முன்னோக்கு

அமெரிக்கத் தொழிலாளர்களிடம் டொனால்ட் ட்ரம்ப்: போருக்கான செலவை அவர்களே செலுத்தட்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் நடைபெற்ற தேசிய பொலிஸ்துறை வார விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். மே 11, 2026 திங்கட்கிழமை [AP Photo/Julia Demaree Nikhinson]

பிரெஞ்சுப் புரட்சிக்குச் சற்று முன்னதாக, துயரமான முடிவைச் சந்தித்த அரசியான மேரி அன்துவானெட், ஏழை விவசாயிகளால் ரொட்டி வாங்க முடியவில்லை என்ற செய்தியைக் கேட்டபோது, “அவர்கள் கேக் சாப்பிடட்டுமே” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கதை பெரும்பாலும் புனையப்பட்டதாக இருக்கலாம், ஆனால் இது அந்தக் காலகட்டத்தின் எதார்த்தத்தை அப்படியே துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது—அதாவது அதிகரித்து வந்த சமூக அவலங்களையும் புரட்சியின் வருகையையும், வெகுஜன மக்களின் வாழ்க்கை நிலைமைகளுடன் இருந்த அனைத்துத் தொடர்புகளையும் இழந்த ஓர் உயர்குடி பிரபுத்துவத்தின் ஆணவத்தையும் மற்றும் அது குறித்த அறிவற்ற தன்மையையும் அது வெளிப்படுத்திக் காட்டியது.

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த வார அறிக்கையும் அதே வரலாற்றுப் பதிவில்தான் சேர்கிறது. ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரினால் “அமெரிக்கர்களின் நிதி நிலைமைகளில்” ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அவர் கருத்தில் கொள்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, அந்த உப்புவீங்கிய குண்டர்-ஜனாதிபதி, “சிறிதுகூட இல்லை” என்று பதிலளித்தார்.

சமூக உறவுகளின் யதார்த்தம் மிகத் தெளிவாக வெளிப்படும் சில தருணங்கள் உண்டு, ட்ரம்ப்பின் இந்தக் கூற்றும் அத்தகைய தருணங்களில் ஒன்றாகும். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டிற்காக பெய்ஜிங்கிற்குப் புறப்படுவதற்கு முன், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது, அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஈரானிய அணுஆயுத ஆபத்து என்ற பின்னணியில் தனது கருத்துக்களை முன்வைக்க ட்ரம்ப் முயன்றார். “நான் ஈரானைப் பற்றி பேசும்போது முக்கியமான ஒரே விஷயம் என்னவென்றால்—அவர்களிடம் அணுஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதுதான். அமெரிக்கர்களின் நிதி நிலைமை குறித்து நான் சிந்திப்பதில்லை. நான் யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை,” என்று அவர் கூறினார்.

ஈரானிய அணுகுண்டினால் ஏற்படவிருக்கும் உடனடி ஆபத்து என்பது போர் தொடங்கியதில் இருந்தே வெள்ளை மாளிகையால் பரப்பப்படும் “பெரிய பொய்” ஆகும். ஈரான் குறித்த அறிவும் அனுபவமும் உள்ள வர்ணனையாளர்களாலும், அமெரிக்க இராணுவப் புலனாய்வு அமைப்புகளாலும் இந்த அச்சுறுத்தல் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்த கட்டுக்கதையை நம்புகிறார் என்று கருதுவதற்கும் எந்தக் காரணமும் இல்லை—குறிப்பாக, கடந்த கோடையில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் அவற்றை “முற்றிலுமாக அழித்துவிட்டன” என்று அவரே கூறியிருந்த நிலையில் இது தெளிவாகிறது.

இதனால், ஈரான் போரினால் அமெரிக்க உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் தாக்கம் குறித்துத் தான் கவலைப்படவில்லை என்ற ட்ரம்ப்பின் பிரகடனம் அதன் போக்கிலேயே உண்மையை வெளிப்படுத்துகிறது. அவர் அதைச் சொன்னார், அதையே அவர் கருதியிருக்கவும் செய்கிறார். இந்தப் போருக்கான செலவை தொழிலாள வர்க்கமே கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் கோருகிறது.

எந்த ஒரு அமெரிக்கரின் நிதி நிலைமையைப் பற்றியும் தான் சிந்திப்பதில்லை என்ற ட்ரம்ப்பின் கூற்று நிச்சயமாக ஒரு பொய்யாகும். அவர் தன்னை உருவாக்கிய சமூகத் தட்டு மற்றும் தனது ஒரே ஆதரவுத் தளமான பில்லியனர் பெரும் பணக்காரர்களின் நிதி நிலைமையைப் பற்றியே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதியின் ஏர் போர்ஸ் ஒன் விமானம் பெய்ஜிங்கில் தரையிறங்கியபோது இது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த விமானத்தில் ட்ரம்ப் மற்றும் பல உயர்மட்ட உதவியாளர்களுடன், எலோன் மாஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், பிளாக்ராக்கின் லாரி ஃபிங்க், பிளாக் ஸ்டோனின் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், போயிங் தலைமை நிர்வாக அதிகாரி ரொபர்ட் ஓர்ட்பெர்க், சிட்டி குரூப் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் ஃப்ரேசர் மற்றும் கார்கில், ஜிஇ ஏரோஸ்பேஸ், கோல்ட்மேன் சாக்ஸ், மைக்ரான் டெக்னாலஜி, குவால்காம், விசா போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் என அமெரிக்க முதலாளித்துவத்தின் முக்கிய புள்ளிகள் அனைவரும் இருந்தனர்.

