்களுக்காக அல்ல, மாறாக அதன் சுயநல நலன்களைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுகிறது என்று அறிவிக்கிறது. 'எங்கள் மூலோபாயம் நமது தேசிய நலன்களில் வேரூன்றியுள்ளது' என்று பைடென் அறிவிக்கிறார்.

'எங்கள் இராணுவ பலம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது' என ஆவணம் அச்சுறுத்தி, 'அது மூலோபாய போட்டியின் சகாப்தத்திற்கு பொருத்தமாக இருக்கும் வகையில் எங்கள் இராணுவத்தை நவீனமயமாக்கவும் பலப்படுத்தவும் வேண்டும்' என அறிவிக்கிறது.

இந்த காரணங்களுக்காக, 'அமெரிக்காவிற்கு எதிராக பந்தயம் கட்டுவது ஏன் நல்லதல்ல என்பதை நாடுகள் மீண்டும் ஒருமுறை பார்க்கின்றன' என்று ஆவணம் அச்சுறுத்துகிறது.

'அணுசக்தி அச்சுறுத்தல் என்பது தேசத்திற்கு முதன்மையான முன்னுரிமையானதும்' அமெரிக்காவின் மூலோபாயத்திற்கு 'அடிப்படையானதும்' என்று ஆவணம் வலியுறுத்துகிறது.

பைடென் தனது அறிமுகத்தில் போர், தேசிய புத்துணர்ச்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கும் என்று கூறுகிறார்: 'அமெரிக்காவில் வெளிநாட்டு சவால்களை... உள்நாட்டில் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகளாக மாற்றும் ஒரு பாரம்பரியம் உள்ளது' என்றார்.

ட்ரம்பின் 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முக்கிய கருத்துகளின் அடிப்படையில் 'ஒருங்கிணைந்த பாதுகாப்பு' என்ற கருத்தை ஆவணம் பின்னர் கோடிட்டுக் காட்டுகிறது. இது 'நீண்ட கால மூலோபாய போட்டிக்கு இராஜதந்திரம், தகவல், பொருளாதாரம், நிதி, உளவுத்துறை, சட்ட அமலாக்கம் மற்றும் இராணுவம் போன்ற தேசிய பலத்தின் பல கூறுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு தேவை' என்கிறது.

இதேபோல், புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயம் கூறுகிறது: 'எங்கள் மூலோபாய போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிட எங்கள் தேசிய சக்தியின் அனைத்து கூறுகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்.'

அது மேலும் கூறுகிறது, 'எங்கள் தேசிய பாதுகாப்பு மூலோபாயமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பை நம்பியுள்ளது. அதாவது சாத்தியமான எதிரிகளை அவர்களின் விரோத நடவடிக்கைகளுக்கான இழப்பு, அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட அதிகமாக இருக்கும் என்று நம்ப வைக்கும் திறன்களின் தடையற்ற கலவையாகும். இது பின்வருபவற்றை உள்ளடக்குகிறது: அனைத்து துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பு, எங்கள் போட்டியாளர்களின் இராணுவம் மற்றும் இராணுவம் அல்லாத (பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தகவல்) மூலோபாயங்கள் அனைத்து துறைகளிலும் செயல்படுகின்றன என்பதை அங்கீகரித்து, நாமும் அதேபோல் செய்யவேண்டும்'.

ஒருவேளை அதன் மிகவும் அச்சுறுத்தும் பத்தியில், வெள்ளை மாளிகையின் ஆவணம், 'பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இடையிலான பிளவுக் கோட்டை உடைத்துவிட்டது' என்று அறிவிக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்னோடியாக இருந்த இந்தக் கருத்துக்கள், ஜேர்மனியின் மூன்றாம் குடியரசில் இருந்து வெளிப்படையாக உத்வேகம் பெற்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் உயர் கட்டளையின் தலைவரான ஆல்ஃபிரட் ஜோட்லின் இழிபெயர்பெற்ற 'ஒட்டுமொத்தப் போர்' என்பதை இந்த அறிக்கையை எதிரொலிக்கிறது. இது 'அரசு, இராணுவம் மற்றும் மக்களின் ஒற்றுமை மற்றும் ஒற்றுமை மட்டுமே போரில் வெற்றியைக் கொண்டுவர முடியும்' என்று அது அறிவித்தது.