ட்ரம்ப்புடன் சென்ற அந்தத் தன்னலக்குழு கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அவர்களை அங்கு அழைத்துச் செல்ல இரண்டு விமானங்கள் தேவைப்பட்டன.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிலிக்கன் பள்ளத்தாக்கு நிறுவனங்களை மேலும் பணக்காரர்களாக்கும் ஒப்பந்தங்களை ட்ரம்ப் தேடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள புதிய உயர்வால் உழைக்கும் மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஊதியத்தை விட விலைகள் அதிகமாக இருந்ததால், ஏப்ரல் மாதத்தில் உண்மையான ஊதியம் குறைந்தது — பெரும்பாலும் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் இது தூண்டப்பட்டது — எரிசக்தி செலவுகள் ஒரு முக்கிய முடுக்கியாக இருந்துள்ளன. மார்ச் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.8 சதவீதமாக உயர்ந்தது. இது 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். பெட்ரோல் விலை 28 சதவீதமும், எரிஎண்ணெய் விலை 54 சதவீதமும் உயர்ந்தன. உணவு மற்றும் எரிசக்தியைத் தவிர்த்துப் பார்த்தாலும், முந்தைய மாதத்தில் 2.6 சதவீதமாக இருந்த அடிப்படைப் பணவீக்கம், 2.8 சதவீதமாக உயர்ந்தது.

இந்த அதிர்ச்சியலைகள் தற்போது ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி முழுவதும் பரவி, மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கின்றன. எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் நுகர்வோரை சென்றடைவதற்கு முன்பே அதிகரிக்கப்பட்டதால், ஏப்ரல் மாதத்தில் மொத்த விற்பனை விலைகள் 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய உயர்வாகும். உணவு மற்றும் எரிசக்தியைத் தவிர்த்த அடிப்படை உற்பத்தியாளர் விலைகள், முந்தைய ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகமாக இருந்தன.

சரக்கு லாரி மற்றும் கப்பல் போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்கும் டீசல் எரிபொருளின் விலை ஏப்ரல் மாதத்தில் 12.6 சதவீதம் உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்ததாக என்.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உணவுப் பணவீக்கம் காய்கறிகளின் விலையில் பிரதிபலித்தது; குறிப்பாகப் பசுமைக் காய்கறிகளின் விலை, மூன்று மாதங்களுக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ஆண்டு அடிப்படையில் 44 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

கட்டுக்கடங்காத இந்த விலைவாசி உயர்வுகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மறுசீரமைப்புடன் தொடர்புடைய தீவிரப்படுத்தப்பட்ட பணிநீக்கங்களுடன் மோதுகின்றன—இது வரலாற்று ரீதியாக “பொருளாதார மந்தநிலை”யுடன் தொடர்புடைய ஒரு அபாயகரமான சூழலாகும். உலகின் ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிற்கும் எதிராக ட்ரம்ப் தொடுத்துள்ள சுங்கவரி விதிப்புப் போர், இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கி, விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலையை மேலும் உயர்த்துகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசிய ட்ரம்ப், பொருளாதாரம் குறித்து தனது ஒரே கவலை நிதிச் சந்தைகள் மட்டும்தான் என்பதைத் தெளிவுபடுத்தினார். “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்—தற்போது வரலாற்றில் இல்லாத உச்சத்தில் இருக்கும் எமது பங்குச் சந்தை சற்று ஏறுவதோ இறங்குவதோ அல்ல—எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈரான் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான்,” என்று அவர் கூறினார். மேலும், “ஒவ்வொரு அமெரிக்கரும் இதைப் புரிந்துகொள்கிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் அதிலிருந்து எழும் பொருளாதாரப் பேரழிவு ஆகிய இரண்டிலும் ட்ரம்ப்பிற்கு எதிராகப் பெரும் மக்கள் எதிர்ப்பு இருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ட்ரம்ப் போரைத் தொடங்கியதை எதிர்க்கின்றனர். அதே சமயம், CNN-SSRS நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் 70 சதவீதத்தினர், ட்ரம்ப் பொருளாதாரத்தைக் கையாண்ட விதம் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளனர்—இது அவரது முதல் பதவிக்காலத்தில் இருந்ததை விட 20 புள்ளிகள் மோசமானதாகும். குடியரசுக் கட்சி வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உட்பட, சுமார் 77 சதவீதத்தினர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ட்ரம்பின் கொள்கைகளே காரணம் என்று கூறியுள்ளனர்.