ட்ரம்பின் பாசிச 'அமெரிக்கா முதலில்' சித்தாந்தத்தின் தொடர்ச்சியைக் குறிப்பிட்டு, நியூயோர்க் டைம்ஸ் நிருபர் டேவிட் சாங்கர், “ஜனாதிபதி சில அசாதாரண நிலைப்பாடுகளை, குறிப்பாக ஒரு ஜனநாயகக் கட்சிக்கு எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டார். 'பூகோளமயமாக்கலின் நன்மைகள் பற்றி அவர் ஒரு அவநம்பிக்கையான பார்வையை எடுத்துக் கொண்டதுடன், இது தொற்றுநோய்களையும் தவறான தகவல்களையும் தூண்டியது மற்றும் விநியோகச் சங்கிலி பற்றாக்குறைக்கு எவ்வாறு பங்களித்தது என்பதை விரிவாக விவரித்தார்' என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மைய இலக்கு சீனாவாகும். 'நாங்கள் சீன மக்கள் குடியரசுடன் திறம்பட போட்டியிடுவோம். இது பெருகிய முறையில் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் திறனையும் விருப்பத்தையும் கொண்ட ஒரே போட்டியாளராக உள்ளது' என ஆவணம் குறிப்பிட்டது.

உக்ரைன் போர் பற்றி வெள்ளை மாளிகையின் உண்மைத் தாளில் அல்லது ஆவணத்தில் கூட குறிப்பிடப்படாத அளவுக்கு சீனா மீது கவனம் செலுத்தப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் படையெடுப்பு இல்லாவிட்டால் உலகம் ஒரு பூந்தோட்டம் போல் பூத்துக்குலுங்கும் என்பதாக பைடென் நிர்வாகத்தின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், இந்த மூலோபாயம் அமெரிக்க மறுஆயுதமாக்கல் மற்றும் போருக்கான தயாரிப்புகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கைகளை குறை கூறவில்லை.

மாறாக, 21 ஆம் நூற்றாண்டை 'வெல்வதற்கான' அமெரிக்கப் போராட்டம், 'பனிப்போருக்குப் பிந்தைய சகாப்தம் திட்டவட்டமாக முடிந்துவிட்டது மற்றும் அடுத்து வருவதை வடிவமைப்பதில் பெரும் வல்லரசுகளுக்கு இடையே ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது' என்ற உண்மையின் அடிப்படையில் முன்னறிவிக்கப்பட்டதாகும்.

தேசிய பாதுகாப்பு மூலோபாயம் சீனாவிற்கு எதிரானதாக இருந்தாலும், அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு எதிரான போரை பாரிய அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கத் தலைமையிலான உக்ரேன் பாதுகாப்புத் தொடர்புக் குழுவின் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புச் செயலர் லாயிட் ஜே. ஆஸ்டின், குளிர்காலத்திலும் தங்கள் தாக்குதலைத் தொடருமாறு அதன் உக்ரேனிய பினாமி படைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்று தெளிவுபடுத்தினார்

'உக்ரேன் தனது பிராந்தியங்களை மீட்பதற்கும், இந்த குளிர்காலத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் போர்க்களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மேலும் அதற்கான வளங்கள் அவர்களிடம் இருப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என ஆஸ்டின் கூறினார்.

இந்த வார நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இம்மோதலில் ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்கு அதன் சொந்த அணு ஆயுத போர்முழக்கத்துடன் பதிலடி கொடுக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

ஸ்டோல்டன்பேர்க் 'அடுத்த வாரம், நேட்டோ அதன் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட பாதுகாப்புப் பயிற்சியான Steadfast Noon' என்பதை நடாத்தும் என்று அறிவித்தார். தெற்கு ஐரோப்பாவில் அணுசக்தி திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களுக்கான பயிற்சிப் பணியைத் தொடங்குவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி, ரஷ்யா மீது முன்கூட்டிய தாக்குதல்களை நடத்த நேட்டோவிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலும், ரஷ்யா உக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்திய நிலையிலும் நேட்டோ பயிற்சியானது போரை மேலும் அதிகரிக்க அச்சுறுத்துகிறது.

பைடெனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் பின்னணியில் தற்போதைய மோதலைப் பார்க்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் உக்ரேனில் நடக்கும் போரை, அது எவ்வளவு கொடூரமான மற்றும் இரத்தக்களரியாக இருந்தாலும், இன்னும் பெரிய மற்றும் பேரழிவுகரமான உலகளாவிய மோதலின் முன்னோடியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

Loading