அரசியல் என்பது ஒரு நாடகக் கலை என்று நினைப்பவர்கள் காட்டும் அந்தப் பழகிப்போன ஆவேசத்துடன் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் கருத்துக்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் புதன்கிழமை அன்று கூறுகையில், “டொனால்ட் ட்ரம்ப்பும் குடியரசுக் கட்சியும் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட நிதி நிலைமையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு அசாதாரணமான ஒப்புதல் வாக்குமூலம் என அவர் அறிவித்தார். தொடர்ந்து, வோல் ஸ்ட்ரீட் செனட்டர் என்று அழைக்கப்படும் செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர், ட்ரம்பின் கருத்தைப் பெரிய அளவில் அச்சிட்டு அதன் முன்னே நின்று கொண்டு, ஜனாதிபதியை “அக்கறையற்றவர்” எனச் சாடி, ஏதோ ஒட்டுமொத்தப் பிரச்சனையும் வெறும் இரக்கக் குறைவினால் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்.

இந்த நாடகத்தைக் கண்டு யாரும் ஏமாந்துவிடக் கூடாது. கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சத்தின் போது வங்கிகளையும் ஊக வணிகர்களையும் பிணை எடுப்பதற்காக நிதி அமைப்பிற்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியதன் மூலமும், அதே நேரத்தில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் கொட்டியதன் மூலமும் கட்டுக்கடங்காத பணவீக்கத்தைத் தூண்ட உதவியது ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஆகும். ஜனநாயகக் கட்சியினர் இந்தக் கொள்கையைக் கண்டு திகிலடையவில்லை. ட்ரம்ப் அந்த இரகசியமான பகுதியை சத்தமாகச் சொல்வதைக் கண்டுதான் அவர்கள் எரிச்சலடைகிறார்கள்.

ஆளும் வர்க்கத்திற்குள் தந்திரோபாய வேறுபாடுகள், குறிப்பாக வெளியுறவுக் கொள்கையின் சில அம்சங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், நெருக்கடிக்கும் தீவிரமடைந்து வரும் போருக்கும் தொழிலாள வர்க்கத்தைச் செலவு செய்ய வைப்பதில் இந்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் கிடையாது.

ட்ரம்ப் தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதாகவும், குறைந்து வரும் ஊதியத்தை உயர்த்துவதாகவும் வாய்ச்சவாடல் வாக்குறுதிகளை அளித்தார். ஜனநாயகக் கட்சியினரும் 2026 இடைக்காலத் தேர்தலில் அதையே செய்ய முற்படுகின்றனர். ஆனால் இரு கட்சிகளுமே நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்காமல், பிரமாண்டமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கோடீஸ்வர தன்னலக்குழுக்களின் நலன்களையே பாதுகாக்கின்றன.

தன்னலக்குழுக்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ட்ரம்ப்பின் அப்பட்டமான அலட்சியம் என்பது ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தின் மற்றும் சமூக எதிர்ப்புரட்சித் திட்டத்தின் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும். அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் அவர், “குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு பணம் எதையும் அனுப்ப வேண்டாம்,” ஏனென்றால் “நாம் போர்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று அறிவித்தார். வாஷிங்டன் “மருத்துவ உதவி, மருத்துவ பாதுகாப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களைப்” பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, “இராணுவப் பாதுகாப்பு” என்ற ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ட்ரம்ப், முழுக்க முழுக்க தன்னலக்குழுக்களால் முழுமையாக ஊடுருவப்பட்ட ஒரு அரசியல் ஒழுங்கிற்காகப் பேசுகிறார். இந்த மாதத் தொடக்கத்தில், செல்வம் கொழிக்கும் மெட் காலா (Met Gala) விழா தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் (WSWS) குறிப்பிட்டது போல:

மிகப்பெரிய மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது ஒரு சமூகத் தேவையாகும். அமெரிக்கா, வெட்கமற்ற மற்றும் கொடூரமான ஒரு தன்னலக் குழுவின் ஆளும் வர்க்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அந்த வர்க்கம் தனது சொந்த நடத்தையாலேயே சகித்துக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இந்தச் சமூகம் இனி செல்வந்தர்களைத் தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை.

அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும்—விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பாரிய பணிநீக்கங்கள், போர் மற்றும் உழைக்கும் மக்களின் உயிர்கள் மீது தன்னலக்குழு காட்டும் அப்பட்டமான அவமதிப்பு ஆகியவற்றின் காரணமாக மாபெரும் சமூகக் கோபம் வெடித்துக் கொண்டிருக்கிறது. தன்னலக்குழுக்களின் இந்த அட்டூழியத்திற்கு ஒரு எதிர் விளைவும் உண்டு. எதிர்கால வரலாற்றாசிரியர்கள் அதை ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக விவரிப்பார்கள்: அதுதான் சமூகப் புரட்சி.

Loading